'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Saturday, February 15, 2025
பெரியார் என்னும் மகா மனிதர்!
பெரியார் திருமணத்தை எதிர்த்தாராம்..
அதனால்
பெரியார் குடும்பத்தை எதிர்த்தாராம்.
மனிதர் மிருகங்கள் போல்
மாறி மாறி உறவு கொள்ளலாமாம் என்றாராம்.
மூடரே!
பெரியார் எதிர்த்தது குடும்பத்தை அல்ல.
பின்
திருமணம் என்னும் சடங்கை.
ஏன்?
அது பெண்ணை அடிமையாக்கியது
என்பதனினால்.
சடங்கைத்தான் எதிர்த்தார்.
சேர்ந்து வாழ்ந்து சந்ததி
பெருக்கும் அன்புமிகு
உறவை அல்ல.
சடங்கை ஏன் எதிர்த்தார்.
சடங்கு எப்படி பெண்ணை
அடிமையாக்கியது?
வெள்ளைக்காரன் சட்டம் போடும் வரைக்கும்
வெங்காயங்களே
பெண்களை உடன் கட்டை ஏற்றினார்களே
ஏன்? அந்தச் சடங்கால்தானே.
அதனால்.
Tuesday, February 4, 2025
கவிதை பற்றிய உரையாடலொன்று...
கவிஞர் கற்சுறா தன் முகநூற் பக்கத்தில் பின்வருமாறு கேள்வியொன்றினை எழுப்பிக் கவிதையொன்றினைப் பகிர்ந்திருந்தார். அக்கவிதையை அவர் 2014இல் பகிர்ந்திருக்கின்றார்.
கற்சுறாவின் குறிப்பு - கவிதை பற்றிய ஈர்ப்புடையோர் சொல்லுங்கள். சொல்லுங்கள். என்னாச்சு? 11 வருட உரையாடல்.
அவரது கவிதை -
நிழலை நகர்த்தி
உயர்த்தியது
சூரியன்.
நிழல் குளிர
சூடு பட்ட இடத்தில்
வெளிச்சம்.
வெளிச்சத்தில் சூடற்று
குளிர்ந்து போன
நிழலுக்குள்
ஒழிவதென்ன
விளையாட்டு?
கற்சுறாவின் இக்கேள்விக்கும் சிலர் விருப்பு தெரிவித்திருந்தார்கள். ஆனால் கருத்துத் தெரிவிக்கவில்லை. பொதுவாகவே முகநூல் நண்பர்களின் பதிவுகளை வாசிக்காமலேயே விருப்பு தெரிவிப்பவர்கள்தாம் அதிகம். இந்நிலையில் கற்சுறா எதற்காக மீண்டும் 11 வருடங்கள் காத்திருகக் வேண்டுமென்று தோன்றியதால் என் எதிர்வினையை இங்கு முன் வைத்து , கற்சுறாவின் ஆதங்கத்தைத் தீர்த்து வைக்கலாமென்று முடிவு செய்திருக்கின்றேன். அதன் விளைவே கீழுள்ள என் எதிர்வினை.
ஒரு கவிதையைப் பலரும் பலவாறு புரிந்து கொள்வர். இது நிச்சயம் என் புரிதல். நிச்சயமாகக் கற்சுறா இவ்விதமெல்லாம் சிந்தித்து இக்கவிதையை எழுதியிருக்க மாட்டார். அவரது ஆளுமையை ஓரளவு உணர்ந்தவன் என்னும் வகையில் நிச்சயமாக இக்கவிதை ஒரு வகை விமர்சனப்பாணியிலுள்ள கவிதையாகவே இருக்க முடியும். மானுட வாழ்க்கை பற்றியெல்லாம் சிந்தித்து நேரத்தைக் கடத்தும் ஆளுமை அவருடையது அல்ல.
