Tuesday, October 25, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (5): ஆனை பார்த்த அந்தகர்கள்! - வ.ந.கிரிதரன் -



அத்தியாயம் ஐந்து - ