Thursday, December 28, 2023

அஞ்சலி: தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தலைவர் விஜயகாந்த் மறைவு!


தமிழ்த்திரையுலகில் எனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். தன்னைக் கறுப்பு எம்ஜிஆர் என்று அழைத்துக்கொள்வதில் மகிழும் விஜயகாந்த் உண்மையிலேயே திரையிலும், அரசியலிலும் எம்ஜிஆரின் வழியில் நடந்தவர். அதுவே அவரது திரையுலக, அரசியல் ஆதிக்கத்துக்கு முக்கிய காரணம்.
 
சிறிது தந்திரமாகத் தமிழக அரசியலில் அவர் நடந்திருந்தால் இன்றும் அவரது தேசிய முற்போக்குத் திராவிடக்  கழகம் முக்கியமான , வலு மிக்க கட்சியாக இருந்திருக்கும்.

Tuesday, December 26, 2023

திரையில் எழுத்தாளர் மிக்கெயில் ஷொலோகோவின் 'டொன் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது.'


ருஷ்ய எழுத்தாளர் மிக்கெயில் ஷொலோகோவ் அவரது முக்கிய நாவலான 'டொன் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது' (And Quiet Flows The Don) என்னும் நாவலுக்காக 1965ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவர். இந்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு அ.லெ.நடராஜன் அவர்களால் செய்யப்பட்டு, நியு செஞ்சுரி புக்ஸ் ஹவுஸ் பதிப்பக வெளியீடாக 'டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது' என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது, ஆனால் இத்தமிழ் மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. நான்கு பாகங்களில் அமைந்துள்ள நாவலின் முதற் பகுதி  மட்டுமே. தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் மூல நூல் பற்றிய விரிவான தகவல்கள் இல்லை. மொழிபெயர்ப்பு ஆங்கிலத்திலிருந்தா அல்லது ருஷ்ய மொழியிலிருந்தா மொழிபெயர்க்கப்பட்டது போன்ற விபரங்கள் இல்லை. இதனால் இதனை வாசிப்பவர் இதனை மூல நாவலின் முழுமையான மொழிபெயர்ப்பாகக் கருதும் நிலை ஏற்படும்.

Saturday, December 23, 2023

ஒரு சந்திப்பு: எழுத்தாளர் மு.மேத்தாவுடன் , 'ஓவியா பதிப்பக' உரிமையாளர் வதிலைப்பிரபா!


ஓவியா பதிப்பக உரிமையாளரும், 'மகாகவி' சஞ்சிகையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருமான திரு.வதிலைப்பிரபா அவர்கள் கவிஞர் மு.மேத்தா அவர்களைச் சந்தித்து 'மகாகவி' சஞ்சிகை, ம. சேரனின்  "மூனு கோடு நோட்டு" (சென்ரியு கவிதைகள்) மற்றும் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எனது நாவலான 'நவீன விக்கிரமாதித்தன்' ஆகியவற்றைக் கொடுத்தது பற்றிய தகவலினை அனுப்பியிருந்தார். அவருக்கு என் நன்றி.  அக்காட்சிக்கான புகைப்படத்தினையும் அனுப்பியிருந்தார். அதனையே இங்கு காண்கின்றீர்கள்.

'நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்' வண்ணத்தில்..


அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இப்பாடலின் வரிகளைச் சிறப்பாகப் பாடி சமூக ஊடகங்களில் அனைவரையும் மகிழ்ச்சியிலாழ்த்தினார். அவருக்காக அவர் இரசித்து, மகிழ்ந்து பாடிய இப்பாடலின் முழு வடிவத்தையும் வண்ணத்தில் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

அமரர் ஜெயன் தேவா (மகாதேவா ஜெயக்குமரன்) நினைவாக..


நண்பர் ஜெயன் தேவா (மகாதேவா ஜெயக்குமரன்) மறைந்து ஆண்டு ஒன்று கடந்து விட்டது. ஜெயனை எனக்குப் பதிவுகள் இணைய இதழே அறிமுகம் செய்து வைத்தது. பின்னர் முகநூலில் நண்பராக அறிமுகமானார்.

அடிக்கடி அலைபேசியில் உரையாடா விட்டாலும் அவ்வப்போது உரையாடுவதுண்டு. நோயின் தாக்கத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட உரையாடுகையில் அது பற்றிக் குறைபட்டுக் கதைக்க மாட்டார். சமூக, அரசியல் விடயங்கள் பற்றியே உரையாடுவார்.  

அவரது தனிப்பட்ட வாழ்க்கை, கடந்த காலம் பற்றியெல்லாம் என்னுடன் அவர் உரையாடியதில்லை. ஆனால் அவர் விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் தலைவியாகச் செயற்பட்ட தமிழினியின் இறுதிக்காலத்தில் அவரைத் திருமணம் செய்ததுடன் அவரது இலக்கிய முயற்சிகளுக்கு மிகுந்த ஆதரவாகச் செயற்பட்டார்.  அதனை அவரது வாழ்க்கையின் முக்கியமான , ஆரோக்கியமான விடயமாக நான் உணர்கின்றேன்.

Tuesday, December 19, 2023

முனைவர் செ.இராஜேஸ்வரியின் எம்ஜிஆர் பற்றிய நூல்கள்!


இவர் ஒரு மொழிபெயர்ப்பியலில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியை. இவர் முனைவர் செ.இராஜேஸ்வரி. மொழிபெயர்ப்பு, இதழியல், ஆய்வு, கற்பித்தல் எனப் பன்முக ஆளுமை மிக்க இவர் எம்ஜிஆரின் சினிமா, அரசியல் பற்றிய் ஆய்வுகளில் நாட்டம் மிக்கவர்.

எம்ஜிஆர் பற்றி விகடனில் தொடர் எழுதியவர். கனடாவிலிருந்து வெளிவரும் எழுத்தாளர் அகிலின் 'தமிழ் ஆதர்ஸ்.காம்' இணையத்தளத்தில் எழுதி வருபவர்.

இவரது நோக்கம் குறைந்தது 100 நூல்களையாவது எம்ஜிஆர் பற்றி எழுத வேண்டுமென்பது. இதுவரை பதினைந்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். மதுரையிலிருந்து சந்திரோதயம் என்னும் பதிப்பகம் வெளியிட்டு வருகின்றது.

இவரது எம்ஜிஆர் பற்றிய நூல்கள் இணையக் காப்பகத்தில் (Archive.org) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட முனைவர் வே.சீதாலட்சுமியின் 'தமிழ் நாவல்கள்' (அகர வரிசை)


உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட முனைவர் வே.சீதாலட்சுமியின் 'தமிழ் நாவல்கள்' (அகர வரிசை) முக்கியமானதோர் ஆவணம். இந்நூலில் 6298 நூலாக வெளிவந்த நாவல்களின் பெயர்ப்பட்டியலைத் தொகுத்திருக்கின்றார் முனைவர் வே.சீதாலட்சுமி.
 
இந்நூலில் எனக்குத்தெரிந்த ஒரு சில நாவல்களின் பெயர்களைத் தவிர நான் தேடிக்கொண்டிருக்கும் நாவல்கள் பலவற்றின் பெயர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சையைத் தந்தது.
 
உமாசந்திரனின் 'முழுநிலா', மாயாவியின் (எஸ். கே. இராமன்) மொழிபெயர்ப்பில்  வெளியான 'இளமைக்கனவு' (புகழ்பெற்ற அமெரிக்க நாவலான The Yearling' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. நாவலாசிரியர் Marjorie Kinnan Rawlings), கல்பனாவின் 'யுகசந்தி', மாயாவின் 'மூடுபனி' , ஜெகசிற்பியனின் 'மண்ணின் குரல்' போன்றவகை நான் தேடிக்கொண்டிருக்கும் நாவல்களில் அடங்குவன.
அக்காலகட்டத்தில் பல நாவல்களை எழுதியவர் எழுத்தாளர் பி.எம்.கண்ணன். இவரை இன்று தமிழ் இலக்கிய உலகு மறந்தேவிட்டதெனலாம். இவரது வெளியான நூல்களையெல்லாம் இத்தொகுப்பின் பட்டியலில் காணமுடிகின்றது.
 
மாயாவியின் மொழிபெயர்ப்பில் உருவான இளமைக்கனவு' நாவலை நாங்கள் அனைவருமே விரும்பி வாசித்தோம். கானகச்சூழலை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட சிறந்த நாவல். அப்பொழுது இயற்கை வளம் மலிந்த , கானகச்சூழலில் உறங்கிக்கிடக்கும் வவுனியாவில் வாழ்ந்து வந்ததால் இந்நாவலுடன் எங்களால் மிகவும் இலகுவாக மனதொன்றிட முடிந்திருக்கக் கூடும்.)
 
இவ்விதமான ஆவணங்கள் தமிழ் நாவல்கள் பற்றிய ஆய்வுகளுக்கு வழித்துணையாக இருப்பவை. அதனால் ஆரோக்கியமானவை..

Sunday, December 17, 2023

(பதிவுகள்.காம்) ஐம்பதுகளில் வெளியான வீரகேசரி பிரசுர நாவல் 'கே.வி.எஸ்.வாஸின் (ரஜனி) 'குந்தளப்பிரேமா' - வ.ந.கிரிதரன் -


'வீரகேசரி பிரசுர நாவல்கள் ஒரு பொது மதிப்பீடு' என்னும் அநுபந்தம் பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்களால்  நா.சுப்பிரமணியம் என்னும் பெயரில் எழுதப்பட்டது. அப்பொழுது அவர் எம்.ஏ பட்டதாரி. யாழ்  பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டம். வீரகேசரி ஐம்பதாவது நூற்பிரசுர விழாவில் அநுபந்தமாக வெளியிடப்பட்ட பிரசுரமிது. இப்பிரசுரத்தில் வீரகேசரி பிரசுரங்கள்  பற்றிப் பின்வருமாறு  குறிப்பிடப்பட்டிருந்தது:

"1972ஆம் ஆண்டில் தொடங்கிய வீரகேசரி பிரசுர முயற்சி ஆரம்பத்தில் ஆண்டொன்றுக்குச் சுமார் ஆறு பிரசுரங்களாகத் தொடங்கி, அதிகரித்து வந்து இப்பொழுது மூன்றாண்டுகளாக ஆண்டு ஒன்றுக்குப் பத்து நாவல்கள் என்ற அளவில் விரிவடைந்துள்ளது."

