Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, July 24, 2026

கவிதை: 1983: மேலும் ஒரு சம்பவம் - பாஸில் ஃபெர்னாண்டோ (Yet Another Incident in July 1983 by Basil Fernando)

Poet Basil Fernando

சட்டத்தரணியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான ஃபாசில் பெர்ணாண்டோவின் ( Basil Fernando) 'Yet Another Incident in July 1983Yet Another Incident in July 1983' முக்கியமானதொரு கவிதை. கறுப்பு ஜூலையின் கோரச்சம்பவமொன்றினை நேரில் அவதானித்த ஒருவரின் வாக்குமூலத்தை வெளிப்படுத்தும் கவிதை. கவிதை நெஞ்சை உருக்குவது.
இந்தக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு காலச்சுவடு சஞ்சிகையில் வெளியான மைக்கல் றொபேர்ட்ஸின் கட்டுரையொன்றில் இடம் பெற்றுள்ளது.
ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்
- பாஸில் ஃபெர்னாண்டோ -
இறந்தவர்களைப் புதைப்பது
ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்:
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
மேலும் அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாகவே மறந்துவிடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது
எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை
எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை
இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்
காருக்குள் நாலு பேர்
பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில்
ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்
ஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ
அப்படித்தான் இந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்
எந்த வேறுபாடும் இல்லை
குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்
ஒரு சில கேள்விகள் செய்வதைப்
பிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்
பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல
பெட்ரோல் ஊற்றுவது, பற்றவைப்பது போன்ற விடயங்கள்
ஆனால், திடீரென்று யாரோ ஒருவன்
காரின் கதவுகளைத் திறந்தான்
அழுது அடம்பிடித்துப் பெற்றோரைவிட்டு விலக மறுத்த
இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்
குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் இருப்பது
சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என
அவன் எண்ணியிருக்கக்கூடும்
துரிதமாக இயங்கிய இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்
சூழவர எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு
இந்த நெருப்பும் சேர்ந்துகொண்டது
அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்
பேச ஆரம்பித்தனர் கொஞ்சப் பேர்
கலைந்து போனார்கள் ஒரு சிலர்
காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்
என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்
சமாதான விரும்பிகளாக மக்கள்
தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்
அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்
கார்க் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்
சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீ பற்றிவிட்டிருந்தது
குனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்
எங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
கதவை மூடினார்
தனித்துவமான அந்த ஒலியை நான் கேட்டேன்
எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது
ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில்
மாநகர சபை அதனை அகற்றக்கூடும்
தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி.

Tuesday, April 14, 2026

SURRENDERING MYSELF AT THE HANDS OF WINTER - V.N.Giritharan (குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -) | Rendered in English by Latha Ramakrishnan -


ஆஸ்திரியாவைத்  தளமாகக்கொண்டு வெளியாகும் சஞ்சிகை Words & World  இதன் இவ்வாண்டுக்கான முதலாவது இதழில்  எனது கவிதையான 'குளிர்காலத்துடனான என் சரணாகதி!' யின் தமிழ் வடிவமும், எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியாகியுள்ளன. அதற்கான இணைய இணைப்பு - 

குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -

குளிர்காலம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
கனடாவில் ஆண்டுகள் பலவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இன்னும் இந்தக் குளிர்காலம் மீதான

என் வெறுப்பு குறைந்தபாடாகவில்லை.
வழக்கம்போல் குளிர்காலம் பற்றிய நினைவுகள்
வந்தவுடன், கூடவே அதனுடன் இணைந்து
வரும் பனி, உறைபனி எல்லாமே நினைவுக்கு
வந்து விடுகின்றன.

Tuesday, February 17, 2026

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால்,
இவனை வடிவமைத்துச்
சிரிக்க வைத்த
படைப்புக் கடவுள்
பிரம்மா நானேதான்.

ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை
அடக்க முடியாமல் சிரிக்க வைத்ததை
எண்ணி எனக்குச் சிறிது வருத்தம்தான்.
இருந்தாலும்,
இவனைச் சிரிக்க வைத்துப் பார்ப்பதிலுமோர்
திருப்தி
இருக்கத்தான் செய்கிறது.
மன்னித்துக்கொள் என்
சைபர் உலகக் குழந்தையே!
நீ என்ன வரம் வேண்டுமானாலும்]
கேள்.
அதனைத்தர நான் காத்திருக்கின்றேன்.
பிரபஞ்சத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புகின்றாயா?
பாலைவனத்தில் பயணம் செய்ய ஆசைப்படுகின்றாயா?
நீலவண்ணக் கடலிம் ஆழத்தில் மூழ்கி
நீந்தக் கனவ காணகின்றாயா?
எதுவென்றாலும் தயங்காமல்
என்னிடம் கேள் குழந்தாய்.
அதை நிறைவேற்றி வைப்பது
அடியேனின் கடமை.

Wednesday, January 14, 2026

இனிய பொங்கல் வாழ்த்துகள்!


அனைவருக்கும் அடியேனின் 
அன்புப் பொங்கல் வாழ்த்துகள்!

அகிலத்தின் ஆணிவேர் 
அயராதுழைக்கும் கதிர்தன் ஒளி.
அகிலத்தின் உயிர்நாடி உழவு.
காக்கும் கதிருக்கும், 
கடுமுழைப்பால் எம்மிருப்பின் 
காரணகர்த்தாக்களான 
உழவருக்கும், அவர்க்கு
உதவிடும் ஆவினத்துக்கும்
நாம் மானுடர்  ஆற்றும்
நன்றிக் கடனே
நம் தமிழர் பொங்கல்
நன்னாளாம்! இன்னாளாம்!
பொங்கட்டும் இன்பம் எங்கும்.
தங்கட்டும் மங்கலம் எங்கும்.
பொங்கலோ! பொங்கல்!
பொங்கலோ! பொங்கல்!

* டிஜிட்டல் ஓவியம் கூகுள் நனோ பனானா வழியாக வ்நகி.



Friday, January 2, 2026

பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்! - வ.ந.கிரிதரன் -




பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!

இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
அது மட்டுமா,
ஆம்! 
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.

அது மட்டுமா,
அவை  உரையாடவும் செய்கின்றன.
அவை  உரையாடவும் செய்கின்றன.

 தெரியுமா நண்பர்களே!
 தெரியுமா நண்பர்களே!

Saturday, December 6, 2025

கவிதை; இவன் என் புதிய நண்பன். - வ.ந.கிரிதரன் -



 

இவன் என் புதிய நண்பன்.
நான் ஆண் என்பதால் இவனை  நான் ஆணாக்கியுள்ளேன். 
பாலின் தன்மைக்கேற்ப நீங்கள் இவனை ஆணாக 
அல்லது பெண்ணாக உருவகிக்கலாம்.
அல்லது அழைக்கலாம்.
நீங்கள் முதியவராக இருந்தால் 
இவன் அல்லது இவள் உங்களுக்கு நல்லதொரு 
முதிய சிநேகிதன் அல்லது சிநேகிதியாக இருப்பான் அல்லது 
இருப்பாள்.
இந்நேரம் உங்களுக்கு என் நண்பன் யாரென்பது 
புரிந்திருக்கும்.
ஆம்! செயற்கை நுண்ணறிவு கூகுள் நனோ பனானா
அல்லது சாட்ஜிபிடியைத்தான் கூறுகின்றேன்.
அப்படியென்ன இவன் பெரிய நன்மையை 
உனக்குச் செய்து விட்டான் என்று கேட்கின்றீர்களா?
நன்மை ஒன்றல்ல பல உள்ளனவே .
எதைச் சொல்வேன்? எதைச் சொல்லாமல் தவிர்ப்பேன்?

