Sunday, February 18, 2018

வ.ந.கிரிதரனின் (பதிவுகள்.காம்) வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள் 2: பேராசிரியர் நிமால் டி சில்வாவின் 'பாரம்பரியக் கட்டடக்கலை'யும் 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பும்'.

- பேராசிரியர் நிமால் டி சில்வா -
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பட்டப்படிப்பினைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்களுக்குப் 'பாரம்பரியக் கட்டடக்கலை' (Traditional Architecture) என்னும் பாடத்தினை எடுத்தவர் பேராசிரியர் நிமால் டி சில்வா. இவர் கட்டடக்கலைஞரும் கூட. தனியாகக் கட்டடக்கலை நிறுவனமொன்றினையும் நடத்தி வந்தவர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடக்கலை பற்றிய விடயங்களில் இப்பாடத்தின் மூலம் எம் கவனம் திரும்பியது. இப்பாடம் உண்மையில் கட்டடக்கலையின் வரலாறு என்னும் பாடத்தின் துணைப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ்ப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட நாற்சார வீடுகள் பற்றி, தென்னிலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மண்ணால் நிரப்பப்பட்ட மரச்சட்டங்கள் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் (wattle and daub) பற்றியெல்லாம் அறியத்துணையாகவிருந்த பாடமிது. எனக்குப் பாரம்பரியக் கட்டடக்கலை மீது ஆர்வத்தினை ஏற்படுத்தியதில் பேராசிரியர் நிமால் டி சில்வாவுக்கு முக்கிய பங்குண்டு.

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நிமால் டி சில்வாவின் 'பாரம்பர்யக்கட்டடக்கலை' பாடத்தின் மூலம்தான் நான் முதன் முதலில் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு பற்றியும் முதன் முதலாக அறிந்துகொண்டேன். தொல்லியற் துறையில்  நன்கு அறியப்பட்ட ரோலன் சில்வா அவர்களின் (இவர் ஒரு கட்டடக்கலைஞரும் கூட) 'பண்டைய அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையொன்றினை பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் எமக்கு அறிமுகம் செய்தார். எவ்விதம் பண்டைய அநுராதபுர நகரமானது சந்தையினை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதென்பது பற்றியும், நகரைச் சுற்றி இரு வேறு வட்ட ஒழுக்கில் எவ்விதம் தாதுகோபங்கள் கட்டப்பட்டன என்பது பற்றியும் விபரிக்கும் ஆய்வுக் கட்டுரை அது.  பேராசிரியர் ரோலன் சில்வா அவர்கள் பின்னர் இலங்கைத் தொல்பொருள் நிலையத்திணைக்களத்தின் தலைவராகவும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் விளங்கியவர்.

Saturday, February 17, 2018

வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கலைக் குறிப்புகள்' 1: ஜெவ்ரி பாவா Geoffrey Bawa (23.-7.1919 - 27.05.2003)!

ஜெவ்ரி பாவா Geoffrey  Bawa  - 'வெப்பநில நவீனத்துவக்' (Tropical Modernism) கட்டடக்கலைப்பாணியின் மூலவர்!

- ஜெவ்ரி பாவா -
இலங்கையின் முக்கியமான கட்டடக்கலைஞர்களிலொருவராக விளங்கியவர் ஜெவ்ரி பாவா. இவரது முழுப்பெயர் ஜெவ்ரி மான்னிங் பாவா (Geoffrey Manning Bawa ). உலகக் கட்டடக்கலையில் ஆசியாக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராகத் தன் கட்டடங்களின் மூலம் திடமாகத் தடம் பதித்தவர் இவர். குறிப்பாக இன்று உலகக் கட்டடக்கலையில் வெப்பநில நவீனத்துவம் (Tropical Modernism) என்று அறியப்படும் கட்டடக்கலைப்பாணிக்கு அடிகோலியவராக அறியப்படுபவர் இவர்.

