Wednesday, July 8, 2026

வ.ந.கிரிதரன் பாடல் - கரியாலை நாகபடுவான் வாவி! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.


வ.ந.கிரிதரன் பாடல் - கரியாலை நாகபடுவான் வாவி
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி

காட்டின்  நடுவிலொரு சொர்க்கச் சாவி
கரியாலை நாகபடுவான் என்னும்  பெருவாவி.

நாகராம் தமிழரெம் புனிதபூமி அன்றோ!
நம்தமிழர் வரலாற்றின் சின்னம் அன்றோ.
படுவம் என்றால்  பள்ளம், நீர்நிலை
படுவான் என்றாலும் பெருவாவி என்றும்
பொருள் உண்டு சங்கப் பாடலில்.
மேற்கு என்றும் மற்றோர் பொருளுமுண்டு.
பெருங்கற் பண்பாட்டுச் சின்னம் என்றே
பகர்ந்திடுவர் நாகபடுவான் வாவி தனையே.

Tuesday, July 7, 2026

வரலாற்று முக்கியத்துவம் மிக்க கரியாலை நாகபடுவான்! நாக வழிபாடு செய்த தமிழர்களான நாகர்களின் குடியேற்றப்பகுதி!


எண்பதுகளில் நானும் , நண்பர் அருட்செல்வனும் முழங்காவில் பகுதியில் செயற்பட்டுக்கொண்டிருந்த குழாய்க்கிணறுத்திட்டத்தைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம். அங்கு மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் , குடிசார் பொறியியல் தொழில் நுட்பம் கற்றுக்கொண்டிருந்த நண்பர் சிறீ பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரின் அழைப்பின்பேரில் சென்றிருந்தோம். சங்குப்பிட்டி சென்று ம், அங்கிருந்து  வத்தையில் பூநகரி செனறு முழங்காவில் சென்றோம். இப்போது வத்தைக்குப் பதில் பாலம் உள்ளது. மகாதேவா தாம்போதி என்று அழைக்கப்படும் அப்பாலம் பல வருடங்களாகக் கட்டப்பட்டு, இறுதியில் எண்பதுகளின் நடுப்பகுதியில் முடிக்கப்பட்டது . இவ்விதம் அமைக்கப்படும் கடற்பாதைகள் தாம்போதிகள் என அழைக்கப்பட்டன.  பொன்னாலைப் பாலம், பண்ணைப்பாலம் என்பவையும் இவ்வகையான ஏனைய தாம்போதிகள்தாம். 

அப்பொழுதுதான் அப்பகுதியில் அமைந்திருந்த பல்லவராயன் கட்டு, 'கரியாலை நாகபடுவான்' குளம் போன்றவற்றைப் பற்றி  முதன் முதலில் அறிந்தேன். முதற் பார்வையிலேயெ , முதல் அனுபவத்திலேயே எனக்கு அக்காட்டுப்பகுதி , குறிப்பாகக் கரியாலை நாகபடுவான்  குளம் அமைந்திருந்த பகுதியும், இயற்கைச்சூழலின் வனப்பும் பிடித்துப்போனது. 'நாகபடுவான்' என்பதிலேயெ படுவான் என்னும் சொல் குளத்தைக்  குறித்தாலும், அது சங்ககாலச் சொல் என்பதால் 'நாகபடுவான் குளம்' என்றே வழக்கில் அழைப்பார்கள், (இப்பதிவின் இறுதியிலுள்ள பேராசிரியர் பரமு  புஸ்பரட்ணத்தின இச்சொல்பற்றிய கருத்தைக் கவனிக்கவும்)  'சுனாமி' ஆழிப்பேரலை என்பதைப்போல. 'சுனாமி'என்றாலே ஜப்பானிய மொழியில் ஆழிப்பேரலை என்றாலும் அதனைக்குறிப்பிடுகையில் சுனாமி ஆழிப்பேரலை என்பது பொதுவான வழக்கு. 

மேலும் படுவம் நீர் தேங்கி நிற்கும் பள்ளமான பகுதி, பள்ளம்  என்னும் அர்த்தங்களிலும்,  படுவான் என்னும் சொல் மேற்குத்  திசை  என்னும் அர்த்தத்திலும்  பாவிக்கப்படுகின்றன.  உதாரணம் -  படுவான்கரை.