இவ்விதமே நானும் வீரகேசரி பிரசுரங்களும்  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, உள்ளூர் உற்பத்திக்கு முதன்மை கொடுக்கப்பட்டிருந்த சூழ்நிலை காரணமாக உருவாகின என்றே எண்ணியிருந்தேன். ஆனால் உண்மையில் அச்சூழலைப் பயன்படுத்தி வீரகேசரி பிரசுரங்கள்  அதிக அளவில் வெளிவந்திருந்தாலும் வீரகேசரி பிரசுரமாக 1951இலேயே நாவலொன்று வெளியாகியிருந்ததை அறிய முடிகின்றது.  அதனை எழுதியவர் எழுத்தாளர் கே.வி.எஸ்.வாஸ் (கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார்). நாவலின் பெயர் - குந்தளப்பிரேமா

Thursday, December 14, 2023

எனது படைப்புகளும் அவை பற்றிய ஆய்வுகளும்! - வ.ந.கிரிதரன் -

 


எனது படைப்புகள் பற்றி வெளியான ஆய்வுகள் பற்றி நானறிந்த தகவல்கள்  இவை. தமிழகம் , இலங்கையில பட்டப்படிப்பு மாணவர்களால், பேராசிரியர்களால் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை பற்றிய விபரங்கள் கீழேயுள்ளன. இவர்கள் அனைவருமே என் படைப்புகளூடு என்னைக் கண்டடைந்தவர்கள். நான் நேரில் அறிந்தவர்கள் அல்லர். படைப்புகள் தம் வாசகர்களைக் கண்டடையும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை மிக்கவன் நான். அவ்விதமான படைப்புகளே நின்று பிடிக்கும் என்பதிலும் நம்பிக்கை மிக்கவன் நான். 
 
நம்மவர்களில் ஒரு குறைபாடு. நாடறிந்தவர்களாகத் தாம் கருதும் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் தம் படைப்புகளைப் பற்றி அல்லது ஏனையவரின் படைப்புகளைப் பற்றிக் கூறவேண்டும். அவ்விதம் கூறினாலே அவை தரமானவை என்றொரு கருத்தோட்டமும் கொண்டவர்களாக அவர்கள் இருப்பதையே இவ்விதமான உளவியற் போக்கு எடுத்துக்காட்டுகின்றது. இது தவறான நிலைப்பாடு. அண்மையில் நடந்த எனது நூல்கள் பற்றிய நிகழ்வில் கூட தலைமை வகித்த எழுத்தாளர் பா.அ.ஜயகரன் தனது உரையில் 'எனது புகலிட அனுபவக் கதைகள் முக்கியமானவை. அவை பற்றிப் பலரும் எழுதுவதில்லை. அவர்களுக்குத் தான் கூறுவது என் கதைகளைப்பற்றி எழுதுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இக்கூற்றுக்கான காரணமும் மேற்படி உளவியற் போக்கே. உண்மையில் எனது படைப்புகள் பற்றி , குறிப்பாகப் புகலிடப் படைப்புகள் பற்றி நிறையவே ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஆனால் அவர் கருதும் 'இலக்கிய மேதை'களின் எழுத்துகளில் அவை பற்றிக் காணவில்லையென்பதால் ஏற்பட்ட ஜயகரனது ஆதங்கமே அது. 

Tuesday, December 12, 2023

காதலர்தம் உணர்வுகளின் வெளிப்பாடு Ye Zulf Kaisi Hai!


அனில்தாவனும் ஜெயாபாதுரியும் நடித்த இத்திரைப்படப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. காரணம் மொழியல்ல. நடிப்பு. காதல்கொண்ட உள்ளங்களின்  உணர்வுகளை, செயல்களை மிகச்சிறப்பாகத் தம் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அனில்தாவனும், ஜெயாபாதுரியும். அடுத்த வீட்டு பெண்ணைப்போல் தோற்றமளிக்கும் எளிமையான தோற்றம் மிக்க ஜெயாபாதுரி சிறந்த நடிகைகளில் ஒருவர். பாத்திர உளவியலை உள் வாங்கி , உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தி நடிப்பதில் வல்லவர். காதலர்களின் உளவியலைத் தம் நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கும் இப்பாடல் என்னை மட்டுமல்ல கேட்பவர் அனைவரையும் கவர்வதில் வியப்புண்டோ?  https://www.youtube.com/watch?v=uVFd3T6Kcdo

மகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியாரின் பிறந்ததினம் டிசம்பர் 11)


மகாகவி பாரதியார் என்னை மிகவும் கவர்ந்த தமிழ் எழுத்தாளர்களில் முதலிடத்தில் இருப்பவர். அவரது பிறந்ததினம்  டிசம்பர் 11. அதனையொட்டி ஏற்கனவே அவ்வப்போது முகநூலில் நான் எழுதிய பதிவுகள் சிலவற்றைத் தொகுத்திங்கே தருகின்றேன்.

1. மகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியாரின் பிறந்ததினம் டிசம்பர் 11)

என்னை மிகவும் கவர்ந்த, பாதித்த இலக்கியவாதியென்றால் முதலில் நான் கருதுவது மகாகவி பாரதியாரைத்தான். முரண்பாடுகளற்ற மனிதர்கள் யாருளர். பாரதியிடமும் முரண்பாடுகளுள்ளனதாம். ஆனால் அவை அவரது அறிவுத் தாகமெடுத்த உள்ளத்தின் கேள்விகளின் பரிணாம வரலாற்றின் விளைவுகள்.  குறுகிய கால வாழ்வினுள் அவர் மானுட வாழ்வின் அனைத்து விடயங்களைப்பற்றியும் சிந்தித்தார். கேள்விகளையெழுப்பினார். அவற்றுக்குரிய விடைகளைத் தன் ஞானத்துக்கேற்ப அறிய முயற்சி செய்தார். இவற்றைத்தாம் அவரது எழுத்துகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

Sunday, December 10, 2023

(பதிவுகள்.காம்) ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - என்.கே.மகாலிங்கம் -


அண்மையில் நடந்த எனது மூன்று நூல்களின் வெளியீட்டில் வெளியான கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' நூலுக்கு எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் எழுதிய விமர்சனக் குறிப்பு. உடல் நிலை காரணமாக அவரால் அன்று அந்த நிகழ்வுக்கு வரமுடியவில்லை. அதுவரை எழுதி வைத்திருந்த குறிப்பினை அனுப்பியிருந்தார். அதனை நிகழ்வில் தலைமை வகித்த எழுத்தாளர் பா.அ.ஜயகரன் வாசித்தார். - வ.ந.கிரிதரன் -

ஒரு நகரத்து மனிதனின் பாடல் என்பது தான் இவர் இந்தத் தொகுதிக்கு வைத்த பெயர். ஆனால் எப்படியோ அது ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. (உண்மையில் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் பெயரில்தான் எழுதியிருந்தேன். காரணம் இக்கவிதை நகரமயமாதலால் ஏற்படும் சூழற் பாதுகாப்பு பற்றிய ஒருவனின் புலம்பல் என்பதால். - வ.ந.கிரிதரன் -)

இது இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. முதல் தொகுதி எழுக அதிமானுடா 1992 இல் வெளிவந்திருக்கிறது. அது எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. ஆனால் எழுக அதிமானுடா என்பது எனக்கு பேர்ணாட் ஷா வின் மான் அன்ட் சுப்பர்மான் என்ற நாடகத்தையும் கடவுள் இறந்து விட்டார் என்று கூறிய பிரெடிரெக் நீட்ஷேயின் அதிமானிடனையும் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. அவை டாவினின் உயிர் பரிணாம வளர்ச்சியில் நிகழும் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் இருக்கலாம். அரவிந்தரின் பேரறிவு நிலையாகவும் இருக்கலாம்.

அஞ்சலி: 'ஆய்வுத் தேடல்' மிக்க பேராசிரியர் செ.யோகராசா மறைந்தார்!


பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் மறைந்துவிட்டதாக முகநூல் மூலம் அறிந்தேன். மிகவும் துயர் தரும் செய்தி. நான் மதிக்கும் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவர் இவர். இவரது இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் முக்கியத்துவம் மிக்கவை.

இவரை நான் சந்தித்ததில்லை. இவரது படைப்புகளூடு மட்டுமே அறிந்திருக்கின்றேன். எனது 'அமெரிக்கா' நாவல் தனிப்பதிப்பாக, இலங்கையில் 'மகுடம்' பதிப்பாக வெளியானபோது அதற்கு சிறப்பானதோர் அணிந்துரையினை எழுதியிருந்தார். அதனை எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன்.

சென்னை வெள்ளம்: இயல்பு நிலை விரைவில் திரும்பட்டும்!



சென்னை மாநகர் மீண்டும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது. மனிதரின் சூழல் விரோத நடவடிக்கைகளால் உலகக் காலநிலை பெரிதும் மாறுதலடைந்துகொண்டு வருவதன் விளைவுதான் இத்தகைய காலநிலைச்சீர்கேடுகள்.

இவ்விதமான காலநிலைச் சீர்குலைவுகள் ஏற்படுகையில் அதிலிருந்து தப்பும் வழியில் மனிதர் தாம் வசிக்கும் நகரங்களை வைத்திருக்க வேண்டும். அமைக்க வேண்டும்.

(பதிவுகள்.காம்) அண்மையில் வெளியான வ.ந.கிரிதரனின் நூல்களைப் பற்றியதொரு சிறு குறிப்பு! - பரம்சோதி தயாநிதி -

 

- அண்மையில் வெளியான வ.ந.கிரிதரனின் நூல்களைப் பற்றிய தன் எண்ணங்களை அனுப்பி வைத்துள்ளார் கலை, இலக்கிய ஆர்வலரும், பொறியியலாளருமான  பரம்சோதி  தயாநிதி. -

நான் இலக்கியம் வாசிப்பது குறைவு. கிரிதரனின் புத்தக வெளியீட்டில் வாங்கிய புத்தகங்களின் பகுதிகளை சென்ற இரவுதான் வாசிக்க முடிந்தது. எனது மனதில் எழுந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் ”ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்” என்னும் புத்தகத்தில் உள்ள 9 கவிதைகளை வாசித்தேன். அப்பொழுதுதான் முதன் முதலாக கிரிதரனுக்குள்ளே இருக்கும் கவிஞனைக்கண்டேன். பலர் கவிதை என்ற பெயரில் எவையெல்லாமோ எழுதும்போது இக் கவிதைகள் தரம் மிகுந்தவையாகக் காணப்பட்டன.

எனினும் வாசித்த இரு கவிதைகள் எனக்கு விளங்கவில்லை. “குதிரைத் திருடர்களே …… “ என்ற கவிதையில் குதிரைகள் என்பது எதன் அடையாளம் (symbol) என்பது விளங்கவில்லை. ”ஆனை பார்த்தவர்” என்ற கவிதை குழப்பத்தை ஏற்படுத்தியது. “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” என்பதைத் தான் இக் கவிதையில் குழப்பமாகக் கூறுகிறாரா என்று சந்தேகம் வந்தது.

