Monday, November 16, 2020

கணையாழியில் வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்!

கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகளின் விபரங்களைக் கீழே காணலாம். 
 
1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை
மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
3. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. கணையாழி டிசம்பர் 2000: 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. கணையாழி மே 2012: ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்-
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7. கணையாழி செப்டம்பர் 2017: கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயிஓன் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -
9. கணையாழி மார்ச் 2020: விநாயக முருகனின் 'ராஜிவ்காந்தி சாலை'
10. கணையாழி ஏப்ரில் 2020: 'பிரமிளின் "காலவெளி": கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
11. கணையாழி மே 2020: 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற் காதல் பற்றி..'

Wednesday, October 28, 2020

பதிவுகள் 25 கட்டுரைகள் (தொகுதி மூன்று) மின்னூலாக இணையக் காப்பகத்தில்...


'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பதிவுகள் இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் முதலாவது தொகுதி தற்போது மின்னூலாக இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் இணைய இதழில் வெளியான பல்வகைப்படைப்புகளும் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் போன்ற) மின்னூல்களாக தொடந்தும் ஆவணப்படுத்தப்படும்.

இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் இரு தொகுதிகள் (82  கட்டுரைகள்) & 27 ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவை இணையக்காப்பகத்தில் (archive.org) மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அவ்வகையில் வெளியாகும் மூன்றாவது கட்டுரைத்தொகுதி இத்தொகுதி.  இதுவரை வெளியான மூன்ற கட்டுரைத் தொகுதிகளிலும் 108 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மின்னூலை வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_collections_3_toc

இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள படைப்புகளின் விபரங்கள் வருமாறு:

Tuesday, October 27, 2020

பதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று) - வ.ந.கிரிதரன் -

'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பதிவுகள் இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் முதலாவது தொகுதி தற்போது மின்னூலாக இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் இணைய இதழில் வெளியான பல்வகைப்படைப்புகளும் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் போன்ற) மின்னூல்களாக தொடந்தும் ஆவணப்படுத்தப்படும்.

இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் இரு தொகுதிகள் (82  கட்டுரைகள்) ஆகியவை இணையக்காப்பகத்தில் (archive.org) மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

மின்னூலை வாசிக்க, பதிவிறக்க:  https://archive.org/details/pathivukal_research_volume1/mode/2up

பதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று) மின்னூலில் இடம் பெற்றுள்ள படைப்புகள் பற்றிய விபரங்கள்:

Saturday, October 24, 2020

பதிவுகள் கட்டுரைகள் இரு மின்னூல் தொகுதிகளாக (82 கட்டுரைகள்)

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு மார்ச் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். 

'பதிவுகள்' இணைய இதழில் ஆயிரக்கணக்கில் படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம். அதனடிப்படையில் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஆக்கங்கள் தொகுப்புகளாக வெளிவரவேண்டியது அவசியம். தற்போதுள்ள சூழலில் அவை மின்னூல்களாகவாவது ஆவணப்படுத்தப்பட வேண்டும். அவ்வடிப்படையில் இத்தொகுப்புகள் ஆவணப்படுத்தப்படுகின்றன.

'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஆரம்பகாலப் படைப்புகள் இவை. 'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்ப கால இணைய இதழ்களிலொன்று. முரசு அஞ்சல், திஸ்கி எழுத்துரு, ஒருங்குறி எழுத்துரு என்று பல்வேறு எழுத்துருக்களில் படைப்புகள் வெளியாகியுள்ளன. பாமினி போன்ற எழுத்துருக்களில் அனுப்பப்பட்ட படைப்புகளை திஸ்கிக்கு, ஒருங்குறிக்கு உருமாற்றுகையில் ஏற்படும் தவறுகள், தட்டச்சுப் பிழைகள் என இவற்றில் இன்னும் பல எழுத்துப்பிழைகள் இருக்கலாம். இருக்கும். அவற்றை வாசிப்பவர்கள் அறியத்தாருங்கள். அடுத்தடுத்த பதிப்புகளில் அவை திருத்தப்படும்.

'பதிவுகள்' சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்) மின்னூல்களாக!


"அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு , மார்ச் 2000 இலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்'. 'பதிவுகள்' இணைய இதழை http://www.geotamil.com , http://www.pathivukal.com , http://www.pathivugal.com ஆகிய இணையத் தள முகவரிகளில் வாசிக்கலாம். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான படைப்புகளை இயலுமானவரையில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் கருதி, அவை மின்னூல்களாக இணையக் காப்பகம், நூலகம் போன்ற எண்ணிம நூலகங்களில் ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில் 'பதிவுகள் 55 சிறுகதைகள்' &  'பதிவுகள் 27 சிறுகதைகள்' ஆகிய மின்னூல்கள் பதிவுகள்.காம் வெளியீடுகளாக வெளியாகியுள்ளன.

'பதிவுகள்' சிறுகதைகள் (தொகுதிகள் 1, 2 & 3) : பதிவுகள் இணைய இதழில் ஆரம்பக் காலகட்டத்தில் வெளியான சிறுகதைகளின் இரு தொகுதிகள் மின்னூல்களாக வெளியாகியுள்ளன.  'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஏனைய சிறுகதைகளும் எதிர்காலத்தில் மின்னூற் தொகுதிகளாக வெளியிடப்பட்டு ஆவணப்படுத்தப்படும். இத்தொகுப்புகளை இணையக் காப்பகம் (https://archive.org) தளத்தில் வாசிக்கலாம். முதற் தொகுதியில் 55 சிறுகதைகளும், இரண்டாம் தொகுதியில் 27 சிறுகதைகளும் , மூன்றாம் தொகுதியில் 36 கதைகளுமாக மொத்தமாக 118 சிறுகதைகள் அடங்கியுள்ளன.

Tuesday, July 14, 2020

வ.ந.கிரிதரன் மொழிபெயர்த்த ஒன்பது கவிதைகள்!

1.  கவிதை: கனவுக் குதிரைகள் (Dream Horses)!


(Walt Bresette நினைவாக)!
ஆங்கிலத்தில்: அல் ஹண்டர் (Al Hunter) - கனடியக் கவிஞர்  | தமிழில்: வ.ந.கிரிதரன்!
1

நிலவு வெளிச்சத்திற்குக்
கீழாக
விண்ணில்
எனது கனவுக் குதிரைகள்
தெற்கு நோக்கி
ஓடும்.

தெற்கு: பயணம் இங்குதான்
முடியும், அத்துடன்
தெற்கு: பயணம் இங்குதான்
மீண்டும் தொடங்கும் -
ஆத்மாக்களின்
பயணத்தில்.
தெற்காகச் செல்லும்
அடிச்சுவட்டில்
செல்லுமிடம் தெரியாமல்
ஒருவேளை
மூடப்பட்ட நதிப்
பள்ளத்தாக்கு நோக்கி
அல்லது மறைந்திருக்கும்
மலைப்பாறைகளினுச்சியின்
மேலாகச் செல்லும்
கிளைவிட்டுச் செல்லும்
பாதைகளுமுண்டு.
குதிரைகள் அங்கு
போவது கிடையாது.

Thursday, July 2, 2020

கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து / திராவிடக் கட்டடக்கலையும்! - வ.ந.கிரிதரன் -


கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன்
- கட்டடக்கலைஞர்  அஞ்சலேந்திரன் -
அண்மையில் 'Kälam / Tradition & Heritage /C.Anjalendran / The Architecture of the Tamil Hindus of Sri Lanka' என்னும் தலைப்பிடப்பட்ட , இலங்கைக் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனுடான நேர்காணலை உள்ளடக்கிய காணொளியொன்றினைப் பார்த்தேன். அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் சிலவற்றைப்பற்றிய என் கருத்துகளின் பதிவிது. காணொளிக்கான இணைப்பினை இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.
 
முன்னாள் வவுனியா பா.உ சி.சுந்தரலிங்கத்தின் பேரனும் , கட்டடக்கலைஞருமான அஞ்சலேந்திரன் புகழ்பெற்ற இலங்கை, தெற்காசியக் கட்டடக்கலைஞர்களிலொருவர். இங்குள்ள காணொளியில் அஞ்சலேந்திரன் இந்துக் கட்டடக்கலை பற்றிக் கூறிய கருத்துகளிலிருந்து அவருக்கு இந்துக்கட்டடக்கலை பற்றி மேலோட்டமான புரிதல்தான் உள்ளதோ என்று சந்தேகப்படுகின்றேன். உதாரணத்துக்கு அவர் கோயில் விமானத்தைக் கோபுரமாகக் கருதிக் கூறிய கருத்துகள்.

Thursday, June 25, 2020

கோப்பாய்க் கோட்டையின் பழைய கோலம்! - வ.ந.கிரிதரன் -

எண்பதுகளில் வீரகேசரியில் நான் எழுதிய கோப்பாய்க் கோட்டை பற்றிய கட்டுரையிது. 15-3-1981 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியானது. நண்பர்களே! கோப்பாய்க் கோட்டை பற்றி நீங்கள் அறிந்த விபரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி. இக்கட்டுரைக்கு வீரகேசரி நிறுவனத்தினர் ரூபா 35 அனுப்பியிருந்தார்கள். மறக்க முடியாது.

