எழுத்தாளர் சுகன் பின்வரும் எழுத்தாளர் அம்பையின் கூற்றை முகநூலில் பகிர்ந்திருந்தார்:
"1964 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஜீன்-பால் சார்த்தர் மறுத்துவிட்டார், ஏனெனில் அதை ஏற்றுக்கொள்வது தன்னை ஒரு நிறுவனமாக மாற்றும், ஒரு எழுத்தாளராகவும் அறிவுஜீவியாகவும் சுயாதீனமாக செயல்படும் திறனைக் கட்டுப்படுத்தும் என்று அவர் நம்பினார். மேலும், அவர் எப்போதும் அதிகாரப்பூர்வ வேறுபாடுகளை மறுத்து வருவதாகவும், "நிறுவனமயமாக்கப்பட" விரும்பவில்லை என்றும் கூறினார். கூடுதலாக, நோபல் பரிசு பெரும்பாலும் "மேற்கத்திய எழுத்தாளர்கள் அல்லது கிழக்கின் கிளர்ச்சியாளர்களுக்கு" மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அந்த வார்ப்புருவில் பொருந்தக்கூடியவராகக் கருதப்படுவதை அவர் விரும்பவில்லை என்றும் அவர் கவலைப்பட்டார். ( அம்பை)"என்னைப்பொறுத்தவரையில் சார்த்தர் மறுத்தார் அது அவரது உரிமை. அதைக்காரணமாக வைத்து , இவ்விடயத்தைப் பொதுமைப்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. ஒருவர் மறுத்தால் மறுக்காத பலர் இருக்கிறார்கள். அவர்களையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர் மிகையில் ஷொலகாவுக்கும் நோபல் பரிசு கிடைத்தது. அவரது படைப்புகளுக்கு ஸ்டாலின் விருது, லெனின் விருது கிடைத்தன. 1965இல் நோபல் பரிசும் கிடைத்தது. அவர் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும் கூட. 1964இல் சார்த்தர் மறுத்தார். 1965இல் ஷொலகாவ் ஏற்றார். இதனால் ஷொலகாவ் மீதான என் மதிப்பு குறைந்து போய்விடவில்லை.
சார்த்தர் ஏற்கவில்லையென்பதற்காக அதுதான் சரியான நிலைப்பாடு என்று பொதுமைப்படுத்துவது சரியல்ல என்பது என் நிலை. அவரைப்பொறுத்தவரை அது சரி. அதே போல் ஷொலகாவ் ஏற்றார் என்பதற்காக அது தவறானதும் அல்ல. 'நோபல் பரிசு பெரும்பாலும் மேற்கத்திய எழுத்தாளர்கள் அல்லது கிழக்கின் கிளர்ச்சியாளர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கவலைப்பட்டார்' என்று சார்த்தரைப்பற்றி அம்பை கவலைப்பட்டிருக்கின்றார். ஆனால் கிழக்கின் கிளர்ச்சியாளருக்கு அல்ல, ஆதரவாளருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டவே இப்பதிவு..
No comments:
Post a Comment