Saturday, January 18, 2020

கவிதை: இது புதிய கோணங்கியின் புலம்பலல்ல! - வ.ந.கிரிதரன் -


நள்ளிரவு. நீண்டு விரிந்திருக்கும் விண்ணில்
நகைக்கும் சுடர்க்கன்னிகள்தம் பேரழகில்
மனதொன்றிக்கிடந்திருந்த சமயம்
வழக்கம்போல் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன்.
இரவுகளில் தனிமைகளில் சிந்தித்தலென்பதென்
பிரியமான பொழுதுபோக்குகளிலொன்று.
அவ்விதமான சமயங்களில் பிரபஞ்சம் பற்றி,
அண்டத்தினோரணுவென விளங்கும் 

நம்முலகு,
நம்மிருப்பு பற்றி 

எண்ணுவதுமென் விருப்பு.
பரிமாணக்கைதியென் புரிதலுக்குமொரு சுவருண்டு.
சுவரை மீறுதலென்பதென்னியற்கைக்கு மீறிய செயலென்பதும்
எனக்கு விளங்கித்தானுள்ளது. இருந்தும் அது பற்றிச்
சிந்தித்தலும், பரிமாணச்சிறைக்கும் வெளியே
இருப்பவைபற்றி எண்ணுவதிலுமோர் இலயிப்பு\
எப்போதுமுண்டு எனக்கு.
வழக்கம்போலன்றுமிருந்தேன்.
பிரையன் கிறீனென்னும் என் பிரிய
அறிவியலறிஞன் எடுத்துரைத்த உண்மைகள் சிலபற்றி
எண்ணியிருந்தேன்.
பல்பரிமாணம் பற்றி, காலவெளிச்சட்டங்கள்தம்
பல்லிருப்பு ஒரு கணத்தில் பற்றி
அவன் எடுத்துரைத்தவை பற்றியும்
எண்ணியிருந்தேன்.
ஐன்ஸ்டைனின் இடவெளி , காலவெளிபற்றிய
எண்ணங்களிலும் மூழ்கிக்கிடந்தேன்.

Friday, January 3, 2020

அழியாத கோலங்கள்: பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனும்,, நந்தினியும் (ஓவியர் வினுவின் கை வண்ணத்தில்)

மானுடராகிய நாம் பல்வகை உணர்வுகளுக்கும் உட்பட்டவர்கள். எப்பொழுதுமே தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள் அல்லர். நகைச்சுவையைக் கேட்டுச் சிரிப்பவர்கள்; நல்ல கலையை இரசிப்பவர்கள். நல்ல நூல்களைச் சுவைப்பவர்கள்.

நல்ல நூல்கள், நல்ல கலைகள் என்னும்போது அவற்றிலும் பல பிரிவுகளுள்ளன. உதாரணத்துக்கு நூல்களை எடுத்துக்கொள்வோம். ஆரம்பத்தில் அம்மா தூக்கி வைத்து, சந்திரனைக் காட்டிக் கதை கூறிச் சாப்பிட வைத்ததிலிருந்து கதைகளுடனான எம் தொடர்பு ஆரம்பமாகின்றது. பின்னர் குழந்தை இலக்கியப்படைப்புகள் (அம்புலிமாமா, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் , சிறுவர் பகுதிகள், குழந்தைப்பாடல்கள் போன்ற) , வெகுசன இலக்கியப்படைப்புகள் என்று வளர்ச்சியடைந்து பின்னர் பல்வகை தீவிர இலக்கியப்போக்குகளை உள்ளடக்கிய தீவிர வாசிப்புக்கு வந்தடைகின்றோம். இதனால்தான் எல்லாவகை இலக்கியங்களுக்கும் மானுட வாழ்வின் வளர்ச்சிப்படியில் , வாசிப்பின் வளர்ச்சிப்படியில் இடமுண்டு.

Wednesday, January 1, 2020

தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' ஜெய்சங்கர்!

 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' என்று அழைக்கப்படும் ஜெய்சங்கருக்கு அப்பட்டம் கிடைப்பதற்கு மாடர்ன் தியேட்டர்ஸ் முக்கியமான காரணம். மாடர்ன் தியேட்டர்சின் பல படங்களில் ஜெய்சங்கர் நடித்திருக்கின்றார். அவற்றில் சிலவற்றில் அவர் ஏற்ற துப்பறிவாளர் பாத்திரமே அவருக்கு அப்பெயர் ஏற்படக் காரணம். கறுப்பு வெள்ளைத்திரைப்படங்களில் ஆரம்பகாலத்து அழகான ஜெய்சங்கரை இரசிக்கலாம். பின்னாளில் ஜெய்சங்கர் பருத்து, நடிப்புச் சீர்குலைந்து கதாநாயக அந்தஸ்தினை இழந்து வில்லனாக நடிக்கத் தொடங்கினார். இருந்தாலும் அவ்வப்போது மனதில் நிற்கக்கூடிய குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்திருக்கின்றார். உதாரணத்துக்கு 'ஊமை விழிகள்' உண்மைக்காகப் போராடும் பத்திரிகை நிலைய நிறுவனராக நடித்திருப்பதைக் கூறலாம். 'பஞ்சவர்ணக்கிளி' திரைப்படத்திலும் இரட்டை வேடங்களில் நடித்து நெஞ்சைக் கவர்ந்திருப்பார். முதல் படமான 'இரவும் பகலும்' திரைப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

கடற்கொள்(ளல்) = கடற்கோள்!



அண்மையில் எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் சுனாமியின் ஆழிப்பேரலைக்குப்பதில் கடற்கோள் என்னும் சொல்லே சிறந்தது என்னும் கருத்துப்படப் பதிவொன்றினை இட்டிருந்தார். அதில் 'மணிமேகலையில் சாத்தனார் பயன்படுத்திய "கடல்கோள்" அதன் அசல் விஞ்ஞான விளக்க அர்த்தத்தமுள்ள ஒரு கலைச்சொல்(Technical word) கடல்பூகம்பம் போன்றவற்றால் ஏற்படும் சடுதியான கடல் பெருக்கு பட்டினத்துள் புகுந்து அழிப்பதையே அவர் குறிக்கிறார். 'என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது அப்பதிவு பற்றிய என் எண்ணங்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

முதலில் நட்சத்திரன் செவ்விந்தியன் அவர்கள் மணிமேகலையில் எங்கு இச்சொல் வந்துள்ளது என்பதைக் கூற முடியுமா? கடல் கொள, கடல் கொளும் என்று வந்துள்ளதை அவதானித்தேன். ஆனால் கடல் கோள் என்னும் சொல்லைக் காணவில்லை. தவற விட்டு விட்டேன் போலும். மணிமேகலையில் எங்கு அச்சொல் வருகின்றது என்பதைக்குறிப்பிடவும். தமிழில் கோள் என்பதற்கு பல கருத்துகளுள்ளன.அனைவரும் அறிந்த கருத்து உருண்டை வடிவம் .அதனால்தான் கிரகங்களைக் கோளம் என்றும் அழைக்கின்றோம். நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ் அகராதியில் கோள் என்பதற்கு இடையூறு, காவட்டம், புல், கிரகம், கொலை, கொள்ளல், கோட்பாடு,  தீமை,  நட்சத்திரம், நாள், பழமொழி, புறங்கூறல், பொய்வலி என்று அர்த்தங்கள் பல இருப்பதை அறிய முடிகின்றது. ஆனால் எங்கும் கோள் என்பதற்கு அலை என்னும் அர்த்தத்தைக் காண முடியவில்லை. எனவே கடல் கோள் என்பது கடலால் ஏற்படும் இடையூறு (கோள் என்பதற்கு இடையூறு என்னும் அர்த்தமும் உண்டு) என்னும் பொதுவான அர்த்தத்திலேயே பாவிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகின்றேன்.

வாசிப்பும், யோசிப்பும் 357: கவிதை - தேவதைகளுக்கு வயசாவதும் இல்லை. - - அருண்மொழிவர்மன் -

எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அண்மையில் தான் முன்னர் யாழ் உதயன் பத்திரிகையில் தனது யாழ்ப்பாண டியூசன் நிலையங்கள் பற்றி எழுதிய கட்டுரையினை முகநூலில் பகிர்ந்திருந்தார். அக்கட்டுரையின் இறுதிப்பந்தியின் வரிகளை கவிதையாக அடுக்கி அதற்கு 'தேவதைகளுக்கு வயசாவதில்லை' என்று தலைப்புமிட்டுள்ளேன். அதனையே இங்கு பகிர்ந்துள்ளேன். கட்டுரையின் இறுதி வரிகளிலுள்ள கவித்துவமே என்னை இவ்வாறு வரிகளைக்கவிதையாக அடுக்கத்தூண்டியது.

உண்மைதான் தலைமுறைகள் மாறினாலும் தேவதைகளுக்கு வயசாவதில்லைதான். :-) உங்களில் பலருக்கு அருண்மொழிவர்மன் பகிர்ந்துள்ள கட்டுரையின் இறுதி வரிகள் பழைய பதின்ம வயது நினைவுகளைக் கிளறி விட்டிருக்கக் கூடும்; கிளறி விடக்கூடும். வயசாகாத உங்கள் தேவதைகளை மீண்டும் நினைவுக்குக்கொண்டு வந்திருக்கக்கூடும் :-)

அருண்மொழிவர்மனின் இப்பதிவை வாசித்தபோது பல வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் எழுதிய சிறுகதையொன்றின் ஞாபகமெழுந்தது. தன் நினைவுகளில் வயசாகமலிருந்த தன் பாடசாலைப்பருவத்து இனியவளை மீண்டும் சந்தித்தபோது முதுமையின் தளர்வுடன் கோலம் மாறியிருந்த, வயதுபோய் விட்டிருந்தது கண்டு திகைப்படையுமொருவன் பற்றிய கதையது. வயதாகிவிட்ட அவனது தேவதை பற்றிய கதையது.

வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளம் தந்த வான் பாய்தல் பற்றிய சிந்தனைகள்!

மாரியில் மழை பெய்து பட்டாணிச்சுப்புளியங்குளம் நிறைந்து வழிகையில் வான் பாயுமொலி இரவின் இருளை, அமைதியைத் துளைத்துக்கொண்டு கேட்கும். குருமண்காட...

பிரபலமான பதிவுகள்