Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Monday, November 24, 2025

புகழ்பெற்ற நர்த்தகி குமாரி கமலாவும் மறைந்தார். ஆழ்ந்த இரங்கல்.


பாவை விளக்'கில் குமாரி கமலா: 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ?':


நான் முதன் முதலாக குமாரி கமலாவை அறிந்துகொண்டது என் அப்பா, அம்மா மூலமே. இருவருக்கும் குமாரி கமலாவின் மீது மிகுந்த விருப்பமுண்டு. எப்பொழுதும் அவரின் நடனத்திறமையினைச் சிலாகித்து உரையாடுவார்கள். அவர் பிரபல கேலிச்சித்திரக்காரரான ஆர்.கே.லக்சுமணனை முதலில் திருமணம் செய்த விடயத்தையும், ஆர்.கே.எல் அவர்கள் அப்பாவுக்குப் பிடித்த பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.கே.நாராயணனின் சகோதரர் என்னும் விடயத்தையும் அப்பா மூலமே முதன் முதலில் அறிந்தேன். அப்பாவிடம் ஆர்.கே.என்னின் ஆங்கில நாவல்களின் சேகரிப்பிருந்தது. கூடவே ஆர்.கே.என்னை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் கிறகாம் கிறீனின் நாவற் சேகரிப்புமிருந்தது.

'நாம் இருவர்' திரைப்படத்தில் குமாரி கமலா பாரதியாரின் இந்திய சுதந்திர வேட்கைப்'பாடல்களுக்குச் சிறப்பாக ஆடியதையும் அவர்கள் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். அவற்றிலொன்றான 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' என்னும் பாடலையும் அம்மா பாடிக்காண்பித்திருக்கின்றார்.

நான் பார்த்த குமாரி கமலாவின் முதற் திரைப்படம் 'பாவை விளக்கு'. றீகலில் பழைய தமிழ்ப் படமாக எழுபதுகளில் வெளியானபோது , இரவு இரண்டாம் காட்சியாகப் பார்த்திருக்கின்றேன். பார்ப்பதற்கு முன்னரே அகிலனின் 'பாவை விளக்கு'நாவலை வாசித்திருந்ததால் நீண்ட நேரமாக ஓடிய அப்படத்தை விருப்புடன் பார்த்து இரசித்தேன். நாவலில் வரும் செங்கமலம் பாத்திரமாகத் திரையில் வருவார் குமாரி கமலா. அவருக்கு மிகவும் பொருத்தமான பாத்திரம்.

'பாவை விளக்கு' திரைப்படத்தில் வரும் 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ'என்னுமிப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களிலொன்று. மிகவும் பிடித்த குமாரி கமலாவின் திரைப்பட ஆடற்காட்சியும் இதுதான். கவிஞர் அ.மருதகாசியின் வரிகளுக்கு இசையமைத்திருப்பவர் கே.வி.மகாதேவன்.

https://www.youtube.com/watch?v=gxTM8X0OprM


குமாரி கமலா பற்றிய சிறப்பான விவரணக் காணொளித்தொகுப்பு 'Fragrant Petals: Kamala's Natyam' (நறுமணப் பூவிதழ்கள்: கமலாவின் நாட்டியம்).

Saturday, November 15, 2025

ஆலயமணி அடிக்கும் கூனன் குவாசிமோடோ - Anthony Quinn


அந்தனி குயீன் ( Anthony Quinn ) சிறந்த ஹொலிவூட் நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் நான் முதலில் பார்த்த திரைப்படம் 'The Hunchback of Notre Dame'. பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியுகோவின் புகழ்பெற்ற நாவல். இந்நாவலில் வரும் Notre Dame' ஆலயமணி அடிப்பவரான, கூனனான குவாசிமோடோ பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். 
 
அந்தனி குயீன் என் அப்பாவுக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர். அவருக்குப் பிடித்த ஏனைய நடிகர்களில் நினைவில் நிற்பவர்கள் சார்ள்டன் ஹெஸ்டம், ஷோன் கானரி, ஹரி கூப்பர், ஜூல் பிரைனர்.
 
இத்திரைப்படத்தை என் பதின்ம வயதுகளில் பார்த்தேன். யாழ் மனோஹரா திரையரங்கில் பார்த்த பல ஆங்கிலத் திரைப்படங்களில் நெஞ்சில் நிலைத்து நிற்கும் படங்களில் ஒன்று.
இவருடன் புகழ்பெற்ற இத்தாலிய நடிகையான ஜீனா லொல்லோ பிரிஜிடா (Gina Lollobrigida) நடித்திருப்பார்.
 