Friday, January 31, 2025
பெரியாரும் தமிழும் திராவிடமும்! சூழ்ச்சியால் மொழிவாரியாகச் சிதறுண்ட தென்னாடு. இன்றும் சூழ்ச்சி தொடர்கிறது தமிழ்நாட்டைப் பிரிக்க! - நந்திவர்மப்பல்லவன்
[
பெரியாரைப் பொறுத்த அளவில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவையெல்லாம் தமிழ்தான். 'திராவிட மொழிகள்' என்னும் கட்டுரையில் (பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுதி 2 , பக்கம் 768) பெரியார் கூறுவதைச் சிறிது பார்ப்போம்.
அவர் எழுதிய மொழியாராச்சி (1948) நூலில் இடம் பெற்றுள்ள பகுதி இது. அப்பொழுது தென்னாடு தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, கேரளா என்று மொழிவாரியாகப் பிரிக்கப்படாத காலகட்டம். அப்போது இவ்விதம் தென்னாடு மொழிவாரியாகப் பிரிப்பதைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். இவ்விதம் பிரிப்பது ஆரியரின் சூழ்ச்சி என்று அவர் திடமாக நம்பினார். கருதினார். கன்னடம், தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகள் அனைத்துமே தமிழ்தான். வெவ்வேறு இடங்களில் பேசப்படுவதால் , வடமொழியின் ஊடுருவலால் தமிழ் இவ்விதம் இடத்துக்கிடம் பேசப்படுகிறது என்று அவர் கருதினார்.
மொழிவாரியாகப் பிரிக்கப்படாமல் இருப்பதற்காக தென் மாநிலங்கள் அனைத்தையும் ஒரு குடையில் கொண்டு வர வேண்டுமெனறு அவர் கருதினார். அதற்காக திராவிட மொழியென்பது தமிழ்தான். தெலுங்கு, கன்னடம் , மலையாளம் அனைத்தும் திராவிட மொழியான தமிழ்தான். திராவிடம் என்று அழைப்பதன் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய அனைத்து மாநிலங்களையும் தமிழகத்துடன் இணைக்க முடியும். இதன் மூலம் ஆரியரின் மொழிவாரி மாநிலப் பிரிவினைத் தவிர்க்க முடியும் என்று அவர் திடமாகக் கருதினார்.
Wednesday, January 29, 2025
தமிழ் எழுத்தாளர்களும், டிஜிட்டல் தொழில் நுட்பமும், ஒரு வேண்டுகோளும்! - வ.ந.கிரிதரன் -
தமிழ் எழுத்தாளர்கள் பலர் சமூக ஊடகங்களில் வந்து மேய்கிறார்கள். முட்டி மோதுகின்றார்கள். ஆனால் இணையத்தொழில் நுட்பம் அவர்கள்தம் கலையான எழுத்துக்கலைக்கு உதவக்கூடிய விடயங்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. தம் படைப்புகளைக்கூட வெளியிடுவதற்கு முயற்சி செய்வதில்லை. படைப்புகளை வெளியிடுவதென்றால் இன்னும் அச்சு வடிவில் தம் படைப்புகள் வெளிவர வேண்டுமென்றுதான் நினைக்கின்றார்கள். அவ்விதம் வெளியிடப் பணமில்லையே என்று அழுது வடிகின்றார்கள். இவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் வாழும் இன்றுள்ள உலகம் டிஜிட்டல் உலகம். எல்லாமே டிஜிட்டல் வசமாகிக்கொண்டு செல்லும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இவ்விதம் எண்ணுவது அவர்கள் காலத்தின் இயல்பையும், அது வழங்கும் பயன்களையும் அறிந்துகொள்ளவில்லையென்பதையே காட்டுகின்றது.
Monday, January 27, 2025
காலவெளி: கண்ணம்மாக் கவிதைகள் - அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பு ,பதிவுகள்.காம் வெளியீடு!