இவரது தந்தையாரான பி.டபிள்யு. பாவா செல்வச்சிறப்பு மிக்க சட்டத்தரணியும், நீதிபதியுமாவார். ஆங்கில, முஸ்லிம் இரத்தக்கலப்புள்ளவர். தாயாரான பேர்த்தா மரியன்னெ ஸ்ராடர் ஜேர்மனிய, ஸ்ஹொட்டிஸ் மற்றும் சிங்கள இரத்தக்கலப்புள்ளவர். இவரது மூத்த சகோதரரான பெல்விஸ் பாவா புகழ்பெற்ற 'நிலப்பரப்புத் தோற்றக் கட்டடக்கலைஞராக (Landscape Architect) விளங்கியவர்.

ரோயல் காலேஜ் மாணவரான ஜெவ்ரி பாவா ஆரம்பத்தில் படித்தது ஆங்கிலமும் சட்டமும். ஆங்கில இலக்கியத்தில் புனித காதரின்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜில் இளங்கலைப்பட்டப்படிப்பை முடித்த இவர் பின்னர் Middle, London இல் சட்டத்துறைப்பட்டதாரியானார். இலங்கை திரும்பிய இவர் இரண்டாவது யுத்தகாலத்துக்குப் பின்னர் கொழும்பிலுள்ள சட்ட நிறுவனமொன்றில் பணியாற்றினார். பின்னர் இவரது தாயாரின் மறைவினையடுத்து சட்டத்துறையை விட்டு விலகிய இவர் சுமார் இரு வருட காலம் சர்வதேச பயணங்களிலீடுபட்டார். அமெரிக்கா, ஐரோபா என்று பயணித்த இவர் இத்தாலியில் வீடு வாங்கி நிரந்தரமாகத் தங்க எண்ணினார். ஆனால் அந்த எண்ணம் சரிவரவில்லை. 1948இல் நாடு திரும்பிய இவர் கைவிடப்பட்டிருந்த இறப்பர் தோட்டமொன்றினை வாங்கினார். அதனையொரு இத்தாலியப் பாணிப்பூங்காவாக ஆக்க விரும்பினார். ஆனால் அதற்குரிய தொழில்நுட்ப அறிவு அவருக்கில்லாதது பெருங்குறையாகவிருந்தது.

இக்காலகட்டத்தில் கொழும்பிலுள்ள எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) அவர்களது கட்டடக்கலை நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அப்பொழுது கட்டடக்கலைஞர் ரீட் மட்டுமே உயிருடனிருந்தார். அவருக்குக் கீழேயே பயிற்சியில் இணைந்தார். ரீட் மறைவினையடுத்து கேம்ரிட்ஜ் திரும்பிய இவர்  இங்கிலாந்திலுள்ள கட்டடக்கலைஞர் சங்கத்தில் மாணவராக இணைந்தார். அங்கு கட்டடக்கலைத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். அதன் பின்னர் 'ரோயல் இன்ஸ்டிடியூட் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ்' (The Royal Institute of British Architects ) அமைப்பின் 'அசோசியட்' உறுப்பினரானார். தனது 38ஆவது வயதில் நாடு திரும்பிய ஜெவ்ரி பாவா தான் பணியாற்றிய எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) கட்டடக்கலை நிறுவனத்தைத் தனது பொறுப்பில் கொண்டு வந்து தனது கட்டடக்கலைப் பணியினைத் தொடர்ந்தார்.

நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் (Professor Kevin Lynch) நகரொன்றின் பிம்பக்' (The Image Of the City ) கோட்பாடு பற்றிய புரிதலும்!

