Saturday, May 18, 2019

தமிழ்க்கவிதைகளில் 'நகரம்' - வ.ந.கிரிதரன் -

தமிழ்க்கவிதைகள் சங்ககாலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு விடயங்களைப்பற்றி விபரித்திருக்கின்றன. சங்காலக்கவிதைகள் , காப்பியங்கள் பல அக்காலகட்டத்து நகர்களைப்பற்றிய  தகவல்கள் பலவற்றைத்தருகின்றன. குறிப்பாக சிலப்பதிகாரம் அக்காலகட்டத்தில் புகழ்மிக்க கோநகர்களாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம், மதுரை மற்றும் வஞ்சி பற்றி, அந்நகர்களில்  வாழ்ந்த மக்கள் பற்றி, அவர்கள் ஆற்றிய பல்வேறு தொழில்கள் பற்றியெல்லாம் விரிவாகவே தகவல்களைத்தருகின்றது. அக்கால நகரங்களின் நகர வடிவமைப்பு பற்றி, வாழ்ந்த மக்கள்  புரிந்த தொழில்கள் பற்றி, நடைபெற்ற விழாக்கள் பற்றி, பிற நாடுகளுடன் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகள் பற்றி.. என்று பல்வேறு வகைப்பட்ட தகவல்களை அவற்றின் மூலம்  அறிந்துகொள்ளலாம். இதனைப்போல் அண்மைக்காலத் தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளில் நகரம் கூறு பொருளாக அமைந்துள்ளதா என்று சிறிது சிந்தனையையோட்டியதன் விளைவுதான்  இக்கட்டுரை. இதுவொரு விரிவான ஆய்வல்ல. எதிர்காலத்தில் மேலும் பல படைப்புகளை ஆராய்ந்து  காலத்துக்குக்காலம் விரிவுபடுததப்படுத்தக்கூடியதொரு ஆரம்பக்கட்டுரையே.

இக்கட்டுரைக்காக ஆராய்ந்த  கவிஞர்களின் கவிதைகள் நகரங்களைப்பற்றி விபரிக்கையில் அங்கு வாழ்ந்த பல்வகைப்பட்ட மக்களைப்பற்றி, சமூக வாழ்க்கை முறைபற்றி, நகரங்கள் சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பு பற்றி,  நகரங்களில் நிலவிய சமூக வாழ்வின் இயல்பினால் மனிதர்களின் உளவியலில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி, அங்கு நிலவிய வர்க்கங்கள் மானுட வாழ்விலேற்படுத்தும் பாதிப்புகள் பற்றி,  நகரச்சூழல் ஏற்படுத்தும் உடல் உபாதைகள் பற்றி, மானுட சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நகரத்தில் ஏற்படுத்திய போர்ப்பாதிப்புகளைப்பற்றி.... எனப்பல்வேறு விடயங்களை  வெளிப்படுத்தி நிற்கின்றன. இவற்றை எடுத்துக்கொண்ட படைப்புகளினூடு இனங்காணுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

ஆவணப்பதிவு- எழுக அதிமானுடா! (கவிதைகள்) - வ.ந.கிரிதரன்

நூல்: எழுக அதிமானுடா! (கவிதைகள்) - வ.ந.கிரிதரன்
முதற்பதிப்பு: தை 1994
புத்தக வடிவமைப்பு: ஜோர்ஜ் இ.குருஷேவ்
அட்டை வடிவமைப்பு: பாலா ஆர்ட்ஸ்
வெளியீடு: மங்கை பதிப்பகம் ( 'டொரோண்டோ', கனடா)


எண்பதுகளில், தொண்ணூறுகளில் வீரகேசரி, தினகரன், நுட்பம், தாயகம் (கனடா) , குரல் (கையெழுத்துப்பிரதி, கனடா) ஆகிய ஊடகங்களில் வெளியான மற்றும் ஊடகங்களில் வெளிவராத எனது ஆரம்பகாலத்துக் கவிதைகளின் தொகுப்பிது. இத்தொகுப்பில் 30 கவிதைகளுள்ளன. இவை பிறந்த மண்ணின் அரசியலை, புகலிடத்திருப்பினை, ஆசிரியருக்குப் பிடித்த ஆளுமைகளைப் பற்றிய எண்ணங்களை மற்றும் சூழற் பாதுகாப்பினை விபரிக்கின்றன. இக்கவிதைகளில் சிலவற்றில் அதிமானுடா போன்ற ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் சொற்களுள்ளன. இவை அக்காலத்தின் என் எண்ணங்களின் வெளிப்பாடு. இப்பொழுது எழுதுவதாயின் மானுடம், மானிடர் போன்ற சொற்களையே பாவிப்பேன். ஆயினும் ஏற்கனவே வெளிவந்த பதிப்பிலுள்ளவற்றை மாற்ற முடியாத காரணத்தால் , அடுத்து வரும் பதிப்புகளில் இவ்விதமான சொற்கள் மாற்றப்படும். இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றைத்தவிர ஏனையவற்றை கவிதை ஆர்வத்தின் வெளிப்பாடுகள் என்று கூறுவேன். என் அக்காலத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதையே முக்கியமாகக்கொண்டு உருவான சொற்களின் வெளிப்பாடுகள் என்றும் கூறுவேன். விடுதலை அமைப்புகளின் அக, புற முரண்பாடுகளை, முஸ்லீம் மக்களின் பலவந்த  வெளியேற்றத்தினை, மலையக மக்களின் துயரினையெல்லாம் கவிதைகள் தம்பொருளாகக்கொண்டுள்ளன. கனடாப்பூர்வீகக்குடியினரின் சோகங்களையும் கவிதைகள் விபரிக்கின்றன.

'மண்ணில் குரல்' தொகுப்புக் கவிதைகள்!

கனடாவின் முதல் தமிழ் நாவலாக 1987 தை மாதத்தில் வெளிவந்த  நூல் எனது 'மண்ணின் குரல்' . இந்த நூலுக்கு இன்னுமொரு முக்கியத்துவமும் உண்டு. இந்நூல் 'மண்ணின் குரல்' நாவலையும் 8 கவிதைகளையும் மற்றும் 2 கட்டுரைகளையும் கொண்ட சிறு தொகுப்பாக வெளிவந்தது.  அந்த வகையில் இதனை முதலாவது நாவலாகவும் கருதலாம். அதே சமயம் கவிதைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம். கட்டுரைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம்.

இத்தொகுப்பிலுள்ள நாவலின் பெயர் 'மண்ணின் குரல்'. அதனால் இத்தொகுப்புக்கு இந்தப்பெயர் மிகவும் பொருத்தம். அதே சமயம் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவையும் மண்ணின் குரல்களாகத்தாம் ஒலிக்கின்றன. அந்த வகையில் மண்ணின் குரல் என்னும் நூலின் பெயர் நூலின் படைப்புகள் அனைத்துக்கும் பொருத்தமான தலைப்பென்பேன். இக்கவிதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல் அனைத்தும் ,மான்ரியால் நகரில் அக்காலகட்டத்தில் (1984 - 1986)  வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானவை. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக் கிளையினர் வெளியிட்ட கையெழுத்துச் சஞ்சிகை 'புரட்சிப்பாதை'

இந்நூலில் அட்டையினை வடிவமைத்தவர் தற்போது மான்ரியாலில் வசிக்கும் கட்டடக்கலைஞர் பெ.பாலேந்திரா அவர்கள்.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின் விபரங்கள் வருமாறு:

1. மாற்றமும் , ஏற்றமும்
2. அர்த்தமுண்டே..
3. விடிவிற்காய்..
4. புல்லின் கதை இது..
5. ஒரு காதலிக்கு...
6. மண்ணின் மைந்தர்கள்..
7. புதுமைப்பெண்
8. பொங்கட்டும்! பொங்கட்டும்!

வ.ந.கிரிதரன் கவிதைகள் 39: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!

எனது கவிதைகளில் 39 கவிதைகளின் தொகுப்பிது. எதிர்காலத்தில் என் கவிதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணமுண்டு. 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் தலைப்பில் அத்தொகுப்பு வெளியாகும்.

1. ஆசை!

அர்த்த ராத்திரியில் அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும் ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல் அடியேனின்
வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளிலே கண் சிமிட்டும்
சுடர்ப் பெண்கள் பேரழகில் மனதொன்றிப் பித்தனாகிக்
கிடந்திடுவேன்.

நத்துக்கள் கத்தி விடும் நள்ளிரவில்
சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.

பரந்திருக்கும் அமைதியிலே பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி பைத்தியமாய்ப்
படுத்திடுவேன்.

இயற்கையின் பேரழகில் இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால் அடியேனின்
இஷ்ட்டமாகும்.

Wednesday, May 8, 2019

(பதிவுகள்.காம்) குறுநாவல்: சுமணதாஸ பாஸ் - வ.ந.கிரிதரன் -


(பதிவுகள்.காம்) குறுநாவல்: சுமணதாஸ பாஸ் - வ.ந.கிரிதரன் -

- என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. சுமணதாஸ் பாஸைப் பொறுத்தவரையில் ஒரு முக்கிய உண்மையைக் கூறத்தான் வேண்டும். வன்னிமண்ணில் நாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் எங்கள் வீட்டிற்கருகில் ஒரு சிங்கள பாஸ் குடும்பம் இருக்கத்தான் செய்தது. அந்த பாஸ் குடும்பத்தவர்கள் நாங்கள் அம்மண்ணிற்குப் போவதற்கு முன்பிருந்தே அம்மண்ணுடன் பிணைந்து வாழ்ந்து வந்தவர்கள். எங்களுடன் நெருங்கிப் பழகியவர்கள். சுக துக்கங்களில் பங்கு பற்றியவர்கள் ஒருமுறை எங்கள் வீட்டிற்கருகிலிருந்த குளமொன்றில் மூழ்கும் தறுவாயில் தத்தளித்துக் கொண்டிருந்த என்னையும், சாந்தா என்ற சிங்கள இளைஞனையும் துணிச்சலுடன் காப்பாற்றியவர் அந்த சிங்கள் பாஸ்தான். நாங்கள் 70களில் யாழ்ப்பாணம் திரும்பி விட்டோம் அதன்பிறகு எங்களிற்கும் அவர்களிற்குமிடையிலிருந்த தொடர்பு விடுபட்டுப்போனது. 1983 இலிருந்து மாறிவிட்ட நாட்டு நிலைமையைத் தொடர்ந்து, தமிழ் மக்களின் போராட்டம் கனன்றெரியத் தொடங்கி விட்டது. இந்தக் காலகட்டத்தில் விடுதலைக்காகப் போராடும் அமைப்பொன்றினால் அந்தச் சிங்கள பாஸ் குடும்பமே முற்றாக அழிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? வழக்கம்போல் பலவிதமான வதந்திகள், ஊகங்கள். அந்த சிங்கள பாஸ்தான் 'சுமணதாஸ் பாஸாக' இக்கதையில் உருப்பெற்றிருக்கின்றார். நான் இன்று உயிருடன் இருப்பதற்குக் காரணமானவர் அந்தச் சிங்கள பாஸ். அதனை என்னால் ஒரு போதுமே மறக்க முடியாது.

என் பால்ய காலத்து வன்னி மண் அனுபவங்களை மையமாக வைத்து நாவலொன்றினை 'வன்னி மண்' என்னும் பெயரில் எழுதியிருந்தேன். என் வன்னி மண் அனுபவங்களை விபரிக்கும் 'வன்னி மண்' நாவலில் எம் அயலவரான சிங்கள பாஸுடனான அனுபவங்களையும் விபரித்திருந்தேன். அது 'தாயகம்' (கனடா) சஞ்சிகையில் தொடராக தொண்ணூறுகளில் வெளியானது. அந்நாவல் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளியான 'மண்ணின் குரல்' நாவற் தொகுப்பிலுமுள்ளது. அண்மையில் 'வன்னி மண்' நாவலை வாசித்தபோது அதிலுள்ள பகுதிகள் சிலவற்றைத் தனியாகப்பிரித்தெடுத்துச் சிறுகதையாக, குறுநாவலாக ஆக்கலாமென்று தோன்றியது. அதன் விளைவே 'சுமணதாஸ பாஸ்' என்னும் இக்குறுநாவல். சிறுகதைகள் , குறுநாவல்கள் நாவல்களாக உருப்பெற்றுள்ளதை அறிந்திருக்கின்றோம். ஆனால் இங்கே நாவலொன்றிலிருந்து குறுநாவலொன்று தோன்றியுள்ளதைக் காண்பீர்கள்.

இந்நாவல் தொடராக வெளியான காலகட்டத்தில் எழுத்தாளர் மாலன் அவர்கள் கனடா வந்திருந்தார். அச்சமயம் அவருடன் உரையாடியிருக்கின்றேன். அப்பொழுது அவர் கூறிய கூற்றொன்று இன்னும் நினைவிலுள்ளது. அது ' தமிழ் எழுத்தாளர் எவராவது தமிழர் அமைப்புகளால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களைப்பற்றி எழுதியிருக்கின்றார்களா?' அப்பொழுது அவ்விதமான எனது நாவலொன்று 'தாயகம் (கனடா)' சஞ்சிகையில் வெளியாகிக்கொண்டிருக்கின்றது என்று கூற நினைத்தேன். ஆனால் கூறவில்லை. உண்மையில் இவ்விதம் வேறு தமிழ் எழுத்தாளர்கள் யாராவது எழுதியுள்ளார்களா என்பது தெரியவில்லை. அவ்விதம் எழுதா விட்டால் எனது 'வன்னி மண்' நாவலே போராட்டச் சூழலில் பாதிக்கப்பட்ட சிங்களக் குடும்பமொன்று பற்றியும் முதன் முதலாக விபரிக்கும் நாவலென்ற முக்கியத்துவத்தையும் பெறுகின்றது. - வ.ந.கிரிதரன் -
 
*****************************************************************************
குறுநாவல்: சுமணதாஸ் பாஸ் - வ.ந.கிரிதரன் -

1.

