Monday, May 20, 2019

(பதிவுகள்.காம்) கனடாத் தமிழ் இலக்கியமும் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையும்! - வ.ந.கிரிதரன் -



கனடாத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புரட்சிப்பாதை' சஞ்சிகைக்குமோரிடமுண்டு.  இதுவொரு கையெழுத்துச் சஞ்சிகை. 'அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியான சஞ்சிகை.  'இப்பத்திரிகை வட  அமெரிக்கா வாழ் தமீழீழ மக்கள் விடுதலைக்கழக ஆதரவாளர்களினால் வெளியிடப்பட்டது' என்னும் குறிப்புடன் வெளியானாலும், இதன் அமைப்பின்படி இதனையொரு சஞ்சிகையாகவே கருதலாம் (செய்திக்கடிதமாகவும் கருதலாம். ஆனால் நாவல், கவிதை, கட்டுரை எனப்பல ஆக்கங்கள் வெளியானதால் சஞ்சிகையென்று கருதுவதே பொருத்தமானதென்பதென் கருத்து.). இதன் கனடாத் தொடர்புகளுக்கான முகவரி:  C.P.842, POST OFFICE - AHUNSTIC, MONTREAL, QUEBEC H3L 3P4 என்றும் குறிபிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பதினைந்தாம் திகதி வெளியான இச்சஞ்சிகை  15.09.1984 தொடக்கம் 15.06.1985 வரை பத்து இதழ்கள் வெளியாகியுள்ளன. வெளியான இதழ்கள் எவற்றிலும் ஆசிரியர் குழுவினரின் பெயர்கள் இல்லை.

இளைஞர்கள் பலரின் கூட்டு முயற்சி இது. எனக்குத் தெரிந்து சுந்தரி (கோண்டாவில்)  ,ஜெயந்தி (உரும்பிராய்), நவரஞ்சன், குணபாலன் போன்றோருடன் மேலும் சிலர் இணைந்து இச்சஞ்சிகையினை வெளியிட்டார்கள்.

இதுவோர் அரசிலமைப்பு சார்ந்து வெளியான கையெழுத்துச் சஞ்சிகையென்றாலும், கனடாவில் 1984இல் வெளியான தமிழ்ச் சஞ்சிகையென்றவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இச்சஞ்சிகை கவிதை, கட்டுரை மற்றம் நாவல் & கேலிச்சித்திரம் போன்றவற்றையும் பிரசுரித்ததன் மூலம் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கும் வளம் சேர்த்துள்ளது. கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவலான எனது 'மண்ணின் குரல்' இச்சஞ்சிகையிலேயே தொடராகவும் ஏழு அத்தியாயங்கள்  வரை வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

'புரட்சிப்பாதை'யில் வெளியான ஆக்கங்களின் விபரங்கள் வருமாறு (என்னிடம் இதழ் மூன்றிலிருந்தே  இருப்பதால் அதிலிருந்தே ஆரம்பிக்கின்றேன்) :

Sunday, May 19, 2019

கவிதை: ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -

'ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்!' என்னுமிக் கவிதை எனது வலைப்பதிவுக்காக நான் எழுதிய A Refugee’s Thoughts On Birds என்னும் ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கவிதை 'சிறிலங்கா கார்டியன்' (The Srilanka Guardian) இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது.

சிறியதிலிருந்து பெரியதுவரை,
மெதுவானதிலிருந்து
விரைவானதுவரை,
அவதானிப்புகள் பறவைகள்
பற்றிய,
அவை பறக்கும் வெளி-நேரம் பற்றிய
அதிக விபரங்களைக்
கற்றுத்தந்துள்ளன.

வித்தியாசமான பறவைகள்
வித்தியாசமாகப் பறக்கின்றன.
வித்தியாசமாக நடந்துகொள்கின்றன.
சில தமது அறிவினைப் பாவிப்பதன்
மூலம், காற்றினூடு வழுக்கிச் செல்கின்றன.
சில பெரிய பறவைகள் காற்றோட்டத்தினைப்
பாவத்து மேல் நோக்கிப் பறக்கின்றன.
பறவை அவதானிப்பு என்னைத்
தத்துவபூர்வமாகச் சிந்திக்குமாறு
உருவாக்கியுள்ளது.
இது என்னிதயத்தை இன்பத்தாலும்,
பேரானந்தத்தாலும் நிறைத்துள்ளது.
தூங்குதல், கூடு கட்டுதல், பெற்றோராகச் செயற்படுதல்,
இவையெல்லாம் என் சிந்தையில்
அவற்றைப் பெருமைக்குரியதாக
உருவாக்கியுள்ளன.
அவற்றின் வாழ்க்கை எளிமையானது; சில செயல்களே
செய்வதற்குள்ளன, ஆனால் அவற்றை
ஒழுங்காகச் செய்கின்றன.
சபதங்கள் மூலமும், உடல்ரீதியான
அசைவுகள் மூலமும்,
அவை சிறப்பாகத் தொடர்புகொள்கின்றன.
களைப்படையாமல், நம்பிக்கை இழக்காமல்,
இரைக்காக அமைதியுடன் காத்திருக்கும்
விலங்குள் நிறைந்த
கொந்தளிக்கும் சூழல்களுக்குள்
அவை தங்கள் இருப்பினைக்
களிப்புடனும் ஆரோக்கியமான
நம்பிக்கையுடனும்
கொண்டு செல்கின்றன.
இந்த அழுத்தங்கள் ,மிகுந்த
'காங்கிரீட்' காட்டினுள்
எங்கள் கூடுகளோ
பொருளியல்ரீதியிலான
ஆசைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும்
நிறைந்து கிடக்கின்றன.

அவை, பறவைகள், வாழுதல் பற்றி
நிறையவே எனக்குக்
கற்றுத்தந்துள்ளன.
மேலாகவும், கீழாகவும்,
இடமாகவும், வலமாகவும்,
ஆகாயத்தில் உயரமாக,
மிகவும் கீழேயுள்ள நிலத்தைப் பற்றி,
எல்லைகள் பற்றி எந்தவிதக்
கவலைகளுமில்லாமல்
பறக்கும் அவற்றின் ஆற்றல்
என் சிந்தனையை
ஆழமாகவும், அறிவுபூர்வமானதாகவும்
உருவாக்கியுள்ளது.

காலநிலைகள் அவற்றின் இடப்பெயர்தலை
மட்டுமே நிர்ணயிக்கின்றன.
தமது சிறகுகளின் வலிமையுடன்
அவை எங்கு செல்ல விரும்பினாலும்
செல்லலாம்.
ஒருநாள்,
எமது அறிவு அனுமதித்தால்
நாமும் அவைபோல் சிறகடிக்கலாம்.
அல்லது நாம் அவற்றைவிட இன்னும்
விரைவாகப்
பறக்கலாம், அலைகளைப் போல்,
மின்காந்த அலைகளைப் போல்.
அதுவரை,
அவற்றைப் போல் பறப்பதற்கு விரும்புகின்றேன்.
அவற்றைப் போல் காற்றினில் எனது சிறகுகளை
விரிப்பதற்கு விரும்புகின்றேன்.
மிகவும் கீழேயுள்ள பிளவுண்ட நிலங்களிலுள்ள
எல்லைகள பற்றிய, தடுப்புமுகாம்கள்
பற்றிய
எந்தவிதக் கவலைகளுமில்லாமல்,
வானில் உயரத்தில் சிறகடிக்க
விரும்புகின்றேன்.

Poem: A Refugee’s Thoughts On Birds

By V.N.Giritharan

'ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்!' என்னுமிக் கவிதை எனது வலைப்பதிவுக்காக நான் எழுதிய A Refugee’s Thoughts On Birds என்னும் ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கவிதை 'சிறிலங்கா கார்டியன்' (The Srilanka Guardian) இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது.
  
A Refugee’s Thoughts On Birds  By V.N.Giritharan -

From tiny to very large,
slow to fast,
observations taught me a lot
about birds,
about the space-time where
they gracefully fly.

Different birds fly uniquely;
behave distinctively.
Some use their knowledge to
glide through the air,
while larger ones employ air currents
to ascend skyward.

Bird observation inspires
philosophical thoughts,
filling my heart with happiness and bliss.

Roosting, nesting, and parenting
make them proud
in my thoughts.
Their lives are simple, with few tasks,
done regularly.
Through sounds and physical movements,
they communicate efficiently,
unfazed, tireless,
amid turbulent environments,
where predators wait patiently.

They carry on their existence
happily and optimistically.

In this tension-filled,
stress-filled
concrete jungle,
our nests are filled with materialistic aspirations.

Birds teach me about living.
Their ability to soar up and down,
right and left,
in the vast sky,
without worrying about borders
on lands far below,
expands my thinking, making it broad and wise.

Seasons determine only their migrations.
With the strength of their wings,
they can fly anywhere
they desire.

One day, if our knowledge permits,
we may fly like them;
we may even soar faster than them,
like waves, electromagnetic waves.

Until then,
I wish I could fly like them;
I wish I could spread my wings in the air
like them,
without worrying about borders, detentions
on divided lands far below.

I wish I could fly like them high in the sky.

Courtesy: srilankaguardian.org

எனது குறிப்பேட்டுப் பதிவுகள்.. (ஓர் ஆவணப்பதிவு) - 1 - வ.ந.கிரிதரன் -

எண்பதுகளின் ஆரம்பத்தில் மார்க்சிய நூல்களை வாங்கிப்படிக்கத்தொடங்கிய காலகட்டம். அதுவரை தமிழ், இனம், பழம் பெருமை என்று உணர்வுகளின் அடிப்படையில் சமுதாய அரசியற் பிரச்சினைகளை அணுகிக்கொண்டிருந்தவனை , தர்க்கரீதியாக, அறிவு பூர்வமாக அணுகத்தூண்டியவை மேற்படி மார்க்சிய நூல்களே. 'சி.ஆர்.கொப்பி' என்று அழைக்கப்படும் நீண்ட தாள்களை உள்ளடக்கிய பேரேட்டில் (பொதுவாகக் கணக்கு வழக்குகளை எழுதக் கடை வியாபாரிகள் பாவிக்கும் குறிப்புப் புத்தகம் என்று நினைக்கின்றேன்) நேரம் கிடைத்தபோதெல்லாம் பல் வேறு விடயங்களைப்பற்றிய என் எண்ணங்களை எழுதிவரத்தொடங்கினேன். முகப்பு அட்டையில் எனக்குப் பிடித்த பாரதியாரின் , அறிஞர்களின் கருத்துகளை எழுதி, உள்ளட்டை மற்றும் முதற் பக்கத்தில் எனக்குப் பிடித்த ஆளுமைகளின் படங்களை ஒட்டி அக்குறிப்புப்புத்தகங்களை அலங்கரித்தேன்.

