Showing posts with label நூல் அறிமுகம். Show all posts
Showing posts with label நூல் அறிமுகம். Show all posts

Sunday, December 10, 2023

(பதிவுகள்.காம்) ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - என்.கே.மகாலிங்கம் -


அண்மையில் நடந்த எனது மூன்று நூல்களின் வெளியீட்டில் வெளியான கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' நூலுக்கு எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் எழுதிய விமர்சனக் குறிப்பு. உடல் நிலை காரணமாக அவரால் அன்று அந்த நிகழ்வுக்கு வரமுடியவில்லை. அதுவரை எழுதி வைத்திருந்த குறிப்பினை அனுப்பியிருந்தார். அதனை நிகழ்வில் தலைமை வகித்த எழுத்தாளர் பா.அ.ஜயகரன் வாசித்தார். - வ.ந.கிரிதரன் -

ஒரு நகரத்து மனிதனின் பாடல் என்பது தான் இவர் இந்தத் தொகுதிக்கு வைத்த பெயர். ஆனால் எப்படியோ அது ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. (உண்மையில் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் பெயரில்தான் எழுதியிருந்தேன். காரணம் இக்கவிதை நகரமயமாதலால் ஏற்படும் சூழற் பாதுகாப்பு பற்றிய ஒருவனின் புலம்பல் என்பதால். - வ.ந.கிரிதரன் -)

இது இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. முதல் தொகுதி எழுக அதிமானுடா 1992 இல் வெளிவந்திருக்கிறது. அது எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. ஆனால் எழுக அதிமானுடா என்பது எனக்கு பேர்ணாட் ஷா வின் மான் அன்ட் சுப்பர்மான் என்ற நாடகத்தையும் கடவுள் இறந்து விட்டார் என்று கூறிய பிரெடிரெக் நீட்ஷேயின் அதிமானிடனையும் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. அவை டாவினின் உயிர் பரிணாம வளர்ச்சியில் நிகழும் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் இருக்கலாம். அரவிந்தரின் பேரறிவு நிலையாகவும் இருக்கலாம்.

Saturday, November 25, 2023

வ.ந.கிரிதரனின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா! - குரு அரவிந்தன் -

சென்ற ஞாயிறு கனடாவில் நடைபெற்ற எனது மூன்று நூல்கள் வெளியீடு பற்றி எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய நிகழ்வுக் குறிப்பினை ஈழநாடு வாரமலர் தனது நவம்பர் 26, 2023 பதிப்பில் வெளியிட்டுள்ளது. குரு அரவிந்தனுக்கும், ஈழநாடு நிறுவனத்துக்கும் எனது நன்றி.
 

 
 
 

Friday, November 24, 2023

வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலை முன் வைத்து.... - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -


- அண்மையில் நிகழ்ந்த வ.ந.கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சிவா முருகுப்பிள்ளை  (ஈஸ்வரமூர்த்தி) ஆற்றிய உரையிது. -


மூன்று விதமான அறிமுகங்களாக  என் பேச்சை ஆற்றலாம் என்றுள்ளேன்.  புத்தக வெளியீட்டின் அழைப்பிதழில் அறிமுகம் என்றாக சொல்லப்பட்டிருப்பதால் அறிமுகம் என்ற விடயத்திற்குள் அதிகம் எனது பேச்சைச்  சுருக்க விரும்புகின்றேன். ஆனால் இதற்குள் சிறிய அளவில் புத்தகம் பற்றிய எனது பார்வையை எனது வாசிப்பின் அடிப்படையில் இணைக்கின்றேன். முதலில்  அது என் அறிமுகம் , புத்தக ஆசிரியர் வந கிரிதரன் பற்றிய அறிமுகம் , இறுதியாக புத்தகம் பற்றிய அறிமுகமாக இருக்கும்.

முதலாவதாக என்னைப் பற்றிய அறிமுகம்.  இலக்கியம் என்பதற்கு எனக்கு வரவிலக்கணம் தெரியாது.  கபொத சாதாரண தர  வரையில் தமிழை ஒருபாடமாக கற்று இறுதிப் பரிட்சையில் மிகக்குறைந்த சாதாரண சித்தியை மட்டும் பெற்றவன். மக்களே என் ஆசான்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை அனுபவங்களே எனக்கான வழிகாட்டி. இவற்றின் அடிப்படையில் எனது தாய் மொழில் எழுதுகின்றேன் மேடைகளில் பேசுகின்றேன் கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றேன். மக்களிடம் இருந்து கற்றவையை செழுமைப்படுத்தி மக்களின் மன்னேற்றத்திற்காக அவர்களிடமே அதனை சமர்பிக்கின்றேன் . நான் கற்றலுக்குத் தயாராக இருக்கும் மாணவன்தான்.

Monday, November 6, 2023

வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றிய ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -


எழுத்தாளரும், இலக்கியத் திறனாய்வாளருமான ரஞ்ஜனி சுப்ரமணியம்   அண்மையில் ஓவியா (தமிழகம்)  பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றிச் சிறப்பானதொரு விமர்சனத்தை எழுதியிருக்கின்றார். அவருக்கு என் நன்றி.  பதிவுகள் இணைய இதழில் வெளியான அவ்விமர்சனத்தை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.



அகவயமான வாசிப்பினை வேண்டுவதே இலக்கியம். எனினும் புற உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப அமைப்பாலும் உட்பொருளாலும் மாற்றம் காண்பது தவிர்க்க முடியாதது. மனிதகுலமே கூர்ப்பின் வழி இன்றிருக்கும் வடிவில் வந்திருக்கும் போது, இலக்கிய வடிவங்களும் அதன் இலக்கணங்களும் மாறக்கூடாது எனக் கூறமுடியுமா?

