'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Wednesday, May 7, 2025
தனித்து வாழும் என் பாட்டி! - வ.ந.கிரிதரன் -
பாட்டியின் இல்லம் நீ!
இந்த இல்லத்திலிருந்துதான்
என் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
அவள் எதற்காக அங்கிருந்து
வடை சுட்டுக்கொண்டிருக்கின்றாள்
என்று அம்மாவைக் கேட்டேன்.
அதற்கு அம்மா சொன்னாள்:
'அவள் முன்பெல்லாம் இங்கிருந்துதான்
வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
காகங்களின் தொல்லை அதிகமாகி விட்டதால்
அங்கிருந்து சுடுகின்றாள். இப்போது
அவளுக்குக் காகங்களின் தொல்லை
இல்லையல்லவா கண்ணே!'
அம்மா சொன்னதில் உள்ள நியாயத்தை
அப்போது நானுணர்ந்தேன்.
தர்க்கரீதியாகவும் அது சரியாகத்தானிருந்தது.
புத்திசாலிப் பாட்டி என்றேன்.
'உன்னைப்போல் ' என்றாள் அம்மா.
எனக்கு அது மகிழ்ச்சியைத் தந்தது.
என் செல்ல அம்மா என்று கொஞ்சினேன்.
என் அம்மாவுக்கோ கொள்ளை மகிழ்ச்சி.
அப்பொழுதெல்லாம் நான் நினைத்துக்கொள்வேன்
அங்கிருந்த பாட்டியின் தனிமையைப் பற்றி.
பாட்டிக்குத் துணையாக நானும் அங்கு செல்வேன்.
பாட்டியின் கதை கேட்டு நானும் அங்கு தூங்குவேன்.
இவ்விதமெல்லாம் அப்போது நான் எண்ணிக்கொள்வேன்.
Monday, May 5, 2025
கவிதை: குருமண்காடு! - வ.ந.கிரிதரன் -
* ஓவியம் - AI
நான் நினைவில் வைத்திருப்பது இன்றுள்ள
குருமண்காடு அல்ல.
அது ஒரு கனவுலகம் போல்தான்
இப்போது தோன்றுகின்றது.
உண்மையில் அது இருந்ததா என்றும்
சில வேளைகளில் நான் ஐயுறுகின்றேன்.
ஆனால் அவ்விதமான சந்தேகங்களுக்கான
தேவை இல்லையென்பதையும் கூடவே
நான் உணர்கின்றேன்.
அது இருந்ததா அல்லது இருக்கவில்லையா
என்பது எனக்கு முக்கியமல்ல.
அது பற்றிய நினைவுகள் இன்றும்
என் உணர்வுகளில் விரவிக்கிடக்கின்றன.
அவை முக்கியமானவை.
மாபெரும் டைனோசர்கள் ஒரு காலத்தில்
இப்புவியுலகை ஆட்சி செய்தன அல்லவா.
அவற்றை நாம் பார்த்ததில்லை.
பார்க்கப்போவதுமில்லை அல்லவா.
ஆனால் அவற்றின் தடங்கள் இன்னும்
இம்மண்ணில் புதைந்து கிடக்கின்றன.
என் நினைவுத் தடங்களில் குருமண்காடும்
புதைந்துதான் கிடக்கின்றது.
அத்தடங்களிலிருந்து அவ்வப்போது அது
உயிர் பெறுகிறது. அவ்வளவுதான்.
அது போதுமெனக்கு.
Thursday, April 24, 2025
கவிதை: ஏ! விரிவானே! உன்னைத்தான் விரிவானே! - வ.ந.கிரிதரன் -
* ஓவியம் AI |
ஏ! விரிந்திருக்கும் விரிவானே!
நீ எப்போதும் போல் இப்போதும்
என் சிந்தையை விரிய வைக்கின்றாய்.
என் தேடலைப் பெருக வைக்கின்றாய்.
உன்னைப் புரிதல் என் தேடலின் ஊற்று.
உன் விரிவு , ஆழம், தொலைவு
என்னை எப்போதும் வியப்பிலாழ்த்துகின்றன.
வியப்பினூடு விடைகள் எவையும் கிடைக்குமா
என்று முயற்சி செய்கின்றது மனது.
விடைகள் கிடைக்கப்போவதில்லை என்பது
அயர்வினைத் தந்தாலும் உனை, உன் வனப்பை
அயராது இரசிப்பதில் ஒருபோதும் எனக்கு
அயர்வில்லை. அயர்வற்ற இரசிப்புத்தான்.
இருப்பின் இருப்பறிய இருப்பது நீ ஒன்றுதான்
என்கின்றது எப்போதும் தேடிக்கொண்டிருக்கும்
என் நெஞ்சம்.
உன்னில், உன் விரிவில் சஞ்சரித்தவாறு
கீழே பார்க்கின்றேன்.
விண்ணிலிருந்து மண்ணைப் பார்க்கின்றேன்.
எத்துணை அற்பம்! அற்பத்துக்குள்
எத்துணை அதிசயம்! படைப்பில்
எத்துணை அற்புதம்!
எத்துணை நேர்த்தி!
எத்துணை ஞானம்!
Sunday, April 20, 2025
கவிதை: துதியைத் துதிப்போரை மதிப்பேனா? மிதிப்பேனா?. - வ.ந.கிரிதரன் - (ஓவியம் -AI)
துதிபாடல், துதி நாடலால்
துவண்டு கிடக்கிறது
உலகு.
இருப்பின் தன்மை தெரிந்தால்
இதற்கொரு தேவை உண்டா?
இல்லை என்பதை உணரார்
இவர்.
பாதிப்பின் உணர்வுதனை
பரிசுத்தம் கெடாமல் பகர்வீர்.
பண்பாக்கி நடை பயில்வீர்.
பார் போற்றும். ஊர் போற்றும்.
யார்தாம் போற்றார்?
Tuesday, April 15, 2025
கவிதை: சோக்க்ரடீசின் ஆரவாரம்! - வ.ந.கிரிதரன் -
நாம் மந்தைகள்.
மேய்ப்பர்களை எந்நேரமும் எதிர்பார்த்திருக்கும்
மந்தைகள்.
சொந்தமாகச் சிந்திக்க,
சீர்தூக்கி முடிவுகளை எடுக்க
எமக்குத் திராணியில்லை.
திராணியில்லையா
அல்லது
விருப்பு இல்லையா?
எப்பொழுதும் எமக்காக
யாரோ ஒருவர் எடுக்கும் முடிவுகளை
ஏற்றுக்கொள்வதில் எமக்கும்
தயக்கமெதுவுமில்லை.
தாராளமாக அவற்றை ஏற்றுக்கொள்ளும்
தாராளவாதிகள்
நாம் தாம், வேறு எவர்தாம்?
கருத்துகள் , மேய்ப்பர்களின் கூற்றுகள்
எம்மை உணர்ச்சி வெறியில்
துள்ளிக் குதிக்க வைக்கின்றன.
துள்ளிக் குதிக்கின்றோம்.
இன்பவெறியில் கூத்தாடுகின்றோம்.
ஆயிரம் வருடங்களுக்கு
முன்
சோக்கிரடீசு சொன்னான்:
'சுயமாகச் சிந்தியுங்கள்.
சீர்தூக்கிப் பாருங்கள்.
ஏன் என்று எதிர்க்கேள்வி கேளுங்கள்'
நாம் சிந்தித்தலை இழந்ததை
சோக்கிரடீசு இருந்திருந்தால்
அறிந்திருப்பான்.
அறியாமை கண்டு
ஆரவாரம் செய்திருப்பான்.
Friday, April 11, 2025
கவிதை: முகநூல்! - வ.ந.கிரிதரன் -
முகநூல் எனக்குப் பலரின் ஆளுமையினைத்
தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.
புரட்சிகரமான கருத்துள்ளவர்கள் என்று
நான் நம்பிய பலரின் உண்மைச் சொரூபத்தினை
வெளிப்படுத்தியிருக்கின்றது.
சமூகத்தையே மாற்றிவிடப் போவதாகக்
கூக்குரல் இட்டவர்கள்
அவர்கள்தம் உண்மைச் சொரூபத்தை
முகநூல் வெளிப்படுத்தியபோதும்
நாணவில்லை. ஓடி ஒளியவில்லை.
