Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, January 25, 2026

வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகும் கனடியப் பிரதமரின் உரை!


கனடியப் பிரதமர் மார்க் கார்னியின் இந்த உரை வரலாற்றில் நிலைத்து நிற்கபோகும் உரை! தற்போதுள்ள சூழலில் , டொனால்ட் ட்ரம் அமெரிக்க அதிபராக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்த உரை முக்கியத்துவம் மிக்கது.

https://www.youtube.com/watch?v=btqHDhO4h10

Sunday, January 18, 2026

முகநூலில் தொடரும் விவாதம் (2) : எழுத்தாளர் மாலனின் இந்தித்திணைப்பு பற்றிய கருத்துகளும்ம் எதிர்வினைகளும்

 எழுத்தாளர் மாலன் 

மாலன் நாராயணன்:


நீங்கள் கூறியுள்ளவற்றிற்கான பதில்கள் என்னுடைய பதிவிலேயே இருக்கிறது உதாரணமாக, இந்தி ஆட்சி மொழி என்பது திடீரென எடுக்கப்ப்ட்ட முடிவு அல்ல, அது சுதந்திர இந்தியாவின் அரசு அமைந்த போதே அரசமைப்பு அவையால் எடுக்கப்பட்டது, அந்த 15 ஆண்டு கெடு அப்போதே எடுக்கப்பட்ட முடிவு, 1958லிருந்து தமிழ் தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக இருந்தது அது தமிழ்நாட்டில் ஆட்சிமொழியாக நீடிப்பதில் 1965 ல் ஆபத்து ஏதும் நேர்ந்துவிடவில்லை, 1965 போராட்டத்தை தொடங்கி முன்னெடுத்தது திமுக மாணவர் அணி . இவை பற்றி விரிவாகவே என் பதிவில் ஆதாரங்களோடு தகவல் கொடுத்திருக்கிறேன் அதையேதான் நீங்கள் உங்கள் பதிவில் எழுதியிருக்கிறீர்கள் அவற்றில் ஏதும் பிழை இருக்கிறதா? 2. நீங்கள் கீழ்க்கண்டவற்றை மறுக்கிறீர்களா? 1. 1965 போராட்டத்தின் கோரிக்கை தமிழை மத்திய அரசின் ஆட்சிமொழி ஆக்கு என்பதல்ல, ஆங்கிலத்தை அகற்றாதே என்பது 2. இந்தி ஆட்சி மொழி என்ற நிலையை 1965 போராட்டம் மாற்றியிருக்கிறதா? 3. இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றிருந்தால் தமிழுக்கு பதில் மாணவர்கள் இந்தி படித்திருப்பார்கள் என்கிறீர்கள் சரி ஆங்கிலமும் ஆட்சிமொழி என்பதால் ஆங்கிலம் படிக்கவில்லையா? ஆங்கிலம் நம் தாய்மொழியா? அதுவும் அயல்மொழிதானே? இந்தி திணிப்பு கூடாது ஆனால் ஆங்கிலத் திணிப்பு சரியா? 3.திமுக மத்தியில் ஆட்சியில் இருந்த போது கூட தமிழை ஆட்சிமொழி ஆக்க முடியவில்லை ஏன்? கீழ்கண்ட இதனை விளக்குங்கள்: 1963ல் ஆங்கிலம் தொடரும் என்று சட்டம் வந்துவிட்டால் 1965 ல் போராட்டம் ஏன்? மற்ற மாநிலங்களில் நடந்த போராட்ட்ம் நடந்ததா என்பது பற்றி தனியாக எழுதுகிறேன் நீங்கள் ஒரு தரப்பான அரசியல் பிரசுரங்களை மட்டும் படிக்காமல் அரசமைப்புச் சட்ட விவாதங்களையும் படிப்பது நல்லது அங்கு எல்லா தரப்பினரும் இருந்தார்கள். ஒருவர் கூட தமிழை ஆட்சிமொழியாக்க கோரவில்லை உணர்ச்சி களை மட்டுப்படுத்திக் கொண்டு யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

வ.ந.கிரிதரன் 

வணக்கம் மாலன், ' 1963ல் ஆங்கிலம் தொடரும் என்று சட்டம் வந்துவிட்டால் 1965 ல் போராட்டம் ஏன்?' என்று கேட்டிருக்கின்றீர்கள். இதற்கான பதிலாகப் பின்வரும் விக்கிபீடியாக் கட்டுரையின் பகுதிகளைத் தருகின்றேன்:
"1963ஆம் ஆண்டு சனவரி 21 அன்று இந்த வரைவுச்சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. திமுக உறுப்பினர்கள் வரைவுச்சட்டத்தின் மூன்றாம் அங்கத்தில் ஆங்கிலம் இந்தியுடன் தொடரலாம் என்றிருப்பதனை எதிர்த்து ஆங்கிலம் இந்தியுடன் தொடரும் என மாற்ற வேண்டும் என திருத்தம் கொணர்ந்தனர். தொடரலாம் என்பதைப் பின்வரும் அரசினர் தொடராமலுமிருக்கலாம் என பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளதாக வாதிட்டனர். சிறுபான்மையினரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்கப்படாமல் போகலாம் என்றும் கூறினர்.