 மொறட்டுவைப் ப்லகலைக் கழகத்தில் கட்டடக்கலை முடித்தபின்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அமைப்பு அதிகார சபை ஆகியவற்றில் பணியாற்றிய காலங்களில் கொழும்பு மாநகர், புதிய பாராளுமன்றம் போன்ற பல நில அமைப்பு (Landscape) , நகர் அமைப்புத் (Town Planning) திட்டங்களில் பணியாற்றியுள்ளேன். அவற்றில் முக்கியமானதொன்று மேற்படி பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டின் அடிப்படையில் நகர் அமைப்பு வல்லுநரான டிக்சன், கட்டடக்கலை/ நகர் அமைப்பு வல்லுநரான சிவபாலன் (இவர் பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றியபோது மரணித்து விட்டார்) , கட்டடக்கலைஞரான வைரமுத்து அருட்செல்வன் ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட கொழும்பு மாநகரின் பிம்பம் பற்றிய ஆய்வு. அது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதும் நினைவுக்கு வருகின்றது. பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டினைச் சுருக்கமாக விபரிக்கும் கட்டுரை இது. -

நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள் அவர்களது அந்நகரினுடான அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள கட்டடங்கள். முக்கியமான இடங்கள், அங்கு வாழும் ஏனைய மக்கள், அங்கு நிகழும் பலவேறு விதமான செயற்பாடுகள். நகரின் முக்கியமான அடையாளங்களாகத் திகழும் சின்னங்கள்,... ... என இவை போன்ற பல காரணிகளின் விளைவாக உருவாகுகின்றன. நகர அமைப்பு வல்லுநர்கள் நகர்களைப் புனர் நிர்மாணம் செயகையில் அல்லது புதியதொரு நகரமொன்றினை நிர்மாணித்திடும்போது அங்கு வாழும் மாந்தரின் மேற்படி மனப்பிம்பங்கள் அல்லது பதிவுகள் பற்றிய போதிய அறிவினைப் பெற்றிருப்பது அவர்களது பணிக்கு மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல பயனுள்ளதுமாகும். இவ்விதமாக நகர மாந்தரின் அவர் வாழும் நகர் பற்றிய மனப்பிம்பங்களை மையமாக வைத்து அந்நகரினை அறிவதற்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முயனறவர்தான் பேராசிரியர் கெவின் லிஞ்ச் Professor Kevin Lynch).

கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

அண்மையில் முகநுலில் இலக்கியத்திருட்டு பற்றியொரு பதிவிட்டிருந்தேன். அதற்கு எதிர் வினையாற்றியிருந்த பிரபல கலை இலக்கிய விமர்சகரும், எனது மதிப்புக்குரியவருமான இந்திரன் (தமிழ்நாடு) அவர்கள் பினவருமாறு கூறியிருந்தார் " Indran Rajendran நல்ல குதிரையைத்தான் திருட முடியும்...உங்களுடையது நொண்டி குதிரையல்ல என்று தெரிகிறது...விடுங்கள்...". நன்றி திரு இந்திரன் அவர்களே. அதன் பாதிப்பிது.

குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
வியாபாரியல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன்..
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
ஆனால் அவை நொண்டிக்குதிரைகளல்ல.
என்னிடமுள்ள குதிரைகள் அனைத்துமே
 என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்பபதில்லை.
நான் நொண்டிக்குதிரைகளை வளர்ப்பவனோ,
விற்பவனோ அல்லன்.
இருந்தும் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை
 அதிகமாகிவிட்டது.
குதிரைத் திருடர்களே! கவனம்.
திருடிய குதிரைகளை வெகு சாமர்த்தியமாக
 உங்கள் மந்தையில் கலந்து
 விடுவதில் பலே கில்லாடிகள் நீங்கள்.
என்னிடம் நீங்கள் திருடிய அல்லது
 திருடப் போகும் குதிரைகள்
 நிச்சயம் நொண்டிக்குதிரைகளல்ல.
ஆனால் அவை நல்லவை.
வல்லவையும் கூடத்தான்.
ஆனால் அவை முரட்டுக் குதிரைகள்.
முட்டி மோதவும் தயங்காத
 முரட்டுக் குதிரைகள்.

ngiri2704@ரrogers.com

Friday, February 16, 2018

மக்கள் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளி: அ.ந.க! (அ.ந.க நினைவு தினம் பெப்ருவரி 14) - வ.ந.கிரிதரன் -




