Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Sunday, August 10, 2025

காலத்தால் அழியாத கானம் - ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?


கவிஞர் கண்ணதாசனின் சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. கவிஞரின்  எளிய, இனிய தமிழ் கேட்பவரைக் கிறங்க வைப்பது. இது போல் தெளிவான வசனங்களை உள்ளடக்கிய பாடல்களைத் தற்போது கேட்பது அரிது. மெல்லிசை மன்னர்களின் இசையில் , டி.எம்.எஸ் குரலில், எம்ஜிஆர் , ஜெயலலிதா நடிப்பில் ஒலிக்கும் பாடலை எத்தனை தரம் கேட்டாலும் அலுப்பதில்லை.
 
"ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ"
 
"ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு"
 
"உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு"
 
என் மனத்தைக் கவர்ந்த பாடல் வரிகள். சங்கப்பாடல்கள் பலவற்றில் ஊரெல்லாம் தூங்கையில் தூங்காமல் விழித்திருக்கும் பெண் ஒருத்தியின் உணர்வுகளைக் கவிஞர்கள் பலர் விபரித்திருப்பதைக் காணலாம். ஆனால் இங்கு கவிஞர் கண்ணதாசன் ஆணொருவனின் இவ்வித உணர்வுகளை விபரித்திருக்கின்றார். அதுவே சுவைக்கின்றது.
 
அதே சமயம் சங்ககாலப்பாடல்களில் பெண் தூங்காமல் விழித்திருப்பது காதலால், காதற் பிரிவால், பொருள் தேடித் தொலைதூரம் சென்று விட்ட தலைவனின் பிரிவால், ஆனால் இவனோ தன் மக்களின் விடுதலைக்காகப் போராடும் போராளி. தன் இலட்சியப் போராட்டத்தின் காரணமாக இரவில் விழித்திருப்பதும் இவன் வாழ்க்கையாகிப் போனது.  
 
'அழும் நிலவு' அற்புதமான படிமம். நிலவு அழுவதாக எவரும் எழுதி நான் வாசித்ததில்லை.
 
"பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு"
 
இதைவிட விடுதலைப் போராளி ஒருவனின் உணர்வுகளை எவ்விதம் விபரிப்பது?
நான் முதல் பார்த்த எம்ஜிஆர் , ஜெயலலிதா இணைந்து நடித்த படம் மட்டுமல்ல, அவர்களே இணைந்து நடித்த முதல் படமும் ஆயிரத்தில் ஒருவன்தான்.

Tuesday, August 5, 2025

க.பாலேந்திராவின் இயக்கத்தில் 'ஒரு பாலை வீடு'


அவைக்காற்றுக் கழகத்தின் தயாரிப்பில் , நாடகவியலாளர் பாலேந்திராவின் இயக்கத்தில் வெளியான நாடகம் 'ஒரு பாலை வீடு'. இந்நாடகம் Federico García Lorca
 என்னும் ஸ்பானிய நாடகாசிரியரின் 'தி ஹவுஸ் ஆஃப் பேர்னார்டா அல்பா' (The House of Bernarda Alba ) என்னும் நாடகமே தமிழில் 'ஒரு பாலை வீடு' என்னும் பெயரில் மேடையேற்றப்பட்டது. மேடையேற்றியவர்கள் சுண்டுக்குளி பழைய மாணவியர் சங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Federico García Lorca ஒரு பாலினச் சேர்க்கையாளர். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் இடதுசாரிஅமைப்பான குடியரசுக் கட்சியினை ஆதரித்த இவரை வலது சாரிகளும், பாசிசவாதிகளுமான தேசியப் படையினர் படுகொலை செய்தனர் என்பது துயரகரமானது. இவரது உடல் கூடக் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்டபோது , அதனைப்பற்றிய சிறப்பானதொரு விமர்சனத்தை , சிரித்திரன் சஞ்சிகையின் வைகாசி 1979 இதழில் எழுதியிருக்கின்றார் ஆ.க.பராக்கிரமசிங்கம்.  நாடக இயக்கத்தை, அரங்கு அமைப்பை, நடிகர்களின் திறமையை  என அவற்றை விதந்து தனது விமர்சனத்தில் எழுதியிருக்கும் கட்டுரையாளர்,  தனது விமர்சனத்தின் இறுதியில் ஈழத்து நாடகத்துறையையிட்டு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும், அதற்காக பாலேதிராவையும், அவைக்காற்றுக் கழகத்தையும் பாராட்டியிருக்கின்றார்.