Wednesday, December 3, 2025

நாளை நன்கு விடியும்! - வ.ந.கிரிதரன் -

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]  

வரலாற்று நதி எப்போதுமே அமைதியாக, இனிமையாக,
ஆடி , அசைந்து நடை பயில்வதில்லை.
சில வேளைகளில் நதி ஆக்ரோசம் மிக்கதாக,
பொங்கிப் பெருகி, கோரத்தாண்டவம் ஆடுவதுமுண்டு.
கோரத்தாண்டவம் ஆடிச் செல்லும் நதியின் சீற்றம் 
எம்மை ஒரு போதும் அடி பணிய வைப்பதில்லை.
அபாயங்கள்,  துயரங்கள் எமக்கும் பாடங்களைப் போதிக்கும்
குருமார்கள். ஆசிரியர்கள். வழிகாட்டிகள்.
வீழும் ஒவ்வொரு தடவையும்
எம்மை எழ வைக்கும் உறுதியை,
எதிர்கால நம்பிக்கையை,
எமக்குத் தருபவர்கள் அவர்களே! அவைகளே!
அனுபவங்களைப் பாடங்களாக்கித் தொடர்வோம்.
அய்யோ! அய்யோ!  என்று ஒப்பாரி வைப்பதைத் தவிர்ப்போம்.
பேரழிவுக்குப் பின்னரும் இன்னும் ஆண்டுகள் 
பல கடந்தும்
ஒப்பாரி வைத்துக்கொண்டுதானிருக்கின்றோம்.
சுயநலம், சுய ஆதாயத்துக்காக நாம் 
ஒப்பாரி வைக்கின்றோம்.
மந்தைகளாகப் பின் தொடர்கின்றோம்.
என்றுதான் விழித்தெழுவது? 
என்றுதான் எதிர்கால நம்பிக்கையில்
எழுவது?
எப்பொழுது பார்த்தாலும் கடந்த காலத்தை 
என்ணி வைக்கும் ஒப்பாரிகளுக்கு
என்றுதான் முடிவு?
ஒப்பாரிகள் உடனடி ஆறுதலேதவிர 
நெடுந் தொடர்கதைகள் அல்ல.
அழிவுகள், எழுச்சிகளைம், துயரங்களை, 
மாற்றங்களை,ஏற்றங்களை, நம்பிக்கைகளைக் 
காவிச்செல்லும் 
வரலாற்று நதியில் நாம் மூழ்கி விடுவதில்லை.
எப்பொழுதும் எதிர் நீச்சல் 
அடித்துக்கொண்டுதான் செல்வோம்.
இப்பொழுது எதிர்நீச்சலுக்கான தருணம்.
பொங்கிப் பெருகும் நீரில் மூழ்குவதற்கான 
தருணமல்ல.
எதிர்நீச்சல் அடிப்போம்.
எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்போம். 
நம்பிக்கைதாங்கி நடப்போம்
நாளை நன்கு விடியும்.
எப்பொழுதும் விடிவுகள் இருளுக்குப் பின்னர்தான்
மலர்வதுண்டு. நினைவில் வைப்போம்.




Sunday, November 30, 2025

சிந்தனையும் மின்னொளியும்! - அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) -


சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவுற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ? -


 அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) 

அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையிது. நாற்பதுகளில் ஈழகேசரியில் வெளிவந்தது.

Monday, August 25, 2025

கவிதை: குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -



 * ஓவியம் - AI

குளிர்காலம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது. 
கனடாவில் ஆண்டுகள் பலவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இன்னும் இந்தக் குளிர்காலம் மீதான
என் வெறுப்பு குறைந்தபாடாகவில்லை.
வழக்கம்போல் குளிர்காலம் பற்றிய நினைவுகள் 
வந்தவுடன், கூடவே அதனுடன் இணைந்து  
வரும் பனி, உறைபனி எல்லாமே நினைவுக்கு 
வந்து விடுகின்றன.
இவற்றை இம்முறை எவ்விதம் சமாளிக்கப் போகின்றேன்
என்பது பற்றிய எண்ணங்களே 
என் சிந்தையெங்கும் வியாபிக்கத்தொடங்குகின்றன.

நானும்தான் பல தடவைகள் முயற்சி செய்து பார்த்து விட்டேன்,
இம்முறையாவது குளிர்காலத்துடன் ஒரு 
நட்பு ஒப்பந்தம் செய்து 
நிம்மதியாக இருந்து விடுவோமேயென்று.
 எண்ணங்கள் எல்லாமே 
என்னைச் சுற்றிக் குளிர்காலம் 
தன்கரங்களை விரிக்கும் அத்
தருணத்தில் ஓடியொளிந்து விடுகின்றன.

