Monday, July 22, 2019

கறுப்பு ஜூலை 1983 பற்றிய நினைவுக்குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -


ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் மே 2009, ஜூலை 1983 இரண்டு மாதங்களும் அவர்கள்தம் வரலாற்றைப் புரட்டிப்போட்டு வைத்த மாதங்கள். ஜூலை 1983 அதுவரை இலங்கைத்தமிழர்களுக்கெதிராக வெடித்த இனக்கலவரங்களில் மிகப்பெரிய அழிவுகளையும் , உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்திய கலவரம். ஜே.ஆர்.அரசின் முக்கிய அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் பலர் முன்னின்று நடாத்திய கலவரம். இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தைச் சுவாலை விட்டெரியச்செய்த கலவரம். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை முக்கிய உபகண்ட அரசியற் பிரச்சினைகளிலொன்றாக, சர்வதேச அரசியற் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றிய கலவரம். இலட்சக்கணக்கில் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக உலகின் பல்வேறு பகுதிகளையும் நோக்கிப் படையெடுக்க வைத்திட்ட கலவரம். இவ்விதமுருவான இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை பேரழிவுகளுடன் முடிவுக்கு கொண்ட மாதம் மே 2009.

ஜூலை 1983 இனக்கலவரத்தைப்பற்றி கடந்த சில வருடங்களாக முகநூலில் பதிவுகளிட்டிருந்தேன். அவற்றுக்குப் பலர் எதிர்வினைகள் ஆற்றியிருந்தார்கள். தம் அனுபவங்களை, கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அவற்றை ஆவணப்படுத்த வேண்டுமென்று எண்ணினேன். அவற்றை முக்கியமான எதிர்வினைகளுடன் தொகுத்து என் வலைப்பதிவான 'வ.ந.கிரிதரன் பக்கம்' தளத்தில் இவ்வருட என் நினைவு கூர்தலாகப் பதிவு செய்துள்ளேன். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

1. 83 'ஜூலை' இலங்கை இனக்கலவர நினைவுகள்.:  இந்தியா அனுப்பிய சிதம்பரம்! (July 22, 2018)

சிதம்பரம் கப்பலை கூகுளில் தேடிப்பார்த்தேன். கப்பலின் படம் வந்தது. இக்கப்பலைத்தான் இலங்கையின் 1983 இனக்கலவரத்தையடுத்து இந்தியா கொழும்பில் தங்கியிருந்த அகதிகளை யாழப்பாணம் கூட்டிச்செல்வதற்காக அனுப்பியிருந்தது. இக்கப்பல் பல நினைவுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் ஆரம்பத்திலிருந்தே தொண்டர்களாக மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சேவையாற்றினர். தர்மகுலராஜா அவர்களும் அவர்களிலொருவர். இவர் எனக்கு ஒரு வருட 'சீனியர்'. அவர்களில் நானுமொருவனாக இணைந்திருந்தேன். ஏற்கனவே இலங்கை அரசு வழங்கியிருந்த லங்கா ரத்னா போன்ற சரக்குக் கப்பல்களில் அகதிகள் பலரை அனுப்பி வைத்தோம்.

Friday, July 12, 2019

'பதிவுகள்' வாசகர் கடிதங்கள் பகுதி ஒன்று (2000 -2006)



- 'பதிவுகள்' இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், பாவண்ணன், அ.முத்துலிங்கம், கந்தையா ரமணீதரன், நாகரத்தினம் கிருஷ்ணா, புதியமாதவி, மான்ரியால் மைக்கல், முத்துநிலவன், டிசெதமிழன், மருத்துவர் முருகானந்தன், கவிஞர் ஜெயபாலன் , சுமதி ரூபன்,  வெங்கட் சாமிநாதன் ,  லதா ராமகிருஷ்ணன், கே.எஸ்.சிவகுமாரன், என்று இவர்களைப் போன்ற  கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின்கருத்துகளை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களும் இவற்றிலுள்ளன. இவற்றில் சில பல முக்கியமான விவாதங்களையும் வெளிப்படுத்துகின்றன. இவற்றைப் பதிவு செய்வதன் அவசியம் கருதி இத்தொகுப்பு பதிவாகின்றது. ஏனைய கடிதங்கள் அடுத்த தொகுப்பில் இடம் பெறும். -

From: SANKAR SUBRAMANIAN
To:
Sent: Thursday, October 12, 2000 4:01 PM
Subject: வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

தேன் மதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிட பாரதி கண்ட கனவை மெய்ப்பிக்கும் அன்புத் தமிழ் ஆசிரியரே. "genom" சாத்தியப் பட்டால் வாழ்க நீவிர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள். உன்னை பெற்ற தமிழ்த்தாய் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பாள். 'வலை விரித்தேன்'. 'பதிவுகள்' கண்டேன். நெஞ்சம் வலையில் படிந்து விட்டது. 'பதிவுகள்' தொடர்ந்து படிப்பேனே. மனதில் பட்டதை சொல்வேனே. மீண்டும் அடுத்த பதிவுகள் பார்த்து எழுதுகிறேன். வாழ்த்துக்கள் ஐயா! வாழ்க நீவிர் பல்லாண்டுகள்.
அன்புடன்
சங்கரன்

Tuesday, July 2, 2019

'வடலி' பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான் ஜானின் நூற் தொகுதி!



இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டு ஆண்டுகள் பதினொன்றாகி விட்டன. இந்நிலையில் போராட்டம், அமைப்புகள், தத்துவங்கள் பற்றிய ரகுமான் ஜான் அவர்களின் நூற் தொகுதியொன்று விரைவில் 'வடலி' பதிப்பக வெளியீடாக வெளியாகவுள்ளது. இத்தொகுதியானது மூன்று நூல்களை உள்ளடக்கியதொன்றாகும்.

முன்னாட் போராளிகள் பலர் தம் அனுபவங்களின் அடிப்படையில் பல நூல்களை வெளியிட்டுள்ளனர். அவையெல்லாம் அவர்கள் பார்வையில் அவரவர் இயக்கம் பற்றிய அல்லது அவர்களின் தப்பிப்பிழைத்தல் பற்றிய அனுபவங்களாகும்.

இவ்வகையில் தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்', ஐயரின் 'ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்', செழியனின் 'ஒரு போராளியின் நாட்குறிப்பு' போன்றவை முக்கியமானவை. ஆனால் இவையெல்லாம் முன்னாட் போராளிகளின் அனுபவங்களை அதிகமாகக் கூறுபவை. நடந்த தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம், அமைப்புகள், அவற்றின் தத்துவங்கள் பற்றிய விரிவான ஆய்வு நூல்களல்ல. இந்நிலையில் ஈழத்தமிழர்தம் விடுதலைப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ரகுமான் ஜானின் மேற்படி நூற் தொகுதி வெளிவரவிருப்பது நல்லதொரு விடயம். ஏனெனில் இத்தொகுதிகள் பின்வரும் தலைப்புகளில் வெளியாகவுள்ளதாகவும் அறிகின்றேன்:

1. ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல் பிரச்சனைகள்.
2. ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள்
3. ஈழப்போராட்டத்தின் மூலோபாய, தந்திரோபாய பிரச்சனைகள்.

எம்ஜிஆருக்கு இளவயதில் அரசியல் போதித்தவர் என்.எஸ்.கே!

எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடலிது. 'சீர்மேகும் குருபதம்' என்று தொடங்கும் இப்பாடல் இடம் ...

பிரபலமான பதிவுகள்