இந்நாடகம் பெர்ணார்டா அல்பா என்னும் பெண்மணியையும், அவரது திருமணமாகாத  ஐந்து பெண்கள் பற்றியும் வைத்துப்பின்னப்பட்ட நாடகம் 'ஒரு பாலை வீடு' என்பதையும், நாடகத்தின் தமிழாக்கத்தைச் செய்த நிர்மலா நித்தியானந்தனே , நாடகத்தின் பிரதான வேடமான பெர்னார்டோ அல்பா வேடத்தில் நடித்திருப்பதையும், அவரது கடைசிப் பெண்ணாக நிர்மலா நித்தியானந்தனின் கடைசித்தங்கையான சுமதி ராஜசிங்கம் நடித்திருப்பதையும் மேற்படி விமர்சனத்திலிருந்து அறிய முடிகின்றது. 

கலைஞர் சோக்கல்லோ சண்முகத்தின் முன்மாதிரியான, அர்ப்பணிப்புடன் கூடிய கலையுலக வாழ்க்கை!



அண்மையில் தனது தொண்ணூறாவது பிறந்த நாளைக் கொண்டாடிய கலைஞரும், எழுத்தாளருமான சோக்கல்லோ சண்முகநாதன் அவர்கள் முக்கியமான தமிழ்க் கலைஞர். வில்லுப்பாட்டும், நாடகம், எழுத்து, நடிப்பு எனப் பன்முகத்திறமை மிக்கவர். சிறந்த மரபுக்கவிஞரும் கூட. இவரது 'சோக்கல்லோ' நகைச்சுவைக் கதம்ப நிகச்சி மிகவும் புகழ்பெற்ற மேடை நாடகங்களிலொன்று. இலங்கையில் பல இடங்களில் 500 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்ட நாடகமிது. அதன் காரணமாகவே சோக்கல்லோ சண்முகம் என்றழைக்கப்பட்டவர். 

Tuesday, July 29, 2025

யுத்தத்தின் கோர விளைவுகளை வெளிப்படுத்தும் 'இரு பெண்கள்' (Two Women).


இத்தாலிய நடிகையான சோபியா லோரென் ஹாலிவூட்டினையும் கலக்கிய சிறந்த நடிகைகளிலொருவர். சோபியா லோரேன் என்றதும் அவரது கவர்ச்சிகரமான உடல்வாகினைத்தான் பலரும் முதலில் நினைவுக்குக்கொண்டு வருவார்கள். சோபியா லோரேன் அழகான உடல்வாகுகொண்டவர் மட்டுமல்லர் அற்புதமான நடிகைகளிலுமொருவர். முதல் முதலாக ஆஸ்காரின் சிறந்த நடிகைக்கான விருது ஆங்கிலமொழியிலில்லாத ஒரு திரைப்பபடத்தில் நடித்த நடிகையொருவருக்காகக் கொடுக்கப்பட்டதென்றால், அவ்விருதினைப் பெற்ற நடிகை சோபியா லோரென்தான். புகழ்பெற்ற இத்தாலிய நாவலாசிரியர்களிலொருவரான அல்பேர்ட்டோ மொராவியோ (இவரது படைப்புகளில் பாலியல் சம்பவங்கள் சிறிது தூக்கலாகவிருக்கும். அதனால் சிலர் எஸ்.பொ.வை இவருடன் ஒப்பிடுவதுமுண்டு) எழுதிய நாவலான 'இரு பெண்கள்' (Two Women) என்னும் நாவலினை மையமாக வைத்து உருவான Two Women கறுப்பு/வெள்ளைத் திரைப்படம் 22 சர்வதேச விருதுகளைச் சோபியா லோரென்னுக்கு அள்ளிக்கொடுத்த திரைப்படம்.. போர் மக்கள் மேல் ஏற்படுத்திய விளைவுகளைப் பார்ப்பவர் நெஞ்சினை அதிரவைக்கும் வகையில் விபரிக்கும் திரைப்படமிது. 'விட்டோரியோ டி சிகா'வின் (Vittorio De Sica) இயக்கத்தில் வெளியான ( Vittorio De Sica புகழ்பெற்ற இத்தாலியத் திரைப்பட இயக்குநர். இவரது திரைப்படங்கள் நான்கு தடவைகள் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளன. புகழ்பெற்ற The Bicycle Thief திரைப்படத்தினை இயக்கியவர் இவர்தான்.) இத்திரைப்படத்தின் கதைச் சுருக்கமிதுதான்:

Friday, July 25, 2025

கவிச்சக்கரவர்த்தியும், கவியரசரும்!


'இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்"


இப்பாடல் கம்பரின் கம்பராமாயணத்தில் வரும் பாடல். இராமனின் கால் பட்டு சாபம் நீங்குகின்றாள் அகலிகை. இதை விசுவாமித்திரர் விபரிப்பதாகக் கம்பர் இப்பாடலை எழுதியிருப்பார்.   

