தமிழக எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் 'பாண்டிய நெடுங்காவியம்' என்னுமொரு சரித்திர நாவலை எழுதியிருக்கின்றார். மூன்று பாகங்களை உள்ளடக்கிய இந்நாவலின் மூன்று பாகங்களும் வானதி பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. முதற் பதிப்பு வெளியான ஆண்டு 2015. இந்நூலின் பின்னட்டையிலும், உள்ளே விமர்சகர் ஒருவரின் திறனாய்விலும் தமிழில் சரித்திர நாவல் எழுதிய முதலாவது பெண் எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையா?
2012ற்கு முன்பே இவர் சரித்திர நாவல் அல்லது நாவல் எழுதியிருந்தால் அக்கூற்றினை ஏற்றுக்கொள்ளலாம். அப்படி நடந்த மாதிரித்தெரியவில்லை. உண்மையில் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் சிவநயனி முகுந்தன் தற்போது கனடாவில் வசிக்கின்றார். இவர் ஒரு 626 பக்கங்களைக் கொண்ட சரித்திர நாவலொன்றை எழுதியிருக்கின்றார். இவர் கனடாவில் 'வேல்விழியாள் மறவன்' என்னுமொரு சரித்திர நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். வெளிவந்த ஆண்டு 2012. வெளியிட்ட பதிப்பகம் - 'வித்தக விருட்சம்'. இதன் படி தமிழில் சரித்திர நாவல் எழுதிய பெண் எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் அல்லர். பின் யார்? எழுத்தாளர் சிவநயனி முகுந்தனே. [அனுஷா வெங்கடேஷ் என்னும் பெண் பெயரிலும் 'காவிரி மைந்தன்' என்னும் சரித்திர நாவலும், வேறு சில நாவல்களும் வெளியாகியுள்ளன. இவற்றை எழுதியவர் ஆண் எழுத்தாளரான ஆர்.வெங்கடேஷ்]
Friday, January 30, 2026
தமிழில் நூலாக வெளிவந்த முதலாவது சரித்திர நாவலை எழுதிய பெண் எழுத்தாளர் சிவநயனி முகுந்தன்! - வ.ந.கிரிதரன் -
Tuesday, December 23, 2025
புகலிட இலக்கியத்தில் அதிகார அரசியலும் விளிம்புநிலை இருத்தலியலும்: வ.ந.கிரிதரனின் 'மான் ஹோல்' மற்றும் 'அமெரிக்கா' படைப்புகளை முன்வைத்து ஒரு பன்முகப் பகுப்பாய்வு! (1) - ஈழக்கவி -
ஆய்வுச் சுருக்கம் (Abstract)
இக்கட்டுரை, ஈழத்துப் புகலிட எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் படைப்புளில் (மான் ஹோல், அமெரிக்கா) வெளிப்படும் அதிகார மையங்களுக்கும் விளிம்புநிலை மனிதர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை பன்முகக் கோணங்களில் ஆராய்கிறது. 'மான் ஹோல்' சிறுகதையில் வரும் பூர்வகுடிச் சாமி மற்றும் 'அமெரிக்கா' குறுநாவலில் வரும் அகதி (இளங்கோ) ஆகிய இரு கதாபாத்திரங்களின் ஊடாக, நவீன அரசுகள் அடையாளங்களை எப்படிச் சிதைக்கின்றன என்பதையும், உலகமயமாக்கல் சூழலில் 'அந்நியமாதல்' (Alienation) எவ்வாறு நிகழ்கிறது என்பதையும் இக்கட்டுரை விவாதிக்கிறது.பகுதி ஒன்று
ஈழத்து புகலிட இலக்கியம் (Eelam Diaspora Literature)
ஈழத்து புகலிட இலக்கியம் (Eelam Diaspora Literature) என்பது உலக இலக்கியப் பரப்பில் ஒரு தனித்துவமான மற்றும் காத்திரமான கிளை. இது வெறும் இடப்பெயர்வை மட்டும் பேசாமல், போர், இழப்பு, இருத்தலியல் போராட்டம் மற்றும் புதிய நிலப்பரப்பில் அடையாளத்தைத் தேடுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த விரிவான பார்வையை பின்வரும் நிலைகளில் காணலாம்:
Sunday, December 14, 2025
இலக்கிய ஆளுமையாளர் ஒருவரை வெளிப்படுத்துமோர் அரிய காட்சி!