Friday, January 16, 2026

முகநூலில் தொடரும் விவாதம் (1)) : எழுத்தாளர் மாலனின் இந்தித்திணிப்புக்கெதிரான போராட்டம் பற்றிய கருத்துகள் பற்றி... - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் மாலன் 

எழுத்தாளர் மாலன்  1965இல் தமிழ்நாட்டில்  நடந்த இந்தித்திணிப்புக்கெதிரான போராட்டம் பற்றி ஒரு முகநூற் பதிவிட்டிருந்தார். அதில் அவர் பின்வருமாறு கூறியிருப்பார்:

"அந்தப் போராட்டம் ஆங்கிலம் அகற்றப்படுவதை எதிர்த்த போராட்டம்  தமிழுக்கானது அல்ல. தமிழுக்கு அப்போது ஆபத்தில்லை.   தமிழைக் காக்க  நடந்த போராட்டம் என்பது கட்டமைக்கப்பட்டது. ஆங்கிலத்தை அகற்றுவதை எதிர்த்த போராட்டம் என்றால் மக்களிடையே பெரிய எழுச்சி இருக்காது என்பதால் (அன்று தமிழ்நாட்டில் ஆங்கிலம் அறியாத மக்கள் பலர்) கிளர்ச்சியை திமுக தமிழோடு சம்பந்தப்படுத்தி முன்னெடுத்தது"

இவை  திராவிடத்தை எதிர்க்கின்றோம் என்னும் பெயரில் மாலனால்  இந்தித்திணிப்புக்கெதிராகத்  தமிழக மக்களால் நடத்தப்பட்ட நியாயமான போராட்டத்தின் முக்கியத்தைக் குறைப்பதற்காகக் கூறப்பட்ட  கூற்றுகளாகவே கருத வேண்டியுள்ளது. இந்தித்திணிப்புக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டம் அண்ணா தலைமையிலான திமுக மாணவர்கள், பொது மக்கள் என அனைவருடனும்  இணைந்து நடத்திய போராட்டம்.  இதற்காக மாணவர்கள் தீக்குளித்திருக்கின்றார்கள். பொதுமக்கள் காவற் துறை, இந்திய இராணுவத்தால்  தாக்கப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் போராடியது தமிழ் மொழிக்காக, இந்தித்திணிப்புக்கெதிராக.  மாலன் அதனை வெறும் ஆங்கில மொழியினை நீடிப்பதற்காக என்று மலினப்படுத்தியிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. 

Saturday, January 10, 2026

பெரியார், திராவிடம், தமிழ்மொழி பற்றி செயற்கை நுண்ணறிவுடன் விரிவான நேர்காணல். நேர்காணல் கண்டவர் : வ.ந.கி




நான்: 


பெரியார் ஆரியர் தமிழ் மொழியைத் தம் மொழியைக் கலந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிரித்து விட்டதாகக் கருதுகின்றாரே?

செயற்கை நுண்ணறிவு AI:


ஆம், பெரியார் ஈ.வெ.ரா. ஆரியர்கள் தமிழ் மொழியைக் கலந்து, மற்ற திராவிட மொழிகளைப் பிரித்து விட்டதாகக் கருதினார் என்பது உண்மை. இது திராவிட இயக்கம் முன்வைத்த ஒரு முக்கியமான கோட்பாடு மற்றும் பெரியாரின் தமிழ் மொழி குறித்த பார்வையின் ஒரு முக்கிய அம்சமாகும்.

பெரியாரின் வாதம் சுருக்கமாக:

பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தினர் முன்வைத்த வாதத்தின் சாரம் இதுதான்:

    தமிழ் தான் மூல மொழி: திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ் தான் மிகவும் தொன்மையானதும், தனித்துவமானதுமான மூல மொழி என்று பெரியார் கருதினார். மற்ற திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை தமிழிலிருந்து பிரிந்தவை என்றும், அல்லது தமிழின் கிளை மொழிகள் என்றும் நம்பினார்.

Thursday, January 8, 2026

தந்தை பெரியாரின் பார்வையில் தமிழரும், திராவிடரும், தென்னிந்தியரும்!


திராவிடம் என்னும் சொல் தமிழம் த்ரமிளம், த்ரவிடம், திரவிடம்,  திராவிடம் என்னும் வட சொல்லாக மீண்டும் தமிழுக்கு வந்த சொல்.இந்தியாவின் பூர்வ குடிகள் தமிழர். ஆரியர் தமிழரைத் திராவிடர் என்றழைத்தனர். வடக்கில் திராவிடரிடமிருந்து ஆதிக்கத்தைப் பெற்றதும் தமிழர்கள் (திராவிடர்) தென்னிந்தியாவில் ஒடுங்கினர். 
 
அவ்விதம் ஒடுங்கிய தமிழர் பேசும் மொழி இருக்கும் பிரதேசங்களுக்கேற்ப வேறுபாட்டுடன் விளங்கியது. இன்று கூட கோவை, மதுரை, தஞ்சாவூர்த் தமிழ் வித்தியாசமாக் இருக்குதல்லவா., அதுபோல். இவ்வேறுபாட்டைப் பாவித்து வடக்கில் திராவிடரை அடக்கிய ஆரியர் , தெற்கிலும் தம் மொழி, சமயம் இவற்றைப்பாவித்துத் தமிழைக் கன்னடம், தெலுங்கு, மலையாளமாக மேலும் பிரித்தனர், இது ஆரியர் தமிழைப்பலவீனப்படுத்தச் செய்தது. 