'டைம்' சஞ்சிகையின் நூற்றிலொருவர் எம்.சஞ்சயன்!


முனவைர் எம்.சஞ்சயன் (M. Sanjayan) 'சர்வதேசப் பேணுப்படுதல்' (Conservation International) என்னும் அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி. அமெரிக்காவில் வசிப்பவர்.  'பேணப்படுதல்' துறையில் அறிவியல் அறிஞரான இவர் எழுத்தாளரும் கூட. தொலைக்காட்சிகளில் இத்துறையில் செயற்படும் இவர் இயற்கையைப் பேணுவதன் மூலம் மானுடரின் வாழ்வை வளப்படுத்த வேண்டுமென்று செயற்படுபவர். இவரது கட்டுரைகள்  Science, Nature & Conservation Biology போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.  இவரது இயற்கையைப் பேணுதல் பற்றிய செயற்பாடுகளுக்காகவும், எழுத்துகளுக்காகவும் சர்வதேச ஊடகங்கள் பலவற்றின் கவனத்தை ஈர்த்திருப்பவர். 'சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல்' துறையில் . கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஓர் இலங்கைத் தமிழர்.  

அஞ்சலி: ரிவாட் அலாரீர் (Refaat Alareer)


பாலஸ்தீனக் கவிஞரும், காசாவிலுள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ரிவாட் அலாரீர் (Refaat Alareer) கடந்த புதன் இஸ்ரேல் காசா மீது நடத்திய குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து அவரது குடும்பத்தவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இஸ்ரேலின் பலத்த குண்டுத்தாக்குதல்களுக்கு மத்தியிலும் கவிஞர் ரிவாட் அலாரீர் காசாவை விட்டு நீங்காமல் அங்கேயே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த இரங்கல்.

Saturday, December 2, 2023

ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலில் ஒரு காட்சி! - வ.ந.கிரிதரன் -


ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவல் 'ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்!'. அதில் வரும் ஹென்றி மறக்க முடியாத மனிதன். மகத்தான மனிதன்.  விகடனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம்' தொடராக வெளிவந்த காலத்திலேயே விரும்பி வாசித்திருக்கின்றேன். அதனால் இவ்வோவியமொரு காலக்கப்பல். என்னை என் பால்ய பருவத்திற்கே காவிச்செல்லும் காலக்கப்பல்.

ஜெயகாந்தனின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இதுதான். இதில்வரும் ஹென்றி பாத்திரம் தி.ஜானகிராமனின் 'மோகமுள்' பாபு, யமுனா' போல் மனத்தை ஈர்த்த பாத்திரம். நாவலில் தகப்பனின் கிராமத்துக்கு வரும் ஹென்றியின் அனுபவங்கள் மறக்க முடியாதவை. தந்தையுடன் 'பப்பா என்றழைத்து நடத்தும் உரையாடல்களை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை. அவ்வுரையாடல்களை வாசிக்கையில் என் பால்ய காலத்தில் வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அப்பாவின் சாறத்தில் படுத்திருந்தபடி , அண்ணாந்து விண்ணைப்பார்த்தபடி  ,  எதிரே விரிந்திருக்கும் விண்ணில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களைப்பற்றி, கோடிழுக்கும் எரிநட்சத்திரங்களைப் பற்றி, அவ்வப்போது விரையும் செயற்கைக்கோள்களைப் பற்றி உரையாடிய தருணங்களை என் மனம் அசை மீட்டிப் பார்க்கும்.  ஒரு நாவலின் வெற்றி இது போன்ற வாசக அனுபவங்களில்தாம் உள்ளது.

Saturday, November 25, 2023

வ.ந.கிரிதரனின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா! - குரு அரவிந்தன் -

சென்ற ஞாயிறு கனடாவில் நடைபெற்ற எனது மூன்று நூல்கள் வெளியீடு பற்றி எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய நிகழ்வுக் குறிப்பினை ஈழநாடு வாரமலர் தனது நவம்பர் 26, 2023 பதிப்பில் வெளியிட்டுள்ளது. குரு அரவிந்தனுக்கும், ஈழநாடு நிறுவனத்துக்கும் எனது நன்றி.
 

 
 
 

(பதிவுகள்.காம்) முதலாவது சந்திப்பு 50: உலகெங்கும் வாழும் இலக்கியவாதிகளை இணைக்கும் ‘ பதிவுகள் ‘ கிரிதரன் ! - முருகபூபதி -


- எழுத்தாளர் முருகபூபதி , யாழ் மாவட்டத்திலிருந்து  வெளியாகும் 'தீம்புனல்' வாரப் பத்திரிகையின் நவம்பர் 20, 2023 பதிப்பில் 'முதலாவது சந்திப்பு' தொடரில் 'உலகெங்கும் வாழும் இலக்கியவாதிகளை இணைக்கும் பதிவுகள்  கிரிதரன்' என்னும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை. பதிவுகள் இணைய இதழ் பற்றியும் என்னைப்பற்றியும்  எழுதியிருக்கின்றார். அவருக்கு என் நன்றி.

எழுத்துலகம் விசித்திரமானது. ஒரு எழுத்தாளரை மற்றும் ஒரு எழுத்தாளர் எளிதில் அங்கீகரித்துவிடமாட்டார். புராணத்தில் வரும் சிவனுக்கும் அரசவைப் புலவர் நக்கீரனுக்குமிடையே நிகழ்ந்த வாதம் பற்றி அறிவீர்கள்.

“ ஒரு பெண்ணின் கூந்தலின் மணம் எவ்வாறிருந்தால்தான் என்ன..? அதற்காக வாதப்பிரதிவாதமா..? அதற்காக நெற்றிக்கண்ணால் சுட்டு பொசுக்க வேண்டுமா..? இதுவும் வன்முறைதானே ! “ என்று இன்றைய எமது குழந்தைகள் வினா தொடுக்கிறார்கள். அடுத்துவந்த, கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் மத்தியில் நிகழ்ந்த வாதங்களும் பேசப்பட்டுள்ளன. மொத்தத்தில் எழுத்துலகம் விமர்சனம், அவதூறு, மோதல், எதிர்வினை, தாக்குதல் எனத்தொடருகின்றது. முகநூல் அறிமுகமானதன் பின்னர், நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. இந்தப்பின்னணிகளுடன்தான், கனடாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பதிவுகள் இணைய இதழை தங்கு தடையின்றி நடத்திவரும் வ. ந. கிரிதரன் அவர்களை அவதானிக்கின்றேன்.

Friday, November 24, 2023

வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலை முன் வைத்து.... - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -


- அண்மையில் நிகழ்ந்த வ.ந.கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சிவா முருகுப்பிள்ளை  (ஈஸ்வரமூர்த்தி) ஆற்றிய உரையிது. -


மூன்று விதமான அறிமுகங்களாக  என் பேச்சை ஆற்றலாம் என்றுள்ளேன்.  புத்தக வெளியீட்டின் அழைப்பிதழில் அறிமுகம் என்றாக சொல்லப்பட்டிருப்பதால் அறிமுகம் என்ற விடயத்திற்குள் அதிகம் எனது பேச்சைச்  சுருக்க விரும்புகின்றேன். ஆனால் இதற்குள் சிறிய அளவில் புத்தகம் பற்றிய எனது பார்வையை எனது வாசிப்பின் அடிப்படையில் இணைக்கின்றேன். முதலில்  அது என் அறிமுகம் , புத்தக ஆசிரியர் வந கிரிதரன் பற்றிய அறிமுகம் , இறுதியாக புத்தகம் பற்றிய அறிமுகமாக இருக்கும்.

முதலாவதாக என்னைப் பற்றிய அறிமுகம்.  இலக்கியம் என்பதற்கு எனக்கு வரவிலக்கணம் தெரியாது.  கபொத சாதாரண தர  வரையில் தமிழை ஒருபாடமாக கற்று இறுதிப் பரிட்சையில் மிகக்குறைந்த சாதாரண சித்தியை மட்டும் பெற்றவன். மக்களே என் ஆசான்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை அனுபவங்களே எனக்கான வழிகாட்டி. இவற்றின் அடிப்படையில் எனது தாய் மொழில் எழுதுகின்றேன் மேடைகளில் பேசுகின்றேன் கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றேன். மக்களிடம் இருந்து கற்றவையை செழுமைப்படுத்தி மக்களின் மன்னேற்றத்திற்காக அவர்களிடமே அதனை சமர்பிக்கின்றேன் . நான் கற்றலுக்குத் தயாராக இருக்கும் மாணவன்தான்.

Monday, November 20, 2023

கனடா: எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் மூன்று நூல்களின் வெளியீடும், உரையாற்றியவர்களும் & சிறப்புப் பிரதிகள் பெற்றவர்களும் பற்றிய குறிப்பு! - வ.ந.கிரிதரன் -


இன்று எழுத்தாளார் வ.ந.கிரிதரனது  மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் சிறப்புப் பிரதிகள் பெற்று நிகழ்வுக்குச் சிறப்புச் சேர்த்தவர்கள் இவர்கள். இவர்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.  இந்நிகழ்வுக்குத் தலைமையேற்று மிகவும் சிறப்பாக நெறிப்படுத்தினார் நண்பர் எழுத்தாளர் பா.அ.ஜயகரன். அவருக்கும் நிகழ்வுக்கு மிகவும் உறுதுணையாக விளங்கிய தேடகம் அமைப்புக்கும் மனங்கனிந்த நன்றி. கூடவே நிகழ்வுக்கு வருகை தந்து ஆதரித்த அனைவருக்கும் நன்றி.


நிகழ்வில் நூல்கள் பற்றிய அறிமுக உரையினை ஆற்றியவர்கள்:

Monday, November 13, 2023

அன்பான நினைவூட்டல்: 'டொரோண்டோ' , கனடாவில் வ.ந.கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீடு (நவம்பர் 19, 2023)


வணக்கம் நண்பர்களே! எனது மூன்று நூல்களின் வெளியீடும் அறிமுகமும் பற்றிய தகவலை இங்கு மீண்டும் பகிர்ந்து கொள்கின்றேன். 
 
'தேடகமும்' , 'பதிவுக'ளும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு இது. நவம்பர் 19, 2023 அன்று மாலை 5 மணி தொடக்கம் 8 மணி வரை 3600 Kingston road இல் அமைந்துள்ள Scarborough Village Community Recreation Center இல் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றேன்.
 