இலக்கிய ஆளுமைகள் அவர்கள் பணி புரியும் ஊடக நிறுவனங்களில் தம் பணியில் மூழ்கியிருக்குக் காட்சிகளை உள்ளடக்கிய புகைப்படங்கள் அரிது. அவ்விதமானதொரு காட்சியினை அண்மையில் 'வரலாறு பேசும் பொற்கணங்கள் – வீரகேசரியின் 75 ஆண்டு கொண்டாட்டத் தொகுப்பு' என்னும் வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட காணொளியில் கண்டேன்.
அதில் பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான யாழ்நங்கை (அன்னலட்சுமி இராஜதுரை) அவர்கள் தம் பணியில் மூழ்கிக் கிடக்கும் காட்சியினைக் கண்டேன். அதைத்தவறவிடக்கூடாதென்பதற்காக அக்காட்சியினைக் 'கூகுள் நனோ பனானா' செயற்கை நுண்ணறிவு கொண்டு 'டிஜிட்டல்' ஓவியமாகப் பதிவு செய்தேன். அதனையே இங்கு காண்கின்றீர்கள்.
Monday, December 8, 2025
செயற்கை நுண்ணறிவின் 'An Immigrant' நாவல் பற்றிய நூல் விமர்சனம்!
Thursday, November 6, 2025
‘குடிவரவாளன்’: வ.ந.கிரிதரனின் மனதைத் தொடும் சுயசரிதைக் குறிப்பு. - முனைவர் ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு மகளிர் கலைக் கல்லூரி -
முனைவர் ஆர். தாரணி , வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'An Immigrant' (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் வெளியானது) பற்றி ஆங்கிலத்தில் ‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' என்னும் தலைப்பில் எழுதிய விமர்சனக் கட்டுரை. இதனைத் தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்திருப்பது கூகுளின் நனோ பனானா (Google Nano Banana) செயற்கை நுண்ணறிவு (AI)
"சில புத்தகங்களைச் சுவைக்க வேண்டும், சிலவற்றை விழுங்க வேண்டும், சிலவற்றை மென்று ஜீரணிக்க வேண்டும்" - சர் பிரான்சிஸ் பேக்கன் ஆங்கில எழுத்தாளர் (1561 - 1626)
'குடிவரவாளன்' இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனடா எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் புனைகதையில் ஒரு பெரிய பாய்ச்சல். அந்நிய நாட்டில் ஒரு நம்பிக்கைச் சோர்வுற்றிருந்த் ஆன்மாவின் இருத்தலியல் நெருக்கடியைச் சித்திரிப்பதால், இந்தப் புத்தகம் மிகுந்த "கவனத்துடனும் ஈடுபாட்டுடனும்" படிக்கப்பட வேண்டியது. கதை ஊக்கமளிப்பதுடன், ஒவ்வொரு உள்ளத்திலும் உற்சாகத்தைப் பற்றவைக்கிறது. இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம், இளங்கோ என்ற கதாபாத்திரத்தின் உயிர்வாழும் போராட்டத்தின் மீது அதிகம் இருந்தாலும், இது இலங்கையின் கொடூரமான இனப்படுகொலைக்கு ஒரு வலுவான சான்றாக நிற்கிறது, இது உலகெங்கிலும் உள்ள மக்களை இன்றும் கொதிப்படையச் செய்கிறது. தமிழ் மக்களைத் துன்புறுத்தும் சிங்களக் காடையர்களின் கொடூரத்தால் தமிழ் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தனது புத்தகத்தில், தனது முதல் அனுபவமாக எழுத்தாளர் வ.ந.கிரிதரன் முன்வைத்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த கலவரத்தில் தங்கள் உயிர்கள், குடும்பங்கள், உடைமைகள், தேசியம் மற்றும் மனிதன் என்ற அடையாளத்தையும் இழந்த தமிழ் மக்களுக்கு இது ஒரு தனித்துவமான அஞ்சலியாகும். புத்தகத்தின் முதல் சில அத்தியாயங்களில், கலவரத்தில் சிக்கிய இளங்கோ என்ற இளைஞனின் அவலநிலையை எழுத்தாளர் தெளிவாக விளக்குகிறார். தனது சொந்த நாட்டில், இளங்கோ இனவெறியர்களால் சிக்கித் தவிப்பதாக உணர்ந்து, அரக்கர்களிடமிருந்து தப்பிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறான். இளங்கோவின் கண்களினூடாக கலவரத்தைப் பற்றி எழுத்தாளர் மனதை உருக்கும் விதமாக விவரிக்கிறார்.
