![]() |
| கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் |
கட்டடக்கலைஞர் மயூரநாதன் அவரது இந்த நூல் மூலம் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவராக முகிழ்த்திருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும்.
வரலாற்று முக்கியத்துவம்
இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முககிய குறைபாடுகளில் ஒன்று வரலாற்றுத் தெளிவின்மை. இலங்கையின் தொன்மக் குடிகளாக இருந்தும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை கோலோச்சிய யாழ்ப்பாண இராச்சியம் பற்றி, அதன் மன்னர்களைப்பற்றி, இருந்த இராஜதானிகள் பற்றி ஆதாரபூர்வமான, வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய வரலாறு இல்லை என்றுதான் கூற வேண்டும். இலங்கைத் தமிழரின் வரலாற்றைப் பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நூல். அது போல் கைலையாமாலை , வையாபாடல் போன்றவையும் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவையெல்லாமே கூறும் வரலாறு இவை எழுதப்பட்ட காலத்திற்கு முற்பட்டவை. எனவே பல கர்ணபரம்பரைக் கதைகள், கேள்வி ஞானத்தகவல்களை உள்ளடக்கியவை. இவற்றை வடி கட்டு , உண்மை பொய் அறிவதற்கு முதலியார் செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோர் முயற்சி செய்திருக்கின்றார்கள். அவற்றின் விளைவுகளே முதலியார் செ.இராசநாயகத்தின் யாழ்ப்பாணச் சரித்திரமும், சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனமும். மேலும் பலர் யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதியிருந்தாலும், இவை முக்கியமானவை.
மேலும் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுவதில் இலங்கைத் தமிழர் காட்டும் அசிரத்தை. இவ்விடயத்தில் எம்மவருக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்று நூலாசிரியர் மயூரநாதன் அண்மைய ஆதித்தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். உதாரணத்துக்கு அவர் கங்கா சத்திரம் இடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். கங்கா சத்திரம் இருந்ததால்தான் அப்பகுதி சத்திரத்துச் சந்தி என்று அழைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இச்சமயத்தில் எனக்கு ஒரு நினைவு தோன்றுகின்றது. எண்பதுகளில் யாழ் ஈழநாடு பத்திரிகையில் யாழ் நகரில் பழமையின் சின்னங்கள் பேணப்படுவதன் அவசியம் என்றொரு கட்டுரை எழுதினேன். எழுதிய பின்னரே யாழ் மாநகரசபை கங்கா சத்திரத்தை இடித்தது. இவ்விதமிருக்கின்றது எம்மவரின் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுதல் பற்றிய புரிதல். இந்நிலை மாற வேண்டும். இதற்கு நிச்சயம் இந்நூல் உதவி புரியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.






