Thursday, July 16, 2026

சோழர் சரித்திர ஆதாரங்கள்!



இந்தச் 'சோழர் சரித்திர ஆதாரங்கள்' என்னும் கட்டுரை வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. ஜனவரி 24, 1954 வெளியான கல்கி சஞ்சிகையில் வெளியானது. எழுதியவர் எழுத்தாளர் ரா.கி ( ரா.கிருஷ்ணமூர்த்தி - கல்கி) .
தமிழர்கள் வரலாற்றைப் பதிவு செய்வதில் ஆர்வமற்றிருந்தவர்கள் என்பதைக் குறிப்பிடும் ஆசிரியர், இந்நிலையில் எவ்விதர் பிற்காலச் சோழரின் மெய்க்கீர்த்திகள் அக்குறையை ஓரளவு நீக்கின என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகின்றார்.

Wednesday, July 15, 2026

எம்ஜிஆரும், இரசிகர்களும்!


எம்ஜிஆரைப் பொறுத்தவரையில் தன் இரசிகர்களை மிகவும் மதிப்பார். இரசிகர்களின் வர்க்கப்பின்னணியையோ, சமூகப்பின்னணியையோ வைத்து அவர்களை அணுக மாட்டார். அவரைக்காண வரும் இரசிகர்களை அன்புடன் அரவணைத்து வரவேற்பார். முகம் சுளிக்க மாட்டார்.

ஒரு முறை 'இதயக்கனி' படப்பிடிப்பின்போது , நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அவரது இரசிகர்களான இளைஞர்கள் இருவர் அவரைப்பார்க்க வேண்டுமென்று நீந்தி வந்து அவரை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள். அவரை எவ்விதம் எம்ஜிஆர் வரவேற்றார் என்பதை இப்புகைப்படக் காட்சி காட்டுகின்றது. 

மனத்தில் நிற்கும் விகடனின் மாவட்ட மலர்கள்!



என் பால்யப் பருவத்தில், என் வாசிப்பின் ஆரம்பப் படிக்கட்டுகளில் தமிழக வெகுசனச் சஞ்சிகைகள் ஆற்றிய பங்கு முக்கியமானது. என் வாசிப்பார்வத்தைத் தூண்டியவை.

அக்காலகட்டத்தில் ஆனந்த விகடன் மாதந்தோறும் மாவட்ட மலர்களை வெளியிட்டது. நான் விரும்பி வாசித்த மாவட்ட மலர்கள் அவை.

எழுத்தாளர் சேவற்கொடியோனின் 'பேசும் பொற் சித்திரமே'


எழுத்தாளர் சேவற்கொடியோனின் 'பேசும் பொற் சித்திரமே' அக்காலகட்டத்தில் நான் விரும்பி வாசித்த விகடன்  தொடர்கதை.  கணவர், மனைவியர்க்கிடையில் ஏற்படும் சந்தேகத்தின் பாதிப்புகளை விவரிக்கும் தொடர்கதை. ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியாகிய தொடர்நாவல்.

Tuesday, July 14, 2026

எழுத்தாளர் பூமணி 

கரிசல் மண்ணின் உயிர்த்துடிப்புடன் கூடிய மொழியில் யதார்த்தவாதப் படைப்புகளைத் தந்தவர் பூமணி !

சில நாட்களுக்கு முன்புதான் இங்குள்ள டொரோண்டோ நூலகக் கிளையொன்றிலிருந்து எழுத்தாளர் பூமணியின் ஐந்து நாவல்களை உள்ளடங்கிய 'பூமணி நாவல்கள்'  தொகுப்பினை, நற்றிணை பதிப்பகம் வெளியிட்டது, இரவல் வாங்கி வந்திருந்தேன். நேற்று அவரது மறைவு செய்தி வருகிறது, ஆழ்ந்த இரங்கல்.

தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானதோர் ஆளுமை. யதார்த்தவாதப் பாணியில், கரிசல் மொழியினை உயிரோட்டம் மிக்கவையாகப் புனையப்பட்டவை இவரது புனைவுகள். 

இந்திய மத்திய அரசின் சாகித்திய அமைப்பின் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றவர். தனது 'கருவேலம் பூக்கள்' கவிதையைத் திரைப்படமாக்கி இயக்கியவர். 'அசுரன்' திரைப்பட மூலக் கதையும் இவருடையதுதான். அது இவரது 'வெக்கை' நாவலின் தழுவல்.

நாவல், சிறுகதை, கவிதை , திரைப்படம் எனப் பன்முக ஆளுமையாளர். தன் வாழ்நாளில் தன் படைப்புகளுக்கான உரிய அங்கீகாரத்தைப் பெற்ற இவர் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்ற அறிவியல் துறைப்பட்டதாரியும் கூட.

Monday, July 13, 2026

சனாதன தர்மம் பற்றிச் செயற்கை நுண்ணறிவுடன் நீண்டதோர் உரையாடல்! உரையாடியவர் வ.ந.கிரிதரன்


- சனாதன தர்மம் பற்றிச் செயற்கை நுண்ணறிவுடன் நீண்டதோர் உரையாடல்!  உரையாடியவர் வ.ந.கிரிதரன். -

அண்மையில் தமிழகத்தின் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி சனாதன எதிர்ப்பு  பற்றித்தெரிவித்த கருத்துகள் தமிழகத்துக்கப்பால், பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தன. ஆர்ப்பாட்டங்கள் பல உதயநிதிக்கெதிராக எழுந்தன. இந்நிலையில் சனாதனம் பற்றிய சரியான புரிதலை அறிய வேண்டும் என்னும் அவாவில் கூகுளின் செயற்கை நுண்ணறிவுடன் நடத்திய விரிவான உரையாடலிது. 

என் பல கேள்விகளுக்கு விரிவாகத் தனது கருத்துகளை எடுத்துரைத்தது செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவின் கருத்துகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளில் உள்ள உண்மை எனக்குத் தெரியாது. ஆனால் இவ்வுரையினை முழுமையாக வாசிக்கும் உங்களில் எவருக்காவது அவற்றில் முரண்பட்ட கருத்துகள் இருந்தால் அறியத் தரலாம். அது காத்திரமான  தர்க்கத்துக்கு வழி வகுக்கும்.

Saturday, July 11, 2026

எஸ்.ஜானகி - தன் கூவலை நிறுத்திய இசைக்குயில்!


அடுத்தடுத்துத் தமிழ்த்திரையுலகின் ஆளுமைகளை இழந்து கொண்டிருக்கின்றோம். இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜா என்று இன்று தென்னிந்தியாவின் இசையரசி என்றழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகியை இழந்திருக்கின்றோம். இவர்  பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை நானும் பங்குபோட்டுக்கொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்.

இசை, நடிப்பு, எழுத்து, பாட்டு,  பேச்சு எனப் பல் துறைகளில் எம் இன்பதுன்பங்களில் பங்கு பற்றும் கலைஞர்கள் தம் கலைப்படைப்புகள் மூலம் எம் வாழ்வில் பின்னிப்பிணைந்தவர்கள். எம் இருப்பில் அவர்களுக்கு முக்கியமானதோர் இடமுண்டு. இவர்கள் மறைந்தாலும் இவர்கள் வழங்கிய கலைப்படைப்புகளுக்கு அழிவில்லை. அவை நிரந்தரமானவை. அவ்வகையில் தாம் சிறந்து விளங்கிய கலைகளூடு இவர்கள் மானுட சமுதாயத்தின் வரலாற்றில் தொடர்ந்தும் பயணிப்பார்கள்.

Friday, July 10, 2026

வ.ந.கிரிதரன் பாடல் - சக்தியும் , பொருளும்! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.


வ.ந.கிரிதரன் பாடல் - சக்தியும் , பொருளும்!
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி

சக்தியும் , பொருளும்!

கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!

பொருளென்று ஒன்றும் இல்லை என்றுகூறும்
பவுதிகத்தின் வழிநின்று பார்த்தால் கண்ணே!
அடிப்படைத் துணிக்கைகளும் சக்தியன்றோ கண்ணம்மா!
சக்தியின் நாட்டியமா நம்மிருப்பும் கண்ணம்மா!

கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!

Thursday, July 9, 2026

பல்கலைக்கழகங்களும், பாலியல் வன்முறைகளும்!


அண்மைக்காலமாகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களால் புரியப்படும் பாலியல் வன்முறைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துச் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.
இதில் எவ்வளவு தூரம் உண்மை, பொய் என்பது பூரண விசாரணைகளின் பின்புதான் தெரிய வரும்.

 அண்மையில் கூடப் பேராதனைப் பல்கலைககழகத்தில் பேராசிரியர் ஒருவர் இவ்விடயத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்பட்ட செய்திகளை அறிந்திருக்கின்றோம்.

பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அதிகாரம் தலைவிரித்தாடும் அனைத்துத் துறைகளிலும் இந்நிலை இருப்பதை அறிந்திருக்கின்றோம். அரச உதவிகளில் தங்கியிருக்கும் பெண்கள் குறிப்பாக விதவைகள் மீது அவ்வுதவிகளை வழங்குவதற்குப் பொறுப்பான அரசியல் அதிகாரிகளால் பாலியல் ரீதியிலான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதைச் செய்திகள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். அரசியல்வாதிகளால் இவ்வித அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்ததை அறிந்திருக்கின்றோம். 

ஆனந்த விகடன் வெளியிட்ட 'கென்னடியின் கதை'!


ஜோன்.எஃப்.கென்னடி மறைந்த காலகட்டத்தில் ஆனந்த விகடன் அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக வெளியிட்டிருந்தது. அந்த நூலின் அட்டைப்படம்தான் இது. எழுதியவர் மயன். மயன் அக்காலத்தில் விகடன் ஆசிரியர்களில் ஒருவராகவும், பிரபலமான விகடனின்  தொடர்கதையாசிரியராகவுமிருந்த எழுத்தாளர்  மணியன் என்று ஊகிக்கின்றேன்.

இந்த  நூலின் படத்தைத் தற்செயலாக இணையத்தில் பார்த்ததும் பால்யப் பருவத்து நினைவுகள் சில சிறகடித்தன.  நான் முதன் முதலில் ஜான் எஃப். கென்னடி பற்றி வாசித்த நூல் இந்த நூல். யாழ் புகையிரத நிலையத்திலிருந்த புத்தகக் கடையில் தொங்கிக்கொண்டிருந்த நூல்களில்  என்னைக் கவர்ந்த நூல்.  இத்தனைக்கும் கென்னடியைப் பற்றி எதுவுமே அந்த வயதில் தெரியாமல் இருந்த போதிலும், அந்த வசீகரமான முகத்தின் ஈர்ப்புக் காரணமாக அம்மாவை வற்புறுத்தி வாங்கிப்படித்தேன். 

