Saturday, May 18, 2019

தமிழ்க்கவிதைகளில் 'நகரம்' - வ.ந.கிரிதரன் -

தமிழ்க்கவிதைகள் சங்ககாலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு விடயங்களைப்பற்றி விபரித்திருக்கின்றன. சங்காலக்கவிதைகள் , காப்பியங்கள் பல அக்காலகட்டத்து நகர்களைப்பற்றிய  தகவல்கள் பலவற்றைத்தருகின்றன. குறிப்பாக சிலப்பதிகாரம் அக்காலகட்டத்தில் புகழ்மிக்க கோநகர்களாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம், மதுரை மற்றும் வஞ்சி பற்றி, அந்நகர்களில்  வாழ்ந்த மக்கள் பற்றி, அவர்கள் ஆற்றிய பல்வேறு தொழில்கள் பற்றியெல்லாம் விரிவாகவே தகவல்களைத்தருகின்றது. அக்கால நகரங்களின் நகர வடிவமைப்பு பற்றி, வாழ்ந்த மக்கள்  புரிந்த தொழில்கள் பற்றி, நடைபெற்ற விழாக்கள் பற்றி, பிற நாடுகளுடன் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகள் பற்றி.. என்று பல்வேறு வகைப்பட்ட தகவல்களை அவற்றின் மூலம்  அறிந்துகொள்ளலாம். இதனைப்போல் அண்மைக்காலத் தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளில் நகரம் கூறு பொருளாக அமைந்துள்ளதா என்று சிறிது சிந்தனையையோட்டியதன் விளைவுதான்  இக்கட்டுரை. இதுவொரு விரிவான ஆய்வல்ல. எதிர்காலத்தில் மேலும் பல படைப்புகளை ஆராய்ந்து  காலத்துக்குக்காலம் விரிவுபடுததப்படுத்தக்கூடியதொரு ஆரம்பக்கட்டுரையே.

இக்கட்டுரைக்காக ஆராய்ந்த  கவிஞர்களின் கவிதைகள் நகரங்களைப்பற்றி விபரிக்கையில் அங்கு வாழ்ந்த பல்வகைப்பட்ட மக்களைப்பற்றி, சமூக வாழ்க்கை முறைபற்றி, நகரங்கள் சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பு பற்றி,  நகரங்களில் நிலவிய சமூக வாழ்வின் இயல்பினால் மனிதர்களின் உளவியலில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி, அங்கு நிலவிய வர்க்கங்கள் மானுட வாழ்விலேற்படுத்தும் பாதிப்புகள் பற்றி,  நகரச்சூழல் ஏற்படுத்தும் உடல் உபாதைகள் பற்றி, மானுட சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நகரத்தில் ஏற்படுத்திய போர்ப்பாதிப்புகளைப்பற்றி.... எனப்பல்வேறு விடயங்களை  வெளிப்படுத்தி நிற்கின்றன. இவற்றை எடுத்துக்கொண்ட படைப்புகளினூடு இனங்காணுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவராகக்கருதப்படும் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) நகரம் பற்றிய கவிதையொன்று சுதந்திரன் பத்திரிகையில் 18 மார்ச் 1951  பதிப்பில் வெளியாகியுள்ளது. கவீந்திரனின் (அறிஞர் அ.ந.கந்தசாமி) 'நகரம்' கவிதை நகரத்து மக்களைப்பற்றி , நகரத்தில் நிறைந்திருக்கும் வாகனங்களைப்பற்றி, அவற்றின் விளைவாக  ஏற்படும் வாகன நெரிச்சல் பற்றி, புதுவகை மோஸ்தரில் பல்வேறு வகையான சிகை அலங்காரங்களுடன் வளைய வரும் பெண்களைப்பற்றி, பல்வகை உடலைமைப்புடன் காணப்படும்  பல்வகை மானுடர் பற்றி விரிவாகவே பேசும்.  'ட்ராமில் பயணிக்கும் தாமரை முகம்கொண்ட பெண்களைக்காமக்கண்களுடன் பார்க்கும் ஆண்களைக்கொண்டது நகரம்.  நகரம் சனத்தொகையால் நிறைந்திருந்தபோதும் மனம் திறந்து பேசுவதற்குத்தான் மனிதர்கள் இல்லை. பல்வகை மரம் வளர்ந்து மண்டிய  காட்டினைபோன்றதுதான் நகரத்தின் பண்பு; மனிதப்பண்பற்ற நகரம்' இவ்விதம் கூறுவாரவர்.