அக்கட்டுரை கீழே:
 
நல்லூர் நகர் பற்றி ஆராய விளைந்த போது, கட்டடக் கலை மாணவனான நான் உதவி நாடி கலாநிதி கா.இந்திரபாலாவை நாடிய போது தான், அவர் தனது சிரமத்தைப் பொருடபடுத்தாது தனது வேலைகளுக்கு மத்தியில் எனக்கு உதவினார். அபோதுதான் அவர் கோப்பாயில் அமைந்திருந்த தமிழ் மன்னர்களின் கோட்டையைப் பற்றியும் அது பற்றிய சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரை பற்றியும் கூறினார். தமிழரின் பழமை வாய்ந்த சின்னங்களின் பரிதாப நிலை கண்டு மனம் நொந்திருந்த எனக்கு அந்தக் கோட்டை அந்தக் கோட்டையின் இன்றைய நிலையைப் பார்க்க வேண்டும் போலிருக்கவே , கோப்பாய் விரைந்தேன். கோப்பாய் பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்பாயுள்ள சேர்ச்சைச் சேர்ந்த சற்குணசிங்கம் என்பவர் எனக்கு அப்பகுதியினைக் காட்டி உதவினார்.

வரலாற்றுச் சுவடுகள்: 'வானம்பாடியின் ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழ்' (ஜனவரி 1982) - வ.ந.கிரிதரன் -


'வானம்பாடி' சஞ்சிகையின் இருபத்தோராவது இதழ் ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழாக வெளியிட்டிருந்தது. கவிதைகளைத் தொகுத்திருப்பவர்கள்: சேரன், நுஃமான் & அ.யேசுராசா,

ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழ் என்றுள்ளது, ஆனால் இச்சிறப்பிதழில் சேரன், மஹாகவி, நுஃமான், அ.யேசுராசா, தா.இராமலிங்கம், ஜெயபாலன், மு.பொன்னம்பலம், வில்வரத்தினம் எனப் பலரின் கவிதைகள் ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கின்றன. எதற்காக இந்தப்பாரபட்சம்?

இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த வேறு கவிஞர்கள் எவருமேயில்லையா? கவீந்திரன் (அ.ந.கந்தசாமி), அம்பி, பிரமிள், ஜீவா ஜீவரத்தினம், சத்தியசீலன், ஏ.இக்பால், இ.இரத்தினம், சில்லையூர் செல்வராசன், மருதூர்க்கொத்தன், சாரதா, நாவற்குழியூர் நடராசன், .. என்று என்னால் மேலும் கவிஞர்கள் பலரின் சிறந்த கவிதைகளை எடுத்துக்காட்ட முடியும். கவிஞர் ஒருவரின் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைத் தொகுப்பில் சேர்ப்பதற்குப் பதில் சிறந்த கவிஞர்கள் பலரின் கவிதைகளை நிச்சயம் சேர்த்திருக்க வேண்டும். ஒரு கவிஞரின் ஒரு கவிதை தொகுப்புக்குப் போதுமானது. ஏனென்றால் தொகுப்பானது ஈழத்துத் தமிழ்க்கவிதையின் வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாகவிருக்க வேண்டுமே தவிர கவிஞர்கள் சிலரைத் தூக்கிப்பிடிப்பதாக இருக்கக் கூடாது. அதிலும் தொகுப்பாளர்களைத் தூக்கிப்பிடிப்பதாக இருக்கக் கூடாது.

வரலாற்றுச் சுவடுகள்: மறுமலர்ச்சிக்காலம் இலக்கியச் சிறப்பிதழ் - வ.ந.கிரிதரன் -

மறுமலர்ச்சிக்காலம் இலக்கியச் சிறப்பிதழ் - கலைப்பெருமன்றம் உழவர் விழா மலர் , அம்பனை, தெல்லிப்பழை - 1973 -

இலங்கைத்தமிழ் இலக்கிய உலகம் பெருமைப்படத்தக்கதொரு மலரிது . இம்மலரில் எழுத்தாளர் அ.செ.முருகானந்தனுக்குச் 'சிந்தனைச் செல்வர்'என்னும் பட்டம் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார். அவரைப்பற்றி, அவரது இலக்கியப் பணி பற்றி இலக்கிய ஆளுமைகள் பலரின் அரிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

இதற்காக தெல்லிப்பழை கலைமன்றத்தினர், மலர்க்குழுவினர் ( ஆ.சிவநேசச் செல்வன், மயிலங்கூடலூர் பி.நடராசன், பொன்.நாகரத்தினம், வை.குணாளன்) பெருமைப்படலாம். மறக்காமல் கெளரவிக்கப்பட வேண்டிய இலக்கியவாதியொருவர் கெளரவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இவ்வமைப்பும், தொகுப்பாளர்களும் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகின்றார்கள். காரணம்: அ.செ.மு பற்றிய விரிவான மலர் என்பதுடன் அவர் 'சிந்தனைச் செல்வர்' என்னும் பட்டம் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார். அவ்வகையில் இதுவரை வெளியான முதலாவதும் , ஒரேயொரு நூலும் இதுதான். (நான் அறிந்தவரை) என்பதற்காக.

'குடிவரவாளன்': புகலிடம் நாடிய இலங்கைத்தமிழ் அகதியொருவனின் நியுயார்க் மாநகரத்து வாழ்வை விபரிக்கும் நாவல் - வ.ந.கிரிதரன் -


எனது (வ.ந.கிரிதரன்) நாவலான 'குடிவரவாளன்' நாவல் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் அகதியொருவனின் நியூயார்க் மாநகரத்து வாழ்க்கையை விபரிப்பது. சட்டவிரோதக் குடியாகச் சுமார் ஒருவருடன் வரையில் அம்மாநகரில் தப்பிப்பிழைத்தலுக்காக அலைந்து திரிந்த வாழ்வை விபரிக்கும் நாவல். புகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து வெளியான , புகலிட வாழ்வை விபரிக்கும் நாவல்களில் 'குடிவரவாளன்' நாவலுமொன்று. தமிழகத்தில் ஓவியா பதிப்பாக வெளியான நாவலிது.

இந்நாவல் ஏற்கனவே வெளியான எனது சிறுநாவலான 'அமெரிக்கா' வின் தொடர்ச்சி. 'அமெரிக்கா' அமெரிக்காவில் புகலிடம் தேடி அரசியல் அடைக்கலம் நாடிய இலங்கைத்தமிழ் அகதி ஒருவனின் சுமார் மூன்று மாதம் வரையியிலான நியூயார்க் மாநகரத்தின் ஒரு பகுதியான புரூக்லின் நகரில் அமைந்துள்ள தடுப்பு முகாம் வாழ்வை விபரிப்பது. 'அமெரிக்கா' தடுப்பு முகாம் சட்டவிரோதக் குடிவரவாளன் ஒருவனின் தடுப்பு முகாம் வாழ்வை விபரித்தால், 'குடிவரவாளன்' நாவல் நியூயார்க் மாநகரின் அச்சட்டவிரோதக் குடிவரவாளனின் தப்பிப்பிழைத்தலுக்கான அலைதலை விபரிக்கும்.

கவிதை: மாநகரத்துப் பெருமழை! - வ.ந.கிரிதரன்

இருண்டிருக்கும் மாநகரத்திரவு.
இருளைக்கிழித்தொரு மின்னலின் கோடிழுப்பு.
இடியின் பேரொலி.
யன்னலினூடு பார்க்கையில் பேசாத்திரைப்படமாய்
மழைக்காட்சி விரிகிறதெதிரே.
இழந்தது உறவுகள் , உருண்டு புரண்ட மண்
மட்டுமல்ல,
இதுபோன்ற இயற்கை நிகழ்வுகளையும்தாமென்று
உணர்ந்தது உள்ளம்.
இழந்ததையெண்ணிக் கழிவிரக்கமா?
இன்னுமா?
அன்று மட்டுமல்ல,
இன்று மட்டுமல்ல,
என்றுமே இருக்கப்போகும்
உணர்வு இதுவென்றும்
உணர்ந்தேன்.
உணர்வுகளுக்கு அடை போட முடியுமா?
எதற்காக? யாருக்காக?

(பதிவுகள்.காம்) 2020: கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய கோலம்! - வ.ந.கிரிதரன் -


நாற்பதுகளில் (1940) சுவாமி ஞானப்பிரகாசர் முதல் முறையாகக் கோப்பாய்க் கோட்டை இருந்த இடத்தைக் கண்டுபிடித்து ஒரு கட்டுரையொன்றினை ஆங்கில ஆய்விதழொன்றில் எழுதியிருந்தார். எண்பதுகளில் நான் கலாநிதி கா.இந்திரபாலாவை யாழ் பல்கலைக்கழகத்தில் சந்தித்தபோது அவர் காட்டினார். அந்த ஆய்விதழ் யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் இருக்கக்கூடும். அதனடிப்படையில் நான் அக்கோட்டையிருந்த இடத்தைப் பார்க்கச் சென்றேன். என்னுடன் நண்பர் ஆனந்தகுமார் வந்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். என்னுடன் யாழ் பல்கலைக்கழகத்துக்கு அவருடனே சென்றிருந்தேன். கோப்பாய்க் கோட்டைக்குச் செல்கையிலும் அவர்தான் வந்திருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. பின்னர் அக்கோப்பாய்க் கோட்டை பற்றி எழுதி வீரகேசரிக்கு அனுப்பினேன். வீரகேசரி 15.3.1981 வாரவெளியீட்டில் அதனைப் பிரசுரித்ததுடன் சன்மானமும் (ரூபா 35) அனுப்பியிருந்தார்கள்.

Friday, June 19, 2020

மார்க் ட்வைனின் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) நாவல்! தமிழில் முனைவர் ர.தாரணி.

