Showing posts with label கட்டடக்கலை / நகர அமைப்பு. Show all posts
Showing posts with label கட்டடக்கலை / நகர அமைப்பு. Show all posts

Monday, April 1, 2024

புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’ - வ.ந.கிரிதரன் -


எழுநா சஞ்சிகையின் ஏப்ரில் 2024 இதழில் வெளியான எனது கட்டுரை புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’


காஞ்சிரமோடை என்னும் இப்பகுதியை  நான் அறியக் காரணமாகவிருந்தது எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திய காந்தியத்தின் ‘நாவலர் பண்ணைத் தன்னார்வத் திட்டம்’ ஆகும். நாவலர் பண்ணையில் மலையகத்திலிருந்து 77 இனக்கலவரத்தில் அகதிகளாக வந்திருந்த மக்களைக் காந்தியம் அமைப்பு குடியேற்றியிருந்தது. நாவலர் பண்ணைக்கும், மருதோடைக்குமிடையில் அமைந்திருக்கும் காஞ்சிரமோடை என்னும் பகுதி அப்போது காடாகவிருந்தது. மருதோடை வரை மட்டுமே பஸ் செல்லும். அங்கிருந்து பண்ணைக்கு மூன்று மைல்கள் வரையில் நடக்க வேண்டும். பண்ணைவாசிகள் அங்கிருந்து நடந்தே பண்ணைக்குச் செல்ல வேண்டும். இத்தூரத்தைக் குறைப்பதற்காக காஞ்சிரமோடைக் காட்டினூடு பாதை அமைப்பதும் அத் தன்னார்வத் திட்டத்தின் ஓரம்சம். அத்திட்டத்தின் மூலம் அப் பண்ணைவாசிகளின் பயணம் இலகுவானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும் என்று தீர்மானிக்கப்பட்டது.

காந்தியம் அமைப்பின் நாவலர் பண்ணையின் முக்கிய காரணங்களில் ஒன்று எல்லைப் பகுதியைப் பாதுகாப்பது. அத்திட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றவர்களில் நானுமொருவன். அப்பொழுது நான் என் படிப்பை முடித்து வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது அப்பகுதி மக்கள் அக்காட்டுப் பகுதியைக் ‘காஞ்சிரமொட்டை’ என்றே அழைத்தார்கள். ஆனால் அதன் உண்மையான பெயர் காஞ்சிரமோடை. பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியம்’ நூலின் முன்னுரை அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தை விரிவாகவே எடுத்துரைக்கின்றது.

இச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி பற்றி பேராசிரியர் புஷ்பரட்ணம் போன்றோர் ஏதாவது ஆய்வுகள் செய்திருக்கின்றார்களா அல்லது அது பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்களா என்பது தெரியவில்லை. முக்கியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் ஒன்றான இப்பகுதி இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை எடுத்துக்காட்டும் பகுதி என்பதால் ஆய்வுகளை வேண்டி நிற்கும் பகுதிகளில் ஒன்று.

Monday, January 18, 2021

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition



'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல். மேற்படி ஆய்வு நூல் பின்வரும் அத்தியாயங்களைக் கொண்டுள்ளது:

 அத்தியாயம் ஒன்று: 'நல்லூரும் சிங்கை நகரும்'!
அத்தியாயம் இரண்டு: 'நல்லூரும் யாழ்ப்பாணமும்'!
அத்தியாயம் மூன்று: 'நல்லூர் இராஜதானி: வரலாற்றுத் தகவல்கள்!'
அத்தியாயம் நான்கு: 'நல்லூர்க் கந்தசுவாமி கோயில்!'
அத்தியாயம் ஐந்து: 'நல்லூர்க் கோட்டையும் மதில்களும்!'
அத்தியாயம் ஆறு: 'வெளிக்கள ஆய்வுத் தகவல்கள்!'
அத்தியாயம் ஏழு: 'கோட்டைவாசலும், கோட்டையடியும் வெயிலுகந்த பிள்ளையார் ஆலயமும்!'
அத்தியாயம் எட்டு: 'பண்டைய நூல்களும், இந்துக் கட்டடக் கலையும்!"

அத்தியாயம் ஒன்பது: 'இந்துக்களின் நகர அமைப்பும் , சாதியும்!'
அத்தியாயம் பத்து: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!
அத்தியாயம் பதினொன்று: 'நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு!'

இந்நூல் மேலதிகமாகப் பின்வரும் கட்டுரைகளையும் உள்ளடக்கியுள்ளது:

1.சிங்கை நகர பற்றிய ஒரு நோக்கு - வ.ந.கிரிதரன்
2. கோப்பாய்ப் பழைய  கோட்டையின் கோலம் - வ.ந.கிரிதரன்
3. கால யந்திரத்தினூடாக நல்லூர்  - காத்யானா அமரசிங்ஹ

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition


நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. 

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z

Thursday, July 2, 2020

கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து / திராவிடக் கட்டடக்கலையும்! - வ.ந.கிரிதரன் -


கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன்
- கட்டடக்கலைஞர்  அஞ்சலேந்திரன் -
அண்மையில் 'Kälam / Tradition & Heritage /C.Anjalendran / The Architecture of the Tamil Hindus of Sri Lanka' என்னும் தலைப்பிடப்பட்ட , இலங்கைக் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனுடான நேர்காணலை உள்ளடக்கிய காணொளியொன்றினைப் பார்த்தேன். அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் சிலவற்றைப்பற்றிய என் கருத்துகளின் பதிவிது. காணொளிக்கான இணைப்பினை இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.
 
முன்னாள் வவுனியா பா.உ சி.சுந்தரலிங்கத்தின் பேரனும் , கட்டடக்கலைஞருமான அஞ்சலேந்திரன் புகழ்பெற்ற இலங்கை, தெற்காசியக் கட்டடக்கலைஞர்களிலொருவர். இங்குள்ள காணொளியில் அஞ்சலேந்திரன் இந்துக் கட்டடக்கலை பற்றிக் கூறிய கருத்துகளிலிருந்து அவருக்கு இந்துக்கட்டடக்கலை பற்றி மேலோட்டமான புரிதல்தான் உள்ளதோ என்று சந்தேகப்படுகின்றேன். உதாரணத்துக்கு அவர் கோயில் விமானத்தைக் கோபுரமாகக் கருதிக் கூறிய கருத்துகள்.

Thursday, June 25, 2020

கோப்பாய்க் கோட்டையின் பழைய கோலம்! - வ.ந.கிரிதரன் -

எண்பதுகளில் வீரகேசரியில் நான் எழுதிய கோப்பாய்க் கோட்டை பற்றிய கட்டுரையிது. 15-3-1981 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியானது. நண்பர்களே! கோப்பாய்க் கோட்டை பற்றி நீங்கள் அறிந்த விபரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி. இக்கட்டுரைக்கு வீரகேசரி நிறுவனத்தினர் ரூபா 35 அனுப்பியிருந்தார்கள். மறக்க முடியாது.

அக்கட்டுரை கீழே:
 
நல்லூர் நகர் பற்றி ஆராய விளைந்த போது, கட்டடக் கலை மாணவனான நான் உதவி நாடி கலாநிதி கா.இந்திரபாலாவை நாடிய போது தான், அவர் தனது சிரமத்தைப் பொருடபடுத்தாது தனது வேலைகளுக்கு மத்தியில் எனக்கு உதவினார். அபோதுதான் அவர் கோப்பாயில் அமைந்திருந்த தமிழ் மன்னர்களின் கோட்டையைப் பற்றியும் அது பற்றிய சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரை பற்றியும் கூறினார். தமிழரின் பழமை வாய்ந்த சின்னங்களின் பரிதாப நிலை கண்டு மனம் நொந்திருந்த எனக்கு அந்தக் கோட்டை அந்தக் கோட்டையின் இன்றைய நிலையைப் பார்க்க வேண்டும் போலிருக்கவே , கோப்பாய் விரைந்தேன். கோப்பாய் பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்பாயுள்ள சேர்ச்சைச் சேர்ந்த சற்குணசிங்கம் என்பவர் எனக்கு அப்பகுதியினைக் காட்டி உதவினார்.

(பதிவுகள்.காம்) 2020: கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய கோலம்! - வ.ந.கிரிதரன் -


நாற்பதுகளில் (1940) சுவாமி ஞானப்பிரகாசர் முதல் முறையாகக் கோப்பாய்க் கோட்டை இருந்த இடத்தைக் கண்டுபிடித்து ஒரு கட்டுரையொன்றினை ஆங்கில ஆய்விதழொன்றில் எழுதியிருந்தார். எண்பதுகளில் நான் கலாநிதி கா.இந்திரபாலாவை யாழ் பல்கலைக்கழகத்தில் சந்தித்தபோது அவர் காட்டினார். அந்த ஆய்விதழ் யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் இருக்கக்கூடும். அதனடிப்படையில் நான் அக்கோட்டையிருந்த இடத்தைப் பார்க்கச் சென்றேன். என்னுடன் நண்பர் ஆனந்தகுமார் வந்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். என்னுடன் யாழ் பல்கலைக்கழகத்துக்கு அவருடனே சென்றிருந்தேன். கோப்பாய்க் கோட்டைக்குச் செல்கையிலும் அவர்தான் வந்திருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. பின்னர் அக்கோப்பாய்க் கோட்டை பற்றி எழுதி வீரகேசரிக்கு அனுப்பினேன். வீரகேசரி 15.3.1981 வாரவெளியீட்டில் அதனைப் பிரசுரித்ததுடன் சன்மானமும் (ரூபா 35) அனுப்பியிருந்தார்கள்.

Friday, June 19, 2020

வரலாற்றுச் சுவடுகள்: நல்லூர் மந்திரிமனை - வ.ந.கிரிதரன் -

    இங்குள்ள 'மந்திரிமனை'  ஓவியத்தை வரைந்திருப்பவர் ஓவியர் பிருந்தாயினி தீபனா. இதனைக் கட்டடக்கலைஞர் மயூரநாதன் அவர்கள் 'யாழ்ப்பாண நகரம் - 400' குழுமத்தில்  பகிர்ந்துகொண்டிருந்தார். அவ்வோவியத்தை இப்பதிவுக்காக நன்றியுடன் பாவிக்கின்றேன்.