Wednesday, July 8, 2026

வ.ந.கிரிதரன் பாடல் - கரியாலை நாகபடுவான் வாவி! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.


வ.ந.கிரிதரன் பாடல் - கரியாலை நாகபடுவான் வாவி
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி

காட்டின்  நடுவிலொரு சொர்க்கச் சாவி
கரியாலை நாகபடுவான் என்னும்  பெருவாவி.

நாகராம் தமிழரெம் புனிதபூமி அன்றோ!
நம்தமிழர் வரலாற்றின் சின்னம் அன்றோ.
படுவம் என்றால்  பள்ளம், நீர்நிலை
படுவான் என்றாலும் பெருவாவி என்றும்
பொருள் உண்டு சங்கப் பாடலில்.
மேற்கு என்றும் மற்றோர் பொருளுமுண்டு.
பெருங்கற் பண்பாட்டுச் சின்னம் என்றே
பகர்ந்திடுவர் நாகபடுவான் வாவி தனையே.

Tuesday, July 7, 2026

வரலாற்று முக்கியத்துவம் மிக்க கரியாலை நாகபடுவான்! நாக வழிபாடு செய்த தமிழர்களான நாகர்களின் குடியேற்றப்பகுதி!


எண்பதுகளில் நானும் , நண்பர் அருட்செல்வனும் முழங்காவில் பகுதியில் செயற்பட்டுக்கொண்டிருந்த குழாய்க்கிணறுத்திட்டத்தைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம். அங்கு மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் , குடிசார் பொறியியல் தொழில் நுட்பம் கற்றுக்கொண்டிருந்த நண்பர் சிறீ பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரின் அழைப்பின்பேரில் சென்றிருந்தோம். சங்குப்பிட்டி சென்று ம், அங்கிருந்து  வத்தையில் பூநகரி செனறு முழங்காவில் சென்றோம். இப்போது வத்தைக்குப் பதில் பாலம் உள்ளது. மகாதேவா தாம்போதி என்று அழைக்கப்படும் அப்பாலம் பல வருடங்களாகக் கட்டப்பட்டு, இறுதியில் எண்பதுகளின் நடுப்பகுதியில் முடிக்கப்பட்டது . இவ்விதம் அமைக்கப்படும் கடற்பாதைகள் தாம்போதிகள் என அழைக்கப்பட்டன.  பொன்னாலைப் பாலம், பண்ணைப்பாலம் என்பவையும் இவ்வகையான ஏனைய தாம்போதிகள்தாம். 

அப்பொழுதுதான் அப்பகுதியில் அமைந்திருந்த பல்லவராயன் கட்டு, 'கரியாலை நாகபடுவான்' குளம் போன்றவற்றைப் பற்றி  முதன் முதலில் அறிந்தேன். முதற் பார்வையிலேயெ , முதல் அனுபவத்திலேயே எனக்கு அக்காட்டுப்பகுதி , குறிப்பாகக் கரியாலை நாகபடுவான்  குளம் அமைந்திருந்த பகுதியும், இயற்கைச்சூழலின் வனப்பும் பிடித்துப்போனது. 'நாகபடுவான்' என்பதிலேயெ படுவான் என்னும் சொல் குளத்தைக்  குறித்தாலும், அது சங்ககாலச் சொல் என்பதால் 'நாகபடுவான் குளம்' என்றே வழக்கில் அழைப்பார்கள், (இப்பதிவின் இறுதியிலுள்ள பேராசிரியர் பரமு  புஸ்பரட்ணத்தின இச்சொல்பற்றிய கருத்தைக் கவனிக்கவும்)  'சுனாமி' ஆழிப்பேரலை என்பதைப்போல. 'சுனாமி'என்றாலே ஜப்பானிய மொழியில் ஆழிப்பேரலை என்றாலும் அதனைக்குறிப்பிடுகையில் சுனாமி ஆழிப்பேரலை என்பது பொதுவான வழக்கு. 

மேலும் படுவம் நீர் தேங்கி நிற்கும் பள்ளமான பகுதி, பள்ளம்  என்னும் அர்த்தங்களிலும்,  படுவான் என்னும் சொல் மேற்குத்  திசை  என்னும் அர்த்தத்திலும்  பாவிக்கப்படுகின்றன.  உதாரணம் -  படுவான்கரை.

ஆவணப்படுத்தும் 'இணைய ஆவணக்காப்பகம்' (Archive.Org)'


எழுத்தாளர்களே! நீங்கள் கட்டாயம் பாவிக்க வேண்டிய இணையத்தளம் 'இணைய ஆவணக்காப்பகம்' தளம். இதற்கான இணையத்தள முகவரி - https://www.archive.org

இங்கு நீங்கள் உங்கள்  படைப்புகளை ஆவணப்படுத்தலாம். உங்கள் இணையத்தளத்தை ஆவணப்படுத்தலாம்.  உதாரணத்துக்குக் கீழுள்ள இணைப்பைப் பாருங்கள். இதில் நான் என் படைப்புகள் பலவற்றை, பதிவுகள் இணையத்தளத்தில் வெளியான படைப்புகள் பலவற்றை ஆவணப்படுத்தி வைத்துள்ளேன். இத்தளத்தின் இன்னுமொரு சிறப்பு - இதில் உங்கள் இணையத்தளத்தை ஆவணப்படுத்தலாம். அது  மட்டுமல்ல , உங்களிடமுள்ள பல் வகையான டிஜிட்டல் பிரதிகளையும் ஆவணப்படுத்தலாம். எல்லாமே இலவசம். இத்தளத்துக்குச் சென்று உங்களுக்கென்று கணக்கொன்றை உருவாக்குங்கள். அதன் பின்னர் உங்கள் படைப்புகளைப் பதிவேற்றம் செய்து பாதுகாக்கலாம். 

Monday, July 6, 2026

தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள்' நாவல் பற்றி... - வ.ந.கிரிதரன் -


[கணையாழி சஞ்சிகையின் ஜூலை 2026 இதழ் , புதிய வடிவமைப்புடன் வெளியாகியுள்ளது. புதிய வடிவமைப்பு வாசிப்பை இன்னும் இலகுவாக்குகின்றது.
இம்மாத இதழில் 'தாய்வீடு' பத்திரிகையில் தொடராக வெளியாகி, அதனால் வெளியிடப்பட்ட எழுத்தாளர் தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள் நாவல் பற்றி..' என்னும் அந்நாவல் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. தேவகாந்தனின் முக்கியமான நாவல்களில் ஒன்று 'சாம்பரில் திரண்ட 'சாம்பரில் திரண்ட சொற்கள்' ] 

தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள்' நாவல் பற்றி...

எழுத்தாளர் தேவகாந்தனின் அண்மையில் வெளியான நாவல்.  'தாய்வீடு' பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவல் 'தாய்வீடு' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. சிறப்பான வடிவமைப்புடன், ஓவியர் ஜீவாவின் அழகான ஓவியங்களுடன் வெளிவந்துள்ள நூல். ஒரு காலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான  தொடர்கதைகளின் வெற்றிக்கு அவற்றில் வெளியான ஓவியங்களும் ஒரு காரணம். 'பொன்னியின் செல்வன்' நாவலில் எம்மையெல்லாம் கவர்ந்த பாத்திரமான  வாணர் குலத்து வீரனான வல்லவரையன் வந்தியத்தேவனை .  அவனை உயிர்த்துடிப்புடன் வரைந்த் ஓவியர்களான மணியம், வினு, மணியம் செல்வன், பத்மவாசன் ஆகியோரின் ஓவியங்கள் வாயிலாகத்தான்  நினைவில் வைத்திருக்கின்றோம்.  'கடல்புறா' நாவலின் நாயகன் இளையபல்லவன் என்றழைக்கப்படும் கருணாகரத்தொண்டைமானை ஓவியர் லதாவின் ஓவியங்கள் மூலம்தான் நினைவில் வைத்திருக்கின்றோம்.  'ராணிமுத்து' வெளியீடாக வெளிவந்த மாத நாவல்களும் ஓவியங்களை உள்ளடக்கியே வெளிவந்தன. நாவல்களின் ஓவியங்களும் முக்கியமானவை. மேற்படி நாவலும் இவ்விதமே ஓவியங்களுடன் வெளியாகியிருப்பது வடிவமைப்புக்கு வனப்பைத்தருவதுடன், வாசிப்புக்கும் வளத்தைத்தருகின்றது..

Thursday, July 2, 2026

கருந்துளை (Black Hole) குறும்படம் பார்த்தேன்! என்னையும் அதற்குள் இழந்தேன்!



["THE BLACK HOLE" Short Film Pick Featured by NineJunctions Written & Directed by Philip Sansom & Olly Williams (Phil and Olly) ]

கருந்துளை (Black Hole) குறும்படம் பார்த்தேன்! என்னையும் அதற்குள் இழந்தேன்!
இந்தக் குறும்படத்தை முழுமையாகப் பார்க்கவும். அற்புதமான குறும்படம். கருந்துளை என்பது காலவெளியின் முடிவு. அதனுள் போகும் எவரும், எவையும் மீண்டும் இந்தப் பிரபஞ்சத்திற்குத் திரும்ப முடியாது என்பது அறிவியல் உண்மை.
இந்த உண்மையினை நாம் வாழும் காலவெளியில் வாழும் மானுடர் , அவர் உருவாக்கிய சமூக, பொருளாதார & அரசியல் அமைப்புக்குள் சிக்கி, அல்லற்படும் நிலை நிலையினை அன்றாடம் காண்கின்றோம் அல்லவா. அளவுக்கு மிஞ்சிய பேராசைக்குள் சிக்கி உழலும் பலரைக் காண்கின்றோம் அல்லவா.
இந்த மானுடரின் உளவியலையும், அறிவியல் உண்மையினையும் கலந்து , சிறப்பாக உருவாக்கப்பட்ட குறுந்திரைப்படம்தான் கருந்துளை. இவ்விதமான திரைப்படங்களை உருவாக்குவதற்கு படைப்பாற்றல் முக்கியம்.
இந்தக் குறுந்திரைப்படத்தின் படைப்பாற்றல் என்னைப் பிரமிக்க வைக்கின்றது.
இக்குறுந்திரைப்படத்தை முடிவு வரை பாருங்கள் - https://youtu.be/RSmjqss0XKQ?si=qUQuoT7Dv1QzOpGl

வரலாற்றறிஞர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்!

 பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்

தொடர்ச்சியாக இலங்கைத்  தமிழர்களின் வரலாற்றை , ஆய்வு ரீதியாக அறிவதில், நிறுவுவதில் ஈடுபட்டு வருபவர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம். அவரைப்போன்ற வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் நமக்குக் கிடைத்திருப்பது ஓர் அதிருஷ்டமே.  முக்கியமான தமிழ் வரலாற்று அறிஞர்களில் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணமும் ஒருவர். 

அவரது கருத்துகள் சிலவற்றில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் இலங்கைத் தமிழர் வரலாற்றை இனங்காண்பதில், நிலை நிறுத்துவதில் முக்கிய பங்காற்றும் வரலாற்று அறிஞர் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அவரது அயராத கடும் உழைப்பு என்னை எப்போதும் பிரமிக்க வைக்குமொன்று.

அவரது வரலாற்று ஆய்வு நூல்கள் பலவற்றை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்.

[டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா 2]


நான் உன்னிமேனனின் குரலுக்கு அடிமை!


நான் உன்னிமேனனின் குரலுக்கு அடிமை என்று கூறிக்கொள்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் எனக்கு இல்லை. 

இதயத்தை வருடிச் செல்லும் அவரது குரல் கேட்பவர்  மனத்தைச் சாந்தப்படுத்தும், இதமாக்கும் சக்தி மிக்கது.

'வருசமெல்லாம் வசந்தம்' என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை ஒரு தடவை கண்களை மூடிக்கொண்டு கேட்டுப்பாருங்கள்.  நான்  கூறுவதன் அர்த்தம் புரியும்.

நடிகர் மனோஜ்ஜின் ஒரேயொரு ஹிட் திரைப்படம் 'வருசமெல்லாம் வசந்தம்'.  அவர் இன்னும் நீண்ட  காலம் இருந்திருக்கலாம் என்று இப்பாடலைக் கேட்கும் சமயங்களில் எண்ணுவதுண்டு. அவரது அமைதியான நடிப்பும், அப்பாவித்தனமான சிரிப்பும் என்னைக் கவர்ந்தவை.

இசை - சிர்பி. பாடல் வரிகள் - ஆர்.ரவிசங்கர்.  பாடலாசிரியரும் அமரராகி விட்டார்.

இவ்விதமான பாடல்களை மேடைகளில் பாடகர் பாடுவதைக் கேட்பதை விரும்புபவன் நான். காரணம் பாடகரின் குரலை, பாவங்களை, இசைக்கலைஞர்களின் வாத்திய இசையாளுமையினை நேரில் பார்த்து இரசிக்கலாம் என்பதுதான்.

ஒரு முறை நேர்காணலொன்றில் , இயக்குநர் விக்கிரமன் என்று நினைக்கின்றேன், கூறியிருந்தார் 'உன்னிமேனனின் பாடல்களைத்  தொலைதூரக் கார்ப்பயணங்களில் கேட்டுச் செல்வதாக. ஆம்! பயணங்களை இனிமையானதாக்கும் குரல் இனிமை உன்னி மேனனின் குரலினிமை என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.  இப்பாடலைக் கேட்கும் ஒவ்வொரு தடவையும் நான் பல தடவைகள் மீண்டும் மீண்டும் கேட்பதுண்டு. 

பாடலைக் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=AUu3BOFUsCQ

[டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா 2}

Wednesday, July 1, 2026

கனடாவில் ஊடகவியலாளர் நந்தன வீரரத்னவின் 'கறுப்பு ஜூலை' நூல் வெளியீடு!

ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன

அண்மையில் ஸ்கார்பரோ,கனடாவில்  ஊடகவியலாளர் நந்தன வீரரத்னவின் 'கறுப்பு ஜூலை' என்னும் சிங்கள நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு  (சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், அரசியல் ஆய்வாளருமான  செல்லையா மனோரஞ்சனால் செய்யப்பட்டது)  பற்றிய கலந்துரையாடல் 'கனேடிய இலங்கை மன்ற'த்திm ஏற்பாட்டில் நடைபெற்றது.  சமூக, அரசியற் செயற்பாட்டாளர் லோ.மதியழகன் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் பேச்சாளர்களாக சமூக,ம் அரசியற் செயற்பாட்டாளர் சிவா முருகுப்பிள்ளை, ஊடகவியலாளர் வடிவேல் தேவராஜ், அரசியல் ஆய்வாளர் மனோரஞ்சன் செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்குச் செல்ல விரும்பியிருந்தேன். இறுதியில் தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்ல முடியவில்லை.ஆனால் அந்தக் குறையினைத்  'தடயத்தார்' கிருபா கந்தையா தீர்த்து வைத்தார். அந்நிகழ்வைக் காணொளியாகப் பதிவு செய்து, தனது 'தடயத்தார்'  யு டியூப் சானலில் பகிருந்திருந்தார். அவருக்கு என் நன்றி. இவ்விதம் இங்கு நடைபெறும் சமூக,கலை, இலக்கிய & அரசியல் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி வரும் அவர்தம் பணி போற்றுதற்குரியது.

அந்நிகழ்வின் ஆரம்பத்தில் நூலாசிரியர் நந்தன வீரரத்ன மெய்நிகர் வழியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் உரையினைத் தமிழில் வழங்கினார் மனோரஞ்சன் செல்லையா.  நந்தன வீரரத்தினவின் உரை பற்றிய எனது கருத்துகளே இப்பதிவு.

Tuesday, June 30, 2026

பறத்தலை நிறுத்திய வானம்பாடி: கவிஞர் புவியரசு மறைந்தார்!

கவிஞர்  புவியரசு!

வானம்பாடி கவிதை இயக்கத்தின் பிதாமகன் என அழைக்கப்படுபவரும், கவிஞரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான கவிஞர் புவியரசு அவர்கள் தனது தொண்ணூற்றாறாவது வயதில் மறைந்த செய்தியினை அறிந்தேன். மூப்பின் காரணமாக மறைந்த மார்க்சியவாதியான கவிஞர் புவியரசுவின் மறைவு  தவிர்க்க முடியாதது என்றாலும் பேரிழப்பே. அவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

அவர் நினைவாக , முகநூலில் கலை,இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்கள் பகிர்ந்திருந்த கவியரசர் புவியரசு பற்றிய ஆவணத்திரைப்படத்துக்கான இணைய இணைப்பை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன் - https://youtu.be/voUc3CTs4lI

அத்துடன்  கவிஞர் புவியரசு பற்றிய விக்கிபீடியாக் குறிப்பையும், கவிஞரின் மொழிபெயர்ப்பில் வெளியான கரமசோவ் சகோதரர்கள் பற்றி நான் முன்பு எழுதியிருந்த குறிப்பினையும் பகிர்ந்து கொள்கின்றேன்.

வெகுசன இலக்கியம்: உமாசந்திரனின் முழுநிலா!


எழுத்தாளர் உமாசந்திரனின் முள்ளும் மலரும் நாவலைப் பலரும் அறிந்திருப்பர். அது கல்கி சஞ்சிகையின் வெள்ளி விழா நாவல் போட்டியில் முதற் பரிசு பெற்ற நாவல். அத்துடன் ரஜனிகாந்த் நடிப்பில், மகேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படமும் கூட.
அவரது இன்னுமொரு நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல். என் பால்யப் பருவத்து வாசிப்பில் அதற்கும் முக்கிய இடமுண்டு. அது ஆனந்த விகடனில் தொடராக வெளியான 'முழு நிலா' நாவல். ஓவியர் கோபுலுவின் மனத்தை ஈர்க்கும் ஓவியங்களுடன் வெளியான நாவல் , அது வெளிவந்த காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த தொடர்கதைகளில் ஒன்று.
அதில் வரும் உப்பிலி, நளினா, தாமு பாத்திரங்கள் மறக்க முடியாத பாத்திரங்கள்.

முழுநிலா நாவலின் சில பக்கங்களை இங்கு காண்கின்றீர்கள்.  

Friday, June 26, 2026

முகநூல் தர்க்கம்: வெகுசன இலக்கியம்!


அண்மையில் என் முகநூல் பக்கத்தில் வெகுசன இலக்கியம் பற்றி என் முகநூல் நண்பர்களுடன் நடந்த தர்க்கத்தின் தொகுப்பிது. வாசியுங்கள்! உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


வெகுசன இலக்கியம்!

மானுடரின் வாசிப்புப் படிக்கட்டுகளில் வெகுசன இலக்கியமும் முக்கியமானதொரு படிக்கட்டு. சிறுவர் இலக்கியம் எவ்விதம் முக்கியமோ அவ்விதமே வெகுசன இலக்கியமும் முக்கியம். தீவிர இலக்கியத்துக்கு ஒருவரைக் கொண்டு செல்வதற்கு , ஒருவருக்கு வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அந்தப்பணியினை வெகுசன இலக்கியம் செய்கிறது. இக்குழுவில் நீங்கள் நீங்கள் வாசித்த வெகுசன படைப்புகள் பற்றி, அதாவது நாவல்கள், காமிக்ஸ், சிறுகதைகள், கவிதைகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், அபுனைவுகள் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.

Tamil Journalist:


இதுவுமொரு சிக்கலான விடயம்தான். வெகுசன இலக்கியம் வாசகனைத் தேடிச் சென்று மகிழ்விக்கிறது என்றால், தீவிர இலக்கியம் வாசகனைத் தன்பக்கம் இழுத்து அவனைச் சிந்திக்க வைக்குமென்கிற கணிப்பீடு என்பதெல்லாம் வெறும் அபத்தம் தோழரே

உடனே தமிழின் தீவிர இலக்கிய முன்னோடி புதுமைப்பித்தன் என்று ஆரம்பித்து உடனேயே தாங்கள் அறிந்த கசடுகளின் தலைவர்களை பட்டியலாக்கி மற்றவர்களை வணிக எழுத்தாளென்கிற மாய உலகம் இது..தீவிர இலக்கியம் மற்றும் வெகுசன இலக்கியம் ஆகிய இரண்டிற்குமான எல்லைக் கோடு மறைந்து, அனைத்துமே வணிகமயமாகிவிட்டது என்பதுதான் இங்கு நான் காண்கிற நிதர்சனம் தோழரே.

Navaratnam Giritharan:

Tamil Journalist ஒரு கேள்வி.. வாசிப்புப் படிக்கட்டில் சிறுவர் இலக்கியம் முக்கியமா இல்லையா? மேலும் எங்கும் 'வெகுசன இலக்கியம் வாசகனைத் தேடிச் சென்று மகிழ்விக்கிறது ' என்று என் பதிவில் கூறவில்லையே. வாசிப்புப் படிக்கட்டில் சிறுவர் இலக்கியம் போல் ஒரு காலகட்டத்தில் வெகுசன இலக்கியமும் ஒரு படிக்கட்டாக இருக்கிறது என்றுதான் கூறியிருக்கின்றேன். அப்படி இல்லையென்று நீங்கள் கூறினால் அது உங்கள் கருத்து. என் கருத்தல்ல.

