Friday, October 11, 2019

முகநூலில் முதற் காதல் பற்றி...

அண்மைக்காலமாக முகநூலில் ஆளாளுக்குத் தம் முதற் காதலைப்பற்றி நினைவு கூர்ந்து, இழந்ததையெண்ணிக் கழிவிரக்கம் கொள்கின்றார்களே ஏன் என்று பார்த்தால் அண்மையில் வெளியான 96 படமே காரணம் என்று புரிந்தது. சிலர் நகைச்சுவை ததும்ப தம் அனுபவங்களை எழுத்தில் வடித்திருந்தார்கள். அவர்களது அனுபவங்களில் உண்மை இருப்பதால் அவர்கள்தம் எழுத்துகளும் சுவைக்கின்றன. உதாரணத்துக்கு நண்பர் பரதன் நவரத்தினத்தின் பதிவிலிருந்து சில பகுதிகள்:

1. " .Cricket ,Football இதுவே எனது Life .இரவு வந்து படித்தால் காணும்.இந்த 3.45 பஸ்ஸை விட்டால் அடுத்த School Bus 4.30 மணிக்கு இற்கு சென் ஜோன்ஸ் ,சுண்டுக்குளி,சென்றல்,வேம்படி எல்லாம் சென்று மாணவர்களை ஏத்தி ஆடி அசைந்து வரும். சில நாட்களில் பாடசாலை முடிய நான் சற்று பிந்தி வந்தும்,பஸ் சற்று முந்தி போயும் இருக்கும் சந்தர்பங்களில் பெடி பெட்டைகளால் நிரம்பி வரும் School Bus எடுத்திருக்கின்றேன்.ஒரே கூச்சலும்,குழப்பமுமாக இருக்கும்.அதுவும் பெட்டைகள் ரைவர் கொஞ்சம் பஸ்ஸை சரித்து வெட்டினால் காணும் சரோஜாதேவி கணக்கு வீல் என கத்துவார்கள்என்ன சும்மா வெருதுகள் என்று நினைப்பேன் , அதை விட கொக்குவில் Tech மாணவர்கள் என்று வரும் இருபது வயது முதியவர்களை கண்டால் தாங்காது. இறுக்கிய பான்சும் ஒரு அகல பெல்டும் சகிக்காது. இந்த வயதில் என்ன படிப்பு வேண்டிக்கிடக்கு என்று தோன்றும் . அன்றும் அப்படித்தான் அரும்போட்டில் முதல் பஸ்ஸை கோட்டைவிட்டு SCHOOL BUS எடுத்த எரிச்சலில் இருக்கின்றேன் .கொக்குவிலில் Tech தாண்ட முதியவர்களும் இறங்க பஸ் கொஞ்சம் வெளித்துவிட்டது. சும்மா திரும்பி பின்னால் பார்தேன்.தோய்ந்து விரித்த தலையில் ஒரு வெள்ளை அலிஸ்பான்ட், பாடசாலை செல்லும் எமது சராசரி பெட்டைகள் மாதிரி பத்துத்தரம் துவைத்து மஞ்சள் அடித்த வெள்ளை யுனிபோமில் இல்லாது வெள்ளை வெளீர் என ஏதோ பொலிஎஸ்டர் துணியில் யூனிபோம், வெள்ளை சொக்ஸ்,டென்னிஸ் சப்பாத்து , குமுதத்தில் போன்விற்றா விளம்பரத்திற்கு வரும் சிறுமி போல் பளிச்சென்ற முகம்.அதில் ஒரு சின்ன கறுப்பு பொட்டு. அந்த பெட்டை என்னை காணவே இல்லை. நான் முதன் முதல் இப்படியும் ஒரு விஷயம் இருக்கு என்று சிறிது உணர்ந்த நாள் அன்றுதான் .எனது இறங்குமிடம் வர அதுவும் எழும்பி எனக்கு முன்னால் இறங்கி தனது வீட்டை நோக்கி நடந்து ஒரு குச்சொழுங்கையில் திரும்பி மறைந்துவிட்டது. ஏதோ என்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டு போய்விட்டதை போல உணர்ந்தேன்.எனது வீடு மற்ற பக்கம் என்றாலும் அரை மைல் தொலைவில் இப்படி ஒரு உலக அதிசயமா?"

