'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Friday, July 11, 2025
மறக்க முடியாத எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறந்த நாள் ஜூலை 10. என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் இ.பா. தனது மனைவி இந்திராவின் பெயரையும் பாவித்து, இந்திரா பார்த்தசாரதி என்னும் பெயரில் எழுதுபவர். எழுத்தாளர் ரங்கராஜன் தன் மனைவி சுஜாதா என்னும் பெயரில் தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தது நினைவுக்கு வருகின்றது.
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எனக்கு முதலில் அறிமுகமானபோது நான் ஒருவித வெறியுடன் வாசிப்பில் மூழ்கிக்கிடந்த பால்ய பருவத்தினன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் அப்போது எனக்கு வயது பதினொன்றுதான். பத்து வயதிலேயே கல்கியில், விகடனில், குமுதத்தில், கலைமகளில், தினமணிக்கதிரி தொடர்களாக வெளியான தொடர்கதைகளை, சிறுகதைகளை , தீவிரமாக, வாசிக்கத்தொடங்கி விட்டிருந்தேன்.வெகுசனச் சஞ்சிகைகளில் எழுதி என் கவனத்தை ஈர்த்த, தீவிர இலக்கிய எழுத்தாளுமையாளர்களாக ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி . கு,அழகிரிசாமி போன்றோர் இருந்தனர். இவர்களது எழுத்துகள் பொதுவான வெகுசன எழுத்தாளர்களின் எழுத்துகளிலிருந்து வேறுபட்டவை. ஆனால் அது இவர்கள் மீதான என் ஈர்ப்புக்குத் தடையாக இருந்ததில்லை. என் வயதுக்கு மீறிய விடயங்களைப்பற்றியெல்லாம் இவர்கள்தம் படைப்புகள் இருந்தாலும், அனைவரையும் சென்றடையும் வகையில் , ஒரு வித எல்லை மீறாத எழுத்து நடையில் இவர்கள் எழுதினார்கள்.
Thursday, July 10, 2025
அது ஒரு கனாக்காலம்!
இனி ஒருபோதுமே அக்காலம் திரும்பப் போவதில்லை. மானுடத் தொழில் நுட்ப வளர்ச்சி மானுட வாழ்க்கைக்குப் பல வசதிகளை உருவாக்கி விட்டது. புதிய பல பொழுது போக்குகளையும் உருவாக்கி விட்டது. இத்தொழில்நுட்பம் உருவாக்கிய வசதிகள் தொடர்ச்சியாக மானுடரைக் கூட்டு வாழ்க்கையிலிருந்து, சமூக வாழ்க்கையிலிருந்து மேலும் மேலும் பிரித்துக்கொண்டே செல்கின்றன. ஆதியில் மானுடர் குழுக்களாக, தாய் வழிச் சமுதாயங்களாக வாழ்ந்தார்கள். குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தாலும், குழுக்களுக்கிடையில் ஒருவிதப் பொதுவுடமை நிலவியது. சமூக வாழ்க்கை இருந்தது.
பின்னர் தொழில் நுட்ப வளர்ச்சி படிப்படியாக அம்மானுடரின் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே வந்தது. ஆற்றோர நாகரிகம், விவசாயம், பண்டமாற்றுப் பொருளாதாரம் ,தனியுடமை, ஒருதார மணமுறை, குடும்பம் என அது மேலும் பரிணாமம் அடைந்து வந்தது. நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம், முதலாளித்துவ ஏகாதிபத்தியம் எனப் பிரிந்திருந்த உலகம் மேலும் மேலும் மாற்றங்களச் சந்தித்து வந்தது..
Wednesday, July 9, 2025
'காலம்' செல்வத்துடன் ஒரு சந்திப்பு!
{ஜூலை 7, 2025} நேற்று மாலை 'காலம்' செல்வத்துடன் சிறிது நேரம் , மிடில் ஃபீல்ட்டும் ஃபிஞ் வீதியும் சந்திக்குமிடத்தில் அமைந்திருக்கும் டிம் ஹோர்ட்டன் கோப்பிக் கடையில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது.
Wednesday, July 2, 2025
நண்பர்களின் நால்வரின் ஒன்று கூடல்!
