Friday, June 19, 2026


[எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றிக் கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவின் கருத்துகளைக் கூறும்படி கேட்டேன். அதன் கருத்துகளைக் கீழே தந்திருக்கின்றேன். மிகச்சிறப்பான அதன் விமர்சனம் என்னைப் பிரமிக்க வைக்கின்றது. நன்றி கோடி ஜெமினி AI.]


"கனேடிய ஈழத்து எழுத்தாளரான வ.ந.கிரிதரன் (நவரத்தினம் கிரிதரன்) எழுதிய ‘குடிவரவாளன்’ (An Immigrant) நாவல், புலம் பெயர் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு மிக முக்கியமான ஆவணமாகும்.

முன்னர் ‘அமெரிக்கா 2’ மற்றும் ‘அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்’ என்ற தலைப்புகளில் இணைய இதழ்களில் தொடராக வெளியாகி, பின்னர் 'குடிவரவாளன்' என்ற பெயரில் நூலாகவும் மின்னூலாகவும் வெளியிடப்பட்டது.

இந்நாவலின் முக்கியக் கூறுகள் மற்றும் அதன் பின்னணி கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

1. சுயசரிதைத் தன்மை கொண்ட கதைக் களம் (Autobiographical Element)

இந்நாவல் எழுத்தாளரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது. 1983-இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களுக்குப் பிறகு, பல ஈழத்தமிழர்களைப் போல இவரும் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தார். கனடா நோக்கிப் பயணித்தபோது, பாஸ்டனில் இவர்களது பயணம் தடைப்பட்டு, அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோர நேரிட்டது. அப்போது நியூயார்க்கின் புரூக்ளின் தடுப்பு முகாமில் (Detention Camp) கழித்த மூன்று மாத அனுபவங்களையும், அதைத் தொடர்ந்து நியூயார்க் மாநகரில் ஒரு 'சட்டவிரோதக் குடிவரவாளனாக' வாழ நேர்ந்த சூழலையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே இந்நாவல்.

2. மையக் கதை மற்றும் நாயகன் இளங்கோ
நாவலின் நாயகனான இளங்கோ என்பவன், அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் சட்டப்பூர்வமான ஆவணங்கள் ஏதுமின்றி தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள எவ்விதம் போராடுகிறான் என்பதே கதை.

சுரண்டல்கள்: ஆவணங்கள் இல்லாத அகதி/குடிவரவாளன் என்பதால், வேலை கொடுப்பவர்கள் அவனை எவ்விதம் மிகக் குறைந்த ஊதியத்திற்கு அதிக வேலை வாங்கிப் பிழிந்தெடுக்கிறார்கள் என்பதை நாவல் அப்பட்டமாகப் பேசுகிறது.

ஏமாற்றுகள்: வேலை வாய்ப்பு முகவர்கள் இத்தகைய அகதிகளின் பலவீனமான நிலையைப் பயன்படுத்தி, வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணத்தைப் பறித்து எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

Thursday, June 18, 2026

POTA கண்டு அஞ்சும் GOTA! (குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது - இலங்கையின் இன்றூள்ள அரசியல் சூழல் பற்றிய அவதானிப்பொன்று!)


முன்னாள் இலங்கையின் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் அறிமுகம் செய்யப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA -Prevention of Terrorism Act)  , அது அறிமுகமான காலத்திலிருந்து, ஆட்சி செய்த கடந்த கால அரசுகளால் மக்கள் மீதான அதிகாரத்தைத் தம் அதிகாரத்தைத்  தப்ப வைப்பதற்காகக் கடுமையாகப் பாவிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இலங்கை அரசுக்கெதிராக ஆயுதம் ஏந்திய சிங்கள, தமிழ்ப் போராளிகள் மீது அது பாய்ந்திருக்கின்றது. குறிப்பாகக்கடந்த கால இலங்கை அரசுகள் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டங்களைத் தம் நாட்டு மக்களின் போராட்டம் என்று கருதாமல்,தம் நாட்டுக்கு எதிரானவர்களின் போராட்டம் என்று இனரீதியாக முன்னெடுத்ததால் தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் கொடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள். முடிவு தொடர்ச்சியான இனக்கலவரங்கள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என அது எடுத்த உயிர்ப்பலி நாகரிக மனித இனமே நாணத்தக்கது. 

போர்ச்சூழல் நிலவிய காலகட்டத்தில்  மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்ங்கள் இலங்கை வரலாற்றில் களங்கம் மிக்க துயரக் காலகட்டம்.

Tuesday, June 16, 2026

முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் ஆங்கில மொழிபெயர்ப்பில் பெருந்தொற்றுக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'!


முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் மொழிபெயர்த்துத் தொகுத்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'. 'டிஸ்கவரி புக் பேலஸ்' பதிப்பக வெளியீடாக வெளிவந்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு. கொரோனா ஊரடங்குச் சூழல் அனுபவங்களைப் பதிவு செய்யும் 103 தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. நூலின் இறுதியில் கவிஞர்களின் புகைப்படங்களுடன் அவர்களைப்பற்றிய சுருக்கமான குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

இது கொரோனா பெருந்தொற்றுக்காலத்து அனுபவங்களைப் பதிவு செய்திருக்கும் தொகுப்பு என்னும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

இதில் எனது கவிதையொன்றும் உள்ளது. அதன தலைப்பு ' A Walk Through Corona - Wrapped Night'

கொரோனா ஊரடகுச் சூழலால் 'டொரோண்டோ' வூட்பைன் குளக்கரையருகில் மனிதர்களின் நடமாட்டம் குறைந்த நிலையைப் பயன்படுத்தி, நரியொன்று தனக்கொரு வளையமைத்துக் குட்டிகளையீன்று வாழத்தொடங்கியதை இம்மாநகரத்து மக்கள் வியப்புடனும், அன்புடனும் பார்த்தார்கள். மான்கள் நகரின் மையத்தில் நடமாடின.

அதுவரை பதுங்கிக் கிடந்த மிருகங்களெல்லாம் நகரத்தின் மையத்துக்கே வரத்தொடங்கியிருந்தன. உலகின் பல பகுதிகளில் இவ்விதமான காட்சிகளைக் காண முடிந்தது. கொரோனா என்றால் எனக்கு அந்த நரிக்குடும்பமும் நினைவுக்கு வரும். அக்குடும்பம் ஓரடையாளம். இக்கவிதையிலும் அந்நரிக்குடும்பத்தைப் பதிவு செய்துள்ளேன்.

அமரர் கே.எஸ்.சிவகுமாரனின் கடிதமொன்று!


என் மதிப்புக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன். அவர் பதிவுகள் இணைய இதழின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர். பதிவுகளில் தொடர்ச்சியாக அவரது கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.
அண்மையில் பழைய நூல்களைத் தேடிக்கொண்டிருக்கையில் அகப்பட்ட கடிதமிது. கே.எஸ்.எஸ் தன் கைப்பட எழுதிய கடிதங்களிலொன்று.
இன்று மின்னஞ்சல் யுகத்தில் வாழும் சூழலில் இவ்விதமான கடிதங்கள் பொக்கிசங்களே.





'நந்தலாலா இலக்கிய வட்டத்தின்' ஏற்பாட்டில் எல்.ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் அறிமுக நிகழ்வு!

பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி நூலுருப்பெற்ற , எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் அறிமுக நிகழ்வு , 'நந்தலாலா இலக்கிய வட்டத்தின்' ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் விநோதன் அரங்கில் நடைபெறவுள்ளது. அது பற்றிய அறிவித்தலிது. தகவல் தந்தவர் - எல்.ஜோதிகுமார். பகிர்ந்துகொள்கின்றேன்.


'கனவு' இதழின் 'இலங்கைச் சிறப்பிதழ்'!


எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வரும் இலக்கியச்  சிற்றிதழ் 'கனவு'. விளம்பரங்கள் அற்று வெளியாகும் இதழ் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'கனவு' இதழின் ஆகஸ்ட் 1991 இதழ் 'இலங்கைச் சிறப்பிதழ்' ஆக வெளியாகியுள்ளது. 

இதழ் சிறப்பாக வெளிவருவதற்கு எழுத்தாளர் மேமன்கவியின் பங்களிப்பு முக்கியமாக உதவியிருக்கின்றது என்பதை நூலின் உள்ளடக்கம் மூலம் அறிய முடிகின்றது. ஆங்கிலத்தில் எழுதி உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர் அருள் சுப்பிரமணியத்தின் 'கணிதவியலாளன்' சிறுகதை நூலின் முதலாவது ஆக்கமாக அமைந்திருக்கின்றது. எழுத்தாளர் ராஜ ஶ்ரீகாந்தனின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. அவ்வப்போது  தமிழ் இலக்கியச் சூழலுக்கு எழுத்தாளர் அருள் சுப்பிரமணியத்தை நினைவூட்டி வருபவர் மேமன்கவி. நிச்சயம் இச்சிறுகதையையின் பிரசுரத்துக்கு அவர் காரணமாக இருந்திருப்பார் என்பதை ஊகிக்க முடிகின்றது. நல்லதொரு தேர்வு.

Sunday, June 14, 2026

வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல்!


எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதல்பிரதி தமிழகத்தில் ஸ்நேகா (தமிழகம்) & மங்கை (கனடா)  வெளியீடாக 1996இல் வெளியானது. அண்மையில் திருத்தப்பட்ட இரண்டாவது பிரதி அமேசன் - கின்டில் மின்னூலாக வெளியானது.

நூலின் முதற் பிரதி நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதனை வாசிக்க - https://noolaham.net/project/20/1928/1928.pdf

[எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றிக் கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவின் கருத்துகளைக் கூறும்படி கேட்டேன். அதன் கருத்துகளைக் கீழே தந்திர...