இன்னும் அவ்வாறே கூக்குரல் இட்டுக்
கொண்டுதானிருக்கின்றார்கள்.
பலர் அற்ப ஆசைகளுக்குள்,
போலிப் பெருமைக்குள்,
மூழ்கிக் கிடப்பதையும் முகநூல்
முற்றாக வெளிப்படுத்தியிருக்கின்றது.
கோழைகள் அடையாளங்களை மறைத்து
வீரராக ஆட்டம் போடுகின்றார்கள்.
முகத்தைக் காட்டுவதற்கு அஞ்சும் கோழைகளை
முகநூல் வெளிப்படுத்தியிருக்கின்றது.
நண்பர் என்ற போர்வையில் உலா வந்த பலரை
நட்பின் ஆழத்தைப் புரிய வைத்திருக்கின்றது
முகநூல்.
உள்ளே விடத்தையும்
வெளியில் இனிக்கும் புன்னகையையும்
காட்டும் நல்ல பாம்புகளையும்
முகநூல் சுட்டிக் காட்டியிருக்கின்றது.
கவிதை: ஒரு நூலகத்தின் கனவும், எண்ணத்தோய்தலும்! - வ.ந.கிரிதரன் -
மோதல்களினால் பற்றி எரிகின்றதைப் பார்க்கின்றேன்.
நீங்கள் வெளியில் ஒருவருக்கொருவர்
முட்டி மோதிக்கொண்டிருக்கின்றீர்கள்.
இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுகிறதைப்
பார்க்கின்றேன்.
குழந்தைகள், பெண்கள், முதியவர் எவருமே
உங்களுக்கு ஒரு பொருட்டல்ல
என்பதையும் உணர்ந்து கொள்ள வைக்கின்றது
வெளியில் நீங்கள் போடும் வெறியாட்டம்.
உங்களை நினைத்து நான் வெட்கப்படுகின்றேன்.
நீங்கள்தான் இப்பிரபஞ்சத்தின் தலைவர் என்பதுபோல்
உங்கள் கூத்திருக்கின்றதைப் பார்த்து நகைக்கின்றேன்.
உங்களுக்கு வெளியில் விரிந்து கிடக்கின்றது
பெரு வெளி.
விரி பெரு மெளனத்தில் புதைந்து கிடக்கும்
உங்களைப் பார்க்கையில்
உங்கள் தனிமையைக் கவனிக்கையில்
எனக்கு உங்கள் மேல் பரிதாபம்தான் வருகின்றது.
வெளியில் பேயாட்டம் ஆடும் நீங்கள்
எவ்விதம் இங்கே மெளனமாக,
எவ்வித மோதல்களுமற்று
அருகருகே அமர்ந்திருக்கின்றீர்கள்?
ஆச்சரியம்தான்.
Saturday, February 15, 2025
ஆதாரங்கள்!
அரசியல் ஆய்வாளர்
அவர்.
அவரது கூற்றுக்கு
ஆதாரம் வேண்டும் என்றேன்.
அதற்கு
ஆதாரமா
பாரிஸ் தமிழச்சியின்
யு டியூப் வீடியோ
பார்க்கவில்லையா என்றார்.
பரிதாபமாக வேறு என்னைப்
பார்த்தார்.
உதவிப் பேராசிரியர் ஒருவர்.
ஆதாரம் கேட்டேன்.
இரண்டு யு டியூப் காணொளிகள்
இவையயே சான்றுகள் என்றார்.
இனி இவர்கள்
AI பெரியார்
AI கலைஞர்
எல்லாரையும்
எடுத்து வருவார்கள்
ஆதாரங்களாக.
நாம் எங்கே போகின்றோம்?
Friday, February 7, 2025
வ.ந.கிரிதரன் பாடல் : 'மக்கள் தலைவர் பெரியார்'
பகுத்தறிவுக் காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.
கேட்பதை அப்படியே நம்பாதே என்றார்.
கேட்பதை சிந்தித்து முடிவெடு என்றார்.