![]() |
இடமிருந்து வலமாக: வரதீஸ்வரன், வித்தியானந்தன், பிறேமச்சந்திரா & நான். |
இன்று நான் நண்பர்கள் வரதீஸ்வரன், வித்தியானந்தன், பிறேமச்சந்திரா ஆகியோரை , வரதீஸ்வரன் வீட்டில் சந்தித்து , மாலைப்பொழுதை இனிதாகக் கழித்தேன். இவர்களில் வரதீஸ்வரன், வித்தியானந்தன் ஆகியோருடனான அறிமுகம் மொறட்டுவைப்பல்கலைககழகத்தின் மாணவர் விடுதியில் ஆரம்பமானது. நான் அங்கு கற்கச்சென்றபோது முதல்வருடம் மாணவர் விடுதி B இல் தங்கிப் படிப்பை ஆரம்பித்தேன். அந்த விடுதியில் அவ்விதம் தம் படிப்பை ஆரம்பித்தவர்கள்தாம் நண்பர்கள் வரதீஸ்வரனும், வித்தியானந்தனும். வித்தியானந்தன் கடல்துறைப் (Marine) பொறியியல் துறையிலும், வித்தியானந்தன் மின்சாரப்பொறியியல் துறையிலும், பிறேமச்சந்திரா மூலகப் (Materials) பொறியியல் துறையிலும் படிப்பதற்காக வந்திருந்தவர்கள். நான் கட்டடக்கலை படிப்பதற்காகச் சென்றிருந்தவன். வித்தியானந்தன் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் 'நுட்பம்' இதழாசிரியராக நான் இருந்தபோது மலர்க்குழுவில் ஓர் உறுப்பினராக இருந்தவர்.
Saturday, June 28, 2025
எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனின் 'மூன்று மழைக்கால இரவுகள்' சிறுகதை! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனின் 'மூன்று மழைக்கால இரவுகள்' சிறுகதை அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்று மட்டுமல்ல இலங்கையிலிருந்து வெளியான சிறந்த தமிழ்ச் சிறுகதைகளிலும் ஒன்று என்று கூறலாம். இந்தச் சிறுகதை இலங்கையின் போர்ச்சூழலின் முக்கிய காலகட்டங்களைப் பிரதிபலிக்கும் அதே சமயம் , போர்ச்சூழலில் குடும்பங்களின் அலைதல்கள், அவை ஏற்படுத்திய மன உளைச்சல்கள், அமைப்பையே மாற்றிவிடும் உத்வேகத்துடன் எழுந்த இளையவர்கள்தம் கனவுகளின் சிதைவுகள், காரணமான அவர்களுக்கிடையிலான உள் முரண்பாடுகள், நண்பர்களின் இழப்புகள், பிரிதல்கள் என்பவற்றையெல்லாம் இந்த ஒரு சிறுகதை எடுத்தியம்புகின்றது.
Friday, June 27, 2025
திறனாய்வாளர் ஈழக்கவியின் 'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்' நூல் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன்'
![]() |
- பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் - |
- ஜீவநதி சஞ்சிகையின் ஜூன் பதிப்பு ஏ.எச்.எம். நவாஸ் (ஈழக்கவி ) சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. அதில் எனது கட்டுரை 'திறனாய்வாளர் ஈழக்கவியின் 'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்' நூல் பற்றிய சிந்தனைகள்! ' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. -
'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்' என்னும் ஈழக்கவியின் சிறு நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. ஜீவநதி வெளியீடு. பேராசிரியரின் மொழியியல்ரீதியிலான பங்களிப்பை ஆராயும் நூல். உண்மையில் பேராசிரியர் எம்,ஏ.நுஃமானின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றி எழுதும் பலரும் அவரது கவிதைப் பங்களிப்பு, திறனாய்வுப் பங்களிப்பு ஆகியவற்றையே பிரதானப்படுத்தி எழுதுவார்கள். பேராசிரியர் நுஃமானும் அவ்விடயங்களிலேயே அதிகமான கட்டுரைகளைப் பொது வாசகர்களுக்காக எழுதுவார். ஆனால் உண்மையில் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் மொழியியல் அறிஞரும் ஆவார். மொழியியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அத்துறைப் பேராசிரியராக யாழ் பல்கலைகக்ழகத்தில் பல வருடங்கள் பணி புரிந்தவர். ஆய்வரங்குகளில் மொழியியலில் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர். இந்நிலையில் அவரது மொழியியற் சிந்தனைகள், ஆய்வுப் பங்களிப்புகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இக்கவனத்தைச் செலுத்துவதற்கான தூண்டலை ஈழக்கவியின் இந்நூல் செய்திருக்கின்றது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்க நூலாக இதனைக் கருதலாம்.