ஒவ்வொரு குறிப்புப் புத்தகத்தையும் தனி நூலாக, தலைப்புக்கொடுத்து வடிவமைத்தேன். இவ்விதம் எழுதிய நூல்களில் ஒரு சில இன்னும் என் கை வசமுள்ளன. ஏனையவை 83 இனக்கலவரத்துக்குப் பின் தோன்றிய அரசியற் சூழலில் தொலைந்து போய்விட்டன. அல்லது யார் கைகளிளாவது அவை இன்னுமுள்ளனவா தெரியவில்லை.

1. நூல் 1 : இயற்கையும், மனிதனும் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
2. நூல் 2: பிரபஞ்சமும் , மனிதனும் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
3. நூல் 3: தத்துவம், அரசியல், காதல் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
4. நூல் 4: கதை, கட்டுரை, கவிதைகள், எண்ண உருவகங்கள்

தற்போது இந்நூல்களின் அட்டைகள் கழன்று, தாள்களெல்லாம் ஒழுங்குமாறிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் இயலுமானவரையில் ஒழுங்குபடுத்தி, இவற்றிலுள்ளவற்றை அப்படியே எவ்வித மாற்றமும் இல்லாமல் மீண்டும் ஒரு பதிவுக்காகப் பிரசுரிப்பதா அல்லது பிழை, திருத்தம் செய்து பிரசுரிப்பதா என்றொரு சிந்தனை வளையவருகின்றது. ஏனெனில் அக்காலகட்டத்திலிருந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்நூல்களிலுள்ள ஆக்கங்களில் பாவிக்கப்பட்டுள்ள சொற்கள், கருத்துகள் சிலவற்றை இக்காலகட்டத்தில் நான் பாவிப்பதில்லை. ஆனால் ஆக்கங்களின் அடிப்படைக்கருத்துகளில் பெரிதாக மாற்றமேதுமில்லையென்றே தோன்றுகின்றது. பிழை, திருத்தி எழுதினால் ஒரு காலகட்டப்பதிவுகளின் உண்மைத்தன்மை தொலைந்துபோகும் அபாயமுள்ளது. இது விடயத்தில் இன்னும் தெளிவான முடிவெதுவும் எடுக்கவில்லை.

Saturday, May 18, 2019

மக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்! - வ.ந.கிரிதரன் -

- - இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் வித்துவான் வேந்தனாரின் எழுத்துலகப்பங்களிப்பு முக்கியமானது. அவரது நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு விழாமலர் 548 பக்கங்கங்களைக் கொண்ட விரிவான நூலாக வெளியாகியுள்ளது. அம்மலரில் வெளியான எனது கட்டுரையிது. மலரைச் சிறப்பாக வெளியிட்ட அவரது மகனும், கவிஞரும் , நண்பருமான வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் இதன் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார். வாழ்த்துகிறேன். -

வித்துவான் வேந்தனாரைப் பற்றி எனது மாணவப் பருவத்திலேயே எனக்கு மிகுந்த மதிப்பிருந்தது. வித்துவான்களில் அவர்  சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞரான அவர் சிறந்த குழந்தைக்கவிஞர்களிலொருவராகவும் தென்பட்டார். அவரது மானுட விடுதலைக்  கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான் எனக்கு எடுத்தியம்பின. பண்டிதர்கள் என்றாலே பழமைவாதிகள் என்றோர் எண்ணம் நிலவுவதுண்டு. ஆனால் இதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்த பண்டிதர்களில் வித்துவான் வேந்தனார், எழுத்தாளர் சொக்கன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். வித்துவான் வேந்தனார் அவர்கள் பழமையின் சிறப்பம்சங்களைப்பேணிய அதே சமயம், புதுமையின் சிறப்பம்சங்களையும் உள்வாங்கி இலக்கியம் படைத்தவர்; மக்கள் இலக்கியம் படைத்தவர்.

வேந்தனாரைப்பற்றி விரிவாக அறியும் சந்தர்ப்பம் என் வாழ்க்கையிலேற்பட்டதற்கு முக்கிய காரணம் அவரது புத்திரர்களிலொருவரான வேந்தனார் இளஞ்சேய். நான் யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்த சமயம் என் வகுப்பில் என்னுடன் ஒன்றாகக் கல்வி பயின்ற மாணவர்களிலொருவர். என் பதின்ம வயதுகளில் இளஞ்சேயும், நானும் அடிக்கடி வாசிப்பதற்காக ஒருவருக்கொருவர் எம்மிடமுள்ள நூல்களை இரவல் கொடுப்பதுண்டு. பல சந்தர்ப்பங்களில் யாழ் இந்து  மகளிர் கல்லூரிக்கண்மையிலிருந்த அவரது இல்லத்துக்குச் சென்றதுண்டு. அக்காலகட்டத்தில் வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார்.  இன்று தந்தையைப்போல் எழுத்துலகிலும் தன் எழுத்தாற்றலைக் காட்டி வருகின்றார். தந்தையாரின் படைப்புகளைத் திரட்டி , நூல்களாகத்தொகுத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருகின்றார். வாழ்த்துகின்றேன்.

தமிழ்க்கவிதைகளில் 'நகரம்' - வ.ந.கிரிதரன் -

தமிழ்க்கவிதைகள் சங்ககாலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு விடயங்களைப்பற்றி விபரித்திருக்கின்றன. சங்காலக்கவிதைகள் , காப்பியங்கள் பல அக்காலகட்டத்து நகர்களைப்பற்றிய  தகவல்கள் பலவற்றைத்தருகின்றன. குறிப்பாக சிலப்பதிகாரம் அக்காலகட்டத்தில் புகழ்மிக்க கோநகர்களாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம், மதுரை மற்றும் வஞ்சி பற்றி, அந்நகர்களில்  வாழ்ந்த மக்கள் பற்றி, அவர்கள் ஆற்றிய பல்வேறு தொழில்கள் பற்றியெல்லாம் விரிவாகவே தகவல்களைத்தருகின்றது. அக்கால நகரங்களின் நகர வடிவமைப்பு பற்றி, வாழ்ந்த மக்கள்  புரிந்த தொழில்கள் பற்றி, நடைபெற்ற விழாக்கள் பற்றி, பிற நாடுகளுடன் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகள் பற்றி.. என்று பல்வேறு வகைப்பட்ட தகவல்களை அவற்றின் மூலம்  அறிந்துகொள்ளலாம். இதனைப்போல் அண்மைக்காலத் தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளில் நகரம் கூறு பொருளாக அமைந்துள்ளதா என்று சிறிது சிந்தனையையோட்டியதன் விளைவுதான்  இக்கட்டுரை. இதுவொரு விரிவான ஆய்வல்ல. எதிர்காலத்தில் மேலும் பல படைப்புகளை ஆராய்ந்து  காலத்துக்குக்காலம் விரிவுபடுததப்படுத்தக்கூடியதொரு ஆரம்பக்கட்டுரையே.

இக்கட்டுரைக்காக ஆராய்ந்த  கவிஞர்களின் கவிதைகள் நகரங்களைப்பற்றி விபரிக்கையில் அங்கு வாழ்ந்த பல்வகைப்பட்ட மக்களைப்பற்றி, சமூக வாழ்க்கை முறைபற்றி, நகரங்கள் சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பு பற்றி,  நகரங்களில் நிலவிய சமூக வாழ்வின் இயல்பினால் மனிதர்களின் உளவியலில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி, அங்கு நிலவிய வர்க்கங்கள் மானுட வாழ்விலேற்படுத்தும் பாதிப்புகள் பற்றி,  நகரச்சூழல் ஏற்படுத்தும் உடல் உபாதைகள் பற்றி, மானுட சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நகரத்தில் ஏற்படுத்திய போர்ப்பாதிப்புகளைப்பற்றி.... எனப்பல்வேறு விடயங்களை  வெளிப்படுத்தி நிற்கின்றன. இவற்றை எடுத்துக்கொண்ட படைப்புகளினூடு இனங்காணுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

ஆவணப்பதிவு- எழுக அதிமானுடா! (கவிதைகள்) - வ.ந.கிரிதரன்

நூல்: எழுக அதிமானுடா! (கவிதைகள்) - வ.ந.கிரிதரன்
முதற்பதிப்பு: தை 1994
புத்தக வடிவமைப்பு: ஜோர்ஜ் இ.குருஷேவ்
அட்டை வடிவமைப்பு: பாலா ஆர்ட்ஸ்
வெளியீடு: மங்கை பதிப்பகம் ( 'டொரோண்டோ', கனடா)


எண்பதுகளில், தொண்ணூறுகளில் வீரகேசரி, தினகரன், நுட்பம், தாயகம் (கனடா) , குரல் (கையெழுத்துப்பிரதி, கனடா) ஆகிய ஊடகங்களில் வெளியான மற்றும் ஊடகங்களில் வெளிவராத எனது ஆரம்பகாலத்துக் கவிதைகளின் தொகுப்பிது. இத்தொகுப்பில் 30 கவிதைகளுள்ளன. இவை பிறந்த மண்ணின் அரசியலை, புகலிடத்திருப்பினை, ஆசிரியருக்குப் பிடித்த ஆளுமைகளைப் பற்றிய எண்ணங்களை மற்றும் சூழற் பாதுகாப்பினை விபரிக்கின்றன. இக்கவிதைகளில் சிலவற்றில் அதிமானுடா போன்ற ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் சொற்களுள்ளன. இவை அக்காலத்தின் என் எண்ணங்களின் வெளிப்பாடு. இப்பொழுது எழுதுவதாயின் மானுடம், மானிடர் போன்ற சொற்களையே பாவிப்பேன். ஆயினும் ஏற்கனவே வெளிவந்த பதிப்பிலுள்ளவற்றை மாற்ற முடியாத காரணத்தால் , அடுத்து வரும் பதிப்புகளில் இவ்விதமான சொற்கள் மாற்றப்படும். இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றைத்தவிர ஏனையவற்றை கவிதை ஆர்வத்தின் வெளிப்பாடுகள் என்று கூறுவேன். என் அக்காலத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதையே முக்கியமாகக்கொண்டு உருவான சொற்களின் வெளிப்பாடுகள் என்றும் கூறுவேன். விடுதலை அமைப்புகளின் அக, புற முரண்பாடுகளை, முஸ்லீம் மக்களின் பலவந்த  வெளியேற்றத்தினை, மலையக மக்களின் துயரினையெல்லாம் கவிதைகள் தம்பொருளாகக்கொண்டுள்ளன. கனடாப்பூர்வீகக்குடியினரின் சோகங்களையும் கவிதைகள் விபரிக்கின்றன.