'மந்திரிமனை' என்னும் இக்கட்டடம்  பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான வரலாற்றுச் சின்னங்களிலொன்று.  இக்கட்டடத்தின் முகப்பிலுள்ள தகவல்களின்படி இக்கட்டடம் 1890இல் கட்டப்பட்ட விபரமும், ஒரு குடும்பத்துக்குரியதென்பதும்  தெரிய வரும். ஆனால் இக்கட்டடம் முக்கியத்துவம் பெறுவது பின்வரும் காரணங்களினால்:

Friday, March 2, 2018

கட்டக்கலைக்குறிப்புகள் 7 : லெ கொபூசியேவின் (Le Corbusier) நவீனக்கட்டடக்கலைக் கருதுகோள்கள்! - வ.ந.கிரிதரன் -

" A house is a machine to live in " - Le Corbusier -

நவீனக்கட்டடக்கலையின் முன்னோடிகளில் பன்முகத்திறமை வாய்ந்த ஆளுமைகளில் முதன்மையானவர் சுவிஸ்-பிரான்ஸ் கட்டடக்கலைஞரான லே கொபூசியே ( Le Corbusier ) . சுவிஸில் பிறந்து பிரான்சு நாட்டின் குடிமகனானவர் இவரின் இயற்பெயர் சார்ள்ஸ் எடுவார்ட் ஜென்னெரெ  ( Charles-Édouard Jeanneret) நகர அமைப்பு, கட்டடக்கலை, ஓவியம், தளபாட வடிவமைப்பு , எழுத்து எனப்பன்முகத்திறமை வாய்ந்த ஆளூமை மிக்கவர் இவர். உலகின் பல நாடுகளிலும் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிலெல்லாம் இவரது கை வண்ணம் மிளிர்கிறது. சுதந்திர இந்தியாவில் முதன் முதலாகப் புதிதாக அமைக்கப்பட்ட சண்டிகார் நகர வடிவமைப்பினை அமைத்தவர் இவரே. அத்துடன் அந்நகரிலுள்ள பல முக்கியமான கட்டடங்களையும் வடிவமைத்தவரும் இவரே.

நவீனக் கட்டடக்கலையில் முன்னோடிகளில் முக்கியமான எனக்குப் பிடித்த ஆளுமைகளாக ஃப்ராங் லாயிட் ரை (Frank Lloyd Wright ) , மீஸ் வான்ட ரோ (Mies van der Rohe)  , லி கொபூசியே ஆகியோரையே குறிப்பிடுவேன். இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவராக நான் கருதுவது லி கோபுசியேயைத்தான். அதற்குக் காரணம் இவரது பன்முகத் திறமையும், படைப்பாக்கத்திறனும், சீரிய சிந்தனை மிக்க எழுத்துகளும்தாம். இம்மூவரும் முறையாகக் கல்விக்கூடங்களில் கட்டடக்கலைத்துறையில் கற்று கட்டடக்கலைஞராக வந்தவர்களல்லர். தம் சொந்தத் திறமையினால் , அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற பயிற்சிகள் மூலம், இத்துறை சார்ந்த பாடங்கள் மூலம் தம் கட்டடக்கலையாற்றலை வளர்த்துச் சாதித்தவர்கள். முறையாகக் கர்நாடக சங்கீதம் கற்காமல் வந்து சிறந்த பாடகர்களாக விளங்கும் பாடகர் பாலசுப்பிரமணியம் போன்று , தம் சொந்தத்திறமை காரணமாகச் சிறந்து விளங்கியவர்கள்.

Thursday, February 22, 2018

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று : கட்டடங்களும், தொழில் மயப்படுத்தலும்.

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -[-பதிவுகள் இணைய இதழின் அக்டோபர் 2008 , இதழ் 106இல் வெளியான இக்கட்டுரை இங்கு ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. இக்கட்டுரை ஏற்கனவே 'தாயகம் ' சஞ்சிகையிலும் வெளிவந்திருக்கிறது. -  பதிவுகள்] இலங்கை இந்தியா போன்ற வளர்முகநாடுகளில் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இந்த வீட்டுப் பிரச்சினை. இத்தகைய வளர்முகநாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். இதனால் வீடுகளைக் கட்டினால் மட்டும் போதாது? குறைந்த செலவிலும் கட்ட வேண்டும். இதன் காரணமாகக் 'குறைந்த செலவு வீடுகளின்' (Low Cost Housing) தேவை வளர்முகநாடுகளைப் பொறுத்த வரையில் மிகவும் அவசியமாகின்றது. பல்வேறு வளர்முக, அபிவிருத்தியடைந்த நாடுகளிலெல்லாம் இத்தகைய குறைந்த செலவுக் குடிமனைகளைக் கட்டுவதெப்படி என்பது பற்றியெல்லாம் ஆய்வுகள், பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. வெற்றியடைந்திருக்கின்றன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுமிருக்கின்றன. இத்தகைய வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வீடமைப்புத் திட்டங்கள் மிகுந்த அவதானத்துடன் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்களை அதிக அளவு பாவிக்கக்கூடியதாக, அதே சமயம் உருவாகக் கூடிய சேதங்களின் அளவைக் குறைக்கக் கூடியதாக, மேலும் கூடிய அளவு பயனைத் தரக்கூடியதாக, கட்டடம் கட்டுவதற்குரிய கால அளவைக் குறைக்கக் கூடியதாக இத்திட்டங்கள் அமைந்திருக்க வேண்டும். வீட்டைக் கட்டுவதுடன் மட்டும் பிரச்சினை தீர்ந்து போய்விடுவதில்லை. அவற்றில் வாழப்போகும் மக்களுக்கேற்றபடி வீடுகள் அமைந்திருக்க வேண்டும். இத்தகைய வீடமைப்புத் திட்டங்களை அமைக்கும்போது அவற்றில் வாழப்போகும் மக்களின் சமூக வாழ்க்கை முறை, அவர்களின் தேவைகள், மற்றும் வீடுகள் அமையவிருக்கின்ற பிரதேசங்களின் காலநிலை, அப்பகுதிகளில் கிடைக்கக்கூடிய மூலவளங்கள் என்பன பற்றியெல்லாம் கவனத்தில் கொண்டே அத்தகைய திட்டங்களை அமைக்க வேண்டும்.