நாட்டு மக்களின் நலனுக்காய் வாழ்ந்தார்.
நாளும் பகலும் அயராது உழைத்தார்.
பகுத்தறிவுக் காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.
Monday, January 27, 2025
காலவெளி: கண்ணம்மாக் கவிதைகள் - அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பு ,பதிவுகள்.காம் வெளியீடு!
எனது காலவெளி - கண்ணம்மாக் கவிதைகள் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது. அதற்கான இணைப்பு - https://www.amazon.com/dp/B0DV76H5BS
நான் இருப்புப் பற்றிய தேடல் மிக்கவன். அறிவியலூடு இருப்புப் பற்றிய தேடலில் ஈடுபடுவதில் எனக்குப் பெரு விருப்புண்டு. எம்மைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சக் காட்சிகள் , குறிப்பாக நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானம் இவற்றில் மெய்ம்மறந்து நிற்பதில் மிகுந்த ஈடுபாடு மிக்கவன் நான். விரிந்திருக்கும் இரவு வானும், ஆங்கு தெரியும் சுடர்களும், கோள்களும், உப கோள்களும், எரி நட்சத்திரங்களும் என் மனத்தைக் கிளர்ச்சியடைய வைக்கின்றன. இருப்புப் பற்றிய சிந்தனைகளைத்தூண்டி விடுகின்றன.
இவ்வகையில் அல்பேர்ட் ஐன்ஸ்ட்டைனின் சார்பியற் கோட்பாடுகள் என்மேல் ஏற்படுத்திய பாதிப்பும், ஆதிக்கமும் முக்கியமானது. வெளி, நேரம் , ஈர்ப்புச் சக்தி பற்றிய அவரது சார்பியற் தத்துவங்கள் அறிவியற் துறையை மட்டுமல்ல, இருப்பு பற்றிய தத்துவத்துறையையும் மாற்றியமைத்தன என்பேன். குறிப்பாகக் காலவெளி என்னும் சொற்பதம் சிறப்பான சொற்றொடர். சிந்தையை விரிவடைய வைக்கும் தன்மை மிக்க சொற்றொடர்.
Tuesday, January 21, 2025
கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -
* ஓவியம் - AI
இலக்கியம், அரசியல், விமர்சனம்..
ஆட்டம் சகிக்க முடியவில்லை.
விளக்கமற்ற விமர்சனம்
இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'.
விளக்கமற்ற விமர்சனங்களின் முடிவுகள்
தனிமனிதத் தாக்குதல்கள்தாம்.
தனிமனிதத் தாக்குதல்கள்தாம்.
தனிமனிதத் தாக்குதல்கள் புரியும் இவர்களுடன்
தர்க்கிக்க நான் எப்போதுமே தயார்.
தர்க்கிப்பதற்கு எவையுமில்லை இவர்களுக்கு
என்பதை நிரூபிக்க என்னால் முடியும்.
கவிதை: தர்க்கம் செய்வோமடி கண்ணம்மா! - வ.ந.கிரிதரன் -
கண்ணம்மா,
நீ எப்போதும் கூறுகின்றாய்
நீ இருப்பதாக.
நீ என்னிலும் வேறாக இருப்பதாக.
நான் கூறுகின்றேன் கண்ணம்மா!
நீ எனக்குள் இருப்பதாக.
எனக்கு வெளியில் நீயில்லையென்று.,
நீ மறுத்துக்கூறுகின்றாய்
கண்ணா உன் கண்களை மூடிவிட்டாயா?
அறிவுக்கண்ணைப் பாவி கண்ணா.
பாவித்தால் நான் கூறுவது
புலப்படும்
என்று நீ கூறுவதை
எப்படி என்னால் ஏற்க முடியும்.
கண்ணம்மா, இருந்தாலும் உன்
குறும்புக்கு ஓர் அளவேயில்லையடி.
Monday, January 20, 2025
கண்ணம்மாக் கவிதை: இருப்புப் பற்றியதோர் உரையாடல் கண்ணம்மாவுடன்! - வ.ந.கிரிதரன் -
காலவெளி பற்றிக் கதைப்பதென்றால்,
உன்னுடன் கதைப்பதென்றால்
களி மிகும் கண்ணம்மா.
