'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Tuesday, February 27, 2024
தந்தை பெரியார் பற்றி... - தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா -
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவரது சமூகப்பின்னணியைக் காரணமாக வைத்து விமர்சிப்பார்கள் அவரது அரசியல் எதிரிகள். ஆனால் அவரது இக்கட்டுரையைப் படித்தபோது உண்மையிலேயே வியந்துதான் போனேன். எவ்வளவு தெளிவாகப் பெரியாரின் சமூக, சீர்திருத்தக் கருத்துகளை அவர் அறிந்து வைத்திருக்கின்றார். பெரியார் மீது எவ்வளவுதூரம் மதிப்பு வைத்திருக்கின்றார். அவரை அவரது சமூகப்பின்னணி பற்றி விமர்சித்த அரசியல் எதிரிகளுக்குக் கூட இவ்வளவு தெளிவு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. தனது அரசியல் கருத்துகளில் தெளிவாக இருந்ததனால்தான் அவரால் இறுதிவரை மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்க முடிந்திருக்கின்றது. Kollywood Entertainment முகநூலில் பகிர்ந்திருந்த ஜெயலலிதாவின் 'தாய்' சஞ்சிகையில் எழுதிய கட்டுரை. -
ஜெயலலிதாவின் கட்டுரை கீழே;
1973-ல், நான் கதாநாயகியாக நடித்த ''சூரியகாந்தி" தமிழ்த் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த வெற்றி விழாவுக்குத் தலைமை வகித்து, கலைஞர்களுக்குப் பரிசுகளை வழங்கியவர் தந்தை பெரியார் அவர்கள்.
தந்தை பெரியார் அவர்களை நான் நேரில் சந்தித்தது அதுவே முதன் முறை, திரைப்படங்கள் என்றாலே அவருக்கு அவ்வளவாக விருப்பம் இருக்காது. திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட விழாக்களிலும் சாதாரணமாக அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். எப்படியோ, அன்றைக்கு அவ்விழாவுக்குத் தலைமை தாங்க தந்தை பெரியார் அவர்கள் சம்மதித்ததே என்னுடைய பேரதிர்ஷ்டம் என்று கருதுகிறேன்.
Sunday, February 25, 2024
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவாக..
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்ததினம் பெப்ருவரி 24. என்னைப்பொறுத்தவரையில் எம்ஜிஆரும் அவரும் என் அபிமான நடிகர்கள். என் பால்ய பருவத்தில் நான் அதிகமாகத் தமிழ்ப்படங்கள் பார்க்கத் தொடங்கிய காலத்தில் திரையில் கோலோச்சிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்.
அரசியலைப்பொறுத்தவரையில் ஆணாதிக்கத்திலுள்ள தமிழக அரசியலில் தனித்து, துணிச்சலாக செயற்பட்டவர். அந்தத்துணிச்சல் எனக்குப் பிடிக்கும். பெண் சிசுக்களைக் காப்பாற்றத் தொட்டில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பெண்களுக்குப் பல்வேறு வகைகளில் பொருளியல்ரீதியிலான உதவித்திட்டங்களை ஆரம்பித்தார். அம்மா உணவகத்தின் மூலம் அடித்தட்டு மக்களும் பயன்படையச் செய்தார். எம்ஜிஆர் முதல்வராகவிருந்த காலத்தில் சத்துணவுத்திட்ட நிர்வாகத்தில் நிலவிய சீர்கேடுகளைக் களைந்திட உதவினார். தமிழக மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காதவாறு தன் அரசியலை நடத்தினார். இவையெல்லாம் அவரது ஆரோக்கியமான பக்கங்கள். அவரது திட்டங்களினால் பலர் பயனடைந்தார்கள்.
Monday, February 5, 2024
எம்ஜிஆர் பற்றிய அவதூறுப்பேச்சு! அரசியல் 'லூசு' ஒருவரின் அறியாமையா?
