'டொரோண்டோ' அகநகரின் (Downtown)ஃப்ரொண்ட் வீதி, யுனிவெர்சிட்டி வீதி, யங் வீதி, குயீன் வீதி, இவற்றை உள்ளடக்கிய பகுதியைக் கனடாவின் நிதி மையம் என்பார்கள் (Financial Center). இந்நிதி மையத்தையும், ஒண்டாரியோ வாவியையும் ஊடறுத்தபடி கார்டினர் நெடுஞ்சாலை செல்லும். நிலத்திலிருந்து உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை இது.
இவ்விதம் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை என்பதால் , ஒண்டாரியோ வாவியை நகரத்திலிருந்து பிரித்து விடுகின்றது. மிகவும் முக்கியமான , நில மதிப்புள்ள பகுதியை இந்நெடுஞ்சாலை வீணாக்குகின்றது என்று விமர்சனங்களும் அவ்வப்போது எழுவதுண்டு. அது ஒருவகையில் உண்மைதான். ஆரம்பத்தில் கிழக்கில் லெஸ்லி வீதியிலிருந்து ஆரம்பமாகிய இந்நெடுஞ்சாலை இப்போது டொன்வலிப் பார்க் வே நெடுஞ்சாலையிலிருந்து ஆரம்பமாகின்றது. லெஸ்லி தொடக்கம் டொன்வலிப் பார்க் வே நெடுஞ்சாலை வரையிலான பகுதி நீக்கப்பட்டு, அப்பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டு விட்டது.
இது போல் கார்டினர் நெடுஞ்சாலை முழுவதுமாக நீக்கப்பட்டு, அதை நிலத்துக்குக் கீழ் செல்லும் வகையில் அமைப்பதனால் நன்மையுண்டு என்று அவ்வப்போது இது பற்றி அரசியல்வாதிகள் சிலர் கருத்துகள் கூறுவதுண்டு.
இது ஒருவிதமிருக்க, எனக்கு இந்நெடுஞ்சாலையூடு இரவு கவிந்திருக்கும், போக்குவரத்து குறைந்து அமைதியிலாழ்ந்திருக்கும் பொழுதுகளில் பயணிப்பது மிகவும் பிடிக்கும். அதுபோல் அதிகாலை, அந்திப்பொழுதுகளில் , போக்குவரத்து குறைவாகக் காணப்படும் பொழுதுகளிலும் பயணிப்பதும் பிடிக்கும். முக்கிய காரணம், சுற்றிவர நெடியதாக, உயர்ந்திருக்கும் கட்டட்டங்களை ஊடறுத்து, காற்றினூடு பறப்பது போன்றதோர் உணர்வினை , நிலத்திலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் இந்நெடுஞ்சாலை தருவதுதான்.
இங்குள்ள புகைப்படம் , இவ்விதம் எழுத்தாளர் கடல்புத்திரனின் வாகனத்தில் பயணியாகப் பயணிக்கையில் நான் எடுத்த புகைப்படம். 'டொரோண்டோ' அகநகரத்தின் உயர்மாடிக் கட்டடங்களையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள். இவை சாய்ந்து இருப்பதுபோல் தெரிந்தாலும், இவை சாய்ந்த கோபுரங்கள் அல்ல. ஐபோன் கமராவின் மூலம் புகைப்படத்தை எடுத்த கோணத்தின் விளைவு அது.
No comments:
Post a Comment