Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Friday, June 26, 2026

முகநூல் தர்க்கம்: வெகுசன இலக்கியம்!


அண்மையில் என் முகநூல் பக்கத்தில் வெகுசன இலக்கியம் பற்றி என் முகநூல் நண்பர்களுடன் நடந்த தர்க்கத்தின் தொகுப்பிது. வாசியுங்கள்! உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


வெகுசன இலக்கியம்!

மானுடரின் வாசிப்புப் படிக்கட்டுகளில் வெகுசன இலக்கியமும் முக்கியமானதொரு படிக்கட்டு. சிறுவர் இலக்கியம் எவ்விதம் முக்கியமோ அவ்விதமே வெகுசன இலக்கியமும் முக்கியம். தீவிர இலக்கியத்துக்கு ஒருவரைக் கொண்டு செல்வதற்கு , ஒருவருக்கு வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அந்தப்பணியினை வெகுசன இலக்கியம் செய்கிறது. இக்குழுவில் நீங்கள் நீங்கள் வாசித்த வெகுசன படைப்புகள் பற்றி, அதாவது நாவல்கள், காமிக்ஸ், சிறுகதைகள், கவிதைகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், அபுனைவுகள் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.

Tamil Journalist:


இதுவுமொரு சிக்கலான விடயம்தான். வெகுசன இலக்கியம் வாசகனைத் தேடிச் சென்று மகிழ்விக்கிறது என்றால், தீவிர இலக்கியம் வாசகனைத் தன்பக்கம் இழுத்து அவனைச் சிந்திக்க வைக்குமென்கிற கணிப்பீடு என்பதெல்லாம் வெறும் அபத்தம் தோழரே

உடனே தமிழின் தீவிர இலக்கிய முன்னோடி புதுமைப்பித்தன் என்று ஆரம்பித்து உடனேயே தாங்கள் அறிந்த கசடுகளின் தலைவர்களை பட்டியலாக்கி மற்றவர்களை வணிக எழுத்தாளென்கிற மாய உலகம் இது..தீவிர இலக்கியம் மற்றும் வெகுசன இலக்கியம் ஆகிய இரண்டிற்குமான எல்லைக் கோடு மறைந்து, அனைத்துமே வணிகமயமாகிவிட்டது என்பதுதான் இங்கு நான் காண்கிற நிதர்சனம் தோழரே.

Navaratnam Giritharan:

Tamil Journalist ஒரு கேள்வி.. வாசிப்புப் படிக்கட்டில் சிறுவர் இலக்கியம் முக்கியமா இல்லையா? மேலும் எங்கும் 'வெகுசன இலக்கியம் வாசகனைத் தேடிச் சென்று மகிழ்விக்கிறது ' என்று என் பதிவில் கூறவில்லையே. வாசிப்புப் படிக்கட்டில் சிறுவர் இலக்கியம் போல் ஒரு காலகட்டத்தில் வெகுசன இலக்கியமும் ஒரு படிக்கட்டாக இருக்கிறது என்றுதான் கூறியிருக்கின்றேன். அப்படி இல்லையென்று நீங்கள் கூறினால் அது உங்கள் கருத்து. என் கருத்தல்ல.

Tamil Journalist:

இதில் நாம் உணர்ச்சிவசப்பட்டுச் சினப்பதற்கோ, கோபப்படுவதற்கோ எதுவுமில்லை தோழரே! ஏனெனில், இந்த இலக்கியங்களும், அவை பின்னி வைத்திருக்கிற 'இசங்களும்' நமக்கு அப்படித்தான் கற்பித்திருக்கின்றன; நம்மை அப்படித்தான் பழக்கியிருக்கின்றன.'

சிறுவர்களின் கற்பனைத் திறனை வளர்ப்பதும், உலகைப் பற்றிய ஆச்சரியத்தை உருவாக்குவதும், அதன் மூலம் அவர்களுக்கு நற்பண்புகளைக் கற்றுக்கொடுப்பதுமே சிறுவர் இலக்கியம்' என்று நாம் மேடைகளில் முழங்குகிறோம். ஆனால், நிதர்சனத்தில் நடப்பது என்ன? மாயாஜாலக் கதைகளுக்குள்ளும், பேய்க் கதைகளுக்குள்ளும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிக ரீதியான கார்ட்டூன்களிலும் Walt Disney போன்று ஆன்லைன் கேம்களுக்குள்ளும் சிறுவர்களை வலுக்கட்டாயமாகத் தள்ளிவிடுகிறோம். இதையா நாம் 'சிறுவர் இலக்கியம்' என்று அழைக்கப் போகிறோம்?

அடுத்ததாக, 'வெகுசன இலக்கியத்தின் முதன்மை நோக்கம் அன்றாட வாழ்க்கை அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கான பொழுதுபோக்கு மட்டுமே' என்கிறார்கள். அதற்கு மேலாக ஒருபடி மேலேறி , 'வெகுசன இலக்கியத்தைக் கற்றால் தான், ஒருவன் தீவிர இலக்கியம் என்னும் மோட்சத்தை அடைய முடியும்' என்பதன் பின்னணியில் ஒரு போலித்தனமான வாதத்தை முன்வைக்கிறார்கள். 'ஞானமடைந்தவன் மட்டுமே மோட்சமடைவான்; என்பதும், தீவிர இலக்கியம் வாசிப்பவனே அறிவாளி' என்று கட்டமைக்கப்படும் இந்தக் கருத்தியலுக்குள் ஒளிந்திருப்பது அப்பட்டமான அபத்தமும், மேட்டிமைத்தனமும் அன்றி வேறென்ன தோழரே !

Navaratnam Giritharan:

ஒரு கணம் நீங்கள் உங்கள் பால்ய பருவத்தில் வாசித்த சிறுவர் இலக்கியத்தை நினைத்துப் பாருங்கள். அந்த இலக்கியம் உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியமான விளைவுகளைத் தந்தனவா இல்லையா என்பதை எண்ணிப்பாருங்கள். ''வெகுசன இலக்கியத்தைக் கற்றால் தான், ஒருவன் தீவிர இலக்கியம் என்னும் மோட்சத்தை அடைய முடியும்' என்பதன் பின்னணியில் ஒரு போலித்தனமான வாதத்தை முன்வைக்கிறார்கள். ''என்று கூறுகின்றீர்கள். என்னைப்பொறுத்தவரையில் நான் இன்று விரும்பி வாசிக்கும் தத்யயேவ்ஸ்கியின், கப்ரியல் மார்க்வெஸ் கார்சியா, அல்லது எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றோரின் படைப்புகளை நிச்சயம் என் பதின்ம வயதுகளில் விரும்பி வாசித்திருக்க முடியாது. சிலர் விதிவிலக்கானவர்கள் சுந்தர ராமசாமி போன்றவர்கள். அவர் அப்படித்தான் கூறினார் எடுத்த எடுப்பிலேயே தான் தமிழின் தீவிர இலக்கியத்துக்குள் குதித்து விட்டதாக. ஆனால் பெரும்பாலானவர்கள் என்னைப்போன்றுதான் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். நான் என் பால்ய, பதின்ம வயதுகளில் வெகுசன எழுத்துகளூடுதான் என் வாசிப்பை வளர்த்தவன்.என் வாசிப்பைத் தூண்டியவையும் அவைதாம். தீனியாக இருந்தவையும் அவைதாம். என் அனுபவத்தையொட்டித்தான் நானென் கருத்துகளைப் பகிர முடியும். எந்த ஓர் இலக்கியத்துக்கும், கலைக்கும், தொழில் நுட்பத்துக்கும் ஆக்கபூர்வமான பக்கம் என்று ஒன்று உண்டு. எதிர்மறையான பக்கமென்று ஒன்று உண்டு. நீங்கள் எதிர்மறையான அம்சங்களைச் சுட்டிக்காட்டுகின்றீர்கள். ஆக்கபூர்வமாக அவற்றைப் பாவிப்பது நம்மைப்பொறுத்தது. என் அனுபவத்தை நான் கூறினேன். உங்கள் அனுபவம் தந்த கருத்தை நீங்கள் எடுத்துரைத்தீர்கள். நன்றி உங்கள் கருத்துக்கு.

