'வெண்ணிற ஆடை' ஜெயலலிதாவின் முதலாவது திரைப்படம் என்பதை நம்பவே முடியவில்லை. படம் முழுவதுமே ஜெயலலிதாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் ஜெயலலிதாவுக்குத் திரைப்படம் முழுவதும் தன் நடிப்புத்திறமையினை, நடனத்திறமையினை நன்கு வெளிப்படுத்தச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. படத்தில் அவரது நடிப்பாற்றலைக் கண்டு எனக்குப் பிரமிப்பே ஏற்பட்டது.
வெண்ணிற ஆடை' என்று ஏன் திரைப்படத்துககுப் பெயர் வந்ததது என்பதற்கான காரணத்தைதை இறுதிக் காட்சியில் விளங்கப்படுத்தியிருப்பார்கள். இளம் விதவைப் பாத்திரம் அவருக்கு. கணவனின் இழப்பால் சித்தப்பிரமை அடைவதும், அதனைக் குணப்படுத்தும் பொருட்டு வரும் இளம் உளவியல் மருத்துவரான ஶ்ரீகாந்த் மீது காதல் கொள்வதும், இறுதியில் ஏற்கனவே காதல் வயப்பட்டிருந்த ஶ்ரீகாந்த் மேல் காதல் கொள்வதும், ஏமாற்றமுறுவதும் எனத் திரைக்கதை நகர்கின்றது. படத்தின் முடிவு படு பிற்போக்குத்தனமாக இருப்பினும், உளவியல் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என்பதால் முக்கியம் பெறுகின்றது. அக்காரணத்தாலும், ஜெயலலிதா, ஶ்ரீகாந்த் ஆகியோரின் நடிப்பால் என்னைக் கவர்ந்ததும் என்பேன். உளவியல் மருத்துவரின் பணியினைத் திறம்பட எடுத்துக்கூறும் திரைப்படம்.
"உன்னைத்தான் கண்டு சிரித்தேன்
நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்
என்னைத்தான் எண்ணி துடித்தேன்
எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்
பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா
இது தேனோடு பாலாகுமா"
இதை விட எளிமையாக, ஒரு பெண்ணின் காதல் உள்ளம் பற்றிய நிலையினை யாரால் வெளிப்படுத்த முடியும் கவிஞர் கண்ணதாசனைத்தவிர! அனுபவம் தோய்ந்த வரிகளில் உண்மை இருக்கிறது.அதுவே சுவைக்கவும் செய்கிறது.,
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி
படம்: வெண்ணிற ஆடை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: பி.சுசீலா
https://www.youtube.com/watch?v=Pzkyc1_EI60
"என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
உன்னைத்தான் கண்டு சிரித்தேன்
நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்
என்னைத்தான் எண்ணி துடித்தேன்
எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்
பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா
இது தேனோடு பாலாகுமா
நிலவே உன்னை அறிவேன்
அங்கே நேரே ஓர் நாள் வருவேன்
மலர்ந்தால் அங்கு மலர்வேன்
இல்லை பனி போல நானும் மறைவேன்
இன்னும் நான் என்பதா
உன்னை நீ என்பதா
இல்லை நாம் என்று பேர் சொலவதா"

No comments:
Post a Comment