'மண்ணில் குரல்' தொகுப்புக் கவிதைகள்!

கனடாவின் முதல் தமிழ் நாவலாக 1987 தை மாதத்தில் வெளிவந்த  நூல் எனது 'மண்ணின் குரல்' . இந்த நூலுக்கு இன்னுமொரு முக்கியத்துவமும் உண்டு. இந்நூல் 'மண்ணின் குரல்' நாவலையும் 8 கவிதைகளையும் மற்றும் 2 கட்டுரைகளையும் கொண்ட சிறு தொகுப்பாக வெளிவந்தது.  அந்த வகையில் இதனை முதலாவது நாவலாகவும் கருதலாம். அதே சமயம் கவிதைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம். கட்டுரைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம்.

இத்தொகுப்பிலுள்ள நாவலின் பெயர் 'மண்ணின் குரல்'. அதனால் இத்தொகுப்புக்கு இந்தப்பெயர் மிகவும் பொருத்தம். அதே சமயம் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவையும் மண்ணின் குரல்களாகத்தாம் ஒலிக்கின்றன. அந்த வகையில் மண்ணின் குரல் என்னும் நூலின் பெயர் நூலின் படைப்புகள் அனைத்துக்கும் பொருத்தமான தலைப்பென்பேன். இக்கவிதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல் அனைத்தும் ,மான்ரியால் நகரில் அக்காலகட்டத்தில் (1984 - 1986)  வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானவை. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக் கிளையினர் வெளியிட்ட கையெழுத்துச் சஞ்சிகை 'புரட்சிப்பாதை'

இந்நூலில் அட்டையினை வடிவமைத்தவர் தற்போது மான்ரியாலில் வசிக்கும் கட்டடக்கலைஞர் பெ.பாலேந்திரா அவர்கள்.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின் விபரங்கள் வருமாறு:

1. மாற்றமும் , ஏற்றமும்
2. அர்த்தமுண்டே..
3. விடிவிற்காய்..
4. புல்லின் கதை இது..
5. ஒரு காதலிக்கு...
6. மண்ணின் மைந்தர்கள்..
7. புதுமைப்பெண்
8. பொங்கட்டும்! பொங்கட்டும்!

வ.ந.கிரிதரன் கவிதைகள் 39: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!

எனது கவிதைகளில் 39 கவிதைகளின் தொகுப்பிது. எதிர்காலத்தில் என் கவிதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணமுண்டு. 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் தலைப்பில் அத்தொகுப்பு வெளியாகும்.

1. ஆசை!

அர்த்த ராத்திரியில் அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும் ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல் அடியேனின்
வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளிலே கண் சிமிட்டும்
சுடர்ப் பெண்கள் பேரழகில் மனதொன்றிப் பித்தனாகிக்
கிடந்திடுவேன்.

நத்துக்கள் கத்தி விடும் நள்ளிரவில்
சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.

பரந்திருக்கும் அமைதியிலே பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி பைத்தியமாய்ப்
படுத்திடுவேன்.

இயற்கையின் பேரழகில் இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால் அடியேனின்
இஷ்ட்டமாகும்.

Wednesday, May 8, 2019

(பதிவுகள்.காம்) குறுநாவல்: சுமணதாஸ பாஸ் - வ.ந.கிரிதரன் -


(பதிவுகள்.காம்) குறுநாவல்: சுமணதாஸ பாஸ் - வ.ந.கிரிதரன் -

- என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. சுமணதாஸ் பாஸைப் பொறுத்தவரையில் ஒரு முக்கிய உண்மையைக் கூறத்தான் வேண்டும். வன்னிமண்ணில் நாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் எங்கள் வீட்டிற்கருகில் ஒரு சிங்கள பாஸ் குடும்பம் இருக்கத்தான் செய்தது. அந்த பாஸ் குடும்பத்தவர்கள் நாங்கள் அம்மண்ணிற்குப் போவதற்கு முன்பிருந்தே அம்மண்ணுடன் பிணைந்து வாழ்ந்து வந்தவர்கள். எங்களுடன் நெருங்கிப் பழகியவர்கள். சுக துக்கங்களில் பங்கு பற்றியவர்கள் ஒருமுறை எங்கள் வீட்டிற்கருகிலிருந்த குளமொன்றில் மூழ்கும் தறுவாயில் தத்தளித்துக் கொண்டிருந்த என்னையும், சாந்தா என்ற சிங்கள இளைஞனையும் துணிச்சலுடன் காப்பாற்றியவர் அந்த சிங்கள் பாஸ்தான். நாங்கள் 70களில் யாழ்ப்பாணம் திரும்பி விட்டோம் அதன்பிறகு எங்களிற்கும் அவர்களிற்குமிடையிலிருந்த தொடர்பு விடுபட்டுப்போனது. 1983 இலிருந்து மாறிவிட்ட நாட்டு நிலைமையைத் தொடர்ந்து, தமிழ் மக்களின் போராட்டம் கனன்றெரியத் தொடங்கி விட்டது. இந்தக் காலகட்டத்தில் விடுதலைக்காகப் போராடும் அமைப்பொன்றினால் அந்தச் சிங்கள பாஸ் குடும்பமே முற்றாக அழிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? வழக்கம்போல் பலவிதமான வதந்திகள், ஊகங்கள். அந்த சிங்கள பாஸ்தான் 'சுமணதாஸ் பாஸாக' இக்கதையில் உருப்பெற்றிருக்கின்றார். நான் இன்று உயிருடன் இருப்பதற்குக் காரணமானவர் அந்தச் சிங்கள பாஸ். அதனை என்னால் ஒரு போதுமே மறக்க முடியாது.

என் பால்ய காலத்து வன்னி மண் அனுபவங்களை மையமாக வைத்து நாவலொன்றினை 'வன்னி மண்' என்னும் பெயரில் எழுதியிருந்தேன். என் வன்னி மண் அனுபவங்களை விபரிக்கும் 'வன்னி மண்' நாவலில் எம் அயலவரான சிங்கள பாஸுடனான அனுபவங்களையும் விபரித்திருந்தேன். அது 'தாயகம்' (கனடா) சஞ்சிகையில் தொடராக தொண்ணூறுகளில் வெளியானது. அந்நாவல் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளியான 'மண்ணின் குரல்' நாவற் தொகுப்பிலுமுள்ளது. அண்மையில் 'வன்னி மண்' நாவலை வாசித்தபோது அதிலுள்ள பகுதிகள் சிலவற்றைத் தனியாகப்பிரித்தெடுத்துச் சிறுகதையாக, குறுநாவலாக ஆக்கலாமென்று தோன்றியது. அதன் விளைவே 'சுமணதாஸ பாஸ்' என்னும் இக்குறுநாவல். சிறுகதைகள் , குறுநாவல்கள் நாவல்களாக உருப்பெற்றுள்ளதை அறிந்திருக்கின்றோம். ஆனால் இங்கே நாவலொன்றிலிருந்து குறுநாவலொன்று தோன்றியுள்ளதைக் காண்பீர்கள்.

இந்நாவல் தொடராக வெளியான காலகட்டத்தில் எழுத்தாளர் மாலன் அவர்கள் கனடா வந்திருந்தார். அச்சமயம் அவருடன் உரையாடியிருக்கின்றேன். அப்பொழுது அவர் கூறிய கூற்றொன்று இன்னும் நினைவிலுள்ளது. அது ' தமிழ் எழுத்தாளர் எவராவது தமிழர் அமைப்புகளால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களைப்பற்றி எழுதியிருக்கின்றார்களா?' அப்பொழுது அவ்விதமான எனது நாவலொன்று 'தாயகம் (கனடா)' சஞ்சிகையில் வெளியாகிக்கொண்டிருக்கின்றது என்று கூற நினைத்தேன். ஆனால் கூறவில்லை. உண்மையில் இவ்விதம் வேறு தமிழ் எழுத்தாளர்கள் யாராவது எழுதியுள்ளார்களா என்பது தெரியவில்லை. அவ்விதம் எழுதா விட்டால் எனது 'வன்னி மண்' நாவலே போராட்டச் சூழலில் பாதிக்கப்பட்ட சிங்களக் குடும்பமொன்று பற்றியும் முதன் முதலாக விபரிக்கும் நாவலென்ற முக்கியத்துவத்தையும் பெறுகின்றது. - வ.ந.கிரிதரன் -
 
*****************************************************************************
குறுநாவல்: சுமணதாஸ் பாஸ் - வ.ந.கிரிதரன் -

1.

சிந்தனையில் மூழ்கிவிடும் போதுதான் எவ்வளவு இனிமையாக, இதமாக விருக்கின்றது. மெல்ல இலேசாகப் பறப்பதுபோல் ஒரு வித சுகமாகக் கூடவிருக்கின்றது. எனக்கு இன்னமும் சரியாக ஞாபகமிருக்கின்றது. மாரிகாலம் தொடங்கி விட்டிருந்தது. என் பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். அப்பா ஆங்கில வாத்தி, அம்மா தமிழ் டீச்சர். இருவரிற்குமே வவுனியாவிற்கு மாற்றலாகியிருந்தது. அம்மாவிற்கு வவுனியா மகாவித்தியாலயத்திற்கும் அப்பாவிற்கு நகரிலிருந்த இன்னுமொரு பாடசாலைக்கும் மாற்றல் உத்தரவு கிடைத்ததுமே அப்பா முன்னதாக வவுனியா சென்று, வாடகைக்கு வீடு அமர்த்திவிட்டு வந்திருந்தார். வீட்டுச் சாமான்களையெல்லாம் ஏற்றி வர ஒரு லொறியை ஏற்பாடு செய்துவிட்டு அப்பா லொறியுடன் வர, நானும் அம்மாவும் அக்காவும் தம்பியும் மாமாவுடன் சோமர் செட் காரொன்றில் வன்னி நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது எனக்கு வயது ஐந்துதான். அந்தப் பயண அனுபவம் இன்னமும் பசுமையாக நெஞ்சில் பதிந்து கிடக்கின்றது. முதன் முதலாக பிறந்த இடத்தை விட்டு இன்னுமொரு இடத்திற்கான பயணம். நெஞ்சில் ஒருவித மகிழ்ச்சி, ஆர்வம் செறிந்து கிடந்தது. கார் பரந்தன் தாண்டியதுமே வெளியும், வானுமாகத் தெரிந்த காட்சி மாறிவிட்டது. சுற்றிவரப் படர்ந்திருந்த கானகத்தின் மத்தியில் பயணம் தொடங்கியது.