Wednesday, November 5, 2025
இலங்கை மலையகத்தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகள் இரண்டு!
தெளிவத்தை ஜோசப்பின் 'காலங்கள் சாவதில்லை'
எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பின் முக்கிய நாவல்களிலொன்று 'காலங்கள் சாவதில்லை'. மலையகத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளிலொன்று.
வீரகேசரி பிரசுரமாக வெளியான இந்நாவலை நூலகம் தளத்தில் வாசிக்கலாம் - https://noolaham.net/project/965/96468/96468.pdf
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப் பச்சை'!
தமிழ் இலக்கியத்தில் முக்கிய நாவல்களிலொன்று. குறிப்பாக மலையகத்தமிழ் மக்களின் ஆரம்பக் காலத்தை மையமாகக் கொண்டது. கனவுகள், ஏக்கங்களுடன் நல் வாழ்வுக்காகத் தமிழகத்திலிருந்து மலையகம் கொண்டு வரப்பட்ட மக்களின் இருத்தலுக்கான போராட்டத்தை வெளிப்படுத்தும் சிறந்த நாவல்.
எனக்கு இந்நாவலை வாசிக்கையில் தகழி சிவசங்கரம்பிள்ளையின் 'தோட்டி மகன்' நாவல் நினைவுக்கு வந்தது. அதில் மூன்று தலைமுறைகளை மையமாகக் கொண்டு அம்மக்களின் வாழ்க்கையை விபரித்திருப்பார் தகழி. அவ்விதமாகவே இந்நாவலும் பின்னப்பட்டுள்ளது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
சிதைந்திருந்த அட்டைப்படம் கூகுள் நனோ பனானா (Google Nano Banana) மூலம் சிறிது மெருகூட்டப்பட்டுள்ளது.
நாவலை வாசிக்க - https://noolaham.net/project/1090/108981/108981.pdf
Tuesday, October 14, 2025
எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் விருது.....
எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் விருது ரூபா 5 இலட்சம் , அவர் மறைவுக்குப் பின்னர் ஐவருக்குப் பிரித்து வழங்கப்பட்டதாக அறிகிறேன். விருது வழங்கப்பட்டது ரமேஷ் பிரேதன் என்னும் எழுத்தாளரின் இலக்கியப் பங்களிப்புக்காக. பலருக்கு அவர்கள்தம் பல்துறைப் பங்களிப்புகளுக்காக அவர்கள் மறைந்த பின்னரும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் உயிருடன் இருக்கும்போது ஒருவருக்கு வழங்கப்பட்ட விருது, அவரது மறைவுக்குப்பின்னர் வேறு சிலருக்கு வழங்கப்படுவது ஆச்சரியமளிக்கிறது.
ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விருது திருப்பி எடுக்கப்படாமல், அவரது படைப்புகளின் தொகுப்புகளை வெளியிடப் பயன்படுத்தியிருக்கலாம்.அல்லது அவரது பெயரில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கப்பயன்படுத்தியிருக்கலாம். அதுலிருந்து கிடைக்கும் வங்கி வட்டியிலிருந்து வருடா வருடம் இலக்கியப் போட்டிகள் நடத்தியிருக்கலாம். அல்லது விருதுகள் வழங்கியிருக்கலாம்.
