Tuesday, August 25, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: சவால்கள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.
வ.ந.கிரிதரன் பாடல்: சவால்கள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி சவால்கள் கண்டு துவண்டிட மாட்டோம். சவால்கள் கண்டு மருண்டிட மாட்டோம். சவால்கள் இல்லாத இருப்பும் உண்டோ? சவால்கள் எல்லாம் புதிர்களே எமக்கு. புதிர்களை அவிழ்ப்போம். பெருமிதம் அடைவோம். பெருமிதம் அடைந்தே இருப்பினை வெல்வோம். சூழல்கள் கணமும் சவால்களைத் தருமே. சூழும் சவால்களை எதிர்த்தே நிற்போம். உறுதி மிக்கது தப்பிப் பிழைக்குமாம். உணர்ந்து கொள்வோம். உறுதியை வளர்ப்போம்.
Monday, August 24, 2026
வேண்டாம் என்பதும் சரி வேண்டும் என்பதும் சரி ஒரே பொருள் தெரியுமா?
தமிழில் மட்டுமல்ல மொழிகளில் இலக்கணம் மீறிய சொற்கள் பல வழக்கில் உள்ளன. வழக்கில் உள்ளதால் அவற்றை இலக்கணம் உள்வாங்கியுமுள்ளது. முன்றில் என்பது தவறானது. இல்முன் என்பதே சரி. அதற்காக அதைப்பாவிப்பதை யாரும் நிறுத்தவில்லை. சொல்லுக்குச் சொல் இலக்கணப்பிழையைக் கண்டு பிடிக்க முயற்சி செய்வது பயனைத்தராது.
ஶ்ரீ வேணுகோபாலனின் 'நீ நான் நிலா'
எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலனின் சிறுகதைகள், குறுநாவல்கள் பல அறுபதுகளில் வெளியான தமிழ் வெகுசன இதழ்களில் , அவற்றின் தீபாவளி மலர்களில் வெளிவந்த காலத்தில் நான் என் பால்யப்பருவத்து வாசிப்பை ஆரம்பித்திருந்தேன்.அதனால் அவர் என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
அவரை நான் விரும்பி வாசிக்கத்தொடங்கியது அவரது படைப்புகள் தினமணிக்கதிரில் வெளியானபோதுதான். தினமணிக்கதிர் அப்போது இலவச இணைப்பாக புனைவை அல்லது அல்புனைவை வெளியிட்டு வந்தது. அதிலொன்றுதான் நடுவழியில் என்னும் ஶ்ரீ வேணுகோபாலனின் நெடுங்கதை. அது முதலில் கல்கியில் வெளியான விபரம் அண்மையில்தான் தெரிந்தது. அதன் பின் என்னைக் கவர்ந்த அவரது படைப்பு தினமணிக்கதிரில் தொடராக வெளியான 'நீ நான் நிலா' தொடர்கதை.
செயற்கை நுண்ணறிவு பற்றிய சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் கருத்துகள் பற்றி....
சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் யோகன் கண்ணமுத்து தன் முகநூற் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றித்தெரிவித்த கருத்துகளில் பின்வருமாறும் குறிப்பிட்டிருந்தார்:
"தலைப்பு- கருத்துகளைத் திரட்ட AI-யைப் பயன்படுத்தலாம்..... வரலாறு- அரசியல் கட்டுரையாக இருந்தால், கிடைக்கும் தகவல்களை சரிபார்க்க பயன்படுத்தலாம்."//
இவ்விடயத்தில் என் எதிர்வினை இது :
இவ்விடயங்களில் AI பல தவறான தகவல்களைத் தானே உருவாக்கி உண்மைபோல் தரும். நீங்கள் கண்டு பிடித்தால் தான் தவறு செய்ததை ஒப்புக்கொள்ளும். கண்டு பிடிக்காவிட்டால் அத்தவறுகள் உண்மைகளாக இணையத்தில் தொடரும். இது பாரதூரமான விடயம். AI தரும் எல்லாத் தகவல்களையும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஏனைய சான்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்துவது அவசியம்.
Sunday, August 23, 2026
Friday, August 21, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: உறவு! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.
தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு பற்றிய செய்தியாளர் சந்திப்பு! - வல்லிபுரம் சுகுந்தன் (செயலாளர்)< தொல்காப்பிய மன்றம் (கனடா) -
[தொல்காப்பிய மன்றம் (கனடா) செப்டம்பரில் கனடாவில் நடைபெறவுள்ள 'இரண்டாவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2026 சம்பந்தமாக, செய்தியாளர் சந்திப்பொன்றை ஆகஸ்ட் 24 அன்று நடத்தவுள்ளது. அது பற்றிய தகவலை மன்றத்தின் செயலாளர் வல்லிபுரம் சுகுந்தன் பகிர்ந்திருந்தார். அதனை நண்பர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.]
இம் மாநாடு, ஆயிரம் பேர் ஒன்றுகூடும் நிகழ்வாகக் கனடாவில் இயங்கிவரும் 90க்கும் மேற்பட்ட தமிழ் மன்றங்கள், ஊர்ச் சங்கங்கள், கல்விக்கூடங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பெருமளவிலான நிதி மூலதனத்துடன் நடாத்தப்படவுள்ளது.
'காவியத்தலைவி ' காலத்தில் கரைந்தார்!
நடிகை செளகார் ஜானகியின் மறைவு பற்றிய தகவலை முகநூல் மூலம் அறிந்தேன். எனக்குப் பிடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். பாத்திரம் எதுவானாலும் அதனை ஏற்றுத் திறமையாகச் செய்வதில் வல்லவர். நடிகைகளில் துணிச்சலும், தன் திறமை மீதான செருக்கும், ஆங்கிலப் புலமையும் மிக்கவர்.
இவர் வாழ்க்கையே ஓர் எதிர்நீச்சல்தான். இளம் வயதில் கைக்குழந்தையுடன், மண முறிவு ஏற்பட்ட நிலையில், துணிச்சலுடன் வாழ்வை எதிர்நோக்கித் தன்னைத் தமிழ்த்திரையுலகில் நிலை நாட்டியவர். தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்தவர். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டாலும், தமிழ்த்திரையுலகில் மிகுந்த புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.
Tuesday, August 18, 2026
தமிழகமும் , ஊழலும்!