'இலக்கியம் ஒரு யானை . நம்நாட்டு இலக்கியவாதிகள் தமக்குள் குழுக்களாகப் பிரிந்து தாம் சொல்வதுதான் சரியென, யானை பார்த்த அந்தகர் போல வாதிட்டுக் கொண்டு இருக்கின்றனர்' என்கிறது நாவலில் வரும் உரையாடல் ஒன்று. உண்மை. எல்லைகள் அற்றதே இலக்கியம்.

'இலக்கியம் சமுதாய பயன் கொண்டதாக அமைய வேண்டிய அதேசமயம் அது எழுத்தின் கலைத்துவத்தை சிதைத்து விடவும் கூடாது' எனும் கருத்தும் நாவலில் கூறப்பட்டுள்ளது.

Monday, October 23, 2023

(பதிவுகள்.காம்) மராட்டிய எழுத்தாளர் சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி"யின் அடையாளங்களைத் தேடி... - புதியமாதவி, மும்பை -


மராட்டிய எழுத்தாளர் சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி" பற்றி , பதிவுகள் இணைய இதழில் 2008இல் வெளியான கட்டுரை. 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஆவணப்படுத்தும் பொருட்டு மீள்பிரசுரமாகின்றது.


நான் சபிக்கிறேன்
உன்னை
உன் எழுத்துக்களை
உன் கலாச்சாரத்தை
உன் வேஷத்தை..  
( நாம்தேவ் தசள் - கோல்ப்பிதா கவிதைகளிருந்து)

மராட்டிய மாநிலத்தில் ஒரு புதிய அலை இதுவரை எழுதப்பட்டிருந்த இலக்கியத்தின் பக்கங்களைப் புரட்டி, இதுவரை நிறுவப்பட்டிருந்த சமூகத்தின் அடையாளங்களை வீசி எறிந்து ஒரு கோட்டோவியத்தை வரைந்தது. 1960களில் ஏற்பட்ட சிறுபத்திரிகைகளின் வளர்ச்சி, மும்பையில் தொழில்மயம், அந்தத் தொழில்மயத்தில் எழுந்த புதிய தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்கங்கள், அதுசார்ந்த மார்க்சிய சிந்தனைகள் இந்தப் பின்புலத்தில் 1972ல் தலித் பைந்தர் அமைப்பு .. என்று தொடர் அலையாக எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். அந்தக் குரலைப் பதிவு செய்திருக்கும் தலித் இலக்கியங்கள். அதிலும் குறிப்பாக 1980களில் தலித் எழுத்தாளர்களின் 'தன் வரலாற்று" பாணியிலான தலித் வரலாறு மார்க்சிய சிந்தனைகளையும் சேர்த்தே புரட்டிப் போட்டது.

தலித் எழுதாளர் தயாப்வாரின் "பலுட்டா " -சமூக உரிமை (1978) லஷ்மண் மானேயின் " யுபரா"- அந்நியன் (1980) லஷ்மண் கெய்க்க்வாட்டின் "யுசல்ய -அற்பத்திருடன் (1987) பெண் தலித் எழுத்தாளர் பேபி காம்ப்ளேயின் 'ஜின் அமுச்" (இப்படியாக எங்கள் வாழ்க்கை) இவை அனைத்தும் தலித் தன் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடத்தக்கன. இக்காலக்கட்டத்தில் வெளிவந்த சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி" வெளிவந்தவுடன் மிகவும் பேசப்பட்ட ஒரு பதிவு. அக்கர்மஷி என்றால் ஜாதிபிரஷ்டம் செய்யப்பட்டவன் - THE OUTCASTE என்று பொருள். ஜாதிகளால் விலக்கிவைக்கப்பட்டவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

Tuesday, September 19, 2023

(பதிவுகள்.காம்) அமெரிக்கா - ஞானம் இலம்பேர்ட் -


எனது  'அமெரிக்கா' (1996) சிறுகதைத்தொகுப்பு பற்றி 'டொரோண்டோ, கனடாவில் ஒர் இலக்கியக் கலந்துரையாடல் , தேடகம் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்ணூறுகளில் நடைபெற்றது. அதில்  கலந்துகொண்டு 'அமெரிக்கா' பற்றி உரையாற்றிய நாடகவியலாளரும் , கலை, இலக்கியத்திறனாய்வாளருமான ஞானம் இலம்பேட்டின் உரையின் முக்கிய பகுதிகள் இவை.  பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரை. பகிர்ந்துகொள்கின்றேன்.


சமூக நிகழ்வுகளை ஒரு தளத்தில் வைத்து அந்த நிகழ்வுகளுக்கு ஓர் உருவம் கொடுப்பதிலும், அவற்றைப் பல்லின ஆக்கங்கள் செய்வதிலும் எமக்குப் பெரும் பங்குண்டு.  அந்த நிகழ்வுகளுக்குக் கொடுத்த உருவம்தான் இந்த அமெரிக்கா என்ற இச்சிறு நூலாகும்.  இதிலுள்ள ஏழு சிறுகதைகளையும், குறுநாவலையும்  படிக்கிறபொழுது Georgi Plekhanov இன் ஒரு கூற்று ஞாபகத்துக்கு வருகின்றது.  அவர் சொல்கிறார்:

"மனிதன் தன்னைச் சுற்றியுள்ள யதார்த்தத்தின் செல்வாக்கில் அனுபவித்துள்ள உண்ர்ச்சிகளையும், எண்ணங்களையும் தனக்குள் மீண்டும் எழச்செய்து அவற்றைத் திட்டவட்டமாக உருவங்களில் வெளியிடும்போது கலை பிறக்கிறது"