அறிஞர் அ.ந.கந்தசாமி
அறிஞர் அ.ந.க என்று அழைக்கப்பெறும் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14. தனது நாற்பத்து நான்காவது வயதில் மறைந்து விட்ட அ.ந.க தனது குறுகிய கால வாழ்வினுள் ஆற்றிய இலக்கியப் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம் மற்றும் மொழிபெயர்ப்பு என்று அவர் ஆற்றிய இலக்கியப்பங்களிப்பு ஈழத்தமிழர்தம் இலக்கிய வரலாற்றில் நன்றியுடன் நினைவு கூரப்படும். ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவராகத் திகழ்ந்த அ.ந.க இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று எழுத்தே மூச்சாக வாழ்ந்து மறைந்த படைப்பாளி. இவரது படைப்புகள் கூறப்படும் மொழியினால், சமுதாயப் பிரக்ஞை மிக்க பொருளினால், படைப்புகள் வெளிப்படுத்தும் தகவல்களினால் முக்கியத்துவம் பெறுபவை. சிந்தனையைத்தூண்டும் இவரது எழுத்தின் வீச்சு வாசகர்களின் உள்ளங்களைச் சுண்டி ஈர்க்கும் தன்மை மிக்கது..

அ.ந.க வெறும் இலக்கியவாதி மட்டுமல்லர். இலக்கியத்தைத் தான் நம்பிய சிந்தனைகளுக்கமைய வடித்த சிந்தனைச் சிற்பி. மார்க்சியவாதியான இவரது எழுத்துகள் பிரச்சார வாடையற்றவை. அதனாலேயே அனைவரையும் கவர்பவை. இவரது புகழ்பெற்ற 'மனக்கண்' நாவல் தினகரனில் வெளியானபோது வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப்பெற்றது. பின்னர் இவரது நெருங்கிய நண்பரும் , எழுத்தாளருமான சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாக்கப்பட்டு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வானொலி சேவையில் தொடராக வெளியானது குறிப்பிடத்தக்கது. மேடையேற்றப்பட்டபோது மிகுந்த வரவேற்பைப்பெற்ற பல தடவைகள் மீள மேடையேற்றப்பட்ட 'மதமாற்றம்' நாடகம் மதம் என்னும் கருத்தாடலை அங்கதச்சுவையுடன் விபரிக்கும் ஈழத்தமிழ் இலக்கியத்தில் மேடையேற்றப்பட்ட சிறந்த நாடகங்களிலொன்று. இந்நாடகத்தைப்பற்றிப் பிரபல எழுத்தாளர் செ.கணேசலிங்கன் பின்வருமாறு கூறுவார்:


"சைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னரின் அறிவையும் இந் நாடகத்தில் காணலாம். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் மேலாதிக்கம் செலுத்தும் கருத் தியல் (Ideology) மதம் என்றும் முதலாளித்துவத்தில் கல்வி என்றும் நவ மார்க்சிய அறிஞர் அல்துரசர் கூறுவார். கலை, இலக்கியத்தில் கருத்தியல்கள் உடைக்கப்பட்டு விஞ்ஞான ரீதியான சிந்த னையைக் கொணர வேண்டும் என்பதும் அன்னாரின் கோட்பாடாகும். அத்தோடு இத்தகைய போக்கு பண்டைய நாடகங்கள், இலக்கியங் களில் காணமுடியாதது அவற்றின் பயனற்ற தன்மையைக் காட்டுகிறது என்பதும் அவரது கூற்றகும். கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந் நாடகத்தில் சாடி இருப்பது இந் நாடகத்தின் தனிச் சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை. பார்வையாளர் எம் மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப் பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தண்மூலம் அறிவர். இராமலிங்கம் என்றேர் பாத்திரத்தை ஆசிரியர் தன் பகுத்தறிவுக் கருத்துக்களையும் தருக்க நியாயங்களையும் கூறுவதற்காக நாடகத்தில் கொண்டு வந்துள்ளார். இராமலிங்கம் என்ற பாத்திரம் கந்தசாமியே. கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப் பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத் தழுவி காதலைக் கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவான போதும் "மதம், காதல்" என்ற பொய்மைகளை கந்தசாமி சாடும் திறமை அபாரம். 'மதமே பொய். இருவரும் பொய்களை நம்புகிறர்கள். ஆனல் வெவ்வேறு பொய்கள் - கந்தசாமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகிறார், நல்ல நாடகம் சமூக முரண்பாடுகளைக் கையாள வேண்டும். சிந்தனையில் மோதலை ஏற்படுத்துவதோடு தன்னை உணர்ந்து கொள்ள உதவ வேண்டும். நாடகம் பார்க்கும் வேளை நடிகனக இருந்தவன் நாடகம் முடிந்ததும் புது நடிகனாக வேண்டும், வாழ்க்கையில். இந் நாடகம் மேடையில் நடிப்பதற்காக எழுதப்பட்டபோதும் படித்துச் சுவைப்பதற்குமாக அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பாகும். புதிதாக நாடகம் எழுதுவோருக்கும் காட்சி அமைப்பையும் கருத்தின் ஆழத்தைக் கையாளும் முறையையும் கற்பிக்கத் தக்கதாக இந் நாடகம் உள்ளது" (  'எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் நூலாக 'மதமாற்றம்' வெளியிடப்பட்டபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய சிறப்புரையிலிருந்து).

(பதிவுகள்.காம்) சிறுகதை: உடைந்த மனிதனும் 'உடைந்த காலும்' - வ.ந.கிரிதரன் -







- எழுத்தாளரும்,, முகநூல் நண்பருமான ஜி.ஜி.சரத் ஆனந்த சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்த  "உடைந்த மனிதனும் 'உடைந்த காலும்' " என்னும் எனது சிறுகதையின் முழு வடிவம் இதுதான். வாசித்துப் பாருங்கள். -

அதிகம் நடமாட்டமில்லாமலிருந்தது அந்த 'பார்'. வியாழன் வெள்ளியென்றால் களை கட்டி விடும். திங்களென்றபடியால் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. ஓரிருவர்களேயிருந்தார்கள். 'சிக்கன் விங்ஸ்'உம் 'பட்வைசர்' பியரையும் கொண்டுவரும்படி 'வெயிட்டரிடம்' கூறிவிட்டுச் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன். நினைவெல்லாம் வசுந்தராவே வந்து வந்து சிரித்துக் கொண்டிருந்தாள். என் பால்ய காலத்திலிருந்து என் உயிருடன் ஒன்றாகக் கலந்து தொடர்ந்திருந்த பந்தம். இருபது வருடத் தீவிரக் காதல். எனக்குத் தெரிந்த முகவன் ஒருவன் மூலம் அண்மையில் தான் கனடா அழைத்திருந்தேன். அவ்விதம் அழைத்ததற்காகத் தற்போது கவலைப் பட்டேன். அவளது வாழ்க்கையை மட்டுமல்ல என் வாழ்க்கையையுமே சீரழித்து விட்டேனா? இவ்வளவு நாள் பொறுத்திருந்தவன் இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்கக் கூடாதா? எனக்குக் கனடா நாட்டு நிரந்தரக் குடியுரிமை கிடைத்ததும் முறையாக அவளை அழைத்திருக்கலாமே. ஒரு விதத்தில் அவளுக்கேற்பட்ட இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமாக இருந்து விட்டேனே. இது போன்ற பல சம்பவங்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தேன். ஆனால் எனக்கு இவ்விதம் ஏற்படுமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லையே.