எனது காலவெளி - கண்ணம்மாக் கவிதைகள் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது. அதற்கான இணைப்பு - https://www.amazon.com/dp/B0DV76H5BS
நான் இருப்புப் பற்றிய தேடல் மிக்கவன். அறிவியலூடு இருப்புப் பற்றிய தேடலில் ஈடுபடுவதில் எனக்குப் பெரு விருப்புண்டு. எம்மைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சக் காட்சிகள் , குறிப்பாக நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானம் இவற்றில் மெய்ம்மறந்து நிற்பதில் மிகுந்த ஈடுபாடு மிக்கவன் நான். விரிந்திருக்கும் இரவு வானும், ஆங்கு தெரியும் சுடர்களும், கோள்களும், உப கோள்களும், எரி நட்சத்திரங்களும் என் மனத்தைக் கிளர்ச்சியடைய வைக்கின்றன. இருப்புப் பற்றிய சிந்தனைகளைத்தூண்டி விடுகின்றன.
இவ்வகையில் அல்பேர்ட் ஐன்ஸ்ட்டைனின் சார்பியற் கோட்பாடுகள் என்மேல் ஏற்படுத்திய பாதிப்பும், ஆதிக்கமும் முக்கியமானது. வெளி, நேரம் , ஈர்ப்புச் சக்தி பற்றிய அவரது சார்பியற் தத்துவங்கள் அறிவியற் துறையை மட்டுமல்ல, இருப்பு பற்றிய தத்துவத்துறையையும் மாற்றியமைத்தன என்பேன். குறிப்பாகக் காலவெளி என்னும் சொற்பதம் சிறப்பான சொற்றொடர். சிந்தையை விரிவடைய வைக்கும் தன்மை மிக்க சொற்றொடர்.
எழுத்தாளர்களின் கவனத்துக்கு....
அவ்வப்போது இலக்கிய உலகில் ஆதங்கங்கள் சில எழுவதுண்டு. யாராவது பிரபலமான தமிழக எழுத்தாளர் ஒருவரின் பெயரைக்குறிப்பிட்டு ஏன் அவரது பட்டியலில் நம்மவர் பெயர் இல்லை என்று கேள்வி கேட்டு ஆதங்கப்படுவதைத்தான் குறிப்பிடுகின்றேன்.
தமிழக வெகுசனப் பத்திரிகைகளில் இடம் பெறுவதால் அல்லது பிரபல இலக்கிய ஆளுமைகளின் பட்டியல்களில் இடம் பெறுவதால் வேண்டுமானால் ஓரளவு அறிமுகம் மக்கள் மத்தியில் கிடைக்கலாம். ஆனால் வரலாற்றில் உங்களை நிலை நிறுத்தப்போவது இவ்வகையான அறிமுகங்கள் அல்ல.
உங்களை வரலாற்றில் நிலைநிறுத்தப்போவது உங்கள் எழுத்துகளே.கணியன் பூங்குன்றனாரின் வரிகள்தாம் இன்று அவரை எமக்கு அறியத்தருகின்றன. சிலப்பதிகாரம்தான் இளங்கோவடிகளை எமக்கு அறியத்தருகின்றது. அவர்கள்தம் எழுத்துகளே நிலைத்து நிற்கின்றன. அவர்களைப்பற்றிய ஏனையோர் புகழுரைகள் அல்ல. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Wednesday, January 22, 2025
தத்துவம் அறிவோம்: இமானுவல் கான்டின் (Immanuel Kant): அனுபவம் கடந்த கருத்தியல்வாதம் ( Transcendental Idealism )
இமானுவல் கான்டின் கருத்தியல்வாதக்சிந்தனைகள் ஈர் உலகங்களைப்பற்றி விபரிக்கின்றது. உண்மையாக எமக்கு வெளியில் இருக்கும் உலகம். அதனை அவர் Noumenon என்றழைத்தார். அடுத்தது எம் அனுபவங்களுக்கு உட்பட்ட உலகம். இதனை அவர் Phenomenon என்றழைத்தார்.
நாம் எம் ஐம்புலன்களால் எம்மைச் சுற்றியுள்ள இப்பிரபஞ்சத்தை உள்வாங்குகின்றோம். எம் சிந்தனையின் விரிவு, புலன்களின் மூளைக்குக்கொண்டு செல்லும் உணர்வுகள், காட்சிகள், சப்தங்கள் போன்றவற்றின் மூலம் நாம் எம்மைச்சுற்றியுள்ள பிரபஞ்சத்தைப்பற்றிய வடிவினை, அதன் இயல்பினைப்பற்றிய சித்திரமொன்றினை உருவாக்கிக்கொள்கின்றோம்.