சிந்தனையில் மூழ்கிவிடும் போதுதான் எவ்வளவு இனிமையாக, இதமாக விருக்கின்றது. மெல்ல இலேசாகப் பறப்பதுபோல் ஒரு வித சுகமாகக் கூடவிருக்கின்றது. எனக்கு இன்னமும் சரியாக ஞாபகமிருக்கின்றது. மாரிகாலம் தொடங்கி விட்டிருந்தது. என் பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். அப்பா ஆங்கில வாத்தி, அம்மா தமிழ் டீச்சர். இருவரிற்குமே வவுனியாவிற்கு மாற்றலாகியிருந்தது. அம்மாவிற்கு வவுனியா மகாவித்தியாலயத்திற்கும் அப்பாவிற்கு நகரிலிருந்த இன்னுமொரு பாடசாலைக்கும் மாற்றல் உத்தரவு கிடைத்ததுமே அப்பா முன்னதாக வவுனியா சென்று, வாடகைக்கு வீடு அமர்த்திவிட்டு வந்திருந்தார். வீட்டுச் சாமான்களையெல்லாம் ஏற்றி வர ஒரு லொறியை ஏற்பாடு செய்துவிட்டு அப்பா லொறியுடன் வர, நானும் அம்மாவும் அக்காவும் தம்பியும் மாமாவுடன் சோமர் செட் காரொன்றில் வன்னி நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது எனக்கு வயது ஐந்துதான். அந்தப் பயண அனுபவம் இன்னமும் பசுமையாக நெஞ்சில் பதிந்து கிடக்கின்றது. முதன் முதலாக பிறந்த இடத்தை விட்டு இன்னுமொரு இடத்திற்கான பயணம். நெஞ்சில் ஒருவித மகிழ்ச்சி, ஆர்வம் செறிந்து கிடந்தது. கார் பரந்தன் தாண்டியதுமே வெளியும், வானுமாகத் தெரிந்த காட்சி மாறிவிட்டது. சுற்றிவரப் படர்ந்திருந்த கானகத்தின் மத்தியில் பயணம் தொடங்கியது.

வன்னி மண்ணின் அழகு மெல்ல மெல்ல தலைகாட்டத் தொடங்கிவிட்டது. மரங்களிலிருந்து செங்குரங்குகளும், கறுத்த முகமுடைய மந்திகளும் எட்டிப் பார்க்கத் தொடங்கி விட்டன. பல்வேறு விதமான பட்சிகள் ஆங்காங்கே தென்படத் தொடங்கி புதிய சூழலும், காட்சியும் என நெஞ்சில் கிளர்ச்சியை ஒருவித ஆவலை ஏற்படுத்தின. பயணத்தை ஆரம்பித்த பொழுது இருண்டு கொண்டிருந்த வானம், இடையிடையே உறுமிக் கொண்டிருந்த வானம், நாங்கள் மாங்குளத்தைத் தாண்டியபொழுது கொட்டத் தொடங்கிவிட்டது. பேய் மழை அடை மழை என்பார்களே அப்படியொரு மழை, சூழல் எங்கும் இருண்டு, 'சோ' வென்று கொட்டிக்கொண்டிருந்த மழையில் பயணம் செய்வதே பெரும் களிப்பைத் தந்தது. அன்றிலிருந்து கொட்டும் மழையும் அடர்ந்த கானகமும் பட்சிகளும் எனக்குப் பிடித்த விடயங்களாகிவிட்டன. ஒவ்வொரு முறை மழை பொத்துக் கொண்டு பெய்யும் போது, விரிந்திருக்கும் கானகத்தைப் பார்க்கும்போதும், அன்று முதன்முறையாக வன்னி நோக்கிப் பயணம் செய்த பொழுது ஏற்பட்ட அதேவிதமான கிளர்ச்சி, களிப்பு கலந்த உணர்வு நெஞ்சு முழுக்கப் படர்ந்து வருகின்றது. பேரானந்தத்தைத் தந்து விடுகின்றது.

நாங்கள் வவுனியாவை அடைந்த பொழுது பேயாட்டம் போட்டுக் கொட்டிக் கொண்டிருந்த வானத்தின் கோரம் குறைந்து விட்டிருந்தது. நாங்கள் செல்லவேண்டிய பகுதிக்கு பெயர் 'குருமண் காடு'. வவுனியா நகரிலிருந்து, ஒன்றரை மைல் தொலைவில் மன்னார் வீதியில் அமைந்திருந்தது. இன்று அபிவிருத்தியடைந்துவிட்ட பகுதி ஆனால் அன்றோ நாலைந்து வீடுகளையும், ஒரு பெரிய 'பண்ணையையும் கொண்ட காடு. படர்ந்த பகுதி. கண்டுபிடிப்பதுதான் கஷ்டமாகவிருந்தது. காரை மன்னார் றோட்டின் கரையோரம் நிறுத்திவிட்டு, யாரும் தென்படுகின்றார்களா என்று பார்ப்பதற்காக மாமா காரை விட்டிறங்கினார். சிறிது நேரம் ஒருவரையுமே காணவில்லை.

Sunday, May 5, 2019

ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!

ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது

அ.ந.க. ஒரு செயல் வீரர். ஏனையவர்களைப் போல் வாயளவில் நின்று விட்டவரல்லர். தான் நம்பிய கொள்கைகளுக்காக இறுதிவரை பாடுபட்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களிலொருவர். மேற்படி சங்கத்தின் கீதமாகவும் இவரது கவிதையே விளங்குகின்றது. அவரது கவிதைகளின் கருப்பொருட்களாகத் தீண்டாமை, தோட்டத்தொழிலாளர் இழிநிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாயச் சீரமைப்பு, இயற்கை, காதல், தத்துவம், வர்க்க விடுதலை, பிடித்த ஆளுமைகள் போன்றவை விளங்குகின்றன. இவரது கவிதைகள் தமிழமுது, தேன்மொழி, ஈழகேசரி, வசந்தம், வீரகேசரி, பாரதி, தினகரன், ம்ல்லிகை, நோக்கு, இளவேனில், சுதந்திரன், ஸ்ரீலங்கா போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன [அ.ந.க.வின் கவிதைகள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அவர் பங்கு பற்றிய கவியரங்குகள் பற்றிய விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவேண்டியதவசியம்.]. இவரது ஆரம்ப காலத்துக் க்விதைகளிலொன்றான , ஈழகேசரியில் வெளிவந்த, 'சிந்தனையும், மின்னொளியும்' என்ற கவிதை முக்கியமான கவிதைகளிலொன்று. 'அர்த்த இராத்திரியில் கொட்டுமிடித்தாளத்துடனும், மின்னலுடனும் பெய்யும் மழையைப் பற்றிப் பாடப்படும் இக்கவிதையில் , அந்த இயறகை நிகழ்வு கூடக் கவிஞரிடம் சிந்தனையோட்டமொன்றினை ஏற்படுத்தி விடுகின்றது. கணப்பொழுதில் தோன்றி அழியும் மின்னல் கூட ஒரு சேதியைக் கூறிவிடுகிறது. அது என்ன?

'தேன்மொழி'க் கவிதைகள் - 1 - வ.ந.கிரிதரன் -


நூலகம்' தளம் பல்வேறு வழிகளிலும் உதவி வருகின்றது. மிகவும் பயனுள்ள அரியதோர் ஆவணத்தளமாக 'நூலகம்' உருமாறி வந்திருக்கின்றது. அத்துடன் 'தேன்மொழி' சஞ்சிகையின் 'நூலகத்தில்' இதுவரை வலையேற்றப்படாத பிரதிகளையும் தந்துதவிய 'நூலகம்' கோபி அவர்களுக்கு நன்றி. 'தேன்மொழிக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைத்தொடரினை எழுதுவதற்கு அவரது இந்த உதவியே முக்கிய காரணம்.

தேன்மொழி சஞ்சிகை கவிதைக்காக வெளிவந்த முதலாவது சஞ்சிகை. மறுமலர்ச்சிக்காலப்படைப்பாளிகளே இச்சஞ்சிகைக்கும் தோற்றுவாய். மறுமலர்ச்சி சஞ்சிகையினை வெளியிட்ட எழுத்தாளர் தி.ச.வரதராஜனே தேன்மொழியின் நிர்வாக ஆசிரியராக விளங்கியவர். இணையாசிரியராக இருந்தவர் கவிஞர் மஹாகவி. 1955இல் நான்கு இதழ்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதழ்கள் வெளியாகியுள்ளனவா என்பது ஆய்வுக்குரிய விடயம். அத்துடன் 'நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவுச்சின்னம்' என்னும் தாரக மந்திரத்துடன் எழுத்தாளர் தி.ச.வரதராஜனை நிர்வாக ஆசிரியராகவும், கவிஞர் மஹாகவியை இணை ஆசிரியராகவும் கொண்டு வெளியான சஞ்சிகை. சஞ்சிகையின் அட்டைப்படம் ஒவ்வொன்றும்  'தங்கத்தாத்தா' சோமசுந்தரப்புலவரின் கவிதை வரிகளைத் தாங்கி வெளியாகியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. சஞ்சிகையின் கடைசிப்பக்கத்தில் தேன்மொழியில் எழுதும் படைப்பாளிகளில் ஒருவரைப்பற்றியச் சுருக்கமான குறிப்பும் காணப்படுகின்றது. மேலதிக விபரங்கள்: அச்சு - ஆனந்தா அச்சகம். தேன்மொழி அலுவலகம்: 226 , காங்கேசன் துறை வீதி, யாழ்ப்பாணம், இலங்கை.  ஆண்டுக்கட்டணம் - ரூ. 3.00. தனிப்பிரதி 23 சதம்.

மறுமலர்ச்சி இதழ் மூலம் ஈழத்தமிழ் இலக்கியத்தில் கால்பதித்த தி.ச.வரதராஜன் (வரதர்) அவர்கள் முதலாவது கவிதைகளுக்காக மட்டும் வெளிவந்த முதலாவது சஞ்சிகையான தேன்மொழியினையும்  வெளியிட்டவர் என்னும் பெருமைக்குள்ளாகின்றார்.

பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி...- வ.ந.கிரிதரன் -

மகாகவி பாரதியார் 'சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார். பாரதியாரின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கு உதவும் கவிதைகளிலொன்று அவரது இந்தக்கவிதை. இதுவொரு நீண்ட கவிதை. கவிதையின் ஆரம்பம் "பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே." என்ற பட்டினத்துப்பிள்ளையாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகின்றது. பாரதியார் தன்னைச் சித்தர்களிலொருவராகக்கருதுபவர். சித்தர்களிலொருவரான பட்டினத்தாரின் இருப்பு பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பமாகியிருப்பது ஒன்றினை நன்கு புலப்படுத்துகின்றது. அது பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனையினைத்தான். 'பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்னும் கூற்றுக்கேற்ப அவரது வாழ்வில் கடந்து போன இழப்புகளைப்பற்றிச் சுயசரிதை விபரிக்கின்றது. நிறைவேறாத பிள்ளைக்காதல் அதாவது மானுடரின் முதற் காதல், அவரது ஆங்கிலக்கல்வி கற்றல், அவரது திருமணம் மற்றும் அவரது தந்தை வியாபாரத்தில் நொடிந்துபோய் வறுமையுறல்போன்ற விடயங்களைக்கவிதை விபரிக்கின்றது ஆனால் இந்த வாழ்வே இவ்விதமானதொரு கனவுதான் என்பதை அவர் நன்கு புரிந்திருக்கின்றார். ஆனால் அதற்காக அவர் வாழ்விலிருந்து ஓடி, ஒதுங்கிப்போய் விட்டவரா?

இவ்விதமாக இழந்தவை பற்றியெல்லாம் விபரிக்கும் அவர், ஆரம்பத்தில் 'உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி லுங்கன வாகும்' என்று கூறும் அவர்,  தன் கவிதையின் இறுதியில் உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி னுங்கன வாகும்' என்று மானுட வாழ்வே ஒரு கனவு என்பார். ஆனால் அதற்காக , அதனை நினைத்து , நினைத்து வருந்துவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'இதற்குநான் பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்? பண்டு போனதை எண்ணி யென்னாவது? சிலதி னங்கள் இருந்து மறைவதில் சிந்தை செய்தெவன் செத்திடு வானடா' என்று கூறித் தன் சுயசரிதையினை முடிப்பார்.

அமரர் வெங்கட் சாமிநாதன் நினைவாக.. - வ.ந.கிரிதரன் -

அக்டோபர் 20 அமரர் வெங்கட் சாமிநாதனின் நினைவுதினம். தமிழகத்தைச்சேர்ந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் என்னுடன் மிகவும் அதிகமாகத் தொடர்பு வைத்திருந்தவராக நான் கருதுவது அமரர் வெங்கட் சாமிநாதனைத்தான். இவ்வளவுக்கும் நான் அவரை ஒருபோதுமே நேரில் சந்தித்ததில்லை. அவர் இயல் விருது பெறுவதற்காகத் 'டொராண்டோ' வந்திருந்தபோதுகூட நான் அவரைச் சந்திக்கவில்லை. அவர் அப்பொழுது அவரை அழைத்தவர்களுடன் மிகவும் நேரமின்றி அலைந்துகொண்டிருப்பாரென்று எண்ணி நானும் அவரைச் சந்திக்கும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதன் பின்னரே அவர் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அதிகமாக அனுப்பத்தொடங்கினார். அவரது மறைவுக்கு முதல் நாள் வரையில் அவர் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அவ்வப்போது தன் மின்னஞ்சல்களில் தான் என்னை நேரில் சந்திக்காததையிட்டு வருந்தியிருப்பார். நான் தமிழகம் வரும்போது நிச்சயம் அவரைச் சந்திப்பேனென்று ஆறுதலாக அப்போதெல்லாம் பதில் அளிப்பதுண்டு. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை. அது என் துரதிருஷ்ட்டம்.

அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த குணங்களிலொன்று: இறுதி வரையில் தன் நிலை தளராமல், தனக்குச் சரியென்று பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் அந்தப்பண்புதான். நிறைய வாசித்தார். நிறையவே சிந்தித்தார். கலை, இலக்கியத்துறையில் அவர் தனக்கென்றோரிடத்தை ஏற்படுத்தி விட்டு அமரராகி விட்டார். அவர் இருந்தபோதே அவரைக்கெளரவிக்கும் முகமாக எழுத்தாளர்கள் திலிப்குமார், பா.அகிலன் போன்றவர்கள் 'வெங்கட் சாமிநாதன் வாதங்களும், விவாதங்களும்' என்னும் அரியதொரு தொகுப்பு நூலினை வெளியிட்டார்கள். மிகவும் பாராட்டுதற்குரிய பணி அது. அதில் என் கட்டுரையொன்றும் அடங்கியுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியைத் தருவது. அதன் மூலம் அவரைச் சந்தித்திருக்காவிட்டாலும், சந்தித்துப் பழகியதோர் உணர்வே எனக்கு எப்பொழுதுமுண்டு.