Ramanitharan Kandiah:

தீவிர இலக்கியமென்றால் என்ன? வெகுசனர் என்பவர் யார்?

Navaratnam Giritharan:

Ramanitharan Kandiah ஏன் இந்தக் குதர்க்கக் கேள்வி ரமணி . இதற்கான உங்கள் புரிதலைக் கூறுங்கள் முதலில்.

Ramanitharan Kandiah:

குதர்க்கமில்லை கிரி; ஒருகாலத்திலே உதை நம்பினேன். இப்போது நம்மை நாமே வெகுசனரிலிருந்து உயர்வென எண்ண உதவும் ஒரு சாதனமாகவே படுகின்றது. விடுங்கள்! இவற்றிலே இப்போதெல்லாம் ஈடுபாடில்லை. மனிதத்துவமில்லாத முழு மை அறிவு அண்டாக்கள் கொட்டக்கொட்ட அறம் பேசுவதைத் தூரத்திலிருந்து பார்க்கும்போது விடுபட்டோமெனத் தோன்றுவதிலே வரும் நிம்மதிக்கு மாற்றேதுமில்லை. அப்படியானவர்களின் அறஞ்சொட்டும் குரங்குபாய்ந்தான் குழுநிலைத்தேவ இலக்கியத்துக்கு அம்புலிமாமா பரோபகாரி பழனி கதை எனக்குப் போதுமானதாகப்படுகிறது.

Tamil Journalist:

Navaratnam Giritharan ஒரு மூத்த பத்திரிகையாளராக உங்களுடைய சொந்த வாசிப்பு அனுபவத்தின் பின்னணியில் இருந்து நீங்கள் முன்வைக்கும் கருத்துக்கள் முற்றிலும் சரியானவைதான். ஏற்கலாம். நன்றி தோழரே, இருப்பினும், நாம் விவாதிக்க வேண்டிய புள்ளிகளும் உண்டு தனிமனிதர்களின் வாசிப்புப் பரிணாம வளர்ச்சி வேறு.. நிறுவனமயமாக நமக்கு முன்னே கட்டமைக்கப்படும் இலக்கிய மேட்டிமைத்தனம் என்பது வேறு.

"எடுத்த எடுப்பிலேயே தீவிர இலக்கியத்திற்குள் குதித்துவிட்டேன்" என்கிற எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் கூற்றை அணுகினால், அதற்குப் பின்னால் இருப்பது எந்தவொரு 'ஏழாம் அறிவோ' அல்லது அதீத பிறவி ஞானமோ அல்ல. அது முழுக்க முழுக்க அவர் வாழ்ந்த சூழல் கொடுத்த வாய்ப்புத் தான் என்று நினைக்கின்றேன். அவரைப் போன்ற ஆரம்பகாலத் தீவிர இலக்கியவாதிகள் பலரும் வாசிப்புப் பாரம்பரியம் மிக்க, வசதியான நடுத்தர அல்லது மேல்தட்டுப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவர்களது இல்லங்களிலேயே பெரிய நூலகங்களும், இலக்கியக் கலந்துரையாடல்களும் இயல்பாகவே இருந்திருக்கலாம்.

ரஷ்யாவில் ஒரு போராட்டச் சூழலில் பிறந்து வளரும் ஒரு குழந்தைக்கு, மாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவல் என்பது தீவிர இலக்கியம் அல்ல தோழரே ..அது அவனது அன்றாட யதார்த்த வாழ்வு,

முற்போக்குக் குடும்பச் சூழலில் வளரும் ஒரு குழந்தைக்கு ஆரம்பத்திலேயே தீவிர இலக்கியப் பிரதிகள் கிடைக்கின்றன. எனவே, இது தனிமனித ஞானம் அல்ல; சூழலின் விளைவு. இதற்கு உங்கள் பால்ய வயதில் வெகுசன இலக்கியங்களை வாசித்துவிட்டு, பின்னாளில் தஸ்தயேவ்ஸ்கி மற்றும் மார்க்வெஸ் ஆகியோரின் ஆழமான படைப்புகளுக்கு நகர்ந்ததாகக் குறிப்பிடுவது ஒரு இயல்பான 'வாசகப் பரிணாம வளர்ச்சி' தானே.. இதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இலக்கிய உலகம் கட்டமைக்கும் 'அபத்தம்' எங்கு தொடங்குகிறது என்றால் "வெகுசன இலக்கியம் என்பது தீவிர இலக்கியத்திற்குச் செல்வதற்கான ஒரு படிக்கட்டு என்கிற பம்மாத்தும்.. படிக்கட்டாகவே அது அழிய வேண்டும்" என்று தரம் பிரிக்கிற மேட்டிமைத்தனம்தில்தான்...வெகுசன இலக்கியம் என்பது தீவிர இலக்கியத்தின் ஒரு 'துணைப் பொருள்' அல்ல. அதற்குப் பின்னால் ஒரு பெரும் மக்கள் திரளின் ரசனையும், மொழியியலும், வாழ்வியலும் உள்ளது. வெகுசன இலக்கியத்தை வாசிப்பவர்கள் அனைவரும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பதன் அவசியமென்ன ???

நீங்கள் கூறியது போல், ஒவ்வொரு கலைக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஆக்கபூர்வமான மற்றும் எதிர்மறையான இரு பக்கங்கள் உண்டு. வெகுசன இலக்கியம் லட்சக்கணக்கான வாசகர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குகிறது என்பது அதன் ஆக்கபூர்வமான பக்கம்.சார்லஸ் டிக்கன்ஸ் தன் காலத்தில் பத்திரிகைகளுக்குப் பக்கக் கணக்கில் காசு வாங்கி எழுதிய வெகுசன எழுத்தாளர் தான்; ஆனால் இன்று அவர் உலக இலக்கியத்தின் பிதாமகர். அதே போல் கல்கியின் பொன்னியின் செல்வன் அன்றைக்கு அது வெகுசன எழுத்து இன்றைக்கு வரலாறாக போற்றித்திரிகிற புனித எழுத்து !