நிகழ்வில் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பு பற்றி எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் அவர்களும், 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' பற்றி எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அவர்களும், 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றி சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) அவர்களும் உரையாற்றுவார்கள். எழுத்தாளர் பா.அ.ஜயகரன் அவர்கள் தலைமைதாங்கி நெறிப்படுத்துவார். மேற்படி நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.

'இசைக்குயில்' பி.சுசீலா!


நவம்பர் 13 பி.சுசீலாவின் பிறந்ததினம்! அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

'இசைக்குயில்', 'கான கோகிலா', 'மெல்லிசை அரசி' & 'கான சரஸ்வதி' என்று அழைக்கப்படும் பி.சுசீலா (புலப்பாக்க சுசீலா)  தமிழ், தெலுங்கு, கன்னடம், ,மலையாளம், இந்தி, சிங்களம் & சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் 25,000 பாடல்களுக்கு மேல் பாடியவர். இந்திய மத்திய அரசின் பத்மவிபூஷன் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உட்படப் பல விருதுகளைப் பெற்ற இவர் ஐந்து தடவைகள் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர். இவர் டி.எம்.எஸ் அவர்களுடன் இணைந்து சுமார் 1000 பாடல்களைப் பாடியுள்ளதாக விக்கிபீடியா கூறுகிறது.  நவம்பர் 13 அவரது பிறந்ததினம்.

சுசீலா என்றதும் என்  நினைவுக்கு வரும் முதல் 23 பாடல்கள் இவை:

1. அமுதைப் பொழியும் நிலவே
2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
3. உன்னை நான் சந்தித்தேன்
4. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன
5. இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு
6. மாறியது  நெஞ்சம் மாற்றியவர் யாரோ
7. நீ இல்லாத உலகத்திலே
8. நினைக்கத்தெரிந்த மனமே
9. என்னை மறந்ததேன் தென்றலே
10. பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்
11. அத்தை மகனே
12. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து
13. சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
14. நாளை இந்த வேளை பார்த்து
15. அன்புள்ள மான்விழியே
16. உன்னை ஒன்று கேட்பேன்
17. ஆயிரம் நிலவே வா
18. நலந்தானா நலந்தானா
19. சொன்னது நீ தானா?
20. காதல் சிறகைக் காற்றினில் விரித்து
21. உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
22. ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
23. கல்யாணம் ஆனவரே செளக்கியமா?

கல்யாணம் ஆனவரே செளக்கியமா?  உங்கள் கண்ணான பெண் மயிலும் செளக்கியமா? - https://www.youtube.com/watch?v=w-b-H-nJ7Nk

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - https://www.youtube.com/watch?v=T8piDlTHqXQ

Saturday, November 11, 2023

எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலன் நினைவாக.... - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலன் (புஷ்பா தங்கத்துரை)  என் பால்யப் பருவத்தில், எனக்குப் பிடித்த எழுத்தாளர்களிலொருவர். அக்காலகட்டத்தில் தினமணிக்கதிரில் வெளியான 'நீ நான் நிலா' தொடர் நாவலை (ஓவியர் கோபுலுவின் ஓவியங்களுடன் வெளியான தொடர்) விரும்பி வாசித்தேன். கல்கி இதழின் அல்லது தினமணிக்கதிரின் இலவச இணைப்பாக வெளியான இவர் எழுதிய நெடுங்கதையான 'நடு வழியில் ஒரு ரயில்' எனக்கு மிகவும் பிடித்த கதைகளிலொன்றாக அக்காலகட்டத்தில் விளங்கியது. இவையெல்லாம் அவர் ஶ்ரீ வேணுகோபாலன் என்னும் பெயரில் எழுதியவை. இவர் முதன் முதலாக புஷ்பா தங்கத்துரை என்னும் பெயரில் எழுதிய தொடர் நாவல் 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்று நினைக்கின்றேன். அது தினமணிக்கதிரில் ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியானது. வெளியான காலத்தில் மிகுந்த வரவேற்பைப்பெற்றிருந்தது.

Monday, November 6, 2023

வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றிய ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -


எழுத்தாளரும், இலக்கியத் திறனாய்வாளருமான ரஞ்ஜனி சுப்ரமணியம்   அண்மையில் ஓவியா (தமிழகம்)  பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றிச் சிறப்பானதொரு விமர்சனத்தை எழுதியிருக்கின்றார். அவருக்கு என் நன்றி.  பதிவுகள் இணைய இதழில் வெளியான அவ்விமர்சனத்தை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.



அகவயமான வாசிப்பினை வேண்டுவதே இலக்கியம். எனினும் புற உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப அமைப்பாலும் உட்பொருளாலும் மாற்றம் காண்பது தவிர்க்க முடியாதது. மனிதகுலமே கூர்ப்பின் வழி இன்றிருக்கும் வடிவில் வந்திருக்கும் போது, இலக்கிய வடிவங்களும் அதன் இலக்கணங்களும் மாறக்கூடாது எனக் கூறமுடியுமா?

'இலக்கியம் ஒரு யானை . நம்நாட்டு இலக்கியவாதிகள் தமக்குள் குழுக்களாகப் பிரிந்து தாம் சொல்வதுதான் சரியென, யானை பார்த்த அந்தகர் போல வாதிட்டுக் கொண்டு இருக்கின்றனர்' என்கிறது நாவலில் வரும் உரையாடல் ஒன்று. உண்மை. எல்லைகள் அற்றதே இலக்கியம்.

'இலக்கியம் சமுதாய பயன் கொண்டதாக அமைய வேண்டிய அதேசமயம் அது எழுத்தின் கலைத்துவத்தை சிதைத்து விடவும் கூடாது' எனும் கருத்தும் நாவலில் கூறப்பட்டுள்ளது.

Sunday, November 5, 2023

தேடகம் (தமிழர் வகைதுறை வள நிலையம்) அமைப்பின் சமூக, அரசியல், கலை இலக்கியப்பங்களிப்புகள் பற்றிய சுருக்கமான அறிமுகப் பதிவு! - வ.ந.கிரிதரன் -


கனடாத் தமிழ்க் கலை, இலக்கிய உலகில் , சமூக,அரசியற் செயற்பாடுகளில் ஓர் அமைப்பின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால் இதுவரை இவ்வமைப்பு பற்றிய ,விரிவான , பூரணமானதோர் ஆய்வெதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்காக இவ்வமைப்புக்கு விருதுகள் எவையும் கொடுக்கப்பட்டதாகவும்  தெரியவில்லை. இருந்தாலும் இவ்வமைப்பு, எவ்விதப் பயன்களையும் கருதாமல் , இன்னும் இயங்கிக்கொண்டுதானுள்ளது. காலத்துக்குக் காலம் இவ்வமைப்புடன் இணைந்து இயங்கியவர்கள் பலர் ஒதுங்கி விட்டாலும், இன்னும் சிலர் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டுதானுள்ளார்கள்.  இவ்வமைப்பு பற்றிய விரிவான ஆய்வில் இதுவரை இவ்வமைப்புடன் இணைந்து  இயங்கியவர்கள் பற்றிய விபரங்களும் ஆவணப்படுத்தப்படுவது அவசியம். இப்பொழுது இந்த அமைப்பு எதுவென்னும் கேள்வி உங்கள் உள்ளங்களில் எழும்பத்தொடங்கியிருக்கும். இந்த அமைப்பு தேடகம் என்று அறியப்பட்ட தமிழர் வகைதுறை வளநிலையம்.

தேடகம் அமைப்பின் இதுவரை காலப் பல்வகைப் பங்களிப்புகளையும் நோக்கினால் பின்வரும் வகைகளில் அவற்றைப் பிரித்துப்பார்க்கலாம்:

Saturday, November 4, 2023

எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியனின் புலனாய்வுக் கற்பனை! - வ.ந.கிரிதரன் -

                            -  எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் (அருண் அம்பலவாணர்)   -     
 
எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் (அருண் அம்பலவாணர்) சிறந்த கவிஞர். எழுத்தாளர். ஆனால் அவ்வப்போது அவர் எழுதும் புலனாய்வு ஊடகக் கட்டுரைகள்தாம் சில வேளைகளில் சிரிப்பைத் தருகின்றன. நட்சத்திரன் செவ்விந்தியன் தனது முகநூற் பதிவொன்றில் என்னைத் தன் பிரச்சார முகவராக ஜெயமோகன் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டுகின்றார்.
அத்துடன் அவர் நிற்கவில்லை. மேலும் பல குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றார். 
 
ஜெயமோகனின் பங்களிப்பில் உருவான தமிழ் விக்கி பற்றிக் கடுமையாக விமர்சித்ததால், ஜெயமோகன் என்னுடன் சமரசம் செய்ய, தமிழ் இலக்கியத் தோட்டத்துக்குப் பரிந்துரை செய்ததால்தான் என்க்கு அண்மையில் கிடைத்த தமிழ் இலக்கியத் தோட்ட விருது கிடைத்ததாம். 

Monday, October 23, 2023

(பதிவுகள்.காம்) மராட்டிய எழுத்தாளர் சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி"யின் அடையாளங்களைத் தேடி... - புதியமாதவி, மும்பை -


மராட்டிய எழுத்தாளர் சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி" பற்றி , பதிவுகள் இணைய இதழில் 2008இல் வெளியான கட்டுரை. 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஆவணப்படுத்தும் பொருட்டு மீள்பிரசுரமாகின்றது.


நான் சபிக்கிறேன்
உன்னை
உன் எழுத்துக்களை
உன் கலாச்சாரத்தை
உன் வேஷத்தை..  
( நாம்தேவ் தசள் - கோல்ப்பிதா கவிதைகளிருந்து)

மராட்டிய மாநிலத்தில் ஒரு புதிய அலை இதுவரை எழுதப்பட்டிருந்த இலக்கியத்தின் பக்கங்களைப் புரட்டி, இதுவரை நிறுவப்பட்டிருந்த சமூகத்தின் அடையாளங்களை வீசி எறிந்து ஒரு கோட்டோவியத்தை வரைந்தது. 1960களில் ஏற்பட்ட சிறுபத்திரிகைகளின் வளர்ச்சி, மும்பையில் தொழில்மயம், அந்தத் தொழில்மயத்தில் எழுந்த புதிய தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்கங்கள், அதுசார்ந்த மார்க்சிய சிந்தனைகள் இந்தப் பின்புலத்தில் 1972ல் தலித் பைந்தர் அமைப்பு .. என்று தொடர் அலையாக எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். அந்தக் குரலைப் பதிவு செய்திருக்கும் தலித் இலக்கியங்கள். அதிலும் குறிப்பாக 1980களில் தலித் எழுத்தாளர்களின் 'தன் வரலாற்று" பாணியிலான தலித் வரலாறு மார்க்சிய சிந்தனைகளையும் சேர்த்தே புரட்டிப் போட்டது.