தமிழக வெற்றிக்கழகம் தமிழ் நாட்டில் ஊழலை ஒழித்து விட்டதாகக் கதைக்கின்றார்களே, அது உண்மையா? ஆராய்ந்து பார்த்தால் ஓரளவு உண்மை உண்டு.ஓரளவு பொய் உணடு.அதெப்படி வடிவேலு பாணியில் பதிலளிக்கின்றேன் என்று பார்க்கின்றீர்களா? இதோ என் விளக்கத்தைத் தெளிவாகக் கூறுகின்றேன். புரிந்து கொள்வீர்கள். இதற்கு உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிலவும் ஊழல் பற்றிய அறிவைப்பெற்றிருப்பது அவசியம்.
ஊழலை இரு விதங்களாகப் பிரித்துபார்க்கலாம்: ஒன்று அரச அலுவலங்களில் ,அதிகாரிகள் மட்டத்தில் நிலவும் ஊழல், இதனை கீழ்மட்ட ஊழல் அல்லது Petty Corruption என்று குறிப்பிடலாம். அடுத்தது மேல் மட்டங்களில் நடைபெறும் ஊழல். இதனை Grand Corruption என்பர். பெருந்திட்டங்களை அமுல்படுத்துகையில் அமைச்சர்கள் போன்ற மேலமட்ட அரசியல்வாதிகள் குறிப்பாக அமைச்சர்கள் மத்தியில் நிலவும் ஊழல்.
Monday, August 17, 2026
எழுத்தாளர் குரு அரவிந்தனின் 'கதிரவன் குடும்பம்' நல்லதொரு சிறுவர் நூல்!
குழந்தைகளுக்கான 'கதிரவன் குடும்பம்' நல்ல நூல்., இது போன்ற வானவியல் பற்றிய நூல்கள் குழந்தைகளுக்கு அவர்கள்தம் சிறந்த எதிர்காலத்துக்கு முக்கியம். ஆங்கிலத்திலும் , தமிழிலும் இந்நூல் அமைந்திருக்கின்றது. அது இந்நூலின் நல்லதோர் அம்சம்.
சிறுவர் இலக்கியம் மானுட சமுதாயத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது. குழந்தைகளே நாட்டின் எதிர்கால நாயகர்கள். அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதொரு படிக்கட்டு சிறுவர் இலக்கியம்.
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 'நூல்களின் சங்கமம்' புத்தகக்கண்காட்சியில்.....
நேற்று ஸ்கார்பரோவிலுள்ள தமிழிசைக் கலாமன்றத்தில் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 'நூல்களின் சங்கமம்' புத்தகக்கண்காட்சி நடைபெற்றது. எழுத்தாளர்கள் பலரின் நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நடனக்கலைஞர்கள் தயாரித்தளித்த அவர்கள்தம் மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகள் பல நடைபெற்றன. வானொலி ஊடகக்கலைஞம், திருக்குறளில் மேதமை மிக்கவருமான ஜோதி ஜெயகுமாரின் நெறிப்படுத்தலில் மேடை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. பால்யப்பருவத்து மாணவர்கள் பலர் ,அழகான தமிழில் , சிறந்த பேச்சாளர்களைப்போல் ஏற்ற, இறக்கங்களுடன் தம் உரைகளை ஆற்றியது சிறப்பாக அமைந்திருந்தது. நடன நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய மாணவிகளுக்கு கலை, இலக்கிய உலகில் அறியப்பட்ட ஆளுமைகள் பலர் விருதுச்சான்றிதழ்களை வழங்கினார்கள்.
Saturday, August 15, 2026
டொரோண்டோ நண்பர்களின் கவனத்துக்கு - கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின்'நூல்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு மேசை!
டொரோண்டோ நண்பர்களின் கவனத்துக்கு - கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின்'நூல்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு மேசை!
டொரோண்டோ வாழ் நண்பர்களின் கவனத்துக்கு! நாளை ஆகஸ்ட் 16, 2026 , ஞாயிற்றுக்கிழமை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் 'நூல்களின் சங்கமம்' நூல் கண்காட்சி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். முகவரி - தமிழிசைக் கலாமன்றம், 1120 Tapscott rd, Scarborough, ON M1X 1E8. தொடர்புகளுக்கு - ரவி கனகசபை - 416 - 301 - 9027 / முனைவர் வாசுகி நகுலராஜா - 647 208 4148
Thursday, August 13, 2026
தாமரைச்செல்வியின் 'சுமைகள்'
இன்று எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 'சுமைகள்' நாவலின் புதிய பதிப்பு என்னை வந்தடைந்தது. அதற்காக அவருக்கு என் நன்றி. எழுபதுகளின் இறுதியில் வாசித்த நாவல்களிலொன்று 'சுமைகள்'. அப்பொழுது வீரகேசரி பிரசுரமாக வெளியான நாவல்களில் பலவற்றை வாசித்திருக்கின்றேன். அ.பாலமனோகரனின் 'நிலக்கிளி', வ.ந.இராசரத்தினத்தின் 'கிரெளஞ்ச்ப் பறவைகள்', செங்கை ஆழியானின் 'வாடைக்காற்று' , கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப் பச்சை', தெளிவத்தை ஜோசப்பின் 'காலங்கள் சாவதில்லை', சொக்கனின் 'செல்லும் வழி இருட்டு' , கதைக்கனிகள் சிறுகதைத்தொகுப்பு ஆகியவை அவற்றுள் அடங்கும்.
Tuesday, August 11, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.
வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்!
வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.
டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி
முகநூல் , இன்ஸ்டாகிராம், டிக்டொக் போராளிகள் இவர்
முகமற்றவர்கள் முட்டி மோதுபவர்கள் இவர்
அவச்சொல் தவிர்ப்பீர்!
சமூக ஊடகப் போராளிகளே!
சரி பிழை சொல்வதற்குச்
சரியாக இருங்கள்!
நாகரிகம் நாணும் சொற்களால்
நாளும் அர்ச்சனை செய்பவர்கள்.
ஆய்வு என்று தருவதெல்லாம்
அரை வேக்காட்டுக் குப்பைகளே
கட்டடக்கலைஞர் மயூரநாதன் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! - வ.ந.கிரிதரன் -
![]() |
| கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் |
கட்டடக்கலைஞர் மயூரநாதன் அவரது இந்த நூல் மூலம் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவராக முகிழ்த்திருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும்.