தமிழில் இக்கதையைத் தழுவி 'மணி ஓசை' கல்யாண் குமார் நடிப்பில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]

லீ வான் கிளிவ் - 'கெட்டவனில் சிறந்த கெட்டவன்'


'கெட்டவனில் சிறந்த கெட்டவன்' (Best of the Bad) என்பது புகழ்பெற்ற ஹொலிவூட் நடிகர் லீ வான் கிளிவ்வின் ((Lee Van Cleef) கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வசனம். 'The Good, The Bad and The ugly' திரைப்படத்தில் ''The Bad' ஆக நடித்திருப்பார். மிகச்சிறந்த வில்லனாக அதன் மூலம் உருவெடுத்தார். பின்னர் பல 'வெஸ்டேர்ன்' திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கின்றார்.
 
இவரை எனக்கு அறிமுகப்படுத்திய திரையரங்குகள் யாழ் மனோஹரா & றீகல் ஆகியவையே.
 

 
([டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]

'ஜேம்ஸ் பாண்ட்' ஷோன் கானரி!


எத்தனையோ நடிகர்கள் 'ஜேம்ஸ் பாண்ட்' வேடத்தில் நடித்திருந்தாலும், அப்பாத்திரத்துக்கு உயிரூட்டிய நடிகர் , என்னைப் பொறுத்தவரையில், ஷோன் கானரிதான். இவரைத்தவிர வேறெவரையும் என்னால் அப்பாத்திரத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாது. இவரை எம் பதின்ம வயதுகளில் சீன கானரி என்றுதான் உச்சரிப்போம்.
 
இவரது பெயரைச் அப்பருவத்தில் சரியாக உச்சரித்த ஒருவன் 'குட்டி' (என் மாமா மகன்களில் ஒருவன்). சில வருடங்களுக்கு முன்பு கனடாவில் மறைந்து விட்டான். அப்போது எனக்கும் இவனுக்குமிடையில் சரியான உச்சரிப்பு யாருடையது என்று பெரிய சண்டையே எழுவதுண்டு. இறுதி வெற்றி அவனுக்குத்தான். நண்பரும் ,எழுத்தாளருமான இந்து லிங்கேஸுடனான என் நட்புக்குக் காரணம் இவனே. இவனது நெருங்கிய நண்பர்களில் லிங்கேஸும் ஒருவர்.
 
'ஜேம்ஸ் பாண்ட்' ஷோன் கானரியை நினைக்கும் தருணங்களிலெல்லாம் அவனது நினைப்பும் தலை காட்டும். 
 
இவரை எனக்கு அறிமுகப்படுத்திய திரையரங்குகள்: யாழ் றீகல், யார் ராஜா (இங்குதான் முதல் Bond படமான Dr No திரைப்படத்தை அதன் மறு வெளியீடொன்றில் பார்த்தேன்), வவுனியா ஶ்ரீ முருகன் (இங்குதான் You Only Live Twice' பார்த்தேன்)>
 
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]

Thursday, November 13, 2025

எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'இயற்கையைப் பேணுவோம்' பாடல்!


இசை &  குரல் - Suno AI   ஓவியம் - chatGPT AI

https://www.youtube.com/watch?v=--s_We6LiGg

இந்தியத் திரை வானின் 'வானம்பாடி' பி.சுசீலாவுக்கு வயது 90!


இன்று பாடகி பி.சுசீலா அவர்களின் தொண்ணூறாவது பிறந்தநாள். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

எம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்தவர்கள் தமிழ்த்திரையுலகின் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள் & இயக்குநர்கள்.

இவர்கள் அனைவரும் எம் வாழ்வின் இன்ப துன்பங்களில் துணையாக எம் வாழ்நாள் முழுவதும் வருபவர்கள். இனிய தருணங்களில் உற்சாகம் , இன்பம் தருபவர்கள் இவர்கள். துயர் நிறைந்த தருணங்களில் ஆறுதல் தருபவர்கள் இவர்கள்.

இவர்களை நான் எப்போதும் போற்றுவேன். இலக்கிய கர்த்தாக்கள் எவ்விதம் எம் வாழ்வுக்கு முக்கியமோ அவ்விதமே இக்கலைஞர்களும்.