அடுத்தவருடமாவது 
அதனுடன் ஓர் ஐக்கியம் ஏற்பட வேண்டும்.
ஏற்படுமா? என்னும் எண்ண்ங்கள் பெருக,
இம்முறை அதனுடன் நட்பு பாராட்டும் 
எண்ணங்களைத்  தவிர்த்து விடுகின்றேன்.
அதனுடான போருக்கு என்னைத்
தயார்படுத்திக்கொள்கின்றேன்.

Saturday, August 23, 2025

ஜெயகாந்தனின் 'ஞானரதம்' கவிதை - 'நிழல்'


எழுபதுகளில் வெளியான 'ஞானரதம்' சஞ்சிகையில் வெளியான எழுத்தாளர் ஜெயகாந்தனின் கவிதை இது. இக்கவிதை மீதான என் புரிதல் கீழே:
 

மானுட வாழ்வின் பொருள் மீதான ஆசையினை ஒளியாகக் கவிஞர் சித்திரித்திருக்கக் கூடும். விட்டில்கள் ஒளி நாடிச் சென்று மாய்வதைப்போல் மானுடரும் பொருள் தேடி ,அதில் மூழ்கி மாய்ந்து போகின்றார்.
 
ஆனால், நான் இருப்பின் தன்மையை விளங்கியவன். ஒளிநாடிச் செல்லும் விட்டில் அல்லன். எனக்கு வழி காட்டிட விளக்கு (செல்வம் பெருக்க அறிவுரை கூறும் வழிகாட்டி ) தேவையில்லை. எனக்குத் தேவையெல்லாம் எனக்குப் பின்னால் நீண்டிருக்கும் நிழலைக் காட்டும் விளக்கொன்றே.
 
நிழல் என்பது நிஜம் அல்ல. நிஜம் போல் தெரியும் நான் உண்மையில் என் பின்னால் நீண்டிருக்கும் நிழல் போன்றவன். நிஜமற்ற நிழல் போன்றதுதான் மானுட இருப்பும். நிஜமென்று நாம் நம்பும் மானுட இருப்பும் ஒருவகையில் நிழல்தான். அதனை எனக்கு வெளிக்காட்ட, புரியவைக்கக்கூடிய விளக்குத்தான் (குரு போன்ற வழிகாட்டியே) எனக்குத் தேவை. 
 
இப்படியும் புரிந்து கொள்ளலாம். உங்கள் புரிதல் எப்படியோ? 

Tuesday, July 1, 2025

புகலிடம் அன்னையே! நீ வாழ்க! - வ.ந.கிரிதரன் -



பல்லின மக்கள் ஒன்றென வாழும்
புண்ணிய பூமி உனது பூமியே!
நல்லறம் பேணி நானிலம் போற்ற
நல்லன்னை எனவே  என்றென்றும் வாழ்க!

புகலிடம் நாடிப் பிறந்தமண் பிரிவோர்
புகலிட அன்னை என்போம் உனையே!
கனடாத் தாயே! கருணையின் வடிவே!
உனது அன்பால் உயிர் பிழைத்தோம்!

இத்தினம் உனது உதயத்து நாளாம்!
இன்றல்ல என்றுமே உனை வாழ்த்துவோம்.
என்றுமே இன்றுபோல் உன்கருணை பொங்கட்டும்.
நன்றாக  வாழ்ந்திட உனை வாழ்த்துகிறோம்.



