- இன்று பாரிஸில் ஊடகவியலாளர் எஸ்.கே.ராஜென் ஏற்பாட்டில் நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் 'ஈழநாடு' எஸ்.கே. காசிலிங்கம் அவர்களின் அமுத விழாவினையொட்டி வெளியான மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை. -
என்னால் ஒருபோதுமே ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கத்தை மறக்க முடியாது. ஒரு வகையில் என் எழுத்துலக வாழ்க்கைக்குச் சுழி போட்டது ஈழநாடு மாணவர் மலர் என்றால், அதற்குக் காரணமானவர் அப்போது மாணவர் மலருக்குப் பொறுப்பாக் இருந்த 'காசி' அவர்கள். அண்மைக்காலம் வரையில் அவரைக் காசி என்னும் பெயரிலேயே அறிந்து வைத்திருந்தேன். எஸ்.கே.காசிலிங்கம்தான் அவர் என்பதை அறிந்திருக்கவில்லை.
அவ்விதம் நான் ஈழநாடு மாணவர் மலரை வாசிக்கத்தொடங்கியபோது அதற்குப் பொறுப்பாக இருந்தவர் காசி. காசி அண்ணா, காசி மாமா என்றெல்லாம் இல்லாமல் வெறும் காசி என்றே அவர் பெயர் பிரசுரமாகியிருக்கும். அப்போது 'மாணவர் மல'ரில் எழுத்தாளர் நெல்லை க.பேரன் மாணவர் மலரில் 'உங்களுக்குத் தெரியுமா?" என்னும் தலைப்பில் வாராவாரம் எழுதிக்கொண்டிருந்தார். அப்போது நான் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன்.
அவ்வருடத் தீபாவளியையொட்டி நவம்பர் 1, 1969 வெளியான ஈழநாடு மாணவர் மலரில் காசி அவர்கள் தீபாவளி மலராக வெளிவரவிருக்கும் மாணவர் மலருக்குத் 'தித்திக்கும் தீபாவளி' என்னும் தலைப்பிக் கட்டுரையெழுதி, நவம்பர் 5ற்கு முன் அனுப்பி வைக்கும்படி கோரியிருந்தார். நானும் அதற்கொரு கட்டுரையினை 'தீபாவளி இனித்தது' என்னும் தலைப்பில் எழுதி அனுப்பினேன். 16.11.1969 ஈழநாடு மாணவர் மலரில் வெளியான இது பற்றிய காசி அவர்களின் பின்வரும் அறிவிப்பை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது:
"மாணவ மணிகளே! உங்கள் அனைவருக்கும் 'மலரின் ' தீபாவளி வாழ்த்துக்கள். 'தித்திக்கும் தீபாவளி' என்னும் தலைப்பில் கட்டுரைகளை எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தேன். வந்து சேர்ந்த கட்டுரைகளில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவரான மகாலிங்கம் இளங்கோவன், கரணவாய் தெற்கு கரவெட்டி கண.மகேஸவரன் ஆகிய இருவரது கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து மகேஸ்வரனின் கட்டுரையைக் கடந்த வாரம் பிரசுரித்திருந்தோம். இவ்வாரம் மறுகட்டுரை பிரசுரமாகின்றது. வவுனியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவரான என்.கிரிதரனின் கட்டுரையும் பாராட்டுக்குரியது. கட்டுரைகளை ஆர்வத்துடன் எழுதி அனுப்பிய மற்றைய மாணவ மாணவிகளுக்கும் எமது உளம் கனிந்த பாராட்டுக்கள். மலருக்குத் தொடர்ந்து விஷயதானங்களை அனுப்பி வையுங்கள். அடுத்த வாரம் சந்திப்போம், - காசி -"
என் கட்டுரை தேர்வாகிப் பிரசுரமாகியிருக்கவில்லை. ஆனால் அது பாராட்டுக்குரியதாக , என் பெயர் குறிப்பிடப்பட்டு மாணவர்மலரில் வெளியான காசி அவர்களின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் எழுத வேண்டுமென்ற பேரார்வத்தைத் தந்தது.ஒருவேளை அவ்விதம் காசி அவர்கள் என்னை அவ்வயதில் ஊக்குவிக்காதிருந்தால் தொடர்ந்தும் எழுதியிருப்பேனோ தெரியாது. அந்த ஊக்கத்தின் விளைவாக நான் ஈழநாடு மாணவர் மலரில் தொடர்ந்தும் எழுத ஆரம்பித்தேன். என் பால்ய, பதின்மப் பருவங்களில் ஈழநாடு மாணவர் மலரில் எனது ஆக்கங்கள் பல, கவிதைகள்,கட்டுரைகளென பல வெளியாகியுள்ளன. எஸ்.கே.காசிலிங்கம் அவர்களைத்தொடர்ந்து விமலா அக்கா என்பவர் ஈழநாடு மாணவர் மலருக்குப் பொறுப்பாகவிருந்தார்.
