Thursday, June 25, 2020

கோப்பாய்க் கோட்டையின் பழைய கோலம்! - வ.ந.கிரிதரன் -

எண்பதுகளில் வீரகேசரியில் நான் எழுதிய கோப்பாய்க் கோட்டை பற்றிய கட்டுரையிது. 15-3-1981 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியானது. நண்பர்களே! கோப்பாய்க் கோட்டை பற்றி நீங்கள் அறிந்த விபரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி. இக்கட்டுரைக்கு வீரகேசரி நிறுவனத்தினர் ரூபா 35 அனுப்பியிருந்தார்கள். மறக்க முடியாது.

அக்கட்டுரை கீழே:
 
நல்லூர் நகர் பற்றி ஆராய விளைந்த போது, கட்டடக் கலை மாணவனான நான் உதவி நாடி கலாநிதி கா.இந்திரபாலாவை நாடிய போது தான், அவர் தனது சிரமத்தைப் பொருடபடுத்தாது தனது வேலைகளுக்கு மத்தியில் எனக்கு உதவினார். அபோதுதான் அவர் கோப்பாயில் அமைந்திருந்த தமிழ் மன்னர்களின் கோட்டையைப் பற்றியும் அது பற்றிய சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரை பற்றியும் கூறினார். தமிழரின் பழமை வாய்ந்த சின்னங்களின் பரிதாப நிலை கண்டு மனம் நொந்திருந்த எனக்கு அந்தக் கோட்டை அந்தக் கோட்டையின் இன்றைய நிலையைப் பார்க்க வேண்டும் போலிருக்கவே , கோப்பாய் விரைந்தேன். கோப்பாய் பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்பாயுள்ள சேர்ச்சைச் சேர்ந்த சற்குணசிங்கம் என்பவர் எனக்கு அப்பகுதியினைக் காட்டி உதவினார்.

மானிப்பாய் கைதடிச் சந்திக்குச் சற்று அப்பால் வீதியின் வலது புறமாக இருந்த ஒரு பழமையான வாயில் முகப்பை காட்டிய அவர் 'இதுதான் பழைய கோட்டை' (Old Castle) என்ற போது தனிமையான நிலையில் நீண்ட காலமாக அமைதியுடன் காத்து நிற்கும் ஒருமனிதனைப் போன்று அந்தப் பகுதி எனக்குத் தோன்றியது.

அந்த வாசலைக் கடந்து உள்ளே சென்றோம். சற்குணசிங்கம் சொன்னார்:
'அருகிலுள்ள எல்லாக் காணிகளுமே பழைய கோட்டை என்றுதான் அழைக்கப் படுகின்றன. ஆனால் ஒவ்வொரு துண்டும் ஒவ்வொருத்தரின் கைக்கு மாறிக் காலத்தின் கோலத்திற்கேற்ப வெகுவாக மாறி விட்டன. கடைசியாக உள்ள காணி மட்டும் இன்னும் விற்க படாமலுள்ளது..'

அந்தப் பின்புறக் காணித் துண்டை அடைந்ததுமே ஒருவித பழமை வாய்ந்த சூழலின் இனிமையில் மனது மூழ்கி விடுகின்றது. புதுமையானதொரு உலகிற்கு வந்து விட்டது போன்றதொரு உனர்வு ஏற்படுகின்றது. சற்குணசிங்கம் மேலும் கூறலானார்:

'இந்தக் காணியில் முன்பொருமுறை நான் வேம்பொன்றை வெட்டியபோது எலும்புத் துண்டுகள் அகப்பட்டன. நிலத்தில் செங்கற்கள் குவிந்து கிடக்கின்றன. அதோ அங்கே நிலத்தைப் பாருங்கள்.'