இவ்விதமாக எமக்குத்தெரியும் யதார்த்தம் அல்லது உண்மை (Reality)) என்பது எம்மால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஆனால் அது உருவாக்கப்பட்டதற்குக் காரணமாக எமக்கு வெளியில் இருக்கும் உண்மையான உலகத்தினை நாம் ஒருபோதுமே பார்க்க முடியாது. உணர முடியாது. ஏனென்றால் அது எம் புலன்களுக்கு, எம் சிந்தைக்கு அப்பாற்பட்டது. உண்மையில் அவ்விதமிருக்கும் உண்மையான உலகு எம்மில் ஏற்படுத்தும் விளைவே நாம் அறிந்திருக்கும், புரிந்திருக்கும் இந்தப் பிரபஞ்சம்.
சிறந்த கவிதை பற்றிச் சில சிந்தனைகள்....
கவிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றொரு கூற்றின் அடிப்படையில் ஒரு சர்ச்சை தற்போது கிளம்பியுள்ளது. இது புதிய சர்ச்சை அல்ல. மாற்றங்கள் நிகழ்கையில் இது போன்ற சர்ச்சைகள் ஏற்படுவதும் இயல்புதான். ஒரு காலத்தில் கவிதையென்றால் அது மரபுக் கவிதைதான். மரபுக்கவிதை எழுதுவதற்கு யாப்பிலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். அதன் காரணமாகக் கவிஞர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.
மரபை மீறிப் புதுக்கவிதை பிறந்தபோது புற்றீசல்களாகப் புதுக்கவிஞர்கள் பிறந்தனர். இன்றுள்ள முன்னணிக் கவிஞர்கள் பலரும் அவ்விதம் படையெடுத்த கவிஞர்களிலிருந்து உருவானவர்கள்தாம். அப்பொழுதும் மரபில் கோலோச்சிக்கொண்டிருந்த மரபுக்கவிஞர்கள் புதுக்கவிஞர்களை ஏளனத்துடன் பார்த்தனர். யாப்பு தெரியாதவரெல்லாம் கவிதை எழுத வந்து விட்டார்கள் என்று எள்ளி நகையாடினார்கள். அன்றிலிருந்து இன்று வரை உலகின் எப்பாகங்களிலிருந்தும் வெளியாகும் பத்திரிகை, சஞ்சிகையின் கவிதைப் பக்கங்களைப் பாருங்கள். இலட்சக்கணக்கில் தமிழ்க் கவிதைகளை, கவிஞர்களைக் காணலாம். இவர்களில் பலரைத் தமிழ் இலக்கிய உலகு அறிந்திருக்காது. ஆனால் இவர்களில் பலர் முகங்களை நாம் அறிந்திருக்காதபோதும் இவர்களின் படைப்புகள் வரலாற்றில் நிலைத்து நிற்குமா என்பதைப்பற்றி நாம் எதுவும் கூற முடியாது. இன்று டிஜிட்டல் தொழில் நுட்பம் காரணமாக இவர்களது படைப்புகள் பலவும் வெளியான பத்திரிகை, சஞ்சிகைகளின் ஆவணப்படுத்தல் மூலமாக வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகின்றது. இன்னும் பல நூறு ஆண்டுகளின் பின்னர் இவர்களின் பலரின் கவிதைகள் ஒரு காலகட்டக் கவிதைகளாக இனங்காணப்படும் சாத்தியங்களும் உண்டு.