சிங்கள மொழியில் எனது (வ.ந.கிரிதரன்) 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'

இன்று 'அகாசா மீடியா வேர்க்ஸ்' மூலம் பல சிங்கள நூல்கள் இலங்கையில் வெளியாகின்றன. அவற்றிலொன்று எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு. சிங்கள மொழிபெயர்ப்பைச் செய்திருப்பவர் எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த (G.G.Sarath Ananda). இந்நூலுக்கான பதிப்பகத்தைத் தேர்வு செய்து நூல் வெளிவரக் காரணமாகவிருந்தவர் எழுத்தாளர் காத்யானா அமரசிங்க (Kathyana Amarasinghe) . இவர்களுக்கும், இந்நூலினைச் சிறப்பாக வெளியிட்டிருக்கும் 'அகாசா மீடியா வேர்க்ஸ்' (AHASA Media Works) உரிமையாளர் அசங்க சாயக்கார ( Asanka Sayakkara) அவர்களுக்கும் நன்றி. நூல் வெளியீடு நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற என் மனம் நிறைந்த வாழ்த்துகளை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். 

இணையத்தில் வெளியான இந்நூலினை வாசித்து மொழி பெயர்க்க ஆர்வம் கொண்டு என்னிடம் அதற்கான அனுமதியைக்கேட்ட ஜி.ஜி.சரத் ஆனந்தவின் ஆர்வமும், மொழிபெயர்ப்பிலுள்ள ஈடுபாடுமே இந்நூல் வெளிவருவதற்கு முக்கிய காரணம். அவர் எனது சிறுகதைகள் இரண்டினையும் ஏற்கனவே சிங்கள் மொழிக்கு மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காத்யான அமரசிங்கவும் எனது கவிதைகளிரண்டினைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்தவர் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.
இதனைச் சாத்தியமாக்கிய இணையத்துக்கும் எனது நன்றி.

இத்தருணத்தில் இதன் தமிழ் நூலினைத் தம் செலவில் சிறப்பாக வெளியிட்ட ஸ்நேகா (தமிழ்நாடு) பதிப்பகத்தாருக்கும் எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஶ்ரீலங்கா சஞ்சிகையின் கலை, இலக்கியப்பங்களிப்பும், அ.ந.கந்தசாமியின் படைப்புகளும்! - வ.ந.கிரிதரன் -


'ஸ்ரீலங்கா' சஞ்சிகை இலங்கைத் தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தமிழ்ச் சஞ்சிகை. ஆகஸ்ட் 1950 - டிசம்பர் 1963 காலகட்ட இதழ்கள் பல (தொடர்ச்சியாக அல்ல) நூலகம் இணையத்தளத்திலுள்ளன. இவற்றைப் பார்த்தபோதுதான் ஈழத்தமிழ்இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பினைச் செய்த சஞ்சிகைகளிலொன்றாக இச்சஞ்சிகையையும் காண முடிந்தது.

அறிஞர் அ.ந.கந்தசாமி, திரு.குல சபாநாதன் போன்றவர்கள் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணி புரிந்த காலகட்டத்தில் , அவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகை இச்சஞ்சிகையென்று அறிந்திருக்கின்றேன்.ஆனால் சஞ்சிகையின் முன் அட்டையில் அரசாங்க சமாச்சாரப் பகுதியால் வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசிப்பக்கத்தின் அடியில் தகவற் பகுதியினருக்காக இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பெற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றிய விபரமெதனையும் காணவில்லை. ஆனால் இச்சஞ்சிகையின் உருவாக்கத்தில் அறிஞர் அ.ந.கந்தசாமி, திரு.குல சபாநாதன் ஆகியோரின் பங்களிப்பினை சஞ்சிகையில் வெளியான படைப்புகள் வாயிலாக அறிய முடிகின்றது. இருவருமே இச்சஞ்சிகை வெளிவந்த காலகட்டத்தில் இலங்கைத் தகவற் திணைக்களத்தில் பணி புரிந்து கொண்டிருந்ததாலும், இருவருமே நாடறிந்த எழுத்தாளர்கள் என்பதாலும் 'ஶ்ரீலங்கா' சஞ்சிகையின் ஆசிரிய பீடத்தினை அலங்கரித்தவர்களாக அறிந்த தகவல் உண்மையென்றே தோன்றுகின்றது.

 இலங்கைத் தகவற் திணைக்கள வெளியீடு என்பதால் அரசு பற்றிய , அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய சஞ்சிகையாக இச்சஞ்சிகை விளங்கினாலும், ஈழத்தமிழ்க் கலை, இலக்கியத்துக்குக் காத்திரமான படைப்புகளையும் கூடவே வெளியிட்டுள்ளதால் , ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் முக்கிய சஞ்சிகைகளிலொன்றாக இச்சஞ்சிகை விளங்குகின்றது எனலாம்.

மனவெளிக்கலையாற்றுக் குழுவினரின் இப்சனின் ஒரு பொம்மை வீடு ! - வ.ந.கிரிதரன் -

நேற்று (30.6.2018) நண்பர் தேவகாந்தனுடன் மனவெளி அமைப்பின் பத்தொன்பதாவது அரங்காடல் நாடக நிகழ்வுக்கு இப்சனின் 'ஒரு பொம்மை வீடு ' பார்க்கச்சென்றிருந்தேன். நண்பகற் காட்சி, மாலைக் காட்சி என்று இரு காட்சிகள் அரங்கு நிறைந்த மக்கள் ஆதரவுடன் நடைபெற்றன. மனவெளி கலையாற்றுக் குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.

ஏற்கனவே பலமுறை படித்திருந்த நாடகமாதலால் நாடகம் பற்றிய புரிதலுடனேயே சென்றிருந்தேன். நாடகம் எவ்விதம் மேடையேற்றப்படுகின்றது, எவ்விதம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது, எவ்விதம் இயக்கப்பட்டிருக்கின்றது, எவ்விதம் மேடை அலங்காரங்கள், ஒலி, ஒளி அமைப்புகள் இருக்கப்போகின்றன , எவ்விதம் நடிகர்களின் நடிப்பு இருக்கப்போகின்றது எனப் பல்வகை எதிர்பார்ப்புகளுடன் சென்றிருந்தேன். எதிர்பார்ப்புகள் எவையும் பொய்த்துப்போய் விடவில்லை. நாடகத்தைச் சிறப்பாக மேடையேற்றியிருந்தார்கள். அதற்காக மனவெளி அமைப்புக்கும், மொழிபெயர்த்து இயக்கிய பி.விக்னேஸ்வரனுக்கும் மற்றும் நாடகத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறையே அரசி விக்னேஸ்வரன், ஜெயப்பிரகாஷ் ஜெகவன் , எஸ்.ரி. செந்தில்நாதன் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஏனைய பாத்திரங்களான டாக்டர் ராங், திருமதி லிண்டே, அன்னா மரியா மற்றும் ஹெலெனா ஆகிய பாத்திரங்களில் குரும்பச்சிட்டி ஆர்.ராசரத்தினம், பவானி சத்தியசீலன், மாலினி பரராஜசிங்கம், கனித்தா உதயகுமார் ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்களில் கனித்தா உதயகுமார் தவிர ஏனையோர் ஏற்கனவே நாடகத்துறையில் அனுபவம் பெற்ற தேர்ந்த நடிகர்கள். பல்கலைக்கழக மாணவியான கனித்தா உதயகுமார் அண்மையிலேயே தன்னை இத்துறையில் ஈடுபடுத்திக்கொண்டவர். நடிப்பில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்.

'ஒரு பொம்மை வீடு' இன்றைய பெண்ணியச் சிந்தனைகளுக்கெல்லாம் முன்னோடியான நாடகம் நாடகத்தின் முக்கிய ஆளுமை நோரா. வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட சிறப்பான பாத்திரம். குழந்தைகளுடன் தன் அன்புக் கணவனுடன் வாழுமொரு பெண் , அவனது நலன்களுக்காகவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அவனுக்கு உண்மை கூறாது மறைத்த பெண், அவனுடன் வாழ்ந்த காலகட்டத்தில் , அதற்கு முற்பட்ட காலத்தில் தன் தந்தையுடன் வாழ்ந்த காலகட்டங்களிலெல்லாம் தான் ஒரு பொம்மையாகவே தான் வாழ்ந்த சமுதாயத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததை உணர்ந்து , தன் சுயமரியாதையுடன், சுய சிந்தனையுடன், சுதந்திரமாகத் தன்மீது பிணைக்கப்பட்டிருந்த தளைகளையெல்லாம் உடைத்து (திருமண பந்தமுட்பட) வாழப்புறப்படுவதுதான் நாடகத்தின் மையக்கரு.

நாடகத்தின் இடைவேளையில் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தபோது எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரன் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். அது என் கவனத்தை ஈர்த்தது. சீனாவில் ஒரு காலகட்டத்தில் பெண்ணுரிமைக்காக நோராயிசம் என்றொரு சிந்தனைப்போக்கே உருவானதாம் மேற்படி இப்சனின் நோரா பாத்திரத்தால் என்று அவர் குறிப்பிட்டதையே குறிப்பிட்டேன். இப்பாத்திரமே நாடகம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ள பாத்திரம். இதனைச் செய்வதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அதனை அரசி விக்னேஸ்வரன் மிகவும் சிறப்பாக, அநாயசமாகச் செய்திருந்தார். சுமார் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற நாடகத்தில் ஒரு கட்டத்தில் கூடத் தளர்ச்சியேதுமற்ற நிலையில், நாடக வசனங்களை நினைவில் வைத்துச் சிறப்பாகத் தன் நடிப்புத்திறமையினால் நாடகத்தைக் கண்டு களிக்க வந்திருந்த அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருந்தார் அவர். அதற்காக அவருக்குப் பாராட்டுகள். இந்நாடகத்தின் வெற்றிக்கு அவரது நடிப்பு முக்கியமானதொரு காரணம். நண்பர் எழுத்தாளர் தேவகாந்தனும் அரசி விக்னேஸ்வரனின் நடிப்பை விதந்து தன் கருத்துகளை நாடகத்தின் முடிவிலான அவருடனான உரையாடலின்போது குறிப்பிட்டார்.

ஏனைய பாத்திரங்களில் அவரது கணவராக நடித்திருந்த ஜெயப்பிரகாஷ் ஜெகவன் மற்றும் அவரது கணவரின் உடல்நலப்பயணச் செலவுகளுக்காக, டோராவின் கள்ளக்கையெழுத்துடன் பணம் கொடுத்து உதவியவராக நடித்திருக்கும் எஸ்.ரி. செந்தில்நாதன் ஆகியோருக்கு நாடகத்தில் தம் நடிப்பாற்றலை வெளிப்படுத்த நிறைய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவற்றை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்தியிருந்தார்கள்.

இவர்களுடன் மேடையின் பின்னணியிலிருந்து உழைத்த கலைஞர்கள் அனைவரும் (இசை, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, ஒளி, ஒலி , மேடையமைப்பு போன்றவற்றுக்காக உழைத்தவர்கள்) பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பல வருடங்களுக்குப் பின்னர் நல்லதொரு நாடக நிகழ்வைக் கண்டு களித்த திருப்தியான உணர்வே நாடகத்தின் முடிவிலேற்பட்டது. அதுவே நாடகத்தின் வெற்றியும் கூட.

ngiri2704@rogers.com

நன்றி: பதிவுகள்.காம்

Saturday, May 4, 2019

எனது , வ.ந.கிரிதரனின், மூன்று கவிதைகள் பற்றி...

எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். அத்தொகுப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. அது பற்றி அறியத் தந்த மாலன் " அன்புள்ள கிரிதரன், தேர் ஒருவழியாக புறப்பட்டுவிட்டது. உங்களது கவிதை இடம்பெற்றுள்ள அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு-புவி எங்கும் தமிழ்க் கவிதை- சாகித்திய அகாதெமியின் வெளியீடாக வந்துள்ளது. 22 நாடுகளில் வசிக்கும்  தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது  தமிழ்க் கவிதைகளின் விரிவிற்கும் ஆழத்திற்கும் சான்றளிக்கும் ஓர் அரிய நூல்" என்றும் தனது மின்னஞ்சலில் குறிப்ப்ட்டுள்ளார். முதலில் இத்தொகுப்பு நூலிலுள்ள கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளதற்காக அவருக்கு நன்றி. அத்தொகுப்பினை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினை மாலனின் கடிதம் ஏற்படுத்துகின்றது.

மேற்படி தொகுப்பில் எனது கவிதையொன்றும் இடம் பெற்றுள்ளது. "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'" என்பது அக்கவிதையின் தலைப்பு, அக்கவிதையினையே கீழே காண்கின்றீர்கள்:

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்த சமகால இருமொழிக்கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity (VOL 1) ((கணநேர எல்லையின்மை) அநாமிகா அல்ஃபபெட்ஸ் (Anaaamikaa alphabets) பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. அத்தொகுப்பிலுள்ள எனது கவிதையான "கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி."

சிறப்பான தொகுதியொன்றினைத்தந்ததற்காகவும், இதற்கான அவரது கடுமையான உழைப்பிற்காகவும் லதா ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கூடவே இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

தமிழில் வெளியான கவிதைத்தொகுதிகளில் முக்கியமானதோர் கவிதைத்தொகுதியாக இக்கவிதைத்தொகுதி விளங்கும் என்பதை இத்தொகுதியின் கவிதைகள் புலப்படுத்துகின்றன.

இத்தொகுப்பிலுள்ள எனது கவிதையினையே இங்கு காண்கின்றீர்கள்.

இலங்கைத் தமிழ் இலக்கியமும் , 'இன்ஸான்' பத்திரிகையும்.


எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் 'இன்ஸான்' பத்திரிகை பற்றிப்பின்வருமாறு பதிவு செய்திருந்தார்:

"1965-1970 காலப் பகுதியில் ' இன்ஸான்'( மனிதன்) என்ற வாராந்தரி பத்திரிகை ஏ.ஏ.லத்தீஃபை ஆசிரியராக கொண்டு வெளியாகியது. முஸ்லிம் வாழ்வியலை,சமூகப் பார்வையுடன் இலக்கியமாக்கும் வாய்ப்பை வழங்கி வழிகாட்டியது. இதனூடாக வெளிப்பட்ட சிறுகதையாளர்களில குறிப்பிடத்தக்க ஒருவர் எம்.பி.எம. நிஸ்வான். ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் ஒரு பத்தோ இருபதோ இன்ஸான் கதைகளை தொகுத்து வெளியிடும் முயற்சி கைகூடவில்லை.இன்ஸானோடு சம்பந்தப்பட்ட ஒருசிலரே இன்று எம்மத்தியில் உள்ளனர்.அவர்கள் சந்திக்கும்போது பேசிக் கலைவதைத்தவிர வேறொன்றும் ஆகவில்லை. முஸ்லிம்களின் இலக்கியம் என்பது அனாதை இலக்கியமே என்பதற்கு இதைத்தவிர வேறென்ன அத்தாட்சி வேண்டும்? பாணந்துறை எம்.பி.எம்.நிஸ்வானின் இரு நூல்களின் வெளியீடு கடந்த 07.04.2018ல் உம்முல் மலீஹா மண்டபத்தில் நடைபெற்றபோது கருத்துரை வழங்குகையில் மேற்படி விடயங்களை எடுத்துக் கூறினேன்."

எழுத்தாளர் அந்தனி ஜீவா 'தினகரன்' (இலங்கை) பத்திரிகையில் எழுத்தாளர்ர் அ.ந.கந்தசாமி பற்றி எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் பின்வருமாறு கூறுவார்:

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்து, மொழிபெயர்த்து அதனைத் தனது 'அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்' பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ள இருமொழிக் கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity ( கணநேர எல்லையின்மை )

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்து, மொழிபெயர்த்து அதனைத் தனது 'அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்' பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ள இருமொழிக் கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity ( கணநேர எல்லையின்மை ) நேற்று என்னை வந்தடைந்தது. உடனடியாகவே இரு பிரதிகளை அத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிஞர் ராஜாஜி ராஜகோபாலனிடம் சேர்ப்பித்து விட்டேன்.

தொகுப்பு சிறப்பாக வந்துள்ளதற்காக லதா ராமகிருஷ்ணன் பெருமைப்படலாம். தனியொருவராக அவர் மிகவும் அநாயாசமாக இதனைச் சாதித்திருக்கின்றார். அவரது கடும் உழைப்புக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

இத்தொகுப்பு சிறப்பாக வந்திருப்பதற்கு முக்கிய காரணங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம்: பொதுவாக இலக்கிய ஆளுமைகள் தம் விருப்பு, வெறுப்புகளுக்கேற்பச் சிலரின் கவிதைகளையே தேர்ந்தெடுத்து அக்கவிஞர்களின் கவிதைகளையே மொழிபெயர்த்துத் தொகுத்து வெளியிடுவார்கள். ஆனால் அவ்விதமில்லாது கவிதைகளை லதா ராமகிருஷ்ணன் தன் வாசிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளார்.

நீண்ட தேடுதல் முடிவுக்கு வந்தது: அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பது கிடைத்தது!


அறிஞர் அ.ந.கந்தசாமியின் பத்திரிகையில் வெளியான ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. தொடராகத் தினகரனில் வெளியானபோது வாசகர்களின் அமோக ஆதரவினைப்பெற்ற நாவலிது. அ.ந.க.வின் துள்ளு தமிழ் நடையில் நாவலை வாசிப்பதே பேரின்பம்.  அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் வானொலியில் அவரது 'தணியாத தாக'த்தைத் தொடர்ந்து, அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலையும் வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். இந்நாவல் தவிர அ.ந.க அவர்கள் தன் இறுதிக் காலத்தில் இன்னுமொரு நாவலையும் , மலையக மக்களை மையமாக வைத்துக் 'களனி வெள்ளம்' என்னும் பெயரில் எழுதியதாகவும், அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83கலவரத்தில் செ.க.வின் கொழும்பு இருப்பிடம் எரியுண்டபோது அந்நாவலும் எரியுண்டு போனதாகவும் அறிகின்றேன்.

இவ்விதமானதொரு சூழலில் 'மனக்கண்' நாவலைத் தேடிக்கொண்டிருந்தபோது செ.கணேசலிங்கன் அவர்கள் கமலினி செல்வராசனிடம் இருக்கும் என்றும் , அவரது முகவரியைத்தந்து அவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியிருந்தார். அவருடன் தொடர்பு கொண்டபோது அவர் அதைத்தருவதற்கு இலட்சங்களில் பணம் கேட்டார். எனவே அம்முயற்சியைக் கை விட வேண்டியதாயிற்று. பின்னர் எழுத்தாளர்கள் பலருக்கு எழுதிப்பார்த்தேன். தினகரன் ஆசிரியருக்கும் எழுதிப்பார்த்தேன். எதுவுமே கிடைக்கவில்லை. பின்னர் இலங்கைச்சுவடிகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அப்போது  அதன் இயக்குநராகவிருந்த விமலரட்னவுக்குக் கடிதமொன்று எழுதினேன். அதில் மனக்கண் நாவல் வெளியான காலகட்டத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று எழுதினேன். என்ன ஆச்சரியம்.. அவரிடமிருந்து பதிற் கடிதம் வந்திருந்தது. அதில் மனக்கண் நாவல் வெளியான தினகரன் பிரதிகள் இருப்பதாகவும், அதனை அனுப்புவதாயின் போட்டோப்பிரதிகள் மற்றும் தேடுதலுக்கான கட்டணத்தை அனுப்பும்படி கூறியிருந்தார். கட்டணம் ஐம்பது கனேடிய டொலர்களுக்கும் குறைவானது. அனுப்பினேன். அவர் நாவலை 'லீகல் சைஸ்' அளவில் அனுப்பியிருந்தார். ஆனால் சுவடிகள் திணைக்களத்திடம் அத்தியாயம் 30 இருக்கவில்லை.

Friday, May 3, 2019

யாழ் நகரத்துத் திரையரங்குகள் பற்றியதொரு நனவிடை தோய்தல்! - வ.ந.கிரிதரன் -

அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன். அக்காலகட்டத்தில் யாழ் நகரில் பல திரையரங்குகள் பல இருந்தாலும் (மனோஹரா, ராணி, ராஜா, றீகல்,, ஹரன், சாந்தி, ஶ்ரீதர், லிடோ (பழைய வின்சர்), வின்சர் , வெலிங்டன் & றியோ ), இவற்றில் என்னை அதிகம் பாதித்தவை பற்றிய பதிவுகளிவை. இவற்றையும், இவற்றுக்கான எதிர்வினைகளையும் பதிவு செய்வதன் அவசியம் கருதி அவை அனைத்தையும் தொகுத்து இங்கு தருகின்றேன்.

யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று - ராணி

முகநூலில் Shan Naranderan ராணி (யாழ்ப்பாணம்) திரையரங்கின் புகைப்படமொன்றினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அதனை இங்கு மீண்டும் நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இன்று ராணி திரையரங்கு இருந்த இடத்தில் 'சீமாட்டி' வர்த்தக நிலையமுள்ளது. ஆனால் அன்று எம் பதின்ம வயதுகளில் அவ்வாழ்வுக்குரிய பொழுதுபோக்குகளில் முக்கிய இடத்தை வகித்த திரையரங்குகளிலொன்றாக விளங்கிய திரையரங்கு ராணி. முதன் முதலில் ராணி திரையரங்கைப் பார்த்த தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் இ.போ.சபையின் பஸ்ஸில் வந்து , யாழ் பஸ் நிலையத்தில் இறங்கியபொழுது கண் முன்னால் விரிந்தது ராணி திரையரங்கின் முன் அமைக்கப்பட்டிருந்த அடிமைப்பெண் எம்ஜிஆரின் பிரமாண்டமான , ஓவியர் மணியத்தின் 'கட் அவுட்' இடுப்பில் கைகளை வைத்து, மணிமுடியுனிருந்த அந்த எம்ஜிஆரின் கட்அவுட் இன்னும் கண் முன்னால் விரிகின்றது. இன்னுமொரு முறை அவ்விதம் வந்து யாழ் பஸ் நிலையத்தில் இறங்கியபொழுது 'மாட்டுக்கார வேலன்' திரைப்படத்திலிடம் பெறும் 'ஒரு பக்கம் பார்க்குறா' பாடலுக்கான காட்சியை வெளிப்படுத்தும் இரு எம்ஜிஆர்களின் உயர்ந்த உருவங்களை உள்ளடக்கிய இரு 'கட் அவுட்'டுகள். இவ்விதமாக ராணி திரையரங்குடன் ஆரம்பமாகியதென் உறவு.

இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் மற்றும் நடாத்தப்பட்ட ஆய்வுகள்..... இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் மற்றும் நடாத்தப்பட்ட ஆய்வுகள்..... - வ.ந.கிரிதரன் --

இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் , ஒரு பதிவுக்காக, இங்கு தரப்படுகின்றன. பதிவு செய்தல் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை. பதிவு செய்தலென்பது விமர்சனமல்ல. இணையத்தில் வலைப்பதிவுகளினூடு, மின்சஞ்சிகைகளினூடு எனப் பல்வேறு வழிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தையும் பதிவு செய்கின்றார்கள். இணையம் தரும் வசதியினைப் பாவித்துப் படைப்புகள் பற்றிய விபரங்களைப் பலருடனும் பகிரிந்துகொள்வதன் மூலம் ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.  அது பயனுள்ளது. ஆக்கபூர்வமானது. படைப்புகள் வாசகர்களைச் சென்றடைவதற்கு இவ்விதமான பதிவுகள் முக்கியமானவை. இன்று காலம் மாறி விட்டது. இணையம் படைப்புகளை உடனுக்குடன் உலகின் சகல மூலைகளுக்கும் கொண்டு செல்கின்றது. மிகுந்த வல்லமை மிக்க ஊடகமான இணையத்தைத் திறனாய்வாளர்கள் மிக அதிக அளவில் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நினைக்கின்றேன்.

1. தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட, நடத்துகின்ற இணைய சஞ்சிகைகளான திண்ணை, ஆறாந்திணை, அம்பலம், இசங்கமம், கூடல் போன்றவற்றில் எனது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.
2. எழுத்தாளர் பென்னேஸ்வரனால் வெளியிடப்படும் 'வடக்கு வாசல்' சஞ்சிகை சார்பில் வெளியான 'இலக்கிய மலர் 2008' இல் வெளியான கட்டுரை: இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்!  - வ.ந.கிரிதரன்
3. ஊடகவியலாளர் செந்தில்நாதனின் ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலருக்காக எழுதிய கட்டுரை: 'கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!'
4. தமிழகத்திலிருந்து வெளியாகும் 'துளிர்' இதழுக்காகப் பல வருடங்களுக்கு முன்னர் அறிவியல் கட்டுரை கேட்டிருந்தார்கள். அனுப்பியிருந்தேன். இதழில் வெளிவந்ததாகக் கூறியிருந்தார்கள். ஆனால், அந்த இதழ் என் கைகளுக்கு வந்து சேரவில்லை. எனவே என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.
5. கணையாழியில் வெளியான எனது படைப்புகள்:
அ. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
ஆ. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
இ. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
ஈ. 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
உ. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்ஆர்தர் சி.கிளார்க் (கணையாழி மே 2012)

இன்று புதிதாய்ப் பிறந்தேன்.















இன்று புதிதாய்ப் பிறந்தேன்.
இருப்பினை
நம்பிக்கையுடனும், கனவுகளுடனும்,
வியப்புடனும், வினாக்களுடனும்
எதிர்கொள்ளும் உணர்வுகள் பொங்கிட
இன்று புதிதாய்ப் பிறந்தேன். இனி
என்றும் புதியாய்ப் பிறப்பேன்.
'இன்று புதிதாய்ப் பிறந்தேன் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற் றிருந்து' வாழ்வேன்”
இனி என்றும் புதியாய்ப் பிறப்பேன்.

எழுத்தாளர் கு.ப.ரா.வின் வசன கவிதை பற்றிய கூற்றொன்றும் , அதற்கான எதிர்வினையொன்றும்...

எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூற் பதிவாக எழுத்தாளர் கு.ப.ரா.வின் கீழ்வரும் கூற்றொன்றினைப் பதிவு செய்திருந்தார். :

" வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தளையுண்டு. மோனையுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கும் ரிதம் உண்டு. செய்யுள் எழுதுவதைக்காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம். செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைகளும் ஒரு இசை இன்பத்தை ஊட்டிவிடும். ஆனால் வசன கவிதையில் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில் தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும். சொல்லில் கவிதையின் அம்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது - வெறும் வசனம்தான் ”  ( கு.ப. ராஜகோபாலன் - 1939 இல் )

மேற்படி கூற்றுக்கான என் எதிர்வினை:

இது கு.ப.ராஜகோபாலன் அவர்கள் மரபுக்கவிதையின் ஆதிக்கமிருந்த காலகட்டத்தில் , மரபுக்கவிதையைச் சிறிது எளிமைப்படுத்தி பாரதியார் மரபுக்கவிதைகளையும், வசன கவிதைகளையும் எழுதியதன் பின்னர் மணிக்கொடி எழுத்தாளர்கள் மரபை மீறிக்கவிதைகள் படைக்க முற்பட்ட காலகட்டத்தில் கூறிய அல்லது எழுதிய கூற்று. இதனை இன்று ஏற்க வேண்டியதில்லை. கு.ப.ரா போன்றவர்களால் மரபை முற்றாக மீற முடியாமலிருந்ததால் தான் இவ்விதம் கூற முடிவதாகவே கருதுகின்றேன். கவிதை என்றால் மரபுக்கவிதைதான். அதனால் வசன கவிதைகளிலும் மரபுக்கவிதையின் அம்சங்கள் இருக்க வேண்டுமென்று  அவர் கருதினாரென்று கருதுகின்றேன். மரபுக்கவிதைன் அம்சங்களைப்போல்  வசனகவிதைகளும் மோனை, தளை போன்ற கட்டுப்பாடுகளை உள்ளடக்கியவை என்னும் கருத்தில்தான் கு.ப.ரா இங்கு கூறியுள்ளார். ஆனால் கட்டுப்பாடுகள் அல்லது விதிகளுடன் கூடிய மரபுக்கவிதைகளுக்குரிய அம்சங்களை முன்வைத்து , மரபை மீறி உருவான கவிதையொன்றினை ஆராய்வது சரியானதல்ல என்பதென் கருத்து. இங்கு அவர் வசனகவிதைக்குரிய தளை, மோனை, அணி அலங்காரம் எவ்விதமிருக்க வேண்டும் என்று தெளிவாக விபரிக்காவிட்டாலும், மரபுக்கவிதைக்குரிய அம்சங்களான அவற்றின் அடிப்படையில் அவர் வசனகவிதையை ஆராய்வது சரியல்ல என்பதே என் கருத்து. ஆனால் வசன கவிதையிலோ , புதுக்கவிதையிலோ அல்லது இன்றுள்ள கவிதையிலோ மரபுக்கவிதைக்குரிய அம்சங்கள் இருக்கலாம்; இல்லாமலிருக்கலாம். இருப்பதால் மட்டும் அவை கவிதைகளாவதில்லை. இல்லாமலிருப்பதால் மட்டும் அவை கவிதைகளில்லை என்பதுமில்லை.