2. அடுத்த இரண்டு மூன்று நாட்களில் அவளைப்பற்றி எனக்கு வேண்டிய விபரங்களளை பலரிடம் மெல்ல கதைவிட்டு பிடி கொடுக்காமல் புடுங்கி எடுத்துவிட்டேன் . பெயர் மேனகா ,வேம்படியில் ஒன்பதாம்? வகுப்பு,தகப்பன் கல்வியதிகாரி வில்லன்கள் மூன்று, அதுதான் அண்ணன்மார்கள். மேனகா தகப்பன்ரை காரில தான் பள்ளி போய் வாறது, இடைக்கிடை எப்போதாவது தகப்பன் வர முடியாவிட்டால் பின்னேர பஸ். அந்த குச்சொழுங்கை நேர அவர்கள் வீட்டிற்குத்தான் போகுது, சயிக்கிளில் உள்ளுக்கு விட்டு சுத்தியடிக்கேலாது. பரதநாட்டியம் பழகுது,(ஆளை பாக்கேக்க யோசிச்சனான்).நெட்போலும் விளையாடுகின்றதாம். பயோடேட்டா எடுத்து என்ன செய்கின்றது. முதல் பஸ்ஸை விட்டு SCHOOL BUS எடுத்தும் ஆளை காணக்கிடைக்குதில்லை.பழையபடி 3.45 BUS இற்கு மாறிவிட்டேன். ஒரு மாதம் ஓடியிருக்கும், ஒரு சனி அரைநாள் பாடசாலை (போயா,பிறிபோயா காலம் சனி அரை நாள் பாடசாலை) முடிய பஸ்சில் வந்து இறங்குகின்றேன். ஆள் வேறு சில பெட்டைகளோட மற்ற பக்கமாக நடந்துவந்து கொண்டிருக்கு. முடக்கில் இருக்கும் கடைக்காரரிடம் (அயலவர்தான்) அண்ணை உதில போட்டுவாறன் எண்டு சயிக்கிளை இரவல் வாங்கிக்கொண்டு ஒரே உழக்கு. உலகஅதிசயம் கொஞ்சம் ஓவர் ஆனால் வந்தவர்கள் மத்தியில் தேவதைதான். இடுப்புக்கு மேல மார்போடு புத்தகக்கட்டை இடக்கையால் எடுப்பாக அணைத்தபடி , நிமிர்ந்த நடை,செல்வமும் செருக்கும்அதில் கலந்திருந்தது இன்று அலிஸ்பான் இல்லை,ஒற்றைபின்னல். அவர்களை விலத்தும் போது முதன் நாளே என் தூக்கத்தை துலைக்க பண்ணிய அந்த கண்களைப்பார்தேன். சுட்டும் சுடர் விழி என பாரதி பாடியது நிச்சயம் இதைதான்.நான் பார்ப்பது அவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக சிறிது தூரம் போய் யூ டேர்ன் அடித்து திரும்பி வர ஒழுங்கைக்குள் ஆள் போய்கொண்டிருக்கின்றது. இனி அடுத்த அரைநாள் சனி வரும்வரை  என்ன செய்யபோகின்றேன். விளையாடப்போகவும் மனமில்லை.ஆனால் எப்படியும் போகவேண்டும்.வீட்டில் இருந்து என்ன செய்வது.
தேவையில்லாமல் அடிக்கடி முடக்கு கடையடியில் வந்து நின்று ஒழுங்கையால் கார் வெளியில் வருகின்றதா எனவேறு பார்க்க தொடங்கி விட்டிருந்தேன். அப்பிடி வந்தாலும் நம்ம ஆள் இல்லாமல் அப்பன் மாத்திரம் போவான். நான் பாடசாலை முடிய chemistry, physics tuition எடுக்கதொடங்கியிருந்தேன் ஒரு பார்வை மட்டும் காணும் என்றால் அதுவும் எட்டுதில்லை . அடுத்த பாடசாலை அரைநாள் சனிக்கிழமை வந்தது,பாடசாலை முடிய ஒரு அலுவல் என நண்பனையும் கூட்டிக்கொண்டு யாழ்பஸ்ராண்ட் நோக்கி நடைபோடுகின்றேன்.சனி school bus இல்லை ஆள் இங்குதான் வரும் என மனம் கணக்கு போட்டிருந்தது.நண்பனுக்கு விளங்கக்கூடாது என்பதற்காக அம்மா சொல்லிவிட்டவா எனச்சொல்லி பூபாலசிங்கம் புத்தகசாலையில் குமுதத்தை வாங்கிக்கொண்டு போய் கியூவில் நிற்கின்றோம். கணக்கு தப்பவில்லை ஆள் வருகுது .நான் பட்ட அவஸ்த்தையில் நண்பனுக்கும் ஏதோ விளங்கிவிட்டது. "என்ன யாரையும் பார்க்க வந்தனியோ" என்றான். "உந்தா ஆள் வருகின்றது, ஆளைப்பார்" என காட்டினேன்.அதற்கிடையில் அவர்களும் வந்து கியூவில் பின்னுக்கு நிற்க தொடங்கிவிட்டார்கள். மெதுவாக திரும்பி பார்த்தேன்.அவளின் கண்களில் ஒரு சந்தேகபொறி தெரிந்தது.அண்ணர் தன்னை தான் பார்க்க வந்திருக்கின்றாரோ என்ற கேள்வி அதில் தெரிந்தது. "டேய் மற்ற பஸ்ஸை எடுத்து வீட்டை போவம் .நீ யாரிட்டையோ வாங்கிக் கட்டப்போகின்றாய்" நண்பன் காதில் குசுகுசுத்தான்."இண்டைக்கு ஒருநாள்தான் தானே சும்மா வா" என அவனை அதட்டினேன். ஒரே பஸ்சில் ஏறி, ஒரே இடத்தில இறங்கி அவளுக்கு பின்னாலேயே நடந்து ஒழுங்கைக்குள் போக மட்டும் ஒரு மாதத்திற்கு சேர்த்து பார்த்து விட்டது போலொரு உணர்வு.அவளுக்கும் ஏதோ விளங்கிவிட்டது என உள்ளுணர்வு சொல்ல மனம் துள்ளி குதித்தது. இன்று எம்மை எதிர்த்து கிரிக்கெட் விளையாட வரும் டீம் காலி என பட்சி சொன்னது. உண்மையிலும் அதுதான் நடந்தது. சும்மா அடிக்க சிக்ஸ் சிக்சாக பந்து பறந்தது . ஏதோ சாதித்துவிட்டது போலொரு நினைப்பில் அன்று படுக்கையில் கிடந்து உருண்டேன்."