 

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்" - பாரதியார் -

கவிதை: கனவு நிலா - வ.ந.கிரிதரன்

கனவுநிலாவின் அழகில் நானெனை
மறந்திருந்தேன். அதன் தண்ணொளியில்
சுகம் கண்டிருந்தேன்.
நனவுமேகங்களே உமக்கேனிந்தச்
சீற்றம்? எதற்காக அடிக்கடி
எழில் நிலாவை மூடிச்செல்ல
முனைகின்றீர்கள்?
நீங்கள் மூடுவதாலென்
கனவுநிலாவின் எழில்
மறைவதில்லை.
நினைவுவானில்
நீந்திவரும் நிலவை
யாரும் மூடிட முடியாது.
நனவுமேகங்களே!
உம்மாலும்தாம்.
பார்க்கும் ஒரு  கோணத்திலும்மால்
மூட முடிவதுபோல் தெரிவதெல்லாம்
முழு உண்மையல்ல.
பின்னால் மறுகோணத்தில்
நனவுவானில் நடைபயிலும்
முழுநிலவின் நடையழகை
யார்தான் தடுக்க முடியும்.
இரசிப்பதை யார்தான் தடுக்க முடியும்.
கனவுநிலவினெழிலில்
களித்திருக்குமெனை யார்தானிங்கு
தடுக்க முடியும்?'

வரலாற்றுச் சுவடுகள்: நல்லூர் மந்திரிமனை - வ.ந.கிரிதரன் -

    இங்குள்ள 'மந்திரிமனை'  ஓவியத்தை வரைந்திருப்பவர் ஓவியர் பிருந்தாயினி தீபனா. இதனைக் கட்டடக்கலைஞர் மயூரநாதன் அவர்கள் 'யாழ்ப்பாண நகரம் - 400' குழுமத்தில்  பகிர்ந்துகொண்டிருந்தார். அவ்வோவியத்தை இப்பதிவுக்காக நன்றியுடன் பாவிக்கின்றேன்.

'மந்திரிமனை' என்னும் இக்கட்டடம்  பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான வரலாற்றுச் சின்னங்களிலொன்று.  இக்கட்டடத்தின் முகப்பிலுள்ள தகவல்களின்படி இக்கட்டடம் 1890இல் கட்டப்பட்ட விபரமும், ஒரு குடும்பத்துக்குரியதென்பதும்  தெரிய வரும். ஆனால் இக்கட்டடம் முக்கியத்துவம் பெறுவது பின்வரும் காரணங்களினால்:

Wednesday, May 20, 2020

பத்துநாட்கள் - பத்து திரைப்படங்கள் (1): - சத்யஜித் ரேயின் 'சாருலதா' - வ.ந.கிரிதரன் -


முகநூலில் பத்து நாட்களுக்குத் தொடர்ச்சியாகப் பத்து திரைப்படங்களை  பதிவிட்டு ஞாபகப்படுத்த வேண்டும் என்று நண்பர் பரதன் நவரத்தின் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று நாளொன்றுக்கு ஒவ்வொரு திரைப்படம் பற்றிய விபரங்களைப் பதிவு செய்து வருகையில் ஏன்  அத்திரைப்படங்களைப் பதிவுகள் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தக் கூடாது என்று தோன்றியது. இத்தருணத்தை இயக்குநர் சத்யஜித் ரேயின் திரைப்படங்களில் யு டியூப்பில் கிடைக்கும் அனைத்தையும் பார்ப்பதற்கு முடிவு செய்தேன். அவ்வகையில் முதலாவதாக அறிமுகம் செய்யும் திரைப்படம் அவரது 'சாருலதா' திரைப்படம்.

நல்லதொரு திரைப்படம் எவ்வகையில் அமைந்திருக்க வேண்டுமென்பதற்கு உதாரணங்களாக அமைபவை அவரது திரைப்படங்கள். திரைப்படமொன்றின் இயக்கம், கதை, ஒளிப்பதிவு, நடிப்பு , திரைக்கதை & இசை இவை யாவுமே எவ்விதம் அமைய வேண்டுமென்பதற்கு உதாரணங்களாக அமைபவை அவரது திரைப்படங்கள். பாத்திரங்களுகேற்ற சிறந்த , பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதுடன் அவர்களை எவ்விதம் இயக்க வேண்டுமென்பதை இன்றுள்ள இயக்குநர்கள், சினிமாத்துறைப் பல்வகைக் கலைஞர்களும் அறிந்துகொள்ள வேண்டும்.

Tuesday, April 21, 2020

பதிவுகள் இணைய இதழ்


'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு , 2000ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்'. 'பதிவுகள்' இதழை http://www.geotamil.com , http://www.pathivukal.com & http://www.pathivugal.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். 'பதிவுகள்' மேலும் பல ஆக்கங்களுடன் வெளியாகியுள்ளது. உங்கள் ஆக்கபூர்வமான எண்ணங்களை, படைப்புகளை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

'பதிவுகள்' இதழில் தற்போது மார்க் ட்வைனின் புகழ்பெற்ற நாவலான 'ஹக்கிள்பெர்ரிஃபின் சாகசங்கள்' நாவல் முனைவர் ர.தாரணியின் தமிழ் மொழிபெயர்ப்பில் தொடராக வெளியாகின்றது.

மேலும் ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் & கட்டுரைகள் எனப் பல்வகை ஆக்கங்களுடன் வெளியாகியுள்ளது 'பதிவுகள்'.

Wednesday, March 18, 2020

அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'யூத -அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல்' என்னும் 'இன்ஸான்' பத்திரிகைக் கட்டுரை பற்றி..

அறிஞர்  அ.ந.கந்தசாமி அவர்கள் இன்ஸான் பத்திரிகையில் 'யூத -அரபு  பற்றி பேட்ரண்ட் ரஸல்'என்றொரு கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரையானது இன்ஸான் பத்திரிகையில் 21.7,1967 , 28.7.1967 ஆகிய திகதிகளில் 'யூத - அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல்' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது.  பேட்ரண்ட் ரஸலின் நூல்களிலிருந்து யூத அராபிய உறவு பற்றிய பேட்ரண்ட் ரஸலின் கருத்துகளை ஆராய்ந்து அ.ந.க எழுதிய கட்டுரை.

இக்கட்டுரை இன்ஸான் பத்திரிகையில் இரண்டு பகுதிகளாக இரு வாரங்கள் வெளியாகியுள்ளது. இக்கட்டுரை பற்றி அந்தனி ஜீவா அவர்கள் தினகரன் பத்திரிகையில் அ.ந.கந்தசாமி பற்றி எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் (தினகரன் வாரமஞ்சரியில் 12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடர்) "அ.ந.க. அறிஞர் பெர்னாட்ஷா முதல் பேரறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் வரை அறிந்து வைத்திருந்தார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை 'இன்ஸான்' வார இதழில் தொடர்ந்து எழுதினார். " என்று கூறுவார்.  உண்மையில் பெட்ரண்ட் ரஸலின் யூத அராபிய உறவுகள் என்பதற்குப் பதிலாக 'யூத அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல் ' என்றிருக்க வேண்டும். 'பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' பேட்ரண்ட் ரஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்னுமொரு கட்டுரை பற்றிய அ.ந.கந்தசாமியின்  கட்டுரையாக அதனை விளங்கிக்கொள்ளும் அபாயமுண்டு.

Saturday, March 14, 2020

உள்ளங் கவர்ந்த கானங்கள்: "வாழ்க்கை ஒரு ஒட்டகம்; நொண்டி ஒட்டகம்"


"வாழ்க்கை ஒரு ஒட்டகம்
நொண்டி ஒட்டகம்
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்" - கவிஞர் விவேக் வேல்முருகன் -

வாழ்க்கையை நொண்டி ஒட்டகத்துக்கு உருவகிக்கும் கவிஞரின் கவித்துவம் இப்பாடலின் முதல் வரியிலேயே என்னைக் கவர்து விட்டது.

பாடகர் பென்னி தயாலின் குரலை ஏற்கனவே விஜயின் 'அழகிய தமிழ் மக'னில் கேட்டு இரசித்தவன். இப்பொழுதெல்லாம் புற்றீசல்கள்போல் தமிழ்த்திரைப்படங்கள் வெளிவருவதால் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. அன்று வருடத்துக்கு வெளியாகும் தமிழ்த்திரைப்படங்கள் எல்லாமே நினைவில் நிற்கும். அவற்றின் நடிகர்களும் , பாடகர்களும் நினைவில் நிற்பார்கள். ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. யார் பாடினார்? எந்தப் படத்தில் பாடல் இடம் பெற்றது? யார் நடித்தது? ஒன்றுமே தெரிவதில்லை. இதற்குத் தலைமுறை இடைவெளி முக்கிய காரணமென்று நினைக்கின்றேன் :-) 

Friday, March 13, 2020

காற்றினிலே வரும் கீதம்: "எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று"

"எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று   
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு   
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு  "
- கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவுக்குத் தேசிய விருது பெற்றுக்கொடுத்த இன்னுமொரு பாடல்.  ஒரு கவிஞரின் வரிகளுக்கு விருதுகளைப்பெற்றுக் கொடுப்பவை அவரது வரிகள் மட்டுமல்ல. அதனைப்பாடிய பாடகர்களின் குரல்கள், இசை, ஒளிப்பதிவு & நடிப்பு எல்லாமேதாம்.

இப்பாடலினை இருவர் பாடியிருந்தாலும் , பாடலின் அதிக பகுதியை எடுத்துக் கொண்டிருப்பவர் பாடகி சின்மயி. சின்மயி தற்போதுள்ள பாடகிகளில் மிகச்சிறந்த பாடகியாக நான் உணர்வதுண்டு. அதற்குக் காரணம் வரிகளை உள்வாங்கி, உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் குரல் அவருடையது. கேட்டுப்பாருங்கள். நெஞ்சைக் கிழித்துக்கொண்டு அதன ஆழத்துக்கே செல்லும் குரல் சின்மயினுடையது.