உங்களை நாம் மறக்க மாட்டோம்

ஊடகங்கள் உங்களை மறந்து விட்டன.
ஊடகங்கள்  மட்டுமா
உங்களைக் காக்க வேண்டிய அரசும்
உங்களைக் காக்க வில்லை.
ஊடகங்களுக்கோ உங்களை அழித்தவர்கள்
உங்களைக் காயப்படுத்தியவர்கள் பற்று
எழுதுவதற்கே நேரம் போதவில்லை.
உங்களைப்பற்றி எழுதுவதற்கு எங்கே நேரம்
உள்ளதவர்களுக்கு.
நடக்கப்போவதை அறியாமல்
நீங்கள் இருந்தீர்கள்.
நடக்கப்போவதை அறியாமல்
நீங்களிருந்ததைப்போல்
உங்கள் குழந்தைகளும் இருந்தார்கள்.
உங்கள் பிரார்த்தனைகளிலிர்ருந்த கனவுகளெத்தனையோ?
உங்கள் பிரார்த்தனைகள்
உங்கள் குடும்பத்தைப்பற்றி இருந்திருக்கக் கூடும்.
உங்கள் உறவுகளைப்பற்றி இருந்திருக்கக் கூடும்.
உங்கள் பிறந்த மண்ணைப்பற்றியதாக இருந்திருக்கக் கூடும்.
இருந்தும்
உங்களைப்பற்றி, உங்களை இழந்தவர்தம் வலி பற்றி
ஊடகங்களேன் எழுதவில்லை?
ஊடகங்களால் மறக்கடிக்கப்பட்ட
மறைக்கப்பட்ட வலிதனை
உள்ளதுள்ளபடி எடுத்துரைப்போம்.
உங்கள் கனவுகளை
உங்கள் குழந்தைகள் பற்றி, அவர்தம்
உள்ளத்துக் கனவுகளை, உணர்வுகளை நாம்
உலகிற்கெடுத்துரைப்போம். உங்களை நாம்
உள்ளவரை மறந்துவிட மாட்டோம்.
உதிர்ந்தவர்களே! உங்களை நாம்
உள்ளவரை மறந்துவிட மாட்டோம்.

இலங்கைத்தமிழ் இலக்கியமும், விமர்சனமும் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பும், மு.பொன்னம்பலத்தின் இருட்டடிப்பும்!



இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி எனக்கருதப்படும் இவர், புலமை காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைக்கப்பட்ட இவர் சிறுகதை, கவிதை,  நாடகம், விமர்சனம் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனது குறுகிய கால வாழ்வினில் காத்திரமான பங்களிப்பினை நல்கியவர். அவ்வப்போது இலங்கைத்தமிழ்  இலக்கியம் பற்றி எழுதும் சிலர் அத்துறையில் போதிய புலமையற்றோ அல்லது திட்டமிட்டோ இவரது பங்களிப்பினை மறைத்துவிடுகின்றனர்.

அ.ந.க.வின் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் விமர்சனத்துக்கான (அல்லது திறனாய்வுக்கான) பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அ.ந..க.வின் புலமை காரணமாகவே பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் தனது 'ஒப்பியல் இலக்கியம்' நூலினை அ.ந.க.வுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வுத்துறைக்குப் பெரும்பங்களிப்பு செய்தவர் பேராசிரியர் கைலாசபதி. அவர் ஒருவருக்குத் தன் நூலினைச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார் என்றால் அதனைச் சாதாரணமாக எடுத்துவிட முடியாது. அச்சமர்ப்பணத்தில் அவர் இவ்விதம் கூறுவார்:

“  பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங்கொடுத்து வருபவரும், இன்றைய  ஈழத்து  எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவரும், பிறமொழி யிலக்கியங்களைக் கற்றுமகிழ்ந்து அவற்றைத் தழுவியும் மொழிபெயர்த்தும்  தமிழுக்கு அணி செய்தவரும் ,பலதுறை வல்லுனருமான காலஞ்சென்ற அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்”

மு.தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலிலிருந்து....

மு.தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலில் ஓரிடத்தில் இவ்விதம் வருகின்றது:

"அ.ந.கந்தசாமி கூட சோலாவைப்பற்றித்தான் எழுதினார். சோலா இயற்கைவாதியே ஒழிய சோஸலிஸ்ட் யதார்த்தவாதியல்ல. அதோடு அப்படி ஒருவரைத்தான் தேட வேண்டுமென்றால் மார்க்ஸே பால்சாக்கைப்பிடித்திருக்கலாம். ஆனால் அவர் சோலாவைத்தான் பிடித்தார்."

இக்கூற்றினை சிறிது ஆராய்வோம். அ.ந.க சோலாவைப்பற்றி எழுதுவதிலென்ன தவறிருக்க முடியும். ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எமிலி சோலாவின் நாவலான 'நானா'வைத் தமிழுக்கு மொழிபெயர்த்து சுதந்திரன் பத்திரிகையில் வெளியிட்டவர் அ.ந.க. சோலாவின் பாதிப்பு அ.ந.க.வுக்கு நிறையவேயுண்டு. எமிலி சோலாவைப்பற்றி அவர் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் சுதந்திரனில் 'நானா' தொடராக வெளியான சமயம் எழுதிய 'எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி நானா மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா' என்னும் கட்டுரையும் முக்கியமானது.

எமிலி ஸோலாவின் இலக்கியம் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார்:

"ஸோலா இலக்கியத்திலே மோகனமான கனவுகளைத் தோற்றுவிக்கும் போக்கில் நம்பிக்கை கொண்டவரல்ல. சாக்கடை உலகைச் சாக்கடை நாற்றத்தை நாம் உணரத்தக்கவகையில் இயற்கைத்தன்மையுடனே சமைப்பதில்தான் அவரது சிறந்த கலை வெற்றி பெறுகிறதென்று கூறலாம். 'இயற்கை வாதம்' (Naturalism) என்று அவரும் அவரது கோஷ்ட்டியினரும் தமது இலக்கியப் பாணிக்கு நாமகரணம் செய்து கொண்டனர்."

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்ள 'தேசிய இலக்கியமும், மரபுப்போராட்டமும்' என்னும் நூல் பற்றியுமான பதிவு!.


இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றைப்பொறுத்தவரையில் முக்கியமான காலகட்டங்களாக 'மறுமலர்ச்சி'க் காலகட்டத்தையும், 'இலங்கை எழுத்தாளர் முற்போக்குக் கழகக்' காலகட்டத்தையும் குறிப்பிடலாம். இலங்கை மண்ணுக்கேயுரிய மண்வாசனை மிக்க தனித்துவம் மிக்க எழுத்துகளைப்படைக்க வேண்டுமென்று 'மறுமலர்ச்சிக்' குழு வழிவந்த இளைஞர்கள் எண்ணினார்கள். ஆனால் அந்நோக்கமே 'தேசிய இலக்கியம்' என்னும் கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் வழிச் செயற்பட்ட எழுத்தாளர்கள் , திறனாய்வாளர்கள். தேசிய இலக்கியம் பற்றிய புரிதலுக்காக எழுத்தாளர் இளங்கீரனின் 'மரகதசம்' சஞ்சிகையில் 'தேசிய இலக்கியம்' பற்றி 'மரகதம் ' சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் க.கைலாசபதி, ஏ.ஜே.கனகரட்னா, அ.ந.கந்தசாமி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.

இதனைத்தொடர்ந்து தினகரன் பத்திரிகையில் மரபினைப்பேணிய பண்டிதர்களுக்கும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களுக்குமிடையில் தலையெடுத்த 'மரபு' பற்றிய விவாதமும் முக்கியமானது. இரு சாராரும் தினகரன் பத்திரிகையில் நடாத்திய விவாதம் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வு.

'மரகதம்' சஞ்சிகையில் வெளியான 'தேசிய இலக்கியம்' பற்றிய கட்டுரைகளையும், தினகரன் பத்திரிகையில் நிகழ்ந்த மரபு பற்றிய விவாதக் கட்டுரைகள் சிலவற்றையும், வேறு சில கட்டுரைகளையும் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கின்றனர் 'சவுத் ஏசியன் புக்ஸ்' (சென்னை) பதிப்பகத்தினர். தொகுத்தவர் எழுத்தாளர் சுபைர் இளங்கீரன். மிகவும் முக்கியமான தொகுப்பு.

Friday, January 4, 2019

வ.ந.கிரிதரனின் பதினான்கு கவிதைகள்!

1. சுடரும் இரகசியங்கள்!.
இருண்டு கிடக்கிறது இரவு வான்.
சுடரும் பெண்கள்; விரியும் வெளி.
தனிமையின் மோனம். இலயிப்பினில்
இருப்பு. பெண்களே! பெண்களே! பகர்ந்திடுவீரா உம்
இரகசியத்தை? 'அஞ்சுதலற்ற கதிர்கள்.சூனியத்தைத்
துளைத்து வருமொளிக் கதிர்கள்.
அட, அண்டத்திலார்க்கும் அஞ்சுவமோ?
ஓராயிரம் கோடி ஆண்டுகள்
ஓடியே வந்தோம்; வருகின்றோம்;
வருவோம். காலப் பரிமாணங்களைக் காவியே
வந்தோம்; வருகின்றோம்; வருவோம்.
வெளியும் விரவிக் கிடக்கும்
சூனியமும் கண்டுதான் துவண்டோமோ?
அஞ்சுதலற்ற நெஞ்சினர் எம்முன்னே
மிஞ்சி நிற்பவர்தானெவருமுண்டோ?
தெரிந்ததா? விளக்கம் புரிந்ததா?
நொக்குங்கள்! நோக்குங்கள்!
நோக்கம்தான் புரிந்ததுவோ?'
புரிந்ததில் இனித்தது இரவுப்
பொழுது.

2. மின் பின்னியதொரு பின்னலா ?

நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்
உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று.
தனியாக எப்பொழுதுமே இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.
உனக்கும் எனக்குமிடையில் எப்பொழுதுமே ஒரு தூரம்
இருக்கத் தானே செய்கிறது. அது எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதிலும்.
எப்பொழுதும் ஒரு நேரம் இருக்கத் தானே செய்கிறது
கணத்தினொரு சிறுபகுதியாக என்றாலும்.
நீ இருப்பதாக நீ சொல்லுவதைக் கூட நான் அறிவதற்கும்
புரிவதற்கும் எப்பொழுதுமே இங்கு நேரமுண்டு. தூரமுமுண்டு
கண்ணே!
காண்பதெதுவென்றாலும் கண்ணே! அதனை அப்பொழுதே
காண்பதற்கு வழியென்றுண்டா ?
காலத்தைக் கடந்தாலன்றி ஞாலத்தில் அது
நம்மால முடியாதன்றோ ?
தூரமென்று ஒன்று உள்ளவரை நேரமொன்று இங்கு
இருந்து தானே தீரும் ? அது எவ்வளவுதான்
சிறியதாக இருந்த போதும்.
வெளிக்குள் காலத்திற்குள் கட்டுண்டதொரு இருப்பு
நம் இருப்பு கண்ணம்மா1
காலத்தினொரு கூறாய் உன்னை நான் காண்பதெல்லாம்
இங்கு உன்னை நான் அறிவதெல்லாம்
மின்னலே! மின் பின்னியதொரு பின்னலா ?
உன்னிருப்பும் இங்கு மின் பின்னியதொரு
பின்னலா ? என் கண்ணே!

Tuesday, January 1, 2019

இணையத்தில் கூகுள் அட்சென்ஸ் (AdSense)மூலம் வருமானம் பெற ஆர்வமுள்ளவர்களுக்கான தகவல்!

இணையத்தில் கூகுள் 'அட்சென்ஸ்' பாவித்து யு டியூப் மற்றும் உங்களது வலைப்பதிவு மூலம் எவ்விதம் பணம் சம்பாதிக்கலாம் என்பதை மிகவும் எளிமையாக, தன் சொந்த அனுபவங்களைச் சான்றுகளாக வைத்து இக்காணொளி இளைஞர் விளங்கப்படுத்துகின்றார். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் சொந்தமாக , நியாயமான வருமானத்தை கூகுள் அட்சென்ஸ் மூலம் பெறலாம். ஏனைய  நாடுகளில் உள்ளவர்களும் கடுமையாக முயற்சி செய்தால் நியாயமான வருமானத்தைப்பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள காணொளியைப்பார்க்கவும்.  முழுமையாகப் பார்க்கவும். பயன் பெறவும்.

இணையத்தில் வருமானம்

Sunday, December 30, 2018

தொடர் நாவல்: குடிவரவாளன் (15 -19) -வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் பதினைந்து: நியூயார்க்கில் குடை வியாபாரம்!