ஆவணப்படுத்தும் 'இணைய ஆவணக்காப்பகம்' (Archive.Org)'


எழுத்தாளர்களே! நீங்கள் கட்டாயம் பாவிக்க வேண்டிய இணையத்தளம் 'இணைய ஆவணக்காப்பகம்' தளம். இதற்கான இணையத்தள முகவரி - https://www.archive.org

இங்கு நீங்கள் உங்கள்  படைப்புகளை ஆவணப்படுத்தலாம். உங்கள் இணையத்தளத்தை ஆவணப்படுத்தலாம்.  உதாரணத்துக்குக் கீழுள்ள இணைப்பைப் பாருங்கள். இதில் நான் என் படைப்புகள் பலவற்றை, பதிவுகள் இணையத்தளத்தில் வெளியான படைப்புகள் பலவற்றை ஆவணப்படுத்தி வைத்துள்ளேன். இத்தளத்தின் இன்னுமொரு சிறப்பு - இதில் உங்கள் இணையத்தளத்தை ஆவணப்படுத்தலாம். அது  மட்டுமல்ல , உங்களிடமுள்ள பல் வகையான டிஜிட்டல் பிரதிகளையும் ஆவணப்படுத்தலாம். எல்லாமே இலவசம். இத்தளத்துக்குச் சென்று உங்களுக்கென்று கணக்கொன்றை உருவாக்குங்கள். அதன் பின்னர் உங்கள் படைப்புகளைப் பதிவேற்றம் செய்து பாதுகாக்கலாம். 

Monday, July 6, 2026

தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள்' நாவல் பற்றி... - வ.ந.கிரிதரன் -


[கணையாழி சஞ்சிகையின் ஜூலை 2026 இதழ் , புதிய வடிவமைப்புடன் வெளியாகியுள்ளது. புதிய வடிவமைப்பு வாசிப்பை இன்னும் இலகுவாக்குகின்றது.
இம்மாத இதழில் 'தாய்வீடு' பத்திரிகையில் தொடராக வெளியாகி, அதனால் வெளியிடப்பட்ட எழுத்தாளர் தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள் நாவல் பற்றி..' என்னும் அந்நாவல் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. தேவகாந்தனின் முக்கியமான நாவல்களில் ஒன்று 'சாம்பரில் திரண்ட 'சாம்பரில் திரண்ட சொற்கள்' ] 

தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள்' நாவல் பற்றி...

எழுத்தாளர் தேவகாந்தனின் அண்மையில் வெளியான நாவல்.  'தாய்வீடு' பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவல் 'தாய்வீடு' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. சிறப்பான வடிவமைப்புடன், ஓவியர் ஜீவாவின் அழகான ஓவியங்களுடன் வெளிவந்துள்ள நூல். ஒரு காலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான  தொடர்கதைகளின் வெற்றிக்கு அவற்றில் வெளியான ஓவியங்களும் ஒரு காரணம். 'பொன்னியின் செல்வன்' நாவலில் எம்மையெல்லாம் கவர்ந்த பாத்திரமான  வாணர் குலத்து வீரனான வல்லவரையன் வந்தியத்தேவனை .  அவனை உயிர்த்துடிப்புடன் வரைந்த் ஓவியர்களான மணியம், வினு, மணியம் செல்வன், பத்மவாசன் ஆகியோரின் ஓவியங்கள் வாயிலாகத்தான்  நினைவில் வைத்திருக்கின்றோம்.  'கடல்புறா' நாவலின் நாயகன் இளையபல்லவன் என்றழைக்கப்படும் கருணாகரத்தொண்டைமானை ஓவியர் லதாவின் ஓவியங்கள் மூலம்தான் நினைவில் வைத்திருக்கின்றோம்.  'ராணிமுத்து' வெளியீடாக வெளிவந்த மாத நாவல்களும் ஓவியங்களை உள்ளடக்கியே வெளிவந்தன. நாவல்களின் ஓவியங்களும் முக்கியமானவை. மேற்படி நாவலும் இவ்விதமே ஓவியங்களுடன் வெளியாகியிருப்பது வடிவமைப்புக்கு வனப்பைத்தருவதுடன், வாசிப்புக்கும் வளத்தைத்தருகின்றது..

Thursday, July 2, 2026

கருந்துளை (Black Hole) குறும்படம் பார்த்தேன்! என்னையும் அதற்குள் இழந்தேன்!



["THE BLACK HOLE" Short Film Pick Featured by NineJunctions Written & Directed by Philip Sansom & Olly Williams (Phil and Olly) ]