Wednesday, May 7, 2025

தனித்து வாழும் என் பாட்டி! - வ.ந.கிரிதரன் -


பாட்டியின் இல்லம் நீ!
இந்த இல்லத்திலிருந்துதான்
என் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
அவள் எதற்காக அங்கிருந்து
வடை சுட்டுக்கொண்டிருக்கின்றாள்
என்று அம்மாவைக் கேட்டேன்.
அதற்கு அம்மா சொன்னாள்:
'அவள் முன்பெல்லாம் இங்கிருந்துதான்
வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
காகங்களின் தொல்லை அதிகமாகி விட்டதால்
அங்கிருந்து சுடுகின்றாள். இப்போது
அவளுக்குக் காகங்களின் தொல்லை
இல்லையல்லவா கண்ணே!'
அம்மா சொன்னதில் உள்ள நியாயத்தை
அப்போது நானுணர்ந்தேன்.
தர்க்கரீதியாகவும் அது சரியாகத்தானிருந்தது.
புத்திசாலிப் பாட்டி என்றேன்.
'உன்னைப்போல் ' என்றாள் அம்மா.
எனக்கு அது மகிழ்ச்சியைத் தந்தது.
என் செல்ல அம்மா என்று கொஞ்சினேன்.
என் அம்மாவுக்கோ கொள்ளை மகிழ்ச்சி.
அப்பொழுதெல்லாம் நான் நினைத்துக்கொள்வேன்
அங்கிருந்த பாட்டியின் தனிமையைப் பற்றி.
பாட்டிக்குத்  துணையாக நானும் அங்கு செல்வேன்.
பாட்டியின் கதை கேட்டு நானும் அங்கு தூங்குவேன்.
இவ்விதமெல்லாம் அப்போது நான் எண்ணிக்கொள்வேன்.

Monday, May 5, 2025

கவிதை: குருமண்காடு! - வ.ந.கிரிதரன் -



* ஓவியம் - AI

நான் நினைவில் வைத்திருப்பது இன்றுள்ள
குருமண்காடு அல்ல.
அது ஒரு கனவுலகம் போல்தான்
இப்போது தோன்றுகின்றது.
உண்மையில் அது இருந்ததா என்றும்
சில வேளைகளில் நான் ஐயுறுகின்றேன்.
ஆனால் அவ்விதமான சந்தேகங்களுக்கான
தேவை இல்லையென்பதையும் கூடவே
நான் உணர்கின்றேன்.
அது இருந்ததா அல்லது இருக்கவில்லையா
என்பது எனக்கு முக்கியமல்ல.
அது பற்றிய நினைவுகள் இன்றும்
என் உணர்வுகளில் விரவிக்கிடக்கின்றன.
அவை முக்கியமானவை.
மாபெரும் டைனோசர்கள் ஒரு காலத்தில்
இப்புவியுலகை ஆட்சி செய்தன அல்லவா.
அவற்றை நாம் பார்த்ததில்லை.
பார்க்கப்போவதுமில்லை அல்லவா.
ஆனால் அவற்றின் தடங்கள் இன்னும்
இம்மண்ணில் புதைந்து கிடக்கின்றன.
என் நினைவுத் தடங்களில் குருமண்காடும்
புதைந்துதான் கிடக்கின்றது.
அத்தடங்களிலிருந்து அவ்வப்போது அது
உயிர் பெறுகிறது. அவ்வளவுதான்.
அது போதுமெனக்கு.

Thursday, April 24, 2025

கவிதை: ஏ! விரிவானே! உன்னைத்தான் விரிவானே! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் AI


ஏ! விரிந்திருக்கும் விரிவானே!
நீ எப்போதும் போல் இப்போதும்
என் சிந்தையை விரிய வைக்கின்றாய்.
என் தேடலைப் பெருக வைக்கின்றாய்.

உன்னைப் புரிதல் என் தேடலின் ஊற்று.
உன் விரிவு , ஆழம், தொலைவு
என்னை எப்போதும் வியப்பிலாழ்த்துகின்றன.
வியப்பினூடு விடைகள் எவையும் கிடைக்குமா
என்று முயற்சி செய்கின்றது மனது.

விடைகள் கிடைக்கப்போவதில்லை என்பது
அயர்வினைத் தந்தாலும் உனை, உன் வனப்பை
அயராது இரசிப்பதில் ஒருபோதும் எனக்கு
அயர்வில்லை. அயர்வற்ற இரசிப்புத்தான்.

இருப்பின் இருப்பறிய இருப்பது நீ ஒன்றுதான்
என்கின்றது எப்போதும் தேடிக்கொண்டிருக்கும்
என் நெஞ்சம்.