Tamil Journalist:

இதில் நாம் உணர்ச்சிவசப்பட்டுச் சினப்பதற்கோ, கோபப்படுவதற்கோ எதுவுமில்லை தோழரே! ஏனெனில், இந்த இலக்கியங்களும், அவை பின்னி வைத்திருக்கிற 'இசங்களும்' நமக்கு அப்படித்தான் கற்பித்திருக்கின்றன; நம்மை அப்படித்தான் பழக்கியிருக்கின்றன.'

Tuesday, June 23, 2026

முகநூலில் எதிர்வினைகளினூடு ஒரு நேர்காணல்!


முகநூலில் மல்லிகை சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் செ.யோகராசா அன்று எழுதிய அ.ந.கந்தசாமியின் கவிதைப்பங்களிப்பு  பற்றி எழுதிய கட்டுரையைப் பதிவிட்டிருந்தேன். அதற்குத் தன் எதிர்வினையாற்றிய கலை, இலக்கிய விமர்சகர் அமரர் கே.எஸ்.சிவகுமாரனுடன் கருத்துகளைப்பரிமாறும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் கேள்விகள் சிலவற்றுக்கு அவரும் சளைக்காமல் பதிலளித்தார். முடிவில் பார்த்தபோது அதுவே சிறியதொரு நேர்காணலாக இருப்பதை அறிந்தேன். அதனைத்தொகுத்து இங்கு  பதிவு செய்கின்றேன். நண்பர்களே! நீங்கள் உங்கள் நட்பு வட்டத்திலுள்ள கலை, இலக்கிய , அரசியல் ஆளுமை எவருடனாவது இவ்விதமாகக் கேள்விகள் கேட்பதன் மூலம் நேர்காணலற்ற நேர்காணல்களைச் செய்ய முடியும்.

யார் சொன்னது முகநூல் ஆரோக்கியமற்றதென்று? இது முகநூலின் ஆரோக்கியமான விளைவுகளிலொன்று.  எழுத்தாளர் எம்.எஸ்.எம். இக்பால் பற்றி கே.எஸ்.எஸ் அவர்களும், எழுத்தாளர் ஜவாப் மரைக்கார் அவர்களும் பின்வருமாறு கருத்துகளை முன் வைத்தார்கள். 

நல்லூர் ராஜதானி! - கே. எஸ். சிவகுமாரன் -


[கலை, இலக்கிய விமர்கர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூல் பற்றி ஆங்கிலத்தில் விமர்சனக் கட்டுரையொன்றினை இலங்கையிலிருந்து வெளியாகும் டெய்லி நியூஸ் பத்திரிகையில் அவர் எழுதி வந்த பத்தியில் எழுதியிருக்கிறார். அது 28 ஏப்ரில் 2004 வெளியான டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளியானது. பின்னர் அங்கு வெளியாகிய Friday என்னும் வாரப்பத்திரிகையிலும் நவம்பர் 7-15, 2007 அன்று வெளியான பதிப்பிலும் அக்கட்டுரை
வெளியாகியிருந்தது. அக்கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இக்கட்டுரை. ]

இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் தமிழரான வ.ந. கிரிதரன் தமிழ் மொழியில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவருடைய சில படைப்புகள் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக, வெளிநாடுகளில் குடியேறிய முன்னாள் இலங்கையர்களின் வாழ்க்கை முறைகளை அவரது நூல்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலைப் பட்டம் பெற்ற அவர், மின்சார மற்றும் மின்னணுப் பொறியியல்,  தகவல் தொழில்  நுட்பவியலாளராகவும் தகுதி பெற்றவர். அறிவியல், வரலாறு மற்றும் சிறார் இலக்கியம் ஆகிய துறைகளிலும் அவருக்கு விரிவான ஆர்வம் உள்ளது. அதற்கு மேலாக, இணையவெளியிலும் அவர் பயனுள்ள பணியாற்றி வருகிறார்.

இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழர்களின் இலக்கிய மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளை முன்னிறுத்தும் தமிழ் இணையத்தளங்கள் பல இருந்தாலும், கிரிதரனின் 'பதிவுகள்' மின்னிதழ் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகைப் பற்றிய விரிவான செய்திகளையும் ஆய்வுகளையும் வழங்குவதில் தனித்துவம் பெற்றதாகும். அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் அது உள்ளடக்குகிறது.

Friday, June 19, 2026


[எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றிக் கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவின் கருத்துகளைக் கூறும்படி கேட்டேன். அதன் கருத்துகளைக் கீழே தந்திருக்கின்றேன். மிகச்சிறப்பான அதன் விமர்சனம் என்னைப் பிரமிக்க வைக்கின்றது. நன்றி கோடி ஜெமினி AI.]


"கனேடிய ஈழத்து எழுத்தாளரான வ.ந.கிரிதரன் (நவரத்தினம் கிரிதரன்) எழுதிய ‘குடிவரவாளன்’ (An Immigrant) நாவல், புலம் பெயர் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு மிக முக்கியமான ஆவணமாகும்.

முன்னர் ‘அமெரிக்கா 2’ மற்றும் ‘அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்’ என்ற தலைப்புகளில் இணைய இதழ்களில் தொடராக வெளியாகி, பின்னர் 'குடிவரவாளன்' என்ற பெயரில் நூலாகவும் மின்னூலாகவும் வெளியிடப்பட்டது.

இந்நாவலின் முக்கியக் கூறுகள் மற்றும் அதன் பின்னணி கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

1. சுயசரிதைத் தன்மை கொண்ட கதைக் களம் (Autobiographical Element)

இந்நாவல் எழுத்தாளரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது. 1983-இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களுக்குப் பிறகு, பல ஈழத்தமிழர்களைப் போல இவரும் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தார். கனடா நோக்கிப் பயணித்தபோது, பாஸ்டனில் இவர்களது பயணம் தடைப்பட்டு, அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோர நேரிட்டது. அப்போது நியூயார்க்கின் புரூக்ளின் தடுப்பு முகாமில் (Detention Camp) கழித்த மூன்று மாத அனுபவங்களையும், அதைத் தொடர்ந்து நியூயார்க் மாநகரில் ஒரு 'சட்டவிரோதக் குடிவரவாளனாக' வாழ நேர்ந்த சூழலையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே இந்நாவல்.

2. மையக் கதை மற்றும் நாயகன் இளங்கோ
நாவலின் நாயகனான இளங்கோ என்பவன், அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் சட்டப்பூர்வமான ஆவணங்கள் ஏதுமின்றி தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள எவ்விதம் போராடுகிறான் என்பதே கதை.

சுரண்டல்கள்: ஆவணங்கள் இல்லாத அகதி/குடிவரவாளன் என்பதால், வேலை கொடுப்பவர்கள் அவனை எவ்விதம் மிகக் குறைந்த ஊதியத்திற்கு அதிக வேலை வாங்கிப் பிழிந்தெடுக்கிறார்கள் என்பதை நாவல் அப்பட்டமாகப் பேசுகிறது.

ஏமாற்றுகள்: வேலை வாய்ப்பு முகவர்கள் இத்தகைய அகதிகளின் பலவீனமான நிலையைப் பயன்படுத்தி, வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணத்தைப் பறித்து எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

Thursday, June 18, 2026

POTA கண்டு அஞ்சும் GOTA! (குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது - இலங்கையின் இன்றூள்ள அரசியல் சூழல் பற்றிய அவதானிப்பொன்று!)


முன்னாள் இலங்கையின் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் அறிமுகம் செய்யப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA -Prevention of Terrorism Act)  , அது அறிமுகமான காலத்திலிருந்து, ஆட்சி செய்த கடந்த கால அரசுகளால் மக்கள் மீதான அதிகாரத்தைத் தம் அதிகாரத்தைத்  தப்ப வைப்பதற்காகக் கடுமையாகப் பாவிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இலங்கை அரசுக்கெதிராக ஆயுதம் ஏந்திய சிங்கள, தமிழ்ப் போராளிகள் மீது அது பாய்ந்திருக்கின்றது. குறிப்பாகக்கடந்த கால இலங்கை அரசுகள் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டங்களைத் தம் நாட்டு மக்களின் போராட்டம் என்று கருதாமல்,தம் நாட்டுக்கு எதிரானவர்களின் போராட்டம் என்று இனரீதியாக முன்னெடுத்ததால் தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் கொடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள். முடிவு தொடர்ச்சியான இனக்கலவரங்கள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என அது எடுத்த உயிர்ப்பலி நாகரிக மனித இனமே நாணத்தக்கது. 

போர்ச்சூழல் நிலவிய காலகட்டத்தில்  மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்ங்கள் இலங்கை வரலாற்றில் களங்கம் மிக்க துயரக் காலகட்டம்.

Tuesday, June 16, 2026

முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் ஆங்கில மொழிபெயர்ப்பில் பெருந்தொற்றுக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'!


முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் மொழிபெயர்த்துத் தொகுத்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'. 'டிஸ்கவரி புக் பேலஸ்' பதிப்பக வெளியீடாக வெளிவந்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு. கொரோனா ஊரடங்குச் சூழல் அனுபவங்களைப் பதிவு செய்யும் 103 தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. நூலின் இறுதியில் கவிஞர்களின் புகைப்படங்களுடன் அவர்களைப்பற்றிய சுருக்கமான குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

இது கொரோனா பெருந்தொற்றுக்காலத்து அனுபவங்களைப் பதிவு செய்திருக்கும் தொகுப்பு என்னும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

இதில் எனது கவிதையொன்றும் உள்ளது. அதன தலைப்பு ' A Walk Through Corona - Wrapped Night'

கொரோனா ஊரடகுச் சூழலால் 'டொரோண்டோ' வூட்பைன் குளக்கரையருகில் மனிதர்களின் நடமாட்டம் குறைந்த நிலையைப் பயன்படுத்தி, நரியொன்று தனக்கொரு வளையமைத்துக் குட்டிகளையீன்று வாழத்தொடங்கியதை இம்மாநகரத்து மக்கள் வியப்புடனும், அன்புடனும் பார்த்தார்கள். மான்கள் நகரின் மையத்தில் நடமாடின.

அதுவரை பதுங்கிக் கிடந்த மிருகங்களெல்லாம் நகரத்தின் மையத்துக்கே வரத்தொடங்கியிருந்தன. உலகின் பல பகுதிகளில் இவ்விதமான காட்சிகளைக் காண முடிந்தது. கொரோனா என்றால் எனக்கு அந்த நரிக்குடும்பமும் நினைவுக்கு வரும். அக்குடும்பம் ஓரடையாளம். இக்கவிதையிலும் அந்நரிக்குடும்பத்தைப் பதிவு செய்துள்ளேன்.