நண்பர்களிருவரும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நாற்பத்திரண்டாவது வீத்யில் அமைந்திருந்த நூலகத்தை மையமாக வைத்து 'பிராட்வே' சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் நூலகத்திற்குச் சென்று பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் புரட்டினால் நல்லதுபோல் இளங்கோவுக்குப் பட்டது. அருள்ராசா இளங்கோவைப் போல் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலக்கியெம்ன்று எதிலும் பெரிதாக ஆர்வமற்றவன். ஆனால் கல்வி சம்பந்தமான, தொழில் வாய்ப்புகள் சம்பந்தமான, வியாபாரம் சம்பந்தமான விடயங்களில் ஆர்வமுள்ளவன். அவை பற்றிய விடயங்களை படிப்பதில் அதிகக் கவனம் செலுத்துபவன். அவனுக்கும் சிறிது நேரத்துக்கு நூலகம் சென்று ஏதாவது பிடித்த விடயங்களைப் பற்றிய பத்திரிகை, சஞ்சிகைகளைப் புரட்டினால் நல்லதுபோல் பட்டது. சிறிது நேரம் ஓய்வெடுத்தததும் போலாகுமெனப் பட்டது. இதன் காரணமாக இருவருக்கும் நூலகம் செல்வதில் எந்தவிதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படவில்லை. எனவே நூலகத்தை நோக்கி நடையைக் கட்டினார்கள். அப்பொழுதும் அவர்களது சிந்தனை முழுவதும் குடிவரவு அதிகாரிகளுடனான சந்திப்பு பற்றியேயிருந்தது. இளங்கோ டிம் லாங்கைன்ச் சந்தித்திருந்தான். அருள்ராசாவுக்கு வந்து வாய்த்தவனோ டிம் லாங்கினைப் போல் அவ்வளவு வேடிக்கையானவனாக இருக்கவில்லை. வழக்கம்போல் அதிகாரிகளுக்குரிய கடின முகபாவமும், வார்த்தைகளை அளந்து, அதிகாரத்துடன் கொட்டும் தன்மையும் கொண்டவனாக விளங்கினான். எனவே அவனுக்கும் அருள்ராசாவுக்குமிடையிலான உரையாலும் மிகவும் குறுகியதாகவே அமைந்து விட்டதில் ஆச்சரியமேதுமிருக்கவில்லை. அவனொரு இத்தாலிய அமெரிக்கன். கிளாட் மன்சினி என்பது அவனது பெயர். அவனுக்கும், அருள்ராசாவுகுமிடையில் நடைபெற்ற உரையாடலும் பினவருமாறு சுருக்கமாக மட்டுமே அமைந்திருந்தது:

அருள்ராசாவின் ஆவணப் பிரதிகளைப் பார்த்தபடியே குடிவரவுத் திணைக்கள அதிகாரி கிளாட் மன்சினி " உனக்கு என்னவிதத்தில் உதவ முடியும்?" என்று ஆரம்ப வினாவினைத் தொடுத்தான்.

அதற்கு அருள்ராசா " சமூகக் காப்புறுதி இலக்க அட்டை எடுப்பது பற்றியே விசாரிப்பதற்காக இங்கு வந்துள்ளேன்.." என்றான்.

அதற்கு கிளாட் மன்சினி " உனது விடயம் சம்பந்தமாக எங்களிடமிருந்து உனக்குரிய பதில் வரும் வரையில் எதுவும் செய்வதற்கில்லை. அதுவரை நீ பொறுத்திருக்கத்தான் வேண்டும்." என்று பதிலிறுத்தான். அதற்கு மேல் அவனுடன் கதைப்பதில் எந்தவிதப் பயனுமில்லை என்பதை உணர்ந்து கொண்ட அருள்ராசா பதிலுக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியேறினான்.

தொடர் நாவல்: குடிவரவாளன் (27) -வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!

1.


நாளை மறுநாள் அவன் அமெரிக்க மண்ணில் காலடி வைத்துச் சரியாக ஒருவருடமாகப் போகின்றது. இளங்கோவுக்குக் காலத்தின் கடுகதிப் பயணம் ஆச்சரியத்தைத் தந்தது. பால்யகாலத்தில் காலம் ஆறுதலாக விரைந்ததுபோல் இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போதிருக்கிறது. எந்தவித வாழ்க்கைப் போராட்டங்களையும் சுமக்க வேண்டிய பொறுப்புகளின்றி, சுதந்திரச் சிட்டுக்களாகப் பெற்றோரின் அரவணைப்பில் பொழுது எவ்வளவு ஆறுதலாக, இனிமையாகக் கழிந்தது? இரவுகளில் கொட்டிக் கிடக்கும் சுடர்களை, மின்மினிகளை, முழுநிலவை, பெருவிழி ஆந்தைகளை, நத்துக்களை, அணில்களை, விண்ணில் கோடிழுக்கும் நீர்க்காகங்களை, குக்குறுப்பான், கொண்டைக் குருவி, மாம்பழத்திக் குருவி, ஆலா, ஆட்காட்டி, ஊருலாத்தி, கிளி, மைனா, மணிப்புறாவெனப் புள்ளினங்களையெல்லாம் இரசிப்பதற்கு நிறையவே பொழுதுகளிருந்தன. ஆனால் இன்று... இருத்தற் போராட்டத்தின் சுமைகளையெல்லாம் தாங்கவேண்டிய சூழலில், இரசிப்பதற்குக் கூடப் பொழுதுகளில்லை? அவ்வளவு விரைவாக அவற்றின் பயணம்! இருந்தாலும் இவ்வளவு இடர்களுக்கிடையிலும் ஒரு சில நூல்களையாவது படிப்பதற்கு அவனால் முடிந்தது. சிந்திப்பதற்கு முடிந்தது. இந்த ஒரு வருடத்தில் அவன் வாழ்வு ஏதாவது பயன்களைப் பெற்றிருக்கிறதா? பொருளியல்ரீதியில் பலவகை அனுபவங்களைத்தவிர எந்தவிதக் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுமில்லை. ஆனால் ஒன்று... இந்த அனுபவங்கள் மிகுந்த பயனுள்ளவை. இருப்பின் பல்முனைத் தாக்குதல்களையும் உறுதியுடன் உள்வாங்கி, நம்பிக்கையுடன் எதிர்த்து நடை பயிலும் பண்பினை அவனுக்கு அளித்துள்ளவை இந்த அனுபவங்கள்தான். 'அச்சமில்லை, அமுங்கதலில்லை. நடுங்குதலில்லை நாணுதலில்லை. பாவமில்லை, பதுங்குதலில்லை. ஏது நேரிடினு மிடர்ப்பட மாட்டோம். கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம். யார்க்கு மஞ்சோம். எதற்கு மஞ்சோம். எங்கு மஞ்சோம். எப்பொழுது மஞ்சோம். வான் முண்டு. மாரியுண்டு. ஞாயிறுங் காற்றும் நல்ல நீரும், தீயு மண்ணும், திங்களு மீன்களும் உடலுமறிவு முயிரு முளவே' என்னும் உறுதியான மனப்பாங்கினை அவை அவனுக்களித்துள்ளன.

வவுனியா நண்பன் ஜெயரட்ணத்தின் உணவகத்திலும் சிறிது காலம் நண்பகற் பொழுதில் உணவு விநியோகிக்கும் பணியாளாகப் பணி புரிநது பார்த்து விட்டான். அதற்குப் பின் சிறிது காலம் வங்க நண்பன் கோஷின் தொழிற்சாலையிலும்  தொழிலாளியாக வேலை பார்த்தான். அதுவும் ஓரிரு மாதங்களே நீடித்தது. அதன் பின் வழக்கம்போல் மீண்டும் இருப்புடனான போராட்டம் தொடங்கி விட்டது. ஏற்கனவே முடிவு செய்திருந்ததன்படி மேலும் இந்த மண்ணில் தொடர்ந்திருப்பதை நினைத்துப் பார்க்கவே அவனால் முடியாததாகவிருந்தது. எந்தவிதச் சட்டபூர்வமான ஆவணங்களுமின்றி , பொருளியல்ரீதியில் ஒருவித உறுதியான நிலையினை அடைந்து, ஆழமாக வேரூன்றுவதற்கு முடியாமலிருந்தது. இந்த நிலையில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். நாளை மறுநாள் இந்த மண்ணில் காலடிவைத்துச் சரியாக ஒருவருடமாகிறது. அடுத்த வருடத்தின் முதல் நாளன்று அவனால் இந்த மண்ணில் ஒரு கணம்கூட இருக்க முடியாது. நாளை மறுநாளிரவு அவனது வாழ்வின் அடுத்த கட்டம் ஆரம்பமாகவேண்டும். மீண்டும் முதலிலிருந்து, அடிமட்டத்திலிருந்து, நம்பிக்கைகளுடன், கனவுகளுடன், எதிர்பார்ப்புகளுடன், உற்சாகத்துடன் அவனது இருதத்லுக்கான பயணம் தொடங்க வேண்டும். இதற்கு ஒரே வழி.. எந்த மண்ணை நோக்கிக் கடந்த ஆவணி மாதத்தில், ஈழதில் வெடித்த இனக்கலவரத்தைத் தொடர்ந்து அவன் புறப்பட்டானோ, எந்த மண்ணை நோக்கிய அவனது பயணம் இடையில் இந்த மண்ணில் தடைபட்டதோ, அந்த மண்ணை நோக்கி, கனடாவை நோக்கி, அவனது பயணம் மீண்டும் புதிதாக ஆரம்பிக்க வேண்டும். கையிலுள்ள இருநூறு டாலர்களுடன், அவன் மீண்டும் தன் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். இவ்விதமாக இறுதித் தீர்மானமெடுத்தவுடன் அன்றிரவு அவன் தன் அறை நண்பர்களுக்குத் தன் எதிர்காலத்திட்டங்களை எடுத்துரைத்துப் பிரிவதற்கு முன்னர் அவர்களுடன் இறுதிப் பொழுதினை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டான். இவ்விதமாக உறுதியானதொரு முடிவினைத் தன் எதிர்காலம் பற்றியெடுத்ததும், அவனது நெஞ்சின் பாரம் சிறிதளவு குறைந்தது. அந்தவிடத்தை களியுடன் கூடியதொரு உற்சாகம் கலந்த உணர்வுகள் ஆக்கிரமித்துக் கொண்டன. அன்றிரவு அறை நண்பர்களுடன் ஆனந்தமாகக் கூடிக் கதைத்தான்.

தொடர் நாவல்: குடிவரவாளன் (26) -வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இருபத்தியாறு: நடுவழியில்...

ஸ்பானிஷ்கார முகவனான பப்லோவுடனான அனுபத்தின் பின்னர் இளங்கோ முகவர்களின் மூலம் வேலை தேடும் படலத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தான். நேரடியாகவே நகரில் அலைந்து திரிந்து வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தான். சட்டவிரோதக் குடிகள் மில்லியன் கணக்கில் வசிக்குமொரு மாநகரில் தனக்கேன் வேலையொன்றை எடுப்பது சிரமமாகவிருக்கிறதென்று எண்ணியெண்ணி மனம் சலித்தான். இருந்தாலும் சோர்ந்து விடாமல் முயனறு கொண்டிருந்தான். இத்தகையதொரு சந்தர்ப்பத்தில்தான் அவன் ஜெயரடணத்தை மான்ஹட்டன் நகரத்துத் தெருக்களிலொன்றில் தற்செயலாகச் சந்தித்தான். ஈழத்தின் வன்னிமாவட்டத்தின் முக்கிய நகர்களிலொன்றான வவுனியாவைச் சேர்ந்தவனவன். நாற்பத்தியாறாவது தெருவிலுள்ள இத்தாலியனின் உணவகமொன்றில் பகல் நேரத்தில் உணவக உதவியாளனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இளங்கோ அன்றாட வாழ்வுக்கே திண்டாடுவதைப் பார்த்த அவன் இளங்கோவுக்குப் பின்வருமாறு புத்திமதியொன்றைக் கூறினான்: "இளங்கோ உனக்கு விருப்பமென்றால், பகல்நேரத்தில் ஓரிரு மணித்தியாலங்கள் செய்யக் கூடியதொரு சிறு வேலையொன்றுள்ளது, அதனை உனக்கு எடுத்துத் தரலாம். ஆனால் உன்னால் அதனைச் செய்ய முடியுமோ தெரியாது.."இவ்விதம் ஜெயரட்ணம் இழுக்கவே இளங்கோ "பரவாயில்லை ஜெயம். சொல்லு. முடிந்தால் செய்யிறேன். பார்ப்பம்" என்றான்.


அதற்கு ஜெயரட்ணம் "வேலையொன்றும் பெரிதாகக் கஷ்ட்டமான வேலையில்லை. மத்தியான நேரத்தில் பதினொரு மணியிலிருந்து இரண்டு மணிவரையிலை எங்கட ரெஸ்ட்ராண்டிறிற்கு வருகிற ஓர்டர்களுக்குரிய சாப்பாட்டைக் கொண்டு சென்று குடுப்பதுதான். 'டெலிவரி' வேலை. சில் நேரத்திலை கிட்டடியிலையும் இருக்கும். சில நேரத்திலை ஹை ரைஸ் பில்டிங்கிலை ஐம்பது அறுபது புளோரென்று ஏறி இறங்கவேண்டியும் வரும். பெரிதாகச் சம்பளமெதுவும் தரமாட்டான்கள். மினிமத்திற்கும் குறைச்சுத்தான் தருவான்கள். ஆனா சாப்பாட்டை ஓரடர் பண்ணுறவங்கள் நல்லா டிபஸ் தருவாங்கள். அதெல்லாம் உனக்குத்தான். மற்றது..."

"மற்றது.. என்ன " என்றான் இளங்கோ.

அதற்கு ஜெயரடணம் தொடர்ந்து விளக்கமளித்தான்: "மத்தியானச் சாப்பாடும் தருவாங்கள். எங்கடை ரெஸ்டாரண்டிலிருந்து என்னத்தை வேண்டுமென்றாலும் எடுத்துத் தின்னலாம். அந்த விதத்திலை பார்க்கேக்கை பரவாயில்லையென்று சொல்லலாம். இன்னொரு நல்ல வேலை கிடைக்கிற வரையிலை கொஞ்ச நேரம் செய்யிறதாலை உனக்குத்தான் நல்லது. நல்லா யோசித்துச் சொல்லு. இன்றைக்கு முழுக்க நல்லா யோசி. விருப்பமென்றால் நாளைக்கே எங்கட ரெஸ்டாரண்டிற்கு பத்து மணி போலை வா. முதலாளிக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்கிறன்."

தொடர் நாவல்: குடிவரவாளன் (25) -வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்!

இளங்கோவின் குறிப்பேட்டிலிருந்து..........