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
Sunday, October 5, 2025
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதின் பெயர் மாற்றம் - 'அ,முத்துலிங்கம் இயல் விருது'!
நேற்று நடந்த இயல்விருது 2024 நிகழ்வில் ஒரு முக்கியமான அறிவிப்பினை ஆரம்பத்தில் சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் விடுத்திருந்தார். அது இவ்வாண்டிலிருந்து தமிழ் இலக்கியத்தோட்டம் வழங்கும் இயல் விருது , அ.முத்துலிங்கம் இயல் விருது' என்றழைக்கப்படும்.
இன்னுமொரு விடயமும் முக்கியமானது. அதனைத் தமிழ் இலக்கியத் தோட்டத்தை உருவாக்கியவர்களில் பிரதானமானவரான எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஆற்றிய உரையின் மூலம் அறிந்தேன். அவர் தான் இவ்வாண்டிலிருந்து தமிழ் இலக்கியத் தோட்டச் செயற்பாடுகளிலிருந்து ஓய்வு பெறுவதாகக் குறிப்பிட்டார். இயல்விருது மேல் தமிழக இலக்கிய ஆளுமையாளர்கள் பலருக்கும் ஆர்வம் இருப்பதற்குரிய காரணங்களில் முக்கியமானது அதன் பின்னால் இருக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ஈடுபாடும், பங்களிப்பும்.
எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்
இம்முறை கனடாத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2024ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றவர்களில் ஒருவர் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர். கவிஞராகி அறிமுகமாகி நாவலாசிரியராக உருமாறியவர். இவரது கானல்நதி, வெளியேற்றம், குள்ளச்சித்தன் சரித்திரம் ,பயணக்கதை , மணல் கேணி ஆகிய நாவல்கள் முக்கியமானவை. வித்தியாசமான கதை சொல்லலில் நகர்பவை. அவரது தேடல் மிக்க நெஞ்சின் உணர்வுகளை வெளிப்படுத்துபவை.அவரது ஏதாவதொரு நாவலொன்றினை வாசித்தால்,ஏனைய் நாவல்களையும் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்துபவை.
யுவன் சந்திரசேகரின் நாவல்கள் பற்றிய் அறிமுகத்தை தமிழ் விக்கியில் வெளியான எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் பற்றிய அறிமுகக் குறிப்பு தருகின்றது. அக்குறிப்பினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
Friday, September 26, 2025
அ.ந.கந்தசாமி (1924 - 2024) நூற்றாண்டு நினைவு தினக்கட்டுரை! 'மதமாற்றம்' ! - அ.ந.கந்தசாமி -
![]() |
| - அ.ந.கந்தசாமி - |
கொழும்பில் எனது 'மதமாற்றம்' நாடகம் நான்காவது முறை அரங்கேறியிருக்கிறது. அரங்கேற்றியவர் பிரபல சிறுகதையாசிரியர் காவலூர் இராசதுரை. டைரக்ஷன் லடீஸ் வீரமணி. நடித்தவர்களில் தான் தோன்றிக் கவிராயரென்று புகழ் படைத்த சில்லையூர் செல்வராசன், ஞானாஞ்சலி, தோத்திரமாலை போன்ற பல நூல்களை எழுதிய நவீன உவமைக் கதாசிரியர் முத்தையா இரத்தினம் என்பவர்கள் இவர்களில் சிலர்.
நல்ல முறையில் அரங்கேற்றுவதன் மூலம், தமிழ் நாடகத்துக்குப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் கொடுக்க முடியும் என்று நம்பியவர்கள் இவர்கள். இலங்கையில் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குத் தரத்தில் குறைவில்லாத தமிழ் நாடகங்களைத் தயாரித்து அளிக்க வேண்டுமென்று துடித்தவர்கள். ஆகவே இப்போது விமர்சகனின் முன்னுள்ள ஒரே கேள்வி இதில் இவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார்கள் என்பதுதான்.
