'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Sunday, January 25, 2026
கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டமும் , தமிழரின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பகுதிகளும்! - வ.ந.கிரிதரன் -
அண்மைக்காலமாக ஊடகங்களில் கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன. இது பற்றிய முழுமையான அறிக்கையினை இன்னும் நான் பார்க்கவில்லை. இத்திட்டம் பற்றிய விரிவான வரைபடங்களுடன் கூடிய அறிக்கை இணையத்தில் இருந்தால் அறியத்தாருங்கள்.
இத்திட்டம் பற்றிய முழுமையான விபரங்கள் எவையுமில்லாமல் என்னால் உறுதியான கருத்துகள் எவற்றையும் தற்போது வைக்க முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் கூறுவேன். வவுனியாவின் எல்லைப்பகுதிகளில் குறிப்பாக மருதோடை , காஞ்சிரமோடை பகுதிகள் பல தமிழர்தம் சரித்திர முக்கியத்துவம் மிக்கவை. குறிப்பாகக் காஞ்சிரமோடை பற்றியொரு கட்டுரையினை நான் எழுநா சஞ்சிகையிலும் எழுதியுள்ளேன். அதனை இப்பதிவின் கீழ் தந்திருக்கின்றேன்.
இவ்விதமான சரித்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியவை. இதுவரையில் போதிய ஆய்வுகள் இவை பற்றிச் செய்திருக்கின்றார்களா என்பதும் சரியாகத்தெரியவில்லை. இவ்விதமான பகுதிகளை இத்திட்டம் அழிக்கும் வகையில் அமைந்திருந்தால் இத்திட்டம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அப்பகுதி மக்களின் குடி பரம்பலை மாற்றி அமைக்காதிருந்தால், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்டால் , இத்திட்டம் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனை அளிப்பதாக இருந்தால் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவது நல்லதே.எனவே இத்திட்டம் பற்றிய விரிவான தகவல்கள் மக்களுக்கு அறியத்தரப்பட வேண்டும். வரலாற்று மற்றும் தொல்லியல் அறிஞர்கள், அரசியல் ஆய்வாளர்கள், நீர்பாசனப் பொறியியலாளர்கள், விவசாய அறிஞர்கள், சூழலியலாளர், அரசியல் அறிஞர்கள் , பொருளியல் நிபுணர்கள், எனப் பலரும் இணைந்து , பல்வேறு கோணங்களில் இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டு, அதன் பின்பே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவசரப்பட்க் கூடாது.
வரலாற்று அறிஞர்கள் இத்திட்டம் எடுத்துக்கொள்ளும் பகுதிகளின் வரலாற்று முக்கியத்துவம் பற்றிய கருத்துகளை, ஆய்வுகளைக் கவனத்திலெடுக்க வேண்டிய தருணமிது.
**********************************************************************************************************************************************
புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’ - வ.ந.கிரிதரன் -
காஞ்சிரமோடை என்னும் இப்பகுதியை நான் அறியக் காரணமாகவிருந்தது எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திய காந்தியத்தின் ‘நாவலர் பண்ணைத் தன்னார்வத் திட்டம்’ ஆகும். நாவலர் பண்ணையில் மலையகத்திலிருந்து 77 இனக்கலவரத்தில் அகதிகளாக வந்திருந்த மக்களைக் காந்தியம் அமைப்பு குடியேற்றியிருந்தது. நாவலர் பண்ணைக்கும், மருதோடைக்குமிடையில் அமைந்திருக்கும் காஞ்சிரமோடை என்னும் பகுதி அப்போது காடாகவிருந்தது. மருதோடை வரை மட்டுமே பஸ் செல்லும். அங்கிருந்து பண்ணைக்கு மூன்று மைல்கள் வரையில் நடக்க வேண்டும். பண்ணைவாசிகள் அங்கிருந்து நடந்தே பண்ணைக்குச் செல்ல வேண்டும். இத்தூரத்தைக் குறைப்பதற்காக காஞ்சிரமோடைக் காட்டினூடு பாதை அமைப்பதும் அத் தன்னார்வத் திட்டத்தின் ஓரம்சம். அத்திட்டத்தின் மூலம் அப் பண்ணைவாசிகளின் பயணம் இலகுவானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும் என்று தீர்மானிக்கப்பட்டது.
காந்தியம் அமைப்பின் நாவலர் பண்ணையின் முக்கிய காரணங்களில் ஒன்று எல்லைப் பகுதியைப் பாதுகாப்பது. அத்திட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றவர்களில் நானுமொருவன். அப்பொழுது நான் என் படிப்பை முடித்து வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது அப்பகுதி மக்கள் அக்காட்டுப் பகுதியைக் ‘காஞ்சிரமொட்டை’ என்றே அழைத்தார்கள். ஆனால் அதன் உண்மையான பெயர் காஞ்சிரமோடை. பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியம்’ நூலின் முன்னுரை அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தை விரிவாகவே எடுத்துரைக்கின்றது.