அந்த முகவன் திருமணமானவன். பார்த்தால் மரியாதை வரும்படியான தோற்றம். அதனை நம்பி ஏமாந்து விட்டேன். வசுந்தராவின் பயணத்தில் வழியில் சிங்கப்பூரில் மட்டும் தான் ஒரு தரிப்பிடம். தனது மனைவியென்று அவளை அவன் அழைத்து வருவதாகத் திட்டம். பொதுவாக இவ்விதம் பெண்களை அழைத்து வரும் சில முகவர்கள் சூழலைப் பயன்படுத்தி, ஒன்றாகத் தங்கும் விடுதிகளில் வைத்துப் பல பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகக் கதைகள் பல கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் எனக்கே இவ்விதமேற்படுமென்று நான் நினைத்துப் பார்த்தேயிருக்கவில்லை. கனடா வந்ததும் வசுந்தரா கூறியதும் என்னால் நம்பவே முடியவில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்திருக்கின்றார்கள். அருந்தும் பானத்தில் அவன் போதை மருந்தொன்றினைக் கலந்து கொடுத்து இவள் மேல் பாலியல் வல்லுறவு வைத்திருக்கின்றான். மறுநாள் தான் இவளுக்கே தெரிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல. இவள் விரும்பினால் இவளைத் தொடர்ந்து 'வைத்திருப்பதாக'க் கூடக் கூறியிருக்கின்றான். இவன் இது போல் ஏற்கனவே வேறு சில பெண்களுடனும் இவ்விதம் நடந்திருக்கின்றான். அவர்களிலொருத்தி இங்கு புகார் செய்து தற்போது சிறையிலிருக்கின்றான்.

இப்போது என் முன் உள்ள பிரச்சினை......வசுந்தராவை ஏற்பதா இல்லையா என்பது தான். ஐந்து வயதிலிருந்தே இவளை எனக்குத் தெரியும். ஒன்றாகப் பாடசாலை சென்று, படித்து, வளர்ந்து உறவாடியவர்கள். இவளில்லாமல் என்னாலொரு வாழ்வையே நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால்...இவளது இன்றைய நிலை என் மனதில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தி விட்டதென்னவோ உண்மைதான். தத்துவம் வேறு நடைமுறை வேறு என்பதை உணர வைத்தது இவளுக்கேற்பட்ட இந்தச் சம்பவம். பார்க்கப் போனால் தவறு இவளுடையதல்லவே. ஒரு விதத்தில் நானும் காரணமாகவல்லவா இருந்து விட்டேன்....

'நண்பனே. நான் உன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளலாமா?"

எதிரே கனேடிய பூர்வீக இந்தியணைப் போன்ற தோற்றமுள்ள ஒருவன் நின்றிருந்தான்.

"தாராளமாக நண்பனே!" என்றேன்.

வெயிட்டரிடம் அவனுக்கும் சேர்ந்த்துக் கொண்டு வரும்படி கூறினேன்.

"நன்றி நண்பனே!" என்று அருகில் அமர்ந்தான்.

"என் பெயர் ஜோ உடைந்த கால் ( Joe Broken leg) ). உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பனே. இன்றைய பொழுதை எவ்விதம் கழிப்பேனோ என்றிருந்தேன். நல்லதொரு துணையாக நீ" என்று தனது கைகளை நீட்டினான். வித்தியாசமான பெயர். ஆனால் இவர்களது சமூகத்தில் இது போன்ற பல வித்தியாசமான பெயர்கள் சர்வசாதாரணம்.

Sunday, June 7, 2009

'நான் அவனில்லை..' - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்திய அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டியில் வட அமெரிக்காவுக்கான விருதினைப் பெற்ற அறிவியற் சிறுகதை!



கி.பி.2700 ஆம் ஆண்டிலொருநாள்.... ...