Wednesday, January 7, 2026

நூல் அறிமுகம் - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் 'திரவிடத்தாய்'


நூல் அறிமுகம் - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் 'திரவிடத்தாய்'


தமிழம் -> திரவிடம் -> திராவிடம்!

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய நூல் 'திரவிடத்தாய்'. இதன் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரன். திராவிடம் என்னும் சொல் தமிழம் என்னும் சொல்லிலிருந்து உருவான சொல் என்பது தேவநேயப் பாவாணரின் கருத்து,. இதனை வலியுறுத்தும் இந்நூல் முக்கியமானது.  

திராவிடம் என்று வடக்கு நாட்டவர்  தமிழை அழைத்தனர். அதனால்தான் கால்ட்வெல் தமிழிலிருந்து வந்த மொழிகளைத் திராவிட மொழிகள் என்றழைத்தார்.  அதாவது தமிழ் மொழிகல், தமிழை அடியாகக் கொண்ட  மொழிகள். முனைவர் அரியேந்திரன் மொழியியல் அறிஞர் தமிழ் வேர்ச்சொல்லிலிருந்து வடமொழி உட்படப் ஐரோப்பிய மொழிச் சொற்கள் பல தோன்றின என்பதையிட்டு ஆய்வுகள் பல செய்தவர். அவர்  பாவாணரின் வழி வந்தவர். 

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் , திராவிடம் தெக்கணம் பற்றி...


"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து 
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! "

இப்பாடல்  மனோன்மணீயம் பெ. சுந்தரனார் எழுதிய மனோன்மணீயம் காப்பியத்தில் வரும் தமிழ்த்தெய்வ வணக்கம் என்னும் பாயிரத்தில் வரும் வரிகள்.  இப்பாடல் தெளிவாகத் தென்னிந்தியாவைத் தெக்கணம் என்றும் , தமிழ் நாட்டைத்  திராவிட நல்  திருநாடு என்றும் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். இதனால்தான் 1914ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்திலுள்ள தமிழ்ச்சங்கங்கள் பலவற்றில் தமிழ்த்தாய் வாழ்த்தாக இப்பாடல் பாடப்பட்டு வந்தது. 

அதனால்தான் தமிழ் மொழிக்காக, அதன் வளர்சசிக்காகத் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்,திராவிடக் கழகத்தினர் திராவிடம் என்னும் சொல்லைத்  தமிழகத்தைக் குறிக்கப்பாவித்தனர். திராவிடக் கழகத்தினர் திராவிட் மொழி என்று குறிப்பிட்டது தமிழை. திராவிட நாடு என்று குறிப்பிட்டது தமிழ் நாட்டை.

அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தபோது இப்பாடலைத்தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக்க வேண்டுமென்ற கோரிக்கை பலமாக எழுந்தது. அதை அவர் நிறைவேற்றுவதற்குள் அறிஞர் அண்ணா மறைந்து விட்டார். அதனால்தான் கலைஞர் அதன் பின் ஆட்சிக்கு வந்ததும் அக்கோரிக்கையை நிறைவேற்றினார்.

Sunday, December 7, 2025

'சொல்லின் செல்வ'ரும் சொல்லிக்கொள்ளாமலே சென்று விட்டார். ஆழ்ந்த இரங்கல்.


இலங்கைத்  தமிழ் அரசியல் தலைவர்களில் முக்கியமான ஒருவரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினரும் , மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது நகர பிதாவும் , எழுத்தாளருமான திரு. செல்லையா இராசதுரை அவர்கள் தனது 98ஆவது வயதில் , தமிழகத்தில் மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல்.

தமிழரசுக் கட்சியின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர் இராசதுரை அவர்கள். அதன் காரணமாகவே சொல்லின் செல்வர் என்றும் அழைக்கப்பட்டவர். வசீகரம் மிக்க தோற்றமுள்ள அரசியற் தலைவர்களிலொருவர். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கிழக்கு மாகாண தமிழ் அரசியற் தலைவர்களில் முக்கியமானவர். தமிழர் போராட்ட அரசியற் செயற்பாடுகளுக்காகச் சிறை சென்றவர். தந்தை செல்வாவுக்குப் பின்னர் இவருக்குத்தான் தலைமைப்பொறுப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை. 

ஒருபோதுமே  பாராளுமன்றத் தேர்தலில் தோற்காத தமிழ் அரசியல்வாதி இவர். 1977 தேர்தலின் பின்னர் 1979இல் , தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசுடன் இணைந்து இயங்கினார்.  1977 தேர்தலிலின்போது தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் மட்டக்களப்பு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.   அதே தொகுதியில் கவிஞர் காசி ஆனந்தனும் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட வைக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் செ.இராசதுரை வெற்றிபெற , கவிஞர் காசி ஆனந்தன் தோல்வியைச் சந்தித்தார்.

Friday, December 5, 2025

ஒடுக்குமுறை, பாகுபாடு, மனித உரிமை மீறல்கள் பற்றிய என் கருத்துகளும், என் கருத்துகள் பற்றிய செயற்கை நுண்ணறிவின் கருத்துகளும்...