Sunday, February 18, 2018

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக் குறிப்புகள் 6: 'குறைவில் நிறையச் (Less is more) சாதித்த கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)

- லட்விக் மீஸ் வான் டெர் ரோ -

ஜேர்மனியில் பிறந்து 1938இல் அமெரிக்கா குடிபுகுந்து அமெரிக்காவில் நவீனத்துவக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக்கலைஞராக விளங்கியவர் 'லட்விக் மீஸ் வான் டெர் ரோ' (Ludwig Mies Van der Rohe).  இவர் தனது கட்டடக்கலைத் தொழிலை ஜேர்மனியில் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமெரிக்கக் கட்டடக்கலைஞரான பீட்டர் பெஹ்ரென்ஸுடன் (Behrens) பணி பழகுநராகச் சேர்ந்து தன் கட்டடக்கலைத் தொழிலினை ஆரம்பித்தவர்.

கனடியர்களுக்குக் குறிப்பாகட்த் தொரோண்டோ வாசிகளுக்கு மீஸ் வான் டெர் ரோ என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது நகரின் வர்த்தக மையத்தில் உயர்ந்து நிற்கும் TD  centre  (1964)
தான். இதுபோல் அமெரிக்க வாசிகளுக்கு, குறிப்பாக நியுயார்க் வாசிகளுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது அவரது சீகிரம் கட்டடடம்தான் (Seagram Building 1958). இவ்விரு கட்டடங்களைப் பார்த்ததுமே இவரின் தனித்தன்மை உடனே புலப்படும்.
இவர் உருக்குச் சட்டங்கள் (Steel Frames), கண்ணாடி (Glass)  போன்ற புதிய கட்டடப்பொருட்களைப் பாவிப்பதில் முன்னோடிகளிலொருவராக விளங்கினார். அதில் மிகுந்த தெளிவுடனிருந்ததுடன் தனது பாணியினை 'ட்தஓலும், எலும்பும்' (Skin and Bones) என்றும் அழைத்தார். தேவையற்ற கட்டட அலங்காரங்களை இவர் தவிர்த்ததுடன் , கட்டடங்களின் உள்வெளியினை (interior space)  முழுமையாக, தேவைக்கேற்ப  திரைச்சுவர்கள் (curtain walls) மூலம் பிரித்துப் பாவிக்கும் வகையில் தனது கட்டட வடிவமைப்புகளை உருவாக்கினார்.

1929இல் பார்சலோனா கண்காட்சியிலிருந்த ஜேர்மன் விளையாட்டரங்கில் பச்சைக்கண்ணாடிகளைக் கொண்டு வடிவியல் ஒழுங்கில்  பச்சைக் கண்ணாடி, பளிங்குக் கல் (marble), 'குரோம்' தூண்கள் (chrome columns), ஒனிக்ஸ் எனப்படும் ஒருவகை இரத்தினக் கல்,  இத்தாலி நாட்டில் காணப்படும் travertine என்னும் ஒருவகைக் கிறிஸ்டல் அல்லது படிகக் கல் ஆகியவற்றைப் பாவித்து அமைக்கப்பட்ட தளங்கள் (planes) ஆகியவற்றைப் பாவித்திருக்கின்றார் இவர்.

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக் குறிப்புகள் 5: சேதனக் கட்டடக்கலை (Organic Architecture).