இலக்கியம் என்பது ஒரு திறந்தவெளிப் பெருவெளி. அங்கு மார்க்வெஸும் தேவை, ராஜேஷ்குமாரும் தேவை, சிறுவர்களுக்கான தூய்மையான கற்பனை உலகமும் தேவை !

Navaratnam Giritharan:

"இலக்கிய உலகம் கட்டமைக்கும் 'அபத்தம்' எங்கு தொடங்குகிறது என்றால் "வெகுசன இலக்கியம் என்பது தீவிர இலக்கியத்திற்குச் செல்வதற்கான ஒரு படிக்கட்டு என்கிற பம்மாத்தும்.. படிக்கட்டாகவே அது அழிய வேண்டும்" என்று தரம் பிரிக்கிற மேட்டிமைத்தனம்தில்தான்...வெகுசன இலக்கியம் என்பது தீவிர இலக்கியத்தின் ஒரு 'துணைப் பொருள்' அல்ல." என்று கூறுகின்றீர்கள்.

நான் அப்படிப் பார்க்கவில்லை. வெகுசன இலக்கியம் வாசிப்பு வளர்ச்சியில் ஒரு படிக்கல்லாகவே நான் பார்க்கின்றேன். அன்று இன்பமளித்த வெகுசனப் படைப்புகளை இன்று அன்று போல் அதே இன்பத்துடன் வாசிக்க முடியாது. அதன் இலகுவான தொய்ந்து நீளும் மொழி மொழி, ஆளுமை ஆழமற்ற பாத்திரப்படைப்புகள் , வாசகர்களைக் கவருவதற்காக உருவாக்கப்பட்ட கதைப்பின்னல் எனப் பலவற்றை உள்ளடக்கிய அவற்றை என்னால் இன்று ஆதே ஆர்வத்துடன் வாசிக்க முடியாது. ஆனால் ஒரு காலத்தில் என் வாழ்வில் ,இன்பமூட்டிய படைப்புகள் அவை, அதனால் அவற்றை எண்ணியதும் மனம் அக்காலகட்டத்துக்கே சென்று விடுகின்றது. அன்று அடைந்த இன்பத்தை அந்நினைவு தருகின்றது. நினைவு தரும் இன்பத்தை இன்றைய வாசிப்பு தராது. எனவே அவை அழியாத கோலங்களாக என் நினைவில் நிலைத்து நிற்கின்றன. அதனால் அவற்றை நான் சேகரித்து வருகின்றேன். இது என் நிலை.

''வெகுசன இலக்கியத்தை வாசிப்பவர்கள் அனைவரும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பதன் அவசியமென்ன ???'' என்றும் கூறுகின்றீர்கள். அவசியமில்லை. அப்படித்தான் பெரும்பாலானவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் வாசிப்பு அடுத்த கட்டத்துக்குச் செல்லவில்லை அவ்வளவுதான். இருப்பதைக்கொண்டு திருப்தி அடைபவர்கள் அவர்கள். அல்லது அவர்கள் ஆர்வம் வேறு துறைகளில் இருக்கும். பலர் பொருள் தேடலில் மூழ்கி விடுவதில் மூழ்கி விடுவதால் , வாசிப்பு அவர்களுக்கு முக்கியமாக இருப்பதில்லை.

"சார்லஸ் டிக்கன்ஸ் தன் காலத்தில் பத்திரிகைகளுக்குப் பக்கக் கணக்கில் காசு வாங்கி எழுதிய வெகுசன எழுத்தாளர் தான்; ஆனால் இன்று அவர் உலக இலக்கியத்தின் பிதாமகர். அதே போல் கல்கியின் பொன்னியின் செல்வன் அன்றைக்கு அது வெகுசன எழுத்து இன்றைக்கு வரலாறாக போற்றித்திரிகிற புனித எழுத்து !" என்றும் கூறுகின்றீர்கள்.

சார்ள்ஸ் டிக்கன்சை வெறும் வெகுசன எழுத்தாளராகக் குறுக்கி விட முடியாது. அவரைப்போல் மக்களைக் கவரும் வகையில் எழுதிய அதே நேரம் மொழி, சமூக விமர்சனம் , மானுட ஆளுமை ஆகியவற்றை ஆழமாக விபரித்த எழுத்தாளர்களும் இருக்கின்றார்கள். இவர்களைப்போன்றவர்களின் படைப்புகள் பல பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தன. ருஷ்ய எழுத்தாளர் தத்யயேவ்ஸ்கியின் நாவல்கள் தொடர்களாக வெளியானவைதாம். அவரை வெகுசன எழுத்தாளராக வகைப்படுத்த முடியாது. உலக இலக்கியத்தின் முதலிரு இடங்களில் இருப்பவை அவரது படைப்புகள். தமிழிலும் இவ்விதமானவர்கள் இருக்கின்றார்கள். ஜெயகாந்தன் (ஓரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஆனந்த விகடனில் தொடராக வெளியானது), தி.ஜானகிராமன் (மோகமுள் நாவல் சுதேசமித்திரனில் தொடராக வெளியானது) போன்றவர்களையும் வெகுசன எழுத்தாளர்களாக வகைப்படுத்த முடியாது.

Friday, June 19, 2026


[எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றிக் கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவின் கருத்துகளைக் கூறும்படி கேட்டேன். அதன் கருத்துகளைக் கீழே தந்திருக்கின்றேன். மிகச்சிறப்பான அதன் விமர்சனம் என்னைப் பிரமிக்க வைக்கின்றது. நன்றி கோடி ஜெமினி AI.]


"கனேடிய ஈழத்து எழுத்தாளரான வ.ந.கிரிதரன் (நவரத்தினம் கிரிதரன்) எழுதிய ‘குடிவரவாளன்’ (An Immigrant) நாவல், புலம் பெயர் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு மிக முக்கியமான ஆவணமாகும்.

முன்னர் ‘அமெரிக்கா 2’ மற்றும் ‘அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்’ என்ற தலைப்புகளில் இணைய இதழ்களில் தொடராக வெளியாகி, பின்னர் 'குடிவரவாளன்' என்ற பெயரில் நூலாகவும் மின்னூலாகவும் வெளியிடப்பட்டது.

இந்நாவலின் முக்கியக் கூறுகள் மற்றும் அதன் பின்னணி கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

1. சுயசரிதைத் தன்மை கொண்ட கதைக் களம் (Autobiographical Element)

இந்நாவல் எழுத்தாளரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது. 1983-இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களுக்குப் பிறகு, பல ஈழத்தமிழர்களைப் போல இவரும் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தார். கனடா நோக்கிப் பயணித்தபோது, பாஸ்டனில் இவர்களது பயணம் தடைப்பட்டு, அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோர நேரிட்டது. அப்போது நியூயார்க்கின் புரூக்ளின் தடுப்பு முகாமில் (Detention Camp) கழித்த மூன்று மாத அனுபவங்களையும், அதைத் தொடர்ந்து நியூயார்க் மாநகரில் ஒரு 'சட்டவிரோதக் குடிவரவாளனாக' வாழ நேர்ந்த சூழலையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே இந்நாவல்.