இலங்கையில் இருந்த காலத்தில்  எஸ்கிமோ, நீக்ரோ, செவ்விந்தியர் போன்ற சொற்பதங்களால் அவை குறிப்பிடும் இன மக்களை நாமெல்லாரும் அழைத்து வந்தோம்.  இங்கு வந்தபின்பும் ஆரம்பத்தில் அவ்விதமே அழைத்து வந்தோம்,. ஆனால் காலப்போக்கில் அப்பெயர்கள் அம்மக்களை இழிவு படுத்தும் , இனத்துவேசம் மிக்க பெயர்கள் என்பதை அறிந்து அவற்றைப் பாவிப்பதை நிறுத்தி விட்டோம்.  

இவை ஏன் அம்மக்களை இழிவு படுத்தும் சொற்பதங்கள் என்பதைப் பார்ப்போம்.

எஸ்கிமோ (Eskimo)  இந்தச்சொல்லின் உண்மையான் அர்த்தம் Algonquin மொழியில் இருந்து பெறப்பட்டது.  'பச்சை மாமிசம் சாப்பிடுபவர்கள் என்பது பெயர். இச்சொல் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைக் குறிக்கவில்லை.  ஆர்க்டிக் இனக்குழுக்களான (Inuit, Yupik, Iñupiat போன்றவர்களை ஒரு சேர அழைக்கப்பாவிக்கப்பட்டது.  தற்போது கனடாவில் "Inuit" (இனியுட்), அலாஸ்காவில் Yupik" (யுபிக்) ,  "Inupiat" (இனுபியாட்) போன்ற பெயர்கள் பாவிக்கப்படுகின்றன. அனைவரையும் உள்ளடக்கி  "First Nation" என்னும் சொற்பதமும் பாவிக்கப்படுகின்றது.

இது போல் செவ்விந்தியன் (Red Indian) என்னும் பெயர் அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ் அதனை இந்தியா என்று தவறாக முடிவு செய்த வரலாற்றுத்தவறினால் உருவானது.  அமெரிக்காவின் ஆதிக்குடிகளை (Native Americans / Indigenous Peoples)   இந்தியர்களாகக் கருதி , அவர்களின் நிறத்தையும் சேரத்துச் செவ்விந்தியர் என்றழைக்கப்பட்டனர்.  இது நிறவெறி மிக்க ஒரு சொற்பதம்.  இதனை இப்போது பாவிப்பதில்லை.  இன்று பொதுவாக Native American", "American Indian" (அமெரிக்கன் இந்தியன்), அல்லது  "Indigenous Peoples" (சுதேசிய மக்கள்)  என்றே இம்மக்கள் அழைக்கப்படுகின்றனர்.அத்துடன்  Cherokee, Navajo, Sioux  போன்ற இனக்குழுப் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனர்.

இது போன்ற இன்னுமொரு சொல் 'நீக்ரோ'  (Negro)  என்று கறுப்பினத்தவரை அழைக்கும் சொல். . ஸ்பானிஷ் மொழியில் இது கறுப்பு என்னும் அர்த்தத்தைத் தரும். கறுப்புத்தோல் கொண்டவரகள் என்னும் நிறப்பாகுபாட்டைக் காட்டுவதற்காகப் பாவிக்கப்பட்ட இச்சொல் அமெரிக்காவில் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட காலகட்டத்தில் இவர்களைக் குறிக்கும் சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டது.  இன்று இச்சொல் பாவிக்கப்படுவதில்லை.  Black, African American போன்ற சொற்களால் இன்று கறுப்பினத்தவர் தம்மை அடையாளப்படுத்துகின்றனர். 

எங்கெல்லாம் இனக்குழுக்களை அழைக்கப்பாவிக்கபப்டும் சொற்பதங்கள் ஒடுக்குமுறை, பாகுபாடு, மனித உரிமை மீறல்களுடன் தொடர்புள்ளவையாக இருக்கின்றனவோ, அச்சொற்பதங்களைப் பாவிப்பதையும் தவிர்க்க வேண்டும்.  இது யாழ்ப்பாண்ச சமூகங்களுக்கும் பொருந்தும். 

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலர் ஏற்கனவே அவ்விதம் அழைப்பதை தவிர்த்து வருகின்றனர. மேட்டுக்குடி, சீவல் தொழிலாளர் போன்ற சொற்பதஙக்ளை அவர்கள் பாவித்து வருகின்றனர். இது ஒரு விதத்தில் நல்லது. ஏனென்றால் சாதியச் சின்னங்களை, பெயர்கள் உட்பட, அவற்றை எதிர்ப்பவர்கள் கூட மீண்டும் மீண்டும் மீண்டும்  பாவிக்கும்போது அப்பெயர்கள் வரலாற்றில் நிலைத்து நின்று  விடுகின்றன.  புதிய தலைமுறையினர் மத்தியிலும் அப்பெயர்கள் தொடர்ந்து பயணம் செய்கின்றன. அவ்விதம் நிலைத்து நிற்பதைத்தவிர்ப்பதற்கு அப்பெயர்களைத்  தவிர்ப்பதும் முக்கியமான முதற்படியாக அமையும். 