தலித் எழுதாளர் தயாப்வாரின் "பலுட்டா " -சமூக உரிமை (1978) லஷ்மண் மானேயின் " யுபரா"- அந்நியன் (1980) லஷ்மண் கெய்க்க்வாட்டின் "யுசல்ய -அற்பத்திருடன் (1987) பெண் தலித் எழுத்தாளர் பேபி காம்ப்ளேயின் 'ஜின் அமுச்" (இப்படியாக எங்கள் வாழ்க்கை) இவை அனைத்தும் தலித் தன் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடத்தக்கன. இக்காலக்கட்டத்தில் வெளிவந்த சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி" வெளிவந்தவுடன் மிகவும் பேசப்பட்ட ஒரு பதிவு. அக்கர்மஷி என்றால் ஜாதிபிரஷ்டம் செய்யப்பட்டவன் - THE OUTCASTE என்று பொருள். ஜாதிகளால் விலக்கிவைக்கப்பட்டவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

டொராண்டோ'வில் ஜெயமோகன்! - வ.ந.கிரிதரன் -



21.10.2023 அன்று 'தமிழ் இலக்கியத் தோட்ட'த்தின் ஏற்பாட்டில் மார்க்கம் மாநகரசபைக் கூடத்தில் நடைபெற்ற எழுத்தாளர் ஜெயமோகனின் உரையினைக் கேட்பதற்காக எழுத்தாளர் தேவகாந்தன் மற்றும் கடல்புத்திரனுடன் சென்றிருந்தேன். நிகழ்வில் கலை, இலக்கிய மற்றும் அரசியல் ஆளுமைகளைக் காண முடிந்தது. குறிப்பாக எழுத்தாளர் மொன்ரியால் மைக்கல், எழுத்தாளர் 'காலம்' செல்வம், எழுத்தாளர் க.நவம், 'அசை' சிவதாசன், எழுத்தாளர் ஊடகவியலாளருமான கனடா மூர்த்தி, எழுத்தாளர்  டி.செ. தமிழன், எழுத்தாளர் குரு அரவிந்தன், எழுத்தாளர் அ.முத்துலிங்கம், எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், 'விளம்பரம்' மகேந்திரன், 'தமிழர் தகவல்' திருச்செல்வம், எழுத்தாளர் மனுவல் ஜேசுதாசன், 'உதயன்' லோகேந்திரலிங்கம் என்று பலரைக் காண முடிந்தது.

Tuesday, September 19, 2023

(பதிவுகள்.காம்) அமெரிக்கா - ஞானம் இலம்பேர்ட் -


எனது  'அமெரிக்கா' (1996) சிறுகதைத்தொகுப்பு பற்றி 'டொரோண்டோ, கனடாவில் ஒர் இலக்கியக் கலந்துரையாடல் , தேடகம் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்ணூறுகளில் நடைபெற்றது. அதில்  கலந்துகொண்டு 'அமெரிக்கா' பற்றி உரையாற்றிய நாடகவியலாளரும் , கலை, இலக்கியத்திறனாய்வாளருமான ஞானம் இலம்பேட்டின் உரையின் முக்கிய பகுதிகள் இவை.  பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரை. பகிர்ந்துகொள்கின்றேன்.


சமூக நிகழ்வுகளை ஒரு தளத்தில் வைத்து அந்த நிகழ்வுகளுக்கு ஓர் உருவம் கொடுப்பதிலும், அவற்றைப் பல்லின ஆக்கங்கள் செய்வதிலும் எமக்குப் பெரும் பங்குண்டு.  அந்த நிகழ்வுகளுக்குக் கொடுத்த உருவம்தான் இந்த அமெரிக்கா என்ற இச்சிறு நூலாகும்.  இதிலுள்ள ஏழு சிறுகதைகளையும், குறுநாவலையும்  படிக்கிறபொழுது Georgi Plekhanov இன் ஒரு கூற்று ஞாபகத்துக்கு வருகின்றது.  அவர் சொல்கிறார்:

"மனிதன் தன்னைச் சுற்றியுள்ள யதார்த்தத்தின் செல்வாக்கில் அனுபவித்துள்ள உண்ர்ச்சிகளையும், எண்ணங்களையும் தனக்குள் மீண்டும் எழச்செய்து அவற்றைத் திட்டவட்டமாக உருவங்களில் வெளியிடும்போது கலை பிறக்கிறது"

Thursday, August 31, 2023

(பதிவுகள்.காம்) எழுத்தாளர் நா. சோமகாந்தனின் (ஈழத்துச் சோமு) அறியப்படாத நாவல் 'களனி நதி தீரத்திலே' - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் சோமகாந்தன் வெளியிட்ட நூல்களிலோ அல்லது அவர் பற்றிய கட்டுரைகளிலோ அவரது 'களனி நதி தீரத்திலே'  என்னும் இந்த நாவல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததாக எனக்கு நினைவிலில்லை.  ஒரு வேளை நான் தவற விட்டிருக்கலாம்.  நான் அறிந்த வரையில்  இந்நாவல் நிச்சயம் இதுவரை நூலாக வெளியாகவில்லையென்றே கருதுகின்றேன். ஆனால் அவரது நாவல்களில் இதுவொரு முக்கியமான நாவலாகவே எனக்குப் படுகிறது. 20.8.1961 தொடக்கம் 29.101.961 வரை மொத்தம் 11 அத்தியாயங்கள் வெளியாகியுள்ளன.  1- 4 வரையிலான அத்தியாயங்களுக்குத் தலைப்புகள் இடப்பட்டிருக்கவில்லை.

கதைச்சுருக்கம்: கதை சொல்லியும் அவன் நண்பன் நடராஜனும் பால்ய காலத்திலிருந்து நண்பர்கள். இருவரும் எஸ்.எஸ்.சி சித்தியடைந்து   கொழும்பில் வேலை கிடைத்துச் செல்கின்றார்கள். ஒன்றாகத் தங்கியிருக்கின்றார்கள். இருவரும் களனி கங்கை நதிக்கரையில் றோசலின் என்னும் அழகியொருத்தியைச் சந்திக்கின்றார்கள். அதன் பின் ஒரு நாள் வேலைக்குச் செல்லும் நண்பர்கள் வழக்கமாகச் செல்லும் ட்ரொலி வருவதற்கு நேரமெடுக்கவே 'ராக்சி' பிடித்துச் செல்லத்தீர்மானிக்கிறார்கள். றோசலின் அன்று புதிய வேலை கிடைத்துச் செல்வதற்காக 'ட்ரொலி'யை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள். அவளுக்கும் நேரமாகிவிடவே இவர்களிடம் தனக்கும் 'ராக்சி'யில் இடம் தர முடியுமா  என்று கேட்கின்றாள். இவர்களும் சம்மதித்து அவளுக்கு உதவுகின்றார்கள். அன்று முதல் மூவரும் நண்பர்களாகின்றார்கள்.

அவர்களுக்கிடையில் நட்பு வளர்கிறது. அவள் இருவருடனும் சகஜமாகப் பழகி வருகின்றாள். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் அவள் பேச்சு, செயல்களை வைத்து அவள் மீது காதல் கொள்கின்றார்கள். ஒரு சமயம் கதை சொல்லி உடல் நலம் கெட்டு ஊருக்குச் சென்று திரும்புகையில் நண்பன் நடராஜன் றோசி மேல் காதல் கொண்டிருப்பதை அறிந்து அவன் மேல் ஆத்திரமடைகின்றான். றோசியும் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதி அவள் மீதும் கோபமடைகின்றான்.

றோசி காரணமாக நண்பர்களுக்கிடையில் மோதல் முற்றி கதை சொல்லி நண்பன் நடராஜனைத் தாக்கவே , நடராஜனும் ஆத்திரமடைந்து அவனைவிட்டு விலகி, றோசியின் வீட்டுக்கே சென்று விடுகின்றான். உண்மையில் அதுவரை றோசி அவர்களுடன் சாதாரணமாகவே பழகி வந்திருக்கின்றாள். நடராஜன் அவளிருப்பிடத்துக் சென்ற பின்பே அவனது தன்மீதான தீவிர காதலை உணர்ந்து அவனைக் காதலிக்கத்தொடங்குகின்றாள்.

பின்னர் கதை சொல்லி ஊரிலிருக்கும் அவனுக்குத் தெரிந்த பெண்ணான கமலா என்பவளை மண முடிக்கின்றான். இதற்கிடையில் நாடு தழுவி நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு பேசுகையில் முற்போக்குவாதியான கதைசொல்லிக் காடையர்களால் தாக்கப்படும் சந்தர்ப்பமுமேற்படுகின்றது., ஆனால் இறுதியில் அத்தொழிலாளர் வேலை நிறுத்தமும் எவ்விதப் பயனுமறறு முடிவுக்கு வந்து, தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதுடன் முடிவுக்கு வருகின்றது.

நாவலின் இறுதி துயர் மிக்கது. நாட்டின் அரசியல் சூழலால் வெடிக்கும் வன்முறையில் நடராஜன் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டு விடுகின்றான். றோசியும் பலரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு, தாதியாகி கர்த்தரிடம் சரணடைகின்றாள்.  கதை சொல்லியின் குழந்தைப்பேறுக்கும் அவளே தாதியாக உதவியும் செய்கின்றாள். அவளது வீடு  காடையர்களால் எரிக்கபப்டுகையில் அதற்குள் சிக்கி அவளது தந்தையும் எரிந்து போகின்றார். நாட்டில் நடந்த இனக்கலவரம்தானது. ஆனால் கதாசிரியர் அதனை மறைமுகமாகவே எடுத்துரைப்பார். 'வடக்கில் மின்னல், தெற்கில் முழக்கம். எந்நேரமும் மழை கொட்டத்தயாராகக் கருமேகங்கள் நாடு பூராவும் கவிந்திருந்தன.' எத்தனையோ லட்சம் ஜனங்களின் அமைதிக்கு உலை வைப்பது போல, இலங்கை வானில் கவிந்திருந்த கரு மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஆக்ரோசமாக முட்டி அகங்காரமாக மோதி பலத்த மழையாகக் கொட்டத் துவங்கிவிட்டன. பயங்கரப் பிரவாகம். எத்தனை உயிர்கள், உடமைகள் அதில் அடித்துச் செல்லப்பட்டனவோ?"  போன்ற சொற்றொடர்களால் நாட்டுச் சூழல் விபரிக்கப்படுகின்றது.

