Thursday, July 2, 2026

கருந்துளை (Black Hole) குறும்படம் பார்த்தேன்! என்னையும் அதற்குள் இழந்தேன்!



["THE BLACK HOLE" Short Film Pick Featured by NineJunctions Written & Directed by Philip Sansom & Olly Williams (Phil and Olly) ]

கருந்துளை (Black Hole) குறும்படம் பார்த்தேன்! என்னையும் அதற்குள் இழந்தேன்!
இந்தக் குறும்படத்தை முழுமையாகப் பார்க்கவும். அற்புதமான குறும்படம். கருந்துளை என்பது காலவெளியின் முடிவு. அதனுள் போகும் எவரும், எவையும் மீண்டும் இந்தப் பிரபஞ்சத்திற்குத் திரும்ப முடியாது என்பது அறிவியல் உண்மை.
இந்த உண்மையினை நாம் வாழும் காலவெளியில் வாழும் மானுடர் , அவர் உருவாக்கிய சமூக, பொருளாதார & அரசியல் அமைப்புக்குள் சிக்கி, அல்லற்படும் நிலை நிலையினை அன்றாடம் காண்கின்றோம் அல்லவா. அளவுக்கு மிஞ்சிய பேராசைக்குள் சிக்கி உழலும் பலரைக் காண்கின்றோம் அல்லவா.
இந்த மானுடரின் உளவியலையும், அறிவியல் உண்மையினையும் கலந்து , சிறப்பாக உருவாக்கப்பட்ட குறுந்திரைப்படம்தான் கருந்துளை. இவ்விதமான திரைப்படங்களை உருவாக்குவதற்கு படைப்பாற்றல் முக்கியம்.
இந்தக் குறுந்திரைப்படத்தின் படைப்பாற்றல் என்னைப் பிரமிக்க வைக்கின்றது.
இக்குறுந்திரைப்படத்தை முடிவு வரை பாருங்கள் - https://youtu.be/RSmjqss0XKQ?si=qUQuoT7Dv1QzOpGl

வரலாற்றறிஞர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்!

 பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்

தொடர்ச்சியாக இலங்கைத்  தமிழர்களின் வரலாற்றை , ஆய்வு ரீதியாக அறிவதில், நிறுவுவதில் ஈடுபட்டு வருபவர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம். அவரைப்போன்ற வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் நமக்குக் கிடைத்திருப்பது ஓர் அதிருஷ்டமே.  முக்கியமான தமிழ் வரலாற்று அறிஞர்களில் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணமும் ஒருவர். 

அவரது கருத்துகள் சிலவற்றில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் இலங்கைத் தமிழர் வரலாற்றை இனங்காண்பதில், நிலை நிறுத்துவதில் முக்கிய பங்காற்றும் வரலாற்று அறிஞர் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அவரது அயராத கடும் உழைப்பு என்னை எப்போதும் பிரமிக்க வைக்குமொன்று.

அவரது வரலாற்று ஆய்வு நூல்கள் பலவற்றை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்.

[டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா 2]


நான் உன்னிமேனனின் குரலுக்கு அடிமை!


நான் உன்னிமேனனின் குரலுக்கு அடிமை என்று கூறிக்கொள்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் எனக்கு இல்லை. 

இதயத்தை வருடிச் செல்லும் அவரது குரல் கேட்பவர்  மனத்தைச் சாந்தப்படுத்தும், இதமாக்கும் சக்தி மிக்கது.

'வருசமெல்லாம் வசந்தம்' என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை ஒரு தடவை கண்களை மூடிக்கொண்டு கேட்டுப்பாருங்கள்.  நான்  கூறுவதன் அர்த்தம் புரியும்.

நடிகர் மனோஜ்ஜின் ஒரேயொரு ஹிட் திரைப்படம் 'வருசமெல்லாம் வசந்தம்'.  அவர் இன்னும் நீண்ட  காலம் இருந்திருக்கலாம் என்று இப்பாடலைக் கேட்கும் சமயங்களில் எண்ணுவதுண்டு. அவரது அமைதியான நடிப்பும், அப்பாவித்தனமான சிரிப்பும் என்னைக் கவர்ந்தவை.

இசை - சிர்பி. பாடல் வரிகள் - ஆர்.ரவிசங்கர்.  பாடலாசிரியரும் அமரராகி விட்டார்.

இவ்விதமான பாடல்களை மேடைகளில் பாடகர் பாடுவதைக் கேட்பதை விரும்புபவன் நான். காரணம் பாடகரின் குரலை, பாவங்களை, இசைக்கலைஞர்களின் வாத்திய இசையாளுமையினை நேரில் பார்த்து இரசிக்கலாம் என்பதுதான்.

