| ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் |
பன்முக ஆளுமை மிக்க ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள் மறைந்த தகவலினை முகநூல் வாயிலாக அறிந்தேன். துயருற்றேன். அவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்குமென் ஆழ்ந்த இரங்கல்.
அவரை நான் அதிகம் சந்தித்ததில்லை. ஓரிரு தடவைகள் நேரில் சந்தித்துள்ளேன். ஆனால் அவர் என்னுடன் முகநூல் மெசஞ்சர் மூலம் தொடர்பிலிருந்தார். கடந்த 2019லிருந்து ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் அன்று மெசஞ்சர் மூலம் வாழ்த்துச் செய்தியை அனுப்பிக்கொண்டிருந்தார். தான் எழுதும் ஆங்கிலக்கட்டுரைகள், அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கான இணைய இணைப்புகளை மெசஞ்சர்வாயிலாக அனுப்புவார். அவ்விதம் அவர் அனுப்பிய இறுதித்தகவல் மார்ச் 24 வந்திருந்தது. பாடகர் டி.எம்.எஸ். செளந்தரராஜன் பற்றிய பதிவு. ஒரு தடவை பிரிகேடியர் பால்ராஜ் பற்றிய அவரது கட்டுரைக்கு நான் எழுதியபோது அதற்கு அவரது வலைப்பதிவில் எதிர்வினை எழுதியதுடன் , மெசஞ்சர் மூலம் விரிவான பதிலையும் அனுப்பியிருந்தார்.