நாவலில் கதை சொல்லியின் பெயர் எங்கும் கூறப்படவில்லை. ஆனால்  முற்போக்குச் சிந்தனை மிக்க எழுத்தாளன் என்னும் அவனது  ஆளுமை நண்பர்களுக்கிடையிலான உரையாடல், சம்பவங்கள் மூலம் விபரிக்கப்படுகின்றது. நாவலின் நடை வாசகர்களைக்கவரும் எளிமையான , ஆனால் சுவையான நடை.

இன்னுமொரு விடயம் - நாவலில் வரும் றோசி பேர்கர் இனப்பெண்ணா அல்லது சிங்களக் கிறிஸ்தவப் பெண்ணா என்பது தெளிவாக்கப்படவில்லை. ஆனால் றோசியும் நடராஜனும் இரு வேறு இனத்தவர்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவே எழுத்தாளர் சோமகாந்தனின் முதல் நாவல். இந்நாவல் அவரது சொந்த அனுபவத்தில் புனையப்பட்டது என்று 'புதினம்' பத்திரிகைக்கான நேர்காணலில் அவரே கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாவல் தொடராக வெளியானபோது பத்திரிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான வரதர் இன்னுமொரு விளம்பர் உத்தியையும் பாவித்திருந்தார்.  டேவிட் லீனின் (David Lean) இயக்கத்தில் 1957இல் வெளியாகி 7 ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற சிறந்த படம் The Bridge on the River Kwai. இதன் காட்சிகள் இலங்கையிலும் எடுக்கப்பட்டிருந்தன. இதில் கொட்டாஞ்சேனையில் நிறுவனமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த அழகான தோற்றமுள்ள  லிண்டா என்னும் பெண்ணும் நடித்திருந்தார்.  அவரை நாவலின் றோசி பாத்திரமாக்கி புகைப்படப்பிடிப்பாளர் சிவம் என்பவரைக்கொண்டு புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டிருந்தார்.



                                                                     - நாவலாசிரியர் நா.சோமகாந்தன் (ஈழத்துச் சோமு) -

நாவல்:  'களனி நதி தீரத்திலே' - நா. சோமகாந்தன் (ஈழத்துச் சோமு)

அத்தியாயம் 1 -  (20.8.1961)
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5 - றோசியும் றோசாவும்
அத்தியாயம் 6 - இரண்டு மலர்களும் ஒரு வண்டும்
அத்தியாயம் 7 - மோகவலை
அத்தியாயம் 8 - மண்  கோட்டையா? மதிற் கோட்டையா?
அத்தியாயம் 9 - பாவ விமோசனம்
அத்தியாயம் 10 - கருமுகில்
அத்தியாயம் 11 - அஞ்சலி  (29.10.1961)

Thursday, August 17, 2023

மறக்க முடியாத வீதி ஓவியரும், அவர் வரைந்த ஓவியமும்! - வ.ந.கிரிதரன் -


மறக்க முடியாத ஓவியமிது.  எண்பதுகளின் ஆரம்பத்தில், நாட்டை விட்டுப் புகலிடம் நாடி புறப்பட்ட பொழுதில், சுமார் ஒரு வருடம் நியூ யோர்க் மாநகரத்தில் அகதிக்கோரிக்கையாளனாக அலைந்து திரிந்த காலகட்டத்தில் வீதி ஓவியன் ஒருவனால் வரையப்பட்ட ஓவியம்.

நியூ யோர்க் ஸ்டேட் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில், அமெரிக்கன் அவென்யுவில் நடைபாதையொன்றில் ஓவியர்கள் சிலர் சிலரை அவர்கள்முன் கதிரைகளில் இருத்தி வரைந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் வரைவதற்கு எவரும் கிடைக்காமல் ஓடு மீன் ஓட, உறு மீன் வருமளவும் வாடி நிற்கும் கொக்காகக் காத்துக்கொண்டிருந்தார். என்னக் கண்டதும் அவர் முகம் மீனைக் கண்ட கொக்காக மலர்ந்தது.

Tuesday, August 15, 2023

(பதிவுகள்.காம்) வ.ந. கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -


- எழுத்தாளரும் , கலை, இலக்கிய விமர்சகருமான ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்களின்  வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' பற்றிய விரிவான பார்வையிது. பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது. -


இயற்கையின் பேரழகில் தன்னை இழக்கும் ஒரு கலைஞன் சமகாலத்தில் அறிவுஜீவியாக பேரண்ட இரகசியங்களோடு சார்பியல் பற்றியும் கவி படைக்கையில் நிஜமாகவே ஆச்சரியத்தில் உறையுமொரு வாசகியின் வியப்பு மிகுந்த ரசனைக் குறிப்பிது. நவீன இயற்பியலின் தந்தையான விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் நனவுலக மாணவனாக காலவெளி, மானுட இருப்பு, காலம் ,நேரம், பரிமாணம் என அறிவுணர்வின் தேடலுடன் அலையும் இக்கவி, காணும் இடமெங்கும் கண்ணம்மாவுடன் கதை பேசும் மகாகவியின் கனவுலக ரசிகருமாவார்.

 இக் கவிஞரை, 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் கவிதைத் தொகுதியூடாக முறையாக இனம் கண்ட வாசகர் எந்த விதத்திலும் வியப்படையத் தேவையில்லை. வ.ந.கிரிதரன் அவர்களின் இத்தேடல் உணர்வையும், ஏக்கத்தையும் பிரபஞ்சத்தின் மேல் கொண்ட பிரியத்தையும் அவரது படைப்புகளில் அடிக்கடி காணக் கூடியதாக இருக்கும்.

இக்கவிதைத் தொகுப்பினை வாசிப்பதற்கு முன் இயற்கை பற்றியும் நவீன இயற்பியல், சார்பியல், அண்டம், குவாண்டம், ஒளியாண்டு பற்றிய எளிய அறிதலையேனும் பெற்றுக் கொண்டால் இப்படைப்பினை வியந்து நோக்கலாம். பிரமிப்பை அடையலாம். இல்லாவிடில் 'நகரத்து மனிதனின் புலம்பலாகவே ' அமைய நேரிடலாம்.

மரபுக்கவிதையின் இலக்கணங்களோ அன்றி புதுக்கவிதையின் அழகுகளான படிமம், குறியீடு, தொன்மம் பற்றியோ கவிதைக்குள் உணரப்படும் மீமொழி பற்றியோ தெளிவான அறிவற்ற ஒரு வாசகியின் மழலைமொழி இதுவென முதலில் கூறிக்கொள்ள வேண்டும். எனினும் 'உளப்புயல்கள் வீசியடிக்கும் போது, அகக்கடலில் படகுகளாயிருந்து நினைவுச் சுழலுக்குள் சிக்கும்' ஒரு கவிஞனின் உணர்வுகளை மாற்றுக்குறையாமல் உள்வாங்கும் உளப்பாங்கு வாய்த்திருப்பதில் மகிழ்வும் கொள்கிறேன்.

Friday, August 11, 2023

சீர்காழி தாஜின் "தங்ஙள் அமீர்'! - வ.ந.கிரிதரன் -


அமரர் சீர்காழி தாஜ் என்னைப்பொறுத்தவரையில் மறக்க முடியாத ஓர் இலக்கிய ஆளுமை.  அவர் இவ்வளவு விரைவாக எம்மை விட்டுப் போய் விடுவார் என்பதை நான் நினைத்தும் பார்த்ததில்லை. தொடர்ந்தும் எழுத்தில் பல உச்சங்களைத் தொடுவார் என்று நினைத்திருந்த வேளையில் அவர் மறைந்து விட்டார்.  2019இல் அவர் மறைந்த போது அவர் மறைவதற்கு முதல் நாளும் முகநூலில் எழுதிக்கொண்டிருந்தார்.  மறுநாள் அவர் மறைவுச் செய்தியை அறிந்தபோது நம்புவதற்கே முடியாமலிருந்தது. அவரை நான் ஒருபோதும் சந்திக்கவேயில்லை. அது இன்னும் துயரைத்தந்தது.

மீண்டுமொரு தடவை சிந்தனைக்குருவி தன் சிறகுகளை அடிக்கின்றது.  நண்பர் தாஜை முதன் முதலில் அறிந்த காலகட்டம் நினைவுக்கு வருகின்றது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா (தொகுப்பு) மற்றும், மறும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூல்களைத் தமிழக நூல் நிலையக் கிளையொன்றில் கண்டு, வாசித்துவிட்டுத் தன் கருத்துகளை ஆக்கபூர்வமான முறையில் நீண்ட இரு கடிதங்களாக எழுதி அனுப்பியிருந்தார். பின்னர் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுகு ஆனையொன்றிருந்தது' நூலினைக் கனடாவில் வசிக்கும் தனது நண்பர் ஒருவர் மூலம் அனுப்பிருந்தார்.

Tuesday, August 1, 2023

Novel: AN IMMIGRANT By Navaratnam Giritharan (V.N.Giritharan) [Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan ]

Novel: AN IMMIGRANT By V.N.Giritharan ; Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by  Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel , An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. –

Chapter 1 am born anew
Chapter 2 In the middle of the night
Chapter 3 Cyclone
Chapter 4: A Courageous Priest
Chapter 5 From Ilango’s diary..…
Chapter 6 The heart that gets into a trance in the rain
chapter 7 Mrs. Padma Ajith
Chapter 8 Fabulous Feast
Chapter 9 The pride and glory of 42nd Road
Chapter 10 The camels of the desert that have lost their way.
Chapter 11 The tale of Ilango turning into Ilanagaa
Chapter 12 With hope intact!
Chapter 13 I want a job
Chapter 14 Funny immigration officer!
Chapter 15 Selling Umbrellas!
Chapter 16 16 Haribabu’s advertisement
Chapter 17 Haribabu’s road side business.
Chapter 18 Henry’s Cleverness (Yes?)
Chapter 19 Gosh in Love !
Chapter 20 Indira’s doubt
Chapter 21 By the grace of Carlo….
Chapter 23 An appeal to the goddess of freedom
Chapter 24 Heading towards lawyer Anisman’s office!
Chapter 25 Anisman’s advice and suggestion!
Chapter 26 A clever agent called Papblo
Chapter 27 I am born anew


CHAPTER 1: I AM BORN ANEW TODAY

From the fifth floor of the wartime naval force office building, which also functioned as the Correctional Facility, Ilango looked out to the streets of great, grand New York City. Situated on Flushing Street, the place had doubled as a detention camp for illegal immigrants and had been his only home for the past two months. Darkness from the night continued to seep through with all kinds of thoughts swirling Ilango’s mind. At last, the dream of escaping this detention camp would soon become a reality.From tomorrow onwards, he would be a real free bird. The Court of Justice has allowed him, who hitherto, has been detained in prison as an illegal immigrant waiting to be released on bail. Now, he could hope for the solution of demanding refugee status. He can go out without any constraint and face the challenges that life has in store for him. But before we continue, it would now be helpful to the readers to learn some details about this man.