Tuesday, August 15, 2023

(பதிவுகள்.காம்) வ.ந. கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -


- எழுத்தாளரும் , கலை, இலக்கிய விமர்சகருமான ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்களின்  வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' பற்றிய விரிவான பார்வையிது. பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது. -


இயற்கையின் பேரழகில் தன்னை இழக்கும் ஒரு கலைஞன் சமகாலத்தில் அறிவுஜீவியாக பேரண்ட இரகசியங்களோடு சார்பியல் பற்றியும் கவி படைக்கையில் நிஜமாகவே ஆச்சரியத்தில் உறையுமொரு வாசகியின் வியப்பு மிகுந்த ரசனைக் குறிப்பிது. நவீன இயற்பியலின் தந்தையான விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் நனவுலக மாணவனாக காலவெளி, மானுட இருப்பு, காலம் ,நேரம், பரிமாணம் என அறிவுணர்வின் தேடலுடன் அலையும் இக்கவி, காணும் இடமெங்கும் கண்ணம்மாவுடன் கதை பேசும் மகாகவியின் கனவுலக ரசிகருமாவார்.

 இக் கவிஞரை, 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் கவிதைத் தொகுதியூடாக முறையாக இனம் கண்ட வாசகர் எந்த விதத்திலும் வியப்படையத் தேவையில்லை. வ.ந.கிரிதரன் அவர்களின் இத்தேடல் உணர்வையும், ஏக்கத்தையும் பிரபஞ்சத்தின் மேல் கொண்ட பிரியத்தையும் அவரது படைப்புகளில் அடிக்கடி காணக் கூடியதாக இருக்கும்.

இக்கவிதைத் தொகுப்பினை வாசிப்பதற்கு முன் இயற்கை பற்றியும் நவீன இயற்பியல், சார்பியல், அண்டம், குவாண்டம், ஒளியாண்டு பற்றிய எளிய அறிதலையேனும் பெற்றுக் கொண்டால் இப்படைப்பினை வியந்து நோக்கலாம். பிரமிப்பை அடையலாம். இல்லாவிடில் 'நகரத்து மனிதனின் புலம்பலாகவே ' அமைய நேரிடலாம்.

மரபுக்கவிதையின் இலக்கணங்களோ அன்றி புதுக்கவிதையின் அழகுகளான படிமம், குறியீடு, தொன்மம் பற்றியோ கவிதைக்குள் உணரப்படும் மீமொழி பற்றியோ தெளிவான அறிவற்ற ஒரு வாசகியின் மழலைமொழி இதுவென முதலில் கூறிக்கொள்ள வேண்டும். எனினும் 'உளப்புயல்கள் வீசியடிக்கும் போது, அகக்கடலில் படகுகளாயிருந்து நினைவுச் சுழலுக்குள் சிக்கும்' ஒரு கவிஞனின் உணர்வுகளை மாற்றுக்குறையாமல் உள்வாங்கும் உளப்பாங்கு வாய்த்திருப்பதில் மகிழ்வும் கொள்கிறேன்.

Friday, August 11, 2023

சீர்காழி தாஜின் "தங்ஙள் அமீர்'! - வ.ந.கிரிதரன் -


அமரர் சீர்காழி தாஜ் என்னைப்பொறுத்தவரையில் மறக்க முடியாத ஓர் இலக்கிய ஆளுமை.  அவர் இவ்வளவு விரைவாக எம்மை விட்டுப் போய் விடுவார் என்பதை நான் நினைத்தும் பார்த்ததில்லை. தொடர்ந்தும் எழுத்தில் பல உச்சங்களைத் தொடுவார் என்று நினைத்திருந்த வேளையில் அவர் மறைந்து விட்டார்.  2019இல் அவர் மறைந்த போது அவர் மறைவதற்கு முதல் நாளும் முகநூலில் எழுதிக்கொண்டிருந்தார்.  மறுநாள் அவர் மறைவுச் செய்தியை அறிந்தபோது நம்புவதற்கே முடியாமலிருந்தது. அவரை நான் ஒருபோதும் சந்திக்கவேயில்லை. அது இன்னும் துயரைத்தந்தது.

மீண்டுமொரு தடவை சிந்தனைக்குருவி தன் சிறகுகளை அடிக்கின்றது.  நண்பர் தாஜை முதன் முதலில் அறிந்த காலகட்டம் நினைவுக்கு வருகின்றது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா (தொகுப்பு) மற்றும், மறும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூல்களைத் தமிழக நூல் நிலையக் கிளையொன்றில் கண்டு, வாசித்துவிட்டுத் தன் கருத்துகளை ஆக்கபூர்வமான முறையில் நீண்ட இரு கடிதங்களாக எழுதி அனுப்பியிருந்தார். பின்னர் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுகு ஆனையொன்றிருந்தது' நூலினைக் கனடாவில் வசிக்கும் தனது நண்பர் ஒருவர் மூலம் அனுப்பிருந்தார்.

Monday, July 31, 2023

ஆசி.கந்தராஜாவின் 'அகதியின் பேர்ளின் வாசல்' - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் ஆசி.கந்தராஜாவின் 'அகதியின் பேர்லின் வாசல்' படித்தேன்.  நிச்சயமாகப் புகலிடத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக ஆஸ்திரேலியத்  தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்புகளில் ஒன்றாக இதனைக் கூறலாம்.  இந்த நாவலின் களங்கள் , நான் இதுவரை வாசித்த புகலிட நாவல்களில் வாசிக்காத களங்கள்.  எழுபதுகளின் இறுதியில்  , ஜே.ஆர்.பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அறிவித்து, பிரிகேடியர் வீரதுங்காவை யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாக அனுப்பி, அவ்வருடத்தின் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்கும்படி கட்டளையிட்டதிலிருந்து இலங்கைத்தமிழர்கள் மேல் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இன்பம், செல்வம் கொல்லப்பட்டதுடன் ஆரம்பமாகிய படுகொலைகள் தொடர் ஆரம்பித்தன.