"நகரத்தில் கனத்தொகைக்கு நலிவில்லை இருந்த போதும்
அகத்தினைத் திறந்து பேச ஆட்கள் இல்லைப் பார்த்தால்
வகை வகை மரம் வளர்ந்து மண்டிய காடும் போல்தான்
நகரத்தின் பண்பு இங்கே மனிதப் பண்பில்லை யம்மா!"


இவ்விதமாக நகரம் பற்றி விபரிக்கும் நகரம் பற்றிய அவரது கவிதை இறுதியில் நகரம் செல்வம், கொல்புலியையொத்த வறுமை என்னும் வர்க்கங்களிரண்டால் பிரிந்துகிடக்கும் என்று  கூறும். அமைதிப்பண்பற்ற மானுடரைக்கொல்லும் நரகமே நகரமென்று அவரது கவிதை முடியும்.
"செல்வத்தின் செழிப்பு ஓர்பால் தீயதாம் வறுமை என்னும்
கொல்புலி வாயிற்பட்ட கும்பலோ மறு பக்கத்தில்
பல்விதப் பண்பும் சேர்ந்து கணமேனும் அமைதிப் பண்பு
நல் விதம் தோன்றா இந்த நகரம் கொல் நர கமாமே!"


கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் பிறந்த மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து உலகின் நானா திக்குகளிலும் அகதியாக அலைந்தவர். அவரது கவிதைகளில் நகரம் பற்றிய புதிய படிமங்களைக்காண  முடிகிறது.'பிராங்போட் நகரத்து இரவு' என்னுமவரது கவிதை பிராங்போட் நகரத்துச்சந்திலுள்ள அறையொன்றில் இருத்தலுக்காகப்போராடும் தமிழ் அகதியொருவரின் வாழ்வினை விபரிக்கும்.  பிராங்போட் நகரத்துச்சந்தொன்றில் காணப்படும் அறையினை சூல் கொண்ட பன்றியின் கருவறையாகக்காணுவார் கவிஞர்:

"சூல்கொண்ட் பன்றியின்  கருவறை போன்ற
'பிராங்போட்' நகரச்சந்திலோர் அறை.
"

என்று கூறும் கவிதை, பிராங்போட் நகரில் இருப்புக்காகத்தத்தளிக்கும் அகதியொருவன் இருப்புக்காக அடையும் சிரமங்களை மேலும் விபரிக்கும்.  இவ்விதமான அலைச்சலினால் சிதைந்துபோகும் அவனது இளமை வாழ்வினையும் எடுத்துரைக்கும். இவரது  இன்னுமொரு கவிதை நியூயோர்க் மாநகரத்து வீதியின் இருமருங்கிலும் உயர்ந்து  விண்ணைத்தொடும் கொங்கிறீட்டிலான உயர் மாடிக்கட்டடங்களை ஏவுகணைகளாகச்சித்திரிக்கும். 'எமது மண்ணும் இனிய வசந்தமும்'  சென்னை  மாநகரின் மாடிக்கட்டடங்களை குளவிக்கூடுகளாக உருவகிக்கும். அபெருநகரில் மானுடரின் அலுவலக வாழ்வை எடுத்துரைக்கும்:

'கொங்கிறீட் குளவிக்கூடுகளென
மாடித்தொகுதிகள்
உலகாய் விரியும்
சென்னைப்புறநகர்.

தனித்தனியாக லட்சம் மக்கள்
அலுவலகத்துப் பைல் கோர்வைகளாய்
பகலில் அலைவதும்
அதன் அதன் அடுக்குள் மாலைகள்தோறும்
இலக்க எண்படிக்குப் பணிமுடங்குதலுமாய்ப்
பெருநகர் நடத்தும் அலுவலக வாழ்வு.'