பேச்சு வழக்கில் இவ்விதம் பரதன் நவரத்தினம் தன் அனுபவங்களைச் சுவையாகச் சொல்லிச் செல்கின்றார்.

ஆனால் 96 படம் வெளியாவதற்கு முன்னரே நண்பர் எழுத்தாளர் வடகோவை வரதராஜன் தன் முதற் காதல் அனுபவங்களில் எழுதிய கவிதைகளைப் பதிவிட ஆரம்பித்து விட்டார். உதாரணத்துக்கு அவரது பதிவுகளிலிருந்து சில பகுதிகள்:

"பழைய குப்பைகளை கிளறுகையில் இது கிடைத்தது . 70பதுக்களின் பிற்கூற்றில் உச்ச காதல் போதையில் எழுதிய கவிதை இது .இதை இப்போ பார்த்து மனைவியும் பிள்ளைகளும் சிரியோ சிரி என சிசரிக்கிறார்கள். நீங்களும் சிரியுங்களேன்
மனம் அங்கும் இங்கும் அலைபாய்ந்து
மயங்கித்திரிந்த கதை பேசும்
நனவாய் நடந்த கதை எல்லாம்
கனவாய் போன கதைசொல்லும்
கிழமாய் மாறிப்போனாலும்
கிழக்கை சூரியன் மறந்தாலும்
கண்ணா நம்மை யார்ப்பிரிப்பர்
கருத்தொருமித்த காதலர்நாம்
என்ற பெண்ணே உன்னை நான் பிரிந்தேன்
பொய்யாய்ப்போனது என்வாழ்வு
இதயம் குருதி கொட்டுதடி
இரும்பாய் நெஞ்சு கனக்குதடி
சதையாய் இருந்த நான்மாறி
சாற்றுப்பீழை போலானேன்
கண்கள் இரண்டும் பஞ்சாக
கால்கள் இரண்டும் வழிசோர
உண்ணும் உணவு வேம்பாக
உறக்கம் விழியின் கனவாக
எங்கோ எங்கோ அலைகின்றேன்
எண்ணம் எல்லாம்உன்நினைவாய்
கண்ணே உன்னைத் தேடுகிறேன்
எங்கே எங்கே நீ சொல்லு"
- வடகோவை வரதராஜன் -

எழுத்தாளர் சுமதி ரூபன் இவரும் (பரதன் நவரத்தினத்தின் சகோதரி) தன் பங்குக்குத் தன் அனுபவங்களை இவ்விதம் பகிர்ந்துகொண்டிருக்கின்றார்:

" "96" எங்களுக்கும் உண்டுதான். எனது முதல் காதல், சேராவிட்டால் செத்துவிடுவேன் என்று நினைத்த காலம் அது. 20 வருடங்களுக்குப் பின்னர் அவனுக்கு மூன்று பிள்ளைகள், எனக்கும் மூன்று பிள்ளைகளுடன் சந்திக்கக் கிடைத்தது. பின்னர் போன் பண்ணிக் கேட்டான் ”ஏன் என்னை ஏமாற்றினீங்கள்?” என்று. நான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன் அவன்தான் என்னை ஏமாற்றினான் என்று. ”இல்லை, காலத்தைப் பாருங்கோ, நீங்கள் கலியாணம் கட்டினாப் பிறகுதான் நான் கலியாணம் கட்டினனான்” என்றான், அதுக்காகக்தான் காத்திருந்தவன் போல். எனது பிள்ளைகளோடு அவன் வீட்டிற்கு visit போய் விட்டுத் திரும்பும் போது எனது பிள்ளைகளுக்குச் சொன்னேன், இவர்தான் எனது ”first love" என்று. எனது மூத்த மகன் ”நீங்கள் இவரைக் கலியாணம் கட்டியிருந்தால் நாங்கள் பிறந்திருக்க மாட்டம்" என்று சிரித்தான். எங்கள் பிரிவிற்கு போர், புலம்பெயர்தல், தொலைபேசி இல்லாத காலம். நாங்களும் திடீரென வீடு மாறியது எதுவும் காரணமாக இருந்திருக்கலாம். அவன் இப்போது மனைவி பிள்ளைகள் என்று சந்தோஷமாகத்தான் வாழ்கின்றான். நான் பிள்ளைகள் என்று சந்தோஷமாகத்தான் வாழ்கின்றேன். அவன் என்னை ஏன் ஏமாற்றினீங்கள் என்று கேட்ட தொலைபேசி உரையாடலின் போது நான் கடைசியாகச் சொன்னது, உன்னை நான் கலியாணம் செய்திருந்தால் டிவோர்ஸ் எடுத்திருப்பேன் என்று. ஜானு, ராம் போல் இருக்கத்தான் ஆசை, ஆனால் என்ன செய்ய நான் வெறும் மனுசி."

இவர்கள் எல்லாரையும் அண்மையில் வெளியான விஜய் சேதுபதி / திரிஷா கிருஷ்ணன் நடிப்பிலுருவான 96 திரைப்படம் அதிகமாகப் பாதித்துள்ளதை (எழுத்தாளர் வடகோவையாரைத்தவிர்த்து ) இவர்களது பதிவுகளிலிருந்து அறிய முடிகின்றது. என் பங்குக்கு நானும் எழுதலாமா என்று யோசித்துப்பார்த்தேன். எழுதினால் நல்லதொரு குறுநாவலாக வந்து விடும். இருந்தாலும் இன்னும் 96 பார்க்காததால் இவர்களுடன் இவ்விடயத்தில் போட்டி போடும் எண்ணம் எதுவுமில்லை

இம்முதற்காதல் குறிப்பாகக் காதல் அனுபவங்கள் மானுடரைப் பாதிப்பதைப்போல் வேறெதுவும் பாதிப்பதில்லை. பரதனின் அனுபவத்தை வாசித்தபோது எனது இன்னுமொரு நண்பரின் அனுபவம் நினைவுக்கு வந்தது. நூலகமே அதிகமாக வராத நண்பர் சிறிது காலமாக யாழ் பொதுசன நூலகத்துக்கு வர ஆரம்பித்தார். எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. நண்பகல் வருபவர் பாடசாலை விடும் சமயம் பார்த்து 814 பஸ் பிடித்து வீடு திரும்புவார். ஒரு நாள் நானும் அவருடன் அச்சமயம் சென்றிருந்தேன். நான் செல்லும் வழி அவர் செல்லும் பாதையிலேயே இருந்தது. அப்பொழுதுதான் கவனித்தேன். பஸ் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளால் நிறைந்திருந்தது. அவர்களில் ஒருவர்தான் நண்பரை இவ்விதம் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தார். இவர் ஆசையுடன் பார்ப்பதும், அவர் முறைப்புடன் பார்ப்பதுமாக அக்காதல் சென்று மடிந்துபோனது. அதற்கு மேல் வளரவில்லை. அதே சமயம் நண்பரின் சகோதரி ஒருவரை விரும்பும் அவரது ஊர்க்காரர் தன் காதலுக்குரியவளின் அண்ணனின் நண்பன் என்னும் காரணமாகவே என்னைக் காணும் நேரமெல்லாம் நின்று கதைத்துச் செல்வார். தன் காதலுக்குரியவளின் அண்ணனின் நண்பன் என்று அவருக்கு என்னில் ஒரு மரியாதை ஆனால் ஒரு நாளும் அவர் தன் காதலை எனக்குத் தெரியப்படுத்தியதில்லை. நான் வேறு வழிகளில் பின்னர் அறிந்துகொண்டேன். அதுவும் வெறும் நினைவுகளுடனேயே சென்று மடிந்து விட்டது.