சில வருடங்களுக்கு முன்னர் முகநூலில் என் ஈழநாடு மாணவர் மலர் அனுபவங்களை எழுதியபோது காசி அவர்களைப்பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அதனை வாசித்த எழுத்தாளர் இளவாலை எஸ்.ஜெகதீசன் அவர்கள் காசி யார் என்னும் விடயத்தைக் கூறும் தகவலொன்றினை அனுப்பியிருந்தார். அதில் அவர் "உங்கள் எழுத்துலக வாழ்விற்கு கால்கோள் இட்ட திரு எஸ்.கே.காசிலிங்கத்தின் படமும் சிறு செய்தியும் இன்றைய ஈழநாடு பத்திரிகையின் (20.03.2022) பதினாறாம் பக்கத்தில் உள்ளது. " என்று குறிப்பிட்டிருந்தார்.
அப்போதுதான் நான் மாணவர் மலர் காசி அவர்கள் யார் என்னும் விபரத்தை அறிந்தேன். மாணவர் மலரில் காசி அவர்கள் எஸ்.கே காசிலிங்கம் என்னும் பெயரிலும் எழுதியிருக்கின்றார். ஆனால் ,எங்கமே காசி யார் என்னும் விபரம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அக்காலகட்டத்தில் ஈழநாடு பத்திரிகையில் அவ்வப்போது அவரது கட்டுரைகள் வெளியாகிக்கொண்டிருந்தன. குருகுல வாசக் கல்வி முறை, மகாத்மா காந்தி பற்றிய அவரது கட்டுரைகள் வெளியாகியிருந்தன. அவரும் மாணவர் மலருக்கு நான் எழுதத்தொடங்கிய காலத்தில் பொறுப்பாக இருந்த காசி என்பரும் ஒருவரே என்பதை அப்போதுதான் அறிந்தேன். மகிழ்ச்சியடைந்தேன்.
பத்திரிகை, சஞ்சிகைகள் எப்போதுமே சிறுவர்களுக்கான பக்கங்களை ஒதுக்க வேண்டுமென்பதை எப்போதும் நான் வலியுறுத்துபவன். நாளைய உலகின் நாயக, நாயகியரை உருவாக்குவதில் ஆரோக்கியமான பங்களிப்பை நல்குபவை அப்பக்கங்களே. அதனால்தான் சிறுவர் இலக்கியம் இலக்கியத்தில் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. குழந்தைகளுக்காக எழுதும் படைப்பாளிகள், ஊக்குவிக்கும் கலை, இலக்கிய ஆளுமைகள் போற்றுதலுக்குரியவர்கள். எஸ்.கே.காசிலிங்கம் அவர்களையும் அத்தகைய ஆளுமையாளர்களில் ஒருவராகவே நான் அடையாளம் காண்கின்றேன். என் தனிப்பட்ட இலக்கியப் பயணத்திற்குச் சுழி போட்டவர் அவர். அவருக்கு அமுதவிழா கொண்டாடப்படவிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அவரை மனம் நிறைய வாழ்த்துகிறேன். வாழ்த்துகள்.
girinav@gmail.com
No comments:
Post a Comment