அக்காலகட்டத்தில் தமிழ் இளைஞர்கள் அதிக அளவில் மேற்கு ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கத்தொடங்கினார்கள். பூங்காக்கள் சிலவற்றில் பியர் போத்தலுடன் காணப்பட்ட தமிழ் அகதிகளைப்பற்றிய செய்திகளை ஊடகங்கள் சில பிரசுரித்தன.நினைவுக்கு வருகின்றது. அக்காலகட்டத்தில் ருஷ்யாவின் 'ஏரோஃபுளெட்'டில் அகதிகள் கிழக்கு ஜேர்மனியூடாக மேற்கு ஜேர்மனிக்குச் சென்றதை அனைவரும் அறிந்திருந்தனர். இந்நாவல் கிழக்கு ஜேர்மனியூடு ஏன் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகப் படையெடுத்தார்கள் என்பதை விபரமாக விபரிக்கின்றது.  அக்காலத்தில் உலகில் நிலவிய குளிர்யுத்தச் (Cold War)சூழல் காரணமாகக்  கிழக்கு ஜேர்மனிக்குள் இருந்த  பேர்லின் நகர் இரண்டாகக் கிழக்கு பேர்லின், மேற்கு பேர்லின் என்று  பிளவுண்டிருந்த சூழல் எவ்விதம் இலங்கைத் தமிழ் அகதிகள் மேற்கு ஜேர்மனிக்குள் நுழைய வழி வகுத்தது என்பதை நாவல் கூறுகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் மேற்கு நாடுகளுக்கும் , சோவியத் குடியரசுக்குமிடையில் உருவான 'பொட்ஸ்டம்'  (Potsdam) ஒப்பந்தம் எவ்விதம் இவ்விதச் சுழலை உருவாக்கியது என்பதை அனைவருக்கும் புரிய வைக்கின்றது.

Monday, January 16, 2023

அடையாளம் குறித்த தேடல்: வ.ந. கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ - ஒரு பார்வை! - முனைவர் சு. குணேஸ்வரன் -


- இலக்கியவெளி சஞ்சிகையின் சிறுகதைச் சிறப்பிதழில் வெளியான கட்டுரை. 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத் தொகுப்பு (2021)  நூலினை வெளியிட்டது ஜீவநதி பதிப்பகம், கலை அகம், அல்வாய், இலங்கை. -


வ.ந கிரிதரன் கனடாவில் வாழ்ந்து வருகிறார். புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகளில் ஒருவர். இலக்கியத்துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். பதிவுகள் இணைய இதழின் ஊடாக உலகில் வாழும் தமிழ்ப்படைப்பாளர்களின் படைப்புக்களை குவிமையப்படுத்தி வருகிறார். அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ பற்றி இக்கட்டுரை நோக்குகின்றது.

மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகள் 80 களிலிருந்து தாயகம் சார்ந்தும் போரால் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் சார்ந்தும் இதுவரை அதிகமாக எழுதி வந்தார்கள். அந்தப் பொருண்மையில் அண்மைய புலம்பெயர் படைப்புக்கள் கணிசமான அளவு மாற்றங்களைக் கண்டுள்ளன. புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் வாழ்வனுபவங்கள் அந்த மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. வ. ந. கிரிதரனின் இத்தொகுப்பு, அடையாளம் குறித்த கேள்விகளையும் ஈழத்தமிழர் மாத்திரமன்றி ஒடுக்குதலுக்குள்ளாகிய வேற்று நாட்டவர்கள் அகதிகளாக வாழ்வது பற்றியும் புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் மத்தியில் இருக்கக்கூடிய உளவியற் சிக்கல்கள் பற்றியும் அதிகம் கவனத்தில் கொண்டிருக்கின்றது. இந்தப் பொருண்மை மாற்றங்களைப் படிப்படியாக ஏனைய எழுத்தாளர்களும் பதிவு செய்து வருகின்றனர். இவ்வகையில் கிரிதரனின் கதைகள் சர்வதேசியத் தளத்தில் நிற்கும் மனிதன் ஒருவனின் புகலிட வாழ்வனுபவம் சார்ந்த பார்வையாக விரிவடைந்துள்ளது.

அடையாளம் குறித்த கதைகள்

அடையாளம் குறித்தவற்றில் மனிதமூலம், Where are you from?, நீ எங்கிருந்து வருகிறாய், ஆபிரிக்க அமெரிக்க கனேடியக் குடிவரவாளன், யன்னல் ஆகிய சிறுகதைகளை இனங்காணலாம். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எனது உணர்வுகள் மதிக்கப்படுகின்றனவா? நானும் மனிதனாக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றேனா? முதலான வினாக்கள் இக்கதைகளில் இழையோடுகின்றன. இற்றைக்கு மில்லியன் கணக்கான மக்கள் உலக நாடுகளில் நாடிழந்து அகதிகளாகவும் நாடோடிகளாகவும் வீடற்றவர்களாகவும் வாழ்கின்றனர். அவர்களின் உணர்வுகளைப் பதிவு செய்யும் விதமாக மேற்கூறிய சிறுகதைகள் அமைந்துள்ளன.