இவ்விதமானதொரு பெருநகரில் தனித்து வாழும் ஈழத்து அகதியொருவனின் இழந்த மண் பற்றிய ஏக்கங்களை கவிதை மேலும் விபரித்துச்செல்லும். ;வெய்யில் நாள்' என்பது இவரது  இன்னுமோர் கவிதை. நோர்வேயின் கார்ல் யோன் சாலைய்யில் வெய்யில் நாளொன்றில் திகழும் காட்சியினை விபரிக்கும் கவிதை. சூரியன் சுடர்ந்த அந்த நாளில் கார்ல் யோன் சாலையில் நோர்வீஜியர்கள்  ஆறாய்ப்பெருகுகின்றார்கள். உணவு விடுதிகளும்  மதுச்சாலைகளும் நிரம்பி வழிகின்றன. 'ஈக்களைத்தொலைக்க ஓடித்திரிகிற குதிரையைபோல, நாட்டேக்கத்தைத்தொலைப்பதற்காக கார்ல்  யோன் சாலையில்' அகதிக்கவிஞரும் அலைகின்றார். அவருடன் கூடவே தெருப்பாடகர்களும் அந்த வெய்யில் நாளில் கார்ல் யோன் சாலையில் காணப்படுகின்றனர். அவர்களிலொருவர்  தென்னமரிக்கத் தெருப்பாடகன். அவனது புல்லாங்குழலில் புதியதோர் சோகத்தைக்கவிஞர் உணர்கின்றார்:

'அவனது ஆத்மா இக்கணப்பொழுதில்
கார்ல் யோன்  தெருவில்
சுற்றியிருக்கும்  ரசிகர் மத்தியிலா
அல்லது மச்சுபிச்சு  மாநகர்ப்புறத்திலா
சஞ்சரிக்கிறது'


தென்னமரிக்கரின் அழிந்து போன மாநகரான மச்சுபிச்சுவைப்பற்றிய ஏக்கமாக அத்தெருப்பாடகனின் புல்லாங்குழலை உணரும் கவிஞர் அதில் புதியதோர் சோகத்தினைக்காணகின்றார். கூடவே  அவரை அவரது நாடு பற்றிய ஏக்கமும் சூழ்ந்துகொள்கிறது.  புகலிடம் நாடித்தஞ்சமடைந்திருக்கும் அகதிகளின் ஏக்கங்களால் நிறைந்திருக்கும் மேற்கின் மாநகர்களை விபரிக்கும் கவிதைகள்  ஜெயபாலனின் கவிதைகள். அவரது இன்னுமொரு கவிதையான 'நீலகிரிப்பயணக்குறிப்புகள்' ஈழத்தின் நாடற்ற மலையகத்து மக்கள், சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தால் நீலகிரி நகருக்கு வந்து  கொத்தடிமைகளாகச் சீரழிவதைச் சீற்றத்துடன் விபரிக்கும். இரண்டாம் உலக மகாயுத்தக்காலகட்டத்தில் ஹிட்லரின் படைகளுக்கெதிராக, அவற்றின் முற்றூகையின இரண்டரை வருட காலம்  எதிர்கொண்டு முறியடித்த நகர் லெனிகிராட். கவிஞரின் 'லெனின்கிராட் நகரமும்,  யாழ்ப்பாணச்செம்மண்  தெருவும்'  லெனின்கிராட்டின் வரலாற்றுச்சிறப்பினை விதந்தோதும். லெனிகிராட்டின்  வெற்றியானது 'இருள் கவிந்த யாழ்ப்பாணத்துச் செம்மண் தெருக்களில் , விரக்தி விளிம்ப்பில் தடுமாறுகையில்' 'மானிடர்களின் மாட்சியினைப்புலப்படுத்தி நம்பிக்கையினை ஊட்டும்:

'லெனின் நகரே இரண்டரை வருட முற்றுகைத்தீயில்
புடமிடப்பட்ட புரட்சியின் தொட்டிலே
இருள் கவிந்த யாழ்ப்பாணத்துச்
செம்மண் தெருக்களில்
விரக்தி விளிம்பில் தடுமாறுகையில்
உந்தன் நினைப்பு
மானிடர்கள் நாமென்ற
மாட்சிதனைப் புலப்படுத்தும்'.


இவ்விதமாக ஜெயபாலனது கவிதைகள் பலவற்றில் யாழ்ப்பாணம், நோர்வே , இந்தியா போன்ற பல நாடுகளில் நகரங்கள் பற்றிய குறிப்புகளுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கவிஞர் சேரனின்  கவிதைகள் ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்ட காலகட்டத்தின் பல்வேறு நிகவுகளின் ஆவணப்பதிவுகளாக இருப்பவை. ஈழத்தமிழர்தம் நகரங்களின் யுத்தகாலத்து இருப்பினை  விபரிப்பவை சேரனின் கவிதைகள். உதாரணத்துக்கு 'இரண்டாவது சூரிய உதயம்' கவிதை யுத்தச்சூழலில் எரியுண்ட இலங்கைத்தமிழரின் நகரமொன்றினைப்பதிவு செய்யும்:

'என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது.
எனது மக்கள் முகங்களை இழந்தனர்.
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும் அந்நியப்பதிவு.'


இவ்வாறாக சேரனின் கவிதைகள் பல ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்ட காலத்து நிகழ்வுகளின் ஆவணப்பதிவுகளாக விளங்குகின்றன. அந்நிகழ்வுகளினூடு மறைமுகமாக  அந்நிகழ்வுகள் நடைபெற்ற நகர்கள் பற்றிய விமர்சனங்களாகவும் அவரது அக்கவிதைகளைக்கருதலாம்.

கவிஞர் திருமாவளவனின் கவிதைகளில் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குப் புகலிடம் கொடுத்த நகர்கள் பற்றிய தகவல்கள், உணர்வுகள் காணப்படுகின்றன. அவரது 'நுகத்தடி மனிதர்' புகலிடம்  தந்த மாநகர்கள் அகதியொருவருக்கு  அளித்த அனுபவங்களை விபரிக்கும். நகரத்தின் தொடர்மாடிக்கட்டடங்களில் உறைந்து வாழும் அகதிகளின் இருப்பிடங்களைப்பற்றி கூறுகையில்,

'புகைவண்டியென நீண்டு கிடக்கும்
நகரத்தொடர்வீட்டுக் கட்டடத்தில்
நம்மவர் உறையும்
கூடு. ; என்று கூறும். 


இந்த புகைவண்டித்தொடரின் பெட்டிகளில் உறைந்துகிடக்கும் புகலிடம் நாடிய தமிழர்களின் இருப்பினை எடுத்துரைக்கும் கவிதைகள் திருமாவளவனுடையது.

'சிகரட் சாம்பரில் மூழ்கிய வட்டிலும்
பியர் போத்தல் எச்சங்களும்
குலைத்துப்போட்ட சீட்டுக்கட்டும்
குண்டடிபட்ட ஈழக்கிராமத்து
காட்சிப்புலமென விரியும்
முன்கூடம்'

இங்கு
'பால்ய வயதுப்பகிடிக்கதைகள்
நம்மவர் புரியும் நாட்டு நடப்புகள்
வெட்டிப்பேச்சு
வெடிச்சிரிப்பொலி'


என விரியும் புகலிட அகதித்தமிழரின் வாழ்வை புதிய சூழலின் சமுதாய அமைப்பு எவ்விதம் நுகத்தடி மனிதராக்கி விடுகின்றதென்பதை விபரிக்கும் கவிதை 'நுகத்தடி மனிதர்'.

இவ்விதமான புகலிடத்தமிழரின் வாழ்க்கையானது 'சூத்திரக் கிணற்றை சுற்றிப்பழகிய மாடென' நகரின் இயந்திரமயமான வாழ்வழுத்த, அந்த வாழ்வு அவர்களைச்சுற்றிப்போட்ட நுகத்தடியினை  விலக்கிட ஓரளவாவது உதவுகின்றது. இவ்விதமான நிகழ்வுகள் பற்றிய எண்ணங்களில் நனைந்து விடுகிறது மனசு. மேலும் கவிதையானது எவ்விதம் புகலிடமளித்த மாநகரின் சமுதாய  அமைப்பானது மீண்டும் மீண்டும் நுகத்தடிக்கீழ் மானுடரைக்கொண்டு சேர்த்துவிடுகின்றது என்பதைக் கீழுள்ள் வரிகள் வாயிலாக விபரிக்கும்:

'கடன் தந்தவனின் வட்டிக்கணக்கும்
கிரடிக்காட் நிலுவையும்
பெல்கனடாவின் சிவப்புச்சிட்டையும்
கண்ணீர் கரைத்து வந்த
அம்மாவின் கடிதமும்
தங்கையின் வயதும்
தம்பியின் கானற்கனவும்
சுமையாய் இறங்கும்.

மீளத் தலை
மீளும்
நுகத்தடிக்கீழ்.'