இன்னும் நீண்ட காலம் நிறைவான வாழ்வுடன் அம்மையாரின் வாழ்வு தொடரட்டும். வாழ்த்துகள்.

இத்தருணத்தில் எனக்குப் பிடித்த இவரது பாடல்களிலொன்று இந்தப்பாடல். மெல்லிசை மன்னர்களின் இசையில், கவிஞர் வாலியின் எழுத்தில், ஜெயலலிதா, எம்ஜிஆர், துணை நடிகர்களின் நடிப்பில் ஒலிக்கும் பாடல். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படப்பாடல்.

https://www.youtube.com/watch?v=HTvrtkkYaDg

[Digiat Art (Google Nano Banana) help: VNG ]
See less

கவிஞர் தாமரையின் பாடல்களும், வட மொழிச் சொல்லும் பற்றி...


[டிஜிட்டல் ஓவியத்  தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]


கவிஞர் தாமரையைப் பற்றிக் குறிப்பிடுகையில் வேற்று மொழியல்லாத தமிழ்ச் சொற்களை மட்டும் கவிதை எழுதுபவர் என்று கூறப்பட்டிருந்ததை அண்மையில் இணையத்தில் வாசித்தேன். இது உண்மையா? 'வாரணம் ஆயிரம்' படத்தில் வரும் அவரது புகழ்பெற்ற பாடல் 'நெஞ்சுக்குள் பூத்திடும் மாம்ழை' முழு வரிகளைக் கீழே தந்துள்ளேன். இதில் வரும் ஓம், ஷாந்தி, ஜீவன் இவையெல்லாம் வட் சொற்கள்.  என்னைபொறுத்தவரையில் நான் தனித்தமிழ் வெறியன்னலன். மொழியும் பரிணாம வளர்ச்சியில் பிறமொழிச் சொற்களை உள்வாங்கி வளமடைகின்றது என்று நம்புபவன்.  இந்நிலையில் தாமரை தமிழ்ச் சொற்களை, வட சொற்களைக் கலந்து பாடல்கல்  எழுதுவதை ஏற்பதில் எனக்குத் தயக்கமேதுமில்லை.  என் அபிமானக் கவிஞர் மகாகவி பாரதியார் தாராளமாகவே வடமொழிச் சொற்களைப் பாவித்திருக்கின்றார். 

பாடலைக் கேட்டு மகிழ் - https://www.youtube.com/watch?v=630HSN45fKk

காலத்தால் அழியாத கானம்: 'புதிய வானம்! புதிய பூமி'



'அன்பே வா' திரைப்படத்தில், கவிஞர் வாலியின் வரிகள் , டி,எம்.எஸ் குரலில் , மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில், எம்ஜிஆரின் நடிப்பில் காலத்தால் அழியாத கானமாக நிலைத்து நின்று விட்டது.
 
இவ்விதமான எம்ஜிஆரின் கருத்தாழம் மிக்க, வாழ்க்கைக்கு வழி காட்டும் , புத்துணர்ச்சி ஊட்டும் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பாடல்களாகத் தமிழ் இலக்கியத்தில் நிலைத்து நிற்கப்போகின்றன.
 
எந்த ஒரு நடிகரும் செய்யாத வேலையினை எம்ஜிஆர் செய்திருக்கின்றார். அவரது படங்கள் ஒவ்வொன்றிலும் இத்தகைய கருத்து மிக்க, இனிய, புத்துணர்ச்சி தரும் பாடலொன்று இருக்கும். வாழ்க்கைக்கு வழி காட்டும் , பயனுள்ள, ஆரோக்கியமான கருத்துகளைக் கூறும் பாடல்கள் இவை. எம்ஜிஆரின் சமுதாயப் பிரக்ஞையை வெளிப்படுத்துபவை இவ்வகைப் பாடல்கள்.

Monday, November 10, 2025

காலத்தால் அழியாத கானம் - 'நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா!' - பாரதியார்.


காலத்தால் அழியாத கானம் - 'நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா!' - பாரதியார்.

எம்.எஸ்.வி இசையில், ஜேசுதாஸ் & வாணி ஜெயராம் குரலில், ரஹ்மான் & அமலா நடிப்பில் உருவான இனிய பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் 'கண்ணே கனியமுதே'.