முனைவர் ஆர்.தாரணியின் கட்டுரையொன்று பற்றி... வ.ந.கிரிதரன் -


எனது நாவலான தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான  'குடிவரவாளன்' நாவல் பற்றி பற்றி முனைவர் ஆர்.தாரணி ‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' ('சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை') என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே எனது படைப்புகள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைக் கருத்தரங்குகளில் சமர்ப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் என் படைப்புகளை அறிந்துகொண்டது இணையத்தின் மூலமாகவே என்பது இணையத்தின் ஆக்கபூர்வமான நன்மையொன்றினை வெளிப்படுத்துகின்றது. அக் கட்டுரையின் முக்கியமான என்னால் தமிழாக்கம் செய்யப்பட்ட பகுதிகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். நாவலினை நன்கு உள் வாங்கித் தன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி.

இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'An Immigrant' (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) நாவலைத் தனது புகலிட இலக்கியங்கள் பற்றிய பிரிவுக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வு செய்திருந்த விடயத்தினை இணையம் வாயிலாக அறிந்துள்ளேன். குடிவரவாளன் நாவல் ஆங்கிலத்தில் 'An Immigrant' என்னும் தலைப்பில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' ('சுயசரிதைத் தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை') -  முனைவர் ஆர்.தாரணி; தமிழில்: வ.ந.கிரிதரன்  - 

'குடிவரவாளன்' கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப் பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும்  போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப் படுகொலையினைத் தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது.  நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில்  , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ  அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.

Wednesday, March 4, 2020

காலத்தால் அழியாத கானங்கள்: "பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர"

"பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்....
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்

ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே" -
கவிஞர் மேத்தா




அவ்வப்போது எழுத்தாளர்கள் திரையுலகையும் எட்டிப்பார்க்கத் தவறுவதில்லை; தடம் பதிக்கத்தவறுவதில்லை. கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணாத்துரை, சுஜாதா, ஜெயமோகன், பாலகுமாரன், விந்தன் என்று பலரைக்குறிப்பிடலாம். அவர்களில் கவிஞர் மேத்தாவும் ஒருவர். ரஜனிகாந்த்தின் 'வேலைக்காரன்' திரைப்படப்பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. 'உதயகீதம்' திரைப்படப்பாடலான இப்பாடலையும் அவர்தான் எழுதியிருக்கின்றார்.

காலத்தால் அழியாத கானங்கள்: "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே"



இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் எனக்குக் காற்சட்டையும், சேர்ட்டுமாகப் பால்ய காலத்தில் வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டம் நினைவுக்கு வரும். உண்மையில் இப்பாடலை முதலில் கேட்டபோது நான் நண்பர்களுடன் வவுனியா நகரசபை மைதானத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் பல்வேறு வழிகளில் திரும்புவது வழக்கம். அதிலொரு வழி நகரசபை மண்டபத்துக்குப் பின்புறமாக , புகையிரத இருப்புப்பாதைக்குமிடையில் மரங்கள் நிறைந்திருந்த பகுதியினை ஊடறுத்துச் சென்ற பாதை. அப்பாதை வழியாக காமினி வித்தியாயலயத்துக்கு முன்புறமாகச் சென்று கொண்டிருந்த மன்னார் வீதிக்கு வர முடியும்.

கணையாழி: 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை' - வ.ந.கிரிதரன் -

2020 மார்ச் மாதக் கணையாழி இதழில் எனது கட்டுரையான 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை' நாவல் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது . கூடவே நண்பர் கே.எஸ்.சுதாகரின் 'தலைமுறை தாண்டிய தரிசனங்கள்' சிறுகதையும் வெளியாகியுள்ளது. எனது கட்டுரையின் பக்கங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

இதுவரை கணையாழி சஞ்சிகையில், தொகுப்பு நூலில் வெளியான எனது ஏனைய படைப்புகள்:
1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை
மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
3. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்- (கணையாழி மே 2012)
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7. கணையாழி செப்டம்பர் 2017: கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயின் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -

Wednesday, February 26, 2020

கவிதை: வேற்றுலக வாசியுடனோர் உரையாடல் (1) - வ.ந.கிரிதரன் -



ஊர்துஞ்சும் நள்ளிரவு.
விரிவெளி பார்த்திருந்தேன்.
இரவுவான்!
புட்களற்ற மாநகரின் நள்ளிரவு
நத்துகள் ஒலியேதுமில்லை. ஆந்தைகளின் அலறல்கள் எங்கே?
வெளவால்கள்தம் சலசலப்புமில்லை.
வாகன இரைச்சல் மட்டும்
சிறிது தொலைவில்
சிறிய அளவில்.
உப்பரிகையின் மூலையில்
தூங்கும் மாடப்புறாக்களின்
அசைவுகள்
அவ்வப்போது கேட்கும் சூழல்.
விரிவெளியில் சுடரும் ஒளிச்சிதறல்கள்
பல்வகை எண்ணங்கள் நெஞ்சில்.
எங்கோ ஒரு கோடியில் இங்கு
நான்.
அங்கு
நீ!
எங்கே?
சாத்தியமுண்டா?

Tuesday, February 25, 2020

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): "அறிந்தால் அறிவியடி அருவியே!"


கண்ணம்மா! அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடி நம்காலவெளி.
ஆம்!
கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடி.
கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணம்மா!
கண்ணம்மா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடி!
இருப்புப்பற்றி இங்கு நினைப்பதிலுண்ட
இன்பம் வேறொன்றுண்டோ கண்ணம்மா.
காலவெளியடி கண்ணம்மா! நீ என்
காலவெளியடி கண்ணம்மா!

Saturday, February 22, 2020

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (18) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை

[ இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'அமெரிக்கா' தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட 'பனையும் பனியும்' சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.]

முதலில் தாயகம் (கனடா) பத்திரிகையில் 'ஒரு மாட்டுப்பிரச்சினை' என்னும் தலைப்புடன் வெளியாகியது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பானது (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) இலண்டலிலிருந்து வெளியாகும் 'தமிழ் டைம்ஸ்' ஆங்கில இதழில் வெளியாகியுள்ளது.]

ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட்' 'சென்ற்கிளயர்' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித 'டென்ஷ'னுமின்றிப் பின்னால் 'ஹோர்ன்' அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'ஹோர்ன்' அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. 'நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை' இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். 'நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்' என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடனும் அவன் சிந்தித்துக் கொள்வான்.

Tuesday, February 18, 2020

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (5): காலவெளிக் கைதிகள்!


காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா அவன்போல்
சிந்திக்க விரும்புகின்றேன்.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே என்றான் கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையென்றுரைத்தான்.
அவனறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேன்.
மனத்து அசை இன்னும் முடியவில்லை.
எப்பொழுதென்றாயினும் நீ கண்ணம்மா
எவ்விதம் அவனால் முடிந்ததென்று
எண்ணியதுண்டா ?
நான் எண்ணுகின்றேன் எப்பொழுதும் கண்ணம்மா.\
நான் வியந்துகொண்டிருக்கின்றேன் எப்பொழுதும்
கண்ணம்மா..
நான் எண்ணுவேன் எப்பொழுதும் கண்ணம்மா.
நான் வியந்துகொண்டிருப்பேன் எப்பொழுதும் கண்ணம்மா.

Monday, February 17, 2020

தொடர் நவீனம் 'மனக்கண்' முடிவுரை! அறிஞர் அ.ந.கந்தசாமி -


- அ.ந.கந்தசாமி  மனக்கண் நாவல் தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப்பெற்றது. பின்னர் அந்நாவலை அவரது நண்பர் எழுத்தாளர் சில்லையூர் செல்வராசன் இலங்கை வானொலியில் தொடர் நாடகமாக்கி ஒலிபரப்பினார். மனக்கண் நாவல் பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் தொடராக வெளியானது. மனக்கண் நாவல் தொடராக வெளியானபோது அமரர் ஓவியர் மூர்த்தியின் அழகான ஓவியங்களுடன் வெளியாகியது. நாவலின் முடிவில் அ.ந.க எழுதிய முடிவுரை சிறப்பானதோர் ஆய்வுக்கட்டுரை. எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளிலொன்று. ஓவியர் மனக்கண் நாவலுக்குத் தீட்டிய ஓவியங்கள் சிலவற்றையும், அ.ந.க மனக்கண்  நாவலுக்கு எழுதிய முடிவுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். -