உளவியலில் ஒரு கோட்பாடு உண்டு. அது ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு வந்தால், அது நல்ல சொல்லோ, கெட்ட சொல்லோ , ஆழ்மனத்தில் ஆழச்சென்று படிந்து விடுகின்றன். அதை Auto Suggestion (சுய மந்திரம்)  என்பர். மேற்படி  சமூக ஒடுக்குமுறையுடன் சம்பந்தபப்ட்ட சொற்பதங்களையும் திரும்பத் திரும்பப் பாவிப்பதும் ஒரு வகை Auto Suggestion தான்.  சுயமந்திரம்தான். 

Friday, November 28, 2025

யார் இவர்? இவர்தான் டில்வின் சில்வா (Tilvin Silva)!


யார் இவர்? இவர்தான்  டில்வின் சில்வா (Tilvin Silva).   ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜேவிபி JVP) பொதுச்செயலாளர். ஜேவிபியின் முதலாவது புரட்சி தோல்வியில் முடிந்தது. ஜே.ஆர் .ஜெயவர்த்தனே 1977இல் பிரதமராகப் பதவியேற்றதும் ஜேவிபிக்கு மன்னிப்பளித்து  . ஜனநாயக அரசியலில் பங்குபற்ற வழி செய்தார். அப்போது ஜேவிபியில் இணைந்தவர்தான் டில்வின் சில்வா.  இவரது முழுப்பெயர் மெஸ்திரீ டில்வின் சில்வா.  தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஸ்தாபக உறுப்பினகளில் ஒருவரான  இவர் ஜே.வி.பி இன் கொள்கைகள் மற்றும் அரசியல் வியூகங்களை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருபவர்.  குறிப்பாக  சமூக நீதி, ஊழல் எதிர்ப்பு மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துபவர்.  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராகவும்  கருதப்படுகின்றார். இவரைப்பற்றிய, இவரது குடும்பம், கல்வி, பார்த்த வேலைகள் போன்றவற்றை அறிய விக்கிபீடியாக் குறிப்பைப் பாருங்கள். கூகுளில் தேடுங்கள். மேலதிகத் தகவல்கள் கிடைக்கும்.

பொதுவாக நான் இலங்கையின் பார்ம்பரிய அரசியல்வாதிகள் பற்றி அதிகக் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் எவ்வினத்தவர் என்றாலும் தம் வாழ்வைத் தாம் நம்பும் சித்தாந்தத்துக்காக அர்ப்பணித்து சமூக , அரசியற்பாளர்களாக இயங்கும் ஆளுமைகளை அவதானிப்பவன். இவர் அவர்களில் ஒருவர். ஜேவிபியின் இரண்டாவது தோல்வியுற்ற புரட்சியின்போது , அரச படைகளுக்கு எதிராகப் போராடிவர். ஜேவிபியின் மாவட்டச் செயலாளர்களில் ஒருவராக இருந்திருக்கின்றார். அநேகமாக அவரது பிறந்த மாவட்டமான களுத்துறை மாவட்டமாக இருக்கலாம். சரியாகத்  தெரியவில்லை. தெரிந்தவர்கள் அறியத்தரவும்.

Tuesday, November 25, 2025

இவர் யார் தெரியுமா?


இவர் யார் தெரியுமா? இவர்தான் இலங்கையின் பெண்கள் மற்றும் குழ்ந்தைகள் நலத்துறை அமைச்சர்.  இவர் தமிழ்ப்பெண்.  சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாத்தறைத்   தேர்தல் தொகுதியில் 148,379 வாக்குகள் பெற்று கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நின்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர். எதற்கெடுத்தாலும் ஜேவிபி முன்பு இனவாதக் கட்சி. எப்படி மாறுவார்கள் என்று தேர்தல் காலங்களில் பிரச்சாரம் செய்பவர்கள் அப்போது இப்பெண்மணியையும் நினைத்துக்கொள்ளுங்கள்.

சிங்கள மக்கள் பெரும்பான்மையாக் வாழும், தெற்கு மாகாணத்திலுள்ள மாத்தறைப் பகுதியிலிருந்து, அதுவும் மகிந்த ராஜபக்சாவின் கோட்டையிலிருந்து தமிழ்பெண் ஒருவரைச் சிங்கள மக்கள் தம் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்றால், அவரைப் பெண்கள் , குழந்தைகள் நலத்துறை அமைச்சராக தேசிய மக்கள் சக்தி ஆக்கியிருக்கின்றதென்றால்,  ஜேவிபி மட்டும் மாறவில்லை., சிங்கள மக்களும் மாறியிருக்கின்றார்கள்.  ஆனால் தோற்ற இனவாத அரசியல்வாதிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இனவாதத்தைத் தூண்டி, மீண்டும் ஆட்சிக்கட்டிலேறத்   துடிக்கின்றார்கள். இந்நிலை மீண்டும் வந்தால் நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிர்காலம் நன்றாகவிருக்கப்போவதில்லை.

இலங்கையில் இனவாதம் பற்றிய சிந்தனைகளும், செயற்கை நுண்ணறிவுடன் அது பற்றிய உரையாடலும்!