கூர்ந்த கவனிப்பும், தெளிந்த கருத்துகளும்,
தேர்ந்த சொற்களும்
உன்னுடனான என்உரையாடல்களை
உவப்புக்குரியவை ஆக்குவன.
உன் இருப்பு இருப்பு பற்றிய
தேடல்களின் முக்கிய படிகள்,
இருப்பு என்பது இருப்பவையா?
உளவியற் பிம்பங்களா?
Wednesday, January 1, 2025
'எனது குழந்தைகள்' கவிதை பற்றி...
'புதுசு' சஞ்சிகையின் ஜூலை 1984 இதழில் வெளியான கவிதை இது. துஷ்யந்தன் எழுதியது.
இந்தக் கவிதையை வாசித்தபோது குறிப்பாக 'யுத்தத் தாங்கிகளுக்கு அடியிலும் அவர்களைத் தேடிப்பாருங்கள். அநேகமாக அவர்கள் அங்கேதான் இருப்பார்கள்.' என்ற வரிகளை வாசித்தபோது காசாவின் குழந்தைகள்தாம் என் மனக்கண்ணில் தோன்றினார்கள். உலகமே புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மூழ்கிக்கிடக்கையில் அவர்கள் யுத்தத் தாங்கிளுக்கு அடியில் உறவுகளை இழந்து, பிரிபட்டு , இருப்புக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். நெஞ்சம் கனத்தது. இந்த வருடத்திலாவது அந்தக் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளி பிறக்கட்டும். நிம்மதி கிடைக்கட்டும். அமைதி பிறக்கட்டும்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.!
இத்தரையில் மீண்டுமோர் ஆண்டு பிறந்தது.
எத்திக்கும் நிறையட்டும் இன்பப் பெருவெள்ளம்.
வெள்ளத்தில் நீந்திக் கிடப்போம். எமைமறப்போம்.
உள்ளத்தில் உவகை ஊறட்டும். பெருகட்டும்.
உலகின் உயிர்கள் அனைத்தும் இன்புற்று
கலகலப்பாக இருந்திடட்டும் என்றே வாழ்த்துவோம்.
நலம் மிகுந்தே இருப்பைத் தொடரட்டும்.
அவை என்றே அகமகிழ்ந்து வேண்டிடுவோம்.
போர்கள் ஒழிந்து துயரம் ஒழியட்டும்.
பாரில் அமைதி எங்கும் பூக்கட்டும்.
மானுடப் பேதங்கள் மறையட்டும், உலரட்டும்.
தேன் சிந்தும் மலராகட்டும் வாழ்வு.
புத்தாண்டே இங்கு வந்து பிறந்தாய்.
சித்தத்தை நீ மகிழ்வால் நிறைத்தாய்.
புவியியெங்கு வாழுமெம் உறவுகளே! அனைவருக்கும்
புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு வாழ்த்துகள்.
Wednesday, November 20, 2024
கவிதை: நான் நானாக.. - வ.ந.கிரிதரன் -
எல்லைகளற்று பரந்திருக்கும் விரிவெளியில்
அகதிமேகங்கள் அலைகின்றன.
அலைச்சல் தாளாமல் அவை
அழுதுபொழிகின்றன.
இருப்பைத் தப்ப வைப்பதற்காய்ப்
புள்ளொன்று சிறகடிக்கின்றது.
அதனை விரைவை மீறித்
தொடர்கிறது பெரும்புள்.
பகல் இப்படியென்றால்...
இரவு வானை நோக்குகின்றேன்.
தொலைவில்
ஒளியாண்டுத் தொலைவுகளில்
மலர்ந்து உதிர்ந்து விட்ட
நாகரிகங்களின் பெருமூச்சுகளை
தனிமைகளில் பயணிக்கும் ஒளிச்சுடர்களில்
உணர்கின்றேன்.
இன்று எனக்கு என்ன நடந்தது?
எப்பொழுதும் இருப்பில்
அர்த்தம் கண்டு மகிழ்பவன் நான்.