இச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி பற்றி பேராசிரியர் புஷ்பரட்ணம் போன்றோர் ஏதாவது ஆய்வுகள் செய்திருக்கின்றார்களா அல்லது அது பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்களா என்பது தெரியவில்லை. முக்கியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் ஒன்றான இப்பகுதி இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை எடுத்துக்காட்டும் பகுதி என்பதால் ஆய்வுகளை வேண்டி நிற்கும் பகுதிகளில் ஒன்று.
‘யாழ்ப்பாணக் காவியம்’ நூலில் எழுத்தாளர் பண்டிதர் க. சச்சிதானந்தன் எழுதியுள்ள முன்னுரையில் காஞ்சிரமோடை பற்றியும் அப் பிரதேசத்தில் காணப்படும் இடிந்த ஆலயங்கள், தூண்கள், தூபிகள், வாயிற்படிகள், சிற்பங்கள், கருங்கல் அணை பற்றியும் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“1958 ஆம் ஆண்டு சிறியேன் நெடுங்கேணியிலிருந்து மருதோடை வழியாகக் காஞ்சிரமோடை சென்று அங்கிருந்து காட்டுப்பூவரசங் குளத்தைக் கடந்து பணிச்சமடு என்னுமிடத்துக்குப் பலமுறை செல்லவேண்டியிருந்தது. இங்கு குறிப்பிடும் காடு மிக அடர்ந்தது. கொடிய வனவிலங்குகளும் பேராபத்துக்களும் நிறைந்துள்ளது. பனிச்சமடுவென்னும் ஏரியின் கரையிலே சிலநாள் வசித்த சிறியேன், மிக உயர்ந்த பாலை மரமொன்றின் உச்சியில் மூன்றாம் அடுக்குப் பரணில் நித்திரை செய்து வந்தேன். ஒருநாள் நள்ளிரவில் கடலிரைவது போல் நீரின் ஓசை கேட்டுப் பயந்தேன். ஆனால் நீர்ப்பெருக்கு சிறியேன் இருந்த இடத்தை அடையவில்லை. மறுநாள் சிறியேனும் வேறு பணியாளர்களும் பாதையற்ற காடு வழியே நீரோசைத் திசைநோக்கிச் சென்றோம். அக் காடுகளிலெல்லாம் இடிந்த பிள்ளையார் கோவில்களும், சிவன்கோவில்களும், தூண்களும், தூபிகளும் வாயிற்படிகளும் காணப்பட்டன. கருங்கல் வேலைகளும் சிற்பங்களும் அங்கங்கே போன வழியெல்லாம் சிதறிக் கிடந்தன. ஈற்றில் ஒரு உயர்ந்த பிரதேசத்துக்கு வந்தபொழுது, கருங்கல்லாற் கட்டப்பட்ட ஒரு பெரிய அணைக்கட்டுக் காணப்பட்டது.”
அங்கிருக்கும் நீள்சதுரக் கனவடிவக் கருங்கற்கள் பிரமாண்டமானவை என்று கூறும் பண்டிதர் க. சச்சிதானந்தன் அப்பகுதியில் காணப்படும் நீர்வீழ்ச்சியின் அழகையும் மனத்தைத்தொடுமாறு வர்ணித்திருப்பார். அந்நீர்வீழ்ச்சியின் எழுச்சியே அவர் யாழ்ப்பாணக் காவியம் எழுதியதற்குத் தன்னைத் தூண்டியது என்று குறிப்பிடுவார்:
“அங்கு பிரயோகிக்கப்பட்ட நீள்சதுரக் கனவடிவக் கருங்கற்கள் மிகப் பிரமாண்டமானவை; அன்றியும் கருங்கல் வேலை மிக உன்னதமானது. அணையின் நடுவிலே சில கருங்கற்கள் குலைந்தமையால் அந்த இடைவழியாக நீர் மிக உயரத்திலிருந்து குதிக்கிறது. ஒரு நீர்வீழ்ச்சி போன்று குதிப்பதால் பேரிரைச்சல் உண்டாகிறது. விழுமிடத்தில் மிகப் பலமாக நீர் சுழன்று அகப்பட்டவற்றைப் பல பரிவலுவுடன் இழுத்துச் செல்கிறது. கால் வைக்கப் பயமாக இருக்கும். வழிந்த நீர் சிற்றாறு போல் ஓடுகின்றது. அதன் இருமருங்கிலும் கண்ட இயற்கைக் காட்சியை என்னென்பது! பூக்களின் மகரந்தம் சொரிந்து, பசுமை கலந்த பொன் போன்று நிலத்திற் பரந்திருப்பது நெஞ்சை அள்ளுகிறது. எத்தனை வண்ணச் சேர்க்கைகள் கொண்ட வண்ணாத்திப் பூச்சிகள்! விதம் விதமான புள்ளிசைகள், மிருகங்களின் உறுமல்கள்! இந்த நீர்வீழ்ச்சியின் ஓசை மனத்தைப் பறையடித்துக் கிளர்த்தியது. அதன் உன்னதம் உள்ளத்தை மீட்டியது. அந்த எழுச்சியே இக் காவியத்தைப் பாடுவதற்குச் சுருதியாயிற்று.”