2. மையக் கதை மற்றும் நாயகன் இளங்கோ
நாவலின் நாயகனான இளங்கோ என்பவன், அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் சட்டப்பூர்வமான ஆவணங்கள் ஏதுமின்றி தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள எவ்விதம் போராடுகிறான் என்பதே கதை.

சுரண்டல்கள்: ஆவணங்கள் இல்லாத அகதி/குடிவரவாளன் என்பதால், வேலை கொடுப்பவர்கள் அவனை எவ்விதம் மிகக் குறைந்த ஊதியத்திற்கு அதிக வேலை வாங்கிப் பிழிந்தெடுக்கிறார்கள் என்பதை நாவல் அப்பட்டமாகப் பேசுகிறது.

ஏமாற்றுகள்: வேலை வாய்ப்பு முகவர்கள் இத்தகைய அகதிகளின் பலவீனமான நிலையைப் பயன்படுத்தி, வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணத்தைப் பறித்து எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

Tuesday, June 16, 2026

முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் ஆங்கில மொழிபெயர்ப்பில் பெருந்தொற்றுக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'!


முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் மொழிபெயர்த்துத் தொகுத்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'. 'டிஸ்கவரி புக் பேலஸ்' பதிப்பக வெளியீடாக வெளிவந்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு. கொரோனா ஊரடங்குச் சூழல் அனுபவங்களைப் பதிவு செய்யும் 103 தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. நூலின் இறுதியில் கவிஞர்களின் புகைப்படங்களுடன் அவர்களைப்பற்றிய சுருக்கமான குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

இது கொரோனா பெருந்தொற்றுக்காலத்து அனுபவங்களைப் பதிவு செய்திருக்கும் தொகுப்பு என்னும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

இதில் எனது கவிதையொன்றும் உள்ளது. அதன தலைப்பு ' A Walk Through Corona - Wrapped Night'

கொரோனா ஊரடகுச் சூழலால் 'டொரோண்டோ' வூட்பைன் குளக்கரையருகில் மனிதர்களின் நடமாட்டம் குறைந்த நிலையைப் பயன்படுத்தி, நரியொன்று தனக்கொரு வளையமைத்துக் குட்டிகளையீன்று வாழத்தொடங்கியதை இம்மாநகரத்து மக்கள் வியப்புடனும், அன்புடனும் பார்த்தார்கள். மான்கள் நகரின் மையத்தில் நடமாடின.

அதுவரை பதுங்கிக் கிடந்த மிருகங்களெல்லாம் நகரத்தின் மையத்துக்கே வரத்தொடங்கியிருந்தன. உலகின் பல பகுதிகளில் இவ்விதமான காட்சிகளைக் காண முடிந்தது. கொரோனா என்றால் எனக்கு அந்த நரிக்குடும்பமும் நினைவுக்கு வரும். அக்குடும்பம் ஓரடையாளம். இக்கவிதையிலும் அந்நரிக்குடும்பத்தைப் பதிவு செய்துள்ளேன்.

Tuesday, March 17, 2026

எழுத்தாளர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!


'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகை நிறுவனமொன்றினை நடத்தும் குடும்பம் கொடுக்கும் விருது ஞானபீட விருது. இது இந்திய அரசின் சாகித்திய அமைப்பு கொடுக்கும் விருதினைப் போன்றது அல்ல. ஆனால் மதிப்புக்குரிய விருதாகக் கருதப்படும் விருது. இதற்கு இம்முறை எழுத்தாளர்  வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. அவரது திரைப்பாடல்கள் மூலம் கவிஞர் வைரமுத்துவாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் அவர். அவரது இதுவரை கால கலை, இலக்கியப் பங்களிப்புக்காகக் கொடுத்திருக்கின்றார்கள்.  தனிப்பட்ட அவரது படைப்பு ஒன்றுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட வில்லை. 

கவிஞர் வைரமுத்துவின் தனிப்பட்ட ஆளுமை வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டது.  குறிப்பாகக் கலையுலகச் சார்ந்த பெண்கள் அவர் மேல் வைத்துள்ள குற்றச்சாட்டுகள். அவற்றை தேர்வுக் குழுவினர் கவனத்தில் எடுத்திருந்தால் கவிஞருக்கு விருது கிடைத்திருக்காது.

எழுத்தாளர் ஜெயமோகன் உட்படப் பலரும் பல்வேறு அமைப்புகளூடு விருதுகள் கொடுத்து வருகின்றார்கள். அவர்கள் தம் பார்வையில் விருதுகுரியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். மாநில அரசுகள் இதுபோல் விருதுகளைக் கொடுத்து வருகின்றன. ஆனால் ஞானப்பீட விருது குடும்பமொன்றினால் வழங்கப்படும் விருது.

Monday, March 16, 2026

(முகநூற் பதிவு) ஜெர்மன் சமூகவியலாளரும் தத்துவஞானியுமான ஜூர்கன் ஹேபர்மாஸ் (Jürgen Habermas) முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவர்!


அண்மையில் மறைந்த ஜெர்மன் சமூகவியலாளரும் தத்துவஞானியுமான ஜூர்கன் ஹேபர்மாஸ் முக்கியமான நவகாலச் சிந்தனையாளர்களில் ஒருவர். இவரைப் பற்றி எழுத்தாளர் ப.வி.ஶ்ரீரங்கன் தனது முகநூற் பக்கத்தில் சுருக்கமான குறிப்பொன்றினை எழுதியிருக்கின்றார். அது பதிவுகள் இணைய இதழிலும் மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. "தகவல்தொடர்புச் செயல்பாட்டுக் கோட்பாடு(Theorie des kommunikativen Hand)” அவரது முதன்மையான பங்களிப்பாகக் கருதப்படுகின்றது.  இவரை ஶ்ரீரங்கன் முதலாளிய அமைப்பை ஆரோக்கியமாக்க முனைந்த வைத்தியராகக் கருதுவார். 

முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான இவரைப்பற்றி நாம் அறிந்துகொள்வதன் அவசியம் கருதி ஶ்ரீரங்கனின் முகநூற் பதிவினைக் கீழே தந்திருக்கின்றேன். 

Friday, March 13, 2026

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை முன்வைத்து 'கூகுள் நோட்புக் எல்எம்'மின் திறனாய்வு!


'கூகுள் நோட்புக் எல்எம்' (Google notebookLM) மூலம் மிகவும் பயனுள்ள கூகுள் நிறுவனத்தின் மென்பொருள். 
 
எனது சிறு நாவலான 'அமெரிக்கா'வின் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் ஆங்கில மொழிபெயர்ப்பை அதனிடம் கொடுத்துத் திறனாய்வு செய்ய வேண்டியபோது , அது ஆண், பெண் திறனாய்வாளர்கள் மூலம் செய்த திறனாய்வே இங்குள்ள காணொளி.
முழுமையாகக் கேட்டுப்பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
 

Friday, January 30, 2026

தமிழில் நூலாக வெளிவந்த முதலாவது சரித்திர நாவலை எழுதிய பெண் எழுத்தாளர் சிவநயனி முகுந்தன்! - வ.ந.கிரிதரன் -



தமிழக எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் 'பாண்டிய  நெடுங்காவியம்' என்னுமொரு சரித்திர நாவலை எழுதியிருக்கின்றார். மூன்று பாகங்களை உள்ளடக்கிய இந்நாவலின் மூன்று பாகங்களும் வானதி பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. முதற் பதிப்பு வெளியான ஆண்டு 2015.  இந்நூலின் பின்னட்டையிலும், உள்ளே விமர்சகர் ஒருவரின் திறனாய்விலும் தமிழில் சரித்திர நாவல் எழுதிய முதலாவது பெண் எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இது உண்மையா?