இந்நூல் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் பற்றிய நல்லதோர் அறிமுகத்தையும் , குறிப்பாக அவரது, குடும்பப் பின்னணி. கல்வித் தகைமைகள் , இலக்கியப் பங்களிப்புகள் (திறனாய்வு உட்பட), கல்விப் பங்களிப்பு ஆகியவற்றைச் சுருக்கமாக விபரிக்கும் . அதே சமயம் மொழியியல் அறிஞராக அவரது மொழியியல் துறைப்பங்களிப்பையும் எடுத்துரைக்கின்றது.
Wednesday, June 25, 2025
கட்டடக்கலைஞர் இ. மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948) நூல் , நல்லூர் ராஜதானி பற்றிய கருத்துகள்! - வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலைஞர் இ. மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948) ' மிக முக்கியமானதொரு வரலாற்று ஆவணம். 493 பக்கங்களைக் கொண்ட இநந நூலை குமரன், எழுநா,ஆதிரை பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. மிகுந்த உழைப்பின் அறுவடை இவ்வாய்வு நூல். அதற்காக நூலாசிரியர் மயூரநாதனுக்கும், வெளியிட்ட பதிப்பகங்களுக்கும் அதன் பின்னணியில் இருந்தவர்களுக்கும் நாம் அனைவரும் நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம். நூலைபெறுவதற்கு உதவிய ஓராயம் அமைப்பினருக்கும் நன்றி.
தமிழரசர் காலத்து நல்லூர் தொடக்கம், போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலகட்டங்களைச் சேர்ந்த யாழ்ப்பாண நகரம் பற்றிய, சரித்திரக் குறிப்புகள், நில வரைபடங்கள் , வெளிக்கள ஆய்வுத் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மயூரநாதன் இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்நூலை உருவாக்க மயூரநாதன் பாவித்துள்ள ஆதாரங்கள் மேலும் பலரின் ஆய்வுகளுக்கு அத்திவாரங்களாக உதவக்கூடியவை.
![]() |
- கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் - |
இந்நூலின் நல்லூர் பற்றிய பகுதியில் மயூரநாதன் எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலையும் கவனத்திலெடுத்து தன் கருத்துகளை முன் வைத்திருக்கின்றார். அதற்காக என் நன்றி அவருக்குண்டு.
Saturday, June 21, 2025
எழுத்தாளர் நடேசனின் புலம்பெயர் இலக்கியம் பற்றிய கருத்துகள் பற்றி....
எழுத்தாளர் நடேசன் தனது முகநூல் பக்கத்தில் புலம்பெயர் இலக்கியம் பற்றியொரு பதிவினை இட்டிருக்கின்றார். அதில் அவர் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்:
1. புலம்பெயர் இலக்கியம் - இலக்கியம் புலம் பெயர்வது இல்லை. இந்த சொற்றொடர் தவறாகும்.
2. புலம் பெயர்ந்தோர் இலக்கியம் படைத்தால் அதை புலம்பெயர் பெயர்தோர் இலக்கியம் எனலாம். ஆனால் பெரிய முக்கியமான விடயம் இல்லை.
3. தமிழ் நாட்டில் அக்காலத்தில் பிராமணர் இலக்கியம் படைத்தார்கள் இப்பொழுது மற்றைய சாதியினரும் படைக்கிறார்கள். அவை எல்லாம் எனக்கு தமிழ் நாட்டில் இருந்து வந்த தமிழ் இலக்கியமே.
4. யாராவது மாகாபாரதம், இராமாயணம்த்தை போரிலக்கியம் என்றால் எப்படி இருக்கும்?
5. இலங்கையில் இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்கள் எழுதுவது மட்டுமே தமிழ் இலக்கியம் ஆகாது . நீங்கள் எழுதுவது டயஸ்போரிக் இலக்கியம், என்றால் என்ன நியாயம்?
6. இந்த டயஸ்போரிக் வார்த்தை யூதர்களினால் உருவாக்கப்பட்டது .
7. வெளிநாடுகளில் இருந்து சிங்கள மொழியில் எழுதும் சிங்களவர்கள் இந்த சொல்லடையை பாவிப்பதில்லை.
8. எனது அசோகனின் வைத்தியசாலை, பண்ணையில் ஒரு மிருகம், வாழும்சுவடுகள் டயஸ்போரிக் இலக்கியவகையை அல்ல .தமிழ் இலக்கியத்தில் எவரும் தொடாத ஒரு பகுதி என சொல்கிறேன்.
Sunday, June 15, 2025
அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.
இன்று தந்தையர் தினம். அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள். (ஓவியம் - AI )
எந்தையின் நினைவுகள் கூடவே
அன்னையின் நினைவுகள்!