கருந்துளை (Black Hole) குறும்படம் பார்த்தேன்! என்னையும் அதற்குள் இழந்தேன்!
இந்தக் குறும்படத்தை முழுமையாகப் பார்க்கவும். அற்புதமான குறும்படம். கருந்துளை என்பது காலவெளியின் முடிவு. அதனுள் போகும் எவரும், எவையும் மீண்டும் இந்தப் பிரபஞ்சத்திற்குத் திரும்ப முடியாது என்பது அறிவியல் உண்மை.
இந்த உண்மையினை நாம் வாழும் காலவெளியில் வாழும் மானுடர் , அவர் உருவாக்கிய சமூக, பொருளாதார & அரசியல் அமைப்புக்குள் சிக்கி, அல்லற்படும் நிலை நிலையினை அன்றாடம் காண்கின்றோம் அல்லவா. அளவுக்கு மிஞ்சிய பேராசைக்குள் சிக்கி உழலும் பலரைக் காண்கின்றோம் அல்லவா.
இந்த மானுடரின் உளவியலையும், அறிவியல் உண்மையினையும் கலந்து , சிறப்பாக உருவாக்கப்பட்ட குறுந்திரைப்படம்தான் கருந்துளை. இவ்விதமான திரைப்படங்களை உருவாக்குவதற்கு படைப்பாற்றல் முக்கியம்.
இந்தக் குறுந்திரைப்படத்தின் படைப்பாற்றல் என்னைப் பிரமிக்க வைக்கின்றது.
இக்குறுந்திரைப்படத்தை முடிவு வரை பாருங்கள் - https://youtu.be/RSmjqss0XKQ?si=qUQuoT7Dv1QzOpGl

வரலாற்றறிஞர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்!

 பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்

தொடர்ச்சியாக இலங்கைத்  தமிழர்களின் வரலாற்றை , ஆய்வு ரீதியாக அறிவதில், நிறுவுவதில் ஈடுபட்டு வருபவர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம். அவரைப்போன்ற வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் நமக்குக் கிடைத்திருப்பது ஓர் அதிருஷ்டமே.  முக்கியமான தமிழ் வரலாற்று அறிஞர்களில் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணமும் ஒருவர். 

அவரது கருத்துகள் சிலவற்றில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் இலங்கைத் தமிழர் வரலாற்றை இனங்காண்பதில், நிலை நிறுத்துவதில் முக்கிய பங்காற்றும் வரலாற்று அறிஞர் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அவரது அயராத கடும் உழைப்பு என்னை எப்போதும் பிரமிக்க வைக்குமொன்று.

அவரது வரலாற்று ஆய்வு நூல்கள் பலவற்றை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்.

[டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா 2]


நான் உன்னிமேனனின் குரலுக்கு அடிமை!


நான் உன்னிமேனனின் குரலுக்கு அடிமை என்று கூறிக்கொள்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் எனக்கு இல்லை. 

இதயத்தை வருடிச் செல்லும் அவரது குரல் கேட்பவர்  மனத்தைச் சாந்தப்படுத்தும், இதமாக்கும் சக்தி மிக்கது.

'வருசமெல்லாம் வசந்தம்' என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை ஒரு தடவை கண்களை மூடிக்கொண்டு கேட்டுப்பாருங்கள்.  நான்  கூறுவதன் அர்த்தம் புரியும்.

நடிகர் மனோஜ்ஜின் ஒரேயொரு ஹிட் திரைப்படம் 'வருசமெல்லாம் வசந்தம்'.  அவர் இன்னும் நீண்ட  காலம் இருந்திருக்கலாம் என்று இப்பாடலைக் கேட்கும் சமயங்களில் எண்ணுவதுண்டு. அவரது அமைதியான நடிப்பும், அப்பாவித்தனமான சிரிப்பும் என்னைக் கவர்ந்தவை.

இசை - சிர்பி. பாடல் வரிகள் - ஆர்.ரவிசங்கர்.  பாடலாசிரியரும் அமரராகி விட்டார்.

இவ்விதமான பாடல்களை மேடைகளில் பாடகர் பாடுவதைக் கேட்பதை விரும்புபவன் நான். காரணம் பாடகரின் குரலை, பாவங்களை, இசைக்கலைஞர்களின் வாத்திய இசையாளுமையினை நேரில் பார்த்து இரசிக்கலாம் என்பதுதான்.

ஒரு முறை நேர்காணலொன்றில் , இயக்குநர் விக்கிரமன் என்று நினைக்கின்றேன், கூறியிருந்தார் 'உன்னிமேனனின் பாடல்களைத்  தொலைதூரக் கார்ப்பயணங்களில் கேட்டுச் செல்வதாக. ஆம்! பயணங்களை இனிமையானதாக்கும் குரல் இனிமை உன்னி மேனனின் குரலினிமை என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.  இப்பாடலைக் கேட்கும் ஒவ்வொரு தடவையும் நான் பல தடவைகள் மீண்டும் மீண்டும் கேட்பதுண்டு. 

பாடலைக் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=AUu3BOFUsCQ

[டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா 2}

வ.ந.கிரிதரன் பாடல் - கரியாலை நாகபடுவான் வாவி! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.

வ.ந.கிரிதரன் பாடல் - கரியாலை நாகபடுவான் வாவி வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5. ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி காட்டின்  நடுவிலொ...