வன்னி மண்ணின் அழகு மெல்ல மெல்ல தலைகாட்டத் தொடங்கிவிட்டது. மரங்களிலிருந்து செங்குரங்குகளும், கறுத்த முகமுடைய மந்திகளும் எட்டிப் பார்க்கத் தொடங்கி விட்டன. பல்வேறு விதமான பட்சிகள் ஆங்காங்கே தென்படத் தொடங்கி புதிய சூழலும், காட்சியும் என நெஞ்சில் கிளர்ச்சியை ஒருவித ஆவலை ஏற்படுத்தின. பயணத்தை ஆரம்பித்த பொழுது இருண்டு கொண்டிருந்த வானம், இடையிடையே உறுமிக் கொண்டிருந்த வானம், நாங்கள் மாங்குளத்தைத் தாண்டியபொழுது கொட்டத் தொடங்கிவிட்டது. பேய் மழை அடை மழை என்பார்களே அப்படியொரு மழை, சூழல் எங்கும் இருண்டு, 'சோ' வென்று கொட்டிக்கொண்டிருந்த மழையில் பயணம் செய்வதே பெரும் களிப்பைத் தந்தது. அன்றிலிருந்து கொட்டும் மழையும் அடர்ந்த கானகமும் பட்சிகளும் எனக்குப் பிடித்த விடயங்களாகிவிட்டன. ஒவ்வொரு முறை மழை பொத்துக் கொண்டு பெய்யும் போது, விரிந்திருக்கும் கானகத்தைப் பார்க்கும்போதும், அன்று முதன்முறையாக வன்னி நோக்கிப் பயணம் செய்த பொழுது ஏற்பட்ட அதேவிதமான கிளர்ச்சி, களிப்பு கலந்த உணர்வு நெஞ்சு முழுக்கப் படர்ந்து வருகின்றது. பேரானந்தத்தைத் தந்து விடுகின்றது.

நாங்கள் வவுனியாவை அடைந்த பொழுது பேயாட்டம் போட்டுக் கொட்டிக் கொண்டிருந்த வானத்தின் கோரம் குறைந்து விட்டிருந்தது. நாங்கள் செல்லவேண்டிய பகுதிக்கு பெயர் 'குருமண் காடு'. வவுனியா நகரிலிருந்து, ஒன்றரை மைல் தொலைவில் மன்னார் வீதியில் அமைந்திருந்தது. இன்று அபிவிருத்தியடைந்துவிட்ட பகுதி ஆனால் அன்றோ நாலைந்து வீடுகளையும், ஒரு பெரிய 'பண்ணையையும் கொண்ட காடு. படர்ந்த பகுதி. கண்டுபிடிப்பதுதான் கஷ்டமாகவிருந்தது. காரை மன்னார் றோட்டின் கரையோரம் நிறுத்திவிட்டு, யாரும் தென்படுகின்றார்களா என்று பார்ப்பதற்காக மாமா காரை விட்டிறங்கினார். சிறிது நேரம் ஒருவரையுமே காணவில்லை.

Sunday, May 5, 2019

ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!

ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது

அ.ந.க. ஒரு செயல் வீரர். ஏனையவர்களைப் போல் வாயளவில் நின்று விட்டவரல்லர். தான் நம்பிய கொள்கைகளுக்காக இறுதிவரை பாடுபட்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களிலொருவர். மேற்படி சங்கத்தின் கீதமாகவும் இவரது கவிதையே விளங்குகின்றது. அவரது கவிதைகளின் கருப்பொருட்களாகத் தீண்டாமை, தோட்டத்தொழிலாளர் இழிநிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாயச் சீரமைப்பு, இயற்கை, காதல், தத்துவம், வர்க்க விடுதலை, பிடித்த ஆளுமைகள் போன்றவை விளங்குகின்றன. இவரது கவிதைகள் தமிழமுது, தேன்மொழி, ஈழகேசரி, வசந்தம், வீரகேசரி, பாரதி, தினகரன், ம்ல்லிகை, நோக்கு, இளவேனில், சுதந்திரன், ஸ்ரீலங்கா போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன [அ.ந.க.வின் கவிதைகள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அவர் பங்கு பற்றிய கவியரங்குகள் பற்றிய விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவேண்டியதவசியம்.]. இவரது ஆரம்ப காலத்துக் க்விதைகளிலொன்றான , ஈழகேசரியில் வெளிவந்த, 'சிந்தனையும், மின்னொளியும்' என்ற கவிதை முக்கியமான கவிதைகளிலொன்று. 'அர்த்த இராத்திரியில் கொட்டுமிடித்தாளத்துடனும், மின்னலுடனும் பெய்யும் மழையைப் பற்றிப் பாடப்படும் இக்கவிதையில் , அந்த இயறகை நிகழ்வு கூடக் கவிஞரிடம் சிந்தனையோட்டமொன்றினை ஏற்படுத்தி விடுகின்றது. கணப்பொழுதில் தோன்றி அழியும் மின்னல் கூட ஒரு சேதியைக் கூறிவிடுகிறது. அது என்ன?

'தேன்மொழி'க் கவிதைகள் - 1 - வ.ந.கிரிதரன் -


நூலகம்' தளம் பல்வேறு வழிகளிலும் உதவி வருகின்றது. மிகவும் பயனுள்ள அரியதோர் ஆவணத்தளமாக 'நூலகம்' உருமாறி வந்திருக்கின்றது. அத்துடன் 'தேன்மொழி' சஞ்சிகையின் 'நூலகத்தில்' இதுவரை வலையேற்றப்படாத பிரதிகளையும் தந்துதவிய 'நூலகம்' கோபி அவர்களுக்கு நன்றி. 'தேன்மொழிக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைத்தொடரினை எழுதுவதற்கு அவரது இந்த உதவியே முக்கிய காரணம்.

தேன்மொழி சஞ்சிகை கவிதைக்காக வெளிவந்த முதலாவது சஞ்சிகை. மறுமலர்ச்சிக்காலப்படைப்பாளிகளே இச்சஞ்சிகைக்கும் தோற்றுவாய். மறுமலர்ச்சி சஞ்சிகையினை வெளியிட்ட எழுத்தாளர் தி.ச.வரதராஜனே தேன்மொழியின் நிர்வாக ஆசிரியராக விளங்கியவர். இணையாசிரியராக இருந்தவர் கவிஞர் மஹாகவி. 1955இல் நான்கு இதழ்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதழ்கள் வெளியாகியுள்ளனவா என்பது ஆய்வுக்குரிய விடயம். அத்துடன் 'நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவுச்சின்னம்' என்னும் தாரக மந்திரத்துடன் எழுத்தாளர் தி.ச.வரதராஜனை நிர்வாக ஆசிரியராகவும், கவிஞர் மஹாகவியை இணை ஆசிரியராகவும் கொண்டு வெளியான சஞ்சிகை. சஞ்சிகையின் அட்டைப்படம் ஒவ்வொன்றும்  'தங்கத்தாத்தா' சோமசுந்தரப்புலவரின் கவிதை வரிகளைத் தாங்கி வெளியாகியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. சஞ்சிகையின் கடைசிப்பக்கத்தில் தேன்மொழியில் எழுதும் படைப்பாளிகளில் ஒருவரைப்பற்றியச் சுருக்கமான குறிப்பும் காணப்படுகின்றது. மேலதிக விபரங்கள்: அச்சு - ஆனந்தா அச்சகம். தேன்மொழி அலுவலகம்: 226 , காங்கேசன் துறை வீதி, யாழ்ப்பாணம், இலங்கை.  ஆண்டுக்கட்டணம் - ரூ. 3.00. தனிப்பிரதி 23 சதம்.

மறுமலர்ச்சி இதழ் மூலம் ஈழத்தமிழ் இலக்கியத்தில் கால்பதித்த தி.ச.வரதராஜன் (வரதர்) அவர்கள் முதலாவது கவிதைகளுக்காக மட்டும் வெளிவந்த முதலாவது சஞ்சிகையான தேன்மொழியினையும்  வெளியிட்டவர் என்னும் பெருமைக்குள்ளாகின்றார்.

பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி...- வ.ந.கிரிதரன் -

மகாகவி பாரதியார் 'சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார். பாரதியாரின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கு உதவும் கவிதைகளிலொன்று அவரது இந்தக்கவிதை. இதுவொரு நீண்ட கவிதை. கவிதையின் ஆரம்பம் "பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே." என்ற பட்டினத்துப்பிள்ளையாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகின்றது. பாரதியார் தன்னைச் சித்தர்களிலொருவராகக்கருதுபவர். சித்தர்களிலொருவரான பட்டினத்தாரின் இருப்பு பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பமாகியிருப்பது ஒன்றினை நன்கு புலப்படுத்துகின்றது. அது பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனையினைத்தான். 'பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்னும் கூற்றுக்கேற்ப அவரது வாழ்வில் கடந்து போன இழப்புகளைப்பற்றிச் சுயசரிதை விபரிக்கின்றது. நிறைவேறாத பிள்ளைக்காதல் அதாவது மானுடரின் முதற் காதல், அவரது ஆங்கிலக்கல்வி கற்றல், அவரது திருமணம் மற்றும் அவரது தந்தை வியாபாரத்தில் நொடிந்துபோய் வறுமையுறல்போன்ற விடயங்களைக்கவிதை விபரிக்கின்றது ஆனால் இந்த வாழ்வே இவ்விதமானதொரு கனவுதான் என்பதை அவர் நன்கு புரிந்திருக்கின்றார். ஆனால் அதற்காக அவர் வாழ்விலிருந்து ஓடி, ஒதுங்கிப்போய் விட்டவரா?