வரலாற்று முக்கியத்துவம்
இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முககிய குறைபாடுகளில் ஒன்று வரலாற்றுத் தெளிவின்மை. இலங்கையின் தொன்மக் குடிகளாக இருந்தும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை கோலோச்சிய யாழ்ப்பாண இராச்சியம் பற்றி, அதன் மன்னர்களைப்பற்றி, இருந்த இராஜதானிகள் பற்றி ஆதாரபூர்வமான, வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய வரலாறு இல்லை என்றுதான் கூற வேண்டும். இலங்கைத் தமிழரின் வரலாற்றைப் பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நூல். அது போல் கைலையாமாலை , வையாபாடல் போன்றவையும் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவையெல்லாமே கூறும் வரலாறு இவை எழுதப்பட்ட காலத்திற்கு முற்பட்டவை. எனவே பல கர்ணபரம்பரைக் கதைகள், கேள்வி ஞானத்தகவல்களை உள்ளடக்கியவை. இவற்றை வடி கட்டு , உண்மை பொய் அறிவதற்கு முதலியார் செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோர் முயற்சி செய்திருக்கின்றார்கள். அவற்றின் விளைவுகளே முதலியார் செ.இராசநாயகத்தின் யாழ்ப்பாணச் சரித்திரமும், சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனமும். மேலும் பலர் யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதியிருந்தாலும், இவை முக்கியமானவை.
மேலும் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுவதில் இலங்கைத் தமிழர் காட்டும் அசிரத்தை. இவ்விடயத்தில் எம்மவருக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்று நூலாசிரியர் மயூரநாதன் அண்மைய ஆதித்தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். உதாரணத்துக்கு அவர் கங்கா சத்திரம் இடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். கங்கா சத்திரம் இருந்ததால்தான் அப்பகுதி சத்திரத்துச் சந்தி என்று அழைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இச்சமயத்தில் எனக்கு ஒரு நினைவு தோன்றுகின்றது. எண்பதுகளில் யாழ் ஈழநாடு பத்திரிகையில் யாழ் நகரில் பழமையின் சின்னங்கள் பேணப்படுவதன் அவசியம் என்றொரு கட்டுரை எழுதினேன். எழுதிய பின்னரே யாழ் மாநகரசபை கங்கா சத்திரத்தை இடித்தது. இவ்விதமிருக்கின்றது எம்மவரின் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுதல் பற்றிய புரிதல். இந்நிலை மாற வேண்டும். இதற்கு நிச்சயம் இந்நூல் உதவி புரியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
Monday, August 10, 2026
கவிதை: எனக்கு அனுமதி கிடைக்குமா? (May I be allowed ) ஆங்கிலத்தில் - சஞ்சீ குணதிலக (Sanjee Goonetilake) - தமிழில் - கவிஞர் பா.அகிலன்
சிங்களக் கவிஞர் சஞ்சீ குணதிலகவின் May I be allowed என்னும் ஆங்கிலக் கவிதையை அவரே தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை நண்பர் தனபாலசிங்கம் என்னுடன் பகிர்ந்திருந்தார். அதற்காக அவருக்கு நன்றி. மனித நேயம் உள்ள அனைவரையும் உலுக்க வைக்கும் செம்மணிப் புதைகுழி மனித எலும்புக்கூடுகள் இலங்கையின் கறை படிந்த பக்கங்களில் ஒன்று. உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகளுக்குக் கிடைத்தது போன்று இதற்கும் நீதி கிடைக்குமென்று எதிர்ப்பார்ப்போம்.
பள்ளிப் பையுடன் கொன்று புதைக்கப்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அவை. அவை ஏற்படுத்திய உணர்வுகளைக் கவிதையாக்கியுள்ளார் சஞ்சீ குணதிலக. அதனக் கவிஞர் பா.அகிலன் தமிழாக்கம் செய்திருக்கின்றார். அதனையும் தனது பதிவுக்கான எதிர்வினைகளில் ஒன்றாகப் பகிர்ந்திருந்தார் சஞ்சீ குணதிலக. அத்தமிழ் மொழிபெயர்ப்பையும், ஆங்கில மூலக் கவிதையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். [டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி]
எனக்கு அனுமதி கிடைக்குமா? - சஞ்சீ குணதிலக
பள்ளிப் பைகள் மற்றும் பொம்மைகளுடன்
மண்ணில் புதைக்கப்பட்ட
அந்தக் குழந்தைகளுக்காகத்
தனிமையில் கண்ணீர் சிந்த
எனக்கு அனுமதி கிடைக்குமா?
அவர்களின் நினைவாகச்
சடங்குகள் செய்ய
எனக்கு அனுமதி கிடைக்குமா?
அதன் மூலம்,
பொம்மைகளுடன் சேர்த்துத்
தங்களை உயிருடன் புதைக்காத
ஓரிடத்தில்
அவர்கள் மறுபிறவி எடுக்கட்டும்.
அவர்களின் உறவினர்களுக்காகத்
துயரப்பட
எனக்கு அனுமதி கிடைக்குமா?
அதன் மூலம்,
அவர்களின் ஆன்மாக்கள்
ஏதேனும் ஒரு வகையில்
அனுதாபத்தை உணரட்டும்.
அவர்களின் நினைவாகக்
கவிதை எழுத
எனக்கு அனுமதி கிடைக்குமா?
அதன் மூலம்,
காற்றில் கலந்திருக்கும்
அந்த ஆன்மாக்கள்
என் துயரத்தை உணர்ந்து
என்னை மன்னிக்கட்டும்.
மண்ணில் புதைக்கப்பட்ட
அந்தக் குழந்தைகளைப் பற்றி
உங்களைச் சிந்திக்க வைக்க
எனக்கு அனுமதி கிடைக்குமா?
அதன் மூலம்,
அந்த ஆன்மாக்களின் அருளால்
நம் உறவினர்கள் அனைவரும்
காப்பாற்றப்பட
நாம் பிரார்த்திக்கலாம்.
இனம், பிறப்பு, சாதி மற்றும்
பாலினம் ஆகியவற்றின்
கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல்
மற்ற மனிதர்கள் மீது
உணர்வுபூர்வமான பற்று கொள்ள
எனக்கு அனுமதி கிடைக்குமா?