நாடகம் எழுதுவது, ரேடியோவில் விமர்சனம் செய்வது, நாடக இயல் பற்றி நான் ஆராய்வது-பேசுவது ஆகிய யாவற்றிலும் நான் சிறிது காலமாகவே ஈடுபட்டு வந்திருக்கிறேன். ஆனால் இவை யாவற்றிலும் பார்க்க நான் செய்து வந்த முக்கியமான வேலை நாடகங்களைப் பார்ப்பதாகும். இதில் நான் எவருக்கும் சளைத்தவனல்ல. தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் கலாநிதி சு.வித்தியானந்தனின் 'கர்ணன் போர்' தொடக்கம் லடீஸ் வீரமணியின் 'சலோமியின் சபதம்' வரை அனேகமானவற்றை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கில நாடகங்களில் பெர்னாட்ஷாவின் 'மில்லியனரெஸ்' ('கோடிஸ்வரி') தொடக்கம் ஆர்தர் மில்லரின் 'டெத் ஒவ் ஏ சேல்ஸ்மேன்' ('விற்பனையாளனின் மரணம்') அனேக நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். சிங்கள நாடகங்களில் தயானந்த குணவர்த்த்னாவின் 'நரிபேனா' தொடக்கம் சுகத பால டி சில்வாவின் 'ஹரிம படு ஹயக் ' வரை பல நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன்.
Wednesday, September 24, 2025
எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா மறைவு!
இந்திய இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் ஒருவர் கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா. அவர் மறைந்த செய்தினை இணையம் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல்.
ஒரு குடும்பத்தின் சிதைவு நாவலைப் பின்வரும் இணையத்தள முகவரியில் வாசிக்கலாம் -https://abedheen.wordpress.com/wp-content/uploads/2012/12/orukudumbamsidhaigirathu.pdf
Tuesday, September 16, 2025
முற்றாத இரவில் முற்றாத காதலால் வாடும் மானுட உள்ளங்கள்!
| - கவிஞர் கண்ணதாசன் - |
"முற்றாத இரவொன்றில் நான் வாட..
முடியாத கதை ஒன்று நீ பேச..
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட..
உண்டாகும் சுவையென்று ஒன்று..
வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன்
விழி மட்டும் தனியாக வந்தாலும்..
வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று..
பெறுகின்ற சுகமென்று ஒன்று".. - கவிஞர் கண்ணதாசன் -
இவ்விதம் எளிமையான சொற்றொடர்களில் , அனுபவத்தில் தோய்ந்த காதல் போன்ற மானுடர்தம் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிறந்தவர் கவிஞர் கண்ணதாசன்.
'முற்றாத இரவு' அற்புதமான படிமம். முற்றாத என்னும் சொல்லை நாம் இரு வகைகளில் தமிழில் பாவிக்கின்றோம். ஒரு விடயம் முடிவுக்கு வராத விடயத்தைக்குறிக்கப் பாவிக்கின்றோம். அதே சமயம் முற்றாத கனி என்றும் பாவிக்கின்றோம்.
இரவு நீண்டிருக்கின்றது. முடிவற்று விரிந்து கிடக்கின்றது. முடிவற்ற கனியாகவும் இருக்கின்றது இரவு. இந்த இரவில் அவனது காதல் உணர்வுகளுக்குத் தீர்வுமில்லை. முடிவுமில்லை. எவ்வளவு சிறப்பாகக் கவிஞர் கண்ணதாசன் முற்றாத இரவு சொற்றொடர் மூலம் காதலால் வாடும் அவனது உள்ளத்தை, அதே சமயம் கனியாத, முற்றாத அவனது காதலின் தன்மையை வெளிப்படுத்துகின்றார். கனியாத, முடிவுக்கு வராத அவனது காதலுணர்வுகள் அவனை வாட்டுகின்றன அந்த முற்றாத இரவைப்போல்.
Monday, June 23, 2025
இலக்கியமும் , புலம்பெயர் இலக்கியமும் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அது பற்றிய கருத்தும் பற்றி....