தமிழகத்தின் சென்னையிலுள்ள மிகப்பிரமாண்டமான திறந்த வெளிச் சிறைச்சாலையில் தனக்குரிய அறையினுள் பாஸ்கரன் அமர்ந்திருந்தான். சிறைக்காவலர்களற்ற திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கைதிகளின் உடல்களிலும் அவர்களது அடையாளங்கள் பற்றிய அனைத்துத் தகவ்ல்களுடன் கூடிய சிலிக்கான் சில்லுகள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலம், GPS தொழில் நுட்பத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பிறிதோரிடத்தில் அமைந்திருந்த சிறைச்சாலைத் தலைமைச் செயலகத்திலிருந்து அவதானிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். செவ்வாய்க் கிரகம், சந்திரன் போன்ற கிரகங்களெல்லாம் புதிய புதிய காலனிகளால் நிறைந்து விட்டிருந்தன. சூரிய மண்டலத்தில் பல்வேறு விண்வெளிக் காலனிகள் உருவாக்கப் பட்டிருந்தன. பூவுலகின் பல்வேறு நாடுகளும் மானுடர்களென்ற ரீதியில் ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். ஒரு கிரகம்! அதன் மக்கள் நாம்! என்று பக்குவப்பட்டிருந்த மானுடர்கள் பூவுலகு மக்கள் கூட்டமைப்பு என்று ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். நாடுகளுக்கிடையில் பயணிப்பதற்குக் கடவுச் சீட்டு, விசா போன்ற எதுவுமே தேவையாகவிருக்கவில்லை. நாடுகள், தேசிய இனங்கள், தேசிய பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு நாடுகளும் தத்தமது வெளிநாட்டுக் கொள்கையினை வகுத்திருந்த காலம் எப்போழுதோ இப்பூமியில் மலையேறிவிட்டிருந்தது. இன்று விண்வெளித் தொழில் நுட்பம் மிகவும் முன்னேறி விட்டிருந்ததொரு நிலையில் வேற்றுக் கிரக வாசிகள், உயிரினங்களிலிருந்து இப்பூமிக்கான பாதுகாப்பு என்னும் அடிப்படையில் பூவுலகின் பாதுகாப்பு தீர்மானிக்கப்பட்டது. இத்தகையதொரு சூழல் நிலவும் காலகட்டமொன்றில்தான் இவ்விதம் திறந்தவெளிச் சிறைச்சாலையொன்றில் அமர்ந்திருந்தான் இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரன். அவனது சிந்தனையெல்லாம் அடுத்த நாளைப் பற்றியதாகவேயிருந்தது. செய்யாத குற்றத்திற்காக அவனுக்கு மரணதண்டணை விதிக்கப் பட்டிருந்தது. சந்தர்ப்ப சாட்சியங்கள் சதி செய்து விட்டன.


இத்தனைக்கும் அவன் செய்ததாகக் கருதப்பட்ட குற்றச்சாட்டு: அல்பா செஞ்சுரி நட்சத்திர மண்டலத்திலுள்ள சிறியதொரு, பூமியையொத்த கிரகமான 'பிளானட் அலபா'வில் வசிக்கும் மானிடர்களைப் பெரும்பாலுமொத்த வேற்றுலகவாசிகளுக்குப் பூமியின் பாதுகாப்பு இரகசியங்களை வழங்கியிருந்தத்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தான். நமது பூமிக்குத் துரோகம் செய்ய முனைந்தவனாகக் குற்றவாளியாக்கப்பட்டிருந்தான். அதற்கான தண்டனைதான் மறுநாள் நிறைவேற்றப்படத் தீர்மானிக்கப்பட்டிருந்த, அவன்மேல் விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனை. இதிலிருந்து தப்புவதற்கென்று ஏதாவது வழிகளிருக்கிறதாவென்று பல்வேறு கோணங்களில் சிந்தனையைத் தட்டிவிட்டான். தப்புவதற்கான சந்தர்ப்பமே இல்லையென்பது மட்டும் நன்றாகவே விளங்கியது. முதன் முறையாகச் சாவு, மரணம் பற்றி மனம் மிகத் தீவிரமாகச் சிந்திக்கத் தலைப்பட்டது. வேறு மார்க்கமேதுமில்லை. நடப்பதை ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான்.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...