2012ற்கு முன்பே இவர் சரித்திர நாவல் அல்லது நாவல் எழுதியிருந்தால் அக்கூற்றினை ஏற்றுக்கொள்ளலாம். அப்படி நடந்த மாதிரித்தெரியவில்லை.  உண்மையில் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் சிவநயனி முகுந்தன் தற்போது கனடாவில் வசிக்கின்றார்.  இவர் ஒரு 626 பக்கங்களைக் கொண்ட சரித்திர நாவலொன்றை எழுதியிருக்கின்றார். இவர்  கனடாவில் 'வேல்விழியாள் மறவன்' என்னுமொரு சரித்திர நாவலை எழுதி வெளியிட்டுள்ளார்.  வெளிவந்த ஆண்டு 2012. வெளியிட்ட பதிப்பகம் - 'வித்தக விருட்சம்'. இதன் படி தமிழில் சரித்திர  நாவல் எழுதிய பெண் எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் அல்லர். பின் யார்? எழுத்தாளர் சிவநயனி முகுந்தனே.  [அனுஷா வெங்கடேஷ் என்னும் பெண் பெயரிலும் 'காவிரி மைந்தன்' என்னும் சரித்திர நாவலும், வேறு சில நாவல்களும் வெளியாகியுள்ளன. இவற்றை எழுதியவர் ஆண் எழுத்தாளரான ஆர்.வெங்கடேஷ்]

Tuesday, December 23, 2025

புகலிட இலக்கியத்தில் அதிகார அரசியலும் விளிம்புநிலை இருத்தலியலும்: வ.ந.கிரிதரனின் 'மான் ஹோல்' மற்றும் 'அமெரிக்கா' படைப்புகளை முன்வைத்து ஒரு பன்முகப் பகுப்பாய்வு! (1) - ஈழக்கவி -


[திறனாய்வாளர் ஈழக்கவி எனது 'மான்ஹோல்' சிறுகதை, 'அமெரிக்கா' நாவலை முன் வைத்து விரிவானதோர் ஆய்வுக் கட்டுரையினை எழுதியிருக்கின்றார். புகலிட எழுத்துகள் பற்றிய சிறப்பானதோர் ஆய்வுக் கட்டுரை. இத்துறையில் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் பட்டப்படிப்பு மாணவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய ஆய்வுக் கட்டுரை.
 
அக்கட்டுரையின் தலைப்பு ;"புகலிட இலக்கியத்தில் அதிகார அரசியலும் விளிம்புநிலை இருத்தலியலும்: வ.ந.கிரிதரனின் 'மான் ஹோல்' மற்றும் 'அமெரிக்கா' படைப்புகளை முன்வைத்து ஒரு பன்முகப் பகுப்பாய்வு! " கட்டுரையின் முதலாவது பகுதி தற்போது பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது. வாசித்துப் பாருங்கள் நண்பர்களே] 

ஆய்வுச் சுருக்கம் (Abstract) 

இக்கட்டுரை, ஈழத்துப் புகலிட எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் படைப்புளில் (மான் ஹோல், அமெரிக்கா) வெளிப்படும் அதிகார மையங்களுக்கும் விளிம்புநிலை மனிதர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை பன்முகக் கோணங்களில் ஆராய்கிறது. 'மான் ஹோல்' சிறுகதையில் வரும் பூர்வகுடிச் சாமி மற்றும் 'அமெரிக்கா' குறுநாவலில் வரும் அகதி (இளங்கோ) ஆகிய இரு கதாபாத்திரங்களின் ஊடாக, நவீன அரசுகள் அடையாளங்களை எப்படிச் சிதைக்கின்றன என்பதையும், உலகமயமாக்கல் சூழலில் 'அந்நியமாதல்' (Alienation) எவ்வாறு நிகழ்கிறது என்பதையும் இக்கட்டுரை விவாதிக்கிறது.

பகுதி ஒன்று

ஈழத்து புகலிட இலக்கியம் (Eelam Diaspora Literature)

ஈழத்து புகலிட இலக்கியம் (Eelam Diaspora Literature) என்பது உலக இலக்கியப் பரப்பில் ஒரு தனித்துவமான மற்றும் காத்திரமான கிளை. இது வெறும் இடப்பெயர்வை மட்டும் பேசாமல், போர், இழப்பு, இருத்தலியல் போராட்டம் மற்றும் புதிய நிலப்பரப்பில் அடையாளத்தைத் தேடுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த விரிவான பார்வையை பின்வரும் நிலைகளில் காணலாம்:

Sunday, December 14, 2025

இலக்கிய ஆளுமையாளர் ஒருவரை வெளிப்படுத்துமோர் அரிய காட்சி!


இலக்கிய ஆளுமைகள் அவர்கள் பணி புரியும் ஊடக நிறுவனங்களில் தம் பணியில் மூழ்கியிருக்குக் காட்சிகளை உள்ளடக்கிய புகைப்படங்கள் அரிது. அவ்விதமானதொரு காட்சியினை அண்மையில் 'வரலாறு பேசும் பொற்கணங்கள் – வீரகேசரியின் 75 ஆண்டு கொண்டாட்டத் தொகுப்பு' என்னும் வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட காணொளியில் கண்டேன்.

அதில் பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான யாழ்நங்கை (அன்னலட்சுமி இராஜதுரை) அவர்கள் தம் பணியில் மூழ்கிக் கிடக்கும் காட்சியினைக் கண்டேன். அதைத்தவறவிடக்கூடாதென்பதற்காக அக்காட்சியினைக் 'கூகுள் நனோ பனானா' செயற்கை நுண்ணறிவு கொண்டு 'டிஜிட்டல்' ஓவியமாகப் பதிவு செய்தேன். அதனையே இங்கு காண்கின்றீர்கள்.


 

Monday, December 8, 2025

செயற்கை நுண்ணறிவின் 'An Immigrant' நாவல் பற்றிய நூல் விமர்சனம்!

எனது ஆங்கில V.N.Giritharan Podcast யு டியூப் சானலில் எனது 'குடிவரவாளன்' ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றிய விமர்சன உரையாடலைக் கேட்கலாம்! கேட்டுப் பாருங்கள். செயற்கை நுண்ணறிவின் இன்னுமோர் ஆக்கபூர்வமான பங்களிப்பைப் பற்றியும், கூடவே என் நாவல் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.
 
எனது தமிழ் நாவல்களில் ஒன்றான 'குடிவரவாளன்' நாவல் தமிழ் இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் வெளியானது. இதனை எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் 'An Immigrant' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கின்றார். தமிழ் நாவல் தமிழகத்தில் ஓவியா பதிப்பகம் மூலம் வெளியானது. ஆங்கில மொழிபெயர்ப்பு 'An Immigrant' என்னும் பெயரில் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியானது. 
 