இப்பாடலில் வண்ணம் என்னும் சொல் எத்தனை அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.  

கம்பரின் கவித்துவத்தை வெளிப்படுத்தும் கவிதையிது. கருமை வண்ணமுடைய தாடகையுடனான போரில் , அதாவது 'மை வண்ணத்து அரக்கி போரில்' மழை தரும் கார்மேக வண்ணமுடைய இராமனின் வில்லை இயக்கும் கை வண்ணம் கண்டேன். இங்கு கல்லை மிதித்து அகலிகையின் சாபத்தை நீக்கிய இராமனின் கால் வண்ணம் கண்டேன் என்கின்றார் விசுவாமித்திரர் கூற்றாகக் கம்பர்.  

இங்கு கம்பர் கரிய நிறம் வாய்ந்த தாடகையின் அழகைக் குறைத்து மதிப்பதற்காக மை வண்ணம் அரக்கி என்கின்றார் கம்பர். இதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவ்விதமான புரிதல் இன்றுதானே எமக்கு வந்திருக்கின்றது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்தப் புரிதல் இருந்திருக்காது. அதனால் கம்பரைக் குறை கூற முடியாது.



இவ்விதம் வண்ணம் என்னும் சொல்லைப் பலமுறை பாவித்துக் கவிஞர் கண்ணதாசன் அற்புதமானதொரு பாடலை எழுதியிருக்கின்றார். அது 'பாசம்' திரைப்படத்தில் வரும் 'பால் வண்ணம் பருவம்  கம்பர் தன் பாடலில் எட்டு முறை வண்ணத்தைப் பாவித்திருந்தால் , கவிஞர் கண்ணதாசன் பன்னிரண்டு முறை பாவித்திருப்பார். 

இப்பாடலின் இன்னுமொரு சிறப்பு. மெல்லிசை மன்னர்கள் எம்ஜிஆருக்குப் பி.பி.ஶ்ரீனிவாசின் குரலைப்பாவித்திருப்பதுதான். காட்சியின் சூழலுக்கு மென்மையான பாடகர் பி.பி.ஶ்ரீனிவாசின் குரல் பொருந்தும் என்பதால் பாவித்திருக்க வேண்டுமென்று கருதுகின்றேன். உண்மையில் நன்கு பொருந்தத்தான் செய்கிறது.  பி.பி.,ஶ்ரீனிவாஸ், பி.சுசீலா இருவரும் மிகவும் சிறப்பாக இப்பாடலைப் பாடியிருப்பார்கள்.

பாடலைக் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=qYuON1qbTCE&list=RDqYuON1qbTCE&start_radio=1 

Monday, July 21, 2025

நடிகர் திலகத்தின் நினைவாக...


நான் ஆரம்பத்திலிருந்தே வாத்தியாரின் இரசிகன். ஆனாலும்  நடிகர் திலகத்தின் படங்களைப்  பார்ப்பதை என்னால் தவிர்க்க முடிந்ததில்லை. காரணம் அவரது நடிப்பு.   அவரது நடிப்பு மிகை நடிப்பென்றால் அதற்குக் காரணம் அக்காலகட்டத்தின் தேவையாக அது இருந்ததுதான். அதனால்தான் அவர் அப்படி நடித்தார். திரைப்படங்கள் என்பவை கலைக்காக மட்டும் எடுக்கப்படுவதில்லை. வர்த்தகமே அதன் முக்கிய  அம்சம்.  பெரும்பான்மையான இரசிகர்கள் விரும்பியது வசனங்களையும்,  வசனங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுடன் கூடிய நடிப்பையும்தாம்  நடிகர் திலகம் சிறந்த நடிகர் அதனால் அவரால் அக்கால இரசிகர்கள் விரும்பியதைத் தன் நடிப்பால் கொடுக்க  முடிந்தது.   அக்காலகட்டத்தில் என் அம்மா, அப்பாவுக்கு மிகவும் பிடித்த  திரைப்பட ஜோடி சிவாஜி _ பத்மினிதான்.