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் புலம்பெயர் இலக்கியம் பற்றிக் கூறுகையில் 'எழுத்திலே புலம்பெயர்ந்த எழுத்து புலம்பெயராத எழுத்து என்ற வகைப்பாடு கிடையாது. நல்ல எழுத்து, மோசமான எழுத்து என இரண்டு பிரிவுதான்.'' என்று கூறியிருந்ததாக ஒரு கூற்றினை முகநூலில் முகநூல் நண்பர்களில் ஒருவரான Kandasamy R பகிர்ந்திருந்தார். என்னைப்பொறுத்தவரையில் அவ்விதம் கூறுவதால புலம்பெயர் இலக்கியம் படைக்கும் ஒருவரைக் குறைத்து மதிப்பிடுவதாக, அவரை ஒரு பிரிவுக்குள் கட்டிப்போடப்படும் அபாயம் இருப்பதாக முத்துலிங்கம் அவர்கள் கருதுவதுபோல் தெரிகின்றது.
Sunday, June 1, 2025
'புலம்பெயர் தமிழ்ப் படைப்புகள் - அடையாளத்திற்கான தேடல்' - கலாநிதி சு.குணேஸ்வரன்
புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர் இலக்கியம் பற்றி ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர் கலாநிதி சு.குணேஸ்வரன். திறனாய்வு, கவிதை என அவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது. புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியவர்.
Friday, May 30, 2025
பிரவாதம்: எஸ்.வி.ராஜதுரையின் 'கூகியும் ஆபிரிக்க இலக்கியமும்'
பேராசிரியர் எம்.ஏ. நுஃமானை ஆசிரியராகவும், என்.சண்முகரத்தினம், சித்திரலேகா மெளனகுரு, செல்வி.திருச்சந்திரன் ஆகியோர் உள்ளடங்கிய ஆசிரியர் குழுவைக்கொண்டதாகவும் வெளியான சஞ்சிகையே 'பிரவாதம்'. அரையாண்டுச் சஞ்சிகையான இதன் தொகுதி 3 ஜனவரி - ஜூன் 2003இல் வெளிவந்தது. பிரவாதம் சமூக, விஞ்ஞானிகள் சங்கத்தால் வெளியிடப்பட்ட சஞ்சிகை.
மேற்படி தொகுதி 3 கூகி வா தியாங்கோ சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. சிறப்பிதழ் என்று பெயரிட்டிருக்காவிட்டாலும் அவ்விதமே அவரைப்பற்றிய கட்டுரைகள், அவரது எழுத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. கூகி வா தியாங்கோ பற்றியும், அவரது காலனியாதிக்கம், நவீன காலனியாதிக்கம் ஆகியவற்றுக்கான எதிர்ப்பிலக்கியம் பற்றியும், நவீன காலனியாதிக்கம் எவ்விதம் ஆபிரிக்காவைக் கூறு போட்டுத் தன் நலன்களைப் பேணுகின்றது என்பது பற்றியும், காலனியாதிக்க ஆதிக்கத்தின் மொழிகள் எவ்விதம் அடிமைப்படுத்தப்படும் நாடுகளின் மீதான ஆதிக்கத்தில் பங்காற்றுகின்றன என்பது பற்றியும் நல்லதோர் அறிமுகத்தைத் தரும் சிறப்பிதழாக மேற்படி தொகுதி 3 இதழ் வெளிவந்துள்ளது.
இக்கட்டுரையையும், கூகி வா தியாங்கோவின் எழுத்துகளையும் உள்ளடக்கிய மேற்படி இதழை வாசிக்க - https://noolaham.net/project/81/8021/8021.pdf
அஞ்சலி: எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்தார்.
எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்த செய்தியினை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். 'அழாதே, குழந்தாய்!' (Weep not Child), 'இடையிலுள்ள நதி' (The River Between) , 'ஒரு கோதுமைத் தானியமணி' ( a Grain of Wheat) , 'இரத்த இதழ்கள்" ( Petals of Blood), 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on the Cross ) ஆகியவை இவரது முக்கியமான நாவல்கள்.