அந்த ஆங்கில மொழிபெயர்ப்பினைக் கூகிள் நோட்புக்எல்எம் (Google NotebookLM) மூலம் ஒரு Podcast ஆக மாற்றியிருக்கின்றேன். இந்த ஒலிக்கோப்பினைக் கேட்டுப் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். . இவ்வொலிக் கோப்பில் எனது நாவலைப் பற்றி விவாதிக்கும் ஆண், பெண் இருவரும் செயற்கை நுண்ணறிவு விமர்சகர்கள். அவர்கள் எனது நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
 
அதைக் கேட்டதும் நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன். அதைக் கேளுங்கள், நீங்களும் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள். இந்த Podcast செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பதையும், மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் என்பதையும் நிரூபிக்கிறது.
 

Thursday, November 6, 2025

‘குடிவரவாளன்’: வ.ந.கிரிதரனின் மனதைத் தொடும் சுயசரிதைக் குறிப்பு. - முனைவர் ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு மகளிர் கலைக் கல்லூரி -



முனைவர் ஆர். தாரணி , வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'An Immigrant' (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன்  மொழிபெயர்ப்பில் வெளியானது) பற்றி ஆங்கிலத்தில் ‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' என்னும் தலைப்பில் எழுதிய விமர்சனக் கட்டுரை. இதனைத் தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்திருப்பது கூகுளின் நனோ பனானா (Google Nano Banana) செயற்கை நுண்ணறிவு (AI)


"சில புத்தகங்களைச் சுவைக்க வேண்டும், சிலவற்றை விழுங்க வேண்டும், சிலவற்றை மென்று ஜீரணிக்க வேண்டும்" - சர் பிரான்சிஸ் பேக்கன் ஆங்கில எழுத்தாளர் (1561 - 1626)

'குடிவரவாளன்' இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனடா எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் புனைகதையில் ஒரு பெரிய பாய்ச்சல். அந்நிய நாட்டில் ஒரு நம்பிக்கைச் சோர்வுற்றிருந்த்  ஆன்மாவின் இருத்தலியல் நெருக்கடியைச் சித்திரிப்பதால், இந்தப் புத்தகம் மிகுந்த "கவனத்துடனும் ஈடுபாட்டுடனும்" படிக்கப்பட வேண்டியது. கதை ஊக்கமளிப்பதுடன், ஒவ்வொரு உள்ளத்திலும் உற்சாகத்தைப் பற்றவைக்கிறது. இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம், இளங்கோ என்ற கதாபாத்திரத்தின் உயிர்வாழும் போராட்டத்தின் மீது அதிகம் இருந்தாலும், இது இலங்கையின் கொடூரமான இனப்படுகொலைக்கு ஒரு வலுவான சான்றாக நிற்கிறது, இது உலகெங்கிலும் உள்ள மக்களை இன்றும் கொதிப்படையச் செய்கிறது. தமிழ் மக்களைத் துன்புறுத்தும் சிங்களக் காடையர்களின்  கொடூரத்தால் தமிழ் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தனது புத்தகத்தில், தனது முதல் அனுபவமாக எழுத்தாளர் வ.ந.கிரிதரன் முன்வைத்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த கலவரத்தில் தங்கள் உயிர்கள், குடும்பங்கள், உடைமைகள், தேசியம் மற்றும் மனிதன் என்ற அடையாளத்தையும் இழந்த தமிழ் மக்களுக்கு இது ஒரு தனித்துவமான அஞ்சலியாகும். புத்தகத்தின் முதல் சில அத்தியாயங்களில், கலவரத்தில் சிக்கிய இளங்கோ என்ற இளைஞனின் அவலநிலையை எழுத்தாளர் தெளிவாக விளக்குகிறார். தனது சொந்த நாட்டில், இளங்கோ இனவெறியர்களால் சிக்கித் தவிப்பதாக உணர்ந்து, அரக்கர்களிடமிருந்து தப்பிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறான். இளங்கோவின் கண்களினூடாக கலவரத்தைப் பற்றி எழுத்தாளர் மனதை உருக்கும் விதமாக விவரிக்கிறார்.

Wednesday, November 5, 2025

இலங்கை மலையகத்தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகள் இரண்டு!



தெளிவத்தை ஜோசப்பின் 'காலங்கள் சாவதில்லை'


எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பின் முக்கிய நாவல்களிலொன்று 'காலங்கள் சாவதில்லை'. மலையகத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளிலொன்று. 
வீரகேசரி பிரசுரமாக வெளியான இந்நாவலை நூலகம் தளத்தில் வாசிக்கலாம் - https://noolaham.net/project/965/96468/96468.pdf
 

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG]


கோகிலம் சுப்பையாவின்  'தூரத்துப் பச்சை'!


தமிழ் இலக்கியத்தில் முக்கிய நாவல்களிலொன்று. குறிப்பாக மலையகத்தமிழ் மக்களின் ஆரம்பக் காலத்தை மையமாகக் கொண்டது. கனவுகள், ஏக்கங்களுடன் நல் வாழ்வுக்காகத் தமிழகத்திலிருந்து மலையகம் கொண்டு வரப்பட்ட மக்களின் இருத்தலுக்கான போராட்டத்தை வெளிப்படுத்தும் சிறந்த நாவல். 

எனக்கு இந்நாவலை வாசிக்கையில் தகழி சிவசங்கரம்பிள்ளையின் 'தோட்டி மகன்' நாவல் நினைவுக்கு  வந்தது. அதில் மூன்று தலைமுறைகளை மையமாகக் கொண்டு அம்மக்களின் வாழ்க்கையை விபரித்திருப்பார் தகழி. அவ்விதமாகவே இந்நாவலும் பின்னப்பட்டுள்ளது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

சிதைந்திருந்த அட்டைப்படம் கூகுள் நனோ பனானா (Google Nano Banana) மூலம் சிறிது மெருகூட்டப்பட்டுள்ளது.

நாவலை வாசிக்க  - https://noolaham.net/project/1090/108981/108981.pdf

Tuesday, October 14, 2025

எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் விருது.....


எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் விருது ரூபா 5 இலட்சம் , அவர் மறைவுக்குப் பின்னர் ஐவருக்குப் பிரித்து வழங்கப்பட்டதாக அறிகிறேன். விருது வழங்கப்பட்டது ரமேஷ் பிரேதன் என்னும் எழுத்தாளரின் இலக்கியப் பங்களிப்புக்காக. பலருக்கு அவர்கள்தம் பல்துறைப் பங்களிப்புகளுக்காக அவர்கள் மறைந்த பின்னரும் விருதுகள் வழங்கப்படுகின்றன.  இந்நிலையில் உயிருடன் இருக்கும்போது ஒருவருக்கு வழங்கப்பட்ட விருது, அவரது மறைவுக்குப்பின்னர் வேறு சிலருக்கு வழங்கப்படுவது ஆச்சரியமளிக்கிறது. 

ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விருது திருப்பி எடுக்கப்படாமல், அவரது படைப்புகளின் தொகுப்புகளை வெளியிடப் பயன்படுத்தியிருக்கலாம்.அல்லது  அவரது பெயரில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கப்பயன்படுத்தியிருக்கலாம். அதுலிருந்து கிடைக்கும் வங்கி வட்டியிலிருந்து வருடா வருடம் இலக்கியப் போட்டிகள் நடத்தியிருக்கலாம். அல்லது விருதுகள் வழங்கியிருக்கலாம். 

[டிஜிட்டல் ஓவியத் தொழில்  நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]

Sunday, October 5, 2025

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதின் பெயர் மாற்றம் - 'அ,முத்துலிங்கம் இயல் விருது'!


நேற்று நடந்த இயல்விருது 2024 நிகழ்வில் ஒரு முக்கியமான அறிவிப்பினை ஆரம்பத்தில் சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் விடுத்திருந்தார். அது இவ்வாண்டிலிருந்து தமிழ் இலக்கியத்தோட்டம் வழங்கும் இயல் விருது , அ.முத்துலிங்கம் இயல் விருது' என்றழைக்கப்படும்.


இன்னுமொரு விடயமும் முக்கியமானது. அதனைத் தமிழ் இலக்கியத் தோட்டத்தை உருவாக்கியவர்களில் பிரதானமானவரான எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஆற்றிய உரையின் மூலம் அறிந்தேன். அவர் தான் இவ்வாண்டிலிருந்து தமிழ் இலக்கியத் தோட்டச் செயற்பாடுகளிலிருந்து ஓய்வு பெறுவதாகக் குறிப்பிட்டார். இயல்விருது மேல் தமிழக இலக்கிய ஆளுமையாளர்கள் பலருக்கும் ஆர்வம் இருப்பதற்குரிய காரணங்களில் முக்கியமானது அதன் பின்னால் இருக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ஈடுபாடும், பங்களிப்பும்.

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்


இம்முறை கனடாத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2024ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றவர்களில் ஒருவர் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர். கவிஞராகி அறிமுகமாகி நாவலாசிரியராக உருமாறியவர்.  இவரது கானல்நதி, வெளியேற்றம்,  குள்ளச்சித்தன் சரித்திரம் ,பயணக்கதை , மணல் கேணி ஆகிய நாவல்கள் முக்கியமானவை.  வித்தியாசமான கதை சொல்லலில் நகர்பவை. அவரது தேடல் மிக்க நெஞ்சின் உணர்வுகளை வெளிப்படுத்துபவை.அவரது ஏதாவதொரு நாவலொன்றினை வாசித்தால்,ஏனைய் நாவல்களையும் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்துபவை. 

யுவன் சந்திரசேகரின் நாவல்கள் பற்றிய் அறிமுகத்தை தமிழ் விக்கியில் வெளியான எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் பற்றிய அறிமுகக் குறிப்பு தருகின்றது.  அக்குறிப்பினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

Friday, September 26, 2025

அ.ந.கந்தசாமி (1924 - 2024) நூற்றாண்டு நினைவு தினக்கட்டுரை! 'மதமாற்றம்' ! - அ.ந.கந்தசாமி -

 
 
* அ.ந.கவுக்கான டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி - வ.ந.கி 
 
அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்'
 
இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' ஒரு மைல் கல். மதம் என்னும் கருத்தியலை அங்கதச் சுவையுடன் சாடும் வேறெந்த நாவலும் இலங்கையில் மேடையேறியதாக நான் அறியவில்லை. அப்படி இருந்தால் , அறிந்தவர்கள் அதனை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்.
 
மதமாற்றம் முதலில் பேராசிரியர் கா.சிவத்தம்பியால் அறுபதுகளில் மேடையேற்றப்பட்டிருந்தாலும் அப்போது அது உரிய வரவேற்பைப் பெற்றதாகத் தெரியவில்லை. பின்னர் 1967இல் கொழும்பில் நாடகவியலாளர் லடீஸ் வீரமணியின் இயக்கத்தில், எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் தயாரிப்பில் , ஆனந்தி சூரியப்பிரகாசம், சில்லையூர் செல்வராசன் போன்ற பலரின் நடிப்பில் மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நான்கு தடவைகள் அடுத்தடுத்து மேடையேறிச் சாதனை நிலை நாட்டியது.
 
அப்போது அது பற்றி நாடகாசிரியர் அ.ந.கந்தசாமி செய்தி (2.7.1967)  பத்திரிகையில் சுய விமர்சனக் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். அதனையும், நாடகம் பற்றி வெளியான விமர்சனக் குறிப்புகளையும், நாடகம் நூலுருப்பெற்றபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசங்லிங்கன் எழுதிய முன்னுரையினையும் இங்கு நீங்கள் வாசிக்கலாம்.
 

- அ.ந.கந்தசாமி -
சுய விமர்சனம் , எழுத்துத் துறைக்குப் புதிதல்ல. ஜவர்ஹலால் நேரு தன்னைப் பற்றித் தானே விமர்சனம் செய்து நேஷனல் ஹெரால்ட்ட் பத்திரிகையில் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். பெர்னாட்ஷா தனது நாடகங்களுக்குத் தானே விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசம். அவர்கள் புனை பெயர்களுக்குள் ஒழிந்திருந்து எழுதினார்கள். நான் எனது சொந்தப் பெயரிலேயே இக்கட்டுரையை விளாசுகிறேன். காலஞ்சென்ற கல்கி அவர்களும் தமது சிருஷ்டியைப் பற்றித் தாமே விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'தியாக பூமி' சினிமாப் படத்தைப் பற்றி அவர் விமர்சனக் கட்டுரைகள் எழுதி, நாடெங்கும் ஏற்படுத்திய பரபரப்பு எனக்கு ஞாபகமிருக்கிறது. 'கல்கி' கூடத் தமது சொந்தப் பெயரில் இவற்றை எழுதவில்லை. 'யமன்' என்ற புனை பெயருக்குள் புகுந்து கொண்டே அவர் இவற்றை எழுதியதாக நினைவு.

கொழும்பில் எனது 'மதமாற்றம்' நாடகம் நான்காவது முறை அரங்கேறியிருக்கிறது. அரங்கேற்றியவர் பிரபல சிறுகதையாசிரியர் காவலூர் இராசதுரை. டைரக்ஷன் லடீஸ் வீரமணி. நடித்தவர்களில் தான் தோன்றிக் கவிராயரென்று புகழ் படைத்த சில்லையூர் செல்வராசன், ஞானாஞ்சலி, தோத்திரமாலை போன்ற பல நூல்களை எழுதிய நவீன உவமைக் கதாசிரியர் முத்தையா இரத்தினம் என்பவர்கள் இவர்களில் சிலர்.

நல்ல முறையில் அரங்கேற்றுவதன் மூலம், தமிழ் நாடகத்துக்குப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் கொடுக்க முடியும் என்று நம்பியவர்கள் இவர்கள். இலங்கையில் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குத் தரத்தில் குறைவில்லாத தமிழ் நாடகங்களைத் தயாரித்து அளிக்க வேண்டுமென்று துடித்தவர்கள். ஆகவே இப்போது விமர்சகனின் முன்னுள்ள ஒரே கேள்வி இதில் இவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார்கள் என்பதுதான்.