இவ்விதமாக இழந்தவை பற்றியெல்லாம் விபரிக்கும் அவர், ஆரம்பத்தில் 'உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி லுங்கன வாகும்' என்று கூறும் அவர்,  தன் கவிதையின் இறுதியில் உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி னுங்கன வாகும்' என்று மானுட வாழ்வே ஒரு கனவு என்பார். ஆனால் அதற்காக , அதனை நினைத்து , நினைத்து வருந்துவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'இதற்குநான் பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்? பண்டு போனதை எண்ணி யென்னாவது? சிலதி னங்கள் இருந்து மறைவதில் சிந்தை செய்தெவன் செத்திடு வானடா' என்று கூறித் தன் சுயசரிதையினை முடிப்பார்.

அமரர் வெங்கட் சாமிநாதன் நினைவாக.. - வ.ந.கிரிதரன் -

அக்டோபர் 20 அமரர் வெங்கட் சாமிநாதனின் நினைவுதினம். தமிழகத்தைச்சேர்ந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் என்னுடன் மிகவும் அதிகமாகத் தொடர்பு வைத்திருந்தவராக நான் கருதுவது அமரர் வெங்கட் சாமிநாதனைத்தான். இவ்வளவுக்கும் நான் அவரை ஒருபோதுமே நேரில் சந்தித்ததில்லை. அவர் இயல் விருது பெறுவதற்காகத் 'டொராண்டோ' வந்திருந்தபோதுகூட நான் அவரைச் சந்திக்கவில்லை. அவர் அப்பொழுது அவரை அழைத்தவர்களுடன் மிகவும் நேரமின்றி அலைந்துகொண்டிருப்பாரென்று எண்ணி நானும் அவரைச் சந்திக்கும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதன் பின்னரே அவர் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அதிகமாக அனுப்பத்தொடங்கினார். அவரது மறைவுக்கு முதல் நாள் வரையில் அவர் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அவ்வப்போது தன் மின்னஞ்சல்களில் தான் என்னை நேரில் சந்திக்காததையிட்டு வருந்தியிருப்பார். நான் தமிழகம் வரும்போது நிச்சயம் அவரைச் சந்திப்பேனென்று ஆறுதலாக அப்போதெல்லாம் பதில் அளிப்பதுண்டு. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை. அது என் துரதிருஷ்ட்டம்.

அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த குணங்களிலொன்று: இறுதி வரையில் தன் நிலை தளராமல், தனக்குச் சரியென்று பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் அந்தப்பண்புதான். நிறைய வாசித்தார். நிறையவே சிந்தித்தார். கலை, இலக்கியத்துறையில் அவர் தனக்கென்றோரிடத்தை ஏற்படுத்தி விட்டு அமரராகி விட்டார். அவர் இருந்தபோதே அவரைக்கெளரவிக்கும் முகமாக எழுத்தாளர்கள் திலிப்குமார், பா.அகிலன் போன்றவர்கள் 'வெங்கட் சாமிநாதன் வாதங்களும், விவாதங்களும்' என்னும் அரியதொரு தொகுப்பு நூலினை வெளியிட்டார்கள். மிகவும் பாராட்டுதற்குரிய பணி அது. அதில் என் கட்டுரையொன்றும் அடங்கியுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியைத் தருவது. அதன் மூலம் அவரைச் சந்தித்திருக்காவிட்டாலும், சந்தித்துப் பழகியதோர் உணர்வே எனக்கு எப்பொழுதுமுண்டு.

சிங்கள மொழியில் எனது (வ.ந.கிரிதரன்) 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'

இன்று 'அகாசா மீடியா வேர்க்ஸ்' மூலம் பல சிங்கள நூல்கள் இலங்கையில் வெளியாகின்றன. அவற்றிலொன்று எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு. சிங்கள மொழிபெயர்ப்பைச் செய்திருப்பவர் எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த (G.G.Sarath Ananda). இந்நூலுக்கான பதிப்பகத்தைத் தேர்வு செய்து நூல் வெளிவரக் காரணமாகவிருந்தவர் எழுத்தாளர் காத்யானா அமரசிங்க (Kathyana Amarasinghe) . இவர்களுக்கும், இந்நூலினைச் சிறப்பாக வெளியிட்டிருக்கும் 'அகாசா மீடியா வேர்க்ஸ்' (AHASA Media Works) உரிமையாளர் அசங்க சாயக்கார ( Asanka Sayakkara) அவர்களுக்கும் நன்றி. நூல் வெளியீடு நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற என் மனம் நிறைந்த வாழ்த்துகளை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். 

இணையத்தில் வெளியான இந்நூலினை வாசித்து மொழி பெயர்க்க ஆர்வம் கொண்டு என்னிடம் அதற்கான அனுமதியைக்கேட்ட ஜி.ஜி.சரத் ஆனந்தவின் ஆர்வமும், மொழிபெயர்ப்பிலுள்ள ஈடுபாடுமே இந்நூல் வெளிவருவதற்கு முக்கிய காரணம். அவர் எனது சிறுகதைகள் இரண்டினையும் ஏற்கனவே சிங்கள் மொழிக்கு மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காத்யான அமரசிங்கவும் எனது கவிதைகளிரண்டினைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்தவர் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.
இதனைச் சாத்தியமாக்கிய இணையத்துக்கும் எனது நன்றி.

இத்தருணத்தில் இதன் தமிழ் நூலினைத் தம் செலவில் சிறப்பாக வெளியிட்ட ஸ்நேகா (தமிழ்நாடு) பதிப்பகத்தாருக்கும் எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஶ்ரீலங்கா சஞ்சிகையின் கலை, இலக்கியப்பங்களிப்பும், அ.ந.கந்தசாமியின் படைப்புகளும்! - வ.ந.கிரிதரன் -


'ஸ்ரீலங்கா' சஞ்சிகை இலங்கைத் தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தமிழ்ச் சஞ்சிகை. ஆகஸ்ட் 1950 - டிசம்பர் 1963 காலகட்ட இதழ்கள் பல (தொடர்ச்சியாக அல்ல) நூலகம் இணையத்தளத்திலுள்ளன. இவற்றைப் பார்த்தபோதுதான் ஈழத்தமிழ்இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பினைச் செய்த சஞ்சிகைகளிலொன்றாக இச்சஞ்சிகையையும் காண முடிந்தது.

அறிஞர் அ.ந.கந்தசாமி, திரு.குல சபாநாதன் போன்றவர்கள் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணி புரிந்த காலகட்டத்தில் , அவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகை இச்சஞ்சிகையென்று அறிந்திருக்கின்றேன்.ஆனால் சஞ்சிகையின் முன் அட்டையில் அரசாங்க சமாச்சாரப் பகுதியால் வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசிப்பக்கத்தின் அடியில் தகவற் பகுதியினருக்காக இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பெற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றிய விபரமெதனையும் காணவில்லை. ஆனால் இச்சஞ்சிகையின் உருவாக்கத்தில் அறிஞர் அ.ந.கந்தசாமி, திரு.குல சபாநாதன் ஆகியோரின் பங்களிப்பினை சஞ்சிகையில் வெளியான படைப்புகள் வாயிலாக அறிய முடிகின்றது. இருவருமே இச்சஞ்சிகை வெளிவந்த காலகட்டத்தில் இலங்கைத் தகவற் திணைக்களத்தில் பணி புரிந்து கொண்டிருந்ததாலும், இருவருமே நாடறிந்த எழுத்தாளர்கள் என்பதாலும் 'ஶ்ரீலங்கா' சஞ்சிகையின் ஆசிரிய பீடத்தினை அலங்கரித்தவர்களாக அறிந்த தகவல் உண்மையென்றே தோன்றுகின்றது.

 இலங்கைத் தகவற் திணைக்கள வெளியீடு என்பதால் அரசு பற்றிய , அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய சஞ்சிகையாக இச்சஞ்சிகை விளங்கினாலும், ஈழத்தமிழ்க் கலை, இலக்கியத்துக்குக் காத்திரமான படைப்புகளையும் கூடவே வெளியிட்டுள்ளதால் , ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் முக்கிய சஞ்சிகைகளிலொன்றாக இச்சஞ்சிகை விளங்குகின்றது எனலாம்.

மனவெளிக்கலையாற்றுக் குழுவினரின் இப்சனின் ஒரு பொம்மை வீடு ! - வ.ந.கிரிதரன் -

நேற்று (30.6.2018) நண்பர் தேவகாந்தனுடன் மனவெளி அமைப்பின் பத்தொன்பதாவது அரங்காடல் நாடக நிகழ்வுக்கு இப்சனின் 'ஒரு பொம்மை வீடு ' பார்க்கச்சென்றிருந்தேன். நண்பகற் காட்சி, மாலைக் காட்சி என்று இரு காட்சிகள் அரங்கு நிறைந்த மக்கள் ஆதரவுடன் நடைபெற்றன. மனவெளி கலையாற்றுக் குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.

ஏற்கனவே பலமுறை படித்திருந்த நாடகமாதலால் நாடகம் பற்றிய புரிதலுடனேயே சென்றிருந்தேன். நாடகம் எவ்விதம் மேடையேற்றப்படுகின்றது, எவ்விதம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது, எவ்விதம் இயக்கப்பட்டிருக்கின்றது, எவ்விதம் மேடை அலங்காரங்கள், ஒலி, ஒளி அமைப்புகள் இருக்கப்போகின்றன , எவ்விதம் நடிகர்களின் நடிப்பு இருக்கப்போகின்றது எனப் பல்வகை எதிர்பார்ப்புகளுடன் சென்றிருந்தேன். எதிர்பார்ப்புகள் எவையும் பொய்த்துப்போய் விடவில்லை. நாடகத்தைச் சிறப்பாக மேடையேற்றியிருந்தார்கள். அதற்காக மனவெளி அமைப்புக்கும், மொழிபெயர்த்து இயக்கிய பி.விக்னேஸ்வரனுக்கும் மற்றும் நாடகத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறையே அரசி விக்னேஸ்வரன், ஜெயப்பிரகாஷ் ஜெகவன் , எஸ்.ரி. செந்தில்நாதன் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஏனைய பாத்திரங்களான டாக்டர் ராங், திருமதி லிண்டே, அன்னா மரியா மற்றும் ஹெலெனா ஆகிய பாத்திரங்களில் குரும்பச்சிட்டி ஆர்.ராசரத்தினம், பவானி சத்தியசீலன், மாலினி பரராஜசிங்கம், கனித்தா உதயகுமார் ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்களில் கனித்தா உதயகுமார் தவிர ஏனையோர் ஏற்கனவே நாடகத்துறையில் அனுபவம் பெற்ற தேர்ந்த நடிகர்கள். பல்கலைக்கழக மாணவியான கனித்தா உதயகுமார் அண்மையிலேயே தன்னை இத்துறையில் ஈடுபடுத்திக்கொண்டவர். நடிப்பில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்.