அன்னையின் நினைவுகள் கூடவே
அன்னை மண்ணின் நினைவுகள்!
இந்நாளில் எந்தையரை ,
இந்நாளில் அன்னையரை,
இந்நாளில் அன்னை மண்ணை
நினைவில் வைப்போம்.
நினைவில் வைப்போம்.
எந்தையும் தாயும்... மகாகவி பாரதியார் - பாடகர் டி.என்.சேசகோபாலன்
https://www.youtube.com/watch?v=yiMVXlvVa8k
கவிதை; எந்தையும் தாயும்... மகாகவி பாரதியார்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
Friday, June 13, 2025
நோபல் பரிசினை ஏற்ற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான எழுத்தாளர் மிகையில் ஷோலகாவும் , நிராகரித்த எழுத்தாளர் சார்த்தரும்!
எழுத்தாளர் சுகன் பின்வரும் எழுத்தாளர் அம்பையின் கூற்றை முகநூலில் பகிர்ந்திருந்தார்:
"1964 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஜீன்-பால் சார்த்தர் மறுத்துவிட்டார், ஏனெனில் அதை ஏற்றுக்கொள்வது தன்னை ஒரு நிறுவனமாக மாற்றும், ஒரு எழுத்தாளராகவும் அறிவுஜீவியாகவும் சுயாதீனமாக செயல்படும் திறனைக் கட்டுப்படுத்தும் என்று அவர் நம்பினார். மேலும், அவர் எப்போதும் அதிகாரப்பூர்வ வேறுபாடுகளை மறுத்து வருவதாகவும், "நிறுவனமயமாக்கப்பட" விரும்பவில்லை என்றும் கூறினார். கூடுதலாக, நோபல் பரிசு பெரும்பாலும் "மேற்கத்திய எழுத்தாளர்கள் அல்லது கிழக்கின் கிளர்ச்சியாளர்களுக்கு" மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அந்த வார்ப்புருவில் பொருந்தக்கூடியவராகக் கருதப்படுவதை அவர் விரும்பவில்லை என்றும் அவர் கவலைப்பட்டார். ( அம்பை)"
Friday, June 6, 2025
'டொரோண்டோ'க் காட்சி: உயர்ந்த கோபுரங்கள்!
'டொரோண்டோ' அகநகரின் (Downtown)ஃப்ரொண்ட் வீதி, யுனிவெர்சிட்டி வீதி, யங் வீதி, குயீன் வீதி, இவற்றை உள்ளடக்கிய பகுதியைக் கனடாவின் நிதி மையம் என்பார்கள் (Financial Center). இந்நிதி மையத்தையும், ஒண்டாரியோ வாவியையும் ஊடறுத்தபடி கார்டினர் நெடுஞ்சாலை செல்லும். நிலத்திலிருந்து உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை இது.
இவ்விதம் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை என்பதால் , ஒண்டாரியோ வாவியை நகரத்திலிருந்து பிரித்து விடுகின்றது. மிகவும் முக்கியமான , நில மதிப்புள்ள பகுதியை இந்நெடுஞ்சாலை வீணாக்குகின்றது என்று விமர்சனங்களும் அவ்வப்போது எழுவதுண்டு. அது ஒருவகையில் உண்மைதான். ஆரம்பத்தில் கிழக்கில் லெஸ்லி வீதியிலிருந்து ஆரம்பமாகிய இந்நெடுஞ்சாலை இப்போது டொன்வலிப் பார்க் வே நெடுஞ்சாலையிலிருந்து ஆரம்பமாகின்றது. லெஸ்லி தொடக்கம் டொன்வலிப் பார்க் வே நெடுஞ்சாலை வரையிலான பகுதி நீக்கப்பட்டு, அப்பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டு விட்டது.
இது போல் கார்டினர் நெடுஞ்சாலை முழுவதுமாக நீக்கப்பட்டு, அதை நிலத்துக்குக் கீழ் செல்லும் வகையில் அமைப்பதனால் நன்மையுண்டு என்று அவ்வப்போது இது பற்றி அரசியல்வாதிகள் சிலர் கருத்துகள் கூறுவதுண்டு.