- ஃப்ராங் லாயிட் ரைட்  -
நவீனக் கட்டடக்கலையின் கோட்பாடுகளிலொன்று சேதனக் கட்டடக்கலை (Organic Architecture). இதன் மூலவர் புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான ஃப்ராங் லாயிட் ரைட் ( Frank Lloyd Wright) . இதனை , இச்சொல்லாட்சியினை், அவர் தனது சூழலுக்கு இயைந்த கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிக் குறிப்பிடுகையில் பாவித்ததன் மூலம் அறிமுகப்படுத்தினார். இதனை இவர் வடிவமானது அதன் செயற்பயனை அல்லது பாவனைப்பயனைத் தொடருமொன்று (form follows function) என்று நம்பிய கட்டடக்கலைஞரும் , ஃப்ராங் லாயிட் ரைட்டின் கட்டடக்கலைத்துறை வழிகாட்டியுமான கட்டடககலைஞர் லூயிஸ் சல்லிவனின் ( Louis Sullivan) கட்டக்கலைக் கருதுகோள்களின் வாயிலாக வந்தடைந்ததாக கட்டடக்கலை விமர்சகர்கள் கருதுவர். மேலும் சிலர் தோரோவின் மீ இறையியல் (Transcendentalism) சிந்தனையே இவரை அதிகம் பாதித்ததாகக் கருதுவர். ஃப்ராங் லாயிட் ரைட் வடிவமும், அதன் செயற்பயனும் ஒன்றென்று (form and function are one.) வாதிடுவார். வடிவம் அதன் செயற்பயனைத்தொடர்வது என்னும் கோட்பாடு அல்லது சிந்தனை நவீனக் கட்டடக்கலையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடோ அத்தகையதொரு கோட்பாடே ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக் கட்டடக்கலை என்னும் கோட்பாடும்.

சேதனக் கட்டடக்கலை என்றால் என்ன?
இதனை ஒரு கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிய நவீனத்துவச் சிந்தனையெனலாம். இச்சிந்தனையான கட்டடமொன்றினை உயிர்த்தொகுதியாக உருவகித்து உயிர் வடிவங்கள் எவ்விதம் அவை அவற்றுக்குரிய உயிர்கள் வாழும் இயற்கைச் சூழலுக்கேற்ப  , சூழலுடன் இயைந்து உருவாகினவோ, சூழலுக்கு இணக்கமாக அமைந்துள்ளனவோ அவ்வாறே கட்டடமொன்றின் வடிவமும் (form) , அமைப்பும் (structure) அக்கட்டடம் அமையவுள்ள இயற்கைச்சூழலுக்கேற்பவிருப்பதுடன் , இணக்கமாகவுமிருக்க  வேண்டும் என்று எடுத்தியம்புகின்றது. ஆக, சேதனக்கட்டடக்கலையானது கட்டடம் வடிவமைக்கப்படும் வெளியினை அதன் உட்புற, வெளிப்புறங்களுடன் கலந்துவிடும் வகையில் அவற்றுடன் ஒன்றிணைக்கின்றது. இவ்விதமாக உருவாக்கப்படும் கட்டடச்சூழலினை அக்கட்டடம் உருவாகும் இயற்கைச்சூழலிலிருந்து வேறுபடுத்த முற்படாது, அச்சூழலுடன் ஒன்றாகும் வண்ணம் கலந்திருக்க வழி சமைக்கின்றது. ஃப்ராங்ல் லாயிட ரைட் வடிவமைத்த பல கட்டடங்கள் குறிப்பாக அவரது சொந்த இல்லங்கள் (ஸ்பிரிங் கிறீன், விஸ்கான்சின், அரிசோனா போன்ற இடங்களில் அமைந்துள்ள) இவ்விதமான அவரது கட்டடக்கலைச்சிந்தனைபோக்கான சேதனக் கட்டடக்கலைச் சிந்தனையினைப் பிரதிபலிப்பவை. உண்மையில் ஃப்ராங் லாயிட ரைட் கட்டடக்கலைப்பாணிகளைப்பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. ஏனென்றால் அவர் ஒவ்வொரு கட்டடமும் அது அமைந்திருக்கும் இயற்கைச்சூழலிலிருந்து இயல்பாக உருவாக, வளர வேண்டுமென்று திடமாக நம்பினார்.

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள் 4: லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function)


- லூயிஸ் சல்லிவன்-
ஒரு கட்டடத்தின் அல்லது பொருளொன்றின் வடிவமானது அக்கட்டடம் அல்லது அப்பொருள் எக்காரணத்துக்காகப் பாவிக்கப்படுகின்றதோ அக்காரணத்துக்கேற்ப பொருத்தமான வடிவமொன்றினைப்பெறும். அதாவது அக்கட்டடம் அல்லது அப்பொருளின் செயற்பயனுக்கேற்ப அவற்றின் வடிவமுமிருக்கும். இதனைத்தான் வடிவம் செயற்பயனைத்தொடர்தல் (Form follows function) என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது. இக்கருதுகோள் அல்லது சிந்தனை் அல்லது விதி இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் அல்லது தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பொருளொன்றின் வடிவமைப்பில் முக்கியமானதொரு கருதுகோளாகும்.

இக்கோட்பாட்டின் காரணகர்த்தா புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவன் ( Louis Sullivan) ஆவார். ஆயினும் பொதுவாக இக்கோட்பாட்டின் காரணகர்த்தாவாகத் தவறாகச் சிற்பி ஹொரதியொ கிறீனோ , Horatio Greenough (1805 – 1852) , குறிப்பிடப்பட்டாலும் அது தவறானது. சிற்பி ஹொரதியொ கிறீனோவை இவ்விதம் குறிப்பிடுவதற்குக் காரணம் அவரது கட்டுரைகளின் தொகுதியொன்று 'வடிவமும், செயற்பயனும்: கலை மீதான ஹொரதியோ கிறீனோவின் குறிப்புகள்' (Form and Function: Remarks on Art by Horatio Greenough.) என்னும் பெயரில் வெளிவந்ததாகும். ஆயினும் வடிவமானது எப்பொழுதுமே செயற்பயனைத் தொடரும் என்னும் கூற்றினை முதன் முதலில் பாவித்தவராகக் கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவனைத்தான் குறிப்பிட வேண்டும்.

தேரோ , எமர்சன், மெல்வில் போன்றோரின் பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட லூயிஸ் சல்லிவன் சிற்பி ஹொரதியோ கீறினோவுக்குப் பல வருடங்களுக்குப் பின் பிறந்தவர். அவர் 1896இல் எழுதிய 'கலைத்துவ அடிப்படையிலான உயர்ந்த ஆபிஸ் கட்டடம்' (The Tall Office Building Artistically Considered) என்னும் கட்டுரையில் இக்கருதுகோளினை முதன் முதலாகப் பாவித்திருகின்றார். இருந்தாலும் தனது இக்கருதுகோளுக்குக் காரணமானவராக அவர் கி.மு 80–70 காலகட்டத்தில் பிறந்து கி.மு 15 ஆண்டளவில் இறந்த புகழ்பெற்ற ரோமன் கட்டடக்கலைஞரான மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ (Marcus Vitruvius Pollio) என்பவரைப் பின்னொரு சமயம் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ புகழ்பெற்ற 'கட்டடக்கலைபற்றி' என்னும் அர்த்தத்திலான De architectura என்னும் கட்டடக்கலை பற்றிப் பத்துத் தொகுதிகள் அடங்கிய நூலொன்றினை எழுதியிருக்கின்றார். கு.மு. காலகட்டத்தில் எழுதப்பட்ட அந்நூலானது கட்டடக்கலை வரலாற்றில் மிகவும் முக்கியமானதோரு நூலாகக் கருதப்படுகின்றது. இந்நூலில் அவர் கட்டடமொன்றின் அமைப்பானது திடம், பயன் மற்றும் அழகு (firmitas, utilitas & venustas) ஆகிய மூன்று முக்கியமான பண்புகளை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக் குறிப்புகள் 3 : களனி விகாரைக் 'கண தெய்யோ' (பிள்ளையார்)


களனியா ரஜமகா விகாரைப்பிள்ளையார் களனி ரஜ மகா விகாரை மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றுகொண்டிருந்தபோது எமது முதலாவது வருடத்தில் 'வெளிக்களக் கட்டடக்கலை' (Field Architecture) என்றொரு பாடமுமிருந்தது. அப் பாடம் வார இறுதி நாள்களிலொன்றான சனிக்கிழமையில்தானிருக்கும். அப்பாடத்தின் நோக்கம் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களைச் சென்று பார்ப்பது. எமது பல்கலைக்கழகம் கொழும்பு மாநகரிலுள்ள மொறட்டுவைப்பகுதியிலிருந்ததால் கொழும்பு மாநகரிலுள்ள கட்டடங்களையே சென்று பார்ப்பது. கட்டடக்கலைஞர்களின் கவனத்துக்குள்ளாகிய இல்லங்கள், பழம்பெரும் சரித்திரச்சின்னங்கள், நகரின் சுதந்திர சதுக்கம் போன்ற முக்கிய கட்டடங்கள் ஆகிய பல கட்டடங்களைச் சென்று பார்த்திருக்கின்றோம். அவ்விதம் சென்று பார்த்த எல்லாக்கட்டடங்களின் விபரங்களும் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் சில கட்டடங்களுக்கான எமது விஜயங்கள் மட்டும் இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளன.

- கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன் -
இப்பாடத்துக்கு எமக்கு விரிவுரையாளராகவிருந்தவர் இன்று தெற்காசியாவின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராக அறியப்படும் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன் அவர்களே. புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கிய ஜெஃப்ரி பாவாவின் (Geoffrey Bawa) மாணவர். இவரைபற்றி Anjalendran: Architect of Sri Lanka  என்னுமொரு நூலினை டேவிட் ராப்சன் (David Robson) என்பவர் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அஞ்சலேந்திரனின் கட்டடக்கலைப்பங்கபபளிப்பு பற்றிப் பின்னர் விரிவாக எழுதும் எண்ணமுண்டு. யாழ் நகரிலுள்ள பல்வேறு காரணங்களுக்காகப் புகழ்பெற்ற அசோகா ஹொட்டலை வடிவமைத்தவர் இவரே. அக்ஹொட்டல் வடிவமைக்கப்பட்ட காலத்தில்தான் இவர் எங்களுக்கு விரிவுரையாளராகவிருந்தார். அதனால் எமது விடுமுறைக்காலத்தில் அக்ஹொட்டல் கட்டி முடிக்கப்பட்டிருந்த ஆரம்ப காலத்தில் அங்கு சென்று பார்த்திருக்கின்றோம்.  இவர் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அரசியல்வாதிகளிலொருவராக   விளங்கிய 'அடங்காத்தமிழன்' என்று அறியப்பட்ட, முன்னாள் வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த சுந்தரலிங்கம் அவர்களின் பேரன். எமக்கு இப்பாடமெடுத்துக்கொண்டிருந்ந காலத்தில் எப்பொழுதும் டெனிம்ஸ் பாண்ட் அணிந்து வருவார். இவர் சிறுவயதிலிருந்தே கொழும்பு வாசியாகவிருந்தவரென்று நினைக்கின்றேன்.