அமரர் கே.எஸ்.சிவகுமாரனின் கடிதமொன்று!


என் மதிப்புக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன். அவர் பதிவுகள் இணைய இதழின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர். பதிவுகளில் தொடர்ச்சியாக அவரது கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.
அண்மையில் பழைய நூல்களைத் தேடிக்கொண்டிருக்கையில் அகப்பட்ட கடிதமிது. கே.எஸ்.எஸ் தன் கைப்பட எழுதிய கடிதங்களிலொன்று.
இன்று மின்னஞ்சல் யுகத்தில் வாழும் சூழலில் இவ்விதமான கடிதங்கள் பொக்கிசங்களே.





'நந்தலாலா இலக்கிய வட்டத்தின்' ஏற்பாட்டில் எல்.ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் அறிமுக நிகழ்வு!

பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி நூலுருப்பெற்ற , எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் அறிமுக நிகழ்வு , 'நந்தலாலா இலக்கிய வட்டத்தின்' ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் விநோதன் அரங்கில் நடைபெறவுள்ளது. அது பற்றிய அறிவித்தலிது. தகவல் தந்தவர் - எல்.ஜோதிகுமார். பகிர்ந்துகொள்கின்றேன்.


'கனவு' இதழின் 'இலங்கைச் சிறப்பிதழ்'!


எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வரும் இலக்கியச்  சிற்றிதழ் 'கனவு'. விளம்பரங்கள் அற்று வெளியாகும் இதழ் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'கனவு' இதழின் ஆகஸ்ட் 1991 இதழ் 'இலங்கைச் சிறப்பிதழ்' ஆக வெளியாகியுள்ளது. 

இதழ் சிறப்பாக வெளிவருவதற்கு எழுத்தாளர் மேமன்கவியின் பங்களிப்பு முக்கியமாக உதவியிருக்கின்றது என்பதை நூலின் உள்ளடக்கம் மூலம் அறிய முடிகின்றது. ஆங்கிலத்தில் எழுதி உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர் அருள் சுப்பிரமணியத்தின் 'கணிதவியலாளன்' சிறுகதை நூலின் முதலாவது ஆக்கமாக அமைந்திருக்கின்றது. எழுத்தாளர் ராஜ ஶ்ரீகாந்தனின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. அவ்வப்போது  தமிழ் இலக்கியச் சூழலுக்கு எழுத்தாளர் அருள் சுப்பிரமணியத்தை நினைவூட்டி வருபவர் மேமன்கவி. நிச்சயம் இச்சிறுகதையையின் பிரசுரத்துக்கு அவர் காரணமாக இருந்திருப்பார் என்பதை ஊகிக்க முடிகின்றது. நல்லதொரு தேர்வு.

Sunday, June 14, 2026

வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல்!


எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதல்பிரதி தமிழகத்தில் ஸ்நேகா (தமிழகம்) & மங்கை (கனடா)  வெளியீடாக 1996இல் வெளியானது. அண்மையில் திருத்தப்பட்ட இரண்டாவது பிரதி அமேசன் - கின்டில் மின்னூலாக வெளியானது.

நூலின் முதற் பிரதி நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதனை வாசிக்க - https://noolaham.net/project/20/1928/1928.pdf

Wednesday, June 10, 2026

'இமயம்' சாய்ந்தது: இயக்குநர் பாரதிராஜா மறைவு!

 - இயக்குநர் பாரதிராஜா -

இயக்குநராக, தயாரிப்பாளராக, திரைக்கதை  ஆசிரியராக, நடிகராக எனப் பன்முக ஆற்றல் பெற்ற கலைஞர் அவர்.

நாடகத்தனமான வசனங்களும், 'செட்'டுகளும் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ்த்திரையுலகுக்கு  உயிர்த்துடிப்புடன் கூடிய   கிராமத்து மண்ணை அறிமுகப்படுத்திவர் 'இயக்குநர் இமயம்' என்று அறியப்பட்ட பாரதிராஜா. அண்மைக்காலமாக அவர் பற்றி வெளியான செய்திகளின் அடிப்படையில் அவர் விரைவில் மறைவார் என்னும் எண்ணம் தோன்றியிருந்த போதும், உண்மையில் அவர் மறைந்த செய்தி அதிர்ச்சியைத்தான் தந்தது. பேரிழப்புத்தான்.

இவரது திரைப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்தவை: பதினாறு வயதினிலே, கிழக்கே  போகும் ரயில், முதல் மரியாதை, வேதம் புதிது, கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே, மண் வாசனை .  இ வை உடனே நினைத்ததும் நினைவுக்கு  வந்தவை. இப்படைப்புகள் பாரதிராஜாவின் புகழைக் கலையுலகில் நிறுத்தி வைக்கும். இவர்  இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரையும் நானும் பகிர்ந்து கொள்கின்றேன்.



Tuesday, June 9, 2026

கலாமோகனின் 'காதல் கதைகளும், சில காதலிகளும்' சிறுகதை பற்றி.....

 எழுத்தாளர் க.கலாமோகன் 

கடந்தவாரம் ஸ்கார்பரோவில் நடைபெற்ற 'துவாரம்'  சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டில் உரையாற்றியவர்கள் தொகுப்பிலுள்ள 'காதல் கதைகளும், சில காதலிகளும்' சிறுகதை ப்ற்றிக் கூறிய கருத்துகளைக் கேட்டபோது  அவர்களில் எவருமே அக்கதையைச் சரியான கோணத்தில் புரிந்து கொண்டார்களா என்றொரு கேள்வி என் மனத்தில் எழந்தது. 

அந்தக் கதை காதல் கதைகள் எழுதும் வயோதிப் எழுத்தாளர் ஒருவர் பற்றிய கதை சொல்லியின் விபரிப்பு. அதன்படி அக்கதை பற்றி உரையாடியவர்கள் அவ்வயோதிப எழுத்தாளின் பல்வேறு காதலிகளைப்பற்றியும், இவ்விதமான சமூகப் பிறழ்வுகள் அன்றாடம் நடப்பவைதாம் என்றும், ஆனால் அவை பொதுவாகச் சமூகம் அறியாதவகையில் மறைக்கப்பட்டு விடுகின்றன என்றும் குறிப்பிட்டார்கள். ஆனால் உண்மையில் அந்தக் கதை என்ன கூறுகின்றது? அவ்வெழுத்தாளரின் காதலிகளைப் பற்றி யார் கூறுகின்றார்கள்? அவற்றில் உள்ள உண்மைத் தன்மை என்ன? இவை போன்ற விபரங்களை அவர்கள் அச்சிறுகதையூடு  ஆராய்ந்தார்களா? இவை பற்றிய கட்டுடைப்புகளே இச்சிறு பதிவு.

Sunday, June 7, 2026

''மஞ்சு வந்து , கொஞ்சுகின்ற மலை அழகு! (மேற்குத் தொடர்ச்சி மலை)'' - எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஷ்!


''மஞ்சு வந்து , கொஞ்சுகின்ற மலை அழகு! (மேற்குத் தொடர்ச்சி மலை)'' என்று குறிப்பிட்டு,  என் பால்யப் பருவத்து நண்பரும், ஶ்ரீராம் விக்னேஷ் என்னும் பெயரில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்டவருமான நண்பர் வவுனியா விக்கி இவ்வழகிய மேகங்களில் தாலாட்டில் மெய்ம்மறந்திருக்கும் மேற்குத்  தொடர்ச்சி மலையினை தன் அலைபேசிக் கமராவுக்குள் அகப்படுத்தி  அனுப்பியிருந்தார்.

நெஞ்சைக் கொள்ளும் இயற்கையின் வனப்பில் நானும் மெய்ம்மறந்தேன். விக்கி சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட.  அதனை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் இவை. 

எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஷ் (வவுனியா விக்கி) -


இன்று நண்பருக்குப் பிறந்தநாளும் கூட. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விக்கி. இயற்கையின் தாலாட்டில் , மேகங்களின் அரவணைப்பில் தன்னை மெய்ம்மறந்து கிடக்கும் மலைத்தொடரின் அழகில் எம்மையும் மெய்ம்மறக்க வைத்ததற்கு நன்றியும் கூட.

மேற்குத்தொடர் மலையின் ஒரு பகுதியான கொடைக்கானல் எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் 'பொன் விலங்கு' நாவலை நினைவூட்டுகின்றது. உண்மையில் நாவலில் அவர் கொடைக்கானல் என்னும் பெயரைப் பாவித்திருக்க மாட்டார், மல்லிக்கைப்பந்தல் என்றே குறிப்பிட்டிருப்பார். ஆனால் அதனை அவர் கொடைக்கானலுக்காகவே பாவித்திருக்க வேண்டுமென்று உணர்வதுண்டு. ஏனென்றால் மல்லிக்கைப்பந்தலும் மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள நகரம். 

விசுவநாதன் டீச்சர் (திருமதி தவமணி விசுவநாதன்) மறைவு!


யாழ்  இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் ஆசிரியையும், முன்னாள் யாழ் மேயர் திரு.இராசா விசுவநாதனின் மனைவியுமான விசுவநாதன் டீச்சர் மறைந்ததாக வாட்ஸ் அப்பில் என் சகோதரிகளில் ஒருவர் தகவல் அனுப்பியிருந்தார்.

விசுவநாதன் டீச்சர் அம்மாவின் (நவரத்தினம் டீச்சர்) சிநேகிதிகளில் என் நினைவுக்கு உடனடியாக வரும் இருவரில் ஒருவர். மற்றவர் முன்னாள் யாழ்  இந்த மகளிர் கல்லூரி அதிபரான   இராமநாதன் டீச்சர்.

என் அப்பாவின் மறைவின்போது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வந்திருந்தார். அம்மாவுடன் அழுதபடி நின்ற தோற்றம் மனக்கண்ணில் தெரிகிறது. 

அம்மாவின் பால்யப் பருவத்திலிருந்து பின்னர் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையாக எனத்  தொடர்ந்த நட்பு தொடர்ந்து நீடித்தது. 

Thursday, June 4, 2026

கட்டடக்கலைஞர் மயூரநாதன் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! (பகுதி2 - தொடர்ச்சி) - வ.ந.கிரிதரன் -

 

 [ அண்மையில்  'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற முடியாது போயிற்று. அதனை முழுமையாகத் தருவது முக்கியம் என்பதால் அது இங்கு முழுமையாக இடம் பெறுகின்றது.]

பகுதி இரண்டு: கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு (தொடர்ச்சி)

'சங்கிலித்தோப்பு' வாயில்  அல்லது கல்தோரண வாயில் பற்றி....