இது ஒருவிதமிருக்க, எனக்கு இந்நெடுஞ்சாலையூடு இரவு கவிந்திருக்கும், போக்குவரத்து குறைந்து அமைதியிலாழ்ந்திருக்கும் பொழுதுகளில் பயணிப்பது மிகவும் பிடிக்கும். அதுபோல் அதிகாலை, அந்திப்பொழுதுகளில் , போக்குவரத்து குறைவாகக் காணப்படும் பொழுதுகளிலும் பயணிப்பதும் பிடிக்கும். முக்கிய காரணம், சுற்றிவர நெடியதாக, உயர்ந்திருக்கும் கட்டட்டங்களை ஊடறுத்து, காற்றினூடு பறப்பது போன்றதோர் உணர்வினை , நிலத்திலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் இந்நெடுஞ்சாலை தருவதுதான்.
இங்குள்ள புகைப்படம் , இவ்விதம் எழுத்தாளர் கடல்புத்திரனின் வாகனத்தில் பயணியாகப் பயணிக்கையில் நான் எடுத்த புகைப்படம். 'டொரோண்டோ' அகநகரத்தின் உயர்மாடிக் கட்டடங்களையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள். இவை சாய்ந்து இருப்பதுபோல் தெரிந்தாலும், இவை சாய்ந்த கோபுரங்கள் அல்ல. ஐபோன் கமராவின் மூலம் புகைப்படத்தை எடுத்த கோணத்தின் விளைவு அது.
Tuesday, June 3, 2025
இலக்கணமும், இலக்கண மீறல்களும், வழக்கும்!
தமிழ் இலக்கணம் தெரியாத பலர் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றார்கள். வழக்கில் இலக்கண முரண்பாடுகள் நிறைய உள்ளன. வழக்கில் பாவிக்கப்படுவதால் அதுவே சரியென்று நினைத்து விடுகின்றோம். வழக்கில் நீண்ட காலமாகப் பாவிப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை.
ஆனால் ஒருவர் அம்முரண்பாடுகளை நீக்கி , இலக்கணம் மீறாமல் பாவிக்கும் சமயங்களில், அது உண்மை இலக்கணம் என்பது தெரியாமல் சரி, பிழை கண்டு பிடிக்க வந்து விடுகின்றார்கள். இதை என்னவென்று சொல்வது?
உதாரணத்துக்குக் கைமாறு, மெய்ஞானம், விஞ்ஞானம் என்று வழக்கில் பாவித்து வருகின்றோம். உண்மையில் இது இலக்கணரீதியாகப் பிழையென்றாலும், வழக்கில் நீண்ட காலமாகப் பாவிக்கப்பட்டு வருவதால், இவற்றை ஏற்பதில் எனக்குத் தயக்கமில்லை. உண்மையில் நானும் கூட விஞ்ஞானம் என்றுதான் பாவித்து வருகின்றேன். ஆனால் சில சமயங்களில் இலக்கணம் மீறாமலும் பாவிக்க நான் விரும்புவதுண்டு.
அண்மையில் மெய்ம்மறந்து என்று என் முகநூற் பதிவொன்றில் பாவித்திருந்தேன். இலக்கணரீதியாக மெய்ம்மறந்து என்று பாவிக்க வேண்டுமென்றாலும், நானும் வழக்கமாக மெய்மறந்து என்றுதான் பாவிப்பதுண்டு. ஆனால் மேற்படிப் பதிவில் மெய்ம்மறந்து என்று பாவித்திருந்தேன். அவ்விதம் ஒரு காட்சியில் என்னை இழந்திருந்தததன் ஆழத்தை, அளவினை மெய்ம்மறந்து என்னும் உச்சரிப்பு காட்டுவதாக எனக்குத் தென்பட்டதால் அவ்விதம் பாவித்திருந்தேன்.
இலக்கணம் மீறல்கள் பற்றிய உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
இவ்விலக்கண விதி பற்றிய ஆறுமுகநாவரின் 'இலக்கணச் சுருக்கம்' நூலின் பக்கமொன்றினையும் கீழே பகிர்ந்திருக்கின்றேன்.
Sunday, June 1, 2025
யாழ் பொதுசன நூலக நினைவுகள்....
