Saturday, June 21, 2025

விதவைத்திருமணத்தை வலியுறுத்தும் வவுனியூர் இரா. உதயணனின் 'வலியின் சுமைகள்' ! - வ.ந.கிரிதரன் -


வவுனியூர் இரா. உதயணன் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினை  'விதி வரைந்த பாதையிலே'  என்னும் நாவலுக்காகவும், 'பனிநிலவு' நாவலுக்காக எழுத்தாளர் கு,சின்னப்பபாரதி  விருதினையும் பெற்றவர். இவரது நாவல்கள், சிறுகதைகள் நூலுருப்பெற்றுள்ளன. தினகரம், வீரகேசரி பத்திரிகைகளில் தொடர்களாக இவரது நாவல்கள் வெளிவந்துள்ளன. இவ்விதம் வீரகேசரியில் 54 அத்தியாயங்கள் தொடராக வெளியான நாவலான 'வலியின் சுமைகள்' நாவல்  ஓவியங்களுடன் கூடிய அத்தியாயங்களுடன் 'இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம்'  வெளியீடாக , 2015இல் வெளிவந்துள்ளது. நூலுக்கான் ஓவியங்களை வரைந்திருப்பவர் ஓவியர் கெளசிக். இந்நாவலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. 

வன்னியூர் இரா. உதயணனின் எழுத்து சரளமானது. வாசிப்புக்கு எவ்வித தடங்கலும் தராத தெளிந்த நீரோடை போன்றது. ஆங்காங்கே மண் வாசனை தெறிக்கும் இயற்கை வர்ணனைகளை உள்ளடக்கியது.  வாசிப்பைத்தூண்டும் கதைப்பின்னல்களைக்கொண்டது. மானுட சமுதாயத்துக்கு பயன் தரும் சமுதாயப் பிரக்ஞை  மிக்க முற்போக்குக் கருத்துகளை உள்ளடக்கியது.  'வலியின் சுமைகள்' நாவலிலும் இப்பண்புகள் அனைத்தையும் காணலாம்.யுத்தம்  மெளனிக்கப்பட்ட பின் , தொடர்ந்தும் இலங்கைத் தமிழர் மீதான அடக்குமுறைகள் ஏதோ ஒரு வடிவில் தொடர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தின் பிரதிபலிப்பை இந்நாவலில் காணலாம்.  இன்று அந்த நிலைமை மாறி சகஜ நிலை ஏற்பட்டிருந்தாலும் அன்றிருந்த சூழலில் ஏற்படவில்லையென்பதை நாவல் எடுத்துக்காட்டுகின்றது. அவ்வகையில்  அக்காலக்கண்ணாடியாகவும்  நாவல் விளங்குகின்றது.

கதைச்சுருக்கம் இதுதான்: புகலிடம் நாடி ஐக்கிய இராச்சியம் சென்ற இலங்கைத் தமிழனான பிரவீன் , யுத்தம் முடிவுக்கு வந்திருந்த சூழலில் நாடு திரும்புகின்றான். யுத்தம் முடிவுக்கு வந்திருந்த போதும், போருக்குப் பின்னான சூழலில் பொருளியல்ரீதியில் மக்கள் எதிர்கொள்ளும்  இன்னல்கள்,  பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் இளம் பெண்கள், போர்ச்சூழலில் தம் கணவர்மாரை இழந்த பெண்கள் எதிர்கொல்லும் இருப்புக்கான சவால்கள்  எனப் பல விடயங்களை நாவல் வெளிப்படுத்துகின்றது. 