Sunday, January 19, 2025
ஜார்ஜ் வில்ஹெம் ஃபிரிட்ரிக் ஹெகலின் புறநிலைக் கருத்துமுதல்வாதச் சிந்தனைகள், இயங்கியல் மற்றும் அந்நியப்படல் சிந்தனைகளைப் பற்றியோர் அலசல்! - வ.ந.கிரிதரன் -
கார்ல் மார்க்ஸின் மாக்சியச் சிந்தனைகளுக்கு அடிப்படை ஹெகலின் சிந்தனைகள். மார்க்ஸ் ஹெகலின் சிந்தனைகளை மறுத்து, அவற்றைத் திருத்தி தன் சிந்தனைகளை வடிவமைத்தார் என்று சிலர் கருதுவர். ஹெகலின் சிந்தனைகள் மார்க்சிலேற்படுத்திய பாதிப்புகளே மார்க்சியச் சிந்தனைகள் எனக் கருதுவோரும் உளர். நாம் காணும் உலகானது இப்பிரபஞ்சமானது பொருள்வயப்பட்டதல்ல. பிரபஞ்ச உணர்வு அல்லது பிரபஞ்ச ஆன்மாவின் விளைவே. எம்மைச் சுற்றி விரிந்திருக்கும் இந்தப் பொருள்வயமான பிரபஞ்சமானது அச்சக்தியின் விளைவே என்பது ஹெகலின் கருத்து. மனிதர் ,
அவரைச்சுற்றி இருக்கும் பொருள் அனைத்துமே பிரபஞ்ச உணர்வு அல்லது பிரபஞ்சச் சக்தியின் விளைவு என்று கருதும் ஹெகலின் சிந்தனை கருத்துமுதல்வாதச் சிந்தனை. அதே சமயம் பொருள் அனைத்தும் வேறான பிரபஞ்சச் சக்தியின் விளைவே என்று அவர் கருதுவதால் அவரது கருத்து முதல்வாத சிந்தனைகளைப் புறநிலைக் கருத்துமுதல்வாதச் சிந்தனைகள் என்பர்.
Thursday, January 16, 2025
எழுத்தாளர் கற்சுறாவுடன் ஒரு முகநூற் தர்க்கம்! - வ.ந.கிரிதரன் -
![]() |
எழுத்தாளர் கற்சுறா |
எழுத்தாளர் கற்சுறா புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாகப் புகலிடத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான ஆளுமையானவர்களில் ஒருவர். கவிதை, விமர்சனம், இதழியல் என இவரது பங்களிப்பு பரந்து பட்டது. எக்ஸில், அறிதுயில் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இருந்தவர்.
இவரது விமர்சனக்கட்டுரைகள் மிகுந்த சீற்றத்துடன் கர்ச்சிப்பவை. அவற்றில் கூறப்படும் விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்களை வேண்டி நிற்பவை. ஆனால் அக்கட்டுரைகளில் இவர் கையாளும் விமர்சனப் போக்கு காரணமாக, இவர் எதிர்பார்க்கும் கலந்துரையாடல்கள் பெரும்பாலும் நடைபெறுவதில்லை. அது துரதிருஷ்டமானது. அதற்குக் காரணமாக இவர் கையாளும் விமர்சனப்போக்கே இருந்து விடுவது வருத்தத்திற்குரியது.
உதாரணத்துக்கு அண்மையில் 'டொரோண்டோ'வில் நடைபெற்ற கவிஞர் சேரனின் 'காஞ்சி' நூல் வெளியீட்டில் எழுத்தாளர்களான 'காலம்' செல்வம், 'நான்காவது பரிமாணம்' க.நவம் ஆகியோர் பற்றி இவர் தன் முகநூற் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:
Monday, January 13, 2025
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
மங்கலம் பொங்கட்டும். எங்கும் தங்கட்டும். பொங்கல் நன்னாளுக்கும் என் எழுத்துலக வாழ்க்கைக்குமோரு தொடர்பு உண்டு. ஒரு வகையில் என் எழுத்தார்வத்துக்குத் தீனி போட்டு வளர்த்தெடுத்தது பொங்கல் என்று கூறலாம். நான் ஏழாம் வகுப்பில் வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தபோது என் முதலாவது கவிதை, எழுத்து அச்சுருவில் வெளியானது. 1970 பொங்கலையொட்டி வெளியான சுதந்திரன் பத்திரிகையில் வெளியான எனது 'பொங்கலோ பொங்கல்' என்னும் கவிதைதான் அது. அதன் பின்னர் வெற்றிமணி சிறுவர் சஞ்சிகையில் எனது பொங்கல் பற்றிய கட்டுரையும் , கவிதையும் வெளியாகின. ஈழநாடு மாணவர் மலரிலும் பொங்கல் பற்றிய எனது கட்டுரையொன்று வெளியானது. இவையெல்லாம் நெடுங்கட்டுரைகள் அல்ல. சிறுவனான என் எழுத்துலக ஆர்வத்துக்குத் தீனி போட்ட குறுங்கட்டுரைகள். ஆனால் எவை என் எழுத்துலக வாழ்க்கையின் பலமான அத்திவாரங்கள். அதனால்தான் கூறினே பொங்கல் எழுத்தார்வத்துக்குத் தீனி போட்ட திருநாளென்று.