இலங்கை ஜனாதிபது அநுர குமார திசாநாயக்க அரசு இனவாதத்துக்கெதிராக் குரல் கொடுத்து வருகின்றது. பதவி பறிபோன சிங்கள அரசியல்வாதிகள் எப்படியாவது இழந்ததை மீளப்பெறுவதற்காக இனவாதத்தைக் கையிலெடுக்கின்றார்கள். அநுர அரசின் செல்வாக்கினால் பாதிப்புக்குள்ளாகிய தமிழ் அரசியல்வாதிகளும், ஜேவியின்  கடந்த கால வரலாற்றைக் கூறி, இவர்களும் இனவாதிகள், நம்ப முடியாது என்று செயற்பட்டு வருகின்றார்கள். இவ்விரண்டு குழுவினரும் இப்படித்தான் செயற்படுவார்கள். 

உண்மையில் இவர்களைப் பொருட்படுத்தாமல் அநுர அரசு இனவாதத்துக்கு எதிராக உறுதியாக செயற்பட்டால், அதன் பலன்கள் வெளித்தெரிகையில் தம் முயற்சியில் தோல்வியுற்ற எதிர்கட்சி அரசியல்வாதிகளும் தம் பாதையை மாற்றும் சந்தர்ப்பம் உண்டு. 

அடுத்தது உண்மையில் இனவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்றால், அரசு இனவாதப் பெளத்த பிக்குகளையும் சிங்கள மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இவ்விதப் பிக்குகளை இலங்கையின் சட்டம் கையாளும் நிலையை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதனைச் செய்வது இனவாதத்தை ஒழிப்பதற்கான உறுதியான படியாக அமையும். அவ்விதம் செய்யாவிட்டால் பெளத்த பிக்குகள் சிலரின் இனவாதத்துக்கு அரசு அடி பணிந்தால் ஒரு போதுமே இனவாதத்தை அரசால் நாட்டிலிலிருந்து ஒழிக்க முடியாது  போய்விடும். 

ஒவ்வொரு தடவை இனவெறி பிடித்த பிக்குகள் செயற்படும் தருணங்களில் எல்லாம் சட்டம் தன் கடமையைச் செய்யும் நிலை ஏற்பட வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அரசு தென்னிலங்கை மக்களுக்கு அவர்கள் இனவாதிகள் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.மக்கள் புரிந்து கொள்வார்கள். அரசுக்கு ஆதரிப்பார்கள். இவ்விதம் செய்யாமல் அரசும் இனவாதப் பிக்குகளின் தந்திரத்துக்கு அடிபணிந்தால் ,இறுதியில் அதன் அரசியல் எதிர்காலமும் அபாயத்துக்கு உள்ளாகி விடும்.

Monday, November 24, 2025

'படுபட்சி' நாவல் பற்றிய எழுத்தாளர் இளங்கோவின் முக்கிய விமர்சனக் குறிப்புகளும், அவரது இறுதியான புரிதலும் பற்றி...


எழுத்தாளர் இளங்கோ (டிசெதமிழன்) படுபட்சி நாவல் பற்றி முன் வைக்கும் முக்கியமான விமர்சனக் குறிப்புகள் இவை,. இவை அவரது முகநூற் பக்கத்தில் வெளியான பதிவிலிருந்து பெறப்பட்டவை. 
 
இக்குறிப்புகள் அவரிடத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும். உண்மையில் டிலுக்ஸன் மோகனின் நூல் சுய அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவா? அல்லது சுய அனுபவம் என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட புனைவா? ஏனென்றால் இளங்கோவின் இப்புரிதல்கள் நியாயமானவை. ஆனால் இவ்விதம் நூலைப் புரிந்து கொண்ட அவருக்கு நூலின் நம்பகத்தன்மை பற்றிக் கொஞசமும் சந்தேகம் ஏற்படவில்லை. அவர் இறுதியில் வந்தடைந்துள்ள முடிவுகள் வருமாறு:

Wednesday, November 5, 2025

Zohran Mamdani - நியூயோர்க் மாநகரின் புதிய மேயர்.


Zohran Mamdani - நியூயோர்க் மாநகரின் புதிய மேயர். 

 

அமெரிக்கர்கள் பெருமையுறும் தருணம். உலகம் அமெரிக்கர்களை விருப்புடனும், வியப்புடனும் நோக்கும் தருணமும் கூட.  வாழ்த்துகள்!

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG]

Wednesday, October 22, 2025

கரூர் துயரும் , எழுத்தாளர் ஜெயமோகனின் 'சாமான்ய மக்களின் கும்பல்' மனநிலை பற்றிய கருத்தும் பற்றி..


அண்மையில் கரூரில் நடந்த ,  தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல்  பிரச்சாரக்  கூட்டத்தில்  ஏற்பட்ட நெரிசலில் மக்கள் அகப்பட்டு உயிரிழந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் மக்களுக்கிடையில் நிலவும் கும்பல மனநிலை என்று ஒரு புதிய தத்துவத்தை, ஹிட்லரின் பாசிதத்தை உதாரணமாகக் காட்டி, எடுத்துரைக்கின்றார் எழுத்தாளர் ஜெயமோகன்.  அதற்குரிய யு டியூப் காணொளி - https://www.youtube.com/watch?v=VjJ3mJiR4mg

ஜெயமோகன் சொற் சித்தர். சொற்களை வைத்து விளையாடுவதில் வல்லவர். அவரது இவ்வுரையும் அத்தகையதுதான். தனக்கேரியுரிய சொற் சிலம்பமாடும் திறமையினை இங்கு அவர் பாவித்துச் சொற் சிலம்பம் ஆடுகின்றார். நடந்த மக்களின் அழிவுக்குக் காரணம் சாமான்ய மக்களின் கும்பல் மனநிலையே காரணமென்று கூறுவதன் மூலம் உண்மையை மூடி மறைக்கின்றார். அவர் இதனைத்  திட்டமிட்டுச் செய்யவில்லை.அவர் தன் சுய தர்க்கச் சிந்தனையின் மூலம் அவ்விதமானதொரு முடிவுக்கு வந்து, அதனடிப்படையில் நடந்த அழிவுக்குக் காரண்மாகப் புதியதொரு தத்துவத்தை அல்லது கோட்பாட்டை முன் வைக்கின்றார். அவ்வளவுதான்.