ஒரு முறை நேர்காணலொன்றில் , இயக்குநர் விக்கிரமன் என்று நினைக்கின்றேன், கூறியிருந்தார் 'உன்னிமேனனின் பாடல்களைத்  தொலைதூரக் கார்ப்பயணங்களில் கேட்டுச் செல்வதாக. ஆம்! பயணங்களை இனிமையானதாக்கும் குரல் இனிமை உன்னி மேனனின் குரலினிமை என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.  இப்பாடலைக் கேட்கும் ஒவ்வொரு தடவையும் நான் பல தடவைகள் மீண்டும் மீண்டும் கேட்பதுண்டு. 

பாடலைக் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=AUu3BOFUsCQ

[டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா 2}

Wednesday, July 1, 2026

கனடாவில் ஊடகவியலாளர் நந்தன வீரரத்னவின் 'கறுப்பு ஜூலை' நூல் வெளியீடு!

ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன

அண்மையில் ஸ்கார்பரோ,கனடாவில்  ஊடகவியலாளர் நந்தன வீரரத்னவின் 'கறுப்பு ஜூலை' என்னும் சிங்கள நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு  (சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், அரசியல் ஆய்வாளருமான  செல்லையா மனோரஞ்சனால் செய்யப்பட்டது)  பற்றிய கலந்துரையாடல் 'கனேடிய இலங்கை மன்ற'த்திm ஏற்பாட்டில் நடைபெற்றது.  சமூக, அரசியற் செயற்பாட்டாளர் லோ.மதியழகன் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் பேச்சாளர்களாக சமூக,ம் அரசியற் செயற்பாட்டாளர் சிவா முருகுப்பிள்ளை, ஊடகவியலாளர் வடிவேல் தேவராஜ், அரசியல் ஆய்வாளர் மனோரஞ்சன் செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்குச் செல்ல விரும்பியிருந்தேன். இறுதியில் தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்ல முடியவில்லை.ஆனால் அந்தக் குறையினைத்  'தடயத்தார்' கிருபா கந்தையா தீர்த்து வைத்தார். அந்நிகழ்வைக் காணொளியாகப் பதிவு செய்து, தனது 'தடயத்தார்'  யு டியூப் சானலில் பகிருந்திருந்தார். அவருக்கு என் நன்றி. இவ்விதம் இங்கு நடைபெறும் சமூக,கலை, இலக்கிய & அரசியல் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி வரும் அவர்தம் பணி போற்றுதற்குரியது.

அந்நிகழ்வின் ஆரம்பத்தில் நூலாசிரியர் நந்தன வீரரத்ன மெய்நிகர் வழியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் உரையினைத் தமிழில் வழங்கினார் மனோரஞ்சன் செல்லையா.  நந்தன வீரரத்தினவின் உரை பற்றிய எனது கருத்துகளே இப்பதிவு.

Tuesday, June 30, 2026

பறத்தலை நிறுத்திய வானம்பாடி: கவிஞர் புவியரசு மறைந்தார்!

கவிஞர்  புவியரசு!

வானம்பாடி கவிதை இயக்கத்தின் பிதாமகன் என அழைக்கப்படுபவரும், கவிஞரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான கவிஞர் புவியரசு அவர்கள் தனது தொண்ணூற்றாறாவது வயதில் மறைந்த செய்தியினை அறிந்தேன். மூப்பின் காரணமாக மறைந்த மார்க்சியவாதியான கவிஞர் புவியரசுவின் மறைவு  தவிர்க்க முடியாதது என்றாலும் பேரிழப்பே. அவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

அவர் நினைவாக , முகநூலில் கலை,இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்கள் பகிர்ந்திருந்த கவியரசர் புவியரசு பற்றிய ஆவணத்திரைப்படத்துக்கான இணைய இணைப்பை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன் - https://youtu.be/voUc3CTs4lI

அத்துடன்  கவிஞர் புவியரசு பற்றிய விக்கிபீடியாக் குறிப்பையும், கவிஞரின் மொழிபெயர்ப்பில் வெளியான கரமசோவ் சகோதரர்கள் பற்றி நான் முன்பு எழுதியிருந்த குறிப்பினையும் பகிர்ந்து கொள்கின்றேன்.

வெகுசன இலக்கியம்: உமாசந்திரனின் முழுநிலா!