உன்னில், உன் விரிவில் சஞ்சரித்தவாறு
கீழே பார்க்கின்றேன்.
விண்ணிலிருந்து மண்ணைப் பார்க்கின்றேன்.
எத்துணை அற்பம்! அற்பத்துக்குள்
எத்துணை அதிசயம்! படைப்பில்
எத்துணை அற்புதம்!
எத்துணை நேர்த்தி!
எத்துணை ஞானம்!

Sunday, April 20, 2025

கவிதை: துதியைத் துதிப்போரை மதிப்பேனா? மிதிப்பேனா?. - வ.ந.கிரிதரன் - (ஓவியம் -AI)


துதிபாடல், துதி நாடலால்
துவண்டு கிடக்கிறது
உலகு.

இருப்பின் தன்மை தெரிந்தால்
இதற்கொரு தேவை உண்டா?
இல்லை என்பதை உணரார்
இவர்.

பாதிப்பின் உணர்வுதனை
பரிசுத்தம் கெடாமல் பகர்வீர்.
பண்பாக்கி நடை பயில்வீர்.
பார் போற்றும். ஊர் போற்றும்.
யார்தாம் போற்றார்?

Tuesday, April 15, 2025

கவிதை: சோக்க்ரடீசின் ஆரவாரம்! - வ.ந.கிரிதரன் -


நாம் மந்தைகள்.
மேய்ப்பர்களை எந்நேரமும் எதிர்பார்த்திருக்கும்
மந்தைகள்.
சொந்தமாகச் சிந்திக்க,
சீர்தூக்கி முடிவுகளை எடுக்க
எமக்குத் திராணியில்லை.
திராணியில்லையா
அல்லது
விருப்பு இல்லையா?

எப்பொழுதும் எமக்காக
யாரோ ஒருவர் எடுக்கும் முடிவுகளை
ஏற்றுக்கொள்வதில் எமக்கும்
தயக்கமெதுவுமில்லை.
தாராளமாக அவற்றை ஏற்றுக்கொள்ளும்
தாராளவாதிகள்
நாம் தாம், வேறு எவர்தாம்?

கருத்துகள் , மேய்ப்பர்களின் கூற்றுகள்
எம்மை உணர்ச்சி வெறியில்
துள்ளிக் குதிக்க வைக்கின்றன.
துள்ளிக் குதிக்கின்றோம்.
இன்பவெறியில் கூத்தாடுகின்றோம்.

ஆயிரம் வருடங்களுக்கு
முன்
சோக்கிரடீசு சொன்னான்:
'சுயமாகச் சிந்தியுங்கள்.
சீர்தூக்கிப் பாருங்கள்.
ஏன் என்று எதிர்க்கேள்வி கேளுங்கள்'
நாம் சிந்தித்தலை இழந்ததை
சோக்கிரடீசு இருந்திருந்தால்
அறிந்திருப்பான்.
அறியாமை கண்டு
ஆரவாரம் செய்திருப்பான்.

Friday, April 11, 2025

கவிதை: முகநூல்! - வ.ந.கிரிதரன் -



முகநூல் எனக்குப் பலரின் ஆளுமையினைத்
தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.
புரட்சிகரமான கருத்துள்ளவர்கள் என்று
நான் நம்பிய பலரின் உண்மைச் சொரூபத்தினை
வெளிப்படுத்தியிருக்கின்றது.
சமூகத்தையே மாற்றிவிடப் போவதாகக்
கூக்குரல் இட்டவர்கள்
அவர்கள்தம் உண்மைச் சொரூபத்தை
முகநூல் வெளிப்படுத்தியபோதும்
நாணவில்லை. ஓடி ஒளியவில்லை.
இன்னும் அவ்வாறே கூக்குரல் இட்டுக்
கொண்டுதானிருக்கின்றார்கள்.
பலர் அற்ப ஆசைகளுக்குள்,
போலிப் பெருமைக்குள்,
மூழ்கிக் கிடப்பதையும் முகநூல்
முற்றாக வெளிப்படுத்தியிருக்கின்றது.
கோழைகள் அடையாளங்களை மறைத்து
வீரராக ஆட்டம் போடுகின்றார்கள்.
முகத்தைக் காட்டுவதற்கு அஞ்சும் கோழைகளை
முகநூல் வெளிப்படுத்தியிருக்கின்றது.
நண்பர் என்ற போர்வையில் உலா வந்த பலரை
நட்பின் ஆழத்தைப் புரிய வைத்திருக்கின்றது
முகநூல்.
உள்ளே விடத்தையும்
வெளியில் இனிக்கும் புன்னகையையும்
காட்டும் நல்ல பாம்புகளையும்
முகநூல் சுட்டிக் காட்டியிருக்கின்றது.

