[ அண்மையில் 'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற முடியாது போயிற்று. அதனை முழுமையாகத் தருவது முக்கியம் என்பதால் அது இங்கு முழுமையாக இடம் பெறுகின்றது.]
பகுதி இரண்டு: கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு (தொடர்ச்சி)
'சங்கிலித்தோப்பு' வாயில் அல்லது கல்தோரண வாயில் பற்றி....
சங்கித்தோப்பு வாயில் என்று இது அழைக்கப்பட்டாலும், உண்மையான சங்கிலித்தோப்பு மந்திரிமனையை அண்டிய பகுதியே. அக்காணிப்பெயர்தான் சங்கிலித்தோப்பு என அழைக்கப்படுகின்றது. இவ்வாசல் உள்ள பகுதி பாண்டியமாளிகை வளவு என்றழைக்கப்படுகின்றது.
இந்த வாயில் பற்றியும் மயூரநாதனின் இந்நூலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை யாரும் சுட்டிக்காட்டாத முக்கிய விடயமொன்றையும் மயூரநாதன் இவ்வாயில் பற்றிக் குறிப்பிடுகின்றார். அது முக்கியமானது. இவ்வாயிலானது ஒரு மாளிகையின் முகப்பு வாசலாக இருப்பதற்குச் சாத்தியமில்லை என்கின்றார். இதன் குறைந்த பருமன் இதனுடன் அகலமான மாளிகைச் சுவர்கள் பொருந்தி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை அவர் முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டுகின்றார். இது பற்றிய நுணுக்கமான ஆய்வு அவசியம் என்றும் கூறுகின்றார். இது மாளிகையின் முகப்பாக அல்ல , .அங்கிருந்த மாளிகையொன்றின் வளவை அல்லது வீட்டுத் தோற்றத்தைச் சுற்றி அமைந்துள்ள மதிலில் இருந்த நுழை வாயிலாக இம்முகப்பு இருந்திருக்கலாம் என்பதை ஊகிக்கலாம் என்கின்றார்.(பக்கம் 222).