ஜூன் 1, 1981. யாழ் பொது சன நூலகம் எரிக்கப்பட்ட நாள். யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். நாகரிகத்தின் உச்சியிலிருப்பதாகக் கூறிப் பெருமிதமுறும் மனித இனமே நாணித்தலை குனிய வேண்டிய தினம். நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதிகளெல்லாம் நெருப்போடு நெருப்பாக அழிந்தே போய்விட்டன. இவற்றின் அழிவினைத் தாங்க மாட்டாத பாதிரியார் ஒருவரும் (தாவீது அடிகள்) மாரடைப்பால் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
பொதுவாக அவ்வப்போது யாழ் பொதுசன நூலகம் பற்றிய நினைவுகள் தோன்றுவதுண்டு. இந்த நூலகத்துடனான எனது உறவு பின்னிப்பிணைந்ததொன்று. என் மாணவப்பருவத்துத் தோழர்களில் முக்கியமான தோழனாக விளங்கிய நூலகம். பன்முகப்பட்ட அறிவினை அள்ளி வழங்கிய சிறந்த நண்பன். எவ்வித எதிர்பார்ப்புகளுமற்று அதனை வாரி வழங்கிய நண்பன். யாழ் பொது நூலகத்தை எண்ணியதும் எப்பொழுது முதன் முதல் அதனுடனான எனது தொடர்பு ஏற்பட்டது என்று எண்ணிப்பார்க்கின்றேன்.
என் பால்யகாலத்தில் நான் என் ஆரம்பக் கல்வியை வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அதன் பின்னர் எட்டாம் வகுப்பிலிருந்து கல்விப்பொதுத்தராதர உயர்தர வகுப்பு வரை யாழ் இந்துக்கல்லூரியில் தொடர்ந்தது. வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் பாடசாலை விடுமுறையின்போது என் அம்மாவின் சகோதரியொருவரின் பிள்ளைகள் வவுனியா வருவார்கள். அல்லது நாம் யாழ்ப்பாணத்துக்கு ஆச்சி வீடு செல்வோம். அவ்விதம் செல்கையில் அக்கா முறையிலான எனது ஒன்று விட்ட சகோதரியொருவர் , என்னைவிட சுமார் ஏழு வயது மூத்தவர், யாழ் நூலகத்துக்கு செல்கையில் என்னைத் துணைக்கழைத்துச் செல்வார். காற்சட்டையும் , சட்டையுமாக நானும் அவருடன் செல்வேன். அக்காலகட்டத்தில் நான் பொதுவாக நடக்கும்போது மிகவும் விரைவாக நடந்து செல்வேன். என்னைத் துணைக்கழைத்துச் செல்லும் அக்காவுக்கோ என் நடை வேகத்துடன் ஈடு கட்டி நடப்பதற்குச் சிரமமாயிருக்கும். இருந்தாலும் அவரும் இயலுமானவரையில் ஈடு செய்தபடி என்னுடன் நடந்து வருவார். ஆயினும் அவ்விதம் நடந்து வருகையில் 'ஏய் என்னடா இந்த நடை நடக்கிறே. மெதுவாப் போடா. மூச்சு வாங்குது 'என்னும் அர்த்தப்பட வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டுதான் கூட நடந்து வருவார். அவருடன் யாழ் நூலகத்துச் சென்றதுதான் முதற் தடவை.
Saturday, May 31, 2025
"இணையக் காப்பக'த்தில் எனது ஆக்கங்கள்!
வணக்கம் நண்பர்களே! இணையக் க் காப்பகத்தில் (Archive.org) என்னுடைய பல படைப்புகள் , பதிவுகள் இணைய இதழில் வெளியான படைப்புகளின் தொகுப்புகள் உட்பட மேலும் பல படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
Sunday, May 25, 2025
அஞ்சலி: மறக்க முடியாத பேராசிரியர் நிமால் டி சில்வா!
பேராசிரியர் நிமால் டி சில்வா மறைந்த செய்தியினை என்னுடன் கட்டடக்கலை படித்த சக கட்டடக்கலை மாணவர்கள் அறியத்தந்திருந்தனர். ஆழ்ந்த இரங்கல். இவரை ஒரு விதத்தில் மறக்க முடியாது. அமைதியானவர். எப்போதும் மெல்லிய புன்னகையுடன் காணப்படுபவர். அன்பாக உரையாடுபவர். பாரம்பர்யக் கட்டடக்கலை என்னும் பாடத்தை எமக்குப் படிப்பித்தவர் இவர். நான் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வு நூலை எழுதுவதற்கு இவரும் ஒரு காரணம்.