'ஒரு பொம்மை வீடு' இன்றைய பெண்ணியச் சிந்தனைகளுக்கெல்லாம் முன்னோடியான நாடகம் நாடகத்தின் முக்கிய ஆளுமை நோரா. வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட சிறப்பான பாத்திரம். குழந்தைகளுடன் தன் அன்புக் கணவனுடன் வாழுமொரு பெண் , அவனது நலன்களுக்காகவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அவனுக்கு உண்மை கூறாது மறைத்த பெண், அவனுடன் வாழ்ந்த காலகட்டத்தில் , அதற்கு முற்பட்ட காலத்தில் தன் தந்தையுடன் வாழ்ந்த காலகட்டங்களிலெல்லாம் தான் ஒரு பொம்மையாகவே தான் வாழ்ந்த சமுதாயத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததை உணர்ந்து , தன் சுயமரியாதையுடன், சுய சிந்தனையுடன், சுதந்திரமாகத் தன்மீது பிணைக்கப்பட்டிருந்த தளைகளையெல்லாம் உடைத்து (திருமண பந்தமுட்பட) வாழப்புறப்படுவதுதான் நாடகத்தின் மையக்கரு.

நாடகத்தின் இடைவேளையில் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தபோது எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரன் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். அது என் கவனத்தை ஈர்த்தது. சீனாவில் ஒரு காலகட்டத்தில் பெண்ணுரிமைக்காக நோராயிசம் என்றொரு சிந்தனைப்போக்கே உருவானதாம் மேற்படி இப்சனின் நோரா பாத்திரத்தால் என்று அவர் குறிப்பிட்டதையே குறிப்பிட்டேன். இப்பாத்திரமே நாடகம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ள பாத்திரம். இதனைச் செய்வதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அதனை அரசி விக்னேஸ்வரன் மிகவும் சிறப்பாக, அநாயசமாகச் செய்திருந்தார். சுமார் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற நாடகத்தில் ஒரு கட்டத்தில் கூடத் தளர்ச்சியேதுமற்ற நிலையில், நாடக வசனங்களை நினைவில் வைத்துச் சிறப்பாகத் தன் நடிப்புத்திறமையினால் நாடகத்தைக் கண்டு களிக்க வந்திருந்த அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருந்தார் அவர். அதற்காக அவருக்குப் பாராட்டுகள். இந்நாடகத்தின் வெற்றிக்கு அவரது நடிப்பு முக்கியமானதொரு காரணம். நண்பர் எழுத்தாளர் தேவகாந்தனும் அரசி விக்னேஸ்வரனின் நடிப்பை விதந்து தன் கருத்துகளை நாடகத்தின் முடிவிலான அவருடனான உரையாடலின்போது குறிப்பிட்டார்.

ஏனைய பாத்திரங்களில் அவரது கணவராக நடித்திருந்த ஜெயப்பிரகாஷ் ஜெகவன் மற்றும் அவரது கணவரின் உடல்நலப்பயணச் செலவுகளுக்காக, டோராவின் கள்ளக்கையெழுத்துடன் பணம் கொடுத்து உதவியவராக நடித்திருக்கும் எஸ்.ரி. செந்தில்நாதன் ஆகியோருக்கு நாடகத்தில் தம் நடிப்பாற்றலை வெளிப்படுத்த நிறைய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவற்றை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்தியிருந்தார்கள்.

இவர்களுடன் மேடையின் பின்னணியிலிருந்து உழைத்த கலைஞர்கள் அனைவரும் (இசை, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, ஒளி, ஒலி , மேடையமைப்பு போன்றவற்றுக்காக உழைத்தவர்கள்) பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பல வருடங்களுக்குப் பின்னர் நல்லதொரு நாடக நிகழ்வைக் கண்டு களித்த திருப்தியான உணர்வே நாடகத்தின் முடிவிலேற்பட்டது. அதுவே நாடகத்தின் வெற்றியும் கூட.

ngiri2704@rogers.com

நன்றி: பதிவுகள்.காம்

Saturday, May 4, 2019

எனது , வ.ந.கிரிதரனின், மூன்று கவிதைகள் பற்றி...

எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். அத்தொகுப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. அது பற்றி அறியத் தந்த மாலன் " அன்புள்ள கிரிதரன், தேர் ஒருவழியாக புறப்பட்டுவிட்டது. உங்களது கவிதை இடம்பெற்றுள்ள அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு-புவி எங்கும் தமிழ்க் கவிதை- சாகித்திய அகாதெமியின் வெளியீடாக வந்துள்ளது. 22 நாடுகளில் வசிக்கும்  தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது  தமிழ்க் கவிதைகளின் விரிவிற்கும் ஆழத்திற்கும் சான்றளிக்கும் ஓர் அரிய நூல்" என்றும் தனது மின்னஞ்சலில் குறிப்ப்ட்டுள்ளார். முதலில் இத்தொகுப்பு நூலிலுள்ள கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளதற்காக அவருக்கு நன்றி. அத்தொகுப்பினை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினை மாலனின் கடிதம் ஏற்படுத்துகின்றது.

மேற்படி தொகுப்பில் எனது கவிதையொன்றும் இடம் பெற்றுள்ளது. "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'" என்பது அக்கவிதையின் தலைப்பு, அக்கவிதையினையே கீழே காண்கின்றீர்கள்:

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்த சமகால இருமொழிக்கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity (VOL 1) ((கணநேர எல்லையின்மை) அநாமிகா அல்ஃபபெட்ஸ் (Anaaamikaa alphabets) பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. அத்தொகுப்பிலுள்ள எனது கவிதையான "கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி."

சிறப்பான தொகுதியொன்றினைத்தந்ததற்காகவும், இதற்கான அவரது கடுமையான உழைப்பிற்காகவும் லதா ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கூடவே இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

தமிழில் வெளியான கவிதைத்தொகுதிகளில் முக்கியமானதோர் கவிதைத்தொகுதியாக இக்கவிதைத்தொகுதி விளங்கும் என்பதை இத்தொகுதியின் கவிதைகள் புலப்படுத்துகின்றன.

இத்தொகுப்பிலுள்ள எனது கவிதையினையே இங்கு காண்கின்றீர்கள்.

இலங்கைத் தமிழ் இலக்கியமும் , 'இன்ஸான்' பத்திரிகையும்.


எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் 'இன்ஸான்' பத்திரிகை பற்றிப்பின்வருமாறு பதிவு செய்திருந்தார்:

"1965-1970 காலப் பகுதியில் ' இன்ஸான்'( மனிதன்) என்ற வாராந்தரி பத்திரிகை ஏ.ஏ.லத்தீஃபை ஆசிரியராக கொண்டு வெளியாகியது. முஸ்லிம் வாழ்வியலை,சமூகப் பார்வையுடன் இலக்கியமாக்கும் வாய்ப்பை வழங்கி வழிகாட்டியது. இதனூடாக வெளிப்பட்ட சிறுகதையாளர்களில குறிப்பிடத்தக்க ஒருவர் எம்.பி.எம. நிஸ்வான். ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் ஒரு பத்தோ இருபதோ இன்ஸான் கதைகளை தொகுத்து வெளியிடும் முயற்சி கைகூடவில்லை.இன்ஸானோடு சம்பந்தப்பட்ட ஒருசிலரே இன்று எம்மத்தியில் உள்ளனர்.அவர்கள் சந்திக்கும்போது பேசிக் கலைவதைத்தவிர வேறொன்றும் ஆகவில்லை. முஸ்லிம்களின் இலக்கியம் என்பது அனாதை இலக்கியமே என்பதற்கு இதைத்தவிர வேறென்ன அத்தாட்சி வேண்டும்? பாணந்துறை எம்.பி.எம்.நிஸ்வானின் இரு நூல்களின் வெளியீடு கடந்த 07.04.2018ல் உம்முல் மலீஹா மண்டபத்தில் நடைபெற்றபோது கருத்துரை வழங்குகையில் மேற்படி விடயங்களை எடுத்துக் கூறினேன்."

எழுத்தாளர் அந்தனி ஜீவா 'தினகரன்' (இலங்கை) பத்திரிகையில் எழுத்தாளர்ர் அ.ந.கந்தசாமி பற்றி எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் பின்வருமாறு கூறுவார்:

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்து, மொழிபெயர்த்து அதனைத் தனது 'அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்' பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ள இருமொழிக் கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity ( கணநேர எல்லையின்மை )

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்து, மொழிபெயர்த்து அதனைத் தனது 'அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்' பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ள இருமொழிக் கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity ( கணநேர எல்லையின்மை ) நேற்று என்னை வந்தடைந்தது. உடனடியாகவே இரு பிரதிகளை அத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிஞர் ராஜாஜி ராஜகோபாலனிடம் சேர்ப்பித்து விட்டேன்.

தொகுப்பு சிறப்பாக வந்துள்ளதற்காக லதா ராமகிருஷ்ணன் பெருமைப்படலாம். தனியொருவராக அவர் மிகவும் அநாயாசமாக இதனைச் சாதித்திருக்கின்றார். அவரது கடும் உழைப்புக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

இத்தொகுப்பு சிறப்பாக வந்திருப்பதற்கு முக்கிய காரணங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம்: பொதுவாக இலக்கிய ஆளுமைகள் தம் விருப்பு, வெறுப்புகளுக்கேற்பச் சிலரின் கவிதைகளையே தேர்ந்தெடுத்து அக்கவிஞர்களின் கவிதைகளையே மொழிபெயர்த்துத் தொகுத்து வெளியிடுவார்கள். ஆனால் அவ்விதமில்லாது கவிதைகளை லதா ராமகிருஷ்ணன் தன் வாசிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளார்.

நீண்ட தேடுதல் முடிவுக்கு வந்தது: அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பது கிடைத்தது!


