முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் மொழிபெயர்த்துத் தொகுத்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'. 'டிஸ்கவரி புக் பேலஸ்' பதிப்பக வெளியீடாக வெளிவந்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு. கொரோனா ஊரடங்குச் சூழல் அனுபவங்களைப் பதிவு செய்யும் 103 தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. நூலின் இறுதியில் கவிஞர்களின் புகைப்படங்களுடன் அவர்களைப்பற்றிய சுருக்கமான குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
இது கொரோனா பெருந்தொற்றுக்காலத்து அனுபவங்களைப் பதிவு செய்திருக்கும் தொகுப்பு என்னும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
இதில் எனது கவிதையொன்றும் உள்ளது. அதன தலைப்பு ' A Walk Through Corona - Wrapped Night'
கொரோனா ஊரடகுச் சூழலால் 'டொரோண்டோ' வூட்பைன் குளக்கரையருகில் மனிதர்களின் நடமாட்டம் குறைந்த நிலையைப் பயன்படுத்தி, நரியொன்று தனக்கொரு வளையமைத்துக் குட்டிகளையீன்று வாழத்தொடங்கியதை இம்மாநகரத்து மக்கள் வியப்புடனும், அன்புடனும் பார்த்தார்கள். மான்கள் நகரின் மையத்தில் நடமாடின.
அதுவரை பதுங்கிக் கிடந்த மிருகங்களெல்லாம் நகரத்தின் மையத்துக்கே வரத்தொடங்கியிருந்தன. உலகின் பல பகுதிகளில் இவ்விதமான காட்சிகளைக் காண முடிந்தது. கொரோனா என்றால் எனக்கு அந்த நரிக்குடும்பமும் நினைவுக்கு வரும். அக்குடும்பம் ஓரடையாளம். இக்கவிதையிலும் அந்நரிக்குடும்பத்தைப் பதிவு செய்துள்ளேன்.