இவர் றோலன்ட் சில்வா என்பவரின் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு என்னும் கட்டுரையை அறிமுகப்படுத்தியபோது அது என்னைப் பிரமிக்க வைத்தது. அநுராதபுர நகரம் பெளத்தர்களின் புனித நகர். இலங்கையின் ஆரம்ப ராஜதானிகளில் ஒன்று. பல புகழ்பெற்ற தாதுகோபங்களை உள்ளடக்கிய நகர். யாழ்தேவியில் கொழும்பு செல்லும் எவரும் அநுராதபுர நகரின் தாதுகோபங்களைக் காணாமல் செல்ல முடியாது. ரொலனட் டி சில்வாவின் ஆய்வின்படி பண்டைய அநுராதபுர நகரமானது நடுவில் சந்தையையும், நகரைச் சுற்றி வட்ட ஒழுங்கில் தாதுகோபங்களையும் கொண்டதாக விளங்கியது. என் கண் முன்னால் பண்டைய அநுராதபுர நகரம் விரிந்து பிரமிப்பைத்தந்தது.
பெளத்தர்களின் கட்டக்கலையில் வட்டம் முக்கிய பங்கினை ஆற்றுமொன்று. தாதுகோபங்கள் வட்ட வடிவமானவை. அது போல் நகரங்களின் நகர அமைப்பிலும் வட்ட வடிவம் ஆதிக்கம் செலுத்தியதை ரோரல்ன் சில்வாவின் அநுராதபுர நகர் அமைப்பு பற்றிய கட்டுரை புலப்படுத்தும். மாறாக, இந்துக்கள் கட்டடக்கலையில் சதுர (அல்லது செவ்வகம்) வடிவம் ஆதிக்கம் செலுததுவதை அவதானிக்கலாம்.
என் எழுத்தார்வத்தை ஊக்குவித்தவர் ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கம்! - வ.ந.கிரிதரன் -
- இன்று பாரிஸில் ஊடகவியலாளர் எஸ்.கே.ராஜென் ஏற்பாட்டில் நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் 'ஈழநாடு' எஸ்.கே. காசிலிங்கம் அவர்களின் அமுத விழாவினையொட்டி வெளியான மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை. -
என்னால் ஒருபோதுமே ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கத்தை மறக்க முடியாது. ஒரு வகையில் என் எழுத்துலக வாழ்க்கைக்குச் சுழி போட்டது ஈழநாடு மாணவர் மலர் என்றால், அதற்குக் காரணமானவர் அப்போது மாணவர் மலருக்குப் பொறுப்பாக் இருந்த 'காசி' அவர்கள். அண்மைக்காலம் வரையில் அவரைக் காசி என்னும் பெயரிலேயே அறிந்து வைத்திருந்தேன். எஸ்.கே.காசிலிங்கம்தான் அவர் என்பதை அறிந்திருக்கவில்லை.
Thursday, May 15, 2025
நூலகத்தில் கிடைத்த புதையல்!
வழக்கம் போல் ஸ்கார்பரோ நூலகக் கிளைகளில் ஒன்றான , எக்ளின்டன் - கென்னடி சந்திக்கண்மையிலிருக்கும் கிளைக்கு நேற்று மாலை சென்றிருந்தேன். அங்கு நூல்கள் சிலவற்றை விற்பனைக்குப் வைத்திருந்தார்கள். அவற்றிலொன்று இந்த நூல். கற்பகம் பதிப்பக வெளியீடான (2023) பாரதியார் கவிதைகள். நூலக நூல்களில் ஒன்றல்ல. யாரோ ஒருவர் நூலகத்துக்கு இலவசமாக வழங்கியிருக்க வேண்டும். விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.
என் அபிமானக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் , ஆளுமைகளின் அல்லது அவர்கள் பற்றிய நூல்களை கண்டால் வாங்கி விடுவேன். இதனையும் அவ்விதம் வாங்கிக்கொண்டேன்.
பிழைத்த தென்னந்தோப்பு - மகாகவி பாரதியார்
வயலிடை யினிலே - செழுநீர்
மடுக் கரையினிலே
அயலெவரு மில்லை - தனியே
ஆறுதல் கொள்ள வந்தேன்.
காற்றடித்ததிலே - மரங்கள்
கணக்கிடத் தகுமோ?
நாற்றினைப் போலே - சிதறி
நாடெங்கும் வீழ்ந்தனவே!
Sunday, May 4, 2025
வெகுசனப் படைப்புகளின் முக்கியத்துவம் பற்றி....
ஒருவரின் வாசிப்புப் படிக்கட்டில் அம்புலிமாமாக் கதைகளுக்கும் ஒரு தேவையுண்டு. அது போன்றதுதான் வெகுசனப் படைப்புகளின் முக்கியத்துவமும். யாரும் நேரடியாகத் தீவிர வாசிப்புக்குள் குதித்து விடுவதில்லை. எல்லோருமே திருஞானசம்பந்தராக இருந்து விடுவதில்லை.