வாழ்க்கை வழக்கம் போலவே உருண்டோடிக் கொண்டிருக்கிறது. ஒரு சில சமயங்களில் சலிப்பு மிகவும் அதிகமாகி நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. அச்சமயங்களிலெல்லாம் எந்தவிதமான எதிர்மறையான சிந்தனைகளும் தாக்கவிடாமலிருப்பதற்காக நேரம் காலமென்றில்லாமல் நகர் முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருப்பேன். அருள் கூட சில சமயங்களில் என் அலைச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அறையிலேயே தங்கி விடுவான். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, சூழலை, சமூக வாழ்க்கையினை எனப் பல்வேறு விடயங்களை அறியும்பொருட்டுக் கவனத்தைத் திருப்பினேன். அவ்வப்போது நகரத்தின் பிரதான நூலகத்துக்குச் செல்வதுமுண்டு. ஒரு சில சமயங்களில் புரூக்லீன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் நண்பர்களைச் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதலாக அளவளாவி வருவதுமுண்டு.  இதே சமயம் அனிஸ்மான் கூறியபடி மான்ஹட்டனிலிருந்த பலசரக்குக் கடையொன்றை நடாத்திக் கொண்டிருந்த குஜராத் தம்பதியினரிடமிருந்து வேலை வழங்கற் கடிதமொன்றினையும் எடுத்து வேலை செய்வதற்குரிய அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பித்தோம். அதே சமயம் அனிஸ்மான் கூறியபடியே எம் விடயத்தில் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைத்தத்னாலேற்பட்ட மனித உரிமை மீறல்கள் விளைவித்த பாதிப்புகளுக்காக அமெரிக்க அரசிடம் நட்ட ஈடு கேட்டும் விண்ணப்பித்தோம். நாட்கள்தான் வேகமாகச் சென்று கொண்டிருந்தனவே தவிர காரியமெதுவும் நடக்கிறமாதிரித் தெரியவில்லை. இதே சமயம் மீண்டும் பகல் நேரங்களில் வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தோம்.

 இவ்விதமாகக் காலம் சென்று கொண்டிருந்தபோதுதான் ஒருநாள் நண்பகற் பொழுதில் மகேந்திரனைச் சந்தித்தேன். இவன் கிரேக்கக் கப்பலொன்றில் பல வருடங்களாக வேலை பார்த்து விட்டு அண்மையில் அக்கப்பல் நியூயார்க் வந்திருந்த சமயம் பார்த்து இங்கேயே தங்கி விட்டவன். இப்பொழுது என்னைப்போல் வேலை தேடிக் கொண்டிருந்தான். ஒரு நாள் வழக்கம் போல் பகல் முழுவ்தும் அலைந்து திரிந்து சலித்துப் போய் நாற்பத்திரண்டாவது வீதியிலிருந்த பிரதான பஸ் நிலையத்தில் பொழுதினை ஓட்டிக் கொண்டிருந்தபொழுது அவனாகவே வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தான் வேலை தேடித்தருமொரு முகவனைச் சந்திக்கப் போவதாகவும் , அவன் மிகவும் திறைமைசாலியென்று கேள்விப்பட்டிருப்பதாகவும், நான் விரும்பினால் நானும் அவனுடன் அந்த முகவனைச் சந்திக்க வரலாமென்றும் கூறினான். அவனது கூற்றிலிருந்த உற்சாகம் சலித்துக் கிடந்த என் மனதிலும் மெல்லியதொரு நப்பாசையினை ஏற்படுத்தியது. அத்துடன் மகேந்திரன் கூறிய இன்னுமொரு விடயம்தான் எனக்கு மீண்டும் அத்தகையதொரு நப்பாசையினை ஏற்படுத்தக் காரணமாகவிருந்தது. அவனறிந்தவகையில் இந்த முகவன் அவனைச் சந்திக்கும் முதல்நாளிலேயே உடனடியாக வேலைக்கு அனுப்பி விடுவானாம். அதுதான் அவனது சிறப்பாம். அவன் அமெரிக்க மண்ணில், குறிப்பாக நியூயார்க் மாநகரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் மக்களனைவருக்கும் ஆபத்தில் அபயமளிக்கும் கடவுளாம். அவன் இவ்விதமாகவெல்லாம் அந்த முகவனைப் பற்றி அளந்து கொட்டவே நான் கேட்டேன்: "இதையெல்லாம் எங்கையிருந்து நீ அறிந்து கொண்டனி". அதற்கவன் வழியில் சந்தித்த ஸ்பானிஷ்காரனொருவன் கூறியதாகவும், அவன் தந்திருந்த பத்திரிகையொன்றிலும் இந்த முகவனின் விளம்பரம் வந்திருந்ததாகவும், அதில் கூட இவனைச் சந்திக்கும் எவரையும் உடனடியாகவே வேலை செய்யுமிடத்திற்கு அனுப்பிவிடுவதில் இவன் சமர்த்தனென்று குறிப்பிடப்பட்டிருந்ததைத் தான் பார்ததாகவும் கூறியபொழுது எனக்கும் அந்த முகவன்பேரில் நல்லதொரு அபிப்பிராயமேற்பட்டது. இதன்விளைவாக நானும் மகேந்திரனுடன் சேர்ந்து அந்த முகவனிடம் செல்வதற்குச் சம்மதித்தேன். விடா முயற்சியில்தானே வாழ்க்கையின் வெற்றியே தங்கியுள்ளது. ஊக்கமது கைவிடேலென்று அவ்வைக் கிழவி கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துரைத்திருக்கின்றாளல்லவா.

தொடர் நாவல்: குடிவரவாளன் (24) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!

" வாருங்கள் என் அன்புக்குரிய நண்பர்களே! காலை வணக்கங்கள்! இன்று நான் உங்களை சந்திக்க விரும்பியதற்கொரு முக்கியமான காரணமுண்டு. அதற்குமுன்னர் உங்களது வாழ்க்கையைப் பற்றிச் சிறிது அறிய விரும்புகின்றேன். வாழ்க்கை எப்படியிருக்கிறது? என்னால் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டியதேதாவதிருக்கிறதா?" இவ்விதமாக இளங்கோவையும் அருள்ராசாவையும் வரவேற்றார் சட்டத்தரணி அனிஸ்மான். இதற்கு இளங்கோவையே பதிலளிக்குமாறு பார்வையால் உணர்த்தினான் அருள்ராசா. அதனைப் புரிந்து கொண்ட இளங்கோ சிறிது விபரமாகக் கூறத்தொடங்கினான்: "நற்காலை வந்தனங்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும் அனிஸ்மான் அவர்களே! உங்களது பரிவான விசாரணைக்கு எமது நன்றி. நீங்கள் உடனடியாக அழைத்ததால்தான் தற்போது வந்துள்ளோம். இருந்தாலும் சிறிது காலமாகவே உங்களைச் சந்திக்க வேண்டுமென்று எண்ணியிருந்தோம். அதற்குள் நீங்களே அழைத்து விட்டீர்கள் பழம் பழுவிப் பாலில் விழுந்தது மாதிரி"

 'மேலே கூறுங்கள்' என்பது போன்றதொரு பாவனையில் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் அனிஸ்மான். இளங்கோவே மேலே தொடர்ந்தான்: "தற்போது எங்கள் முன்னாலுள்ள முக்கியமான பிரச்சினையே 'சமூகக் காப்புறுதி இலக்க அட்டை' போன்ற சட்டரீதியான ஆவணங்களைப் பெறுவதுதான். 'ச.கா.இ' அட்டை இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாதுள்ளது. எங்களிடமிருந்த கடவுச் சீட்டையும் குடிவரவுத் திணைக்களத்தினர் பாஸ்டனிலேயே பறித்து வைத்துள்ளனர். இந்நிலையில் 'ச.கா.இ.' அட்டையில்லாமல் சட்டரீதியாகவொரு வேலைகூடச் செய்ய முடியாமலுள்ளது. வங்கியொன்றில் கணக்கொன்றும் ஆரம்பிக்க முடியாமலுள்ளது. நீங்கள்தான் இந்த விடயத்தில் எப்படியாவது உதவ வேண்டும். ஒழுங்காக வேலையொன்றும் செய்ய முடியாமல் அன்றாட வாழ்க்கையையே கொண்டு நடத்த முடியாமலுள்ளது"

இளங்கோ இவ்விதம கூறவும் அவன் கூறுவதையே மிகவும் அவதானமாகச் செவிமடுத்துக் கொண்டிருந்த சட்டத்தரணி அனிஸ்மான "உங்கள் நிலை எனக்கு நன்றாகவே புரிகிறது. நிச்சயமாக என்னால் முடிந்த அளவுக்கு முயன்று பார்க்கிறேன் மேலும் நீங்கள் மட்டும் யாராவது ஒருவரது வர்த்தக நிறுவனத்திலிருந்து உங்களுக்கு வேலையிருப்பதாக ஒரு கடிதமொன்றினை எடுத்துத் தந்தால் அதனையும், உங்களது இன்றைய நிலையினையும் வைத்து குடிவரவுத் திணைக்களத்திடம் உங்களுக்கு வேலை செய்வதற்குரிய அனுமதிப் பத்திரம் கோரி விண்ணப்பிக்கலாம்."

தொடர் நாவல்: குடிவரவாளன் (20 - 23) - வ.ந.கிரிதரன் --

அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!

அடுத்த மூன்று வாரங்களும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் ஹரிபாபுவுடன் கழிந்தது. ஹரிபாபு கூறியபடியே அவர்களுக்குமொரு நடைபாதைக் கடையினை கிறிஸ்தோபர் வீதியும், நான்காம் வீதி மேற்கும் சந்திக்குமிடத்தில் போட்டுக் கொடுத்துவிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி மற்றும் ஹென்றி எல்லோரும் தமது பழைய இடங்களிலேயே தங்கள் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஹரிபாபுவுக்கு நண்பர்களிருவரும் வேடிக்கையாக வைத்த பெயர் 'நடுத்தெரு நாராயணன்'. நடுத்தெரு நாராயணன் கடையிலிருந்து நடைபாதைக்கு வந்தவன். அவனது கடையிலேயே அவனது விற்பனைப் பொருட்கள் யாவுமிருந்தன. நடுத்தெரு நாராயணன் நடைபாதை வியாபாரத்தின் பல்வேறு விதமான நெளிவு சுளிவுகளையும் கற்றுத்தேர்ந்த கில்லாடி. இந்த விடயத்தில் சில சமயங்களில் நியூயார்க் காவற்துறைக்குக் கண்களில் விரல்களை விட்டு ஆட்டிடும் வல்லமை பெற்றிருந்த அவனிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் பல இருந்தன. அவ்விதம்தான் இளங்கோ அவனைப்பற்றி எண்ணிக் கொண்டான்.

சில சமயங்களில் வார இறுதி நாட்களில் நியூயார்க் நகரின் சில வீதிகளை மூடி விட்டு அங்கு நடைபாதை வியாபாரிகளைப் பொருட்கள் விற்பதற்கு அனுமதி வழங்குவார்கள். அத்தகைய சமயங்களில் அவ்விதம் மூடப்பட்ட வீதிகளில் வைத்து விற்பதற்கு அதிக அளவில் கட்டணத்தைச் மாநகரசபைக்குச் செலுத்த வேண்டும். இத்தகைய சமயங்களில் நடுத்தெரு நாராயணனான ஹரிபாபு வின் செயற்திட்டம் பின்வருமாறிருக்கும்:

Saturday, December 29, 2018

மிலான் குந்தெராவின் 'நாவலின் கலை' என்னும் நூலிலிருந்து..

மிலான் குந்தெராவின் 'நாவலின் கலை' என்னும் நூலிலுள்ள கட்டுரைகளைப் புரட்டிக்கொண்டிருக்கின்றேன். நூலிலுள்ள முதலாவது கட்டுரை "The Depreciated Legacy of Cervantes".. அதில் நாவல் பற்றி, இருத்தல் பற்றி, மனிதர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் என் கவனத்தை ஈர்த்த சில கருத்துகளை என் மொழியில் சுருக்கமாகத் தருகின்றேன்.

எட்மண்ட் ஹஸ்ஸேர்ல் வியன்னாவிலும், பிராக்கிலும் ஆற்றிய ஐரோப்பிய மனிதத்துவம் பற்றிய புகழ்பெற்ற உரையில் ஐரோப்பிய விஞ்ஞானம் பற்றிக் குறிப்பிடுகையில் ஒரு பக்கத் தன்மை மிக்கதான ஐரோப்பிய விஞ்ஞானமானது உலகை கணித மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக்குரியதொன்றாக மட்டுமே ஆக்கிவிட்டது. மானுட வாழ்க்கையை அதன் கவனத்துக்கப்பால், அதன் எல்லைக்கப்பால் வைத்துவிட்டது என்று கூறியுள்ளார்.

விஞ்ஞான வளர்ச்சியானது மனிதரை விஞ்ஞானத்தின் சிறப்பு விதிகளுக்குள் உந்தித்தள்ளி விட்டது. எவ்வளவுக்கெவ்வளவு மனிதர் அறிவில் முன்னேறினார்களோ அவ்வளவுக்கவ்வளவு வாழ்வை முழுமையாகவோ அல்லது தம்மைப்பற்றி முழுமையாகவோ அறிந்துகொள்வதில் பின்னேறினார்கள். எட்மண்ட ஹஸ்ஸேட்லின் மாணவரான ஹைடெகரின் புகழ்பெற்ற சொற்றொடரான 'இருத்தலை மறத்தல்' (the forgetting of being) என்னும் சூழலுக்குள் மனிதர் தள்ளப்பட்டுவிட்டார். ரெனெ தெக்கார்தே (Rene Descartes) குறிப்பிட்டதுபோல் மனிதர் தொழில்நுட்பம், அரசியல் மற்றும் வரலாறு ஆகிய விசைகளால் புறக்கணிக்கப்பட்டுவிட்ட ஒரு பொருளாக ஆகி விட்டார். இவ்விசைகளுக்கு மனிதரோ அவர்தம் வாழ்வு பெறுமதியற்றதொன்று. முக்கியத்துவமற்றதொன்று. ஆரம்பத்திலிருந்தே மூடி மறைக்கப்பட்டதொன்று.

நகுலனின் சுசீலா! யார் அவள்?