வ.ந.கிரிதரனின் (பதிவுகள்.காம்) வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள் 2: பேராசிரியர் நிமால் டி சில்வாவின் 'பாரம்பரியக் கட்டடக்கலை'யும் 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பும்'.

- பேராசிரியர் நிமால் டி சில்வா -
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பட்டப்படிப்பினைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்களுக்குப் 'பாரம்பரியக் கட்டடக்கலை' (Traditional Architecture) என்னும் பாடத்தினை எடுத்தவர் பேராசிரியர் நிமால் டி சில்வா. இவர் கட்டடக்கலைஞரும் கூட. தனியாகக் கட்டடக்கலை நிறுவனமொன்றினையும் நடத்தி வந்தவர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடக்கலை பற்றிய விடயங்களில் இப்பாடத்தின் மூலம் எம் கவனம் திரும்பியது. இப்பாடம் உண்மையில் கட்டடக்கலையின் வரலாறு என்னும் பாடத்தின் துணைப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ்ப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட நாற்சார வீடுகள் பற்றி, தென்னிலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மண்ணால் நிரப்பப்பட்ட மரச்சட்டங்கள் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் (wattle and daub) பற்றியெல்லாம் அறியத்துணையாகவிருந்த பாடமிது. எனக்குப் பாரம்பரியக் கட்டடக்கலை மீது ஆர்வத்தினை ஏற்படுத்தியதில் பேராசிரியர் நிமால் டி சில்வாவுக்கு முக்கிய பங்குண்டு.

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நிமால் டி சில்வாவின் 'பாரம்பர்யக்கட்டடக்கலை' பாடத்தின் மூலம்தான் நான் முதன் முதலில் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு பற்றியும் முதன் முதலாக அறிந்துகொண்டேன். தொல்லியற் துறையில்  நன்கு அறியப்பட்ட ரோலன் சில்வா அவர்களின் (இவர் ஒரு கட்டடக்கலைஞரும் கூட) 'பண்டைய அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையொன்றினை பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் எமக்கு அறிமுகம் செய்தார். எவ்விதம் பண்டைய அநுராதபுர நகரமானது சந்தையினை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதென்பது பற்றியும், நகரைச் சுற்றி இரு வேறு வட்ட ஒழுக்கில் எவ்விதம் தாதுகோபங்கள் கட்டப்பட்டன என்பது பற்றியும் விபரிக்கும் ஆய்வுக் கட்டுரை அது.  பேராசிரியர் ரோலன் சில்வா அவர்கள் பின்னர் இலங்கைத் தொல்பொருள் நிலையத்திணைக்களத்தின் தலைவராகவும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் விளங்கியவர்.

Saturday, February 17, 2018

வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கலைக் குறிப்புகள்' 1: ஜெவ்ரி பாவா Geoffrey Bawa (23.-7.1919 - 27.05.2003)!

ஜெவ்ரி பாவா Geoffrey  Bawa  - 'வெப்பநில நவீனத்துவக்' (Tropical Modernism) கட்டடக்கலைப்பாணியின் மூலவர்!

- ஜெவ்ரி பாவா -
இலங்கையின் முக்கியமான கட்டடக்கலைஞர்களிலொருவராக விளங்கியவர் ஜெவ்ரி பாவா. இவரது முழுப்பெயர் ஜெவ்ரி மான்னிங் பாவா (Geoffrey Manning Bawa ). உலகக் கட்டடக்கலையில் ஆசியாக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராகத் தன் கட்டடங்களின் மூலம் திடமாகத் தடம் பதித்தவர் இவர். குறிப்பாக இன்று உலகக் கட்டடக்கலையில் வெப்பநில நவீனத்துவம் (Tropical Modernism) என்று அறியப்படும் கட்டடக்கலைப்பாணிக்கு அடிகோலியவராக அறியப்படுபவர் இவர்.

இவரது தந்தையாரான பி.டபிள்யு. பாவா செல்வச்சிறப்பு மிக்க சட்டத்தரணியும், நீதிபதியுமாவார். ஆங்கில, முஸ்லிம் இரத்தக்கலப்புள்ளவர். தாயாரான பேர்த்தா மரியன்னெ ஸ்ராடர் ஜேர்மனிய, ஸ்ஹொட்டிஸ் மற்றும் சிங்கள இரத்தக்கலப்புள்ளவர். இவரது மூத்த சகோதரரான பெல்விஸ் பாவா புகழ்பெற்ற 'நிலப்பரப்புத் தோற்றக் கட்டடக்கலைஞராக (Landscape Architect) விளங்கியவர்.