எம்ஜிஆர் பற்றி அண்மையில் அரசியல் லூசு என்றழைக்கப்படக்கூடிய ஒருவர் 'லூசு' என்றழைத்து மேடையில் பேசியது தற்போது எம்ஜிஆர் மீது அபிமானம் கொண்ட அனைவரையும் ஆத்திரமடைய வைத்துள்ளதை சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சு மூலம் இவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை ஆளும் திமுக கட்சி கண்டிக்காது விட்டால் அடுத்துவரும் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் களத்தில் தமிழக வெற்றிக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வாக்குகளைப் பிரிக்கவுள்ள சூழலில் இவ்விதமான பேச்சானது ஆளும் திமுகவுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கப் போகின்றது.
Friday, February 2, 2024
'தமிழக வெற்றி கழகம் (தவெக) : நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்! - ஊர்க்குருவி -
நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். அவர் தனது அரசியல் பார்வை பற்றிக் குறிப்பிட்டுள்ளதை 'இந்து தமிழ்'பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது;
மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும். என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். அதற்காகவே எனது தலைமையில் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் கட்சி தொடங்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்."
தற்போதுள்ள அரசியல் சூழல் என்னைப்பொறுத்தவரையில் நடிகர் விஜய்யுக்குச் சாதகமான பல விடயங்களைக் கொண்டுள்ளது.
Thursday, December 28, 2023
அஞ்சலி: தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தலைவர் விஜயகாந்த் மறைவு!
தமிழ்த்திரையுலகில் எனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். தன்னைக் கறுப்பு எம்ஜிஆர் என்று அழைத்துக்கொள்வதில் மகிழும் விஜயகாந்த் உண்மையிலேயே திரையிலும், அரசியலிலும் எம்ஜிஆரின் வழியில் நடந்தவர். அதுவே அவரது திரையுலக, அரசியல் ஆதிக்கத்துக்கு முக்கிய காரணம்.
Sunday, December 10, 2023
அஞ்சலி: ரிவாட் அலாரீர் (Refaat Alareer)
பாலஸ்தீனக் கவிஞரும், காசாவிலுள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ரிவாட் அலாரீர் (Refaat Alareer) கடந்த புதன் இஸ்ரேல் காசா மீது நடத்திய குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து அவரது குடும்பத்தவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் பலத்த குண்டுத்தாக்குதல்களுக்கு மத்தியிலும் கவிஞர் ரிவாட் அலாரீர் காசாவை விட்டு நீங்காமல் அங்கேயே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த இரங்கல்.
Tuesday, November 29, 2022
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (13) - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் 13 - நானொரு காலவெளிக்காட்டி வல்லுனன்!
காலவெளிப் பிரபஞ்சம் பற்றிய கண்ணம்மாவுடனான எனது உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்தது. இயற்கையை இரசிப்பதில் எனக்கு நேரம் தெரிவதில்லை. நல்ல இலக்கியப் படைப்புகளைப் படிப்பதில் எனக்கு நேரம் தெரிவதில்லை. இருப்பு பற்றிய அறிவியல் பூர்வமான உரையாடல்களிலும் எனக்கு நேரம் தெரிவதில்லை. கண்ணம்மாவுடன் இப்பொழுது நடத்திக்கொண்டிருக்கும் உரையாடலும் இத்தகையதொன்றுதான். இந்த விடயத்தில் அவளும் என் அலைவரிசையில் இருந்தாள். அது எனக்குச் சாதகமாக அமைந்து விட்டது. இவை போன்ற உரையாடல்கள் இல்லையென்றால் இருப்பில் என்ன அர்த்தமிருக்க முடியுமென்றும் சிந்திப்பதுண்டு. அதனால் இவற்றை எப்பொழுதும் வரவேற்பவன். பங்குகொள்பவன்.
கண்ணம்மாவே மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ந்து இக்கேள்வியினைக் கேட்டாள்:
"கண்ணா, காலவெளிச் சட்டங்களால் ஆன இப்பிரபஞ்சம் பல படத்துண்டுகளால் ஆன திரைச்சித்திரம் போன்ற காலவெளிச் சித்திரம் என்று கூறினாய் அல்லவா?"
"ஓம். கூறினேன் கண்ணம்மா. அதற்கென்ன?'
'கண்ணா, திரைப்படச் சுருளை நாம் முன்னோக்கி இயக்கலாம். அல்லது பின்னோக்கி இயக்கலாம். இல்லையா என் செல்லக்கண்ணா?"