திருமாவளவனின் 'பனிவயல் உழவு' கவிதை 'டொராண்டோ' பெருநகரைக்காமக்கிழத்தியாக உருவகிக்கும். அதிகாலையில் அதன் இருளாடை கலைய, வெண்பனி உள்ளாடையுடன் எடுப்பாய்  வனப்புக்காட்டுக் காமக்கிழத்தியாக நகர் கவிஞருக்குப்புலப்படுகின்றது:

' காமக்கிழத்தியியென
இருளாடை களைந்து வெண்பனி
உள்ளாடையுள்
எடுப்பாய் உடல் வனப்புக் காட்டும்
ரொறான்ரோ நகரி'.


காமக்கிழத்தியின் உடல் தழுவிய  காமக்கிறக்கத்தில் ஒன்டாரியோ வாவியிருக்க, கட்டிலின் விளிம்பில் விடிவிளக்கா நாணி நிற்பாராம் சூரியனார்:

உடல் தழுவிக்
காமக் கிறக்கத்தில்
சலனமற்றுக்கிடக்கும்
ஒன்ராரியோ நீர்வாவி
கட்டில் விளிம்பில்
விடிவிளக்கென
நாணிக்கிடப்பார் சூரியனார்'.


இவ்விதமாக விடிவிளக்கெனத்தென்படும் சூரியனார் மறுகணமே கவிஞருக்கு 'துருவக்கொடுங்குளிரில் அலைகின்ற' அகதியாகத்தென்படுவார்.

'ஆயுதத் துரத்த
நெடுந்தூரம் கடந்த
பரதேசி நான்
உனை யார் துரத்த
இங்கு வந்து அகதியானாய்?
'

என்று கேள்விக்கணையினைத்தொடுக்கின்றார் கவிஞர் நகரத்துச்சூரியனைப்பார்த்து.

அதே சமயம் மாநகரானது மானுட வாழ்வை நடைப்பிணமாக்கிவிடுகிறது.  ஆலைகளின் இயந்திரங்கள் பிழிந்து துப்பிவிட்ட சக்கையாகிவிடுகிறது மானுட இருப்பு. இவ்விதமான மாநகரில்  மானுடம் இன்னும் செத்துவிடவில்லை.  நகரில் தப்பிப்பிழைத்திருக்கும் ஆலாக்கள், புறாக்கள் போன்ற புள்ளினங்களுக்கு உணவூட்டி மகிழும் உள்ளங்களும் இல்லாமலில்லை. தாமிர  பொற்கூந்தல்; கருமணி சுருட்டை முடி, மஞ்சள் முகம், எதியோப்பிய மீன் விழிகள் எனப்பபல்லினத்துபெண்களுடன் கைகள் இணைந்து களிப்புற்றிருக்கிறார்களாம எம் இளசுகள. இவற்றை

' மாலை
எந்திரம் பிழிந்து துப்பிவிட்ட
உடல் மீளும்'

'தாமிர பொற்கூந்தல்
கருமணி சுருட்டைமுடி
மஞ்சள் முகத்தில்
குறுகி சிறுத்த கண்கள்
எதியோப்பிய மீன்விழிகள்
இவர்களோடு
கை கோர்த்து மகிழ்ந்திருக்கும்
எங்கள் இளசுகள்' 


என்னும் வரிகளினூடு வெளிப்படுத்தும் கவிதையிது.

ஈழக்கிராமமொன்றின் காட்சிப்புலமாக விரியும் நகரத்துக் கொங்கிறீட் புகைவண்டித்தொடர்ப் பெட்டியொன்றின் காட்சிப்புலத்தைக்கொண்ட மாநகரத்து வாழ்வைக்கூறும் திருமாவளவனின்  கவிதை.

நவகாலக்கவிஞர்களில் நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைகள் நகரத்து மானுடர் வாழ்வில் ஏற்படும் உளவியற்சிக்கலைப்பற்றி, நகரச்சூழல் ஏற்படுத்தும் உடல் உபாதை பற்றிப்பேசும்.   நகரம் மானுடர்களால் நிறைந்து வழிகின்றது. ஆனால் சொந்த ஊரில் நிலவிய சமூக உறவுகளை நகர் பறித்துவிடுகிறது. உறவுகளற்ற நகரத்து வாழ்வின் தனிமையின் வெம்மையினை  அவரது 'நகரத்தனிமை' என்னும் கவிதை விபரிக்கும். அந்தக்கவிதை வருமாறு:

'ஊரில் இல்லாத
கொடிய தனிமையினை
இப்போது நான் உணருகிறேன்
நண்பர்களுக்காக அல்லது ஒருவருக்காகவேனும்
அவர்களைக் காணுவேன் என்று
பயணம் செய்தேன். மாலை வெய்யிலில் நடந்து திரிந்தேன்.
ஒருவரையும் காணாது
அந்த வெய்யிலும் போனபிறகு
தனித்த துயரத்தோடு
இன்றைய கொத்துரொட்டியையும் பிளேதீயையும் விழுங்கினேன்.

