Tuesday, July 21, 2026

பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் வேறு! ஆண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் வேறு!


பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்

எழுத்தாளர்
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
அறுபதுகளில் ,எழுபதுகளில் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கியவர். இவரது சிறுகதைகள் கல்கியில் சிறப்புச் சிறுகதைகளாக வெளிவந்துள்ளன. இவரது நாவலான 'பொன் மாலைப்பொழுது 'தினமணிக்கதிரில் அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளியானது. எனக்கு மிகவும் பிடித்த நாவலாக அப்போது இருந்தது. அதில் வரும் நடுத்தர வயது சோமு இன்னும் நினைவில் நிற்கின்றார்.

16.10.1966 கல்கி சஞ்சிகையில் வெளியான பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் படத்துடன் கூடிய அவரது சிறுகதையான அக்கினிப் பிரவேசம் கதையின் பக்கத்தினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன் ஒரு தகவலுக்காக.

இதே பெயரில் ஆண் எழுத்தாளர் ஒருவரும் எழுதி வருகின்றார். அவரது பெயரில் இதயம் சஞ்சிகையில் பல பயணக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவர் வேறு அறுபதுகளில் நான் வாசித்த பெண் எழுத்தாளரான எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் வேறு,. அவர்தான் கல்கி வெள்ளிப் போட்டியில் சிறுகதைக்காகப் பரிசு பெற்றவர். இவர்,, ஆண் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம், அல்லர்.
பெண் எழுத்தாளரான எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் பற்றி அறிந்தவர்கள் தம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Saturday, July 18, 2026

சோமசுந்தரப் புலவர் பாடல் - கத்தரி வெருளி


எம் பால்யப் பருவத்தில் சோமசுந்தரப்புலவரின் கத்தரி வெருளி,  இலவு காத்த கிளி, ஆடிப்பிறப்பு, வெண்ணிலா, பவளக்கொடி போன்ற பாலர் பாடல்களுடன் வளர்ந்தவர்கள் நாம்.  அப்போது நான் வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன்,. குருமண்காட்டிலிருந்து ஸ்டேசன் வீதி வழியாகப் பாடசாலை செல்வோம். ஸ்டேசன் வீதியில் ராமச்சந்திரன் டீச்சர் வீடு வரையில் , வீதியின் வலப்பக்கத்தில் வயல் பசுமையாக விரிந்திருந்தது. அதில் ஒரு கத்தரி வெருளி வைத்திருந்தார்கள். அதைப்பார்த்துத்தான் பாடசாலை செல்வோம். அதனால் அக்கத்தரி வெருளி எம் மனத்தில் நிலையாகப் பதிந்து விட்டது,. அதனால் அதனை நினைத்ததும் சோமசுந்தரப் புலவரின் கத்தரி வெருளி நினைவுக்கு வரும். அதுபோல் புலவரின் பாடலை நினைத்ததும் அந்தக் கத்தரி வெருளி நினைவுக்கு வரும்.

இன்னுமொரு விடயத்திலும் புலவரின் இந்தக் கத்தரி வெருளி பாடல் எனக்குப் பிடிக்கும், அதற்குக் காரணம் கத்தரி வெருளியூடு புலவர் கூறும் நீதி. பாடலின் இறுதியில் வரும் பின்வரும் வரிகள் இப்பாடலின் சிறப்பை மேலும் அதிகரிக்கும்:

"தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
          துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
          துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்

     சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
          தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
          தெரிய வந்ததுன் வஞ்சகம் .....

சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
          தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
          தேசத்திலே பலர் உண்டுகாண்

     அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
          அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்
          அறிவு படைத்தனன் இன்றுநான்"

உண்மைதான் கத்தரி வெருளி போன்ற போலி வேடக்காரர்தாம் எத்தனை பேர்! சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைகள்தான் எத்தனை பேர்! 

புலவர் கத்தரி வெருளியூடு பாலருக்கு மகிழ்ச்சியளிக்கும் பாடலைத் தந்தார். கூடவே சமுதாயத்தில் போலி வேடத்தில் மறைந்திருக்கும் போலி வேடதாரிகளையும் அம்பலப்படுத்தினார். நீதிக்கருத்தினை எவ்வளவு அற்புதமாகப் பாலர் பாடலில் கையாண்டுள்ளார் புலவர்! பிரச்சாரமற்ற கலைத்துவம் என்பது இதனைத்தான்!

Friday, July 17, 2026

சோமசுந்தரப் புலவர் பாடல்: ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5


சோமசுந்தரப் புலவர் பாடல்: ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி 

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

Thursday, July 16, 2026

சோழர் சரித்திர ஆதாரங்கள்!



இந்தச் 'சோழர் சரித்திர ஆதாரங்கள்' என்னும் கட்டுரை வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. ஜனவரி 24, 1954 வெளியான கல்கி சஞ்சிகையில் வெளியானது. எழுதியவர் எழுத்தாளர் ரா.கி ( ரா.கிருஷ்ணமூர்த்தி - கல்கி) .
தமிழர்கள் வரலாற்றைப் பதிவு செய்வதில் ஆர்வமற்றிருந்தவர்கள் என்பதைக் குறிப்பிடும் ஆசிரியர், இந்நிலையில் எவ்விதர் பிற்காலச் சோழரின் மெய்க்கீர்த்திகள் அக்குறையை ஓரளவு நீக்கின என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகின்றார்.

Wednesday, July 15, 2026

எம்ஜிஆரும், இரசிகர்களும்!


எம்ஜிஆரைப் பொறுத்தவரையில் தன் இரசிகர்களை மிகவும் மதிப்பார். இரசிகர்களின் வர்க்கப்பின்னணியையோ, சமூகப்பின்னணியையோ வைத்து அவர்களை அணுக மாட்டார். அவரைக்காண வரும் இரசிகர்களை அன்புடன் அரவணைத்து வரவேற்பார். முகம் சுளிக்க மாட்டார்.

ஒரு முறை 'இதயக்கனி' படப்பிடிப்பின்போது , நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அவரது இரசிகர்களான இளைஞர்கள் இருவர் அவரைப்பார்க்க வேண்டுமென்று நீந்தி வந்து அவரை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள். அவரை எவ்விதம் எம்ஜிஆர் வரவேற்றார் என்பதை இப்புகைப்படக் காட்சி காட்டுகின்றது. 

மனத்தில் நிற்கும் விகடனின் மாவட்ட மலர்கள்!



என் பால்யப் பருவத்தில், என் வாசிப்பின் ஆரம்பப் படிக்கட்டுகளில் தமிழக வெகுசனச் சஞ்சிகைகள் ஆற்றிய பங்கு முக்கியமானது. என் வாசிப்பார்வத்தைத் தூண்டியவை.

அக்காலகட்டத்தில் ஆனந்த விகடன் மாதந்தோறும் மாவட்ட மலர்களை வெளியிட்டது. நான் விரும்பி வாசித்த மாவட்ட மலர்கள் அவை.

எழுத்தாளர் சேவற்கொடியோனின் 'பேசும் பொற் சித்திரமே'


எழுத்தாளர் சேவற்கொடியோனின் 'பேசும் பொற் சித்திரமே' அக்காலகட்டத்தில் நான் விரும்பி வாசித்த விகடன்  தொடர்கதை.  கணவர், மனைவியர்க்கிடையில் ஏற்படும் சந்தேகத்தின் பாதிப்புகளை விவரிக்கும் தொடர்கதை. ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியாகிய தொடர்நாவல்.

பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் வேறு! ஆண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் வேறு!

பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் அறுபதுகளில் ,எழுபதுகளில் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் புகழ்பெற்ற...