"உண்மைதான் கண்ணம்மா. நீ சொல்வது முற்றிலும் சரியானதுதான் கண்ணம்மா."
Wednesday, November 16, 2022
தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (9) - மின்காந்தமணி என்னுமென் சகி! - வ.ந.கிரிதரன் -
வழக்கம்போல் முடிவற்று விரிந்திருக்கும் இரவு வானை, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவும் வானைப் பார்த்தபடியிருக்கின்றேன். இரவு வான் எப்பொழுதும் புதிர்களை அடுக்கி வைத்துள்ள நூலைப்போல் என்னைப் பிரமிக்க வைக்குமொன்று. காலத்தின் அடுக்குகளுக்குள் விரிந்து கிடக்கும் இரவு வான் இருப்பின் புதிர்களின் விடைகளைத் தாங்கி நிற்கும் ஞானப்பெட்டகமாக எப்பொழுதும் எனக்குத் தெரிவதுண்டு. அதனால் அதனை எத்தனை தடவைகள் பார்த்துக்கொண்டிருந்தாலும் எனக்கு அலுப்பதேயில்லை.
"என்ன எவளைப்பற்றி யோசனை?"
எதிரில் மந்தகாசப் புன்னகையுடன் மனோரஞ்சிதம் நிற்கின்றாள்.
"வேறு யாரைப்பற்றி? எல்லாம் என் சகியைப்பற்றித்தான். இருப்பில் என்னுடன் எப்பொழுதுமிருக்கும் என் இன்பச் சகியைப்பற்றித்தான் கண்ணம்மா"
"கண்ணா, இந்தக் கண்ணம்மாவை விட்டால் உனக்கு வேறு யார் சகி இருக்க முடியும்?"
"யார் சொன்னது இருக்க முடியாது என்று. இவள் என்னை எப்பொழுதும் வியப்பிலாழ்த்தும் என் சகி. மின்காந்தமணி. இவளது ஆளுமை எப்பொழுதும் என்னைப் பிரமிக்க வைக்குமொன்று."
'அதென்ன மின்காந்தமணி. வித்தியாசமான பெயராகவிருக்கிறதே. கண்ணா யாரிவள்? உண்மையா இல்லை இதுவும் உன் வேடிக்கைப்பேச்சுத்தானா?"
Thursday, June 23, 2022
My opinion: Wake Up Canadian Universities! It's is time to change!
It's time for Canadian Universities to take the PhD admission process in their hands. Currently students who are admissible can't pursue their studies unless they find so called supervisors , the professors. Any admitted students found admissible should be placed under a supervisor by the universities. If a student is admissible to a PhD program that means he or she is qualified to pursue a PhD. Currently this is not the case. An admissible student has to find a supervisor.
Monday, December 27, 2021
எம்ஜிஆர் நினைவாக..
டிசம்பர் 24 எம்ஜிஆரின் நினைவு தினம். எம்ஜிஆர் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை அவற்றில் இடம் பெறும் ஆரோக்கியமான கருத்துகள் உள்ளடங்கியுள்ள பாடல்கள்தாம். நல்ல கருத்துகளைக் கூறும் அப்பாடல்கள் வாழ்க்கைக்கு மிகவும் உதவும் தன்மை மிக்கவை. வழிகாட்டுபவை.
Monday, December 13, 2021
(யு டியூப்) வ.ந.கிரிதரனின் நேரம்: மழையும், நானும்
நண்பர்களே! ஒரு பரீட்சார்த்த முயற்சியாக யு டியூப்பில் ஒரு சானலை ஆரம்பித்துள்ளேன். அதில் முதல் முறையாக ஒரு காணொளியை பதிவேற்றம் செய்துள்ளேன். அவ்வப்போது பல்வேறு விடயங்களைப்பற்றிய என் சிற்றுரைகள் இங்கு இடம் பெறும். என் படைப்புகள் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் இங்கு இடம் பெறும். இக்காணொளியினை நான் எனது ஐபோன் மூலம் உருவாக்கினேன். முதல் முயற்சியென்பதால் குறைகள் நிச்சயமிருக்கும். காலப்போக்கில் அவை குறைந்து நிறைகள் அதிகரிக்கும். காணொளியைப் பாருங்கள். உங்கள் கருத்துகள் எவையாயினும் அவற்றைப் பதிவு செய்யுங்கள். அவை நிச்சயம் எதிர்காலக் காணொளிகளுக்கு ஆரோக்கியமாக உதவும். நன்றி
Friday, July 23, 2021
மணிமேகலையின் காதல்!