மகாகவி பாரதியாரையும் இந்த முதற்காதல் அனுபவம் (அதுவும் தோல்வியில் முடிந்து போனது) விட்டு வைக்கவில்லை. பத்து வயதில் அவர் நெஞ்சை ஒருத்தி ஆட்கொண்டாள். தந்தையோ பன்னிரண்டு வயதில் தான் பார்த்த பெண்ணொருத்தியை அவருக்கு மணம் செய்து வைத்தார். அதனைப்பாரதியார் மேற்படி 'சுயசரிதை' கவிதையில் பின்வருமாறு விபரிப்பார்:

"ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன்;
ஈங்கோர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள்
எந்தை வந்து மணம்புரி வித்தனன்."

இவர்கள் எல்லாரையும் 96 பாதித்துள்ள அளவுக்கு அண்மையில் வெளியான இன்னுமொரு படம் ஏன் பாதிக்கவில்லை என்பது தெரியவில்லை. அண்மையில் வெளியான ரஜனிகாந்த்தின் 'காலா திரைப்படத்தில் அற்புதமாக அவரது முதற் காதல் அனுபவம் விபரிக்கப்பட்டிருக்கும். அதில் ரஜனிகாந்த் தன் முதற் காதலியுடன் உரையாடும் கட்டமொன்று வருகின்றது. இருவரும் உரையாடிக்கொண்டிருக்கையில் ரஜனி அவள் ஒரு சமயம் சென்று கொண்டிருந்த சமயம் அணிந்திருந்த ஆடைகள் பற்றி, அவற்றின் நிறங்கள் பற்றியெல்லாம் கூறுவார். அப்பொழுது அவள் கேட்பாள் அவ்வளவு காதலா என்று . அதற்கு ரஜனி 'ரொம்ப' என்று் பதிலளிப்பார். மிகவும் நுணுக்கமாக ரஜனியின் காதல் அனுபவங்களை இயக்குநர் ரஞ்சித் வெளிப்படுத்தியிருப்பார் அக்காட்சியில் . முதற் காதல் அனுபவங்கள் பெரும்பாலும் நிறைவேறுவதில்லை. ஆனால் வாழ்வின் அழியாத கோலங்கள் அவை. மானுட வாழ்வின் வளர்ச்சியில் ஆரோக்கியமான படிக்கட்டுகள் அவை. அக்காலகட்டத்தில் அவர்கள், காதலர்கள், அணிந்திருந்த ஆடைகளின் நிறங்கள் கூட மனங்களில் பசுமையாகப் பதிந்திருக்கும். அதனைத்தான் இயக்குநர் பா.ரஞ்சித் அப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார். அதற்கு அவருக்கும் அத்தகைய அனுபவம் இருந்திருக்க வேண்டும். அதனால்தான அவ்விதம் வெளிப்படுத்த அவரால் முடிந்துள்ளது.
தமிழ்த்திரைப்படங்களில் வெளியான முதற் காதல் அனுபவங்களை மையமாக வைத்து வெளியான சிறந்த பாடல்களிலொன்று காலா திரைப்படத்தில் வரும் கண்ணம்மாப்படப் பாடல்: https://www.youtube.com/watch?v=4BD0jvKhFPk

இப்பாடலில் வரும் "ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல் என் காதல் கிடக்கின்றதே....!" என்னும் வரிகள் கவிதாயினி உமாதேவியின் அற்புதமான, கவித்துவம் மிக்க வரிகள். ரஜனிகாந்த், அவரது முன்னாட் காதலியாக வரும் ஹூமா குரேஷி இருவரும் இப்பாடலில் மிகவும் சிறப்பாக உணர்வுகளை முகபாவங்களால் வெளிப்படுத்தி நடித்திருப்பார்கள்.