சுஜாதாவின் முக்கியத்துவம் அவரது மொழி, அறிவியலை எளிய மொழியில் தமிழுக்குள் கொண்டு வந்தது, தமிழில் மர்மக்கதை இலக்கியப் பிரிவுக்கான அவரது பங்களிப்பு எனக் கூறலாம். வெவ்வேறு வாசிப்புப் படிக்கட்டுகளில் உள்ள வாசகர்களுக்கான தேவைகளை இவ்விதமான வெகுசனப் படைப்புகள் பூர்த்தி செய்கின்றன.
நம் படைப்பாளிகள் பலருக்கு ஒரு குணம் உண்டு. அவர்கள் தம் பால்ய, பதின்மப் பருவங்களில் வெகுசனப் படைப்புகளில் மூழ்கிக் கிடப்பார்கள். அவற்றினூடு வளர்ந்து வந்திருப்பார்கள். வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கு வந்ததும் , தம்மை வளர்த்த இவ்வகையான வெகுசனப் படைப்புகளைப் பற்றிக் கூறுவதைத்தவிர்த்து விடுவார்கள். பதிலாக இவ்வகையான படைப்புகளைப் பற்றி இளக்காரமாகப் பேசத்தொடங்கி விடுவார்கள். அது அவர்களது பெருமை அல்ல சிறுமை என்பேன்.
Monday, April 28, 2025
வானியலில் ஆர்வம் மிக்க வழக்கறிஞர் செந்தில்நாதனும், அவரது வானியல் பற்றிய நூலும்!
எனக்கு இவருடன் நேரில் பழக்கமில்லை. ஆனால் என் பதின்ம வயதுகளில் என் கவனத்தை ஈர்த்த ஆளுமைகளில் இவரும் ஒருவர். அதற்குக் காரணம் இவரது வானியல் மீதான ஆர்வம்தான்.
இவரது வீடு கஸ்தூரியார் வீதியில், நாவலர் வீதிக்குச் சிறிது தெற்காக இருந்தது. மாடி வீடு. மொட்டை மாடியில் ஒரு தொலைக்காட்டி எப்பொழுதும் விண்ணை ஆராய்வதற்குரிய் வகையில் தயாராகவிருக்கும். அதுதான் என் கவனத்தை இவர் ஈர்க்கக் காரணம். அதனால் அந்த வீடு அக்காலகட்டத்தில் யாழ்ப்பாண நகரில் முக்கியமானதொரு நில அடையாளமாக விளங்கியது.
Saturday, April 26, 2025
கிடைக்கப்பெற்றோம் - எழுத்தாளர் ஜோதிகுமாரின் 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்'
பதிவுகள் இணைய இதழில் வெளியான 'நந்தலாலா' ஜோதிகுமாரின் கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டு, 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் தொகுப்பு வெளிவந்துள்ளது. இத்தொகுப்பினை சவுத் விஷன் புக்ஸ் (சென்னை) , நந்தலாலா (இலங்கை) ஆகிய பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. நூலின் அட்டை ஓவியத்தை வரைந்திருப்பவர் சதானந்தன். நந்தாலா படைப்புகளை வெளிவர் உதவி செய்யும் திரு.சி.ராதாகிருஷ்ணன் இந்நூல் வெளிவருவதற்கும் உதவியுள்ள விபரத்தை ஜோதிகுமார் முன்னுரையில் தெரிவித்துள்ளார். ஜோதிகுமார் தனது முன்னுரையில் கட்டுரைகளை வெளியிட்ட பதிவுகள் இணைய இதழுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்துள்ளார். அதற்காக பதிவுகள் சார்பில் நன்றி.
இந்நூலில் ஜோதிகுமார் தான் சந்தித்த முக்கிய ஆளுமைகள் சிலரைப்பற்றிய அனுபவங்களை விபரித்துள்ளார். தான் வாசித்த நூல்கள் சிலவற்றைப்பற்றி, அவற்றுக்குப்பின்னால் மறைந்துள்ள அரசியல் பற்றிய தன் பார்வைகளை வெளிப்படுத்தியுள்ளார். இலக்கியவாதிகளைப்பற்றி எழுதியிருக்கின்றார். மலையகம் தந்த முக்கிய இலக்கியவாதியான ஸி.வி.வேலுப்பிள்ளையின் சமரசமற்ற போக்கினைப்பற்றி எடுத்துரைத்திருக்கின்றார்.
மறக்க முடியாத எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறந்த நாள் ஜூலை 10. என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் இ.பா. தனது மனைவி இந்...

பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...