நாடகம் எழுதுவது, ரேடியோவில் விமர்சனம் செய்வது, நாடக இயல் பற்றி நான் ஆராய்வது-பேசுவது ஆகிய யாவற்றிலும் நான் சிறிது காலமாகவே ஈடுபட்டு வந்திருக்கிறேன். ஆனால் இவை யாவற்றிலும் பார்க்க நான் செய்து வந்த முக்கியமான வேலை நாடகங்களைப் பார்ப்பதாகும். இதில் நான் எவருக்கும் சளைத்தவனல்ல. தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் கலாநிதி சு.வித்தியானந்தனின் 'கர்ணன் போர்' தொடக்கம் லடீஸ் வீரமணியின் 'சலோமியின் சபதம்' வரை அனேகமானவற்றை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கில நாடகங்களில் பெர்னாட்ஷாவின் 'மில்லியனரெஸ்' ('கோடிஸ்வரி') தொடக்கம் ஆர்தர் மில்லரின் 'டெத் ஒவ் ஏ சேல்ஸ்மேன்' ('விற்பனையாளனின் மரணம்') அனேக நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். சிங்கள நாடகங்களில் தயானந்த குணவர்த்த்னாவின் 'நரிபேனா' தொடக்கம் சுகத பால டி சில்வாவின் 'ஹரிம படு ஹயக் ' வரை பல நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன்.

Wednesday, September 24, 2025

எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா மறைவு!


இந்திய இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் ஒருவர் கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா. அவர் மறைந்த செய்தினை இணையம் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல்.
 
அவரது நாவல்களான 'பருவம்' (மகாபாரதத்தின் மீதான மறுவாசிப்பு) , ஒரு குடும்பம் சிதைகிறது ஆகியவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. 
 

ஒரு குடும்பத்தின் சிதைவு நாவலைப் பின்வரும் இணையத்தள முகவரியில் வாசிக்கலாம் -https://abedheen.wordpress.com/wp-content/uploads/2012/12/orukudumbamsidhaigirathu.pdf
 
அவரது மறைவினையொட்டி எழுத்தாளர் ஜெயமோகனின் அஞ்சலிக்குறிப்பு சுருக்கமாக அவரது இலக்கியப் பங்களிப்பினை எடுத்துரைக்கின்றது. - https://www.jeyamohan.in/223213/
அவரது நினைவாக இவ்விணைப்புகளைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
 

 

Tuesday, September 16, 2025

முற்றாத இரவில் முற்றாத காதலால் வாடும் மானுட உள்ளங்கள்!

- கவிஞர் கண்ணதாசன் -


"முற்றாத இரவொன்றில் நான் வாட.. 
முடியாத கதை ஒன்று நீ பேச..
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட.. 
உண்டாகும் சுவையென்று ஒன்று..

வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன் 
விழி மட்டும் தனியாக வந்தாலும்..
வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று.. 
பெறுகின்ற சுகமென்று ஒன்று".
.  - கவிஞர் கண்ணதாசன் -

இவ்விதம் எளிமையான சொற்றொடர்களில் ,  அனுபவத்தில் தோய்ந்த  காதல் போன்ற மானுடர்தம்  உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிறந்தவர் கவிஞர் கண்ணதாசன்.  

'முற்றாத  இரவு' அற்புதமான படிமம். முற்றாத என்னும் சொல்லை நாம் இரு வகைகளில் தமிழில் பாவிக்கின்றோம். ஒரு விடயம் முடிவுக்கு வராத விடயத்தைக்குறிக்கப் பாவிக்கின்றோம். அதே சமயம் முற்றாத கனி என்றும் பாவிக்கின்றோம்.  

இரவு நீண்டிருக்கின்றது. முடிவற்று விரிந்து கிடக்கின்றது. முடிவற்ற கனியாகவும் இருக்கின்றது இரவு. இந்த இரவில் அவனது காதல் உணர்வுகளுக்குத் தீர்வுமில்லை. முடிவுமில்லை. எவ்வளவு சிறப்பாகக் கவிஞர் கண்ணதாசன் முற்றாத இரவு சொற்றொடர் மூலம் காதலால் வாடும் அவனது  உள்ளத்தை, அதே சமயம் கனியாத, முற்றாத அவனது காதலின்  தன்மையை வெளிப்படுத்துகின்றார். கனியாத, முடிவுக்கு வராத அவனது காதலுணர்வுகள் அவனை வாட்டுகின்றன அந்த முற்றாத இரவைப்போல்.   

Monday, June 23, 2025

இலக்கியமும் , புலம்பெயர் இலக்கியமும் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அது பற்றிய கருத்தும் பற்றி....


எழுத்தாளர் அ.முத்துலிங்கம் புலம்பெயர் இலக்கியம் பற்றிக் கூறுகையில் 'எழுத்திலே புலம்பெயர்ந்த எழுத்து புலம்பெயராத எழுத்து என்ற வகைப்பாடு கிடையாது. நல்ல எழுத்து, மோசமான எழுத்து என இரண்டு பிரிவுதான்.'' என்று கூறியிருந்ததாக ஒரு கூற்றினை முகநூலில் முகநூல் நண்பர்களில் ஒருவரான Kandasamy R  பகிர்ந்திருந்தார். என்னைப்பொறுத்தவரையில் அவ்விதம் கூறுவதால புலம்பெயர் இலக்கியம் படைக்கும் ஒருவரைக் குறைத்து மதிப்பிடுவதாக, அவரை ஒரு பிரிவுக்குள் கட்டிப்போடப்படும் அபாயம் இருப்பதாக முத்துலிங்கம் அவர்கள் கருதுவதுபோல் தெரிகின்றது.

Sunday, June 1, 2025

'புலம்பெயர் தமிழ்ப் படைப்புகள் - அடையாளத்திற்கான தேடல்' - கலாநிதி சு.குணேஸ்வரன்


புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர் இலக்கியம் பற்றி ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர் கலாநிதி சு.குணேஸ்வரன். திறனாய்வு, கவிதை என அவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது. புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியவர். 
 
அண்மையில் 'ரொரன்றோ தமிழ்ச் சங்க'த்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற , இணைய வழிக் கலந்துரையாடலில் 'புலம்பெயர் தமிழ்ப் படைப்புகள் - அடையாளத்திற்கான தேடல்' என்னும் தலைப்பில் அவர் ஆற்றிய உரை இது. இதனை 'இலக்கியவெளி டிவி' யு டியூப் சானலில் பகிர்ந்திருந்தார்கள். இதன் முக்கியத்துவம் கருதி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
 

முகநூல் தர்க்கம்: வெகுசன இலக்கியம்!

அண்மையில் என் முகநூல் பக்கத்தில் வெகுசன இலக்கியம் பற்றி என் முகநூல் நண்பர்களுடன் நடந்த தர்க்கத்தின் தொகுப்பிது. வாசியுங்கள்! உங்கள் கருத்துக...