[Digiat Art (Google Nano Banana) help: VNG ]

Tamil Song -  Ninnaiye Rathi Endru 
Singers: K. J. Yesudas,Vani Jairam 
Music: M.S.V
Movie: Kanne Kaniyamuthey
Cast: Rahman & Amala
Lyrics: Makakavi Barathiyaar

https://www.youtube.com/watch?v=PF_g8n2OUvA

Saturday, November 8, 2025

பெண்களுக்கான உரிமைக்குரல் நடிகை கெளரி கிஷனின் எதிர்ப்புக் குரல்!


 

[டிஜிட்டல் ஓவியத்  தொழில் நுட்பம் (chatGPT) உதவி; VNG]

நடிகை கெளரி கிஷன் மிகவும் கடுமையாக ஆர்.எஸ்.கார்த்தி என்னும் யு டியூப் ஊடகவியலாளரைச் சாடும் காணொளி இது. யு டியூப் ஊடகவியலாளர் கெளரி கிஷனுடன் நடித்த நடிகரிடம் கெளரி கிஷனின் எடை எவ்வளவு என்று கேட்டிருக்கின்றார்.அது தான் கெளரி கிஷனின் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுள்ளது. அது Body Shaming என்று குற்றஞ் சாட்டியிருக்கின்றார் அவர். அவரது ஆத்திரம் நியாயமானது. அனைவரும் அவருக்காதரவாகக் குரல் கொடுப்பது அவசியம்.

இவ்வளவு நடந்த பிறகு  யு டியூப்காரர் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதில் தன் கேள்வி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறியிருக்கின்றார்.  இந்தக் கூற்று ஒன்றே போதும் அவர் இன்னும்  தன் குற்றத்தை உணரவில்லையென்பதற்கு. எல்லோரும் எதிர்ப்பதால் , பயந்து மன்னிப்பு கேட்டிருக்கின்றார். இவர் தன் குற்றத்தை, தவறினை உணர்ந்து எதிர்காலத்தில் இவ்விதத் தவறுகளற்றுத் தனது வேலையைச் செய்வது அவசியம். அதற்கு அவர் இச்சம்பவத்திலிருந்து இத்துறையில் கைக்கொள்ள வேண்டிய நெறி முறைகள் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

இவரைப்போன்ற தவறான ஊடகவியலாளர்கள் மலிந்து விட்டதற்குக் காரணமென்ன?  இணையத்தொழில் நுட்பம், குறிப்பாகச் சமூக ஊடகத்துறையின் வருகை ஆக்கபூர்வமானது என்றாலும் , கூடவே தீய சக்திகளின் கைகளில் எதிர்மறை விளைவுகளையும் உருவாக்கும் நிலையினையும் உருவாக்கியுள்ளது. நவீனத்  தொழில் நுட்பத்தின் எதிர்மறையான விளைவுகளில் ஒன்றுதான் இவரைப்போன்ற ஊடகவியலாளர்களின் வருகையும்.  

எவ்வித  ஊடகத்துறை அனுபவங்களுமற்று, அத்துறையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் பற்றிய அறிவற்று,  சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் இவ்விதமான ஊடகவியலாளர்களை நெறிப்படுத்தும் வகையில் இணையத்  தொழில் நுட்ப விதிகள்  மாற்றப்பட வேண்டும், அல்லது உருவாக்கப்பட வேண்டும்.

நடிகை கெளரி கிஷனின் முதலாவது குற்றச்சாட்டு  ஏன் நடிகைகளிடம் அவர்கள் எடையைக் கேட்கின்றீர்கள்? ஏன் நடிகர்களிடம் கேட்பதில்லை.  சரியான கேள்வி. நியாயமான குற்றச்சாட்டு. ஆணாதிக்கம் மிகுந்த துறைகளில் முதலிடத்தில் இருப்பது திரைப்படத்துறைதான். பெண்களைப் போகப்பொருளாகக் கருதும், பாலியல் சுரண்டல் மலிந்த துறை.  இத்துறையில் அவ்வப்போது கெளரி கிஷன் போன்ற பெண்கள் தம் ஆளுமை, சுய கெளரவம் பாதிக்கப்படுகையில் துணிந்து குரல் எழுப்புகின்றார்கள். இக்குரல்கள் வரவேற்புக்குரியவை. ஆதரிக்கப்பட வேண்டியவை.

