வழக்கம் போல் ஸ்கார்பரோ நூலகக் கிளைகளில் ஒன்றான , எக்ளின்டன் - கென்னடி சந்திக்கண்மையிலிருக்கும் கிளைக்கு நேற்று மாலை சென்றிருந்தேன். அங்கு நூல்கள் சிலவற்றை விற்பனைக்குப் வைத்திருந்தார்கள். அவற்றிலொன்று இந்த நூல். கற்பகம் பதிப்பக வெளியீடான (2023) பாரதியார் கவிதைகள். நூலக நூல்களில் ஒன்றல்ல. யாரோ ஒருவர் நூலகத்துக்கு இலவசமாக வழங்கியிருக்க வேண்டும். விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.
என் அபிமானக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் , ஆளுமைகளின் அல்லது அவர்கள் பற்றிய நூல்களை கண்டால் வாங்கி விடுவேன். இதனையும் அவ்விதம் வாங்கிக்கொண்டேன்.
பிழைத்த தென்னந்தோப்பு - மகாகவி பாரதியார்
வயலிடை யினிலே - செழுநீர்
மடுக் கரையினிலே
அயலெவரு மில்லை - தனியே
ஆறுதல் கொள்ள வந்தேன்.
காற்றடித்ததிலே - மரங்கள்
கணக்கிடத் தகுமோ?
நாற்றினைப் போலே - சிதறி
நாடெங்கும் வீழ்ந்தனவே!
சிறிய திட்டையிலே - உளதோர்
தென்னஞ் சிறுதோப்பு
வறியவ னுடைமை - அதனை
வாயு பொடிக்கவில்லை.
வீழ்ந்தன சிலவாம் - மரங்கள்
மீந்தன பலவாம்
வாழ்ந்திருக்க வென்றே - அதனை
வாயு பொறுத்து விட்டான்.
தனிமை கண்டதுண்டு - அதிலே
ஸார மிருக்குதம்மா!
பனிதொலைக்கும் வெயில் - அதுதேம்
பாகு மதுரமன்றோ?
இரவி நின்றது காண் - விண்ணிலே
இன்ப வொளித் திரளாய்
பரவி யெங்கணுமே - கதிர்கள்
பாடிக் களித்தனவே.
நின்ற மரத்திடையே - சிறிதோர்
நிழலினி லிருந்தேன்
என்றுங் கவிதையிலே - நிலையாம்
இன்ப மறிந்து கொண்டேன்.
No comments:
Post a Comment