Ilango: He is a Tamil citizen of Sri Lanka. A young man. One of the thousands of Tamils who fled from their Mother Land following the 1983 ethnic riots. The conflict, wrath, and hostility between the two main social groups – The Sinhalese and the Tamils – are known to have a long-fought socio-political feud of over two thousand years. However, since 1948, when the foreigners who had last ruled the island (e.g. the British) left Sri Lanka, the ethnic clashes resumed. The past historical events of the island greatly contributed to the current situation. Beginning from Thuttakamini/Ellaalan, continuing through Rajarajan I/Rajendran, then Singai Paraasaran, and ending with the king of Kandi Sri Vikrama Rajasinhan – such a lengthy history cannot be brushed aside with one stroke. The enmity and distrust between these two ethnic groups gradually intensified to the present stage of treacherously raging fire. Further deliberate, strategic settlements on the basis of ethnicity, the method of grading in Education, political priorities on the basis of religion have just added fuel to the fire, so to say. But, these are all superficial reasons. The deep-rooted causes are really the distinctly different traits, problems and conflicts on both the socio-political and economic fronts.

Monday, July 31, 2023

ஆசி.கந்தராஜாவின் 'அகதியின் பேர்ளின் வாசல்' - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் ஆசி.கந்தராஜாவின் 'அகதியின் பேர்லின் வாசல்' படித்தேன்.  நிச்சயமாகப் புகலிடத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக ஆஸ்திரேலியத்  தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்புகளில் ஒன்றாக இதனைக் கூறலாம்.  இந்த நாவலின் களங்கள் , நான் இதுவரை வாசித்த புகலிட நாவல்களில் வாசிக்காத களங்கள்.  எழுபதுகளின் இறுதியில்  , ஜே.ஆர்.பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அறிவித்து, பிரிகேடியர் வீரதுங்காவை யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாக அனுப்பி, அவ்வருடத்தின் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்கும்படி கட்டளையிட்டதிலிருந்து இலங்கைத்தமிழர்கள் மேல் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இன்பம், செல்வம் கொல்லப்பட்டதுடன் ஆரம்பமாகிய படுகொலைகள் தொடர் ஆரம்பித்தன.

அக்காலகட்டத்தில் தமிழ் இளைஞர்கள் அதிக அளவில் மேற்கு ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கத்தொடங்கினார்கள். பூங்காக்கள் சிலவற்றில் பியர் போத்தலுடன் காணப்பட்ட தமிழ் அகதிகளைப்பற்றிய செய்திகளை ஊடகங்கள் சில பிரசுரித்தன.நினைவுக்கு வருகின்றது. அக்காலகட்டத்தில் ருஷ்யாவின் 'ஏரோஃபுளெட்'டில் அகதிகள் கிழக்கு ஜேர்மனியூடாக மேற்கு ஜேர்மனிக்குச் சென்றதை அனைவரும் அறிந்திருந்தனர். இந்நாவல் கிழக்கு ஜேர்மனியூடு ஏன் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகப் படையெடுத்தார்கள் என்பதை விபரமாக விபரிக்கின்றது.  அக்காலத்தில் உலகில் நிலவிய குளிர்யுத்தச் (Cold War)சூழல் காரணமாகக்  கிழக்கு ஜேர்மனிக்குள் இருந்த  பேர்லின் நகர் இரண்டாகக் கிழக்கு பேர்லின், மேற்கு பேர்லின் என்று  பிளவுண்டிருந்த சூழல் எவ்விதம் இலங்கைத் தமிழ் அகதிகள் மேற்கு ஜேர்மனிக்குள் நுழைய வழி வகுத்தது என்பதை நாவல் கூறுகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் மேற்கு நாடுகளுக்கும் , சோவியத் குடியரசுக்குமிடையில் உருவான 'பொட்ஸ்டம்'  (Potsdam) ஒப்பந்தம் எவ்விதம் இவ்விதச் சுழலை உருவாக்கியது என்பதை அனைவருக்கும் புரிய வைக்கின்றது.

Monday, July 3, 2023

சிறுகதை: கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய்! - வ.ந.கிரிதரன் -

 -  ஈழநாடு வாரமலர் (யாழ்ப்பாணம்)  2.07.2023 -


"இடிக்கும் கேளிர்! நுங்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று, மற்றில்ல,
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்,
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்  
பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே"

 
                                           -  வெள்ளிவீதியார் ((குறுந்தொகை) -

1.

இருண்டு விட்டிருந்த டொராண்டோ மாநகரத்து இரவொன்றில் தன் அபார்ட்மென்டின் பலகணியில் வந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே விரிந்திருந்த விண்ணை நோக்கினான் கேசவன். நகரத்து இரவு வான் ஒரு சில நட்சத்திரங்களுடன் இருண்டிருந்தாலும், அன்று பெணர்ணமி நாளென்பதால் தண்ணொளியில் இரவு குளித்துக்கொண்டிருந்தது. அவனுக்குச் சிறு வயதிலிருந்தே நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானை இரசிப்பதென்றால் மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளிலொன்று. இரவு வானின் விரிவும், நட்சத்திரக் கன்னியர்களின் கெக்களிப்பும் எப்பொழுதும் அவனுக்குப் பிரமிப்புடன் இருப்பு பற்றிய சிந்தனைகளையும் ஏற்படுத்தின. எவ்வளவு நேரமென்றாலும் அவனால் இரவு வானை இரசித்துக்கொண்டேயிருக்க முடியும்.

வனங்களும், குளங்கும் நிறைந்த வன்னி மண்ணில் வளர்ந்தவன் அவன். எத்தனை புள்ளினங்கள்! எத்தனை மிருகங்கள்! எத்தனை வகை வகையான விருட்சங்கள்!  வன்னியில் அவனை மிகவும் கவர்ந்தவை செந்தாமை, வெண்டாமரைகள் பூத்துக்குலுங்கும் குளங்களும், புள்ளினங்களும் , பல்வகை  மரங்களுமே.  வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிச் செல்லும் வீதியில் அமைந்திருந்தது குருமண்காடு. அங்குதான் அவன் வளர்ந்தான். குருமண்காடு வனப்பிரதேசமாகவிருந்த காலகட்டத்தில் அவனது வாழ்க்கை அங்கு கழிந்திருந்தது. அதனால் அவனுக்கு எப்பொழுதும் குருமண்காடும், அக்காலகட்ட நினைவுகளும் அழியாத கோலங்கள்.

Sunday, July 2, 2023

(பதிவுகள்.காம்) எழுத்தாளர் பாவண்ணனுடன் ஒரு நேர்காணல்: "கருணையும் மனிதாபிமானமும் வாழ்க்கையின் ஆதாரத்தளங்கள் என்பது என் அழுத்தமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையையே வெவ்வேறு பின்னணியில் வெவ்வேறு மனிதர்கள் வழியாக வெளிப்படுத்தி வந்திருக்கிறேன். அதுவே என் எழுத்தின் வழி." - பாவண்ணன் - நேர்காணல் கண்டவர் எழுத்தாளரும், 'பதிவுகள்' இணைய இதழ் ஆசிரியருமான வ.ந.கிரிதரன்!


- தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் பாவண்ணனின் பங்களிப்பு முக்கியமானது.  சிறுகதை, கவிதை, நாவல், இலக்கியத் திறனாய்வு மற்றும் மொழிபெயர்ப்பு என இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகப்பட்டது. மொழிபெயர்ப்புக்காக இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமியின் விருது பெற்றவர்.  தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (கனடா)  2022 ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனைக்கான இயல்  விருது  பெற்றவர். விளக்கு அமைப்பின் வாழ்நாள் சாதனைக்கான புதுமைப்பித்தன் விருது பெற்றவர். புதுச்சேரி அரசின், இலக்கியச் சிந்தனையின் சிறந்த நாவல் விருது பெற்றவர். இவை தவிர மேலும் பல இலக்கிய விருதுகளைச் சிறுகதை, கட்டுரை, குழந்தை இலக்கியத்துக்காகப் பெற்றவர். பாவண்ணன் பதிவுகள் இணைய இதழுக்கு வழங்கிய நேர்காணல் இது.  -

வணக்கம் பாவண்ணன், முதலில் உங்களுக்கு இயல்விருது 2022 வாழ்நாள் இலக்கியச் சாதனைக்காகக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியும் , வாழ்த்துகளும். உங்களது இலக்கியச் செயற்பாடுகளை அனைவரும் அறிந்திருக்கின்றோம். பதிவுகள் இணைய இதழிலும் உங்களது நெடுங்கதையான 'போர்க்களம்' வெளியாகியுள்ளதை இத்தருணத்தில் நினைவு கூர்கின்றோம். முதலில் உங்கள் இளமைக்கால அனுபவங்களை, பிறந்த ஊர் போன்ற விபரங்களை அறிய ஆவலாகவுள்ளோம். அவை பற்றிய உங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

