Tuesday, June 17, 2025

த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ் எழுதிய 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் அல் - புனைவுக்கான (2024) விருது!


'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' என்னும் நூலை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவருடன் இறுதிவரை பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான  த.பிச்சாண்டி எழுதியிருக்கின்றார். எம்ஜிஆரினுடனான தன் அனுபவங்களை அந்நூலில்  அவர் பகிர்ந்திருக்கின்றார். இந்நூல் பற்றி அந்தமழை.காம் தளத்தில் வெளியாகியுள்ள மதிமலர் என்பவரின் நூல் அறிமுகக் குறிப்பு என் கவனத்தை ஈர்த்தது. எம்ஜிஆர் என்னும் மனிதரின், முதல்வரின் மனிதாபிமானம் மிக்க ஆளுமையை வெளிப்படுத்தும் அறிமுகம். நூலை முழுமையாக வாசிக்கும் ஆர்வத்தைத்தரும் அறிமுகம்.

இந்நூலுக்கு இம்முறை தமிழ் இலக்கியத்தோட்டம் வழங்கும் அல்- புனைவுக்கான இயல் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  அந்திமழை.காம் தளத்தில் வெளியான நூல் அறிமுகக் குறிப்பினை இங்கு பகிர்ந்துள்ளேன்.

நூல்: எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள், த.பிச்சாண்டி இ.ஆ.ப(ப.நி), பிவி பதிப்பகம், கலைஞர் கருணாநிதி நகர், சென்னை-78. கைபேசி: 9884980760 விலை ரூ 860.

************************************************************************************************
(அந்திமழை.காம்) நூல் அறிமுகம்: என்ன செய்தார் எம்.ஜி.ஆர்.? எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள்!  - மதிமலர் -

திண்டுக்கல் மாவட்டத்தில் 1977-இல் நில உச்சவரம்பு அலுவலராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார் அந்த இளம் அதிகாரி. அச்சமயம் அங்கே குடகனாற்றில் வெள்ளம் வந்து ஏராளமான பேர் இறந்துவிட்டனர். எக்கச் சக்க சேதம்.


முதலமைச்சர் வந்து பார்வையிடும் வழியில் ஓர் இடத்தை நிர்வகிக்கும் வேலைதான் அந்த அதிகாரிக்கு. முதலமைச்சர் கையால் சேலைகள் வழங்கலாம் என விரும்பி உள்ளூர் பிரமுகர் ஒருவர் சேலைகளை அடுக்கி வைக்க, அவரை இவர் அனுமதிக்க மறுத்துவிட்டார். முதல்வரின் பயணத் திட்டத்தில் இது இடம் பெறவில்லை. உடைந்த அணையைப் பார்த்துவிட்டு, இந்த இடத்துக்கு வருகையில் பெரும் பெண்கள் கூட்டம் கூடிவிட்டது. அங்கே இறங்கும் திட்டம் இல்லை என்றாலும் மகளிர்கூட்டத்தைப் பார்த்து இறங்கினார் அவர். எங்களுக்கு சேலை கொடுக்கும் திட்டத்தை இவர் நிறுத்திவிட்டார் என இளம் அதிகாரி மீது அங்கிருந்த பெண்கள் புகார் கூறினர். முதலமைச்சர் இவரை முறைத்தார். நாளைக்கு மதுரைக்கு வந்து என்னைப் பாருங்க. எனக்கு கெட்ட பேர் வாங்கித்தருவதற்காகவே இருக்கீங்களா? என்றவாறு அவர் புறப்பட்டார். உடன் வந்திருந்த மாவட்ட கலெக்டரும் மூத்த அதிகாரிகளும் உனக்கு தண்ணியில்லா காடுதான் என்று சொன்னார்கள்.மறுநாள் மதுரையில் அதிகாரிகள் கூட்டத்துடன் ஆலோசனை செய்தார் முதலமைச்சர். அது முடிந்ததும் ‘எங்கே அந்த குழப்பம் ஏற்படுத்திய அதிகாரி?’ என்று கேட்க, இவர் எழுந்து நின்று விளக்கம் தந்தார். ‘நீங்க சொல்றது உண்மையா என்று சென்னைக்குப் போய் மேலும் விசாரிப்பேன்’ என்று உணர்ச்சியற்ற குரலில் சொல்லிவிட்டு அவர் கிளம்பிப் போய்விட்டார்.