சங்கித்தோப்பு வாயில் என்று இது அழைக்கப்பட்டாலும், உண்மையான சங்கிலித்தோப்பு மந்திரிமனையை அண்டிய பகுதியே. அக்காணிப்பெயர்தான் சங்கிலித்தோப்பு என அழைக்கப்படுகின்றது. இவ்வாசல் உள்ள பகுதி பாண்டியமாளிகை வளவு என்றழைக்கப்படுகின்றது.  

இந்த வாயில் பற்றியும் மயூரநாதனின் இந்நூலில்  விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை யாரும் சுட்டிக்காட்டாத முக்கிய விடயமொன்றையும் மயூரநாதன் இவ்வாயில் பற்றிக் குறிப்பிடுகின்றார். அது முக்கியமானது. இவ்வாயிலானது ஒரு மாளிகையின் முகப்பு வாசலாக இருப்பதற்குச் சாத்தியமில்லை என்கின்றார்.   இதன் குறைந்த பருமன் இதனுடன் அகலமான மாளிகைச் சுவர்கள் பொருந்தி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை அவர் முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டுகின்றார். இது பற்றிய நுணுக்கமான ஆய்வு அவசியம் என்றும் கூறுகின்றார்.  இது மாளிகையின் முகப்பாக அல்ல , .அங்கிருந்த மாளிகையொன்றின் வளவை அல்லது வீட்டுத் தோற்றத்தைச் சுற்றி அமைந்துள்ள மதிலில் இருந்த நுழை வாயிலாக இம்முகப்பு இருந்திருக்கலாம்  என்பதை ஊகிக்கலாம் என்கின்றார்.(பக்கம் 222).

Wednesday, June 3, 2026

தமிழக முதலவருக்கு ஓர் ஆலோசனை!


சமூக ஊடகங்களால்
வென்றார்.
சமூக ஊடகங்களால்
தோற்றார்
என்னும் நிலையினைத்
தவிர்க்க
இன்னும் விஜய் செய்ய
வேண்டியது
நடப்புலகில்
நடிப்பதைத் தவிர்ப்பதுவே!
'ஸ்கிரிப்ட்'தேவை நடிகனுக்கு
மாநில முதல்வருக்கு
அல்ல.
இருக்கும் அறிவைப் பாவித்து
எடுத்துரைத்தாலே போதும்
எல்லாரும் கலைஞர் ஆக வேண்டியதில்லை.
எதிர்வரும் காலம்
எடுத்துக்காட்டும் விஜய்
முதல்வரா அல்லது
முன்னாள் முதல்வரா
என்பதை!
ஆளுமையை மாற்றுவது
அவரை அரசியலில்
நிலை நிறுத்தும். தொடர்ந்தும்
அரிதார அரசியலை முன்னெடுத்தால்
அவர் காணாமலே போவார்.
சமூக ஊடகங்களால் வந்தவர்
சமூக ஊடகங்களால் செல்வார்!
வீழ்வார்!
 
* டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி வழி வநகி

Tuesday, June 2, 2026

விஞ்ஞான அறிவு நூல்களை வெளியிட்ட ஹிக்கின்பாதம்ஸ் பதிப்பகம்!


 

என் பதின்ம வயதுகளில் நான் யாழ் பொதுசன நூலகத்தில் விரும்பி வாசித்த நூல்களில் அறிவியல் நூல்களுக்கும் முக்கிய இடமுண்டு. இது பற்றி எனது பல முகநூற் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். நூலகம் பற்றிய பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்:

"நான் ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது இந்த நூலகத்தில் எத்தனையோ அறிவியல் நூல்களைப் படித்திருக்கின்றேன். மிகவும் அழகாக விஞ்ஞானத்தின் பல்வேறு பிரிவுகளிலும் நூல்களை அக்காலகட்டத்தில் சென்னையிலுள்ள பதிப்பகமொன்று வெளியிட்டுக்கொண்டிருந்தது. 'பெளதிகத்தின் வரலாறு', 'கடலின் வரலாறு', 'உயிரினங்களின் வரலாறு',.. என்பது போன்ற தலைப்புகளிருக்கும். 

'பெளதிகத்தின் வரலாறு' என்னுமந்த நூலில் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற சக்திக்கும், பொருளுக்குமிடையிலான தொடர்பினை வெளிப்படுத்தும் சூத்திரத்தை, ஒளித்துகளுக்கு உந்தம் மற்றும் இயக்கச்சக்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய சூத்திரங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நிறுவியிருந்தது இன்னும் பசுமையாக மனதிலுள்ளது. '... இவ்வகையான அறிவியல் நூல்கள் எங்கள் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. மேற்படி விஞ்ஞான நூல்களில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் பிரசுரமான அறிவியல் நூல்களின் தரமான மொழிபெயர்ப்புகளே. "

Saturday, May 30, 2026

அழியாத கோலங்கள்: ராணி வாராந்தரி சிறுவர் தொடர்கதைகள்!


என் பால்யப் பருவத்தில் எம் வாசிப்புப் பசிக்குத் தீனியாக இருந்தவற்றுள்  ராணி வாராந்தரியில் வெளியான சிறுவர் தொடர்கதைகளும் அடங்கும்.

ராணி வாராந்தரியில் இரு பக்கங்கள் சிறுவர் ஆக்கங்களுக்கு ஒதுக்குவார்கள். ஒரு பக்கத்தில் சிறுவர் தொடர்கதையொன்று வெளியாகும், அடுத்த பக்கத்தில் விடுகதைகள் , வேறு பல்சுவைத்துணுக்குகள் போன்றவை வெளியாகும்.

அண்மையில் இணையத்தில் பழைய ராணி இதழ்களின் சில பக்கங்களைக் கண்டேன். முகநூல் நண்பர் மோகன்குமார் பகிர்ந்திருந்தார். அதிலுள்ள ராணி இதழ்கள் நான் தீவிர வாசிப்பில் இறங்குவதற்கு முன் வெளியானவை. இருந்தாலும் அதே மாதிரியான வடிவமைப்பில்தான் நான் வாசிக்கத் தொடங்கியபோது ராணி வெளியாகிக்கொண்டிருந்தது. அதனால் மேற்படி ராணி இதழின் பக்கங்கள் பழைய நினைவுகளை எழுப்பி விட்டன.

(தமிழக அரசியல்) உதயநிதி & விஜய்: ஆரம்பமாகும் புதிய மோதல்!


அன்று தமிழகத்தில் திமுகவினர் ஆட்சியைப் பிடித்தபோது அவர்கள் இளவயதினர். அன்று இள வயதுத் திமுகவினர் கோட்பாட்டு ரீதியில் பகுத்தறிவு, சமநீதி , சுயமரியாதை என்று எழுத்துகள், மேடைப்பேச்சுகள், திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் என்று புயலாகப் புறப்பட்டபோது அவர்கள் பின்னால் தமிழகத்தின் இளைஞர்கள் திரண்டனர். தமிழக அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வந்தனர் தமிழக மக்கள்.


அதன் பின் இன்றுவரை அதே திமுகவினர் முதுமையின் தாலாட்டில் இருக்கும் அமைச்சர்கள் பலரை உள்ளடக்கி இருக்கும் நிலையில் தமிழக இளைஞர்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இன்று தமிழக மக்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பெரியதொரு வெற்றியைக் கொடுக்கவில்லை. அவர்களுக்குத் தவெக பற்றி உறுதியான, நம்பிக்கையான எண்ணம் இருப்பதாகத்தெரியவில்லை. அதனால்தான் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தபோது அரைகுறை வெற்றியினைக் கொடுத்தார்களோ என்று தோன்றுகின்றது.

திமுகவின் கோட்டையான சென்னையிலேயே பழையவர்களையெல்லாம் தோல்வியைத் தழுவ வைத்த மக்கள், இளையவரான உதயநிதி ஸ்டாலினை வெற்றி பெற வைத்துள்ளனர்.

Thursday, May 28, 2026

நாம் அறிந்திராத யாழ்ப்பாண நகரின் மறுபக்கங்கள் - பகுதி 1, பகுதி 2 & பகுதி 3


நாம் அறிந்திராத யாழ்ப்பாண நகரின் மறுபக்கங்கள்! 

நாம் அறிந்திராத யாழ்ப்பாண நகரின் மறுபக்கங்கள் - பகுதி 1

நாம் அறிந்திராத யாழ்ப்பாண நகரின் மறுபக்கங்கள் - பகுதி 2

நாம் அறிந்திராத யாழ்ப்பாண நகரின் மறுபக்கங்கள் - பகுதி 3

பாரதியார் பாடல் : நிலாவும் வான்மீனும் வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.


பாரதியார் பாடல் : நிலாவும் வான்மீனும்
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
டிஜிட்டல் ஓவியம் -  சாட்ஜிபிடி வழி வநகி


நிலாவும் வான்மீனும் காற்றும்
மனத்தை வாழ்த்துதல்

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோலவெறி படைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ!

பாரதியார் பாடல் : காற்று வெளியிடைக் கண்ணம்மா வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.


பாரதியார் பாடல் : காற்று வெளியிடைக் கண்ணம்மா 
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
டிஜிட்டல் ஓவியம் -  சாட்ஜிபிடி வழி வநகி


காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்

பாரதியார் பாடல்: 'நடிப்பு சுதேசிகள்' வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


பாரதியார் பாடல்:  'நடிப்பு சுதேசிகள்'
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
டிஜிட்டல் ஓவியம் -  சாட் ஜிபிடி வழி வநகி


    நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
    வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
    வாய்ச் சொல்லில் வீரரடி.

    கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
    நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
    நாளில் மறப்பா ரடீ

        அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
    உச்சத்திற் கொண்டா ரடீ - கிளியே
    ஊமைச் சனங்க ளடீ!

    ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
    மாக்களுக் கோர் கணமும் - கிளியே
    வாழத் தகுதி யுண்டோ ?

   நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
    வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
    வாய்ச் சொல்லில் வீரரடி.

Wednesday, May 27, 2026

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! (பகுதி 2) - வ.ந.கிரிதரன் -


[ சென்ற ஞாயிறு 'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற் முடியாது போயிற்று. அதனை முழுமையாகத் தருவது முக்கியம் என்பதால் அது பதிவுகள் இணைய இதழில் முழுமையாக இடம் பெறுகின்றது.]
 

பகுதி இரண்டு: கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு!