Sunday, October 12, 2025

உண்மை உரைக்கும் ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன!

ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன! 

இலங்கை சுதந்திரமடைந்து சென்ற ஆண்டு அநுர குமார திசாநாயக்க ஆட்சியில் அமரும் வரையிலான காலகட்டம் பாரம்பரிய இலங்கை அரசியல்வாதிகளால்  இனவாதம், மதவாதம், தேசியவாதம் ஆகியவற்றைப் பாவித்து  அதிகாரத்தைக் கைப்பற்றும் காலகட்டமாக இருந்துள்ளது.  பிரதான ஊடகங்களின் சூத்திரதாரிகளாக மேற்படி அரசியல்வாதிகளே இருந்து வந்தனர்.அதனால் நாட்டு மக்களுக்கு, குறிப்பாகத் தென்னிலங்கை மக்களுக்கு நாட்டின் வடகிழக்கில், மலையகத்தில் , தமிழ், முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட அரசியல் இவையெல்லாம் பற்றிய உணமை நிலை தெரியாததொரு சூழல் நிலவியது. இன்று முதன் முறையாக அந்தச் சூழல் மாறியுள்ளது. இது  வரவேற்கத்தக்க, ஆரோக்கியமானதொரு சூழல். இச்சூழல் தொடர்ந்தும் நிலைத்திருப்பதே நாட்டின் நல்லதோர் எதிர்காலத்துக்கு அவசியம்.  ]

இதன் விளைவே முக்கியமான சிங்கள  ஊடகவியலாளர்களில் ஒருவரான நந்தன வீரரத்தினவின் , அண்மையில் வெளியான, இரு நூல்கள்: யாழ்ப்பாணத்தை தீயிடுதல் 1981 - ஒரு வன்முறை அரசின் ஆரம்பம், கறுப்பு ஜூலை - வன்முறை அரசின் ஏழு நாட்கள். இவை சிங்கள மொழியில் வெளியான நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள். தமிழ் மொழிபெயர்ப்பாளர் - செல்லையா மனோரஞ்சன்.

Thursday, September 25, 2025

Tuesday, September 23, 2025

தமிழக அரசியல் ஒரு பார்வை!


எம்ஜிஆர் வேறு திமுக வேறு அல்ல என்னும் வகையில் தன் திரைப்படங்களில்  திமுகவுக்காக எம்ஜிஆர் பிர்ச்சாரம் செய்து  வ்ந்தார். திமுகவின் சின்னமான உதயசூரியன், அதன் கொடி வர்ணங்களை மிகவும் திறமையாக அவர் தன் படங்களில் உள்ளடக்கியதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் திமுகவை எடுத்துச் சென்றார். தவிர அவரது வசீகரம் மிக்க ஆளுமை, திரைப்படக்கதாபாத்திரத்தின் ஆளுமைப்பண்பு, அவரது ஈகைச் செயற்பாடுகள், ஆரோக்கியமான கருத்துகளை விதைக்கும் பாடல்கள், இவை தவிர தமிழர் வரலாற்றுடன் , கலைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கும் காதல், வீரம், அறம் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அவரது திரைப்படங்கள் இவையெல்லாம் எம்ஜிரை மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்தன. 

இவ்வாறானதொரு நிலையில் எம்ஜிஆர் சுடப்பட்டபோது மக்கள் அதிர்ச்சி அடைந்ததைப்போல், எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலக்கப்பட்டபோதும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஏனென்றால் மக்களைப்பொறுத்தவரையில் எம்ஜிஆர் வேறு திமுக வேறு அல்ல. எம்ஜிஆரை விலக்கியதானது அவருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றே மக்கள் கருதினார்கள். அதனால் எம்ஜிஆர் மீது அநுதாபம் பொங்கியெழுந்தது. அந்த அநுதாபமும், அவர் மீதான தனிப்பட்ட விருப்பமும் இணையவே அவருக்கு வெற்றி இலகுவானது. அவர் இருந்தவரை மக்கள் அவரையே ஆட்சிக்கட்டில் இருத்தினார்கள்.

Tuesday, September 2, 2025

எம்ஜிஆரின் உணவு, கல்விக்கான பங்களிப்புகள்!


எம்ஜிஆர் தனியார் பொறியியல் , மருத்துவர் கல்லூரிகளை அனுமதித்தையொட்டி அவரது எதிர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இவர்கள் விமர்சிக்கின்ற அளவுக்குத் தொலைநோக்கு அற்றவர்கள். எம்ஜிஆர் என்னும் மனிதருக்கு இருந்திருக்கும் தொலைநோக்கு இவர்களுக்கு இல்லையென்றே கருத வேண்டியிருக்கின்றது.