Thursday, April 10, 2025
ஸ்டார் வெளியிட்ட Brand New Planet சிறுவர் பத்திரிகை!
என் மூத்த மகள் தமயந்தி எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சமய்ம் டொராண்டோவிலிருந்து வெளியாகும் டொராண்டோ ஸ்டார் பத்திரிகை Brand New Planet என்னுன் சிறுவர்களுக்கான பத்திரிகையை வாரந்தோறும் வெளியிட்டு வந்தது. அதில் அவர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அதற்கான ஊதியத்தையும் பத்திரிகை நிறுவனம் அனுப்பி வைத்துக்கொண்டிருந்தது, ஒரு தடவை அவரை வைத்துக் Cover Story செய்ய வேண்டுமென்று ஸ்டார் பத்திரிகை விரும்பியது. அதற்காக ஒரு புகைப்படக்காரரையும் அனுப்பி வைத்தது.
Saturday, March 15, 2025
கலைஞர் மு.கருணாநிதியின் தமிழ்மொழிப் பங்களிப்பு - குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா & திருக்குறள் உரை!
கலைஞர் மு.கருணாநிதியின் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா. திருக்குறள் உரை & சங்கத்தமிழ்த் தொகுப்புகளை அவரது முக்கிய தமிழ்மொழிப்பங்களிப்புகளாக நான் கருதுகின்றேன். இவற்றுடன் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து அவர் எழுதிய நாடகம், அதனையொட்டி வெளியான பூம்புகார் திரைப்படம் இவையும் முக்கியமானவை. பாடல்கள் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ்த் திரையுலகை வசனத்துக்குத் திருப்பியதில் கலைஞரின் வசனங்கள் முக்கியமானவை. பராசக்தி, மனோஹரா, ராஜாராணி & பூம்புகார் போன்ற திரைப்படங்களின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை.
அவர் ஆட்சியில் அமைத்த வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் அமைத்த வள்ளுவர் சிலை இவையும் முக்கியமான பங்களிப்புகள். இவை தவிர அவரது பல படைப்புகள் புனைகதைகளாக, அபுனைவுகளாக, நாடகங்களாக & திரைக்கதைகளாக வெளிவந்துள்ளன. ரோமாபுரிப்பாண்டியன், பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் - சங்கர் ஆகியவை முக்கியமான வரலாற்றுப் புனைவுகள். பல பாகங்களாக் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி சுயசரிதையும் முக்கியமான தொகுப்புகள்.
Friday, January 24, 2025
ஓவியர் மாயாவின் மாயாலோகம்!
எங்கள் பால்ய, பதின்ம வயதுகளில் எம் வெகுசன வாசிப்பு வெறி மிகுந்திருந்த காலத்தில் எழுத்தாளர்களைப்போல் அவர்களின் கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்த ஓவியர்களும் எம்மை மிகவும் கவர்ந்திருந்தார்கள். வினு, கோபுலு, மாருதி, வர்ணம், லதா, ஜெயராஜ், மாயா, கல்பனா, விஜயா என்று ஓவியர்களின் பட்டாளமேயிருந்தது. அவர்களில் மாயாவின் ஓவியங்களும் முக்கியமானவை. ஓவியர் மாயாவின் இயற் பெயர் மகாதேவன். ஜனவரி 22 அன்று தனது தொண்ணூற்றெட்டாவது வயதில் முதுமையின் காரணமாக ஓவியர் மாயா மறைந்த செய்தியினை அறிந்தபோது மாயாவின் ஓவியங்கள் சிந்தையில் நிழலாடின. என் பால்ய, பதின்மப் பருவத்து வாசிப்பு அனுபவத்தில் ஓவியர் மாயாவின் ஓவியங்களுக்கும் முக்கிய பங்குண்டு. அவரது வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டிய வாழ்வு.
Monday, January 20, 2025
புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!
கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -
இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...
.png)


.png)
.png)










