Saturday, December 29, 2018

நான் இரசித்த புனைவுக் காட்சியொன்று!


ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' தொடர்நாவலில் சம்பவங்களுக்கு உயிர்த்துடிப்புடன் ஓவியர் கோபுலு சித்திரங்கள் வரைந்திருப்பார்.  ஆனந்த விகடனில் நாவல் தொடராக வெளிவந்தபோதே நாவலில் வரும் ஒரு காட்சியும், அதற்கு கோபுலு வரைந்திருந்த ஓவியமும் பசுமரத்தாணி போல் ஆழ்மனத்தில் சென்று படிந்துவிட்டது. மானுட உளவியலைப் பிரதிபலிக்கும் ஜெயகாந்தனின் வசனங்களுக்கு உயிரூட்டியிருந்தார் கோபுலு. காலச்சுவடு பதிப்பகத்தினர் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' 'நாவலை வெளியிட்டபோது ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ஓவியங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். அந்நூல் என்னிடமுள்ளது. அவ்வப்போது அந்நாவலில் அப்பக்கத்தைப்புரட்டிப் பார்ப்பேன். மனத்தின் இறுக்கம் நெகிழ்ந்து இன்பத்திலாழ்ந்துவிடும். ஜெயகாந்தனின் வசனங்களையும், கோபுலுவின் அவ்வோவியத்தையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

இதழ்களில் தொடர்களாக வெளிவந்த நாவல்களை வெளியிடும் பதிப்பகங்கள் அத்தொடர்களில் வெளிவந்த ஓவியங்களையும் உள்ளடக்கி வெளியிடுவது சிறப்பு  மிக்கதென்பதென் எண்ணம். இதுபோல் முல்லை பதிப்பகத்தினர் வெளியிட்ட விந்தனின் பாலும் பாவையும் நாவலிலும் அந்நாவல் தொடராக வெளிவந்த ஓவியங்களுடன் வெளியிட்டிருக்கின்றார்கள். அந்நூலும் என்னிடமுள்ளது. ஆனந்தவிகட வெளியிட்ட பொன்னியின் செல்வன் நாவலிலும் ஓவியர் மணியத்தின் ஓவியங்களையும் உள்ளடக்கியிருந்தார்கள் என்பதும் இத்தருணத்தில் நினைவு கூரத்தக்கது.


- - " மண்ணாங்கட்டி மாடிக்கு வந்தபோது தேவராஜனும் ஹென்றியும் எதையோ நினைத்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்க்க மண்ணாங்கட்டிக்குச் சிரிப்பு வந்தது. என்ன விஷ்யம் என்று தெரிந்து கொள்ளாமலேயே  அவன் சிரிப்பதைப் பார்த்து இவர்களுக்கு இன்னும் சிரிப்ப்பு வந்தது. தேவராஜன் சிரிப்புக்கிடையே ஹென்றியிடம் ஆங்கிலத்தில் கூறினான்: அந்த டான்ஸைக் கொஞ்சம் ஆடிக் காண்பிங்க. அவனும் பார்க்கட்டும்.

சற்றும் தயக்கமில்லாமல் ஹென்றி எழுந்து நின்று மண்ணாங்கட்டியை  கமான், லிஸன் என்று அருகில் அழைத்து, நாட்டியம் சொல்லிக்கொடுக்கிற பாவனையில் ... ஒரு கையை முன்னாலும், இன்னொரு கையைப் பின்னாலும் வைத்து உள்ளங் கைகளைப் பூ விரிக்கிற மாதிரி விரித்து ஒன்..டூ, ஒன்.. டூ எம்கிற தாளலயத்தோடு சோப்பெங்கப்பா, சோபெங்கப்பா என்று முன்னும் பின்னுமாய் வளைந்தும் நிமிர்ந்தும் குதிக்க ஆரம்பித்தான்.

சோப்பெங்கப்பா, சோபெங்கப்பா சோப்பெங்கப்பா என்று சொல்லிக்கொண்டே அதே தாளத்தில் தட்டாமாலை சுற்றினான். ஒரு சுற்றுச் சுற்றிப் பழைய பொஸிஷனுக்கு வந்து மண்ணாங்கட்டிக்கெதிரில் நின்று மண்ணாங்கட்டியின் முகத்துக்கெதிரே பா-பா-பா என்று ஆவர்த்தனம் முடிப்பது மாதிரி முடித்துத் தானே கைதட்டிச் சிரித்துக்கொண்டான்.

இதற்கிடையில் தேவராஜன் சிரித்துச் சிரித்து மூர்ச்சயாகிறவன் மாதிரிக் கட்டிலில் விழுந்து  வயிற்றைப் பிடித்துக்கொண்டு புரண்டான்.  மண்ணாங்கட்டிக்குப் பைத்தியம் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. அவனும் கூடச்சிரித்தான்." - -


இவ்விதமானதொரு காட்சியைச் சித்திரிக்கும் எழுத்தாளனுக்கு மானுட உளவியல் புரிந்திருக்க வேண்டும். அவன் மானுடர் வாழ்வை நன்கு அவதானித்திருக்க  வேண்டும்.

No comments:

ஜெயகாந்தன் நினைவாக.......

- எழுத்தாளர் ஜெயகாந்தனின் இளமைத்தோற்றம். - எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த தினம் ஏப்ரில் 24. எழுத்தாளர் ஜெயகாந்தன்  என் வாசிப்பனுவத்தில் மறக்...

பிரபலமான பதிவுகள்