அதே சமயம் பிரவீன் தான் போர்க்காலத்தில் கோழையைப்போல் போராட்டத்திலிருந்து ஒதுங்கி நாட்டை விட்டு ஓடிப்போனதைப்பற்றி குற்றவுணர்ச்சி மிக்கவனாகவும் விளங்குகின்றான். அங்குள்ள மக்களில் சிலரும் கூட இவ்விதம் புலம்பெயர்ந்தவர்களைப்பற்றி இவ்விதம் எண்ணுவதையும் நாவல் எடுத்துக்காட்டுகின்றது. அதே சமயம் புகலிடத்தமிழர்கள் பலரால் பாதிக்கப்பட்ட பெண்களைப்பற்றியும், குறிப்பாகப்  புகலிடத்தில் திருமணமான நிலையில், ஊர் வந்து பெண்ணொருத்தியை மணம் முடித்து, அவளுக்குக் குழந்தையையும் கொடுத்து, தலை மறைவானவர்கள் சிலரைப்பற்றியும் நாவல் கடுமையான விமர்சனத்தை முன் வைக்கின்றது. 

 வவுனியூர் இரா. உதயணன்

அடிப்படையில் நாவல் உண்மைக்காதலைப் பற்றியது. அதுவும் பல்வேறு இன்னல்களையும் கடந்து  வெற்றியடைந்த காதலைப்பற்றியது. அதே சமயத்தில் விதவைத்  திருமணத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றது. கதையின் நாயகன் பிரவீனின் பால்ய பருவத்துத் தோழியான கெளசல்யாவின் வாழ்க்கை  இருப்புக்கான சவால்களுக்குள் அகப்பட்டு பல்வேறு தாக்கங்களுக்குள்ளாகின்றது. திருமணம் செய்து குழந்தைக்குத் தாயான அவளது  கணவன் நம்மவர் சிலரால்  அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்படுகின்றான்.  இவ்விதம் அழைத்துச் சென்றவர்களும் நம்மவர்களே என்பதற்கு மேல் நாவல் விபரிக்கவில்லை.  இவ்விதம் கணவனைப் பறிகொடுத்த நிலையில் , தனித்துத் தன் மகனைக் காப்பாற்றும் நிலையில்  அவள் கொழும்பில் ஒரு கிளப் ஒன்றில் வேலை பார்க்கின்றாள். அங்கு வரும் ஆண்களுடன் நட்புடன் , உரையாடி அவர்களது மன அழுத்தங்களைக் குறைக்கும் தொழில். அத்தொழிலைச் செய்யும் அவள் மேல் விலைமாது என்னும் பட்டம் விழுகின்றது. இவ்விதமானதொரு சூழலில்தான் நாடு திரும்பிய பிரவீன் அவளைச் சந்திக்கின்றான். அவளை அச்சூழலில் இருந்து வெளியிலெடுத்து, அவளுக்கு நல்லதொரு கணவனாகவும், அவளது மகனுக்கு நல்லதொரு தந்தையாகவும் இருக்க விரும்புகின்றான்.  அவனது ஆசையை ஆரம்பத்தில் ஏற்க  மறுத்தாலும், முடிவில் அவன் காதலின் ஆழத்தைப் புரிந்து கொண்டும், தன் மகனின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டும் கெளசல்யா அவனது விருப்பத்தை ஏற்றுக்கொள்கின்றாள்.  போராளிக்காதலன் படையினருடன் போர்ச்சூழலில் போராடி இறந்து விட்ட நிலையில், திருமணமே வேண்டாமென்றிருந்தவள் பிரவீனின்  அக்கா சுபா.  அவளையும் திருமணத்துக்குச் சம்மதிக்க வைத்து,   பிரவீன் தன் அக்கா திருமணத்துடன் சேர்ந்து , கெளசல்யாவைத் திருமணம் செயுது கொள்கின்றான்.  மிகவும் தெளிவாகச், சிக்கல்களற்றுப் பின்னப்பட்ட கதை.

இந்நாவல் வெளிப்படுத்தும் முக்கிய விடயங்கள் போருக்கும் பின்னரான இலங்கைத் தமிழரின் குறிப்பாக வன்னி மக்களில் நிலை, புகலிடத் தமிழர்கள் சிலர் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள், தொடர்ந்தும் இனரீதியில் நாடு திரும்பும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் (தற்போது இந்நிலை மாறிவிட்டதெனலாம்), போர்ச்சூழல் உருவாக்கிய விதவைகளின் நிலை, விதவைத்திருமணத்தின் அவசியம், சொந்த மண்ணை இழந்ததனால் புகலிடத்தில் ஏற்படும் கழிவிரக்க உணர்வுகள் வறுமை தலை விரித்தாடும் சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இருப்புக்கான சவால்கள் மற்றும், போராட்டத்தில் ஈடுபடாது தப்பி உயிர்பிழைக்கப் புகலிடம் நாடி ஓடியதால் ஏற்பட்ட குற்றவுணர்வு    போன்றவற்றைக்  குறிப்பிடலாம்.  