காலில் வியர்த்தது
ரௌசரோடு நடக்கக் கஷ்டமாய் இருந்தது
கடற்கரை ஒழுங்கைக்குள் தள்ளாடித் தள்ளாடி
அறைக்குள் போனேன்'


இக்கவிதை விபரிக்கும் மானுடர்கள் பலரைப்பெரு நகரங்களில் காணலாம். வேலையும், வீடுமென்று எந்தவிதச்சமூகச்செயற்பாடுகளுக்கும் நேரமின்றி, நகரத்தனிமையில் வாடும்  மானுடர்களின் நிலையை எடுத்துரைக்கும் கவிதையிது. அவரது இன்னுமொரு கவிதை 'நகரம்' நகரத்துச்சூழல் ஏற்படுத்தும் பீலிசம் போன்ற உடல் உபாதையினை எடுத்துக்கூறும். மண்ணுக்குப்பசுமையினைத்தரும் மரங்களற்ற நகரத்தின் மாசுற்ற  சூழலின் விளைவாக உருவாகும் ஒவ்வாமை (அழற்சி) தரும் பீலிசத்தைபபற்றிக்கவிதை பின்வருமாறு விபரிக்கும்:

'நகருக்குள் எனக்குப் பீலிசம் வந்தது
கிஞ்சித்தும் பச்சை மரங்கள் இல்லாத
பாதையோரங்களில்
சிவப்பு நீலம் மஞ்சள் கனலும் கடைகளில்
கவிதை நசிந்து உருகி ஆவியாகிப் போயிற்று
அது நடந்து கனகாலம்

எஞ்சியுள்ளவைகள்
மழைநாட்களில் வழிந்தோடும் குறுக்கொழுங்கைகள்.
கடல் பின்னுக்கு இருக்கிறது
(ஒருநாளும் வரக் கிடைக்கவில்லை
)

வ.ந.கிரிதரனின் 'டொராண்டோவின் இரவுப் பொழுதொன்றில்....' கவிதை 'டொராண்டோ'வின் பல்வேறு பண்புகளை விபரிக்கிறது. நகரில் வாழும் வீடற்றவர்களை, தொழிற்சாலைகளை,  அவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை, நகரத்தின் இரவு வாழ்க்கையை, மாந்தர்களை என்று விபரிக்கும் கவிதை, கட்டடக்காட்டினுள் தப்பிப்பிழைத்து வெற்றியுடன் வாழும்  மிருகங்களை, பட்சிகளைப்பற்றியும் கூறும். இறுதியில் கவிதை இருப்பு பற்றிய தத்துவ விசாரத்தில் இறங்கினாலும், கவிதையில் டொராண்டோ மாநகரம் பற்றிய தகவல்கள்  நிறையவேயுள்ளன.

"பெருநகரத்துப் பரந்த 'காங்ரீட்' வனத்தின்
மத்தியில் ஒளிந்திருக்கும் இயற்கைக்
கன்னியின் வனப்பினை
இவ்விதமான இரவுப் பொழுதுகளில்தான்
ஆறுதலாக, உணர்ந்து, சிந்தித்து,
இரசிக்க முடிகிறது.
சில சமயங்களில் நகரத்தின்
மயானங்களினருகில்
நரிகளைக் கண்டு வியந்திருக்கின்றேன்.
பள்ளத்தாக்குப் பகுதிகளில்
மானினங்களைக் கண்டிருக்கின்றேன்.
குழிமுயல்களை, இன்னும் பல
உயிரினங்களையெல்லாம்
இத்தகைய இரவுப் பொழுதுகளில்
கண்டிருக்கின்றேன்.
அப்பொழுதெல்லாம்
வ்ளைகளுக்குள் வாழ்ந்து
இரவுகளில்
இந்தக் 'காங்ரீட்' வனத்தினுள்
சஞ்சரிக்கும் அவற்றின்
படைப்பின் நேர்த்தியில்
மனதிழந்திருக்கின்றேன். "