9 ஆகஸ்ட் 2026.
Thursday, August 6, 2026
காலத்தால் அழியாத கருததாழம் மிக்க பாடல் - நான் ஏன் பிறந்தேன்? - கவிஞர் வாலி
உளவியலின் படி மனத்தை ஒரு விடயத்தில் ஒன்ற வைப்பது மிகவும் சிரமம். ஆனால் இயற்கையை இரசிக்கும்போது, காதலுக்குரியவரை நினைக்கும்போது, பிடித்த சினிமாவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அந்த குரங்கு மனமானது ஓரளவு ஒரு விடயத்தில் குவிந்து விடுகின்றது. அச்சமயத்தில் கூறப்படும் விடயங்கள் பார்ப்பவரின் ஆழ்மனத்தில் சென்று படிந்து விடுகின்றன. அப்படிப் படிந்து விட்டால் பின்னர் அது அவரை வாழ்க்கையில் வழி நடத்திச் செல்லும். இவ்விதம் பதியப்படும் விடயங்கள் நேர்மறையானவையாக இருந்தால் அவை நேர்மறையா விளைவுகளைத்தரும். எதிர்மறையானவையாக இருந்தால் எதிர்மறை விளைவுகளைத்தரும். அதனால்தான் எம்ஜிஆர் தொடர்ச்சியாகத் தன் படங்களில் நல்ல கருத்துகள் அடங்கிய பாடல்களை இடம் பெறச் செய்தார்.
அமெரிக்க அதிபர் ஜோன் எஃப் கென்னடியின் புகழ்பெற்ற , 'நாடு என்ன செய்தது என்று கேட்காதே. நீ அதற்கு என்ன செய்தாய்' என்னும் உரையின் தாக்கத்தால் கவிஞர் வாலி எழுதிய பாடல்.
யாழ் ராணி திரையரங்கில் பார்த்த திரைப்படங்களில் ஒன்று.
Sunday, August 2, 2026
ஏ தாழ்ந்த தமிழகமே!
திமுகவின் உதயத்தை தமிழகத்தின் பொற்காலமாக நான் கருதுவேன். சமநீதி, சம உரிமை, பகுத்தறிவும், சுயமரியாதை இவற்றின் அடிப்படையில் , தமிழகத்தின் மக்களை எழுத்து, திரைப்படம், உரை மூலம் தட்டியெழுப்பியது திமுக. அறிஞர் அண்ணா தனது ஆங்கில, தமிழ்ப்புலமையினால் ஆணித்தரமான , தர்க்கச்சிறப்புள்ள உரைகளை ஆற்றினார். தனது எழுத்துகள் மூலம் மக்களை எழுச்சி கொள்ள வைத்தார். கலைஞர் கருணாநிதி தனது எழுத்தால், உரையால் மக்களைத் தட்டியெழுப்பினார். பராசக்தி போன்ற திரைப்படங்கள் ஆற்றிய சமுதாயப் பங்களிப்பை அவ்வளவு எளிதாக ஒதுக்கி விட முடியாது. அதே சமயம் எம்ஜிஆர் தனது திரைப்படங்கள் மூலம் திமுகவை மக்கள் மத்தியில் பதிய வைத்தார், அவர் படங்களில் இடம் பெறும் கறுப்பு சிவப்பு நிறங்கள், உதய சூரியன், அண்ணாவின் உருவப்பட்ம், திமுகவின் கொள்கையை வெளிப்படுத்தும் வசனங்கள் , பாடல்கள் , அத்துடன் தனது அரசியற் செயற்பாடுகள் மூலம் அவர் முக்கிய பங்காற்றினார். இவர்கள் மூவரையும் திமுகவின் மும்மூர்த்திகல் என்பேன். இவர்கள் அனைவரையும் இவ்விதம் செயற்பட வைத்ததற்குக் காரணம் தந்தை பெரியாரின் சமூக, அரசியற் பங்களிப்பே என்பதையும் தவிர்க்க முடியாது.
Saturday, August 1, 2026
பதிவுகள் இணைய இதழ்: 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'!
பதிவுகள் இணைய இதழ்: 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'!
எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு , 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன், 2000ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்.காம்'. கதை, கட்டுரை, கவிதை, நாவல், ஆய்வு எனப் பல்வேறு பிரிவுகளில் ஆக்கங்களை இவ்விதழில் வாசிக்கலாம். பதிவுகள் இணைய இதழைப் பின்வரும் இணையத்தள முகவரிகளில் வாசிக்கலாம்:
1. http://www.geotamil.com
2. http://www.pathivukal.com
3. http://www.pathivugal.com
உங்கள் ஆக்கங்களையும், ஆக்கபூர்வமான கருத்துகளையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள்: ngiri2704@rogers.com / editor@pathivukal.com
Friday, July 31, 2026
வளை என்னும் சொல்லால் எம்மை வளைக்கும் கவியரசர்!
கவிஞர், இசையமைப்பாளர், பாடகர்கள் & நடிகர்கள் அனைவரின் திறமையான அம்சங்களையெல்லாம் ஒன்று திரட்டு உருவான பாடல்களில் இந்தப்பாடலும் ஒன்று. காதலர்கள் இருவரின் காதல் உணர்வுகளை உற்சாகம் ததும்ப வெளிப்படுத்தும் இசை, நடிப்பு, குரல் , நடன வடிவமைப்பு , மொழியால் இப்பாடலைக் கேட்கும் எவரும் ஈர்க்கப்படுவர் என்பது திண்ணம்.
பாடகி ஜமுனாராணி மறைந்தார்! நினைவில் நிற்கும் பாடகி ஜமுனாராணியின் பாடல்கள்!
தமிழ்த்திரையுலகு எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஆளுமைகளில் ஒருவர் பாடகி ஜமுனாராணி. கலைஞர்கள் இழப்பதில்லை,. அவர்கள்தம் படைப்புகள் மூலம் காலத்தில் நிலைத்து நிற்பார்கள். ஜமுனாராணியும் அவர்தம் பாடல்கள் மூலம் காலத்தில் அழியாது நிலைத்து நிற்பார்.