Monday, July 22, 2019
கறுப்பு ஜூலை 1983 பற்றிய நினைவுக்குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் மே 2009, ஜூலை 1983 இரண்டு மாதங்களும் அவர்கள்தம் வரலாற்றைப் புரட்டிப்போட்டு வைத்த மாதங்கள். ஜூலை 1983 அதுவரை இலங்கைத்தமிழர்களுக்கெதிராக வெடித்த இனக்கலவரங்களில் மிகப்பெரிய அழிவுகளையும் , உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்திய கலவரம். ஜே.ஆர்.அரசின் முக்கிய அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் பலர் முன்னின்று நடாத்திய கலவரம். இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தைச் சுவாலை விட்டெரியச்செய்த கலவரம். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை முக்கிய உபகண்ட அரசியற் பிரச்சினைகளிலொன்றாக, சர்வதேச அரசியற் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றிய கலவரம். இலட்சக்கணக்கில் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக உலகின் பல்வேறு பகுதிகளையும் நோக்கிப் படையெடுக்க வைத்திட்ட கலவரம். இவ்விதமுருவான இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை பேரழிவுகளுடன் முடிவுக்கு கொண்ட மாதம் மே 2009.
ஜூலை 1983 இனக்கலவரத்தைப்பற்றி கடந்த சில வருடங்களாக முகநூலில் பதிவுகளிட்டிருந்தேன். அவற்றுக்குப் பலர் எதிர்வினைகள் ஆற்றியிருந்தார்கள். தம் அனுபவங்களை, கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அவற்றை ஆவணப்படுத்த வேண்டுமென்று எண்ணினேன். அவற்றை முக்கியமான எதிர்வினைகளுடன் தொகுத்து என் வலைப்பதிவான 'வ.ந.கிரிதரன் பக்கம்' தளத்தில் இவ்வருட என் நினைவு கூர்தலாகப் பதிவு செய்துள்ளேன். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
1. 83 'ஜூலை' இலங்கை இனக்கலவர நினைவுகள்.: இந்தியா அனுப்பிய சிதம்பரம்! (July 22, 2018)
சிதம்பரம் கப்பலை கூகுளில் தேடிப்பார்த்தேன். கப்பலின் படம் வந்தது. இக்கப்பலைத்தான் இலங்கையின் 1983 இனக்கலவரத்தையடுத்து இந்தியா கொழும்பில் தங்கியிருந்த அகதிகளை யாழப்பாணம் கூட்டிச்செல்வதற்காக அனுப்பியிருந்தது. இக்கப்பல் பல நினைவுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் ஆரம்பத்திலிருந்தே தொண்டர்களாக மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சேவையாற்றினர். தர்மகுலராஜா அவர்களும் அவர்களிலொருவர். இவர் எனக்கு ஒரு வருட 'சீனியர்'. அவர்களில் நானுமொருவனாக இணைந்திருந்தேன். ஏற்கனவே இலங்கை அரசு வழங்கியிருந்த லங்கா ரத்னா போன்ற சரக்குக் கப்பல்களில் அகதிகள் பலரை அனுப்பி வைத்தோம்.
Tuesday, July 2, 2019
'வடலி' பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான் ஜானின் நூற் தொகுதி!
Sunday, June 30, 2019
அஞ்சலி: முத்தையா சகாதேவன்
முத்தையா சகாதேவன் ஓர் அப்பாவி. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த இவர் , கடந்த 15 வருட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அண்மையில் விடுதலையைக் காணாமலே சிறையில் மரணமானார். நாட்டின் அரசில் அமைப்பானது எவ்விதம் தனி ஒரு மனிதனின் வாழ்வை ஆட்டிப் படைக்கின்றது; சீர்குலைக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் மரணம் இது. தனி மனிதரின் இருப்பானது இவ்விதமான அரசியல் அமைப்பொன்றினால் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் புனைவுகள் பல வெளியாகியுள்ளன. அவற்றில் காப்காவின் 'விசாரண' நாவலும் முக்கியமானது. முத்தையா சகாதேவனின் நிலையும் அத்தகையதுதான். சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணைகளேதுமற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான இவரது மரணம் தேவையற்றதொன்று. இவரைப்போன்ற பல முத்தையாக்கள் இலங்கைச் சிறைகளில் வாடுகின்றார்கள்.