அறிஞர் அ.ந.கந்தசாமியின் பத்திரிகையில் வெளியான ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. தொடராகத் தினகரனில் வெளியானபோது வாசகர்களின் அமோக ஆதரவினைப்பெற்ற நாவலிது. அ.ந.க.வின் துள்ளு தமிழ் நடையில் நாவலை வாசிப்பதே பேரின்பம்.  அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் வானொலியில் அவரது 'தணியாத தாக'த்தைத் தொடர்ந்து, அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலையும் வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். இந்நாவல் தவிர அ.ந.க அவர்கள் தன் இறுதிக் காலத்தில் இன்னுமொரு நாவலையும் , மலையக மக்களை மையமாக வைத்துக் 'களனி வெள்ளம்' என்னும் பெயரில் எழுதியதாகவும், அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83கலவரத்தில் செ.க.வின் கொழும்பு இருப்பிடம் எரியுண்டபோது அந்நாவலும் எரியுண்டு போனதாகவும் அறிகின்றேன்.

இவ்விதமானதொரு சூழலில் 'மனக்கண்' நாவலைத் தேடிக்கொண்டிருந்தபோது செ.கணேசலிங்கன் அவர்கள் கமலினி செல்வராசனிடம் இருக்கும் என்றும் , அவரது முகவரியைத்தந்து அவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியிருந்தார். அவருடன் தொடர்பு கொண்டபோது அவர் அதைத்தருவதற்கு இலட்சங்களில் பணம் கேட்டார். எனவே அம்முயற்சியைக் கை விட வேண்டியதாயிற்று. பின்னர் எழுத்தாளர்கள் பலருக்கு எழுதிப்பார்த்தேன். தினகரன் ஆசிரியருக்கும் எழுதிப்பார்த்தேன். எதுவுமே கிடைக்கவில்லை. பின்னர் இலங்கைச்சுவடிகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அப்போது  அதன் இயக்குநராகவிருந்த விமலரட்னவுக்குக் கடிதமொன்று எழுதினேன். அதில் மனக்கண் நாவல் வெளியான காலகட்டத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று எழுதினேன். என்ன ஆச்சரியம்.. அவரிடமிருந்து பதிற் கடிதம் வந்திருந்தது. அதில் மனக்கண் நாவல் வெளியான தினகரன் பிரதிகள் இருப்பதாகவும், அதனை அனுப்புவதாயின் போட்டோப்பிரதிகள் மற்றும் தேடுதலுக்கான கட்டணத்தை அனுப்பும்படி கூறியிருந்தார். கட்டணம் ஐம்பது கனேடிய டொலர்களுக்கும் குறைவானது. அனுப்பினேன். அவர் நாவலை 'லீகல் சைஸ்' அளவில் அனுப்பியிருந்தார். ஆனால் சுவடிகள் திணைக்களத்திடம் அத்தியாயம் 30 இருக்கவில்லை.

Friday, May 3, 2019

யாழ் நகரத்துத் திரையரங்குகள் பற்றியதொரு நனவிடை தோய்தல்! - வ.ந.கிரிதரன் -

அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன். அக்காலகட்டத்தில் யாழ் நகரில் பல திரையரங்குகள் பல இருந்தாலும் (மனோஹரா, ராணி, ராஜா, றீகல்,, ஹரன், சாந்தி, ஶ்ரீதர், லிடோ (பழைய வின்சர்), வின்சர் , வெலிங்டன் & றியோ ), இவற்றில் என்னை அதிகம் பாதித்தவை பற்றிய பதிவுகளிவை. இவற்றையும், இவற்றுக்கான எதிர்வினைகளையும் பதிவு செய்வதன் அவசியம் கருதி அவை அனைத்தையும் தொகுத்து இங்கு தருகின்றேன்.

யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று - ராணி

முகநூலில் Shan Naranderan ராணி (யாழ்ப்பாணம்) திரையரங்கின் புகைப்படமொன்றினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அதனை இங்கு மீண்டும் நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இன்று ராணி திரையரங்கு இருந்த இடத்தில் 'சீமாட்டி' வர்த்தக நிலையமுள்ளது. ஆனால் அன்று எம் பதின்ம வயதுகளில் அவ்வாழ்வுக்குரிய பொழுதுபோக்குகளில் முக்கிய இடத்தை வகித்த திரையரங்குகளிலொன்றாக விளங்கிய திரையரங்கு ராணி. முதன் முதலில் ராணி திரையரங்கைப் பார்த்த தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் இ.போ.சபையின் பஸ்ஸில் வந்து , யாழ் பஸ் நிலையத்தில் இறங்கியபொழுது கண் முன்னால் விரிந்தது ராணி திரையரங்கின் முன் அமைக்கப்பட்டிருந்த அடிமைப்பெண் எம்ஜிஆரின் பிரமாண்டமான , ஓவியர் மணியத்தின் 'கட் அவுட்' இடுப்பில் கைகளை வைத்து, மணிமுடியுனிருந்த அந்த எம்ஜிஆரின் கட்அவுட் இன்னும் கண் முன்னால் விரிகின்றது. இன்னுமொரு முறை அவ்விதம் வந்து யாழ் பஸ் நிலையத்தில் இறங்கியபொழுது 'மாட்டுக்கார வேலன்' திரைப்படத்திலிடம் பெறும் 'ஒரு பக்கம் பார்க்குறா' பாடலுக்கான காட்சியை வெளிப்படுத்தும் இரு எம்ஜிஆர்களின் உயர்ந்த உருவங்களை உள்ளடக்கிய இரு 'கட் அவுட்'டுகள். இவ்விதமாக ராணி திரையரங்குடன் ஆரம்பமாகியதென் உறவு.

இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் மற்றும் நடாத்தப்பட்ட ஆய்வுகள்..... இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் மற்றும் நடாத்தப்பட்ட ஆய்வுகள்..... - வ.ந.கிரிதரன் --

இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் , ஒரு பதிவுக்காக, இங்கு தரப்படுகின்றன. பதிவு செய்தல் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை. பதிவு செய்தலென்பது விமர்சனமல்ல. இணையத்தில் வலைப்பதிவுகளினூடு, மின்சஞ்சிகைகளினூடு எனப் பல்வேறு வழிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தையும் பதிவு செய்கின்றார்கள். இணையம் தரும் வசதியினைப் பாவித்துப் படைப்புகள் பற்றிய விபரங்களைப் பலருடனும் பகிரிந்துகொள்வதன் மூலம் ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.  அது பயனுள்ளது. ஆக்கபூர்வமானது. படைப்புகள் வாசகர்களைச் சென்றடைவதற்கு இவ்விதமான பதிவுகள் முக்கியமானவை. இன்று காலம் மாறி விட்டது. இணையம் படைப்புகளை உடனுக்குடன் உலகின் சகல மூலைகளுக்கும் கொண்டு செல்கின்றது. மிகுந்த வல்லமை மிக்க ஊடகமான இணையத்தைத் திறனாய்வாளர்கள் மிக அதிக அளவில் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நினைக்கின்றேன்.

1. தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட, நடத்துகின்ற இணைய சஞ்சிகைகளான திண்ணை, ஆறாந்திணை, அம்பலம், இசங்கமம், கூடல் போன்றவற்றில் எனது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.
2. எழுத்தாளர் பென்னேஸ்வரனால் வெளியிடப்படும் 'வடக்கு வாசல்' சஞ்சிகை சார்பில் வெளியான 'இலக்கிய மலர் 2008' இல் வெளியான கட்டுரை: இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்!  - வ.ந.கிரிதரன்
3. ஊடகவியலாளர் செந்தில்நாதனின் ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலருக்காக எழுதிய கட்டுரை: 'கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!'
4. தமிழகத்திலிருந்து வெளியாகும் 'துளிர்' இதழுக்காகப் பல வருடங்களுக்கு முன்னர் அறிவியல் கட்டுரை கேட்டிருந்தார்கள். அனுப்பியிருந்தேன். இதழில் வெளிவந்ததாகக் கூறியிருந்தார்கள். ஆனால், அந்த இதழ் என் கைகளுக்கு வந்து சேரவில்லை. எனவே என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.
5. கணையாழியில் வெளியான எனது படைப்புகள்:
அ. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
ஆ. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
இ. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
ஈ. 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
உ. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்ஆர்தர் சி.கிளார்க் (கணையாழி மே 2012)

இன்று புதிதாய்ப் பிறந்தேன்.















இன்று புதிதாய்ப் பிறந்தேன்.
இருப்பினை
நம்பிக்கையுடனும், கனவுகளுடனும்,
வியப்புடனும், வினாக்களுடனும்
எதிர்கொள்ளும் உணர்வுகள் பொங்கிட
இன்று புதிதாய்ப் பிறந்தேன். இனி
என்றும் புதியாய்ப் பிறப்பேன்.
'இன்று புதிதாய்ப் பிறந்தேன் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற் றிருந்து' வாழ்வேன்”
இனி என்றும் புதியாய்ப் பிறப்பேன்.

எழுத்தாளர் கு.ப.ரா.வின் வசன கவிதை பற்றிய கூற்றொன்றும் , அதற்கான எதிர்வினையொன்றும்...

எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூற் பதிவாக எழுத்தாளர் கு.ப.ரா.வின் கீழ்வரும் கூற்றொன்றினைப் பதிவு செய்திருந்தார். :

" வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தளையுண்டு. மோனையுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கும் ரிதம் உண்டு. செய்யுள் எழுதுவதைக்காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம். செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைகளும் ஒரு இசை இன்பத்தை ஊட்டிவிடும். ஆனால் வசன கவிதையில் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில் தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும். சொல்லில் கவிதையின் அம்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது - வெறும் வசனம்தான் ”  ( கு.ப. ராஜகோபாலன் - 1939 இல் )

மேற்படி கூற்றுக்கான என் எதிர்வினை:

இது கு.ப.ராஜகோபாலன் அவர்கள் மரபுக்கவிதையின் ஆதிக்கமிருந்த காலகட்டத்தில் , மரபுக்கவிதையைச் சிறிது எளிமைப்படுத்தி பாரதியார் மரபுக்கவிதைகளையும், வசன கவிதைகளையும் எழுதியதன் பின்னர் மணிக்கொடி எழுத்தாளர்கள் மரபை மீறிக்கவிதைகள் படைக்க முற்பட்ட காலகட்டத்தில் கூறிய அல்லது எழுதிய கூற்று. இதனை இன்று ஏற்க வேண்டியதில்லை. கு.ப.ரா போன்றவர்களால் மரபை முற்றாக மீற முடியாமலிருந்ததால் தான் இவ்விதம் கூற முடிவதாகவே கருதுகின்றேன். கவிதை என்றால் மரபுக்கவிதைதான். அதனால் வசன கவிதைகளிலும் மரபுக்கவிதையின் அம்சங்கள் இருக்க வேண்டுமென்று  அவர் கருதினாரென்று கருதுகின்றேன். மரபுக்கவிதைன் அம்சங்களைப்போல்  வசனகவிதைகளும் மோனை, தளை போன்ற கட்டுப்பாடுகளை உள்ளடக்கியவை என்னும் கருத்தில்தான் கு.ப.ரா இங்கு கூறியுள்ளார். ஆனால் கட்டுப்பாடுகள் அல்லது விதிகளுடன் கூடிய மரபுக்கவிதைகளுக்குரிய அம்சங்களை முன்வைத்து , மரபை மீறி உருவான கவிதையொன்றினை ஆராய்வது சரியானதல்ல என்பதென் கருத்து. இங்கு அவர் வசனகவிதைக்குரிய தளை, மோனை, அணி அலங்காரம் எவ்விதமிருக்க வேண்டும் என்று தெளிவாக விபரிக்காவிட்டாலும், மரபுக்கவிதைக்குரிய அம்சங்களான அவற்றின் அடிப்படையில் அவர் வசனகவிதையை ஆராய்வது சரியல்ல என்பதே என் கருத்து. ஆனால் வசன கவிதையிலோ , புதுக்கவிதையிலோ அல்லது இன்றுள்ள கவிதையிலோ மரபுக்கவிதைக்குரிய அம்சங்கள் இருக்கலாம்; இல்லாமலிருக்கலாம். இருப்பதால் மட்டும் அவை கவிதைகளாவதில்லை. இல்லாமலிருப்பதால் மட்டும் அவை கவிதைகளில்லை என்பதுமில்லை.

உங்களை நாம் மறக்க மாட்டோம்

ஊடகங்கள் உங்களை மறந்து விட்டன.
ஊடகங்கள்  மட்டுமா
உங்களைக் காக்க வேண்டிய அரசும்
உங்களைக் காக்க வில்லை.
ஊடகங்களுக்கோ உங்களை அழித்தவர்கள்
உங்களைக் காயப்படுத்தியவர்கள் பற்று
எழுதுவதற்கே நேரம் போதவில்லை.
உங்களைப்பற்றி எழுதுவதற்கு எங்கே நேரம்
உள்ளதவர்களுக்கு.
நடக்கப்போவதை அறியாமல்
நீங்கள் இருந்தீர்கள்.
நடக்கப்போவதை அறியாமல்
நீங்களிருந்ததைப்போல்
உங்கள் குழந்தைகளும் இருந்தார்கள்.
உங்கள் பிரார்த்தனைகளிலிர்ருந்த கனவுகளெத்தனையோ?
உங்கள் பிரார்த்தனைகள்
உங்கள் குடும்பத்தைப்பற்றி இருந்திருக்கக் கூடும்.
உங்கள் உறவுகளைப்பற்றி இருந்திருக்கக் கூடும்.
உங்கள் பிறந்த மண்ணைப்பற்றியதாக இருந்திருக்கக் கூடும்.
இருந்தும்
உங்களைப்பற்றி, உங்களை இழந்தவர்தம் வலி பற்றி
ஊடகங்களேன் எழுதவில்லை?
ஊடகங்களால் மறக்கடிக்கப்பட்ட
மறைக்கப்பட்ட வலிதனை
உள்ளதுள்ளபடி எடுத்துரைப்போம்.
உங்கள் கனவுகளை
உங்கள் குழந்தைகள் பற்றி, அவர்தம்
உள்ளத்துக் கனவுகளை, உணர்வுகளை நாம்
உலகிற்கெடுத்துரைப்போம். உங்களை நாம்
உள்ளவரை மறந்துவிட மாட்டோம்.
உதிர்ந்தவர்களே! உங்களை நாம்
உள்ளவரை மறந்துவிட மாட்டோம்.

இலங்கைத்தமிழ் இலக்கியமும், விமர்சனமும் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பும், மு.பொன்னம்பலத்தின் இருட்டடிப்பும்!



இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி எனக்கருதப்படும் இவர், புலமை காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைக்கப்பட்ட இவர் சிறுகதை, கவிதை,  நாடகம், விமர்சனம் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனது குறுகிய கால வாழ்வினில் காத்திரமான பங்களிப்பினை நல்கியவர். அவ்வப்போது இலங்கைத்தமிழ்  இலக்கியம் பற்றி எழுதும் சிலர் அத்துறையில் போதிய புலமையற்றோ அல்லது திட்டமிட்டோ இவரது பங்களிப்பினை மறைத்துவிடுகின்றனர்.

அ.ந.க.வின் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் விமர்சனத்துக்கான (அல்லது திறனாய்வுக்கான) பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அ.ந..க.வின் புலமை காரணமாகவே பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் தனது 'ஒப்பியல் இலக்கியம்' நூலினை அ.ந.க.வுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வுத்துறைக்குப் பெரும்பங்களிப்பு செய்தவர் பேராசிரியர் கைலாசபதி. அவர் ஒருவருக்குத் தன் நூலினைச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார் என்றால் அதனைச் சாதாரணமாக எடுத்துவிட முடியாது. அச்சமர்ப்பணத்தில் அவர் இவ்விதம் கூறுவார்:

“  பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங்கொடுத்து வருபவரும், இன்றைய  ஈழத்து  எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவரும், பிறமொழி யிலக்கியங்களைக் கற்றுமகிழ்ந்து அவற்றைத் தழுவியும் மொழிபெயர்த்தும்  தமிழுக்கு அணி செய்தவரும் ,பலதுறை வல்லுனருமான காலஞ்சென்ற அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்”

மு.தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலிலிருந்து....

மு.தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலில் ஓரிடத்தில் இவ்விதம் வருகின்றது:

"அ.ந.கந்தசாமி கூட சோலாவைப்பற்றித்தான் எழுதினார். சோலா இயற்கைவாதியே ஒழிய சோஸலிஸ்ட் யதார்த்தவாதியல்ல. அதோடு அப்படி ஒருவரைத்தான் தேட வேண்டுமென்றால் மார்க்ஸே பால்சாக்கைப்பிடித்திருக்கலாம். ஆனால் அவர் சோலாவைத்தான் பிடித்தார்."

இக்கூற்றினை சிறிது ஆராய்வோம். அ.ந.க சோலாவைப்பற்றி எழுதுவதிலென்ன தவறிருக்க முடியும். ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எமிலி சோலாவின் நாவலான 'நானா'வைத் தமிழுக்கு மொழிபெயர்த்து சுதந்திரன் பத்திரிகையில் வெளியிட்டவர் அ.ந.க. சோலாவின் பாதிப்பு அ.ந.க.வுக்கு நிறையவேயுண்டு. எமிலி சோலாவைப்பற்றி அவர் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் சுதந்திரனில் 'நானா' தொடராக வெளியான சமயம் எழுதிய 'எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி நானா மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா' என்னும் கட்டுரையும் முக்கியமானது.

எமிலி ஸோலாவின் இலக்கியம் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார்:

"ஸோலா இலக்கியத்திலே மோகனமான கனவுகளைத் தோற்றுவிக்கும் போக்கில் நம்பிக்கை கொண்டவரல்ல. சாக்கடை உலகைச் சாக்கடை நாற்றத்தை நாம் உணரத்தக்கவகையில் இயற்கைத்தன்மையுடனே சமைப்பதில்தான் அவரது சிறந்த கலை வெற்றி பெறுகிறதென்று கூறலாம். 'இயற்கை வாதம்' (Naturalism) என்று அவரும் அவரது கோஷ்ட்டியினரும் தமது இலக்கியப் பாணிக்கு நாமகரணம் செய்து கொண்டனர்."

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்ள 'தேசிய இலக்கியமும், மரபுப்போராட்டமும்' என்னும் நூல் பற்றியுமான பதிவு!.


இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றைப்பொறுத்தவரையில் முக்கியமான காலகட்டங்களாக 'மறுமலர்ச்சி'க் காலகட்டத்தையும், 'இலங்கை எழுத்தாளர் முற்போக்குக் கழகக்' காலகட்டத்தையும் குறிப்பிடலாம். இலங்கை மண்ணுக்கேயுரிய மண்வாசனை மிக்க தனித்துவம் மிக்க எழுத்துகளைப்படைக்க வேண்டுமென்று 'மறுமலர்ச்சிக்' குழு வழிவந்த இளைஞர்கள் எண்ணினார்கள். ஆனால் அந்நோக்கமே 'தேசிய இலக்கியம்' என்னும் கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் வழிச் செயற்பட்ட எழுத்தாளர்கள் , திறனாய்வாளர்கள். தேசிய இலக்கியம் பற்றிய புரிதலுக்காக எழுத்தாளர் இளங்கீரனின் 'மரகதசம்' சஞ்சிகையில் 'தேசிய இலக்கியம்' பற்றி 'மரகதம் ' சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் க.கைலாசபதி, ஏ.ஜே.கனகரட்னா, அ.ந.கந்தசாமி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.

இதனைத்தொடர்ந்து தினகரன் பத்திரிகையில் மரபினைப்பேணிய பண்டிதர்களுக்கும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களுக்குமிடையில் தலையெடுத்த 'மரபு' பற்றிய விவாதமும் முக்கியமானது. இரு சாராரும் தினகரன் பத்திரிகையில் நடாத்திய விவாதம் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வு.

'மரகதம்' சஞ்சிகையில் வெளியான 'தேசிய இலக்கியம்' பற்றிய கட்டுரைகளையும், தினகரன் பத்திரிகையில் நிகழ்ந்த மரபு பற்றிய விவாதக் கட்டுரைகள் சிலவற்றையும், வேறு சில கட்டுரைகளையும் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கின்றனர் 'சவுத் ஏசியன் புக்ஸ்' (சென்னை) பதிப்பகத்தினர். தொகுத்தவர் எழுத்தாளர் சுபைர் இளங்கீரன். மிகவும் முக்கியமான தொகுப்பு.

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (5) - வ.ந.கிரிதரன்-

அத்தியாயம் ஐந்து:   இருப்பின்  புதிரொன்றும் , நங்கையுடனான சந்திப்பும்! "நான் மாதவன். யுனிட் 203இல் வசிப்பவன்.  போஸ்ட்மன் தவறுதலாக உங்கள...

பிரபலமான பதிவுகள்