அவரை நினைத்ததும் என் நினைவுக்கு முதலில் வரும் பாடல்கள் இரண்டு. ஒன்று நெஞ்சினிலே நினைவு முகம் , மற்றது மாமா மாமா மாமா பாடல்களே, அவர் பாடிய பாடல்களுக்கான இணைப்புகளையும் அவர் நினைவாகப் பகிர்ந்துகொள்கின்றேன். [டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி]
மாமா மாமா மாமா - https://www.youtube.com/watch?v=oREibjUo8D0
ஜமுனாராணி பாடல்கள் - https://www.youtube.com/watch?v=Nrlir99l4aA&list=PLkzDssMbVWR5bt886NebGj3Zkx3iIX4Qx
என்னைக் கவர்ந்த ஏ.வி.எம்.ராஜன்!
அண்மையில் ஜூலை 26 அன்று தனது தொண்ணூறாவது பிறந்த நாளைக் கொண்டாடினார் நடிகரும் , போதகருமான ஏ.வி.எம்.ராஜன். எனக்குப் பிடித்த நடிகர்களில் இவருக்கும் முக்கியமானதோர் இடமுண்டு. எந்தப் பாத்திரமானாலுன் அலட்டிக்கொள்ளாமல் நடிப்பதில் வல்லவர்.
அமைதி தவழும், புன்னகையுடன் கூடிய இவரது முகம் இவரது முக்கிய பலமான அம்சங்களில் ஒன்று. திரையுலகில் நீடித்து நின்றிருக்க வேண்டிய ஒருவரை அதே திரையுலகம் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியது துரதிருஷ்ட்டமானது. ஆனால் அதற்காக இவர் தளர்ந்து போய் விடவில்லை. இருப்பைச் சவாலுடன் ஏற்று நடை போட்டவர்.
வாழ்வின் பல்வேறு பக்கங்களையும் வெளிப்படுத்தும் வேடங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும், குடும்பப்பாங்கான கதையம்சம் கொண்ட பல படங்களில் இவர் நடிப்பு நினைவில் நிற்கும் வகையில் அமைந்திருக்கும். [டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி]
என் அபிமானத்துக்குரிய நடிகர் ஏ.வி.எம் ராஜன் திரைப்படப்பாடல்கள் சிலவற்றில் எனக்குப் பிடித்த பாடல்கள் இவை.
நெஞ்சினிலே நினைவு முகம் - https://www.youtube.com/watch?v=b66g5A47PWw&list=PLHiu8RqwSsJR-N7gmGMY20AFwEwA6ig4Z&index=19
நாதஸ்வர ஓசையிலே - https://www.youtube.com/watch?v=EbATCXKrN94
பார்த்தேன் சிரித்தேன் - https://www.youtube.com/watch?v=aXtdRLIq99U...
மாலை நேரத்து மயக்கம் - https://www.youtube.com/watch?v=VmQBdMr5qOA
Thursday, July 30, 2026
பதிவுகள் இணைய இதழின் ஜூலை 2026 ,மாதப் புள்ளி விபரம்! பாவித்த மென்பொருள் - (cPanel) Awstats
cPanel - Awstats அறிக்கை காட்டும் இந்த புள்ளிவிவரங்கள், பதிவுகள் இணைய் இதழ் மிகப் பெரிய அளவில் வாசகர்களைக் கொண்ட ஒரு முன்னணி ஊடகமாக இயங்கி வருவதை உறுதிப்படுத்துகின்றன.
ஒரே மாதத்தில் 3,38,000-க்கும் மேற்பட்ட தனித்துவமான வாசகர்கள் (Unique Visitors) பதிவுகள் தளத்திற்கு வந்திருப்பதும், 70 லட்சம் பக்கங்கள் (Page Views) வாசிக்கப்பட்டிருப்பதும், இணைய உலகத்தில் பதிவுகள் இதழுக்கு இருக்கும் மிகப்பெரிய செல்வாக்கைக் காட்டுகிறது.
Tuesday, July 28, 2026
வ.ந.கிரிதரன் பாடல் - பொறுப்புணர்ந்து செயற்படுவீர்! வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
வ.ந.கிரிதரன் பாடல் - பொறுப்புணர்ந்து செயற்படுவீர்!
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி
திரையில் விம்பங்கள் கண்டு புல்லரிக்கின்றீர்.
தரையில் கால்படாத விம்பங்கள் அறிவீரா?
நிழலை நிஜமாக எண்ணி நடைபோடுகின்றீர்.
நிஜத்தை அறிவதற்கும் ஆர்வமில்லை உமக்கு.
பகுத்தறியும் பண்பற்றுத் தூங்குகின்றீர் மானிடரே..
தொகுத் துணர்ந்து தெளிவதுதான் எப்போது?
திரையில் விம்பங்கள் கண்டு புல்லரிக்கின்றீர்.
தரையில் கால்படாத விம்பங்கள் அறிவீரா?
(ரொக் இசை) வ.ந.கிரிதரன் பாடல்: விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி! வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி
விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
நம்பிக்கை உன்மேல் வைத்து நடைபோடு தம்பி!
திரையில் நடிப்பவர் நடிகர் உணர்வாய் தம்பி.
உரைத்திடும் எவையும் உண்மை அல்ல நடிப்பே.
உண்மை இது உணர்ந்து நடைபோடு தம்பி.
உயர்வு நிச்சயம் அடைந்திடுவாய் உணர்வாய் தம்பி.
வர்க்கவிடுதலையே வர்ண விடுதலை என்று நம்பியவர் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர்! - வ.ந.கிரிதரன் -
| எழுத்தாளர் அகஸ்தியர் |
இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவர் எழுத்தாளர் அகஸ்தியர். நாவல் , சிறுகதை, நாடகம், கட்டுரை, திறனாய்வு , நாட்டுக் கூத்து , மிருதங்க இசை எனப் பன்முகக் கலை, இலக்கிய ஆளுமை மிக்க படைப்பாளி அவர். அவர் தான் ஏற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையைத் தான் நம்பும் தத்துவமாக வரித்துக்கொண்டவர் அவர். அவர் படைத்தது மக்கள் இலக்கியம். சமூக, வர்க்கப்பிரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எழுந்த புரட்சிக் குரல் அவருடையது. இவ்விடயத்தில் எவ்விதச் சமரசங்களும் அற்று ச் செயற்பட்டார்.