"நகரில் துஞ்சாமலிருப்பவை
இவை மட்டும்தானென்பதில்லை!
துஞ்சாமலிருப்பவர்களும்
நிறைந்துதான் இருக்கிறார்கள்.
ஆலைத் தொழிலாளர், ஓரின,
பல்லினப் புணர்வுகளுக்காய்
வலைவிரிக்கும்
வனிதையர், வாலிபர்.
'மருந்து'விற்கும் போதை
வர்த்தகர்கள்,
திருடர்கள், காவலர்கள்....

துஞ்சாதிருத்தல் பெருநகரப்
பண்புகளிலொன்றன்றோ
!"

வ.ந.கிரிதரனின் 'நகரத்து மனிதனின் புலம்பல்!' கவிதை மரங்களிலிருந்து 'காங்ரீட்' மரங்களிற்கு..மாறிய நகரங்களைப்பற்றி, அதன் விளைவாக ' இரவு வானத்துச் சுடரையும் நிலவுப்பெண்னின் எழிலையும் ,பாடும் புள்ளையும் ,இரசிக்கும் ,உரிமை கூட ,மறுதலிக்கப் பட்டுப்போன நகரத்துச்சூழலையும் விபரிக்கும். இந்தக்கவிதை முதலில் யாழ் இந்துக்கல்லூரி  பழைய மாணவர் சங்கக்கலைவிழா மலரொன்றில் வெளியானது; பின்னர் பதிவுகள், திண்ணை  ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. வ.ந.கிரிதரனது அ'தி மானுடரே!  நீர் எங்கு போயிளிந்தீர்?' கவிதை பதிவுகள், திண்ணை இணைய இதழ்களில் வெளியான கவிதைகளிலொன்று.  இந்தக்கவிதையின் மூல வடிவம் தாயகம்  (கனடா) பத்திரிகையில் வெளியானது.

'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட் '
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.'


ஆகியவற்றால் நிறைந்து கிடக்கும் நகரங்களைபற்றி, அவற்றாலேற்பட்ட சூழல் அழிவுகள் போன்ற விளைவுகளைப்பற்றிக்கேள்விகளையெழுப்பும்.  நகரங்களின் வரவினால் காணாமல் போன  பல்லுயிர்களைபற்றி

அச்சமின்றிப் பறந்த ஆருயிர் நண்பர்களே!
நகை தவள நீந்திச் சுகித்த என்னருமைத் தோழர்களே!
தென்றலணைப்பில் தூங்கிக் கிடந்திட்ட
விருட்சத்துக் குழந்தைகளே!
ஆறறிவால் நிலைகுலைந்து
நிற்கும் பிரிய சிநேகிதர்களே
!

என்று எடுத்துரைக்கும்.

இவ்விதமாக தமிழ்க்கவிதைகள் சில எவ்விதம் நகர் பற்றிய பதிவுகளை மேற்கொண்டுள்ளன என்பதை ஓரளவுக்குச் சான்றுகள் அடிப்படையில்  விபரித்துள்ளது இக்கட்டுரை.  எதிர்காலத்தில் மேலும் பல படைப்புகளை உள்வாங்கி இக்கட்டுரை விரிவுபடுத்தப்படும்.

உசாத்துணை நூல்கள் / ஆக்கங்கள்:

1. கவிதை 'நகரம்' - அறிஞர் அ.ந.கந்தசாமி (சுதந்திரன் மார்ச் 18, 1951)
2. வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் பெருந்தொகை
3. நீ இப்பொழுது இறங்கும் ஆறு - சேரன் (கவிதைத்தொகுப்பு)
4. வசந்தம் 91 - நட்சத்திரன் செவ்விந்தியன் (கவிதைத்தொகுப்பு)
5. பனிவயல் உழவு - திருமாவளவன் (கவிதைத்தொகுப்பு)
6. வ.ந.கிரிதரன் கவிதைகள் (பதிவுகள் இணைய இதழ்)

ngiri2704@rogers.com

No comments:

எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இன்று - ஏப்ரில் 22 - பிறந்தநாள்.  இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள். இலங்கைத் தமிழ்  இலக்கியத்தில், உலகத்தமிழ் இலக்கிய...

பிரபலமான பதிவுகள்