இன்பம் கண்டு உவகையில் ஊறுபவன் நான்.
இன்று எனக்கு என்ன நடந்தது?
'இன்று உனக்கு என்ன நடந்தது?'
அதுதான் தெரியவில்லையடி கண்ணம்மா
என்றேன்.
Thursday, October 10, 2024
எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 20 கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுதி 'எதிர்காலச்சித்தன் பாடல்' என்னும் தலைப்பில் அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது. அதனை வெளியிட்டிருப்பது பதிவுகள்.காம்.
அத்தொகுப்புக் கவிதைகளை இங்கு தருகின்றோம். 'அறிமுகம்: கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு!;' என்னும் தலைப்பில் தொகுப்பின் முன்னுரையினை எழுதியிருப்பவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரன். அ.ந.க.வின் படைப்புகள் சிறுகதைகள்,கவிதைகள், கட்டுரைகள் பல பல்வேறு சஞ்சிகைகள்,பத்திரிகைகளில் வெளிவந்தவை இன்னும் எமக்குக் கிடைக்கவில்லை. இவற்றைத் தேடியெடுப்பது முக்கியமானது.
அறிமுகம்: கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு! வ.ந.கிரிதரன் -
"ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால்பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது" என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது.
Tuesday, August 20, 2024
Poem: Wake up, super human! By V.N.Giritharan
Drawn by AI
This is the translation of my Tamil poem written in the eighties, later published in Thayagam (Canada) and in e-magazines Pathivukal and Thinnai. It is also included in my first anthology of poems published by Mangai Pathippagam.
Poem: Wake up, super human! By V.N.Giritharan
Concrete! Concrete! Concrete!
Walls! Radiating heat and burning with intensity,
The smooth, deceptive white surfaces.
Sidewalks of cement that wear a mocking grin.
Spaces lie entranced, embraced by fearless pillars.
In the filtration of air currents,
Flowing warm rays.
In the playful laughter of frost droplets,
The chill sweeps through,
Amid the sweetness of dreams about meadows,
Underneath the blue canvas,
Lie the sorrowful memories
Of the cold earth mother.
Monday, July 15, 2024
வ.ந.கிரிதரனின் 'காலவெளி' கண்ணம்மாக் கவிதைகள் (1) - காலவெளிக் கைதிகள்!
காலவெளியை மையமாக வைத்து நான் பல கண்ணம்மாக் கவிதைகள் எழுதியிருக்கின்றேன். இவை வெறும் காதல் கவிதைகள் மட்டும் அல்ல. இருப்பு பற்றிய தேடல் கவிதைகளும் கூடத்தான். வாசித்துப் பாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இக்கவிதைகள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானவை. பதிவுகள்..காம் வெளியீடாக (2023) வெளியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் என் கவிதைத்தொகுப்பிலும் உள்ளடங்கியவை.
கவிதை: காலவெளிக் கைதிகள்! - வ.ந.கிரிதரன் -
காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா அவன்போல்
சிந்திக்க விரும்புகின்றேன்.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே என்றான் கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையென்றுரைத்தான்.
அவனறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேன்.
மனத்து அசை இன்னும் முடியவில்லை.
எப்பொழுதென்றாயினும் நீ கண்ணம்மா
எவ்விதம் அவனால் முடிந்ததென்று
எண்ணியதுண்டா ?
நான் எண்ணுகின்றேன் எப்பொழுதும் கண்ணம்மா.\
நான் வியந்துகொண்டிருக்கின்றேன் எப்பொழுதும்
கண்ணம்மா..
Friday, July 12, 2024
கவிதை; எங்கு போனார் என்னவர்? வ.ந.கிரிதரன் -
இங்குள்ள 'எங்கு போனார் என்னவர்?' என்னும் கவிதை எண்பதுகளில் மொன்ரியாலில் இருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானது. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் வெளியானது. எனது கவிதைத்தொகுப்பான 'எழுக அதிமானுடா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ் எழுதிய 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் அல் - புனைவுக்கான (2024) விருது!
'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' என்னும் நூலை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவருடன் இறுதிவரை பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான த.பி...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...