Thursday, January 12, 2023

சிங்கிஸ் ஐத்மாத்தாவின் 'அன்னை வயல்'! - வ.ந.கிரிதரன் -



அளவில் சிறியதான இந்த நாவல் கிடைத்ததுமே முதலில் வாசித்தேன். தல்கோனை என்னும் முதிய பெண் வயலுடன் பேசுவதாக ஆரம்பிக்கும் நாவல், முடிவில் அவ்வயலிடமிருந்து அவள் பிரியாவிடை கூறுவதுடன் முடிகிறது. இதற்கிடையில் அவள் அதுவரை காலத்துத் தன் வாழ்வை பகிர்ந்துகொள்கின்றாள். சிறுமியாக, யுவதியாக, மனைவியாக, தாயாக, மாமியாக, பாட்டியாக என அவளது வாழ்வின் அனைத்துப் பருவச் சம்பவங்களையும் விபரிக்கின்றாள். எவ்விதம் ஜெர்மனியருடனான போர் அவர்கள் வாழும் கிராமத்து மனித வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றது என்பதை விபரிக்கும் நாவல் போர்ச் சூழலில் வாழ்ந்த அனைவருக்கும் தம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.

சிறிய நாவலில் இயற்கையுடன் ஒன்றிய மானுட வாழ்வு எவ்விதம் பல்வகை இடர்களுக்குள்ளாகிறது என்பதை நெஞ்சைத்தொடும் வகையில் ,அதிர வைக்கும் வகையில் விபரிக்கப்படுகின்றது. பாசம், காதல் போன்ற மானுட உணர்வுகளையெல்லாம் போர் எவ்விதம் சிதைத்து விடுகின்றது.

Sunday, December 25, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம்  (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்!


"கண்ணம்மா, எதற்காக இங்கு வந்து பிறந்தோம்?"   திடீரென  நான் கேட்கவே   மனோரஞ்சிதம் சிறிது திடுக்கிட்டுப் போனாள்.

"என்ன கண்ணா? உனக்கு என்ன நடந்தது? ஏனிந்தக் கேள்வி? அதுவும் இந்தச் சமயத்தில்" என்று கேட்கவும் செய்தாள்.  அத்துடன் என் தோள்களைப் பிடித்துக் குலுக்கினாள்.

"கண்ணம்மா, எனக்கு அடிக்கடி வரும் கேள்விதான். இதிலொன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லையே. நீ இவ்விதம் திடுக்கிடுவதுதான் வியப்பைத் தருகிறதடீ"

"கண்ணா, சில விடயங்களில் கேள்வி கேட்கக் கூடாது. இருப்பின் இரகசியமும் அவற்றிலொன்று"

'கண்ணம்மா, எனக்கு அதில் உடன்பாடில்லை. கேள்வி கேட்பது பகுத்தறிவு படைத்த மனிதரின் பிரத்தியேக உரிமை. எப்பொழுதும் பாவிக்க வேண்டிய உரிமை. இருப்பிலொரு தெளிவினை அடைதற்கு இவ்விதமான கேள்விகள் அவசியமில்லையா கண்ணம்மா?"

Tuesday, November 22, 2022

- எழுத்தாளர் ரஞ்ஜனி  சுப்ரமணியம் சிறந்த கலை, இலக்கியத் திறனாய்வாளராகவும் அறியப்படுபவர். அவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மற்றும் 'குடிவரவாளன்' நாவல்களைப்பற்றி எழுதிய திறனாய்வுக் கட்டுரை இது.

**********************************************************

(பதிவுகள்.காம்)  ஆய்வு: வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' ,  'குடிவரவாளன்' நாவல்கள் - ஒரு நோக்கு! - ரஞ்ஜனி  சுப்ரமணியம் -

ஒரு அகதியின் வாழ்வும் உணர்வுகளும் அவனாக வாழ்ந்தாலன்றி புரிந்து கொள்வது சிரமமானது. கடந்த சில  தசாப்தங்களில் முன்னேற்றமடைந்த மேற்கு நாடுகளில் தஞ்சம் கோரிய  எம்மவர்களின் பயண மற்றும் வாழ்வியல் அவலங்கள், தாயகத்தில் இருக்கும் உறவுகளால் சரியான விதத்தில் மனம் கொள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான பதில் இன்றளவும் 'இல்லை'  என்பதாகவே அமையும். இத்தகைய   ஒரு சூழ்நிலையில் தனது புலம்பெயர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தரமான  படைப்பாளி  தன்னிலை ஆறுதலை மட்டுமல்ல, தனது அனுபவப் பதிவுகளின் மூலம் அகதி வாழ்வின் கொடூரமான மறுபக்கத்தை வாசகருக்காகவும் வரலாற்றுக்காகவும் விட்டுச் செல்கிறான்.  வ.ந. கிரிதரன் அவர்களின் அமெரிக்கா (முதற்பதிப்பு 1996  இரண்டாம் பதிப்பு 2019), குடிவரவாளன் ( 2015) ஆகிய இரு நாவல்களும் இவ்விடயத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இவ்விரு நாவல்களின் ஆசிரியரான வ.ந.கிரிதரன்  அவர்களது  எழுத்தின் இயல்புகளை, படைப்புகளினூடாக வெளிப்படும் பொதுப்பண்புகளால்   இனங்காண முடியும். தாய் மண்ணின் சாயம் போகாத நினைவுகளுடன் வாழ்பவர் ; வரலாற்றை ஆராய்ந்து அறிபவர் ; கவித்துவமான சிந்தனைகளைஉடைய இயற்கையின் ரசனையாளர்; வாழ்வியலை  தத்துவரீதியாகவும் பிரபஞ்ச சார்புத் தன்மையுடன் அர்த்தப்படுத்துபவர் ;  சஞ்சலமுற்ற நேரங்களில் பாரதியின் கவிதைகளால் புத்துயிர் பெறுபவர் ; தன்னிமிர்வும் பன்முக வியாபகமும் கொண்ட சிந்தனையாளர் ; வித்தியாசமான நடையுடன் கூடிய எழுத்தாளர்.இவரது எழுத்தின் போக்கினை உணர்ந்து நாவலுக்குள் உள்நுளையும் ஒருவரால் அதிக ரசனையும் புரிதலும் கொள்ள முடியும் என்பது உண்மை.