எழுத்தாளர் உமாசந்திரனின் முள்ளும் மலரும் நாவலைப் பலரும் அறிந்திருப்பர். அது கல்கி சஞ்சிகையின் வெள்ளி விழா நாவல் போட்டியில் முதற் பரிசு பெற்ற நாவல். அத்துடன் ரஜனிகாந்த் நடிப்பில், மகேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படமும் கூட.
அவரது இன்னுமொரு நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல். என் பால்யப் பருவத்து வாசிப்பில் அதற்கும் முக்கிய இடமுண்டு. அது ஆனந்த விகடனில் தொடராக வெளியான 'முழு நிலா' நாவல். ஓவியர் கோபுலுவின் மனத்தை ஈர்க்கும் ஓவியங்களுடன் வெளியான நாவல் , அது வெளிவந்த காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த தொடர்கதைகளில் ஒன்று.
அதில் வரும் உப்பிலி, நளினா, தாமு பாத்திரங்கள் மறக்க முடியாத பாத்திரங்கள்.

முழுநிலா நாவலின் சில பக்கங்களை இங்கு காண்கின்றீர்கள்.  

Friday, June 26, 2026

முகநூல் தர்க்கம்: வெகுசன இலக்கியம்!


அண்மையில் என் முகநூல் பக்கத்தில் வெகுசன இலக்கியம் பற்றி என் முகநூல் நண்பர்களுடன் நடந்த தர்க்கத்தின் தொகுப்பிது. வாசியுங்கள்! உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


வெகுசன இலக்கியம்!

மானுடரின் வாசிப்புப் படிக்கட்டுகளில் வெகுசன இலக்கியமும் முக்கியமானதொரு படிக்கட்டு. சிறுவர் இலக்கியம் எவ்விதம் முக்கியமோ அவ்விதமே வெகுசன இலக்கியமும் முக்கியம். தீவிர இலக்கியத்துக்கு ஒருவரைக் கொண்டு செல்வதற்கு , ஒருவருக்கு வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அந்தப்பணியினை வெகுசன இலக்கியம் செய்கிறது. இக்குழுவில் நீங்கள் நீங்கள் வாசித்த வெகுசன படைப்புகள் பற்றி, அதாவது நாவல்கள், காமிக்ஸ், சிறுகதைகள், கவிதைகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், அபுனைவுகள் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.

Tamil Journalist:


இதுவுமொரு சிக்கலான விடயம்தான். வெகுசன இலக்கியம் வாசகனைத் தேடிச் சென்று மகிழ்விக்கிறது என்றால், தீவிர இலக்கியம் வாசகனைத் தன்பக்கம் இழுத்து அவனைச் சிந்திக்க வைக்குமென்கிற கணிப்பீடு என்பதெல்லாம் வெறும் அபத்தம் தோழரே

உடனே தமிழின் தீவிர இலக்கிய முன்னோடி புதுமைப்பித்தன் என்று ஆரம்பித்து உடனேயே தாங்கள் அறிந்த கசடுகளின் தலைவர்களை பட்டியலாக்கி மற்றவர்களை வணிக எழுத்தாளென்கிற மாய உலகம் இது..தீவிர இலக்கியம் மற்றும் வெகுசன இலக்கியம் ஆகிய இரண்டிற்குமான எல்லைக் கோடு மறைந்து, அனைத்துமே வணிகமயமாகிவிட்டது என்பதுதான் இங்கு நான் காண்கிற நிதர்சனம் தோழரே.

Navaratnam Giritharan:

Tamil Journalist ஒரு கேள்வி.. வாசிப்புப் படிக்கட்டில் சிறுவர் இலக்கியம் முக்கியமா இல்லையா? மேலும் எங்கும் 'வெகுசன இலக்கியம் வாசகனைத் தேடிச் சென்று மகிழ்விக்கிறது ' என்று என் பதிவில் கூறவில்லையே. வாசிப்புப் படிக்கட்டில் சிறுவர் இலக்கியம் போல் ஒரு காலகட்டத்தில் வெகுசன இலக்கியமும் ஒரு படிக்கட்டாக இருக்கிறது என்றுதான் கூறியிருக்கின்றேன். அப்படி இல்லையென்று நீங்கள் கூறினால் அது உங்கள் கருத்து. என் கருத்தல்ல.

Tamil Journalist:

இதில் நாம் உணர்ச்சிவசப்பட்டுச் சினப்பதற்கோ, கோபப்படுவதற்கோ எதுவுமில்லை தோழரே! ஏனெனில், இந்த இலக்கியங்களும், அவை பின்னி வைத்திருக்கிற 'இசங்களும்' நமக்கு அப்படித்தான் கற்பித்திருக்கின்றன; நம்மை அப்படித்தான் பழக்கியிருக்கின்றன.'

கருந்துளை (Black Hole) குறும்படம் பார்த்தேன்! என்னையும் அதற்குள் இழந்தேன்!

[ "THE BLACK HOLE" Short Film Pick Featured by NineJunctions Written & Directed by Philip Sansom & Olly Williams (Phil and...