இத்திருநாள் எப்படி உர்வானது என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் இத்திருநாள் உழவுத்தொழிலை, உழவர்களை, உழவர்களுக்கு, உலகுக்கு உறுதுணையாக இருக்கும் கதிரை, எருதை நன்றியுடன் நினைவு கூர்ந்திடும் திருநாள். எம் குழந்தைப் பருவத்திலிருந்து நாம் பங்கு பற்றிய, மகிழ்ந்து கொண்டாடிய, கொண்டாடிக்கொண்டிருக்கும் திருநாள். அதுதான் முக்கியமானது. அவ்வகையில் எம் வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைந்திருக்கும் திருநாள்.
இத்திருநாளில் அனைவர் வாழ்க்கையிலும்
இன்பம் பொங்கட்டும்.
நல் எண்ணங்கள் பொங்கட்டும்.
போர்கள் மலிந்த உலகில் அமைதி பொங்கட்டும்.
வர்க்கம், வர்ணம், மதம், இனம், மொழி எனப்
பிரிந்து கிடக்கும் மானுட சமுதாயத்தின் மத்தியில்
இணக்கம் பொங்கட்டும்.
புரிந்துணர்வு பொங்கட்டும்.
அன்பு பொங்கட்டும்.
போரொழிந்து, அன்பு நிறைந்து ,
புவியெங்கும் ஏற்றம் பொங்கட்டும்.
பொங்கலோ பொங்கலென்று
உவகை மிகுந்து நாமும்
பூரிப்பு நிறைந்து
பொங்கியெழுவோம்.
பொங்கியெழுவோம்.
Sunday, January 12, 2025
உமா மகேஸவரியின் 'யாரும் யாருடனும் இல்லை'
பல வருடங்களாக வாங்கி வைத்திருந்த நாவலொன்று என் ஏனைய அளவில் பெருத்த பெரு நாவல்களுக்கிடையில் மறைந்து போய்க் கிடந்தது. இன்று என் கண்ணில் பட்டது. நாவல் உமா மகேஸவரியின் 'யாரும் யாருடனும் இல்லை' . தமிழினி பதிப்பக வெளியீடு.
நான் பொதுவாக நாவலொன்றை மேலோட்டமாக வாசித்துப் பார்ப்பேன். நாவல் பிடித்திருந்தால் மீண்டும் விரிவாக, ஆழ்ந்து வாசிப்பேன். அவ்வாசிப்பிலும் மிகவும் பிடித்திருந்தால் அவ்வப்போது நான் வாசிக்கும் நாவல்களில் ஒன்றாக அந்நாவலும் ஆகிவிடும். இது என் வாசிப்பின் முறை. இந்நாவலையும் அவ்வகையில் மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். அவ்வாசிப்பின் விளைவாக எழுந்த எண்ணங்களே இப்பதிவு.
Saturday, January 11, 2025
அஞ்சலி: எழுத்தாளர் அந்தனி ஜீவா மறைந்தார்!
எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் மறைவு பற்றிய தகவலை எழுத்தாளர் ஜவாத் மரைக்காரின் முகநூர் பதிவு மூலம் அறிந்தேன். துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்.