கனடாவிற்கான தன் பயணப் பாதையில் இடைமாறலுக்காக, சட்டபூர்வமாக  அமெரிக்காவின் பொஸ்டன் விமான நிலையத்திற்கு வரும் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால்  அகதி அந்தஸ்து கோர வேண்டிய  நிலைக்குத் தள்ளப்படுகிறான். இச்சந்தர்ப்பத்தில், ஜனநாயகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் உலகின் மாபெரும் வல்லரசொன்றின் கருணையற்ற இருண்ட  பக்கங்களையும் மனோரீதியான சித்திர வதைகளையும் விலாவாரியாக வெளிச்சமிட்டுக் காட்டுவதே  படைப்பாளியின் நோக்கம். அதில் பெருவெற்றியும் பெற்றுள்ளார்.

அக்கரைப் பச்சையாக மாயத் தோற்றம் தரும்  விடயங்கள் நிஜத்தில்  அவ்வாறல்ல என்ற புரிதல் இவ்விரு நாவல்களையும் வாசிக்கும் போது தோன்றியது. இலங்கை போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்களும், மூடிமறைப்புகளும், சட்ட மீறல்களும் சகஜமானவை என்பது பொதுவான அபிப்பிராயம். வியப்பேதும் இல்லை.  ஆனால் 'உலகின் பொலிஸ்காரன்' என்ற  நிலையைக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலும் இவ்வாறான  நிகழ்வுகள் தவறான புரிதல்களினால் இடம்பெறுகின்றன என்பது வியப்புக்குரியது.

 எண்பத்து மூன்று இனக்கலவரத்தின் பின் ஆரம்பமாகும் இவ்விரு நாவல்களும் பிரதான கதாபாத்திரமான இளங்கோ என்ற இளைஞனின் பார்வையில் கூறப்பட்டுள்ளன.  படித்தவர்களும் உயர் பதவியில் இருந்தவர்களும் உயிர்ப்பாதுகாப்பு கருதி புலம் பெயரத் துணியும் ஒரு சூழ்நிலை. பொதுநலவாய நாடுகளில் ஒன்றான இலங்கையில் இருந்து கனடாவிற்குச் செல்வதற்கு விசா எடுக்கத் தேவையில்லை என்ற   அனுகூலத்தைப் பாவித்து, பாரிஸ் நகருக்கும் அங்கிருந்து பொஸ்டன் ஊடாக கனடாவின் மான்ரியாலுக்கும் செல்ல உத்தேசித்திருக்கும் இளங்கோ உட்பட்ட ஐவரை, பொஸ்டனில் இருந்து கனடாவின் மன்றியேல் நகருக்கு ஏற்றிச் செல்ல நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக டெல்டா விமான நிர்வாகம் மறுத்து விடுகிறது. இதனால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படுவதைத் தடுப்பதற்காக பொஸ்டனில் அகதி அந்தஸ்து கோரும் நிலைக்கு  ஐவரும் தள்ளப்படுகின்றனர். பொஸ்டனில் இருந்து நியூயோர்க்குக்கு கொண்டு செல்லப்பட்டு சிறைக் கூடத்தில் தடுப்புக் கைதிகள் ஆக்கப்படுகின்றனர்.

Friday, March 13, 2020

முனைவர் ஆர்.தாரணியின் கட்டுரையொன்று பற்றி... வ.ந.கிரிதரன் -


எனது நாவலான தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான  'குடிவரவாளன்' நாவல் பற்றி பற்றி முனைவர் ஆர்.தாரணி ‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' ('சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை') என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே எனது படைப்புகள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைக் கருத்தரங்குகளில் சமர்ப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் என் படைப்புகளை அறிந்துகொண்டது இணையத்தின் மூலமாகவே என்பது இணையத்தின் ஆக்கபூர்வமான நன்மையொன்றினை வெளிப்படுத்துகின்றது. அக் கட்டுரையின் முக்கியமான என்னால் தமிழாக்கம் செய்யப்பட்ட பகுதிகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். நாவலினை நன்கு உள் வாங்கித் தன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி.

இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'An Immigrant' (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) நாவலைத் தனது புகலிட இலக்கியங்கள் பற்றிய பிரிவுக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வு செய்திருந்த விடயத்தினை இணையம் வாயிலாக அறிந்துள்ளேன். குடிவரவாளன் நாவல் ஆங்கிலத்தில் 'An Immigrant' என்னும் தலைப்பில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' ('சுயசரிதைத் தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை') -  முனைவர் ஆர்.தாரணி; தமிழில்: வ.ந.கிரிதரன்  - 

'குடிவரவாளன்' கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப் பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும்  போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப் படுகொலையினைத் தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது.  நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில்  , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ  அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.

Wednesday, March 4, 2020

கணையாழி: 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை' - வ.ந.கிரிதரன் -

2020 மார்ச் மாதக் கணையாழி இதழில் எனது கட்டுரையான 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை' நாவல் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது . கூடவே நண்பர் கே.எஸ்.சுதாகரின் 'தலைமுறை தாண்டிய தரிசனங்கள்' சிறுகதையும் வெளியாகியுள்ளது. எனது கட்டுரையின் பக்கங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

இதுவரை கணையாழி சஞ்சிகையில், தொகுப்பு நூலில் வெளியான எனது ஏனைய படைப்புகள்:
1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை
மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
3. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்- (கணையாழி மே 2012)
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7. கணையாழி செப்டம்பர் 2017: கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயின் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -

Saturday, October 12, 2019

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக, பிடிஃப் வடிவத்தில் வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு:

 