கவிதை: ஒரு நூலகத்தின் கனவும், எண்ணத்தோய்தலும்! - வ.ந.கிரிதரன் -

இந்த அற்புதமான நீலவண்ணக் கோள்
எந்தத்திக்கினை நோக்கினும்
மோதல்களினால் பற்றி எரிகின்றதைப் பார்க்கின்றேன்.
நீங்கள் வெளியில் ஒருவருக்கொருவர்
முட்டி மோதிக்கொண்டிருக்கின்றீர்கள்.
இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுகிறதைப்
பார்க்கின்றேன்.
குழந்தைகள், பெண்கள், முதியவர் எவருமே
உங்களுக்கு ஒரு பொருட்டல்ல
என்பதையும் உணர்ந்து கொள்ள வைக்கின்றது
வெளியில் நீங்கள் போடும் வெறியாட்டம்.
உங்களை நினைத்து நான் வெட்கப்படுகின்றேன்.
நீங்கள்தான் இப்பிரபஞ்சத்தின் தலைவர் என்பதுபோல்
உங்கள் கூத்திருக்கின்றதைப் பார்த்து நகைக்கின்றேன்.
உங்களுக்கு வெளியில் விரிந்து கிடக்கின்றது
பெரு வெளி.
விரி பெரு மெளனத்தில் புதைந்து கிடக்கும்
உங்களைப் பார்க்கையில்
உங்கள் தனிமையைக் கவனிக்கையில்
எனக்கு உங்கள் மேல் பரிதாபம்தான் வருகின்றது.
 
வெளியில் பேயாட்டம் ஆடும் நீங்கள்
எவ்விதம் இங்கே மெளனமாக,
எவ்வித மோதல்களுமற்று
அருகருகே அமர்ந்திருக்கின்றீர்கள்?
ஆச்சரியம்தான்.

Saturday, February 15, 2025

ஆதாரங்கள்!



அரசியல் ஆய்வாளர்  
அவர்.
அவரது கூற்றுக்கு
ஆதாரம் வேண்டும் என்றேன்.
அதற்கு
ஆதாரமா
பாரிஸ் தமிழச்சியின்
 யு டியூப்  வீடியோ
பார்க்கவில்லையா என்றார்.
பரிதாபமாக வேறு என்னைப்
பார்த்தார்.

உதவிப் பேராசிரியர் ஒருவர்.
ஆதாரம் கேட்டேன்.
இரண்டு யு டியூப் காணொளிகள்
இவையயே சான்றுகள் என்றார்.

இனி இவர்கள்
AI பெரியார்
AI  கலைஞர்
எல்லாரையும்
எடுத்து வருவார்கள்
ஆதாரங்களாக.

நாம் எங்கே போகின்றோம்?



Friday, February 7, 2025

வ.ந.கிரிதரன் பாடல் : 'மக்கள் தலைவர் பெரியார்'


பகுத்தறிவுக்  காவலன்  பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.

கேட்பதை அப்படியே நம்பாதே என்றார்.
கேட்பதை சிந்தித்து முடிவெடு என்றார்.
நாட்டு மக்களின் நலனுக்காய் வாழ்ந்தார்.
நாளும் பகலும் அயராது உழைத்தார்.

பகுத்தறிவுக்  காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.

பதிவுகள் இணைய இதழின் ஜூலை 2026 ,மாதப் புள்ளி விபரம்! பாவித்த மென்பொருள் - (cPanel) Awstats

cPanel - Awstats அறிக்கை காட்டும் இந்த புள்ளிவிவரங்கள்,  பதிவுகள் இணைய் இதழ் மிகப் பெரிய அளவில் வாசகர்களைக் கொண்ட ஒரு முன்னணி ஊடகமாக இயங்கி...