வீட்டுக்குத்திரும்பிய அதிகாரி தன் மனைவியிடம் நமக்கு இந்த வேலை சரிப்பட்டு வராது போல் இருக்கிறது. ஏதாவது கல்லூரி பேராசிரியர் வேலைக்குப் போய்விடலாம் எனப் புலம்பினார்.

ஒரு மாதம் கழித்து அவரைப் பார்த்த இன்னொரு அதிகாரி, ‘என்ன சார், சத்தமே இல்லாம சம்பவம் பண்ணிட்டீங்க?’ என்றார்.

இவருக்கு ஒன்றும் புரியவில்லை.

‘காலையில் பேப்பர் பார்க்கலையா? உங்களை முதலமைச்சரின் பிஏவா நியமிச்சிருக்காங்க’

என்னது? அதிகாரிக்கு ஒன்றும் புரியவில்லை.

முன்பின் அறிமுகமற்ற இவரை தனக்கு பிஏவாக நியமித்த முதலமைச்சர் எம்ஜிஆர். நியமிக்கப்பட்ட இளம் அதிகாரியின் பெயர் பிச்சாண்டி. 1978-இல் நியமனமாகி எம்ஜிஆர் இறக்கும்வரை அவர் கூடவே இருந்து, அவர் மேற்கொண்ட எல்லா நிர்வாக நடவடிக்கைகளுக்கும் சாட்சியாக இருந்தவர். எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் என்ற தலைப்பில் இவர் எழுதிய புத்தகம் வெளியாகி இருக்கிறது. நூல் முழுக்க ஏராளமான தகவல்கள் மிக சுவாரசியமாகக் கொட்டிக்கிடக்கின்றன.

எம்ஜிஆர் கொண்டுவந்த திட்டங்களில் மிக முக்கியமானது பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவுத்திட்டம்.

‘பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுக்கணும்? 50 பைசாவில் (இன்றைய விலைவாசியில் 15 ரூபாய்) ஏதாவது கொடுக்கமுடியுமா? யோசனை சொல்லுங்க’ என ஒரு நாள் திடீரெனக் கேட்கிறார் முதலமைச்சர். பிச்சாண்டி யோசித்து மறுநாள் ஒரு பேக்கரிக்கடைக்குப் போய் 50 பைசாவில் என்ன கிடைக்கும் எனப் பார்க்கிறார். சில ரஸ்க் ரொட்டிகள், பிஸ்கட்டுகள் கேக்குகள் கிடைக்கின்றன. அவற்றை சில பார்சல்களாக எடுத்துவருகிறார். எம்ஜிஆர் முன்பு அதைக் காட்டுகிறார்.

’இப்படி ரொட்டிகளை மதியம் கொடுத்துவிடலாம். நடைமுறைப் படுத்துவது எளிது’ என்கிறார். ஆனால் எம்ஜிஆரோ இதை தினமும் கொடுத்தால் பிள்ளைகள் எப்படி சாப்பிடுவார்கள்? எனக் கேட்கிறார். ’தினமும் பிள்ளைகளுக்கு பள்ளியிலேயே சமைத்துப் பரிமாறவேண்டும். அதற்கான திட்டத்தை வகுத்துக் கொடுங்கள்’ என்று உத்தரவு போடுகிறார். அப்போது ஒரிடத்தில் சமைத்து அந்தவட்டாரப் பள்ளிகளுக்குக் கொடுக்கும்படியான காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டமே நடைமுறையில் இருந்தது.