எஸ்.ராமகிருஷ்ணனின் 'நாவலெனும் சிம்பொனி' நூலில் எழுத்தாளர் நகுலன் பற்றியதொரு கட்டுரையுள்ளது. சிறு கட்டுரை அது. அதில் நகுலனின் படைப்புகளில் அடிக்கடி காணப்படும் சுசீலா என்னும் பெண் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. நகுலனின் சுசீலா பற்றி எஸ்.ரா பின்வருமாறு கூறுவார்:

"'சுசீலாவின் உயர் தன்மைகள் சுசீலாவிடம் இல்லை' எனப்பேசும் இவர், கவிதையெங்கும் காணப்படும் சுசீலா எனும்  பெண் பெயரைக்கொண்டு அதைப்பெண்ணாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ப்படுகிறது.  இப்பெண்பெயர் உருவாக்கும்  வார்த்தைச் சித்திரம் ஏற்கனவே உருவாகும் மனநிலையின் தீவிரத்திற்கு எதிர்நிலையாகவோ , சமன் செய்யும் ஒன்றாகவோ, பரிகசிக்கும் நிலையாகவோ கொள்ளலாம். ஒருவகையில் மரபுக்கவிதையில் வரும் வெண்சங்கே, பாம்பே, கிளியே, குதம்பாய்போல் இதுவும் சுய எள்ளல் குறியீடாகக் கொள்ளலாம்.  சில இடங்களில் சுசிலா மூலம் ஏற்படுத்தும்  நெருக்கம் பாரதியின் கண்ணம்மா என்ற வார்த்தை உருவின் செயல்பாடு போலத் தெரிகிறது."

எழுத்தாளர்கள் பலர் அவ்வப்போது சுசீலா போன்ற விடயமொன்றினைப்பற்றிக் குறிப்பிடும்போது அவ்விடயம் பற்றிய போதிய ஆய்வெதுமின்றி முடிவொன்றுக்கு வந்து விடுகின்றார்கள். அதற்கு எஸ்.ராமகிருஷ்ணனும் விதிவிலக்கானவரல்லர் என்பதையே நகுலனின் சுசீலா பற்றிய அவரது கூற்றும், அது பற்றிய மேலதிக விளக்கங்களும் புலப்படுத்துகின்றன.

எஸ்.ரா. நகுலனின் சுசீலா பற்றி இவ்விதமான முடிவொன்றுக்கு வர முன்னர் நகுலனின் படைப்புகள் அனைத்திலும் நகுலன் எவ்விதம் சுசீலாவை விபரித்திருக்கின்றார் என்று பார்த்திருக்க வேண்டும். பார்த்தாரா என்பது தெரியவில்லை. அவ்விதம் அவர் செய்திருந்தால் நிச்சயமாக 'சுசீலாவும் ஒரு எள்ளல்' என்னும் முடிவுக்கு வந்திருக்க மாட்டார். எனக்கென்னவோ நகுலனின் வாழ்வில் எதிர்பட்ட , அவர் காதலித்த ஆனால் அவருக்குக் கிடைக்காமற் போன பெண்ணொருத்திதான் அவர் படைப்புகளில் வரும் சுசீலா என்னும் பாத்திரமாக இருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. தனக்குக் கிடைக்காமற் போன பெண்ணைச் சுசீலா என்னும் பாத்திரமாக உருவகித்து அவளைத்தன் எழுத்துகளில் நடமாடவிட்டு , அவளுடன் எழுத்துலகில் வாழ்ந்து வந்திருக்கின்றார் நகுலன் என்றே தோன்றுகின்றது. இறுதிவரைத் தனிமையில் வாழ்ந்த நகுலன் நிஜ வாழ்க்கையில் தனக்குக்கிடைக்காமற் பெண்ணைச் சுசீலாவாக்கி மானசீகமாக வாழ்ந்த்திருக்கின்றார் என்றே தோன்றுகின்றது.

காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் 'தங்ஙள் அமீர்'!


நண்பர் எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் குறுநாவல்கள் அடங்கிய தொகுதி காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 'தங்ஙள் அமீர்' என்னும் பெயரில் வெளிவரவுள்ளது. வாழ்த்துகள். 'தங்ஙள் அமீர்' குறுநாவல் 'பதிவுகள்' இணைய இதழில் (23.04.2014) வெளியான குறுநாவல் என்பதையும் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். அக்குறுநாவல் பதிவுகள் இதழில் வெளியாகியபோது வெளியான எனது அறிமுகக் குறிப்பினையும் இங்கு பதிவு செய்கின்றேன்.

எழுத்தாளர் தாஜ் அவர்களை தொண்ணூறுகளிலிருந்து எனக்குத் தெரியும். ஸ்நேகா (தமிழகம்) வெளியிட்ட எனது நூல்களான அமெரிக்கா, நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆகிய நூல்களைத் தமிழக நூல் நிலையமொன்றில் கண்டு வாசித்து அவை பற்றி எனக்குக் கடிதங்கள் இரண்டு அனுப்பியிருந்தார். அதன் பின்னர் வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற நாவல்களிலொன்றான 'என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' நாவலையும் தனது நண்பர் ஒருவர் மூலம் எனக்குக் கிடைக்கச் செய்தார். மறக்க முடியாது.

தாஜ் அவர்களின் சிறுகதையான 'பால்ய விவாஹம்' பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காலச்சுவடு, கணையாழி போன்ற சஞ்சிகைகளில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவள விழாபோட்டியிலும் இவரது கவிதை முத்திரைக்கவிதையாக விருது பெற்றுள்ளது. இவர் தமிழ்ப்பூக்கள் என்னும் வலைப்பதிவினையும் வைத்திருக்கின்றார்.

எழுத்தாளரின் தாஜ் எழுதிய தங்ஙள் அமீர் குறுநாவல் பற்றி 'பதிவுகள்' இணைய இதழில் நான் எழுதியிருந்த அறிமுகக் குறிப்பு:

"புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அந்நிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் 'தங்ஙள் அமீர்' இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. 'தங்ஙள் அமீர்' என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக 'தங்ஙள் அமீரை'ப் பாவிப்பதும்தாம்.

எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணமும், அவரது ஆசையொன்றும்!

பிரபஞ்சன் அவர்கள் 'ஜெயித்த கதை' கட்டுரையின் இறுதியில் 'என் விருப்பமெல்லாம் , எழுத்தைப் போலவே , என் மரணமும் கெளரவமாக இருக்க வேண்டும் என்பதுதான்' என்று குறிப்பிட்டிருந்தார்.  அவரது  ஆசை அவரது மரணத்தில் நிறைவேறியுள்ளது. நீண்ட காலத்துக்குப் பிறகு எழுத்தாளர் ஒருவருக்கு உரிய  மரியாதைகொடுத்து அவரது இறுதி அஞ்சலியை நடாத்தியதற்காகப் புதுவை மாநில அரசையும், அதன் முதல்வரையும் பாராட்டுகின்றேன்.

தம்  வாழ்நாளெல்லாம் தம் எழுத்தால் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும்  எழுத்தாளர்களைப் பொதுவாக மாநில அரசுகள் கவனிப்பதில்லை. இந்நிலையில் அரச மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு இறுதி அஞ்சலியினைச் செய்ததன் மூலம் புதுவை மாநில அரசு உயர்ந்து நிற்கிறது. தமிழக அரசும், ஏனைய மாநில அரசுகளும் இம் முன்மாதிரியைப் பின்பற்றட்டும். எழுத்தாளர்கள் வாழும் காலத்திலேயே அவர்களது படைப்புகளை இலகுவாக வெளியிடும் வகையிலான திட்டங்கள் பலவற்றை உருவாக்கட்டும். நூலகங்கள் இலகுவாக அவர்கள்தம் நூல்களை வாங்கும் திட்டங்களை உருவாக்கட்டும். எழுத்தாளர்களின் நூல்களுக்குக் கொடுக்க வேண்டிய நூலுரிமைப்பணத்தை உரிய முறையில் கொடுப்பதை உறுதி செய்யும் திட்டங்களை உருவாக்கட்டும்.

நியுயோர்க் நடைபாதை ஓவியரின் கைவண்ணம்!


இங்குள்ள ஓவியத்துக்கு ஒரு வரலாறுண்டு. 1984இல் வரையப்பட்ட ஓவியம் இது. இன்றும் என்னிடம் மாற்றமின்றி அவ்விதமேயுள்ளது. இதனை வரைந்தவர் வீதி ஓவியர்களிலொருவர். பென்சிலால் வரையப்பட்ட ஓவியம்.

1983 கலவரத்தைத்தொடர்ந்து நாட்டை விட்டு நீங்கிக் கனடா வரும் வழியில், பாஸ்டன் நகரில் தடுக்கப்பட்டு, நியூயார்க் மாநகரத்தின் புரூக்லீன் நகரிலுள்ள தடுப்பு முகாமில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு வெளியே விடப்பட்டபோது, அடுத்த ஒன்பது மாதங்கள் வரையில் நியூயோர்க் மாநகரத்தில் மான்ஹட்டன் நகரில் பெரும்பாலும் எனது வாழ்க்கை கழிந்தது. 'West 4th Street / Avenue of the Americas வீதிகளிரண்டும் சந்திக்கும் சந்தியில் Avenue of the Americas' வீதியின் கிழக்குப் பக்கமாகவிருந்த நடைபாதையில் மனிதரின் உருவப்படங்கள் வரையும் வீதி ஓவியர்கள் சிலர் அவ்வழியால் செல்லும் மனிதர்களில் விரும்பும் சிலரின் உருவப்படங்களை வரைவது வழக்கம். ஒரு மாலை நேரம் அவ்வழியால் சென்று கொண்டிருந்தபொழுது நான்கு ஓவியர்கள் அந்நடைபாதையில் காணப்பட்டனர். அவர்களில் மூவருக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்து விட்டனர். ஒருவருக்கு ஒருவருக்குக் கிடைக்காததால் , தனிமையில் வாடிக்கையாளரை எதிர்நோக்கி வாடி நிற்கும் கொக்காகக் காத்திருந்தார். மற்ற ஓவியர்கள் தம் தொழிலில் மும்முரமாக ஈடிபட்டிருந்தனர். நான் தனித்திருந்த ஓவியரிடம் ஒருவரின் உருவப் படத்தை வரைவதற்கு எவ்வளவு செல்வாகும் என்றேன்.

என்னைப் பாதித்த முதலிருபது நூற் பட்டியல்!


இதுவரை வாசித்த நூல்களில் என்னைப் பாதித்த முக்கியமான இருபது நூல்களை எண்ணிப்பார்த்தேன். அவற்றின் பட்டியல் இது. இன்னும் பல நூல்களுள்ளன. ஆனால் நினைத்தபொழுது முதலில் நினைவுக்கு வந்தவை இவை. என்னைக் கவர்ந்த வெகுசனப்படைப்புகள் பட்டியலும் விரைவில் வரும். அது போல் என்னைக் கவர்ந்த தமிழகப்படைப்புகள், ஈழத்துப் படைப்புகள், என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள், வெகுசன எழுத்தாளர்கள் பட்டியல்களும் வெளியாகும்

1. புத்துயிர்ப்பு - டால்ஸ்டாய்
2. Crime and Punishment - Dostoyefsky
3. பாரதியார் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்புகள்.
4. The Brothers Karamazov - Dostoyefsky
5. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை - மார்க்ஸ், எங்கெல்ஸ்
6. தாய் - மார்க்சிம் கோர்க்கி
7. The Metamorphosis - Franz Kafka
8. The old man and the Sea - Ernest Hemingway
9. வெற்றியின் இரகசியங்கள் - அ.ந.கந்தசாமி
10. Candide - Voltaire
11. காலம் - வாசுதேவன் நாயர்
12. ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்! - ஜெயகாந்தன்
13. The Fabric of The Cosmos - Brian Greene
14. A brief History Of Time - Stephen Hawkings
15. Hyperspace -Michio Kaku
16. மோகமுள் - தி.ஜானகிராமன்
17. அன்னா கரீனினா - டால்ஸ்டாய்
18. ஏணிப்படிகள் - தகழி சிவசங்கரன்பிள்ளை
19. ஒரு கிராமத்தின் கதை - எஸ்.கே.பொற்றேகாட்
20. நீலகண்ட பறவையைத்தேடி.. - அதீன் பந்த்யோபாத்

நான் இரசித்த புனைவுக் காட்சியொன்று!


ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' தொடர்நாவலில் சம்பவங்களுக்கு உயிர்த்துடிப்புடன் ஓவியர் கோபுலு சித்திரங்கள் வரைந்திருப்பார்.  ஆனந்த விகடனில் நாவல் தொடராக வெளிவந்தபோதே நாவலில் வரும் ஒரு காட்சியும், அதற்கு கோபுலு வரைந்திருந்த ஓவியமும் பசுமரத்தாணி போல் ஆழ்மனத்தில் சென்று படிந்துவிட்டது. மானுட உளவியலைப் பிரதிபலிக்கும் ஜெயகாந்தனின் வசனங்களுக்கு உயிரூட்டியிருந்தார் கோபுலு. காலச்சுவடு பதிப்பகத்தினர் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' 'நாவலை வெளியிட்டபோது ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ஓவியங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். அந்நூல் என்னிடமுள்ளது. அவ்வப்போது அந்நாவலில் அப்பக்கத்தைப்புரட்டிப் பார்ப்பேன். மனத்தின் இறுக்கம் நெகிழ்ந்து இன்பத்திலாழ்ந்துவிடும். ஜெயகாந்தனின் வசனங்களையும், கோபுலுவின் அவ்வோவியத்தையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

இதழ்களில் தொடர்களாக வெளிவந்த நாவல்களை வெளியிடும் பதிப்பகங்கள் அத்தொடர்களில் வெளிவந்த ஓவியங்களையும் உள்ளடக்கி வெளியிடுவது சிறப்பு  மிக்கதென்பதென் எண்ணம். இதுபோல் முல்லை பதிப்பகத்தினர் வெளியிட்ட விந்தனின் பாலும் பாவையும் நாவலிலும் அந்நாவல் தொடராக வெளிவந்த ஓவியங்களுடன் வெளியிட்டிருக்கின்றார்கள். அந்நூலும் என்னிடமுள்ளது. ஆனந்தவிகட வெளியிட்ட பொன்னியின் செல்வன் நாவலிலும் ஓவியர் மணியத்தின் ஓவியங்களையும் உள்ளடக்கியிருந்தார்கள் என்பதும் இத்தருணத்தில் நினைவு கூரத்தக்கது.

எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இன்று - ஏப்ரில் 22 - பிறந்தநாள்.  இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள். இலங்கைத் தமிழ்  இலக்கியத்தில், உலகத்தமிழ் இலக்கிய...

பிரபலமான பதிவுகள்