ரோயல் காலேஜ் மாணவரான ஜெவ்ரி பாவா ஆரம்பத்தில் படித்தது ஆங்கிலமும் சட்டமும். ஆங்கில இலக்கியத்தில் புனித காதரின்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜில் இளங்கலைப்பட்டப்படிப்பை முடித்த இவர் பின்னர் Middle, London இல் சட்டத்துறைப்பட்டதாரியானார். இலங்கை திரும்பிய இவர் இரண்டாவது யுத்தகாலத்துக்குப் பின்னர் கொழும்பிலுள்ள சட்ட நிறுவனமொன்றில் பணியாற்றினார். பின்னர் இவரது தாயாரின் மறைவினையடுத்து சட்டத்துறையை விட்டு விலகிய இவர் சுமார் இரு வருட காலம் சர்வதேச பயணங்களிலீடுபட்டார். அமெரிக்கா, ஐரோபா என்று பயணித்த இவர் இத்தாலியில் வீடு வாங்கி நிரந்தரமாகத் தங்க எண்ணினார். ஆனால் அந்த எண்ணம் சரிவரவில்லை. 1948இல் நாடு திரும்பிய இவர் கைவிடப்பட்டிருந்த இறப்பர் தோட்டமொன்றினை வாங்கினார். அதனையொரு இத்தாலியப் பாணிப்பூங்காவாக ஆக்க விரும்பினார். ஆனால் அதற்குரிய தொழில்நுட்ப அறிவு அவருக்கில்லாதது பெருங்குறையாகவிருந்தது.

இக்காலகட்டத்தில் கொழும்பிலுள்ள எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) அவர்களது கட்டடக்கலை நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அப்பொழுது கட்டடக்கலைஞர் ரீட் மட்டுமே உயிருடனிருந்தார். அவருக்குக் கீழேயே பயிற்சியில் இணைந்தார். ரீட் மறைவினையடுத்து கேம்ரிட்ஜ் திரும்பிய இவர்  இங்கிலாந்திலுள்ள கட்டடக்கலைஞர் சங்கத்தில் மாணவராக இணைந்தார். அங்கு கட்டடக்கலைத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். அதன் பின்னர் 'ரோயல் இன்ஸ்டிடியூட் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ்' (The Royal Institute of British Architects ) அமைப்பின் 'அசோசியட்' உறுப்பினரானார். தனது 38ஆவது வயதில் நாடு திரும்பிய ஜெவ்ரி பாவா தான் பணியாற்றிய எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) கட்டடக்கலை நிறுவனத்தைத் தனது பொறுப்பில் கொண்டு வந்து தனது கட்டடக்கலைப் பணியினைத் தொடர்ந்தார்.

நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் (Professor Kevin Lynch) நகரொன்றின் பிம்பக்' (The Image Of the City ) கோட்பாடு பற்றிய புரிதலும்!

 மொறட்டுவைப் ப்லகலைக் கழகத்தில் கட்டடக்கலை முடித்தபின்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அமைப்பு அதிகார சபை ஆகியவற்றில் பணியாற்றிய காலங்களில் கொழும்பு மாநகர், புதிய பாராளுமன்றம் போன்ற பல நில அமைப்பு (Landscape) , நகர் அமைப்புத் (Town Planning) திட்டங்களில் பணியாற்றியுள்ளேன். அவற்றில் முக்கியமானதொன்று மேற்படி பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டின் அடிப்படையில் நகர் அமைப்பு வல்லுநரான டிக்சன், கட்டடக்கலை/ நகர் அமைப்பு வல்லுநரான சிவபாலன் (இவர் பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றியபோது மரணித்து விட்டார்) , கட்டடக்கலைஞரான வைரமுத்து அருட்செல்வன் ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட கொழும்பு மாநகரின் பிம்பம் பற்றிய ஆய்வு. அது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதும் நினைவுக்கு வருகின்றது. பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டினைச் சுருக்கமாக விபரிக்கும் கட்டுரை இது. -

நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள் அவர்களது அந்நகரினுடான அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள கட்டடங்கள். முக்கியமான இடங்கள், அங்கு வாழும் ஏனைய மக்கள், அங்கு நிகழும் பலவேறு விதமான செயற்பாடுகள். நகரின் முக்கியமான அடையாளங்களாகத் திகழும் சின்னங்கள்,... ... என இவை போன்ற பல காரணிகளின் விளைவாக உருவாகுகின்றன. நகர அமைப்பு வல்லுநர்கள் நகர்களைப் புனர் நிர்மாணம் செயகையில் அல்லது புதியதொரு நகரமொன்றினை நிர்மாணித்திடும்போது அங்கு வாழும் மாந்தரின் மேற்படி மனப்பிம்பங்கள் அல்லது பதிவுகள் பற்றிய போதிய அறிவினைப் பெற்றிருப்பது அவர்களது பணிக்கு மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல பயனுள்ளதுமாகும். இவ்விதமாக நகர மாந்தரின் அவர் வாழும் நகர் பற்றிய மனப்பிம்பங்களை மையமாக வைத்து அந்நகரினை அறிவதற்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முயனறவர்தான் பேராசிரியர் கெவின் லிஞ்ச் Professor Kevin Lynch).

எம்ஜிஆருக்கு இளவயதில் அரசியல் போதித்தவர் என்.எஸ்.கே!

எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடலிது. 'சீர்மேகும் குருபதம்' என்று தொடங்கும் இப்பாடல் இடம் ...

பிரபலமான பதிவுகள்