1983 இலங்கை இனக்கலவரத்தைத்தொடர்ந்து , பிறந்த மண்ணை விட்டுப் புகலிடம் நாடிக் கனடா புறப்பட்ட வேளை, வழியில் பாஸ்டன் நகரிலிருந்து கனடாவின் மான்ரியால் நகருக்கு ஏற்றிச்செல்ல வேண்டிய 'டெல்டா ஏர் லைன்ஸ்' நிறுவனம் எம்மை ஏற்றிச் செல்ல மறுத்து விடவே, அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் எம்மை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்துவதில் மும்முரமாகவிருந்தார்கள். அதிலிருந்து தப்புவதற்காக அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கோர வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து சுமார் மூன்று மாதங்கள் வரையில் நியூயார்க் மாநகரிலுள்ள புரூக்லின் நகரிலுள்ள தடுப்பு முகாமொன்றினுள் அடைத்து வைக்கப்பட்டோம். அக்காலகட்ட அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணத்தின் விளைவே எனது நாவலான 'அமெரிக்கா'. அளவில் சிறியதானாலும் இந்நாவல் ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதன் முதலில் புகலிடம் நாடிச்சென்ற இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்களை விபரிக்கும் நாவல் இதுவேயென்பேன். இந்நாவல் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக மற்றும் கனடா மங்கை பதிப்பக வெளியீடாக மேலும் சில சிறுகதைகளையும் உள்ளடக்கி வெளியானது. இதன் தொடர்ச்சியாக இந்நாவலின் நாயகன் இளங்கோவின் நியூயோர்க் மாநகரத்து அனுபவங்கள் 'குடிவரவாளன்' என்னும் நாவலாகத் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியானது.

Friday, October 11, 2019

ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி! - வ.ந.கிரிதரன் -



புகலிடத் தமிழ் நாவல்களில் உலக இலக்கியத்துக்கு வளம் சேர்த்த புனைவுகளில் ஒன்றாக நிச்சயம் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' படைப்பினைக் கூறுவேன்.

ஒரு நல்ல படைப்பானது தனது மறு வாசிப்புகள் மீதான ஆர்வத்தினை எப்பொழுதும் தூண்டிக்கொண்டேயிருக்கும். . ஒவ்வொரு வாசிப்பிலும் அது புதியதோர் அனுபவத்தினைத் தருமொன்றாக அமைந்திருக்கும். அவ்வகையான புனைவுகளிலொன்றுதான் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' நாவலும்.

முழுக்க முழுக்கப் புகலிட அனுபவங்களையே மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்கள் குறைவு. எனது 'அமெரிக்கா' , 'குடிவரவாளன்' ஆகியவை அவ்வகையானவை. இளங்கோ என்னும் இலங்கைத் தமிழ் அகதியின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வையும், அதன் பின்னரான நியூயார்க் மாநகரில் அவனது இருப்புக்கான போராட்டத்தினையும் விபரிக்கும் நாவல்கள் அவை. ஆனால் அவற்றில் கூட பிறந்த மண்ணின் சமூக, அரசியல் நிலைமைகள் விபரிக்கப்படுகின்றன. ஆனால் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் புகலிட வாழ்வினை முழுமையாக விபரிக்கும் நாவல். நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை'யும் புகலிடத் தமிழர்தம் வாழ்வினை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல்களிலொன்று.

Monday, March 19, 2018

அமரர் செங்கை ஆழியான் நினைவாக.... வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் செங்கை ஆழியான் இன்று மறைந்ததாக முகநூல் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். அண்மையில் எழுத்தாளர் முருகபூபதியின் பதிவொன்றில் செங்கை ஆழியான் உடல்நலமிழந்து இருந்த விபரத்தை அறிந்தபோது அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென வேண்டி முகநூலில் பதிவொன்றினையிட்டிருந்தேன். அது தவிர அவர் பற்றி அவ்வப்போது வேறு சில பதிவுகளையும் முகநூலில் இட்டிருக்கின்றேன். அப்பதிவுகள் செங்கை ஆழியான் எவ்விதம் என் இளம் பருவத்தில் என்னைப்பாதித்தார் என்பதை வெளிப்படுத்தும் பதிவுகள் என்பதாலும், அவை அவரது பன்முக இலக்கியப்பங்களிப்பினைப் புலப்படுத்துவதாலும், அவற்றைத்தொகுத்து என் அஞ்சலியாக இங்கு பதிவிடுகின்றேன்.

ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் செங்கை ஆழியானுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. ஈழநாடு சிறுகதைகள், மறுமலர்ச்சி சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள் போன்ற தொகுப்புகளை வெளியிட்டதன் மூலம், ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகினை ஆவணப்படுத்தி மிகுந்த பயனுள்ள பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

புனைவு, அபுனைவு என இவரது பங்களிப்பு பரந்தது. ஈழத்தமிழர்தம் வரலாறு பற்றி இவர் எழுதிய கட்டுரைகளும், நூல்களும் முக்கியமானவை. புனைவுகளிலும் சமுகக்கதைகளுடன், வரலாற்றுக்கதைகளையும் எழுதியுள்ளார். அத்துடன் 'ஆச்சி பயணம் போகின்றாள்', 'நடந்தாய் ஆறு வழுக்கியாறு!' மற்றும் 'கொத்தியின் காதல்' ஆகிய நகைச்சுவைப்புனைவுகளையும் எழுதியிருக்கின்றார்.

இலங்கை அரச படைகளினால் யாழ்ப்பாணம் எரியுண்டபோது நீலவண்ணன் என்னும் பெயரில் அவற்றை ஆவணப்படுத்தும் அபுனைவுகளை எழுத்தாளர் அமரர் வரதர் அவர்களின் வேண்டுகோளின்பேரில் எழுதியிருக்கின்றார்.

செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' - வ.ந.கிரிதரன் -

'செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' நாவல் அவரது முதலாவது நாவல். 'கலைச்செல்வி' நாவல் போட்டியில் பாராட்டுப்பெற்ற நாவல். பின்னர் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக நூலாக வெளிவந்த நூல். என் மாணவப்பருவத்தில் நான் வாங்கி வைத்திருந்த இலங்கையைச்சேர்ந்த வரலாற்று நாவல்களிலொன்று 'நந்திக்கடல்' . அதனை செங்கை ஆழியானின் தமையனாரான புதுமைலோலனின் 'அன்பு புத்தகசாலை'யில் வாங்கியிருந்தேன். அடுத்த வரலாற்று நாவல் வ.அ.இராசரத்தினத்தின் 'கிரெளஞ்சப்பறவைகள்'. ஒரு ஞாபகத்துக்காக இந்த நந்திக்கடல் நாவலைத் தேடிக்கொண்டிருந்தேன். இந்த நாவல் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பின்னணியாகக் கொண்டு , சங்கிலிகுமாரனை நாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

ஒருமுறை நூலகம் கோபி நூலகம் பற்றிய பதிவினையிட்டிருந்தபோது அந்நூலைப்பற்றியும் தெரிவித்திருந்தேன். உடனேயே 'நந்திக்கடல்' யாரிடமாவது இருந்தால் நூலகத்துக்குத் தந்து உதவவும் என்று அவர் முகநூலில் அறிவித்திருந்தார். அண்மையில் அவரிடமிருந்து வந்த தகவலில் மகிழ்ச்சிக்குரிய விடமொன்றிருந்தது. அது: 'தற்போது நூலகத்தில் 'நந்திக்கடல்' நூல் வாசிக்கக் கிடைக்கிறது என்பதுதான்.

ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் இன்னும் நூலுருப்பெறாமல் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் படிப்படியாக 'நூலகம்' தளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன ( 'மறுமலர்ச்சி', 'கலைச்செல்வி' இதழ்கள் உட்பட).

ழகரம் 5 இலக்கிய இதழ் (மலர்) பற்றி... வ.நகிரிதரன் -

ழகரம் 5 இலக்கிய மலரின் வடிவமைப்பைப் பொறுத்த அளவில் ஓரிரு புறக்கணிக்கத்தக்க குறைபாடுகள் இருந்தாலும், மொத்தத்தில் நிறைவான வடிவமைப்பு. இதுவரை கனடாவில் வெளியான இலக்கிய இதழ்களில் தரத்தில் இதனை முதல் நிலையில் வைப்பதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. சிறிய குறைபாடுகள் என்றால்.. அதற்கு உதாரணமாக இதழில் வெளியான எனது கட்டுரையான அ.ந.க.வின் 'மனக்கண்' கட்டுரையைக் குறிப்பிடலாம். இந்தக் கட்டுரைக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. அது: இதுவரையில் அ.ந.க.வின் ஒரே நாவலான 'மனக்கண்' நாவலுக்கு யாருமே விமர்சனம் எழுதவில்லை என்னைத்தவிர. அதற்கு நாவல் தொடராக வெளிவந்தபோதும் இதுவரையில் நூலாக வெளிவராததும் காரணங்களிலொன்றாக இருக்கலாம்.

இதழில் கட்டுரையில் எனக்கு நாவல் பிடித்திருப்பதற்கு நான்கு காரணங்களைக் குறிப்பிட்டிருப்பேன். அதில் முதல் மூன்று காரணங்களையும் உரிய சிறிது பெரிய , தடித்த எழுத்துருக்களைப்பாவித்து வடிவமைத்திருக்கின்றார்கள். நான்காவது காரணமான 'நாவல் கூறும் பொருள்' என்பதற்கும் அவ்விதம் பாவிக்க மறந்து விட்டார்கள். மேலும் கட்டுரையில் 'மனக்கண்' நாவலிலிருந்து சில பகுதிகளை உதாரணத்துக்காகப் பாவித்திருக்கிறேன். அப்பகுதிகளை ஏனைய பகுதிகளிலிருந்து சிறிது வேறுபடுத்திக்காட்டியிருக்க வேண்டும். அதனைச்செய்யத்தவறி விட்டார்கள். ஆனால் இந்தக் குறைகள் முன்பே கூறியுள்ளதுபோல் புறக்கணிக்கத்தக்கவை.

மலரின் முதலாவது கட்டுரையான 'தமிழ்நதி'யின் 'எழுத்தின் பாலினம்' இதழின் முக்கியமான கட்டுரைகளிலொன்று. மேனாட்டு இலக்கியத்தில் அன்றிலிருந்து இன்றுவரை, எவ்விதம் பெண் எழுத்தாளர்கள் அவர்கள் பெண்களாக இருக்கின்ற காரணத்தினால் ஆண் பெயர்களில் மறைந்திருந்து எழுதினார்கள், எழுதி வருகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் நல்லதொரு கட்டுரை. கட்டுரை புகழ் பெற்ற ஆண் எழுத்தாளர்கள் பலரால் காலத்துக்குக் காலம் பெண் எழுத்தாளர்கள் எவ்வளவுதூரம் அவர்களது பால் (Gender)  காரணமாகக் கீழத்தரமாக எள்ளி நகையாடப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கட்டுரை உதாரணங்களுடன் வெளிப்படுத்துகிறது.

எம்ஜிஆருக்கு இளவயதில் அரசியல் போதித்தவர் என்.எஸ்.கே!

எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடலிது. 'சீர்மேகும் குருபதம்' என்று தொடங்கும் இப்பாடல் இடம் ...

பிரபலமான பதிவுகள்