கெளரி கிஷனின் அடுத்த குற்றச்சாட்டு - எதற்காக ஆண் நடிகரிடம் இக்கேள்வியைக் கேட்க வேண்டும். இதுவும் மிகவும் சரியான குற்றச்சாட்டே. இவ்விதம் சக நடிகையின் எடை பற்றி அவருடன் நடித்த சக நடிகரிடம் கேட்பது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல. அந்நடிகையை அவமானப்படுத்துவதும் போலத்தான். 

புதுமுக நடிகயாக இருந்தாலும், எவ்வித எதிர்விளைவுகளையும் பொருட்படுத்தாமல் கெளரி கிஷன் குரல் கொடுத்திருக்கின்றார். அதற்காக அவரைப் பாராட்டுவோம். அவர் இவ்விதம் உரிமைக் குரலெழுப்பியிருப்பது அவருக்காக மட்டுமல்ல, இத்துறையிலுள்ள பெண்கள் அனைவருக்காகவும்தான்.

கெளரி கிஷனின் ஆத்திரத்தைக் கிளப்பிய சம்பவத்தை விபரிக்கும்  காணொளி இதுதான் - https://www.youtube.com/watch?v=cVF7ALfCbKs




Friday, October 31, 2025

காலத்தால் அழியாத கானம்: 'காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன்."


['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG]


கவிஞர் வாலியின் கவித்துவமான வரிகளில் , பாடகர் டி.எம்.எஸ்ஸின் இன் குரலில் , மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் மனத்தை மயக்கும்  இசையில் ஒலிக்கும் காலத்தால் அழியாத கானங்களில் ஒன்று. எத்தனை தடவைகள் கேட்டிருப்பேன். இன்னும் அலுக்கவில்லை. சலிக்கவில்லை.

'நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்'

இவ்வரிகள் கேட்கும்போதே இன்பத்தைத் தரும் வரிகள். காற்று வாங்கப் போய் எத்தனை தடவைகள் இயற்கைக் கவிதையை இரசித்து திரும்பியிருப்போம். அனுபவம் உருவாக்கிய வரிகள் இவை. 

"நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை"

சங்கப் பாடல்களிலிருந்து ஊர்  துஞ்சும் இரவுகளில் துஞ்சாதிருக்கும் காதல் உள்ளங்களின் உணர்வுகளை இரசித்து வந்திருக்கின்றோம். தமிழ்த் திரைப்படப்பாடல்களாகவும் கேட்டு மகிழ்ந்திருக்கின்றோம். அதன் ஒரு வடிவம் தானிந்தப்பாடல் வரிகளும்.

"கொஞ்சம் விலகி நின்ற போதும்
என் இதயம் தாங்கவில்லை"

காதல் வயப்பட்ட உள்ளங்கள் அனுபவிக்கும்  இயற்கையான உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்.

"என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை...
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை"

பார்வையை மீனாகவோ அல்லது நீந்துமோர் உயிரினமாகவும், பருவத்தை ஓடையாகவும், உள்ளத்தை ஊஞ்சலாகவும், மேடையாகவும் உவமையாக்கியுள்ள கவிஞரின் கவித்துவம் சிறப்பானது.  காதலனொருவன் தன் காதலுக்குரியவளின் நினைவால் விரகதாபத்தால் வாடுவதை வெளிப்படுத்தும் சிறப்புமிக்க, அனுபவ முத்திரைகளை உள்வாங்கிய வரிகள். 

Thursday, October 30, 2025

'பைலா' மன்னன் டெஸ்ட்மண்ட் டி சில்வா (Desmond De Silva): "சூட மானி கேபலால"


'பைலா' மன்னன் டெஸ்ட்மண்ட் டி சில்வா (Desmond De Silva) பாடிய் பாடல்கள் எப்பொழுதும் பசுமை நிறைந்த நினைவுகளாக எம் நினைவில் நிலைத்து நிற்பவை. குறிப்பாகச் "சூட மானி கேபலால" துள்ளிசைப் பாடலைக் குறிப்பிடலாம்.

'பைலா' போர்த்துக்கேயரால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இசை வடிவம். இன்றுவரை உயிர்த்துடிப்புடன் நிலைத்து நிற்கும் இசை வடிவம்.