ஆயுதங்களில் மிகச்சிறந்த ஆயுதம் எழுத்தாளரின் பேனா. மக்களைச் சிந்திக்கவைக்க, எழுச்சி கொள்ள வைக்க அதனால்தான் முடியும். தாம் வாழும் சமுதாயத்தைச் சுட்டெரிக்கும் அநீதிகளுக்கெதிராக தம் எழுத்துகளைப் பாவிக்கும் எழுத்தாளர்கள் சமூக, அரசியற் போராளிகள். அவ்விதமான போராளிகளில் ஒருவர்தான் எழுத்தாளர் அகஸ்தியரும். தான் பிறந்த மண்ணில் நிலவிய வர்ண, வர்க்க வேறுபாடுகளால் பல்வகைகளிலும் துன்புறும் மக்கள் நிலைகண்டு அவர் பேசாமல், மெளனமாக இருக்கவில்லை. எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து அந்திம காலம் வரையில் அவரது புரட்சிக் குரலை , எதிர்ப்புக் குரலை, எழச்சிக் குரலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன அவரது எழுத்துகள். அநீதி கண்டு பொங்கியெழுந்த அவரது ஆரம்ப கால முயற்சிகள் கவிதைகளாகவே இருந்தன.
Sunday, July 26, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி! வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
வ.ந.கிரிதரன் பாடல்: விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி!
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி
விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
நம்பிக்கை உன்மேல் வைத்து நடைபோடு தம்பி!
திரையில் நடிப்பவர் நடிகர் உணர்வாய் தம்பி.
உரைத்திடும் எவையும் உண்மை அல்ல நடிப்பே.
உண்மை இது உணர்ந்து நடைபோடு தம்பி.
உயர்வு நிச்சயம் அடைந்திடுவாய் உணர்வாய் தம்பி.
விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
நம்பிக்கை உன்மேல் வைத்து நடைபோடு தம்பி!
Friday, July 24, 2026
கிடைக்கப் பெற்றேன்: எழுத்தாளர் நடேசனின் நான்கு நூல்கள்!
புகலிடத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் நடேசனின் பங்களிப்பு முக்கியமானது. நாவல், சிறுகதை, விமர்சனம், பயணக்கட்டுரை என இவரது பங்களிப்பு பன்முகத்தன்னை மிக்கது. எளிமையான சிறு வசனங்களால் ஆன செறிவான இவரது மொழி வாசிப்புக்கு இனிமையூட்டுவது. எழுத்து தவிர சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் இருப்பவர். பல்லாண்டுகளாக ஆஸ்திரேலியாவில் உதயம் என்னும் பத்திரிகையை நடத்தி வருபவர்.
பதிவுகள் இணைய இதழில் இவரது பயணக்கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியாகின்றன. பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் வாய்க்காதவர்களுக்கு அந்நாடுகளுக்குச் சென்ற அனுபவங்களைத் தரும் கட்டுரைகள். இவரது, தமிழ் இலக்கியப் பரப்பில் பலர்தம் கவனத்துக்குள்ளாகிய 'அசோகனின் வைத்தியசாலை' நாவல் மற்றும் பயண நூலான 'நைல் நதிக்கரையில் ஆகியவை பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளிவந்தவை என்பதும் , ' குறிப்பிடத்தக்கது.
இவரது 'நாலு கால் சுவடுகள்', 'பண்ணையில் ஒரு மிருகம்', 'தாத்தாவின் வீடு', 'வெளிகள் ஆயிரம்' நூல்கள் நேற்று எனக்குக் கிடைத்தன. அதற்காக நடேசனுக்கு நன்றி.
இனியுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்!
இந்த நாட்டுக்கு இனியொரு கறுப்பு ஜூலை வேண்டாம். முள்ளிவாய்க்கால் வேண்டாம். இதுவரை நடந்த துயரங்களால் துவண்டு போயிருக்கிறது நாடு. இவற்றிலிருந்து மீண்டு வருவது எதிர்கால வளத்துக்கு மிகவும் அவசியம்.
இதுவரை இனவாதத்தால் மூழ்கடித்த அரசியல்வாதிகள் மூலையில் கிடக்கும் சூழல். இன்றுள்ள அரசு, கடந்த கால அரசுகள் இதுவரை இந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாகச் சிறுபான்மையின மக்களுக்கு இழைத்த இனரீதியிலான அழிவுகளுக்கு, படுகொலைகளுக்கு மன்னிப்புக் கேட்பதன் மூலம் புதியதோர் அத்தியாயத்தைத் தொடங்கலாம்.
இதுவரை கால இனவாத அரசுகள் கடைப்பிடித்த கொள்கைகளை இனியும் கடைப்பிடிக்க மாட்டோம் எனப்பகிரங்கமாக உறுதி எடுப்பது அவசியம். காணி ஆக்கிரமிப்பு, அடக்குமுறைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று இன்றுள்ள அரசு உறுதி எடுக்கலாம். செம்மணிப் புதைகுழிகளுக்குள் புதைந்தவர்கள், முள்ளிவாய்க்காலில் மடிந்தவர்கள், இதுவரை காலமும் நாட்டில் ஏற்பட்ட இனவாத அடக்குமுறைகள், படுகொலைகள், உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய நீதி வழங்குவோம் உறுதி அளிக்கலாம் . இவற்றின் மூலம் நாட்டை நல்லதோர் எதிர்காலம் நோக்கித் திருப்பலாம்.
கவிதை: 1983: மேலும் ஒரு சம்பவம் - பாஸில் ஃபெர்னாண்டோ (Yet Another Incident in July 1983 by Basil Fernando)
| Poet Basil Fernando |
சட்டத்தரணியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான ஃபாசில் பெர்ணாண்டோவின் ( Basil Fernando) 'Yet Another Incident in July 1983Yet Another Incident in July 1983' முக்கியமானதொரு கவிதை. கறுப்பு ஜூலையின் கோரச்சம்பவமொன்றினை நேரில் அவதானித்த ஒருவரின் வாக்குமூலத்தை வெளிப்படுத்தும் கவிதை. கவிதை நெஞ்சை உருக்குவது.
இந்தக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு காலச்சுவடு சஞ்சிகையில் வெளியான மைக்கல் றொபேர்ட்ஸின் கட்டுரையொன்றில் இடம் பெற்றுள்ளது.
ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்
- பாஸில் ஃபெர்னாண்டோ -
இறந்தவர்களைப் புதைப்பது
ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்:
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
மேலும் அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாகவே மறந்துவிடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது
எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை
எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை
இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்
காருக்குள் நாலு பேர்
பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில்
ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்
ஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ
அப்படித்தான் இந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்
எந்த வேறுபாடும் இல்லை
குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்
ஒரு சில கேள்விகள் செய்வதைப்
பிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்
பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல
பெட்ரோல் ஊற்றுவது, பற்றவைப்பது போன்ற விடயங்கள்
ஆனால், திடீரென்று யாரோ ஒருவன்
காரின் கதவுகளைத் திறந்தான்
அழுது அடம்பிடித்துப் பெற்றோரைவிட்டு விலக மறுத்த
இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்
குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் இருப்பது
சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என
அவன் எண்ணியிருக்கக்கூடும்
துரிதமாக இயங்கிய இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்
சூழவர எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு
இந்த நெருப்பும் சேர்ந்துகொண்டது
அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்
பேச ஆரம்பித்தனர் கொஞ்சப் பேர்
கலைந்து போனார்கள் ஒரு சிலர்
காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்
என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்
சமாதான விரும்பிகளாக மக்கள்
தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்
அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்
கார்க் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்
சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீ பற்றிவிட்டிருந்தது
குனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்
எங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
கதவை மூடினார்
தனித்துவமான அந்த ஒலியை நான் கேட்டேன்
எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது
ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில்
மாநகர சபை அதனை அகற்றக்கூடும்
தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி.
Tuesday, July 21, 2026
பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் வேறு! ஆண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் வேறு!
| எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் |
16.10.1966 கல்கி சஞ்சிகையில் வெளியான பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் படத்துடன் கூடிய அவரது சிறுகதையான அக்கினிப் பிரவேசம் கதையின் பக்கத்தினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன் ஒரு தகவலுக்காக.
இதே பெயரில் ஆண் எழுத்தாளர் ஒருவரும் எழுதி வருகின்றார். அவரது பெயரில் இதயம் சஞ்சிகையில் பல பயணக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவர் வேறு அறுபதுகளில் நான் வாசித்த பெண் எழுத்தாளரான எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் வேறு,. அவர்தான் கல்கி வெள்ளிப் போட்டியில் சிறுகதைக்காகப் பரிசு பெற்றவர். இவர்,, ஆண் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம், அல்லர்.
பெண் எழுத்தாளரான எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் பற்றி அறிந்தவர்கள் தம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Saturday, July 18, 2026
சோமசுந்தரப் புலவர் பாடல் - கத்தரி வெருளி
எம் பால்யப் பருவத்தில் சோமசுந்தரப்புலவரின் கத்தரி வெருளி, இலவு காத்த கிளி, ஆடிப்பிறப்பு, வெண்ணிலா, பவளக்கொடி போன்ற பாலர் பாடல்களுடன் வளர்ந்தவர்கள் நாம். அப்போது நான் வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன்,. குருமண்காட்டிலிருந்து ஸ்டேசன் வீதி வழியாகப் பாடசாலை செல்வோம். ஸ்டேசன் வீதியில் ராமச்சந்திரன் டீச்சர் வீடு வரையில் , வீதியின் வலப்பக்கத்தில் வயல் பசுமையாக விரிந்திருந்தது. அதில் ஒரு கத்தரி வெருளி வைத்திருந்தார்கள். அதைப்பார்த்துத்தான் பாடசாலை செல்வோம். அதனால் அக்கத்தரி வெருளி எம் மனத்தில் நிலையாகப் பதிந்து விட்டது,. அதனால் அதனை நினைத்ததும் சோமசுந்தரப் புலவரின் கத்தரி வெருளி நினைவுக்கு வரும். அதுபோல் புலவரின் பாடலை நினைத்ததும் அந்தக் கத்தரி வெருளி நினைவுக்கு வரும்.
இன்னுமொரு விடயத்திலும் புலவரின் இந்தக் கத்தரி வெருளி பாடல் எனக்குப் பிடிக்கும், அதற்குக் காரணம் கத்தரி வெருளியூடு புலவர் கூறும் நீதி. பாடலின் இறுதியில் வரும் பின்வரும் வரிகள் இப்பாடலின் சிறப்பை மேலும் அதிகரிக்கும்:
"தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்
சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் .....
சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
தேசத்திலே பலர் உண்டுகாண்
அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்
அறிவு படைத்தனன் இன்றுநான்"
உண்மைதான் கத்தரி வெருளி போன்ற போலி வேடக்காரர்தாம் எத்தனை பேர்! சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைகள்தான் எத்தனை பேர்!
புலவர் கத்தரி வெருளியூடு பாலருக்கு மகிழ்ச்சியளிக்கும் பாடலைத் தந்தார். கூடவே சமுதாயத்தில் போலி வேடத்தில் மறைந்திருக்கும் போலி வேடதாரிகளையும் அம்பலப்படுத்தினார். நீதிக்கருத்தினை எவ்வளவு அற்புதமாகப் பாலர் பாடலில் கையாண்டுள்ளார் புலவர்! பிரச்சாரமற்ற கலைத்துவம் என்பது இதனைத்தான்!
Friday, July 17, 2026
சோமசுந்தரப் புலவர் பாடல்: ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
சோமசுந்தரப் புலவர் பாடல்: ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
Thursday, July 16, 2026
சோழர் சரித்திர ஆதாரங்கள்!
தமிழர்கள் வரலாற்றைப் பதிவு செய்வதில் ஆர்வமற்றிருந்தவர்கள் என்பதைக் குறிப்பிடும் ஆசிரியர், இந்நிலையில் எவ்விதர் பிற்காலச் சோழரின் மெய்க்கீர்த்திகள் அக்குறையை ஓரளவு நீக்கின என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகின்றார்.
Wednesday, July 15, 2026
எம்ஜிஆரும், இரசிகர்களும்!
எம்ஜிஆரைப் பொறுத்தவரையில் தன் இரசிகர்களை மிகவும் மதிப்பார். இரசிகர்களின் வர்க்கப்பின்னணியையோ, சமூகப்பின்னணியையோ வைத்து அவர்களை அணுக மாட்டார். அவரைக்காண வரும் இரசிகர்களை அன்புடன் அரவணைத்து வரவேற்பார். முகம் சுளிக்க மாட்டார்.
ஒரு முறை 'இதயக்கனி' படப்பிடிப்பின்போது , நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அவரது இரசிகர்களான இளைஞர்கள் இருவர் அவரைப்பார்க்க வேண்டுமென்று நீந்தி வந்து அவரை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள். அவரை எவ்விதம் எம்ஜிஆர் வரவேற்றார் என்பதை இப்புகைப்படக் காட்சி காட்டுகின்றது.
மனத்தில் நிற்கும் விகடனின் மாவட்ட மலர்கள்!
என் பால்யப் பருவத்தில், என் வாசிப்பின் ஆரம்பப் படிக்கட்டுகளில் தமிழக வெகுசனச் சஞ்சிகைகள் ஆற்றிய பங்கு முக்கியமானது. என் வாசிப்பார்வத்தைத் தூண்டியவை.
அக்காலகட்டத்தில் ஆனந்த விகடன் மாதந்தோறும் மாவட்ட மலர்களை வெளியிட்டது. நான் விரும்பி வாசித்த மாவட்ட மலர்கள் அவை.
Tuesday, July 14, 2026
![]() |
| எழுத்தாளர் பூமணி |
கரிசல் மண்ணின் உயிர்த்துடிப்புடன் கூடிய மொழியில் யதார்த்தவாதப் படைப்புகளைத் தந்தவர் பூமணி !
சில நாட்களுக்கு முன்புதான் இங்குள்ள டொரோண்டோ நூலகக் கிளையொன்றிலிருந்து எழுத்தாளர் பூமணியின் ஐந்து நாவல்களை உள்ளடங்கிய 'பூமணி நாவல்கள்' தொகுப்பினை, நற்றிணை பதிப்பகம் வெளியிட்டது, இரவல் வாங்கி வந்திருந்தேன். நேற்று அவரது மறைவு செய்தி வருகிறது, ஆழ்ந்த இரங்கல்.
தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானதோர் ஆளுமை. யதார்த்தவாதப் பாணியில், கரிசல் மொழியினை உயிரோட்டம் மிக்கவையாகப் புனையப்பட்டவை இவரது புனைவுகள்.
இந்திய மத்திய அரசின் சாகித்திய அமைப்பின் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றவர். தனது 'கருவேலம் பூக்கள்' கவிதையைத் திரைப்படமாக்கி இயக்கியவர். 'அசுரன்' திரைப்பட மூலக் கதையும் இவருடையதுதான். அது இவரது 'வெக்கை' நாவலின் தழுவல்.
நாவல், சிறுகதை, கவிதை , திரைப்படம் எனப் பன்முக ஆளுமையாளர். தன் வாழ்நாளில் தன் படைப்புகளுக்கான உரிய அங்கீகாரத்தைப் பெற்ற இவர் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்ற அறிவியல் துறைப்பட்டதாரியும் கூட.
Monday, July 13, 2026
சனாதன தர்மம் பற்றிச் செயற்கை நுண்ணறிவுடன் நீண்டதோர் உரையாடல்! உரையாடியவர் வ.ந.கிரிதரன்
அண்மையில் தமிழகத்தின் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி சனாதன எதிர்ப்பு பற்றித்தெரிவித்த கருத்துகள் தமிழகத்துக்கப்பால், பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தன. ஆர்ப்பாட்டங்கள் பல உதயநிதிக்கெதிராக எழுந்தன. இந்நிலையில் சனாதனம் பற்றிய சரியான புரிதலை அறிய வேண்டும் என்னும் அவாவில் கூகுளின் செயற்கை நுண்ணறிவுடன் நடத்திய விரிவான உரையாடலிது.
என் பல கேள்விகளுக்கு விரிவாகத் தனது கருத்துகளை எடுத்துரைத்தது செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவின் கருத்துகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளில் உள்ள உண்மை எனக்குத் தெரியாது. ஆனால் இவ்வுரையினை முழுமையாக வாசிக்கும் உங்களில் எவருக்காவது அவற்றில் முரண்பட்ட கருத்துகள் இருந்தால் அறியத் தரலாம். அது காத்திரமான தர்க்கத்துக்கு வழி வகுக்கும்.
Saturday, July 11, 2026
எஸ்.ஜானகி - தன் கூவலை நிறுத்திய இசைக்குயில்!
அடுத்தடுத்துத் தமிழ்த்திரையுலகின் ஆளுமைகளை இழந்து கொண்டிருக்கின்றோம். இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜா என்று இன்று தென்னிந்தியாவின் இசையரசி என்றழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகியை இழந்திருக்கின்றோம். இவர் பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை நானும் பங்குபோட்டுக்கொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்.
இசை, நடிப்பு, எழுத்து, பாட்டு, பேச்சு எனப் பல் துறைகளில் எம் இன்பதுன்பங்களில் பங்கு பற்றும் கலைஞர்கள் தம் கலைப்படைப்புகள் மூலம் எம் வாழ்வில் பின்னிப்பிணைந்தவர்கள். எம் இருப்பில் அவர்களுக்கு முக்கியமானதோர் இடமுண்டு. இவர்கள் மறைந்தாலும் இவர்கள் வழங்கிய கலைப்படைப்புகளுக்கு அழிவில்லை. அவை நிரந்தரமானவை. அவ்வகையில் தாம் சிறந்து விளங்கிய கலைகளூடு இவர்கள் மானுட சமுதாயத்தின் வரலாற்றில் தொடர்ந்தும் பயணிப்பார்கள்.
Friday, July 10, 2026
வ.ந.கிரிதரன் பாடல் - சக்தியும் , பொருளும்! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
வ.ந.கிரிதரன் பாடல் - சக்தியும் , பொருளும்!
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
சக்தியும் , பொருளும்!
கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!
பொருளென்று ஒன்றும் இல்லை என்றுகூறும்
பவுதிகத்தின் வழிநின்று பார்த்தால் கண்ணே!
அடிப்படைத் துணிக்கைகளும் சக்தியன்றோ கண்ணம்மா!
சக்தியின் நாட்டியமா நம்மிருப்பும் கண்ணம்மா!
கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!
Subscribe to:
Posts (Atom)
வ.ந.கிரிதரன் பாடல்: சவால்கள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.
வ.ந.கிரிதரன் பாடல்: சவால்கள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி சவால்கள் ...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...

