எம்ஜிஆர் அனுமதியளித்த தனியார் கல்லூரிகளை உருவாக்கியவர்கள் உழைத்திருக்கலாம். ஆனால் அவற்றை உருவாக்கியவர்கள் அவற்றில் 50 வீத மாணவர்களுக்கான அனுமதியை அரசுக்கு வழங்கினர். இவ்விதம் உருவான க்ல்லூரிகளைத் தமிழக அரசு உருவாக்க வேண்டுமென்றால் அதற்குப் பெருந்தொகை நிதி வருடா வருடம் தேவையாகவிருந்திருக்கும். அது அரசுக்கு மிகுந்த  நிதி நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். அதற்குப் பதில் பல்கலைக்கழக, பள்ளிப்படிப்பற்ற எம்ஜிஆர் , அதன் அனுபவத்தின் வாயிலாகக் கண்டடைந்த முடிவு அரச நிலங்களில் அரசு கல்லூரிகளை அமைப்பதை விட, அவற்றில் தனியார் அமைப்பதற்கு அனுமதி அளிப்பதன் மூலம் அரசின் பாரம் குறைகின்றது.  அதே சமயம் அவ்விதம் உருவாக்கப்படும் கல்லூரிகளில் 50 வீத மாணவர்களுக்கான அனுமதி அரசுக்குக் கிடைக்கின்றது. இது மிகவும் நல்லதொரு முடிவு. மேலும் அதிக அளவில் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் படிக்கும் வாய்ப்பும் ஏற்படுகின்றது.

Saturday, August 30, 2025

இளைஞர்களே! சிந்தியுங்கள்! செயற்படுங்கள்! மாற்றங்களை, ஏற்றங்களை ஏற்படுத்துங்கள்! - நந்திவர்ம பல்லவன் -

[பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை.]

இந்தப் பதிவு இளைய தலைமுறையினருக்கானது. சமுதாயப் பிரக்ஞை மிக்க, தொலை நோக்குச் சிந்தனை மிக்க இளைய தலைமுறையினருக்கானது. 

தமிழ் இளைஞர்களே!  நீங்கள் செயற்பட வேண்டிய தருணமிது. தமிழ்த் தேசியத்தைப் பற்றிக் கவலைப்பட அரசியல்வாதிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் அவர்கள் வழியில் செல்லட்டும். ஆனால் தமிழர்களின் வர்க்க விடுதலை, சமூக விடுதலை பற்றிக் கவலைப்படுவதற்கு , செயற்படுவதற்கு யாருளர்? தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளது. வடக்கில் அது போன்ற அமைப்பொன்றும் இல்லை. அத்தகைய மக்கள் விடுதலை  அமைப்பொன்றின் தேவை உள்ள காலகட்டம் இது.  அதன் பெயர் மக்கள் விடுதலை அணி,  மக்கள் விடுதலை அமைப்பு  என்று  கூட இருக்கலாம். இளைஞர்களே1 சிந்தியுங்கள்! இப்பதிவு உங்களில் யாருக்காவது ஒரு பொறியினைத் தட்டி விடுமானால் அதுவே இப்பதிவின் முக்கிய நோக்கம்.

நீங்கள் ஒவ்வொருவரும் வாழும் , உங்கள் ஊரில் உள்ள மக்களைப் பாருங்கள். சமூகப் பிரிவுகள் , வர்க்கப்பிரிவுகளாக அவர்கள் பிரிந்து கிடக்கினறார்கள்.  அவர்களின் வர்க்க விடுதலை பற்றி, சமூக விடுதலை பற்றிச் சிந்திப்பவர்கள் யார் இருக்கின்றார்கள்? அவர்களைப் பற்றித் தொலை நோக்குடன் சிந்தியுங்கள். அவர்களில் ஒருவர்தான் நீங்களும். சமூகப்பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கும் நீங்கள் அனைவரும் ஒரு வர்க்கமாக ஒன்றிணைந்துதான் இருக்கின்றீர்கள். வர்க்கமாக ஒன்றிணைவதை  உங்களுக்கிடையில் நிலவும் சமூகப் பிரிவுகள் தடுத்து நிற்கின்றன. அதைப் புரிந்து   கொள்ளுங்கள். செயற்படுங்கள்.

நீங்கள் வாழும் கிராமங்களில், ஊர்களில் நீங்கள் இவ்விடயத்தில் இளையவர்களாக ஒன்றிணைந்து பல ஆக்கபூர்வமான விடயங்களைச் செய்யலாம்.சமூக, வர்க்கப்பிரிவுகளை  மக்களிடத்தில் எடுத்துரைத்து, அவை நீக்கப்படுவதன் அவசியம் பற்றிய கூட்டங்கள் நடத்தலாம். அடிக்கடி கருத்தரங்குகள் நடத்தலாம், அவை சம்பந்தமான நூல்களை, பத்திரிகைகள் உள்ளடக்கிய நூல் நிலையங்களை அமைக்கலாம். இலாப , நோக்கற்ற அமைப்புகளை உருவாக்கி அவற்றின் மூலமும் இப்பணிகளைச் செய்யலாம்.

வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.

வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. இசை & குரல்:  SUNO AI    ஓவியம்: AI நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. நினைவு...

பிரபலமான பதிவுகள்