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் அந்தனி ஜீவா அவர்கள் முக்கிய ஆளுமைகளில் ஒருவர். மலையகத்தமிழ் இலக்கியம் பற்றிய, மலைய அரசியல் பற்றிய இவரது நூல்கள், (கவிதை, கட்டுரைத் தொகுப்புகள் உட்பட) முக்கியமானவை. நாடகம், விமர்சனம், இதழியல், பதிப்பகச் செயற்பாடுகள் என இவரது பங்களிப்பு பரந்து பட்டது. இலங்கையிலிருந்து வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான இவரது கலை, இலக்கியப் பதிவுகள் முக்கியமானவை.
அறிஞர் அ.ந.கந்தசாமி மீது பெரு மதிப்பு கொண்டவர். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப்பெற்ற சிலருள் இவரும் ஒருவர். அ.ந.க பற்றிய இவரது கட்டுரைகள், 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தினகரன் தொடர், 'அநக ஒரு சகாப்தம்' என்னும் நூல் ஆகியவை அ.ந.கந்தசாமியை எம் தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைத்ததில் முக்கியமானவை. எனக்கு அ.ந.கந்தசாமியின் கலை, இலக்கிய மற்றும் அரசியற் பங்களிப்புகள் பற்றி விரிவாக அறியத்தந்தவை இவரது அ.ந.க பற்றிய கட்டுரைகளே.
Friday, January 10, 2025
எல்.ஜோதிகுமாரின் 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஒர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' பற்றி..
எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் எழுத்துகள் பதிவுகள் வாசகர்களுக்கு அந்நியமானவை அல்ல. பதிவுகள் இணைய இதழில் இவரது கலை,இலக்கிய மற்றும் அரசியற் கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. இலங்கை, உபகண்ட மற்றும் சர்வதேச அரசியலை மையமாகக் கொண்ட கட்டுரைகள், இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள், மலையக மக்களின் வரலாறு , இலக்கியம் பற்றிய கட்டுரைகள் இவரது பன்முக ஆளுமையின் பிரதிபலிப்புகள்.
ஜோதிகுமார் மலையகத்திலிருந்து வெளியான 'தீர்த்தக்கரை' ஆசிரியர் குழுவில் இருந்தவர். பின்னர் வெளியான 'நந்தலாலா' சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். இவ்விரு சஞ்சிகைகளும் மலையகத்தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு , உலகத்தமிழ் இலக்கியத்திற்கு மிகுந்த பங்களிப்பைச் செய்த சஞ்சிகைகள்.
Tuesday, January 7, 2025
எழுத்தாளர் இரா முருகனின் எம்.டி.வாசுதேவன் நாயருடனான 'தீராநதி' நேர்காணலும் , அவரது 'நாலுகெட்டு' நாவலின் நாயகி பற்றிய கேள்விகளும், வாசுதேவன் நாயரின் பதில்களும், என் குழப்பங்களும் பற்றி...! - வ.ந.கிரிதரன்.
எழுத்தாளர் இரா முருகன் அமரர் எம்.எடி.வாசுதேவன் நாயர் சென்னைக்கு 2009இல் வந்திருந்த போது நேர்காணலொன்று எடுத்திருந்தார். அந்நேர்காணல் தீராநதியில் வெளியானது. அதன் குறுகிய வடிவம் அமுதசுரபி சஞ்சிகையிலும் வெளியானது. இந்நேர்காணலை அண்மையில் இரா முருகன் அவரது முகநூற் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அதில் அவர் வாசுதேவன் நாயரிடம் நாலுகெட்டு நாயகி பற்றிப் பல கேள்விகள் கேட்டிருந்தார். அந்தப் பகுதியைக் கீழே தருகின்றேன்.
Thursday, December 26, 2024
பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்!
அறுபதுகளில் ,எழுபதுகளில் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கியவர். இவரது சிறுகதைகள் கல்கியில் சிறப்புச் சிறுகதைகளாக வெளிவந்துள்ளன. இவரது நாவலான 'பொன் மாலைப்பொழுது 'தினமணிக்கதிரில் அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளியானது. எனக்கு மிகவும் பிடித்த நாவலாக அப்போது இருந்தது. அதில் வரும் நடுத்தர வயது சோமு இன்னும் நினைவில் நிற்கின்றார்.