தமிழ்ச் சினிமா பாட்டிலிருந்து வசனத்துக்கு மாறிக்கொண்டிருந்த வேளையில் அவ்வுலகில் வந்து குதித்தவர்  விழுப்புரம் சின்னையா கணேசன் (சிவாஜி  கணேசன்).  சமுதாயச் சீர்கேடுகளைச் சுட்டெரிப்பதை மையமாகக் கொண்ட திராவிடர்  கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை  சினிமாவைத் தம் கட்சிகளின் பிரச்சாரத்துக்குப் பாவிக்கத்தொடங்கிய காலகட்டத்தில் வெளியான திரைப்படம்  கலைஞரின் வசனத்தில் வெளியான 'பராசக்தி'. அதில் முக்கிய கதாநாயகனாக நடித்ததன் மூலம் , ஒரேயுடியாக உச்ச நட்சத்திரமாகியவர் நடிகர் திலகம்.  அவரே அத்தகையதொரு வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார். தமிழகத்தில் பல இடங்களில் வெள்ளி விழாக் கொண்டாடிய 'பராசகதி' இலங்கையில் 240 நாட்களைக் கடந்து ஓடியது.

Sunday, July 20, 2025

நடிகரும், பாடகருமான மு.க.முத்து மறைந்தார்!


கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மறைவுச் செய்தியைத் தாங்கி வந்தது முகநூல். இவர் கலைஞருக்கும், முதல் மனைவி பத்மாவதிக்கும் பிறந்த முதலாவது குழந்தையே மு.க.முத்து. பத்மாவதி பிரபல பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் சகோதரி. மு.க.முத்துவின் திரைப்படங்களை நான் பார்த்ததில்லை,. ஆனால் அவரது திரைப்படப்பாடல்களை நான் இரசிப்பவன். குறிப்பாக அவரே பாடி நடித்த 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க' பாடலைக் கூறலாம்.


கலைஞரின் மகனாக நான் முதலில் அறிந்தது மு.க.முத்துவையே. குமுதத்தில் கலைஞரின் 'ரோமாபுரிப்பாண்டியன்' தொடராக வெளியான காலத்தில் , அல்லது அதற்குச் சிறிது முன்பாக அல்லது பின்பாக , ஒரு தடவை பிரபலங்களின் குழந்தைகள் எழுதிய ஓரிரு பக்கக் கதைகளை வெளியிட்டிருந்தார்கள். கட்டுரைகளாகவுமிருக்கலாம். சரியாக நினைவிலில்லை. அவ்விதம் ஒரு கதையையோ அல்லது கட்டுரையையோ எழுதியிருந்தார் சிறுவனான மு.க.முத்து.

Monday, July 14, 2025

'அபிநய சரஸ்வதி' சரோஜாதேவி மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!


நடிகை சரோஜாதேவியின் மறைவுச் செய்தியினை இணையம் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல். கலைஞர்கள் அழிவதில்லை. அவர்கள்தம் கலைகளூடு நிலைத்து நிற்பார்கள். சரோஜாதேவியும் அவ்விதமே நிலைத்து நிற்பார்.


என் அபிமான நடிகையர்களில் ஒருவர் அவர். நான் நினைவு தெரிந்து முதல் பார்த்த திரைப்படம் எம்ஜிஆர், சரோஜாதேவி இணைந்து நடித்த திரைப்படமான 'எங்க வீட்டுப் பிள்ளை'. அதன் பிறகு அவர் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த சில திரைப்படங்களே வெளிவந்தன. அவற்றில் என்னைக் கவர்ந்தது அன்பே வா. எம்ஜிஆர் , சரோஜாதேவி காலம் மறைந்து , எம்ஜிஆர் , ஜெயலலிதா காலம் தமிழ்த் திரையுலகில் கோலோச்சத்தொடங்கி விட்டது. ஆனால் அதுதான் சரோஜாதேவியின் நடிப்புக்கு இடம் கொடுத்த பல திரைப்படங்கள் வெளியாகக் காரணமாக அமைந்தது. தாமரை நெஞ்சம், குலவிளக்கு, பணமா பாசமா ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

நானோ எம்ஜிஆரின் இரசிகன். எம்ஜிஆர் , சரோஜாதேவி இணைந்து நடித்த, 1958 - 1965 காலப்பகுதியில் வெளியான பல திரைப்படங்கள் மீள் வெளியீடுகளாக வெளியானபோது அவற்றைச் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பார்த்தேன். அக்காலகட்டத்து எம்ஜிஆர்,சரோஜாதேவி படப்பாடல்கள் பல டி.எம்.எஸ் , பி.சுசீலா இணைந்து பாடி மிகவும் புகழ் பெற்ற பாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் மறக்க முடியாத இன்னுமொரு விடயம் - 'எங்க வீட்டுப் பிள்ளை' திரையிடப்பட்டபோது அதற்காக இலங்கைக்கு எம்ஜிஆருடன் சரோஜாதேவியும் வந்திருந்தார். அவர்கள் சென்றவிடமெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வரவேற்றார்கள். பழைய பத்திரிகைகள், சஞ்சிகைகளைத்தேடிப் பார்த்தால் எத்தகைய வரவேற்பு என்பதை அறிந்துகொள்ளலாம்.

