எழுத்தாளர் அ.முத்துலிங்கம் புலம்பெயர் இலக்கியம் பற்றிக் கூறுகையில் 'எழுத்திலே புலம்பெயர்ந்த எழுத்து புலம்பெயராத எழுத்து என்ற வகைப்பாடு கிடையாது. நல்ல எழுத்து, மோசமான எழுத்து என இரண்டு பிரிவுதான்.'' என்று கூறியிருந்ததாக ஒரு கூற்றினை முகநூலில் முகநூல் நண்பர்களில் ஒருவரான Kandasamy R பகிர்ந்திருந்தார். என்னைப்பொறுத்தவரையில் அவ்விதம் கூறுவதால புலம்பெயர் இலக்கியம் படைக்கும் ஒருவரைக் குறைத்து மதிப்பிடுவதாக, அவரை ஒரு பிரிவுக்குள் கட்டிப்போடப்படும் அபாயம் இருப்பதாக முத்துலிங்கம் அவர்கள் கருதுவதுபோல் தெரிகின்றது.
உலக இலக்கியமென்பது பல்வேறு நாடுகளின், அந்நாடுகளில் வாழும் பல்வேறு இனக்குழுக்களின் இலக்கியம் ஆகும். எல்லோரும் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை. பல படைப்புகள் ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்படுகின்றன. அவை பிறமொழிகளில் எழுதப்படுவதால், அவற்றைப்படைப்பவர்களை , அவற்றை அறிமுகபப்டுத்துகையில் உதாரணத்துக்கு ருஷ்ய இலக்கியம், தென்னாபிரிக்க இலக்கியம், லத்தின் அமெரிக்க இலக்கியம், இந்திய இலக்கியம் என்று வகைப்படுத்துகின்றோம். இவ்விதம் வகைப்படுத்தினாலும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் அவற்றின் இலக்கியத்தரத்தை நிர்ணயிக்கின்றன. உதாரணத்துக்கு தத்யயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் ருஷ்ய மொழியில் எழுதப்பட்டது. ருஷ்ய இலக்கியம் பற்றி எழுதப்படுகையில் அதனிடம் தவிர்க்கப்பட முடியாதது.அது போல் அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளால் அது உலக இலக்கியத்தின் உன்னதப்படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதுபோல் அவரது 'கரமஷாவ் சகோதரர்கள்' , டால்ஸ்டாயின் 'அன்ன கரினீனா, போரும் அமைதியும் போன்ற நாவல்களையும் குறிப்பிடலாம். இவ்விதம் லத்தின் அமெரிக்கப் படைப்புகள், சீனப்படைப்புகள், ஆபிரிகக் இலக்கியப்படைப்புகள், இந்திய இலக்கிய்ப் படைப்புகள் பல உலக இலக்கியத்தில் அவற்றுக்கு உரிய இடங்களைப் பெற்றுள்ளன. அவை அந்நாடுகளுக்குரிய இலக்கியப் படைப்புகளாக இருக்கும் அதே சமயம் , உலக இலக்கியத்தில் அங்கீகரிக்கப்பட்ட படைப்புகளாகவும் விளங்குகின்றன.
இதுபோன்றதுதான் புலம்பெயர் இலக்கியம் என்பதும். புலம்பெயர்ந்து செல்பவர்களால் படைப்படும் இலக்கியங்கள் பல்வேறு வகைகளில் வித்தியாசம் மிக்கவை. தனித்துவம் மிக்கவை. உதாரணத்துக்குப் புகலிடம் நாடிச் செல்பவர்களால் படைக்கப்படும் இலக்கியப் படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சனைகள் வித்தியாசமானவை. இன்னுமொரிடத்தில் காலூன்ற அவர்கள் பல சவால்களை, இடர்களைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. பல்வேறு சமூகத்து மாந்தருடன், குறிப்பாக வேற்றின, வேற்றுமொழி மக்களுடன் , வேறுபட்ட பண்பாட்டை அனுசரிக்கும் மக்களுடன் இணைந்து வாழும் சூழல், புகலிட மண்ணின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக அவர்கள் அனுபவங்கள் வித்தியாசமானவை. தனித்துவமானவை. இதனால் பின் காலனித்துவ இலக்கியத்தில் புலம்பெயர் இலக்கியமென்பது இலக்கிய உலகில், பல்கலைக்கழக மட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட இலக்கியமாக இன்று விளங்குகின்றது. ஆய்வுகள் நடைபெறுகின்றன.
அதே சமயம் , இவ்விதம் அங்கீகரிக்கப்பட்ட புலம்பெயர் இலக்கியப் படைப்புகள் (diaspora literature) உலக இலக்கியப் பரப்பில் அங்கீகரிக்கப்பட படைப்புகளாக தம்மை நிலை நிறுத்துகின்றன. புலம்பெயர் தமிழ் இலக்கியம் தனித்துவம் மிக்கதாக இருக்கும் அதே சமயம் அது தமிழ் இலக்கியமாகவும் இருக்கின்றது. புலம்பெயர் இலக்கியம் என்று வகைப்படுத்துவதால் அது தமிழ் இலக்கியத்திலிருந்து பிரிக்கப்படுவதாகவோ அல்லது அதன் தரம் குறைந்து விடுவதாகவோ கருதத்தேவையில்லை.
ஆங்கிலத்தில் எழுதும் வி.எஸ்.நைபாலின் படைப்புகள் உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகளாக விளங்குகின்றன. அவர் இலக்கியத்துகாக நோபல் பரிசையும் பெற்றிருக்கின்றார். அதே சமயம் அவை புலம்பெயர் இலக்கியத்தில் முக்கிய படைப்புகளாகவும் விளங்குகின்றன. சல்மான் ருஷ்டி உட்பட ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் உலக இலக்கியத்தில் அவற்றுக்கு உரிய இடங்களைப்பெற்றுள்ள அதே சமயம் புலம்பெயர் இலக்கியப்பிரிவிலும் வைத்துத் திறனாய்வு செய்யப்படுகின்றன. இந்நிலையில் புலம்பெயர் இலக்கியமென்று கூறுவதன் மூலம் அது தமிழ் இலக்கியத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றதென்ற அச்சம் தேவையற்றது. எல்லாம் தமிழ் இலக்கியம் என்றாலும், அவை உள்ளடக்கியுள்ள வட்டார இலக்கியம், தலித் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம் போன்ற பிரிவுகளில் அவை, அவற்றின் தனித்துவம் காரணமாகத் திறனாய்வு செய்யப்படுவது தவிர்க்க முடியாதது.
மேலதிக வாசிப்புக்கு - diaspora literature https://www.cambridgescholars.com/resources/pdfs/978-1-4438-0013-6-sample.pdf
No comments:
Post a Comment