அண்மையில் பதுளையைச் சேர்ந்த முத்தையா சடகோபன் என்னும் அப்பாவி, அரசியல் கைதி, எவ்விதக் குற்றங்களும் செய்யாத நிலையில், பதினான்கு வருடங்கள் சிறை வாசம் அனுபவித்து சிறையில் மரணமடைந்தது யாவரும் அறிந்ததே. இவரது மரணம் இதுவரை விடுதலையாகாமல் சிறைகளில் ஆண்டுக்கணக்காக வாடும் அரசியல் கைதிகள் விடயத்தை மீண்டும் அனைவரின் கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளது. இலங்கையின் அனைத்துப்பகுதி அரசியல்வாதிகளும், மானுட உரிமை அமைப்புகளும் ஓன்றிணைந்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த வேண்டிய தருணமிது.
அண்மையில் என்னுடன் முகநூலில் நட்பராக இணைந்ததன் பின்னரே இன்னுமோர் அரசியல் கைதியைப்பற்றி அறிந்துகொண்டேன். இவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி, இவர் ஓர் எழுத்தாளர். சிறையிலிருந்தபடியே இவர் எழுதிய 'யாழிசை' என்னும் நாவலுக்கு இலங்கை அரசின் தேசிய சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது. இவர் மொறட்டுவைப்பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி. இவர்தான் எழுத்தாளர் சிவ. ஆரூரன். இவர் இன்னும் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவரைப்பற்றி , இவரது நாவலான 'யாழிசை' நாவல் பற்றி அறிய வேண்டுபவை பல உள்ளன. இவரது நாவலான 'யாழிசை' பற்றி எழுத்தாளரான மருத்துவர் எம்.கே.முருனானந்தன் எழுதிய முகநூற் பதிவு கீழே:
************************************************************************************************************
அரசியற் கூண்டுப் பறவை சிவ ஆருரன் அவர்களின் நாவல். ‘யாழிசை’ ; போர் தின்ற வாழ்வின் ஒரு முகம். - எம்.கே.முருனானந்தன் -
எமது வாழ்வானது போர் தின்ற வாழ்வு. சிலரது வாழ்வு முற்று முழுதாக விழுங்கப்பட்டு காணாமலே போய்விட்டது. வேறு சிலரது கொத்தி குதறிச் சிதைக்கப்பட்டு அழிக்க முடியாத வடுக்களோடு நகர்கிறது. அந்த வாழ்வின் இழப்புகளால் மனம் சோர்ந்து அழுது புலம்பி முன்னகர முடியாது அழுந்தி மாய்பவர்கள் பலர். அவற்றைச் சவால்களாக கொண்டு அதி தீவிர முயற்சிகளுடாக மற்றவர்களுக்கு நாம் சளைத்தலர்கள் அல்ல என துணிச்சலோடு வாழ்ந்து காட்டுபவர்கள் சிலர். இந்த நாவல் அதற்கு ஒரு சான்று.
Wednesday, June 5, 2019
எழுத்தாளர் காத்யானா அமரசிங்கவின் யாழ் நூலகம் பற்றிய பத்தி பற்றி...
எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இன்று - ஏப்ரில் 22 - பிறந்தநாள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில், உலகத்தமிழ் இலக்கிய...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
- மண்ணின் குரல் தொகுப்பு. குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாகத் தமிழகத்தில் வெளியானது (1998) - 'மண்ணின் குரல்' என் ஆரம்ப கால நாவல்களின் தொகு...
-
எழுத்தாளரும், இலக்கியத் திறனாய்வாளருமான ரஞ்ஜனி சுப்ரமணியம் அண்மையில் ஓவியா (தமிழகம்) பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'நவீன விக்கிரமாதித்தன...