படம்: காலா
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடல் வரிகள்: உமாதேவி
பாடகர்கள்: பிரதீப் குமார், டீ (Dhee )
பூவாக என் காதல் தேனூறுதோ
தேனாக தேனாக வானூறுதோ
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானம் ஏது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
உன் காதல் வாசம்
என் தேகம் பூசும்
காலங்கள் பொய்யானதே
தீராத காதல் தீராத மோதல்
தூரங்கள் வழி மாறுமோ
தூரங்கள் வழி மாறுமோ
பால் பார்த்து ஏங்கும்
சிறு புள்ளின் தாகம்
கானல்கள் நிறைவேற்றுமோ
நீரின்றி மீனும் சோறுண்டு வாழும்
வாழ்விங்கு வாழ்வாகுமோ
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானம் ஏது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
மீட்டாத வீணை தருகின்ற ராகம்
கேட்காது பூங்காந்தளே
பூட்டாத தாயின் கனக்கின்ற பால் போல்
என் காதல் கிடக்கின்றதே
காயங்கள் ஆற்றும் தலை கோதி தேற்றும்
காலங்கள் கைகூடுதே
தொடுவானம் இன்று நெடுவானம் ஆகி
தொடும் நேரம் தொலைவாகுதே
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானம் ஏது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா என்னம்மா

முகநூல் எதிர்வினைகள் சில:

  • Terrence Anthonipillai All three writers you mentioned are natural storytellers, their ability to take us back to our good old school days, as if the described events are happening to us right now, is amazing. their talent to producing short stories , the scene is set for the sort of memorable mix that's much in demand these days.

    And your ability Giri, to absorb the reader immediately, in combining varaity of different situations is a gift few possess.

    Thanks everyone for rekindling our memories which we silently and personally enjoy once in a while!

    Cheers!
  • Pena Manoharan ஆகா...66 ம் தொடர்ந்த வருடங்களும் தோரணமாய்த் தொங்குகின்றன...அநுராதபுரப் பழைய புதியநகர் வீதிகளில்...
    • Giritharan Navaratnam பேனா அவர்களே 66 பற்றி எழுதுங்கள் :- ) வாசிக்கக் காத்திருக்கின்றோம்.
  • Pena Manoharan பரதன் முக்கால்வாசி எழுதி விட்டார்.96....பார்க்க நேர்ந்தால் 66 பற்றி எழுதுகிறேன்.' வருஷத்தப் பாரு அறுபத்தி ஆறு...உருவத்தப் பாரு ஒல்லிப் பதினாறு...' நடிகர் ரவிச்சந்திரன் ஆடிய பாடலை என் தேவைக்கு மாற்றி இருக்கிறேன்.இப்போதைக்கு இம்புட்டுத்தான்.

  • Giritharan Navaratnam Pena Manoharan அறுபத்தாறிலை உங்கள் வயசு அறுபத்தாறல்லவே நண்பரே! :-)


  • Vadakovay Varatha Rajan நன்றி கிரி . என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் . நான் திரைப்படங்கள் அதிகம் பார்ப்பதில்லை என்பதை எப்படியோ மணந்து பிடித்திருக்கிறீர்கள் . இப்பதிவை பகிர்கிறேன்

    Arul Kumar SP "காதலும் மானமும் வீரமும் " என்றுதான் தமிழர் வாழ்வியல் பேசுகிறது .. இது ஆயிரமாயிரம் காலத்துப்பயிர்.. முதற்காதல் என்றாலே அது முடியாத காதல்தானே ! கலப்படமில்லாத காதலை எப்படி மறக்கமுடியும் .?

  • AS Kantharajah Enjoyed.

  • Giritharan Navaratnam காதல் அனுபவங்களை வெளிப்படுத்தும் சிறந்த பாடல்களிலொன்று ஜெயாபாதுரி & அனில் தாவன் நடிப்பில், எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்றும் கூட : https://www.youtube.com/watch?v=ekKboaSX8tE
  • Yeh Zulf Kaisi Hai - Jaya Bahaduri & Anil Dhawan - Piya Ka Ghar

No comments:

வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளம் தந்த வான் பாய்தல் பற்றிய சிந்தனைகள்!

மாரியில் மழை பெய்து பட்டாணிச்சுப்புளியங்குளம் நிறைந்து வழிகையில் வான் பாயுமொலி இரவின் இருளை, அமைதியைத் துளைத்துக்கொண்டு கேட்கும். குருமண்காட...

பிரபலமான பதிவுகள்