1. நல்லூர்க் காலம் -  நகர அமைப்பு மற்றும்  கட்டடக்கலை

நல்லூர் ராஜதானியாக விளங்கிய காலகட்டம் பற்றிக்  குறிப்பிடுகையில் ஒல்லாந்தர் காலத்து நிலப்படங்கள், போர்த்துக்கேயர் காலத்து வரலாற்று அறிஞர்கள், பாதிரிமார்களின் நூல்கள் , கள ஆய்வு போன்றவற்றிலிருந்து நல்லூர் ராஜதானியின் தெருக்கள், ஆலயங்கள் பற்றிய தன் கருத்தை முன் வைக்கின்றார். எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (1996) நூல் பற்றியும் குறிப்பிடுகின்றார். 

"...முத்திரைச் சந்தை ஏறத்தாழ  இதன் மையத்தில் அமைந்துள்ளது.  எனினும், அக்கால நல்லூர்  ஒழுங்கான சதுர வடிவம் கொண்டது என்றோ,  அதன் சரியான மையத்திஒல் முத்திரைச் சந்தை  இருந்தது எனறோ  எடுத்துக்கொள்ள முடியாது.  ஒல்லாந்தர் கால நல்லூர்  ஒழுங்கற்ற வடிவம்  கொண்டதாக இருந்ததையே  அக்கால நிலப்படங்கள்  காட்டுகின்றன.  தற்காலத்தில் முத்திரைச்சந்தையிலிருந்து நான்குதிசைகளை நோக்கிச் செல்லும் வீதிகள் நல்லூர் தலைநகராக இருந்த காலத்திலேயே இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.  தெற்கு நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதி மட்டும் அக்காலத்தில் இருந்திருக்கலாம்." ('யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) , பக்கம் 69)

நகரம் ஒழுங்கான சதுர வடிவில் இருந்ததாகவோ , சந்தை நகரின் மையத்தில் இருந்ததாகவோ எடுத்துக்கொள்ள முடியாது என்ற  முடிவுக்கு அவர் வருவதற்கு முன்னர் , இவ்விடயத்தில் கட்டடக்கலை பற்றி, நகர அமைப்புப் பற்றிய வாஸ்துசாத்திர விதிகளையும் சிறிது கவனத்திலெடுத்திருக்கலாம். ஏனென்றால் நாம் இன்று வரை வாஸ்துசாஸ்த்திரம் பார்த்துத்தான் வீடுகளைக் கட்டுகின்றோம். இவ்விதிகளைத்தான் எம் முன்னோரும் நகரங்களை அமைக்கையில் பின் பற்றினார்கள். இவ்விதிகளின்படி தலைநகர்களை அமைக்கும்போது நகரின் மையத்தில் கிழக்கு - மேற்காக, வடக்கு - தெற்காக இரு பிரதான பாதைகள் இருக்க வேண்டும் எனவும், நகரம் சதுர வடிவில் (அவ்விதம் அமைக்க முடியாத சூழலில் செவ்வக வடிவில் ) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் இவ்விதம் அமைக்கப்படும் தலைநகரைச்சுற்றி மதில் அமைக்கப்பட வேண்டும் எனவும், பிரதான பாதைகள் மதில்களின் வாசல்களை சந்திக்குமிடத்துக்கண்மையில் ஒவ்வொரு திக்கிலும் ஆலயங்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும் இவ்விதிகள் குறிப்பிடுகின்றன.  இவ்விதமான பண்டைய நகர அமைப்பு விதிகளை ஆராய்ந்து , தென்னிந்திய , வட இந்திய நகரங்கள் , ஆலயங்களையெல்லாம் ஆராய்ந்திருக்கும் Architecture of the World: India  என்னும் நூல் இவற்றை ஆராய்வதற்குரிய சிறந்த உசாத்துணை நூல்களில் ஒன்று. (Andreas Wolwahsen , Henri Stierlin (Editor)  இந்நிலையில் மயூரநாதன் இவ்விடயத்தில் முடிந்த முடிவுக்கு வராமல், வாஸ்துசாத்திர விதிகளின்படி அவ்விதம் இருந்திருக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் அதற்காக உறுதியான ஆதாரங்கள் இல்லையென்று குறிப்பிட்டிருக்கலாம் என்று மேற்படி அவரது கருத்தை வாசித்தபோது தோன்றியது.

கட்டடக்கலைஞர் மயூரநாதன் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! (பகுதி 1) - வ.ந.கிரிதரன் -

[ மே 24, 2926 அன்று  'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற் முடியாது போயிற்று. அதனை முழுமையாகத் தருவது முக்கியம் என்பதால் அது பதிவுகள் இணைய இதழில் முழுமையாக இடம் பெறுகின்றது.]

1.

வரலாற்று முக்கியத்துவம்

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் அவரது 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)' என்னும் இந்த நூல் மூலம் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவராக முகிழ்த்திருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும்.  இலங்கைத்  தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முககிய குறைபாடுகளில் ஒன்று  வரலாற்றுத் தெளிவின்மை.  இலங்கையின் தொன்மக் குடிகளாக இருந்தும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை கோலோச்சிய யாழ்ப்பாண இராச்சியம் பற்றி, அதன் மன்னர்களைப்பற்றி, இருந்த இராஜதானிகள் பற்றி ஆதாரபூர்வமான,  வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய வரலாறு  இல்லை என்றுதான் கூற வேண்டும்.  இலங்கைத் தமிழரின்  வரலாற்றைப் பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நூல். அது போல் கைலையாமாலை , வையாபாடல் போன்றவையும் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவையெல்லாமே கூறும் வரலாறு இவை எழுதப்பட்ட காலத்திற்கு முற்பட்டவை. எனவே பல கர்ணபரம்பரைக் கதைகள், கேள்வி ஞானத்தகவல்களை உள்ளடக்கியவை. இவற்றை வடி கட்டு , உண்மை பொய் அறிவதற்கு முதலியார் செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோர் முயற்சி செய்திருக்கின்றார்கள்.  அவற்றின் விளைவுகளே முதலியார் செ.இராசநாயகத்தின் யாழ்ப்பாணச் சரித்திரமும், சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனமும். மேலும் பலர் யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதியிருந்தாலும், இவை முக்கியமானவை.

மேலும் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுவதில் இலங்கைத் தமிழர்  காட்டும் அசிரத்தை. இவ்விடயத்தில் எம்மவருக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்று நூலாசிரியர் மயூரநாதன்  அண்மைய ஆதித்தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். உதாரணத்துக்கு அவர் கங்கா சத்திரம் இடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். கங்கா சத்திரம் இருந்ததால்தான் அப்பகுதி சத்திரத்துச் சந்தி என்று அழைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இச்சமயத்தில் எனக்கு ஒரு நினைவு தோன்றுகின்றது. எண்பதுகளில் யாழ் ஈழநாடு பத்திரிகையில் யாழ் நகரில் பழமையின் சின்னங்கள் பேணப்படுவதன் அவசியம் என்றொரு கட்டுரை எழுதினேன்.  எழுதிய பின்னரே யாழ் மாநகரசபை கங்கா சத்திரத்தை இடித்தது. இவ்விதமிருக்கின்றது எம்மவரின் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுதல் பற்றிய புரிதல். இந்நிலை மாற வேண்டும். இதற்கு நிச்சயம் இந்நூல் உதவி புரியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.


அதே நேரம் சிங்களவர்களைப்பொறுத்தவரையில் தம் வரலாற்றினைக் காலத்துக்குக் காலம் ஒழுங்காகப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். தீபவம்சம், அதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட மகாவம்சம், தொடர்ந்து எழுதப்பட்ட சூளவம்சம்  என அவர்கள் தம் வரலாற்றைப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். இவ்விதம் இலங்கைத் தமிழரும்  செய்து வந்திருந்தால் இலங்கைத் தமிழரின் வரலாற்றில் தற்போது எதிர்கொள்ளும் குழப்பங்களைத்  தவிர்த்திருக்கலாம்.

இந்நிலையில்தான் மயூரநாதனின் இந்நூலின் முக்கியத்துவம் உள்ளது.  பொது யுகத்தின் பின் 1621 தொடக்கம் 1948 வரையிலான காலகட்டத்தில் , யாழ்ப்பாண நகரம் எப்படியிருந்தது என்பதை ஆதாரபூர்வமாகச் , சான்றுகளுடன் விபரிக்கும் வரலாற்று நூல் 'யாழ்ப்பாண நகரின் வளர்ச்சி வரலாறு'  நூல். இவ்விதமான வரலாற்று நூல்கள் அதிக அளவில் எதிர்காலத்தில் வரவேண்டும். தமிழ நகரப் பகுதிகளில் நவீனத் தொழில் நுட்பம் கொண்டு , அண்மையில் யாழ் கோட்டைப் பகுதியில் நடத்தியது போல், ட்ரோன்கள், ரேடார் போன்றவற்றின் உதவி கொண்டும் ஆய்வுகள் செய்வதன் மூலம் கடந்த கால வரலாற்றினை இன்னும் தெளிவாக அறிய முடியும். அதே போல் வழக்கமான தொல்லியற் செயற்பாடுகளான அகழாய்வுகள் மூலமும் ஆய்வுகள் தொடர வேண்டும். இவற்றின் அடிப்படையில் மேலும் பல வரலாற்று நூல்கள் உருவாவது காலத்தின் தேவை.

பெளதிகரீதியிலான வரலாற்று நூல்
அடுத்தது மயூரநாதனின் இந்நூலின் முக்கியமான இன்னுமொரு சிறப்பு - இது பெளதிகரீதியில் யாழ்ப்பாண நகரத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளும் நூல் என்பதாகும்.  பொதுவாக அரச வம்சங்களின் அடிப்படையில் அமையும் வரலாற்று நூல் அல்ல இந்நூல்.

பெளதிகரீதியிலான நகரொன்றின் வளர்ச்சி வரலாறு என்னும்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அது என்ன பெளதிகரீதியிலான என்பதுதான் அது. 

பெளதிகக் கண்ணோட்டம் என்பது ஒரு நகரத்தின் கட்டமைப்பு, புவியியல், சுற்றுச்சூழல் , நில அமைப்பு, நகர அமைப்பு, கட்டடக் கலை, சமூக,அரசியல் தாக்கங்கள் ஏற்படுத்திய நகர மாற்றங்கள், தொழில் நுட்பங்கள் ஏற்படுத்திய விளைவுகள், மக்கள் தொகை அதிகரிப்பு, இவை காரணமாக நகரில் பல்வகைகளில் ஏற்பட்ட வளர்ச்சி, மற்றும் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றைப் பற்றிய வரலாறு என்று பொதுவாகக் கூறலாம். குறிப்பாகக் கூறினால் மேலும் விளக்கமாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

1 .நிலப்பயன்பாடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி  - நகரமொன்றின் நிலப்பயன்பாடு எவ்விதமிருந்தது ,காலத்துடன் எவ்விதம் மாறுதலடைந்தது என்பதை வெளிப்படுத்துவது அது பற்றிய வரலாறு.

2. கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு  - கட்டிடக்கலைப் பாணிகளின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள், நுட்பங்கள் மற்றும் அழகியல் கூறுகள் நகரத்தின் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகின்றன. இவற்றை வெளிப்படுத்தும் பெளதிகரீதியிலான வரலாறு.

3    சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் தாக்கங்கள்  -  ஒரு நகரத்தின் புவியியல் இருப்பிடம் (மலைகள், ஆறுகள், கடல்கள்) அதன் வளர்ச்சிப் போக்கை எவ்வாறு பாதித்தது என்பதை பெளதிக ரீதியிலான வரலாறு   வெளிப்படுத்துகிறது. 

4. சமூக-பொருளாதாரப் பரிணாமம்  -  நகரமொன்றின்  சமூக மற்றும் பொருளாதாரம் எவ்விதம் நகர அமைப்பைப் பாதிக்கின்றன என்பதைப் பெளதிகரீதியிலான வரலாறு எடுத்துரைக்கும்.

5. அழிவு மற்றும் மறுகட்டமைப்பு: போர்கள், இயற்கை சீற்றங்கள் அல்லது அரசியல் மாற்றங்கள் ஒரு நகரத்தின் பெளதிக அமைப்பை எவ்வாறு அழித்தன என்பதையும், பின்னர் அவை எவ்வாறு மறுகட்டமைக்கப்பட்டன என்பதையும் பெளதிக வரலாறு பதிவு செய்கிறது.         

6.     பழங்குடி அறிவு மற்றும் உள்ளூர் பாரம்பரியம்:  ஒரு நகரத்தின் பழமையான பெளதிக கட்டமைப்புகள், அங்கு வாழ்ந்த மக்களின் உள்ளூர் அறிவு, சுற்றுச்சூழல் பற்றிய புரிதல் மற்றும் பாரம்பரிய கட்டுமான முறைகளை வெளிப்படுத்தலாம். 

7.     எதிர்காலத் திட்டமிடல் மற்றும் சவால்கள்:  ஒரு நகரத்தின் பெளதிக வரலாற்றைப் புரிந்துகொள்வது, அதன் எதிர்காலத் திட்டமிடலுக்கு முக்கியமானது. கடந்தகாலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும், வெற்றிகரமான அணுகுமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் நிலையான மற்றும் மீள்திறன் மிக்க நகரங்களை உருவாக்க முடியும். புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களை வகுக்கும்போது, வரலாற்றுச் சூழல் மற்றும் பெளதிக அம்சங்களைப் புரிந்துகொள்வது, நகரத்தின் தனித்துவத்தை நிலைநிறுத்த உதவும்.

இவை பெளதிகரீதியிலான நகரொன்றின் வரலாறு வழங்கும் ஆரோக்கியமான விளைவுகள். அதே சமயம் மயூரநாதனின் இந்நூல் யாழ்ப்பாண நகரத்தின் அந்நியர் ஆதிக்கத்தின் கீழிருந்த காலத்தின் வரலாறு. இது அந்நியரின் ஆதிக்கத்தின் வரலாறு. இது தேவைதானா என்றும் சிலர் கேட்கக்கூடும். உண்மைதான்.இது அந்நியர் ஆதிக்கத்தின் கீழ் யாழ் மண் இருந்தபோது எப்படியிருந்தது என்பதை வெளிப்படுத்தும் வரலாறுதான். அதற்காக இது அந்நியர் பெருமை பேசும் வரலாறு அல்ல. அந்நோக்கத்தில்  இந்நூல் எழுதப்படவும் இல்லை. இது யாழ் மண்ணின் வரலாறு. மனிதன் ஒருவனின் வாழ்க்கையில் இன்பப்பக்கங்கள் அல்ல துன்பப்பக்கங்களும் நிச்சயம் இருக்கும், அம்மனிதனின் வரலாறு என்னும்போது அம்மனிதனின் இன்பப்பக்கத்தின் வரலாறு மட்டுமல்ல. துன்பப்பக்கத்தையும் உள்ளடக்கிய வரலாறுதான். அம்மனிதன் சிறையில் இருக்கலாம்,வெளியில் இருக்கலாம்,அம்மனிதனின் வரலாறு சுதந்திரமாக அவன் வெளியில் இருக்கும் வரலாற்றுடன் , சிறையில் அவன் இருந்த காலத்தையும் உள்ளடக்கியதுதான்.  

அது போன்றதுதான் நகரமொன்றின் வரலாறும், புகழ்பெற்ற துறைமுகப்பட்டினமாகப் புகழுடன் விளங்கிய யாழ்ப்பாண நகரம் சில நூற்றாண்டுகள் அந்நியர் ஆதிக்கத்தின் கீழும் இருந்தது. அக்காலகட்டத்தின் வரலாறு யாழ்மண்ணின் வரலாறு. அங்கு வாழ்ந்த மக்களின் வரலாறு. அதைத்தான் மயூரநாதனின் இந்நூலும் வெளிப்படுத்துகின்றது.அதனால்தான் இந்நூலின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது.

வரலாறும் அந்நியர் வரலாறும் பற்றி..

மேலும் அந்நியர் கால ஆட்சியில் ஒரு நகரத்தின் வரலாறு பதிவு செய்யப்படுவது, அது அந்நியரின் வரலாறாக இருந்தாலும்,  இது வெறும் அந்நியரின் வரலாறு  மட்டுமல்ல, நம் மண்ணிலும், நம் மக்களின் வாழ்விலும் அந்நிய ஆட்சி ஏற்படுத்திய ஆழமான தாக்கங்களின் வரலாறு.  அந்நிய ஆட்சி ஒரு நகரத்தின் பெளதிக, சமூக, பொருளாதார, மற்றும் கலாச்சார அமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்களை ஆவணப்படுத்துவது, அந்தத் தாக்கத்தின் முழு வீச்சையும் புரிந்துகொள்ள உதவுகிறது.  சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள், கட்டிடங்கள், பொது நிர்வாகக் கட்டமைப்புகள் போன்ற உள்கட்டமைப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன, அவை யாரால், ஏன் உருவாக்கப்பட்டன, அதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை அறிய  வழி வகுக்கின்றது.

ஒரு நகரம் அந்நியர் ஆட்சிக்கு முன் எப்படி இருந்தது, அந்நியர் ஆட்சியில் எப்படி மாறியது, ஆட்சிக்குப் பின் எப்படி பரிணாம வளர்ச்சி பெற்றது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க அந்நியர் காலப் பதிவுகள் அவசியம்.

அந்நியர்கள் தங்கள் தேவைகளுக்காக நகரத்தை எவ்வாறு வடிவமைத்தார்கள், அது உள்ளூர் சமூகத்தின் வளர்ச்சிக்கு எந்த அளவு உதவியது அல்லது தடையாக இருந்தது என்பதையும் அறியவும் அக்காலகட்ட வரலாறு உதவுகின்றது. 

அந்நியர்கள் தங்கள் நிர்வாக, அறிவியல், மற்றும் தொழில்நுட்ப அறிவை எவ்வாறு உள்ளூர் சூழலில் அறிமுகப்படுத்தினார்கள் என்பதை இந்த வரலாறு பதிவு செய்யும். இவை உள்ளூர் வளர்ச்சிக்கு எவ்வகையில் உதவின என்பதை அறிந்துகொள்ள இவ்வரலாறு துணை செய்யும்.

அதே சமயம், இந்த அறிவையும், உள்ளூர் வளங்களையும் பயன்படுத்தி எவ்வாறு தங்கள் நலன்களுக்காக சுரண்டினார்கள் என்பதையும் வரலாறு  அம்பலப்படுத்தக்கூடும். 

அந்நியர் ஆட்சி உள்ளூர் சமூக அமைப்பில், சமூக உறவுகளில், பொருளாதாரப் பிரிவினைகளில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பதிவுசெய்வது முக்கியம். புதிய சட்டங்கள், வரிவிதிப்புகள், நிர்வாக அமைப்புகள் எவ்வாறு சமூக மாற்றங்களைத் தூண்டின என்பதை அறியலாம். இவற்றைப்பற்றி அறிந்து  கொள்ள இவ்வகையான அந்நியக் காலகட்டப் பெளதிகரீதியிலான வரலாறு உதவும்.

அதே சமயம்   அந்நியர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள், கிளர்ச்சிகள், மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு இயக்கங்கள் பற்றிய பதிவுகளும், அந்நியர் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அவற்றின் வீரியத்தையும், பின்னணியையும் புரிந்துகொள்ள  அந்நியர் காலகட்ட வரலாறு  உதவி செய்யும்.

அந்நியர் வருகை கலாச்சாரக் கலப்புக்கு வழிவகுத்தது. புதிய மொழிகள், கல்வி முறைகள், மதங்கள், கலை வடிவங்கள் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டன, அவை உள்ளூர் கலாச்சாரத்துடன் எவ்வாறு இணங்கின அல்லது மோதின என்பதைப் பதிவுசெய்வது ஒரு நகரத்தின் பன்முக கலாச்சாரப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அவ்வகையிலும் மயூரநாதனின் பெளதிகரீதியிலான வரலாற்றை எடுத்தியம்பும் இவ்வரலாற்று நூல் இருக்கின்றது.

இவ்வகையில் காலனித்துவக் கால வரலாற்றுப் பதிவுகள் ஒரு நகரத்தின் அடையாளத்தின் ஒரு பகுதியாகும்.  அந்நியர் காலப் பதிவுகள் சார்புத்தன்மை கொண்டவையாகவும், ஆதிக்கச் சக்திகளின் பார்வையை மட்டுமே பிரதிபலிப்பவையாகவும் இருக்கலாம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். ஆனால், அவற்றை விமர்சனபூர்வமாக அணுகி, உள்ளூர் மக்களின் குரல்களுடனும், பிற ஆதாரங்களுடனும் இணைத்துப் பார்க்கும்போது, அவை ஒரு நகரத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு அவசியமான, தவிர்க்க முடியாத கூறுகளாக மாறுகின்றன. இவை வெறும் அந்நியரின் வரலாறு அல்ல, அது நம்முடைய, பன்முகத்தன்மை கொண்ட, சவால்கள் நிறைந்த வரலாற்றின் ஒரு முக்கியமான அத்தியாயம்.

[தொடரும்]

girfinav@gmail.com

சோழர் சரித்திர ஆதாரங்கள்!

இந்தச் 'சோழர் சரித்திர ஆதாரங்கள்' என்னும் கட்டுரை வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. ஜனவரி 24, 1954 வெளியான கல்கி சஞ்சிகையில் வெளியானத...