இப்பாடலைக் கேட்கும் எவரையும் உற்சாகம் பற்றிக்கொள்ளும், துள்ளியெழுந்து ஆட வைக்கும். அப்படித்தான் எம் மொறட்டுவைப் பல்கலைக்கழகக் காலகட்டத்தில் எம்மை ஆட வைத்தது.

அக்காலகட்டத்தில் பல்கலைககழகத்தில் நடந்த பல்வகைக் களியாட்ட இரவுகளிலும் , சுற்றுலாக்களிலும் தவறாது ஒலித்த பாடல்களிலொன்று இந்தப் பாடல்.

இவர் தென்னிலங்கையின் மாத்தறையில் 13 ஜூலை 1944 பிறந்தவர். பல்வேறு இசைக்குழுக்களில் பாடிப்புகழ்பெற்ற இவர் தனக்கென்றோர் இசைக்குழுவை வைத்திருந்தவர். உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியவர். ஆட்டிசம் ( Autism ) நரம்பு வளர்ச்சிக் குறையுள்ளவர்களுக்காகக் குரல் கொடுத்த பாடகர். அதற்காக ஓர் இசை நிகழ்ச்சியையும் கொழும்பில் நடத்தியவர். திரைப்படப்பின்னணிப் பாடகராக, பைலா இசைப் பாடகராக, சமூகச் செயற்பாட்டாளராக மக்கள் மனத்தில் தன் பாடல்கள் மூலம் நிலைத்து நிற்பவர் 'பைலா' மன்னன் டெஸ்மண்ட் டி சில்வா.

இறுதிக்காலத்தில் தன் மூன்றாவது மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இவர் 9 ஜனவரி 2022 அன்று மாரடைப்பால் மறைந்தார்.

"சூட மானி கேபலால" பாடலைக் கேட்டுத்துள்ளி ஆடிட - 

 https://www.youtube.com/watch?v=HCG0EBbdgI4

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப [Google Nano Banana] உதவி:VNG]

இலங்கைப் பாடகர் அமுதன் அண்ணாமலையின் 'யாழ்தேவி'ப் பாடல்!


இலங்கைப் பாடகர் அமுதன் அண்ணாமலை யாழ்தேவி பற்றியொரு பாடல் பாடியிருக்கின்றார். அது: "இரயில் ஓடுது யாழ் இரயில் ஓடுது"
 
பாடலை ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், யாழ்தேவியில் பயணித்த உணர்வைப் பெறுவீர்கள். இசை, பாடல் வரிகள், காணொளியில் காட்டப்படும் காட்சிகள் , பாடகரின் குரல் இவையே அவ்வுணர்வுக்கான காரணங்கள்.
 
[Digiat Art (Google Nano Banana) help: VNG ]
 

பாடகர் ஏ.ஈ.மனோகரனின் 'யாழ்தேவி'ப் பாடல்!


இலங்கைப் பாடகர் ஏ.ஈ.மனோகரனும் 'யாழ்தேவி' பற்றியொரு பாடல் பாடியுள்ளார். அது "உத்தரதேவி யாழ்தேவி ஓடுது எங்கள் சீதேவி"
 
இப்பாடல் பாடகர் ஏ.ஈ.மனோஹரனை, எம் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த யாழ்தேவியையும் நினைவூட்டுகின்றது. 
 
வாருங்கள். சிறிது நேரம் யாழ்தேவியில் பயணித்து வருவோம்.
 
[Digiat Art (Google Nano Banana) help: VNG ]
 

Saturday, October 25, 2025

காலத்தால் அழியாத கானம்: 'அம்மா என்றால் அன்பு'


கே
.வி.மகாதேவனின் இசையில், கவிஞர் வாலியின் வரிகளை, அடிமைப்பெண் திரைப்படத்தில் பாடுபவர் ஜெயலலிதா.

கண்களை மூடிக்கொண்டு கேட்டுப் பாருங்கள் கர்நாடக சங்கீதம் நன்கறிந்து பாடும் பாடகியொருவரின் குரலோ என்று பிரமித்துப் போவீர்கள்.

https://www.youtube.com/watch?v=0kZMaWiExME&list=RD0kZMaWiExME&start_radio=1

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]

காலத்தால் அழியாத கானம்: 'காசிக்குப் போகும் சந்நியாசி'


'சந்திரோதயம்' திரைப்படத்தில், மெல்லிசை மன்னரின் இசையில்,
#கவிஞர் வாலியின் வரிகளுக்குக் குரல் கொடுத்திருப்பவர்கள் டி.எம்.எஸ் & சீர்காழி கோவிந்தராஜன். நடிப்பு: #எம்ஜிஆர் , நாகேஷ் & மனோரமா.