பார்த்தேன். அவர் காட்டிய இடத்தில்; பூமியினூடு எட்டிப் பார்த்தபடி செங்கற்கள் சிரித்தன. அவரே தொடர்ந்தார்: 

'நிலத்தின் அமைப்பைப் பாருங்கள் தம்பி. ஒரு பக்கம் பதிந்தும், இன்னொரு பக்கம் உயர்ந்தும் கிடப்பதை. உயர்ந்து கிடக்கும் பகுதியைத் தோண்டிப் பார்ப்போமாயின் பழைய கோட்டையின் சரித்திரம் தெளிவாகலாம்'.
எனக்கு ஆச்சர்யமாகவிருந்தது. மனுஷன் எவ்வளவு ஆழமாகச் சிந்தித்திருக்கிறார். அத்துடன் அவர் ஒரு கதையையும் கூறினார்:
'நல்லூர்க் கோட்டையையும் , இந்தக் கோட்டையையும் இணைக்கும் ஒரு சுரங்கப் பாதை இருந்ததாக ஒரு கதை உள்ளது.'

அப்போதுதான் சுவாமி ஞானப்பிரகாசர் தனது கட்டுரையில் எழுதியிருந்த கோட்டை வாய்க்கால் பற்றி நினைவிற்கு வரவே கோட்டை வாய்க்காலைப் பற்றி வினவினேன். அந்தப் பழைய கோட்டை எனப்படும் காணித்துண்டுகளின் அருகாகச் செல்லும் சிறிய ஒழுங்கையையே கோட்டை வாய்க்கால் என்கின்றார்கள். அந்த ஒழுங்கையானது பழைய கோட்டை எனப்படும் நிலப் பகுதியிலும் தாழ்வானதாக அமைந்துள்ளது. சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் இந்தக் கோட்டை வாய்க்காலையே பழைய கோட்டையின் அகழியாகக் கருதுகின்றார்.

கோட்டை வாய்க்கால் என்னுமிப்பகுதி வயலுடன் முடிவடைகின்றது. பழைய கோட்டையின் பின்புறமாக உள்ள வயற்பகுதியும் வெகு தாழ்வானதாக உள்ளது. அவ்வயலில் பயிர் விளைவிக்கும் விவசாயியும் தான் மண்ணைக் கொத்துகையில் எலும்புகள் கிடைத்ததாகக் கூறினார்.

ஒரு காலத்தில் தனிச்சிறப்புப் பெற்று விளங்கிய அப்பகுதியின் இன்றைய பரிதாப நிலை கண்டு வயிறு பற்றியெரிந்தது. சற்குணசிங்கம் கூறினார்:'இப்பகுதியில் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு பாதுக்காக்கப்பட வேண்டும் ' அவரது குரலில் அப்பகுதியின் இன்றைய நிலைகண்டு படர்ந்த கவலை நியாயமானதுதான்.

வரலாற்றில் ஒரு தெளிவின்றிக் கிடக்கும் இலங்கைத் தமிழினத்திற்கு இன்றைய நிலையில் தேவையானது வெறும் வாய்ச் சவடால்களல்ல. ஆக்கபூர்வமான ஆய்வுகளே. இதற்கு தமிழ்ப்பகுதிகளில் காணப்படும் பழைமையான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள், அழிபாடுகள் என்பவை பேணிப்பாதுகாக்கப்படல் மிகவும் அவசியமானதொன்றாகும்.
இலங்கையின் கடைசித்தமிழ் மன்னர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தில் புகழ்பெற்ற இராஜதானியாக விளங்கிய நகர்தான் நல்லூர். இன்றோ அது காலத்தின் கோலத்திற்கேற்ப வெகுவாக மாறிக்கொண்டு வருகின்றது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேணிபாதுகாக்கப்படவேண்டிய அந்நகரின் பழமையின் சின்னங்களைக் காண்பதே அரிதாகிக் கொண்டு வருகின்றது. பொதுமக்களோ, அரசியல்வாதிகளோ இது பற்றிக் கவனிக்காமல் இருப்பது வருத்ததிற்குரியது. யமுனாரி (யமுனா ஏரி) செல்லும் மண்பாதையிலும் நிலத்தில் காணப்படும் செங்கற்களை ஆராய்ந்து பார்ப்பின் அவை எத்தனையோ கதைகளைக் கூறக்கூடும்.

தமிழ் இனத்தின் சரித்திரத்தை விளக்கக்கூடிய சின்னங்களே அரிதாகக் காணப்படும் இன்றைய காலகட்டத்தில் , காணப்படும் ஒருசில சின்னங்களையாவது பேணிப்பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.

No comments:

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1& 2) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: நகரத்து அணில்! மாதவன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து  வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ...

பிரபலமான பதிவுகள்