தொடர் நவீனம் 'மனக்கண்' முடிவுரை!  அறிஞர் அ.ந.கந்தசாமி 

-1966ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாதம் ‘மனக்கண்’ தொடர் நவீனம் மூலம் வாசகர்களுக்கும் எனக்கும் உண்டான தொடர்புகள் சென்ற வாரம் ஒரு முடிவுக்கு வந்தன. அதாவது, எட்டு மாதங்களாக வாரந் தவறாது நிலவிய ஓர் இனிய தொடர்பு சென்ற பெளர்ணமித் தினத்தன்று தன் கடைசிக் கட்டத்தை அடைந்தது. கதை என்ற முறையிற் பார்த்தால் மனக்கண் சற்று நீளமான நாவல்தான் என்றலும் உலக நாவல்களோடு ஒப்பிடும்போது அதனை அவ்வளவு நீளம் என்று சொல்லிவிட முடியாது. கிரேக்க கவிஞனான களீமாச்சன் (Callimachun) “ஒரு பெரிய புஸ்தகம், ஒரு பெரிய பீடை” என்று கூறியிருக்கிறான். அவன் கூற்றுபடி பார்த்தால் என்னுடைய நாவல் ஒரு நடுத்தரமான பீடையே. ஏனென்றால், நாவல் என்பது ஒரு சீரிய இலக்கியத் துறையாக வளர்ச்சியடைந்துள்ள மேல் நாடுகளில் பொதுவாக நாவல்கள் 20,000 வார்த்தைகளில் இருந்து 20 இலட்சம் வார்த்தைகள் வரை நீண்டவையாக வெளி வந்திருக்கின்றன. யார் அந்த 20 இலட்சம் வார்த்தை நாவலை எழுதியவர் என்று அதிசயிக்கிறீர்களா? பிரெஞ்சு நாட்டின் புகழ்பெற்ற நாவலாசிரியரான மார்சேல் புரூஸ்ட் (Marcel Proost) என்பவரே அந்த எழுத்தாளர். நாவலின் பெயர் “நடந்ததின் நினைவு” (Remembrance of the past). ஆனால் புரூஸ்ட் மட்டும் தான் இவ்வாறு நீண்ட நாவல்களை எழுதினார் என்று எண்ணி விட வேண்டாம். உலகத்தின் மிகச் சிறந்த நாவல் என்று கருதப்படும் (War and peace) “யுத்தமும் சமாதானமும்” லியோ டால்ஸ்டாய் எழுதியது. விக்டர் ஹியூகோவின் (Les miserables) “ஏழை படும் பாடு” என்பனவும் குறைந்தது ஏழெட்டு இலட்சம் வார்த்தைகள் கொண்ட பெரிய நாவல்கள் தான். இவர்களில் முன்னவர் ருஷ்யாக்காரர். மற்றவர் பிரான்சைச் சேர்ந்தவர். இவர்களைப் போலவே ஆங்கிலத்தில் ஹோன்றி பீல்டிங் (Henry Fielding) நீண்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். இவரது “டொம் ஜோன்ஸ்” (Tom Jones) பதினெட்டு பாகங்களைக் கொண்டது. இதில் இன்னொரு விசேஷமென்னவென்றால் இந்தப் பதினெட்டுப் பாகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விசேஷ முன்னுரையும் அவரால் எழுதப்பட்டது. தமிழில் இவ்வாறு நீண்ட நாவலெழுதியவர் “கல்கி”.

நான் இங்கே எடுத்துக் காட்டிய நாவலாசிரியர் எவருமே சாதாரணமானவரல்லர். உலக இலக்கிய மண்டபத்திலே தம் சிலையை நிலையாக நிறுவிச் சென்றிருக்கும் பேனா உலகின் பெரியவர்கள் இவர்கள். இவர்கள் எவருமே சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் தம் கவனத்தைச் செலுத்தவில்லை. தாம் சொல்ல விரும்பிய பொருளை விரிவாக எடுத்துரைப்பதிலேயே இவர்கள் தம் புலனைச் செலுத்தினார்கள். பாரதம் பாடிய வியாசர் ஓர் இலட்சத்து இருபதினாயிரம் சுலோகங்களில் தம் கதையை விரித்துரைத்தது போல இவர்களும் தாம் கூற வந்த கதைகளை அமைதியாகவும், ஆறுதலாகவும் சாங்கோபாங்கமாகவும் எடுத்துச் சொல்லிச் செல்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் பாரகாவியமும் நாவலும் ஒன்றென்றே நான் கருதுகிறேன் - ஒன்று வசனம், மற்றது கவிதை என்ற வித்தியாசத்தைத் தவிர, பாரகாவியம் எப்பொழுதுமே அவசரமாகக் கதையைச் சொல்லத் தொடங்குவதில்லை. நாட்டு வர்ணனை, நகர வர்ணனை, பருவ வர்ணனை என்று மெதுவாகவே அது கிளம்பும். காரின் வேகம் அதற்கில்லை. தேரின் வேகமே அதற்குரியது. வழியிலே ஒரு யுத்தக் காட்சி வந்ததென்று வைப்போம். உதாரணத்துக்கு வியாச பாரதத்தை எடுத்தால் பதினேழு நாள் யுத்தம் நடந்தது - பாண்டவர் வென்றனர் - கெளரவர் தோற்றனர் என்று மிகச் சுருக்கமாகவே அதனைக் கூறியிருக்கலாமல்லவா? ஆனால் அவ்வாறு எழுதினால் கதாநிகழ்ச்சியை நாம் புரிந்து கொண்டாலும் யுத்தத்தின் அவலத்தையும் வெற்றி தோல்வியையும் நேரில் பார்த்தது போன்ற உணர்ச்சி நமக்கு ஏற்படாது. அந்த உணர்ச்சி நமக்கு ஏற்படும் வரை பொறுமையாக விவரங்களை ஒன்றின் பின்னொன்றாக சலிப்பின்றி எடுத்துக் கூறி நிற்கும் ஆற்றல் பெற்றவனே பாரகாவியஞ் செய்யும் தகுதியுடையவன்.  நல்ல நாவலாசிரியனுக்கும் இப் பண்பு இருக்க வேண்டும்.

(பதிவுகள்.காம்) நான் ஏன் எழுதுகின்றேன்? - அ.ந.கந்தசாமி -

- எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களின் நினைவு தினம் பெப்ருவரி 14. அதனையொட்டி இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. அறிஞர் அ.ந.க.வின் 'நான் ஏன் எழுதுகிறேன்?' என்னுமிக் கட்டுரை ஏற்கனவே 'தேசாபிமானி', 'நுட்பம் (மொறட்டுவைத் தமிழ்ச் சங்க வெளியீடு), பதிவுகள் ஆகியவற்றில் வெளிவந்த படைப்பு இக் கட்டுரை அ,ந,கந்தசாமியின் ஆளுமையை நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றது. அவரது இலக்கியக்கோட்பாடுகளினூடு அவரது எழுத்துகளை அறிமுகப்படுத்துகின்றது. இக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் அவரது ஆரம்ப காலக் கவிதையான 'சிந்தனையும் மின்னொளியும்' எனக்கு மிகவும் அவரது கவிதைகளிலொன்று. தமிழில் வெளியான சிறந்த மழைக் கவிதைகளிலிலொன்றும் கூட. அக்கவிதையில் வரும் "என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன். மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும். வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்" என்னும் வரிகள் இக்கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளென்பேன். .அக்கவிதையை முழுமையாகக் கட்டுரையின் முடிவில் இணைத்துள்ளேன். - வ.ந.கி -

அ.ந.க பற்றிய மேலதிக  விபரங்களுக்கு:

1. கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன் -
https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=773:2012-05-02-04-09-38&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

2. அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை - வ.ந.கிரிதரன் (இலக்கியபூக்கள் தொகுப்பு ஒன்று நூலில் வெளியான கட்டுரை. எழுத்தாளர் முல்லை அமுதன் வெளியிட்ட நூலிது.) https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1076:2012-10-01-09-11-17&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

3. நூலகம் தளத்தில் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம் (நாடகம்), வெற்றியின் இரகசியங்கள் (உளவியல் நூல்) ஆகியன பதிவு செய்யப்பட்டுள்ளன.  அதற்கான இணைப்பு: http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF,_%E0%AE%85._%E0%AE%A8

4. பதிவுகள் இணைய இதழ் வெளியிட்ட அ.ந.கந்தசாமியின் கவிதைகள் மின்னூலை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்: http://aavanaham.org/islandora/object/noolaham%3A25302
5. பதிவுகள் இணைய இதழ் வெளியிட்ட அ.ந.கந்தசாமியின்  'மனக்கண்' நாவல் மின்னூலையும் நூலகம் தளத்தில் வாசிக்கலாம்: http://aavanaham.org/islandora/object/noolaham%3A25301

6. 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்'  -அந்தனி ஜீவா - https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3171:2016-02-12-08-57-30&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19

7. (சிறுகதைகள்.காம்) அ.ந.கந்தசாமி சிறுகதைகள் சில: http://www.sirukathaigal.com/tag/%E0%AE%85-%E0%AE%A8-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/
அ.ந.கந்தசாமி பக்கம் (பதிவுகள்.காம்) - வாசிக்க https://www.geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=25&Itemid=47


கட்டுரை: நான் ஏன் எழுதுகின்றேன்?  - அ.ந.கந்தசாமி -

அப்பொழுது எனக்குப் பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது. உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும், துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்துவிட வேண்டுமென்று பேராசைகொண்ட காலம். காண்பதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும், வாழ்க்கை ஒரு வானவில் போலவும் தோன்றிய காலம்.  மின்னலோடு உரையாடவும், தென்றலோடு விளையாடவும் தெரிந்திருந்த காலம். மின்னல் என் உள்ளத்தே பேசியது. இதயத்தின் அடியில் நனவிலி உள்ளத்தில் புகுந்து கவிதை அசைவுகளை ஏற்படுத்தியது. பலநாள் உருவற்று அசைந்த இக்கவிதா உணர்ச்சி ஒருநாள் பூரணத்துவம் பெற்று உருக்கொண்டது. எழுத்தில் வடித்தேன். "சிந்தனையும் மின்னொளியும்" என்ற தலைப்பில் இலங்கையின் ஓப்புயர்வற்ற இலக்கிய ஏடாக அன்று விளங்கிய 'ஈழகேசரி'யில் வெளிவந்தது. இக்கவிதை ஒரு காரியாலயத்தில் மேசை முன்னுட்கார்ந்து என்னால் எழுதப்பட்டதல்ல. இயற்கையோடொன்றிய என் மனதில் தானே பிறந்த கவிக்குழதை இது. எனினும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இலக்கிய சித்தாந்தங்கள் பலவற்றை ஆராய்ந்து நான் என்ம்னதில் ஏற்றுக் கொண்ட அதே கருத்துகளின் சாயலை இக்கவிதையில் என்னால் இன்று காண முடிகிறது.

Saturday, February 15, 2020

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள் 4 ; காலவெளிக்காட்டி வல்லுனன்!