அப்பாவுக்குப் பிடித்த இப்பாடல் எனக்கும் பிடித்தது. பாடகர்களின் குரல்களையும், எம்ஜிஆர், நாகேஷின் நடிப்பையும் கேட்கும்போதெல்லாம் இரசிப்பேன். கூடவே அப்பா பற்றிய நினைவுப்பாம்பும் ஆழ்மனப்புற்றிலிருந்து எழுந்து தலை விரித்தாடும்.

இத்திரைப்படம் எம்ஜிஆர் சுடப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம். இப்பாடலின் ஆரம்பத்தில் எம்ஜிஆர் , நாகேசுடன் சிறிது நேரம் உரையாடுவார். அப்போது சுடப்படுவதற்கு முன்பிருந்த எம்ஜிஆரின் இன் குரலையும் கேட்கலாம். கேட்கையில் சுட்டவர்மீது ஆத்திரம் வருவதைத் தடுக்க முடியாது.

https://www.youtube.com/watch?v=UwpvmT6_rvY&list=RDUwpvmT6_rvY&start_radio=1

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]

Sunday, October 19, 2025

காலத்தால் அழியாத கானம்: "காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்"


இப்பாடலைக் கேட்கும்போது பேராசிரியர் நுஃமான் அவர்கள் ஒருமுறை தமிழில் வெளியான மிகச்சிறந்த காதற் பாடலென பாரதியாரின் இப்பாடலைக் கூறியிருந்ததும் நினைவுக்கு வருகின்றது.
 
 
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
 
படம்: கப்பலோட்டிய தமிழன்
பாடல் வரிகள்: மகாகவி பாரதியார்
இசை: ஜி.ராமநாதன்
பாடகர்கள்: பி.பி.ஶ்ரீனிவாஸ், பி.சுசீலா
நடிப்பு: ஜெமினி கணேசன், சாவித்திரி

Monday, October 13, 2025

காலத்தால் அழியாத கானம் - "அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும் "


"அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும் 
ஆயுசுக்கும் நெனைச்சதெல்லாம் நடக்கணும் 
உன் மனசும் என் மனசும் ஒன்னு போல இருக்கணும் " - கவிஞர் மாயவநாதன் -

'காவல் தெய்வம்' ஜெயகாந்தனின் குறுநாவல். கைவிலங்கு என்னும் பெயரில் கல்கி சஞ்சிகையில் வெளியானது.  நடிகர் எஸ்.வி.சுப்பையாவின்  தயாரிப்பில் , கே.விஜயனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம். இசை - ஜி.தேவராஜ்.  பாடகர்கள் - தாராபுரம் சுந்தராஜன் & பி.சுசீலா. பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் மாயவநாதன்.  இவரது புகழ்பெற்ற பாடல்களில் நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ,  தண்ணிலவு தேனிறைக்க, கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு,  சித்திரப்பூவிழி வாசலிலே ஆகியவை முக்கியமானவை.

இப்பாடலின் சிறப்பு - நட்சத்திர நடிகர்களின் ஆதிக்கம் மிகுந்த  திரையுலகில், முதிய நடிகரும், இளம் நடிகையும் ஆடிப்பாடும் சூழலில், இளம் நடிகர்களின் காதல் காட்சிகள் பசுமையாக, இயல்பாக, இனிய இளங்காலைப்பொழுதைப்போல் மகிழ்ச்சியைத் தருகின்றன. இளம் சிவகுமாரும், லட்சுமியும் தம் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இப்பாடலின் ஒளிப்பதிவும் என்னைக் கவர்ந்தது. ஒவ்வொரு சட்டமும் நினைவில் நிற்கும் வகையில் எடுக்கப்பட்டதாக இப்பாடலைப் பார்க்கையில் உணர்ந்தேன். நீங்களும் உணர்வீர்கள். ஒளிப்பதிவாளர்  விஜயன். 