வணக்கம். உங்கள் வாழ்த்து மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக்க நன்றி. பதிவுகள் இணைய இதழில் எழுதிய பழைய நினைவுகளும் உங்களோடு பகிர்ந்துகொண்ட மின்னஞ்சல்களின் நினைவுகளும் பசுமையாக என் ஆழ்மனத்தில் பதிந்துள்ளன. அவற்றை ஒருபோதும் மறக்கமாட்டேன். தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த வளவனூர் என்னும் கிராமமே எனக்குச் சொந்த ஊர். விழுப்புரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையில் இக்கிராமம் இருக்கிறது. தொடக்கப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளிப்படிப்பு வரை வளவனூரிலேயே படித்தேன். பிறகு புகுமுக வகுப்பை விழுப்புரம் அரசு கல்லூரியிலும் பட்டப்படிப்பை புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியிலும் படித்தேன். என் ஆசிரியர்களே எனக்குச் சிறந்த வழிகாட்டிகளாக இருந்தார்கள். வளவனூர் மிக அழகான கிராமம். மொத்த ஊரே நாலு சதுரகிலோமீட்டருக்குள் அடங்கிவிடும். கிராமத்தைச் சுற்றியுள்ள பல சிற்றூர்களுக்கு பாசன வசதியைக் கொடுக்கும் அளவுக்கு பெரியதொரு ஏரி இருக்கிறது. தென்பெண்ணை ஆற்றோடு ஏரியை இணைக்கும் நீண்ட கால்வாயும் உண்டு. கோடைக்காலத்தில் வறண்டிருந்தாலும் மழைக்காலத்தில் ஏரி நிரம்பி வழியும். அப்போது பலவிதமான பறவைகளை ஏரியைச் சுற்றியுள்ள மரங்களில் அமர்ந்திருக்கும் அழகைப் பார்க்கமுடியும். எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் விரிவான நிலப்பரப்பைக் கொண்ட இடம். ஒரு பெரிய தோப்புக்குள் கட்டப்பட்ட வீட்டைப்போல அக்காலத்தில் இருக்கும். ஆலமரங்கள், அரசமரங்கள், நாவல் மரங்கள், இலுப்பைமரங்கள், நுணா மரங்கள் என எல்லா வகை மரங்களும் நிறைந்திருக்கும். அந்த மரங்களின் நிழலில்தான் நானும் என் நண்பர்களும் இளமைக்காலத்தில் ஆட்டமாடிக் களித்தோம். திசைக்கொரு கோவில், அழகான கிளை நூலகம், கட்சி சார்ந்த வாசக சாலைகள் எல்லாமே வளவனூரில் இருந்தன. அந்தக் கிராமத்தில் நான் கழித்த இளமைக்காலப் பொழுதுகள் இன்னும் என் நினைவில் பசுமையாகப் பதிந்துள்ளன. இன்றும் தேவைப்படும்போதெல்லாம் அந்த அனுபவங்களின் சுரங்கத்திலிருந்து ஒரு சிலவற்றை என் படைப்புகளில் பயன்படுத்திக்கொள்கிறேன்.

Friday, June 16, 2023

விரைவில் வெளியாகவுள்ள வ.ந.கிரிதரனின் நாவல்: நவீன விக்கிரமாதித்தன்

தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள எனது புதிய நாவல் 'நவீன விக்கிரமாதித்தன்'

 
 
 நாவலிலிருந்து ஓர் அத்தியாயம்
அத்தியாயம் நான்கு: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?

'கண்ணம்மா' என்றேன். மனோரஞ்சிதம் பெருங்காதலுடன் திரும்பிப் பார்த்தாள். கண்ணம்மா என்று நான் அழைப்பதைப் பெரிதும் விரும்புபவள். அச்சமயங்களிலெல்லாம் பதிலுக்குக் 'கண்ணா' என்று என்னை அன்பூற மென்மையாக அழைப்பாள். அந்த அன்பு குழைந்த அவளது அழைப்பைக் கேட்பதற்காகவே அவளை நான் கண்ணம்மா என்று விளிப்பதுண்டு. என்னைப்பொறுத்தவரையில் இவ்விருப்புன் அற்புதமாக அவளை நான் காண்பதுண்டு. அவளற்ற இருப்பை கற்பனை செய்வதே எனக்கு மிகவும் சிரமமானது.

'என்ன கண்ணா மெளனமாகிவிட்டாய்?" என்றாள் அவள்.

'எல்லாம் நம் இருப்பு பற்றிய சிந்தனைதான் கண்ணம்மா"

'இருப்பு பற்றி.. வழக்கம்போல் தத்துவவிசாரம்தானா கண்ணா'

'கண்ணம்மா உனக்குத்தானே எனக்கு பாரதி பாடல்கள் பிடிக்குமென்று தெரியும். எனக்குப் பிடித்த அவரது பாட்டைக் கூறு பார்க்கலாம்."

'கண்ணை மூடிக்கொண்டு கூறுவேன் கண்ணா. 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே பாடல்தானே'

'சரியாகவே கூறினாய் கண்ணம்மா. நீ என் மனத்தை நன்றாகவே  புரிந்து வைத்திருக்கிறாயடி.'

'இந்தக்கவிதை எனக்கும் பிடித்தது கண்ணா. அதற்குக் காரணமே இருப்பு பற்றிய கவிஞரின் கேள்விகளே."

'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?  ஒரு விதத்தில் தர்க்கரீதியாகப் பார்க்கப்போனால் இதுகூடச் சரிதானென்று வாதிடலாம். இல்லையா கண்ணம்மா?'

"எப்படி கண்ணா? எமக்கு வெளியே விரிந்து கிடக்கின்றது நாம் காணும் இப்பிரபஞ்சம். இவ்வுலகம். இப்புற உலகு மாயை என்று எப்படிக் கூறுவது கண்ணா?'

"கண்ணம்மா, நாம் காணும் இந்த உலகம், இப்பிரபஞ்சம் , இவ்வழகிய இயற்கைக் காட்சிகள் இவையெல்லாமே இறுதியாக என் மூளையின் விளைவுகள் தானே. காட்சிகள் மூளையில் நிகழும் மின்னியற் செயற்பாடுகளின் மின்னியல் விளைவுகள் தாமே. மின்னியற்  துடிப்புகள் தாமே. இறுதி விளைவாக நாம் உணர்வது, அறிவது எல்லாமே மூளையின் செயற்பாடுகள் தாமே. இந்நிலையில் எப்படி நீ கண்ணம்மா இவையெல்லாம் மூளைக்கு வெளியில் உள்ளன என்று தீர்மானமாக எண்ண முடியும். நாம் பார்ப்பது , கேட்பது, உணர்வது, இருப்பது எல்லாமே மூளையில் செயற்பாடுகளே. எம் மூளைக்கு வெளியில் எவையுமே இல்லை. ஒருவகையில் அவ்வகையில் எல்லாமே மாயையோ என்றும் ஒருவர் வாதிடலாம். இல்லையா கண்ணம்மா?"

இதற்கு மனோரஞ்சிதம் எதுவிதப் பதிலெதனையும் கூறாமல் சிந்தனையில் சிறிது நேரம் மூழ்கியிருந்தாள்.

விரைவில் வெளிவரவுள்ள நூல்: வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்'

விரைவில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவரவுள்ள எனது கவிதைத்தொகுதி 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்'. காலச்சுவடு பதிப்பகத்தின் சிறப்பான வடிவமைப்பில் வெளியாகும் தொகுப்பு.


தொகுப்பிலுள்ள மூன்று கவிதைகள்

குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
வியாபாரியல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன்..
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
ஆனால் அவை நொண்டிக்குதிரைகளல்ல.
என்னிடமுள்ள குதிரைகள் அனைத்துமே
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்பபதில்லை.
நான் நொண்டிக்குதிரைகளை வளர்ப்பவனோ,
விற்பவனோ அல்லன்.
இருந்தும் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை
அதிகமாகிவிட்டது.
குதிரைத் திருடர்களே! கவனம்.
திருடிய குதிரைகளை வெகு சாமர்த்தியமாக
உங்கள் மந்தையில் கலந்து
விடுவதில் பலே கில்லாடிகள் நீங்கள்.
என்னிடம் நீங்கள் திருடிய அல்லது
திருடப் போகும் குதிரைகள்
நிச்சயம் நொண்டிக்குதிரைகளல்ல.
ஆனால் அவை நல்லவை.
வல்லவையும் கூடத்தான்.
ஆனால் அவை முரட்டுக் குதிரைகள்.
முட்டி மோதவும் தயங்காத
முரட்டுக் குதிரைகள்.

Tuesday, March 28, 2023

அத்தியாயம் இருபத்திமூன்று - நான் மீண்டும் விக்கிரமாதித்தன் பேசுகின்றேன்! - வ.ந.கிரிதரன் -

இதுவரை இங்கு நான் கூறியவற்றிலிருந்து நிச்சயம் நீங்கள் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனைப்பற்றிச் சிறிதளவாவது அறிந்திருப்பீர்கள் என்று நிச்சயமாக நிம்புகின்றேன். ஏற்கனவே நான் கூறியதுபோல் நவீன ஓவியப்பாணியான கியூபிசப் பாணியில் உருவங்கள் அவை எவையாயினும் அவை உருவாக்கப்பட்ட கேத்திரகணித வடிவங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்படும். உணரப்படும். அவ்வடிவங்களிலிருந்து உருவங்கள் உய்த்துணரப்படுமென்பது அப்பாணி பற்றிய எளிமையானதொரு விளக்கம் மட்டுமே. கியூபிசப் பாணியில் உருவங்களின் இருபரிமாணங்களே முக்கியமாகக்  கையாளப்பட்டன. மூன்றாவது பரிமாணமான ஆழப்பரிமாணம் அங்கு முக்கியமானதொன்றல்ல. ஆனால் அதே சமயம் உருவங்கள் கேத்திரகணித வடிவங்களின்  சேர்க்கையாக அவதானிக்கப்பட்டாலும் அவை ஒரு கோணத்திலிருந்து மட்டும் அவதானிக்கப்படவில்லை. அங்கமொன்று பல்வேறு கோணங்களிலிருந்து அவதானிக்கப்பட்டன. உதாரணத்துக்கு முகம் ஒரு கோணத்தில் பார்க்கப்படலாம். கண்கள் இன்னுமொரு கோணத்தில் பார்க்கப்படலாம். இவற்றிலிருந்து பார்க்கப்படும் காட்சியை , அது வெளிப்படுத்தும் உணர்வை உய்த்துணர வேண்டும். பிக்காசோவின் கியூபிசப்  பாணி ஓவியங்கள் நவீன விக்கிரமாதித்தனுக்கு மிகவும் பிடித்தவை. ஓவியமொன்றினை இவ்விதம் உய்த்துணர்வது போன்றதுதான் மனிதரின் ஒருவரின் ஆளுமையினை  அறிந்து கொள்வதும்.

இதுவரை இங்கு நீங்கள் வாசித்தவற்றிலிருந்து ஓரளவுக்கு என்னைப்பற்றி , என் ஆளுமையைப் பற்றி  நீங்கள் அறிந்திருந்தால் அது ஓரளவுக்குப் போதுமானது. ஏனென்றால் நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனின் வாழ்க்கை அனுபவங்களை விபரிக்கக்கூடும். அப்போது இவனைப்பற்றி இன்னும் நன்கு புரிவதற்கு இதுவரை விபரித்த விபரிப்புகள் நிச்சயம் உதவுமென்றும் நிச்சயமாக நம்புகின்றேன்.

எம்ஜிஆருக்கு இளவயதில் அரசியல் போதித்தவர் என்.எஸ்.கே!

எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடலிது. 'சீர்மேகும் குருபதம்' என்று தொடங்கும் இப்பாடல் இடம் ...

பிரபலமான பதிவுகள்