அவர் நினைவாக , எனக்கு பிடித்த அவர் நடிப்பில் உருவான திரைப்படப் பாடல்களில் சில:

Tuesday, July 1, 2025

புகலிட அன்னையே! நீ வாழ்க! (இசை - Suno AI & ஓவியம் - AI)


இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்!

புகலிட அன்னையே! நீ வாழ்க!  

பல்லின மக்கள் ஒன்றென வாழும்
புண்ணிய பூமி உனது பூமியே!
நல்லறம் பேணி நானிலம் போற்ற
நல்லன்னை எனவே  என்றென்றும் வாழ்க நீ!

புகலிடம் நாடிப் பிறந்தமண் பிரிவோர்
புகலிட அன்னை என்போம் உனையே!
கனடாத் தாயே! கருணையின் வடிவே!
உனது அன்பால் உயிர் பிழைத்தோம்!

இத்தினம் உனது உதயத்து நாளாம்!
இன்றல்ல என்றுமே உனை வாழ்த்துவோம்.
என்றுமே இன்றுபோல் உன்கருணை பொங்கட்டும்.
நன்றாக  வாழ்ந்திட உனை வாழ்த்துகிறோம்.

Monday, June 16, 2025

'முத்தமழை' பாடல் பாடகி Dhee யின் குரலில்...


'முத்தமழை' பாடலின் பாடகி Dhee யின் குரலுக்கான காணொளியினையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.  

பாடகி டீ யின் குரல் நவகாலத்துக்குரியது. பாடகி சின்மயியின் குரல் தொண்ணூறுகளுக்கு உரியது.  இருவர் குரல்களும் தனித்துவமானவை. ஆனால் இருவர் குரல்களிலும் பாடலைக் கேட்டு விட்டு, மீண்டும் ஒரு  தடவை நினைவு கூர்ந்தால், முதலில் நினைவுக்கு வருவது பாடகி டீயின் குரல்தான். காரணம் அதன் தனித்துவம். 
பாடகி சின்மயிக்கு இப்பாடல் திரையுலகில் அவரது இரண்டாவது ஆட்டத்தை ஆட வழி வகுத்துள்ளது.  அது வரவேற்கத்தக்கது. அவர் ஆணாதிக்கத் திரையுலகில் இதுவரை அடைந்த துயர் இனியாவது ஒழியட்டும். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதி கிடைக்கட்டும். 

'தக லைஃப்' திரையில் எதிர்பார்த்த வெற்றியை அடையாவிட்டாலும், அது எழுப்பிய சர்ச்சைகளால் , இயக்கத்தால், ஒளிப்பதிவால், இசையால் முக்கியமானதொரு திரைப்படமாக நிலைத்து நிற்கும். ஏ.ஆர்.ரகுமான் , மணிரத்தினம் கூட்டணியில் உருவான முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும். நடிகை திரிஷா,  நடிகர் சிலம்பரசனின் திரையுலக வாழ்க்கையிலும் முக்கிய படிகளாக அமையும்.

பாடலைக் கேட்க

Saturday, June 14, 2025

'தக் லைஃப்' 'முத்தமழைப் பாடலின் பாடகி சின்மயி பாடும் காணொளி!


இப்பொழுது 'தக் லைஃப்' 'முத்தமழை' பாடலைப் பாடகி சின்மயி பாடுவதாக அமைந்துள்ள காணொளியை வெளியிட்டிருக்கின்றார்கள் படக்குழுவினர். நடிகை திரிஷா கிருஷ்ணனை நினைவில் வைத்திருக்கும் முதலிரு வேடங்கள் 'பொன்னியின் செல்வன்' குந்தவைப் பிராட்டியார். அடுதத்து 'தக் லைஃப்' இந்திராணி. இரு படங்களையும் இயக்கியிருப்பவர் மணிரத்தினம். இது போல் நடிகை ஐஸ்வர்யா ராயை நினைவில் நிறுத்தி வைத்திருக்கும் வேடம் 'பொன்னியின் செல்வன்' பழுவூர் ராணி நந்தினி. 
 
என்றும் பதினாறு மார்க்கண்டேயரைப்போல் திரிஷாவும் என்றும் இருபது மார்க்கண்டேயணிதான். இன்னும் பல வருடங்களுக்குத் தமிழ்த்திரையுலகில் கொடி கட்டிப் பறக்கும் சாத்தியங்கள் உள்ள நடிகை. 
 
நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட காலம் நாயகியாக நிலைத்திருந்தார். ஆனாலும் அவரது இரண்டாவது வருகையின்போது அவர் உடல் பருத்திருந்தார். ஆனால் இரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். திரிஷாவோ இன்னும் அதே உடல் வாகுடன் இருக்கின்றார். இது அவரது எதிர்கால வெற்றிக்கு வழி வகுக்கும்.
 
இயக்குநர் மணிரத்தினம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 
 

Thursday, June 12, 2025

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடகி டீ (dhee) : முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ?


'தக் லைஃப்' படத்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய பாடலைப் பாடியிருப்பவர் பாடகி டீ. 'ஆடியோ லோஞ்ச்'இல் மேடையில் பாடியிருப்பவர் பாடகி சின்மயி. இருவர் குரல்களிலும் இப்பாடலைக் கேட்டேன். இருவரிலும் என்னை மிகவும் கவர்ந்தவர் பாடகி டீ. இவரது குரலில் ஒலிக்கும், தென்படும் உணர்வு வெளிப்பாடுகள் பாடகி சின்மயியின் குரலில் இல்லைபோல் உணர்ந்தேன். டீயின் குரல் நவகாலத்துக்குரியது.
 

Thursday, May 29, 2025

சிறந்த குணசித்திர நடிகரான நடிகர் ராஜேஷ் மறைந்தார்!


நடிகர் ராஜேஷ் மறைந்த தகவலினை  இணையம் தாங்கி வந்து அதிர்ச்சியைத்  தந்தது. அண்மையில்தான் தற்செயலாக யு டியூப்பில் அவரது நேர்காணலொன்றைப் பார்த்தேன்.  அதில் அவர் நடிகையர் திலகம் சாவித்திரியின் இறுதி நாட்கள், அவரது  'ரியல் எஸ்டேட்' வர்த்தகம் மற்றும் அவர்  கே.கே. நகரில்  வாங்கிய வீட்டில்  நடந்த  திரைப்படங்களின் படப்பிடிப்புகள்  போன்ற விபரங்களை விபரித்திருந்தார். முன்னாள் தமிழக முதல்வரும், நடிகருமான எம்ஜிஆர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர்.  கார்ல் மார்க்ஸ் இவருக்குப் பிடித்த ஆளுமைகளில் ஒருவர். இங்கிலாந்து சென்று அவரது சமாதியைப் பார்த்து வந்தவர்.   எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் ஜானகி அம்மையாரை ஆதரித்தவர்.

சின்னத்திரை,பெரிய  திரை என்று தன் கலையுலகப் பங்களிப்பை வழங்கியவர் நடிகர் ராஜேஷ். சிறந்த குணச்சித்திர நடிகர். கன்னிப்பருவத்திலே, சிறை, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை  ஆகியவை இவரை நினைத்ததுமே நினைவுக்கு வரும் திரைப்படங்கள். 'அச்சமில்லை, அச்சமில்லை' திரைப்படத்தில் உலகநாதன் என்னும் அரசியல்வாதியாக நடித்திருப்பார். மறக்க முடியாத பாத்திரம். கே.பாலச்சந்தரின் இயக்கத்திலும், அவரது குடும்பத்தினரின் 'கவிதாலயா' தயாரிப்பிலும் வெளியான 'அச்சமில்லை. அச்சமில்லை' திரைப்படம் சிறந்த தமிழ்ப்படத்துக்கான தேசிய விருதினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 28, 2025

புகழ்பெற்ற இலங்கை நடிகை மாலினி பொன்செகா மறைந்தார்!


இலங்கையின் புகழ்பெற்ற நடிகையான மாலினி பொன்செகாவின் மறைவுச் செய்தியைத்தாங்கி வந்தது முகநூல்.  ஆழ்ந்த இரங்கல்.

என்னைப் பொறுத்தவரையில் சிங்களத்திரையுலகின் புகழ் பெற்ற நடிகைகளில் முதலில் நினைவுக்கு வரும் நடிகை மாலினி பொன்செகா. நடிகர் காமினி பொன்செகா. நான் முதன் முதலில் அறிந்த சிங்களத்திரைப்பட நடிகர்கள் இவர்கள்தாம். அறிந்துகொண்ட அந்த நிகழ்வு என் வாழ்வின் அழியாத கோலங்களில் ஒன்றாக ஆழ்மனத்தில் படிந்து விட்டது. 'பாரா வலலு' என்னும் சிங்களத் திரைப்படம் அறுபதுகளின் இறுதியில் யாழ் மனோஹராவில் திரையிடப்பட்டபோது அதற்கு மிகுந்த விளம்பரம் பத்திரிகைகளில் கொடுக்கப்பட்டது.

Sunday, May 25, 2025

'டொரோண்டோ'க் காட்சி!