அடுத்தது நாவலில் ஆங்காங்கே வெளிப்படும் மண்வாசனை மிக்க விபரிப்புகள்.  வான் பாயும் குளங்கள், அவற்றினூடு விரையும் விரால்களைப் பிடித்தல், முரலிப்பழங்கள், காடுகல் என அவ்வப்போது அளவான விபரிப்புகள் நாவலுக்கு அணி சேர்க்கின்றன/

புகலிடக் கழிவிரகக் உணர்வுகளுக்கு ஓர் உதாரணம்: "இயந்திர வாழ்க்கை நிரம்பிய இங்கிலாந்தில் கதிரவன் தலை நீட்டும் போது சேவல்க்ள் கூவுவதில்லை.  பறவைகள் பாடுவதில்லை. .. அங்கே நடுச்சாமத்தில்  நாய் குரைக்கும் சத்தம் கூடக் கேட்காது."

நாவலின் முக்கிய நோக்கம் விதவைத் திருமணம். ஒரு காலத்தில் காந்தியச் சிந்தனைகள் காரணமாக விதவைத் திருமணத்தை வலியுறுத்தி நாவல்கள் எழுதப்பட்டன. பல விதவைத்திருமணத்தை வலியுறுத்தினாலும், இறுதியில் பண்பாட்டுக்கூறுகளைக் காரணமாக வைத்து , மேற்படி நாவல்களின் விதவைகள் திருமணத்தைத் தவிர்த்து விடுவார்கள். திரைப்படங்களிலும் இதே நிலைதான். ஆனால் இந்நாவலில் வரும் பிரவீன் இறுதிவரை தன் காதலில் உறுதியாக நிற்கின்றான். தன் காதலுக்குரியவள் விதவை என்ற நிலையிலும்,  ஒரு குழந்தைக்குத் தாய் என்ற நிலையிலும், அவள் செய்யும் தொழில் காரணமாக அவப்பெயரைச் சுமந்துகொண்டிருக்கும் நிலையிலும் தன் எண்ணத்தில் உறுதியாக் நிற்கின்றான்.  அந்த உ றுதியே அவனை இலட்சிய நோக்கு மிக்க மனிதனாக்குகின்றது. அவனது அந்த உறுதி நாவலின் முக்கிய அமசம். நாவலின் முக்கிய நோக்கமான விதவைத்திருமணத்தையும் அது பிரதிபலிக்கின்றது.  பல விடயங்களை நாவல் தொட்டுச் சென்றிருந்தாலும், விதவைத்திருமணம் என்பதே நாவலின் மையக்கருத்து.  அதன் காரணமாக, நாவல் வெளிவந்த காலத்தின் முக்கிய பிரச்சினையொன்றான போர்க்கால விதவைகளின் நல்வாழ்வைப்பற்றிச் சிந்திப்பது, அதற்கான தீர்வினை முன் வைப்பது ஆகியவற்றின் அடிப்படையில் வன்னியூர் இரா. உதயணனின் 'வலியின் சுமைகள்' முக்கியத்துவம் பெறுகின்றது.

ngiri2704@rogers.com



No comments:

விதவைத்திருமணத்தை வலியுறுத்தும் வவுனியூர் இரா. உதயணனின் 'வலியின் சுமைகள்' ! - வ.ந.கிரிதரன் -

வவுனியூர் இரா. உதயணன் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினை  'விதி வரைந்த பாதையிலே'  என்னும் நாவலுக்காகவும், 'பனிநிலவு' நாவ...

பிரபலமான பதிவுகள்