எம்ஜிஆரின் கனவை நனவாக்க ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் பிடிக்கும். அப்போது தமிழக அரசின் அந்த ஆண்டுக்கான மொத்த நிதிச்செலவு 1756 கோடிதான். எனவே நிதித்துறை அதிகாரிகள் தயங்கினார்கள். ‘இதை முதலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்திப் பார்ப்போம். பிறகு விரிவு படுத்தலாம்’ என்றனர். மாநிலம் முழுக்க செய்தே ஆகவேண்டும் என எம்ஜிஆர் பிடிவாதமாக இருந்தார். பிறகு நடந்தது வரலாறு.

அக்காலத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது பள்ளி மதிப்பெண்ணுடன் 30 நேர்காணல் மதிப்பெண்கள் உண்டு. சில மாணவர்களுக்கு இந்த நேர்காணல் மதிப்பெண்ணில் பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார். எம்ஜிஆர் சொல்கிறார்: நேர்காணலுக்கு வரும் மாணவர்களின் விண்ணப்பத்தில் தந்தையார் கையெழுத்து என்ற இடத்தில் கைரேகை இருக்கிறது என்றால் அத்தகைய மாணவர்களை எனக்கும் அரசுக்கும் மிக வேண்டியவர்கள் எனக் கருதுங்கள் என்று. ஆனாலும் பாரபட்சம் தொடர, முதல்வர் உத்தரவின் பேரில் பதிவு செய்யப்பட்ட அந்த நேர்காணல் டேப்புகளில் சிலவற்றை வாங்கி, பாரபட்சம் உண்மைதான் என அறிக்கையைத் தருகிறார் பிச்சாண்டி. அதைத் தொடர்ந்துதான் பொறியியல் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு அறிமுகமாகிறது. இதுபோல் ஏராளமான நிர்வாக நிகழ்வுகளின் பின்னணிகள் இந்நூலில் உள்ளன.

முதலில் முதலமைச்சர் சிறப்புப் பிரிவின் தனி அலுவலராகத்தான் பிச்சாண்டி நியமிக்கப்பட்டார். அது மக்கள் அனுப்பும் மனுக்களை பரிசீலனை செய்யும் வேலை. ஓராண்டு கழித்து எம்ஜிஆரின் நேர்முக உதவியாளராக மாற்றியபோது முதலில் பிச்சாண்டி மறுக்கிறார். ‘நான் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவன். பிஏவாக இருக்கும்போது என்னையறியாமல் ஏதேனும் பிழை நேர்ந்துவிடுமோ’ என அஞ்சுவதாகக் கூறுகிறார். எம்ஜிஆர்தான் இவரை அழைத்து, ‘வறுமை என்பது இளமையில் நம்மைப் பக்குவப்படுத்தும் அரிய நல்வாய்ப்பு. என்னை விட இளமையில் வறுமையை அனுபவித்தவர்கள் யார் உண்டு? எது சரி என பிரித்துப் பார்த்து செயல்படுங்கள்’ எனச் சொல்லித்தான் தன் அருகே வைத்துக் கொள்கிறார். அரசியல் வரலாறுகளில் ஆர்வம் உடையவர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய நூல். 552 வண்ணப் பக்கங்களில் நேர்த்தியாக தயாராகி உள்ளது.

எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள், த.பிச்சாண்டி இ.ஆ.ப(ப.நி), பிவி பதிப்பகம், கலைஞர் கருணாநிதி நகர், சென்னை-78. கைபேசி: 9884980760 விலை ரூ 860.

நன்றி: https://www.andhimazhai.com/literature/book-review/what-did-mgr-do

No comments:

த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ் எழுதிய 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் அல் - புனைவுக்கான (2024) விருது!

'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' என்னும் நூலை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவருடன் இறுதிவரை பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான  த.பி...

பிரபலமான பதிவுகள்