'டொரொண்டோ'  நகரை ஊடறுத்துச் செல்லும் உயர்த்தப்பட்ட , 'கார்டினர்' நெடுஞ்சாலையூடு செல்கையில் , என் மூத்த மகள் தமயந்தி எடுத்த புகைப்படம். இங்கு தெரிவது உலகப்புகழ் பெற்ற சி.என்.கோபுரம் (CN Tower). அதனருகில் தெரிவது ஆரம்பத்தில் 'ஸ்கை டோம்' (Sky Dome) என்றழைக்கப்பட்டு , தற்போது 'றோயர்ஸ் சென்டர்' (Rogers Centre) என்றழைக்கப்படும் , மூடித்திறக்கும் கூரை கொண்ட 'பேஸ்போல்' விளையாட்டரங்கு.

எடுக்கப்பட்ட இடத்திலிருந்து , கரு முகிற் பின்னணியில், மேல் நோக்கி விரியும் நகரத்துக் காட்சி எனக்குப் பிடித்திருந்தது. அதனால் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். 'டொரொண்டோ'  நகரை ஊடறுத்துச் செல்லும் உயர்த்தப்பட்ட , 'கார்டினர்' நெடுஞ்சாலையூடு செல்கையில் , என் மூத்த மகள் எடுத்த புகைப்படம். இங்கு தெரிவது உலகப்புகழ் பெற்ற சி.என்.கோபுரம் (CN Tower). அதனருகில் தெரிவது ஆரம்பத்தில் 'ஸ்கை டோம்' (Sky Dome) என்றழைக்கப்பட்டு , தற்போது 'றோயர்ஸ் சென்டர்' (Rogers Centre) என்றழைக்கப்படும் , மூடித்திறக்கும் கூரை கொண்ட 'பேஸ்போல்' விளையாட்டரங்கு.

எடுக்கப்பட்ட இடத்திலிருந்து , கரு முகிற் பின்னணியில், மேல் நோக்கி விரியும் நகரத்துக் காட்சி எனக்குப் பிடித்திருந்தது. அதனால் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

Saturday, May 17, 2025

அஞ்சலி: நாட்டியத்தாரகை 'குச்சுப்பிடி' ரங்கா விவேகானந்தன் ஆர்ஜண்டினாவில் மறைவு!


                                                                         * புகைப்படம் - India Sublime Arts

நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன் அவ்ர்களின் மறைவை முகநூல் தாங்கி வந்தது.  ஆழ்ந்த இரங்கல். எமக்கு பரதநாட்டியம் என்றால் நாட்டியப் பேரொளி பத்மினி நினைவுக்கு வருவார்.  வையந்திமாலா நினைவுக்கு வருவார். குமாரி கமலா நினைவுக்கு வருவார். பத்மா சுப்பிரமணியம் நினைவுக்கு வருவார். இவர்கள் எல்லாரும்  அறுபதுகளில், எழுபதுகளில் நாடறிந்த நாட்டியத் தாரகைகள்.  இவர்களைப்போல் சிலரே இலங்கையில் அறியப்பட்டிருருந்தார்கள். அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் 'குச்சுப்பிடி' ரங்கா விவேகானந்தன். இவர் புகழ்பெற்ற நீச்சல் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் சகோதரி.  இவரது சகோதரி கோகிலா வரதீஸ்வரன் கனடாவில் வசித்து வருகின்றார். ரங்கா விவேகானந்தன் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர்

Tuesday, March 25, 2025

நடிகர் மனோஜ் மறைந்தார்!


முகநூல் எதிர்பாராத செய்திகளைத்  தாங்கி வர ஒரு போதும் தவறுவதில்லை. அவ்விதம் இன்று  முகநூல்  தாங்கி வந்த செய்திதான் நடிகர் மனோஜின் மறைவுச் செய்தி.  நான் இவரது தீவிர இரசிகன் அல்லன். உண்மையில் இவரது திரைப்படங்களைக்கூட இதுவரையில் பார்த்ததாக நினைவில்லை. ஆனால் நான் இவர் நடித்த திரைப்படப்பாடல்களின் காணொளிகள் பலவற்றை அதிகமாகப் பார்த்திருக்கின்றேன். இரசித்துக்கொண்டிருப்பவன். குறிப்பாக இவரது 'வருசமெல்லாம் வசந்தம்' திரைப்படப்பாடல்கள் மிகவும் பிடித்தவை. குறிப்பாக உன்னிமேனன் குரலில் ஒலிக்கும் 'எங்கே அந்த வெண்ணிலா'  பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். இப்பாடல்களில நடித்திருக்கும் மனோஜின் இயல்பான தோற்றம், நடிப்பு குறிப்பாக மனத்தைக் கவரும் அந்தப் புன்சிரிப்பு இவற்றினை நான் இரசிப்பவன்.