காவல் தெய்வம் படத்தின் இன்னுமொரு சிறப்பு - நடிகர் திலகம் கெளரவ் வேடத்தில் , ஆனால் நினைவில் நிற்கும் பாத்திரத்தில் கொலைக்குற்றவாளியான 'சாமுண்டி'யாக நடித்திருப்பார்.  ராணிமுத்து பிரசுரங்களின் தொடக்கக் காலத்தில் காவல் தெய்வம் என்னும் பெயரில் வெளியானது. 

https://www.youtube.com/watch?v=5-Z-s46dNB0&list=RD5-Z-s46dNB0&start_radio=1

டிஜிட்டல் ஓவியத்  தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG

Saturday, October 11, 2025

நினைவில் நிற்கும் காட்சி: தருமியாக திருவிளையாடலில் நடிகர் நாகேஷ்!


நடிகர் நாகேஷைப் பற்றி நினைத்தால் அவர் நடித்த திரைப்படக் காட்சிகள் பல நினைவுக்கு வரும்.அவற்றில் பலருக்கு முதலில் நினைவுக்கு வரும் காட்சி திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி - சிவன் காட்சிதான்.

மறக்க முடியாத காட்சி, அனைத்து வயதினரும் முகம் சுளிக்காது, நினைத்து நினைத்துக் களிக்கும் காட்சி. இக்காட்சியில் தருமியாக நாகேஷ் சிவனிடம் கேட்கும் கேள்விகளும், அப்போது நாகேஷ் வெளிப்படுத்து உடல், குரல் அசைவுகளும் அற்புதம்.

இயக்குநர் ஏ.பி .நாகராஜனே திரைப்படக்கதை வசனத்தையும் எழுதியவர்.அவரது எழுத்துச் சிறப்புக்கு எடுத்துக்காட்டு இக்காட்சி வசனங்கள்.

இதிலொரு கேள்வி வரும். பிரியக்கூடாதது எது?

அதற்குப் பதில் எதுகையும் மோனையும்.

அது உண்மையில் சரியான பதிலல்ல. ஏனென்றால் தமிழ் மரபுக் கவிதையில் எதுகை, மோனையற்று அல்லது மோனையுடன் வரும் கவிதை வடிவம் அகவற்பா என்னும் ஆசிரியப்பா. ஆசிரியப்பாவில் எதுகை வரலாம், வராதும் விடலாம். அங்கு முக்கியம் ஆசிரிய உரிச்சீர்கள். அதுவும் அதிகமாக ஆசிரிய உரிச் சீர்கள் வரவேண்டும். இந்நிலையில் பிரியக் கூடாதது எதுகையும், மோனையும் சரியான பதிலல்ல. அப்படி ஒரு கட்டாய விதி தமிழ் மரபுக் கவிதையிலில்லை.

https://www.youtube.com/watch?v=gj6EDdB2_dA

டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) : VNG

கலைநிதன் கலைச்செல்வன் இயக்கத்தில் , சுமதி பலராமின் நடிப்பில் 'கறுப்பு' !


* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG 

'டொரோண்டோ சர்வதேசத் திரைப்பட விழா' (20250) - கலைநிதன் கலைச்செல்வன் இயக்கத்தில், சுமதி பலராமின் நடிப்பில் வெளியான குறுந்திரைப்படம் 'கறுப்பி'!

கறுப்பி - 'டொரோண்டோ' சர்வதேசத்  திரைப்பட விழாவில்  (TIFF - 2025 ) திரையிடப்பட்டுப் பலரின் கவனத்தை ஈர்த்த குறுந்தமிழ்த்திரைப்படம் 'கறுப்பி' (Karupy) .இதன் திரைக்கதையை எழுதி,இயக்கியிருப்பவர் கலைநிதன் கலைச்செல்வன் ( Kalainithan Kalaichelvan) . நோர்மன் ஜூவிசன் திட்டத்தின் கீழ் (Norman Jewison Program ) கனடியத் திரைப்பட மையத்தில் , தெற்காசிய நடிகர்களைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் கறுப்பி. கலைநிதன் கலைச்செல்வன்  எழுத்து , திரைப்பட இயக்கம் ஆகியவற்றில் இயங்கி வருபவர். இவரது குறுந்திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வ.ந.கிரிதரனின் குழந்தைகளுக்கான நூல் 'சாவித்திரியின் பெரிய விருப்பம்'

"சாவித்திரியின் பெரிய விருப்பம் " என்பது, அதன் இளம் கதாநாயகியான பெண் குழந்தை சாவித்திரியின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்துமொரு குழ...

பிரபலமான பதிவுகள்