 

காலவெளிச் சட்டங்களைக் கோத்து
உருவானதிந்த இருப்படி கண்ணம்மா!
இவ்விருப்புமொரு காலவெளிப் படம்
என்பதையுணர்வாயாயடி நீ!
என்னாசையொன்றுள்ளதென்பேன்.
என்னவென்று நீ அறியின் நகைக்கக்கூடும்.
ஒருபோதில் ,உணர்வுகள் கிளர்தெழுந்த
பருவத்தினொரு போதில்
உனைப்பார்த்த உணர்வுகளுளவே.
அவ்வுணர்வினைப் பிரதிபலிக்கும் காட்சியுமுளவே.
அப்போது கண்ணம்மா! அதிகாலைநேரம்.
ஆடியசைந்து நீ வந்தாய் பொழுதின் எழிலென.
நினைவுள்ளதா? இருக்கிறதெனக்கு.
மார்புற நூல்தாங்கி, முகம் தாழ்த்தி
நடந்து வந்தாய்; அது உன் பாணி.
நிலம்பார்த்து நடக்குமுனக்கு
முறையா நடப்பதற்கு,
நேரெதிர்க் காட்சிகள்
தெரிவதெப்படி என்று வியப்பதுண்டு அப்போது.
இருபுறம் பிரிகுழல் இடைவரை
இருந்தசைய ,
பொட்டிட்ட வதனத்தில் நகையேந்தி நீ'
நடந்துவருமெழிலில் பொழுது சிறக்கும்.
ஒருபோதில் வழக்கம்போல் அசைந்து சென்றாய்
அதிகாலைப்பொழுதொன்றில்.
அவ்விதம் சென்று சந்தி திரும்புகையில்
ஓரப்பார்வைக்கணை தொடுத்துச் சென்றாய்.
நினைவிருக்கிறதா? ஆனால் எனக்கு
இருக்கிறதடி.
அக்கணத்தைச் சிறைப்படுத்தி ஆழ்மனத்தினாழத்தே
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.
அதற்கு எப்போதுமில்லையடி
விடுதலை/ ஆயுள் தண்டனைதான்.
இருக்கும் வரை அதனாயுள் அங்குதான்.

Sunday, February 9, 2020

வ.ந.கிரிதரன் புகலிடக் கதைகள் (17) : ஆசிரியரும் மாணவனும்


இச்சிறுகதை அமரர் எழுத்தாளர் குகதாசன் இதழாசிரியராகவிருந்த சமயம் வெளியான யாழ் இந்துக்கல்லூரிச் (கனடா) சங்கம் வெளியிட்ட 'கலையரசி' மலருக்காக எழுதப்பட்ட சிறுகதை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. சிறுகதைகள்.காம் இணையத்தளத்திலும் இடம் பெற்றுள்ளது.-

யன்னலினூடு தெரிந்த அதிகாலை வானத்தைப் பார்த்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். மெல்லிய இருட்போர்வையின் அரவணைப்பில் சுகம் கண்டுகொண்டிருந்த பூமிப் பெண்ணிற்கு உறக்கத்தை விட்டெழுவதற்கு இன்னும் மனம் வராமல் அப்படியே படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருப்பது போல் பட்டது. விடிவெள்ளி பிரகாசத்துடன் விடிவை கட்டியம் கூறி வரவேற்றுக் கொண்டிருந்தது. ஊரில் இருந்த மட்டும் அவரிற்கு மிகவும் பிடித்தமானவை அதிகாலையில் எழுந்து கல்லுண்டாய் வெளியினூடாக நடந்து வருவதும், விடிவெள்ளியின் அழகில் மெய் மறப்பதும் தான்."மாஸ்ட்டர், மாஸ்ட்டர்" என்று எவ்வளவு பெரிய பெருமை அவரிற்கு."படிப்பிற்கு மாஸ்ட்டரின் பிள்ளைகளைக் கேட்டுத்தான்" என்று கதைப்பார்கள்.'வர மாட்டேன், வர மாட்டேன்' என்றிருந்தவரை மகன் தான் வற்புறுத்தி கனடா வரவழைத்திருந்தான். வந்து ஒரு வருடத்திற்குள்ளேயே அவரிற்கு வாழ்க்கை போதும் போதுமென்றாகி விட்டது. நான்கு சுவர்களிற்குள்ளேயே வாழக்கை அதிகமாகக் கழிகின்றது. இயற்கையை இரசித்து ஆனந்தமாகப் பறந்து கொண்டிருந்த பறவையைப் பிடித்துக் கூட்டினுள் அடைத்து வைத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அவர் நிலை.

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள் (3): காலவெளி மீறிய கவிஞனடி கண்ணம்மா!


நேற்று -இன்று - நாளை என்று
காலத்தின் ஒரு திசை பயணத்தில்
மீளுதல் சாத்தியமற்றதா? ஆயின்
'அறிவுணர்'வுக்கு அது இல்லை. ஆம்!
அது இல்லை. எது?
ஆம்! அதுதான். அதுதான்.ஆம்!
அது இல்லை.
தயக்கமெதுவற்று அதனால் தங்குதடையின்றிப்
பயணிக்க முடியும்.
நேற்று - இன்று - நாளை
காலத்தின் அர்த்தமற்றதொரு நிலை
'அறிவுணர்'வுக்குண்டு.
குவாண்டம் நுரையில் கிடக்கும் இருப்பில்
நேரத்துக்கும் அர்த்தமுண்டோ?
அங்கு அனைத்துமே சம காலத்தில்
இருப்பன. அறிவாயா கண்ணம்மா!
காலமே காலமாகி விட்ட நிலைதான்
குவாண்டம் நிலை. ஆம் ! அந்த நிலை.
என் 'அறிவுணர்'வு கொண்டு
என்னால் எங்கும் பயணிக்க முடியும் கண்ணம்மா!
உனக்கது புரியுமா?

நடிகர் நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) நினைவாக...

அண்மையில் தனது நூற்றி மூன்றாவது வயதில் மறைந்த நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) உலகச்சினிமாவில் முக்கியமானதோர் ஆளுமை. மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்குக் கிடைக்காத அவ்விருது இவரது மகன் மைக்கல் டக்ளசுக்குக் கிடைத்தது. ஆனால் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பின்னர் கிடைத்தது. இவர் இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகத்திறமை மிக்க நடிகர்களிலொருவர்.
இவரை நினைத்தாலே முதலில் நினைவுக்கு வருவது ஸ்டான்லி கூப்ரிக்கின் இயக்கத்தில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த ஸ்பார்ட்டகஸ் திரைப்படமே . அதில் அவர் ரோமானிய அடிமைகளிலொருவராக நடித்திருப்பார். அடுத்து ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் லஸ்ட் ஃபோர் லைஃப் (Lust for Life - வாழ்வுக்கான காமம்) .ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் அவர் அதற்காக ஆஸ்காரின் சிறந்த நடிகர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Wednesday, February 5, 2020

வ.ந.கிரிதரன் புகலிடச்சிறுகதைகள் (16) ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்'

தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நு¡லகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நூலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நூலகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நூலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்குச் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.

" என்ன தூக்கக் கலக்கமா " என்றேன்.

" இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு" என்று கூறிச் சென்றான்.

சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

Tuesday, February 4, 2020

வ.ந.கிரிதரனின் புகலிடக் கதைகள் (15): மனைவி!


- திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியான சிறுகதை. 'ஈழநாடு (கனடா) இதனை மீள்பிரசுரம் செய்திருந்தது. -

இரவு மணி பதினொன்றினை நெருங்கிக் கொண்டிருந்தது. யன்னலினூடி கட்டட முனிகள் தவமியற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஓட்டியற்ற ஓடமாகப் பிறை நிலவு. பலகணியில் அடைந்திருந்த புறாக்கள் சில அசைந்தன. அடுத்த அப்பார்ட்மென்ட்லிருந்த இதுவரை கத்திக் கத்தி யுத்தம் புரிந்து கொண்டிருந்த யமேய்க்கனும் அவனது வெள்ளைக் காதலியும் சற்று முன்னர் தான் சப்தமிழந்து ஓய்ந்து போனார்கள். மனோரஞ்சிதத்தின் நெஞ்சுப்புற்றிலிருந்து ஞாபகப் பாம்புகளெழுந்து படம்விரித்தாடின. முன்றிலில் சாய்வு நாற்காழியில் சாய்ந்திருக்கும் அப்பாவின் சாறத்தைக் கதிரையாக்கி அப்பாவுடன் சேர்ந்து அவளும் விரிந்து கிடக்கும் விண்ணின் அழகில் மனதொன்றிக் கிடப்பதிலெவ்வளவு சந்தோசம்! நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வான் அவளது நெஞ்சில எப்பொழுதுமேயொரு வித புதிர் கலந்த பிரமிப்பினை ஏற்படுத்தி விடும். அண்ணாந்து பார்க்கும் போது விரிந்து கிடக்கும் வெளியின் ஒரு பகுதியாக அந்தரத்தில் மிதந்து இயங்கும் இன்னொரு சுடராகத் தன்னையுணர்வாள். அச்சமயங்களில் இளகிக் கிடக்கும் மனது...நீண்ட பல வருடங்களிற்குப் பின்னால் வருகை தந்திருந்த நீண்ட வால் வெள்ளி பார்ப்பதற்காக அப்பாவுடன் ஒவ்வொரு நாள் அதிகாலையும் நேரத்துடன் எழுந்தது இப்பொழுதும் மனதினுள் பசுமையாகவிருக்கிறது.

வ.ந.கிரிதரன் புகலிடச் சிறுகதைகள் (14): மனித மூலம்


- தாயகம் (கனடா) சஞ்சிகையில் முதலில் வெளியான சிறுகதை. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் பிரசுரமானது. ஸ்நேகா (தமிழகம்) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. -

கடந்த ஒரு மணிநேரமாக இவன் நடந்துகொண்டிருக்கின்றான். யார் இவன் என்கின்றீர்களா? வேறு யாருமில்லை. இவன்தான். இவன் இவனேதான். அவன் அவனேதான் என்று சொல்வதில்லையா? அது போல்தான். இவனும்இவனேதான். இவனிற்குக் கொஞ்சநாட்களாகவே ஒரு சந்தேகம். என்னவென்று கேட்கின்றீர்களா?