கதாநாயகனாக  இவரால் ஏனைய  திரைப்பட வாரிசுகளைப்போல் சுடர் விட முடியாமற் போயிருந்தாலும் , நடிகர் ரகுவரன் போல்  தனித்துவம் மிக்க, குணச்சித்திர நடிகராக  நிலைத்து நிற்கக் கூடிய ஒருவர் இவர் என்று நினைப்பதுண்டு.

நடிப்பு தவிரத் திரைப்பட  இயக்கத்திலும் இவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்னும் சாதிப்பதற்கு இவருக்குக் காலம் இருந்த நிலையில் ,இந்த வயதில் இவர் மறைந்திருப்பது துயரமானது. இருப்பின் நிலையற்ற தன்மையினை மீண்டுமொரு தடவை எமக்கு உணர்த்தி நிற்பது. ஆழ்ந்த இரங்கல்.

இவரது நினைவாக, இவர் நடிப்பில் என்னைக் கவர்ந்த சில பாடல்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

எங்கே அந்த வெண்ணிலா - https://www.youtube.com/watch?v=knkNX-_Zp5w
முதன் முதலாய் உன்னைப் பார்க்கிறேன் - https://www.youtube.com/watch?v=Cph4grc2l_U
சொல்லாதே சோலைக்கிளி  - https://www.youtube.com/watch?v=rDzFFHdEoEA
எந்த நெஞ்சில் - https://www.youtube.com/watch?v=kg4uCisk_2Q
ஈச்சி எலுமிச்சி - https://www.youtube.com/watch?v=Iklj9CFFmEw

Wednesday, March 12, 2025

எம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த குரலுக்குரியவர் பாடகர் டி.எம்.எஸ்!


எம் தலைமுறையினரின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஆளுமைகளில் தமிழ்ச் சினிமாப் பாடகர்களும் அடங்குவர். அவர்களில் டி.எம்.எஸ் முக்கியமானவர். அவரது குரலுடன் நாமும் வளர்ந்தோம். கனவுகள் கண்டோம். துயரத்தில் ஆழ்ந்தோம். மகிழ்ந்தோம். இன்பத்தில் ஆடினோம். 
 
அவரது இக்காணொளி எவ்விதம் இதுவரை என் கண்களில் படாமல் ஒளிந்திருந்தது?
இதில் அவர் தான் பாடகராக எவ்விதம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானார் என்பதை விபரிக்கின்றார். அக்காலகட்டச் சென்னை வாழ்க்கையின் நிலையினை விபரிக்கின்றார். அவரது சினிமா வாழ்க்கைக்கு நடிகர் திலகம் எவ்விதம் முக்கிய காரணமாக விளங்கினார் என்பதை எடுத்துரைக்கின்றார். எவ்விதம் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் தன் வெற்றிக்குக் காரணமானவர்களாக இருந்தார்கள் என்பதை நினைவு கூர்கின்றார். அவர் எவ்விதம் பாடல்களைப் பாடுகின்றார் என்பதை விளங்கப்படுத்துகின்றார். அற்புதமான காணொளி. காணொளியைப் பார்க்கையில், கேட்கையில் இன்பம் பொங்குகின்றது. நல்லதொரு காணொளி. டி.எம்.எஸ் என்னும் ஆளுமையினை நன்கு வெளிப்படுத்தும் காணொளி.

Thursday, February 6, 2025

வ.ந.கிரிதரன் பாடல் - எரியும் உலகின் தீயை அணைப்போம்.


இசை & குரல் - Suno AI  ஓவியம் - AI


பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.

மூடத்தனம் நிறைந்த உலகம் இது.
மூர்க்கம் நிறைந்த உலகம் இது.
போர்கள் நிறைந்த உலகம்  இது.
பிரிவுகள் மலிந்த உலகம் இது.

பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.

Wednesday, February 5, 2025

வ.ந.கிரிதரன் பாடல் - இரவு வானின் இரசிகை நான்! இசை & குரல் - Suno AI ஓவியம் - AI!


இசை & குரல் - Suno AI  ஓவியம் - AI


இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே

விரிந்திருக்கும் இரவு வானின் சுடர்கள்
வியப்பைத் தரும். சிந்திக்க வைக்கும்.
புரியாத இருப்பு பற்றி எண்ணுவேன்.
விரியும் சிந்தனையில் மூழ்கிக் கிடப்பேன்.

இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள...

பிரபலமான பதிவுகள்