அஞ்சலி: எ.டி.வாசுதேவன் நாயர் (மாடத்து தெக்கேகாட்டு வாசுதேவன் நாயர்)
என்னை மிகவும் கவர்ந்த இலக்கிய ஆளுமைகளில் எம்.டி.வாசுதேவன் நாயரும் ஒருவர். இவரது 'காலம்' நாவல் எனக்கு மிகவும் பிடித்த பத்து நாவல்களில் ஒன்றாக எப்பொழுதுமிருக்கும். நடுத்தவர்க்கத்து மனிதன் ஒருவனின் பல்வேறு பருவ வாழ்க்கை அனுபவங்களை, உணர்ச்சிக் கொந்தளிப்புகளை, காதலையெல்லாம் நினைவு விபரிக்கும், நினைவு கூரும் நாவல். அவ்வப்போது எடுத்து வாசிக்கும் நாவல்களில் ஒன்று 'காலம்'.
Monday, December 23, 2024
கிடைத்தது 'முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்' நூல். நன்றி!
நண்பர் ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை (பொன்னுத்துரை கிட்ணர்) இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான கே.கணேஷின் நூற்றாண்டினையொட்டி வெளியான 'முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்' என்னும் நூலை அனுப்பியிருந்தார்.
மிகசிறப்பாக நூல் வெளிவந்துள்ளது. 'கே.கணேஷ் நூற்றாண்டு விழாக்குழு' நூலை வெளியிட்டுள்ளது. குமரன் அச்சகம் சிறப்பாக நூலை அச்சு வடிவில் வெளிக்கொணர்ந்துள்ளது. இந்நூலைச் சிறப்பாகத் தொகுத்துள்ள ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை அவர்கள் பாராட்டுக்குரியவர். மிகவும் முக்கியமான பணியினை அவர் செய்துள்ளார். ஆவணச்சிறப்பு மிக்க இத்தொகுப்பை வெளியிட்ட 'கே.கணேஷ் நூற்றாண்டு விழாக்குழு'வின் பணி போற்றத்தக்கது.
- தொகுப்பாளர் கே. பொன்னுத்துரை - |
நூலின் ஆரம்பத்தில் பி.பி.தேவராஜின் எழுத்தாளர் கே.கணேஷ் பற்றிய அறிமுகக்கட்டுரை, பேராசிரியர் சபா ஜெயராசாவின் கட்டுரை, ஞானம் சஞ்சிகையில் வெளியான அதன் ஆசிரியர் தி.ஞானசேகரன் கே.கணேஷுடன் நடத்திய நேர்காணல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவை கே.கணேஷின் பன்முக ஆளுமையினை வெளிப்படுத்தும் கட்டுரைகள். இலங்கை எழுத்தாளர் சங்கம், முற்போக்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (இலங்கை, இந்தியா) ஆகியவற்றில் அவரது பங்களிப்பு, அவரது குடும்பப்பின்னணி, தமிழக சஞ்சிகைகளில் (மணிக்கொடி போன்ற) வெளியான அவரது படைப்புகள், அவரைப் பாதித்தக் கலை, இலக்கிய ஆளுமைகள், இலங்கையில் தமிழில் வெளியான முதலாவது முற்போக்கு சஞ்சிகையில் அவருடன் இணைந்து பங்களித்த கே.ராமநாதன், அ.ந.கந்தசாமி ஆகியோரின் பங்களிப்பு, அவர் மொழிபெயர்த்த உலக முற்போக்கு எழுத்துலகச் சிற்பிகளின் படைப்புகளின் பகுதிகள் இவற்றுடன் அவர் மொழிபெயர்த்த முல்க்ராஜ் ஆனந்தின் 'தீண்டாதான்' (Untouchable) முழுமையாகத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Friday, December 13, 2024
வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்
Thursday, November 28, 2024
மணிவிழாக் கவிஞரின் மணிக்கவிகள்!
கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி'
உண்மையைக் கூறப்போனால் என் பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா', 'பார்வதி பி.ஏ", 'ஏ தாழ்ந்த தமிழகமே' ...
பிரபலமான பதிவுகள்
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...