வேறொன்றுமில்லை. வழக்கமாக நம்நாட்டு வேதாந்திகளிற்கு வரும் சந்தேகங்களில் முக்கியமானதொன்றுதான். 'நான் யார்.நானென்றால் நான் யார்? இது தான் இவனது சந்தேகம். அதற்கு முன்னால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அது என்ன? அதுதான் இவன் நடந்து கொண்டிருக்கின்ற பாதை, 'நான் கடந்து வந்த பாதை' என்றிருக் கின்றதே அது போல் தான் இவன் கடந்து கொண்டிருக்கின்ற இந்தப் பாதையும். இவன் சிறுவனாகயிருந்தபோது இந்தப் பாதையைப் பற்றி இவன் படித்திருக்கின்றான். இன்னமும் ஞாபகத்தில் இருக்கின்றது. இவனிற்குப்புவியியல் கற்பித்த ஆசிரியையின் ஞாபகம் கூட இருக்கின்றது. இவ்வளவுஞாபகசக்திமிக்க இவனிற்கு இவனைப் பற்றி மட்டும் அப்படியெப்படி சந்தேகம் வரலாம் என்கின்றீர்களா? பொறுங்கள்! சற்றே பொறுங்கள். அதற்கு முன் இவன் கடந்து செல்கின்ற பாதையைப் பற்றிச்சிறிது பார்ப்போம்.

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (13) : கணவன்


- தாயகம் (கனடா) சஞ்சிகையாக வடிவமெடுத்தபோது அதில் வெளியான எனது சிறுகதைகளிலொன்று. பின்னர் ஸ்நேகா (தமிழகம்) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது - 

பல்கணியிலிருந்து எதிரே விரிந்திருந்த காட்சிகளில் மனம் ஒன்றாதவனாகப் பார்த்தபடிநின்றிருந்தான் சபாபதி. கண்ணிற்கெட்டியவரை கட்டங்கள். உயர்ந்த, தாழ்ந்த, அகன்ற, ஒடுங்கிய கட்டடங்கள். டெஸ்மண்ட் மொறிஸ் கூறியது போல் மனிதமிருகங்கள் வாழ்கின்ற கூடுகள். நகரங்கள் மனித மிருகங்கள் வாழுகின்ற மிருககாட்சிச்சாலை என்று அவர் குறிப்பிட்டதில் தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை. பார்க்கப் போனால் இன்றைய மனிதனின் அடிப்படைப் பிரச்சினை களிற்கு ஒரு வகையில்நகரங்களும் காரணமாயிருக்கலாம். மிருகங்களை கூண்டுகளில் அடைத்து வாழ நிர்ப்பந்திக்கும் போது அவற்றின் இயல்புகளில் ஏற்படும் மாற்றங்கள் பல, நகரத்தில் செறிந்திருக்கும் கட்ட டக் கூண்டுகளிற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் மனித மிருகங்களிலும் காணப்படுகின்றனவாம், நகரத்தில் இருந்து கொண்டுதானே இன்றைய மனிதன் சக மனிதன் மேல் அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றான். X=Y Y=Z, ஆகவே X-Z என்ற வகையான கணித சாத்திரத்திற்குரிய தர்க்க நியாயத்தின்படி பார்க்கப்போனால் இன்றைய மனிதனின் பிரச்சினைகளிற்கு முக்கிய காரணம் நகரத்து மனிதன் என்றல்லவா ஆகிவிடுகின்றது. இது பற்றியெல்லாம் சிந்திக்கும் மனநிலையில் சபாபதி இருக்கவில்லை.

அறிஞர் அண்ணா நினைவாக (அறிஞர் அண்ணாவின் நினைவு தினம் பெப்ருவரி 3)..... வ.ந.கிரிதரன் -


இதுவரை உலகில் நடைபெற்ற மரண ஊர்வலங்களில் மிகப்பெரியது கின்னஸ் உலக சாதனைக்குறிப்பின்படி அறிஞர் அண்ணாவின் மரண ஊர்வலம்தான். சுமார் 15 மில்லியன் மக்கள் (ஒன்றரைக்கோடி மக்கள்) கலந்துகொண்ட மரண ஊர்வலம் அது. (ஆதாரம்: https://www.bbc.com/news/blogs-magazine-monitor-25310508)
உலகத்தமிழர்கள் மத்தியில் அறிஞர் அண்ணாவுக்கு மிகுந்த மதிப்பு உண்டு. தமிழக அரசியலிலும் சரி, கலை, இலக்கிய வரலாற்றிலும் சரி திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு மறுக்க முடியாத இடமுண்டு. சமூதாயச்சீர்திருத்தக் கருத்துகளை, மதரீதியிலான சுரண்டல்களை, தமிழர்களின் தாழ்ந்து போன நிலைக்குக் காரணங்கள் எவை என்பது பற்றிய கருத்துகளை எனத் தமிழ் மக்களை விழிப்படைய வைத்ததில் திமுகவினருக்குச் சிறப்பானதோரிடமுண்டு.  அவர்களது பகுத்தறிவுக் கருத்துகளை, மதச்சார்பற்ற கருத்துகளை திரைப்படங்கள், எழுத்துகள் மூலம், உரைகள் மூலம் கொண்டு சேர்த்தவர்கள் அவர்கள். குறிப்பாக மதம் எவ்வளவுதூரம் மக்களை வர்ணரீதியாகப்பிரித்து வைத்திருக்கின்றது என்பதைப்புள்ளி விபரங்களுடன் , தர்க்கரீதியாக, சுவையான அடுக்குமொழித்தமிழில் எடுத்துக்காட்டியவை அறிஞர் அண்ணாவின் எழுத்துகள். உண்மையில் நாடகம், சினிமா போன்றவற்றில் நாற்பதுகளின் இறுதிக்காலத்திலிருந்து அறுபதுகளில் திமுக ஆட்சியினைப் பிடிக்கும் வரையிலான காலகட்டத்தில் தமிழகக்கலை, இலக்கியம் மற்றும் அரசியலில் திமுக வகித்த ஆரோக்கியமான பங்கு முக்கியமானது.

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (12) மான் ஹோல்!



- இச்சிறுகதை முதலில் தேடல் (கனடா) சஞ்சிகையில் வெளியானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மற்றும் மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளியான 'அமெரிக்கா'த் தொகுப்பிலும் இச்சிறுகதை பிரசுரமாகியுள்ளது. -

ஜெயகாந்தனின் ரிஷிமூலத்தில் வரும் ராஜாராமனைப் போல்தாடி மீசை வளர்த்திருந்தான். கால்களில் ஒன்றினைச் சப்பணமிட்ட நிலையிலும் மற்றதை உயர்த்தி மடக்கி முழங்காலினை வலது கையினால் பற்றியிருந்தான். இடதுகையை பின்புறமாக நிலத்தில் ஊன்றியிருந்தான். முடிநீண்டு வளர்ந்து கிடந்தது, வாயினில் பாதித்துண்டு சிகரட் புகைந்த படியிருந்தது. கண்களில் மட்டும் ஒரு விதமான ஒளி வீச்சு விரவிக் கிடந்தது. மான் தோலில் அமர்ந்திருக்கும் சாமியாரைப் போல மான் ஹோலின் மேல் அமர்ந்திருந்தவனின் தோற்றமிருந்தது. இவன் நடைபாதை நாயகர்களிலொருவனென்றால் நான் ஒரு நடைபாதை வியாபாரி. "கொட் டோக்" (Hot Dog) விற்பது என் தொழில். வடக்கில்'தொலைவில் ஒண்டாரியோ பாராளுமன்றக் கட்டடம் தெரிந்தது. எமக்குப் பின்புறமாக புகழ்பெற்ற குழந்தைகளிற்கான வைத்தியநிலையம், 'சிக்கிட்ஸ்'ஹாஸ்பிடல் அமைந்து கிடந்தது சிறிது நேரம் சாமியார் ஒண்டாரியோ பாராளுமன்றத்தையே பார்த்தபடியிருந்தான். பிறகு சிரித்தான்.

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (11) : சுண்டெலிகள்!


- [முதலில் தாயகம் சஞ்சிகையில் (கனடா) வெளியான சிறுகதை. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் வெளியானது. தமிழகத்திலிருந்து ஸ்நேகா (தமிழகம்)- மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட 'அமெரிக்கா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. இது பற்றி எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்கள் தொகுப்புக்கான அணிந்துரையில் 'சுண்டெலி ஒன்றின் மூலம் உயிர்வாழ்வின் மனித அடித்தள இருத்தலியலின் தாற்பரியத்தைக் கூற முயன்றுள்ளார்.' என்று கூறியிருக்கின்றார்.] -

கரப்பான் தொல்லையைத் தாங்க முடியவில்லை. எல்லா வழிகளிலும் முயன்று பார்த்தாகி விட்டது. சீனாக்காரனின் 'சாக்' தொடக்கம் முயலாத வழிகளில்லை. வெற்றி கரப்பான் பூச்சிக்குத்தான். பேசாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு 'அப்பார்ட்மென்ற்' விட்டு 'அப்பார்ட்மென்ற்' மாறினால் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதைதான். கரப்பான் பூச்சிகளிற்குப் பதில் சுண்டெலிகளின் தொல்லை. கனடாவில் கட்டடங்கள்தான் உயர்ந்தனவே தவிர எலிகளல்ல. கொழுத்துக் கொழுத்து உருண்டு திரிந்த ஊர் எலிகளைப் பார்த்த எனக்கு இந்தச் சுண்டெலிகள் புதுமையாகத் தெரிந்தன. நாட்டுக்கு நாடு மண்ணிற்கு மண் உயிர்கள் பல்வேறு வடிவங்களில் உருமாறி வாழத்தான் செய்கின்றன.

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (10) : பொந்துப்பறவைகள்!




சோபாவில் படுத்திருந்தபடி டி.வியைப் பார்த்துக்கொண்டிருந்தான். கடந்த நான்கு மணித்தியாலங்களாக வலி அதிகமாகிநடக்கமுடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தான். ஆஸ்பிரினை ஒழுங்காக எடுத்துவந்தால் இரவு வலிகுறைந்துவிடும். இதுமட்டும் பொறுமையாக யிருக்க வேண்டும். இத்தகைய சமயங்களில் அவனுக்கு ஊரிலிருக்கும் அம்மாவின் ஞாபகம் வந்துவிடும். அவனை அப்படி இப்படி அசைய விடமாட்டாள். வெந்நீரால் மூட்டுகளுக்கு ஒத்தடம் கொடுத்து விடு வாள். அவளுக்கு எப்பொழுதுமே அவனென்றால் செல்லம்தான்.

இத்தகைய சமயங்களில் அத்தகைய ஆறுதலும் வேண்டித்தான் இருக்கிறது. அதையெல்லாம் இங்கு எதிர்பார்க்க முடியாது. அவன் தனித்து இந்த பச்சிலர் அப்பார்ட்மெண்டில் வாழ்கிறான். காங்கிரீட் காட்டினுள் ஒரு பொந்து வாழ்க்கை. அவனிற்கு எதிர்ப்புறமாகவுள்ள பொந்தில் ஆங்கிலக் குடும்பம், இடப்புறம் ஒரு சீனக்குடும்பம். வலப்புறமாக. ஒரு யமேக்கன், 'இந்த யமேய்கன் கறுவல்களை யெல்லாம் அடித்துக்கலைக்கவேண்டும். குடியும் பெட்டையும் மருந்தும் இருந்தால் இதுகிற்குக் காணும் ஒழுங்காக உழைத்துப் படித்து வாழ இதுகளாலை முடியாது. களவெடுக்கிறதும் சுட்டுத்திரியிறதும். சீ.' இதுமுருகேசனின் கறுப்பினத்தவர்களைப் பற்றிகுறிப்பாக யமேய்க்கன் நாட்டுக் கறுப்பின மக்களைப்பற்றி எண்ணப்போக்கு. இவ்விதம் முத்திரை குத்தும் பழக்கம் அவனது தொட்டிற்பழக்கம் சுடுகாடுவரை போகாமல் விடாது. தொப்பி பிரட்டிகள், மோட்டுச் சிங்களவன் என்ற கருதுகோள்களின் பரிணாம வளர்ச்சி.

Monday, February 3, 2020

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (2): மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?


உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?
நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்
உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று.உண்மையாக
நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.
ஆயிரம் மில்லியன் ஒளிவருடங்களிற்கு
அப்பாலிருந்து இருந்து வரும்ஒளிக்கதிர்களுக்கும்
உன்னிலிருந்து வரும் ஒளிக்கதிர்களுக்கும்
இடையிலென்ன வித்தியாசம் ?நேரத்தினைத் தவிர.

உனக்கும்எனக்குமிடையில்எப்பொழுதுமே ஒரு தூரம்
இருக்கத் தானே செய்கிறது. அது எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதிலும்.

எப்பொழுதுமே ஒரு நேரம் இருக்கத் தானே செய்கிறது
கணத்தினொரு சிறுபகுதியாக என்றாலும்.

நீ இருப்பதாக நீ சொல்லுவதைக் கூட
நான் அறிவதற்கும் புரிவதற்கும் எப்பொழுதுமே இங்கு
நேரமுண்டு. தூரமுமுண்டு கண்ணே!

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (9): கட்டடக் கூட்டு முயல்கள்


- இச்சிறுகதை தேடல் (கனடா) சஞ்சிகையில் முதலில் வெளியானது. பின்னர் பதிவுகள் & திண்ணை இணைய இதழ்களில் வெளியாகியது. -

நீண்ட நாட்களின் பின்னால் நண்பன் இருப்பிடம் சென்றிருந்தேன். ஓங்கி உயர்ந்திருந்த கட்டடக் காட்டு மரமொன்றின் உச்சியில் அமைந்திருந்தது அவனது கூடு. டொராண்டோவின் மத்தியில் அமைந்துள்ள இந்தக் கட்டட மரத்திற்கு ஒரு பெருமையுண்டு. இரண்டு வயது முதிர்ந்த ஆண் தமிழர்களும், ஒரு நடுத்தர வயதுத் தமிழ்ப் பெண்ணும் பல்கணியிலிருந்து பாய்ந்து தமது வாழ்வினை முடித்துக் கொண்ட பெருமை இதற்குண்டு. அண்மைக் காலமாகவே இத்தகைய தற்கொலைகள் இங்கு அதிகரிக்கத் தான் தொடங்கி விட்டிருந்தன. இவ்வளவு வசதிகள் இருந்தும் இவர்கள் ஏனிவ்விதம் தற்கொலை செய்து கொள்கின்றார்களோ?

நண்பன் இன்னுமொரு பிரமச்சாரி. வழக்கமாக ஒவ்வொரு முறை அவனது இருப்பிடம் செல்லும் போதெல்லாம் ஏதாவதொரு மாற்றத்தை அவனது உறைவிடத்தில் அவதானிக்கக் கூடியதாகவிருக்கும். இம்முறையும் அவ்வகையிலொரு மாற்றம். நண்பன் ஒரு கூட்டினுள் இரு முயல்கள் வளர்க்கத் தொடங்கியிருந்தான்.

வ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (8): யன்னல்!



- இச்சிறுகதை முதலில் உயிர்நிழல் (பிரான்ஸ்) சஞ்சிகையில் முதலில் வெளியாகியது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியது. -

யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் ரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். 'பேப்' வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த 'யமேய்க்க' மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளயர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். 'பேப்' வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். 'சிறு இந்தியா' , 'சிறு இத்தாலி'..இப்படி பல பகுதிகள்.

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (7) புலம் பெயர்தல்!


- மானசரோவர்.காம், திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியான சிறுகதை. -

நிலத்திற்கு மேல் ஐந்து அடுக்குகளையும் கீழ் ஐந்து அடுக்குகளையும் கொண்ட வாகனத்தரிப்பிடமொன்றின் பாதுகாவலர் ஆசைப்பிள்ளை. ஆசைப்பிள்ளை ஒரு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர். ஊரில் அரச திணைக்களமொன்றில் 'கிளாக்க'ராகக் (குமாஸ்தாவாக) காலத்தை ஓட்டியவர் கிளாக்கர் ஆசைப்பிள்ளை. இலங்கையில் அரசபடைகளின் அட்டகாசம் அதிகமாகயிருந்த சமயத்தில் நாட்டை விட்டுத் தலை தப்பினால் புண்ணியமென்று கனடாவுக்கு தலையை மாற்றி ஓடிவந்தவர். ஆரம்பத்தில் கோப்பை கழுவிப்பார்த்தார். தொழிற்சாலையொன்றைக் கூட்டிக் கழுவிப்பார்த்தார். கிளாக்கராக ஊரில் வலம் வந்தவரால் தொடர்ந்தும் இத்தகைய வேலைகளைச் செய்ய முடியவில்லை. இதற்கு எளிதான வழியாகப் பாதுகாவலர் வேலை படவே ஒரு பிரபல பாதுகாவலர் நிறுவனமொன்றில் பாதுகாவலராக வேலைக்கமர்ந்து விட்டார். நள்ளிரவிலிருந்து அதிகாலைவரை வேலை. அன்றும் வழக்கம் போல தன் வேலையை ஆரம்பித்தார். அப்பொழுது தான் அந்த வெள்ளையினத்தவன் தனது காரினைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு வந்தான். வந்தவன் ஆசைப்பிள்ளையைப் பார்த்ததும் அவருக்கு முகமன் கூறினான்.

வ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (6): சீதாக்கா!

[ பதிவுகள்.காம், திண்ணை,காம் & சுதந்திரன் (கனடா) ஆகியவற்றில் வெளியான சிறுகதை. இச்சிறுகதை முதலில் தாயகம் (கனடா) சஞ்சிகையில் 'நவசீதா' என்னும் பெயரில் குறுநாவலாக வெளியானது. அதனையே பின்னர் 'சீதாக்கா' என்னும் சிறுகதையாக்கினேன்.]

1.
இன்னும் இருள் முழுதாக விலகியிருக்கவில்லை. இலையுதிர்காலம் தொடங்கி விட்டதால் இலேசாகக் குளிர் தொடங்கி விட்டிருந்தது. டொராண்டோ பஸ் நிலையத்தில் பயணிகளின் களை கட்டத் தொடங்கியிருந்தது. மான்ரியால் செல்லும் நண்பனை அனுப்பி விட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமான போதுதான் "மன்னிக்கவும். நீ ஸ்ரீலங்கா நாட்டவனா?" என்று ஆங்கிலத்தில் ஆண் குரல் கேட்கவே திரும்பினேன். எதிரே வெள்ளையினத்தைச் சேர்ந்த பஸ் டிரைவரொருவன் நின்றிருந்தான்.
"ஆம். நண்பனே. என்ன விடயம்" என்றேன்.

வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளம் தந்த வான் பாய்தல் பற்றிய சிந்தனைகள்!

மாரியில் மழை பெய்து பட்டாணிச்சுப்புளியங்குளம் நிறைந்து வழிகையில் வான் பாயுமொலி இரவின் இருளை, அமைதியைத் துளைத்துக்கொண்டு கேட்கும். குருமண்காட...

பிரபலமான பதிவுகள்