அங்கு காணப்பட்ட கல்லணை பரராசசேகரன் அணையென்று அழைக்கப்பட்டதையும் அவர் ஊரவரிடமிருந்து அறிந்து கொள்கின்றார்.
“பின்னர் காஞ்சிரமோடையில் வாழ்ந்த முத்தரம்மான் என்ற மூத்தோரை இதன் வரலாறு பற்றிச் சிறியேன் கேட்டேன். அவர், ‘இது பரராசன் அணைக்கட்டு’ என்று கூறினார். இங்கு கருங்கற்களில் பல எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவை மங்கியிருந்தன. இவ்வணைக்கட்டுப் பற்றிச் சரித்திர நூல்களில் தேடியபோது ஒன்றுங் கிடைக்கவில்லை. இப்பிரதேசம், வட, வடமத்திய, கீழ் மாகாணங்கள் பொருந்துமிடத்தில் தமிழ்ப் பிரதேசத்தில் உள்ளது. பதவியாவின் வடக்கே பத்துப் பதினொரு மைல் தூரத்திலுள்ளது.”
இந்த அணையினை வண்ணாத்திப்பாலமென்றும் அழைக்கும் விடயத்தைப் புறோகியர் என்பவரின் குறிப்புகளிலிருந்து அறிந்துகொள்ள முடியும் தகவலையும், இப்பிரதேசம் பற்றிய பேராசிரியர் கா. இந்திரபாலாவின் ஆய்வுகள் பற்றிய விபரங்களையும் பண்டிதரின் மேற்படி கட்டுரை தருகின்றது:
“புறோகியர் என்பார் (BrOhior 1934, P. 41) இது பற்றிக் குறிப்பிட்டிருப்பவற்றைக் கீழே மூலத்திலுள்ளவாறு ஆங்கிலத்தில் தருகின்றோம்.
“About ten or eleven miles down the more or less sinuous course of Ma. Oyo, which passes out the breach of Padaviya tank, there is an ancient stone dam or weir which is entitled to take one of the foremost places among the structures of the kind in Ceylon. This is known as Varnardi Palam. Only one authority has ever inspected this monument of labour. (Parker Sessional paper, XX11 of 1886)”
“வண்ணாத்திப் பாலமென்று இதை வழங்குவர். கீழ் மாகாணத்தில் இயன் ஓயாப் பகுதியிலும், ஒரு வண்ணாத்திப் பாலமுண்டு. அதனையும் இதனையும் வேறு பிரித்துக் கொள்க. இந்த அணைக்கட்டைக் கடந்து கிழக்கே சென்றால் கொக்கிளாய், தென்னமரவடி போன்ற இடங்களை அடையலாம். பதவியாப் பகுதி பற்றி இந்திரபாலா (1972, பக். 95) ஆராய்ந்துள்ளார். பதவியாவிலே கண்டெடுக்கப்பட்ட சாசனம் பதிவியாவுக்கு மறுபெயர் மதீபதி கிராமம் என்று கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலே குறிப்பிட்ட அணைக்கட்டைச் சுற்றி எத்தனையோ இடிந்த கோவில்கள் இருக்கின்றன. கல்லெழுத்துக்கள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி எழுதிய நால்கள் கைக்கெட்டவில்லை. மக்கள் வாழ்ந்ததற்கடையாளமாக, கிணறுகள், பாத்திரங்கள், மனைச் சிதைவுகள் காணப்படுகின்றன. பேராபத்துக்கள் நிறைந்த பிரதேசமானபடியால் அங்கு சரித்திராசிரியர்கள் செல்லவில்லை போலும்! “
முழுமையாக வாசிக்க - https://ezhunaonline.com/article/historical-value-of-kanchiramodai/?fbclid=IwAR04Z7eLh01axvpG6d3g8tC6McARZv_UFKY0TjZ8sGIAAaf_Z7uWcT-UUGg_aem_ASIDD6BAW6hR05JI6Ht8k1U-Ysk7VzPVkae58V8uFcdLPaiNIg5nRUavIDGp8VXgT6B3w9c5wCPNod2OOemyEJqj
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. இசை & குரல்: SUNO AI ஓவியம்: AI நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. நினைவு...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' ['பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?' என்னும் தலைப்பில் , அவனது '...
-
[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகள் இவை...
-
11. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
சிறுகதை: 'கணவன்' - வ.ந.கிரிதரன் - நான் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவன். என் படைப்புகள் பல அச்சுருவில் வெளிவராத நிலையிலும் இணையத...
-
- 'பதிவுகள்' இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்த...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
பதிவுகள்.காம் "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'! 'பதிவுகள்' இணைய இதழ் 2000 ஆம் ஆண்டிலிருந்து இணையத்த...

No comments:
Post a Comment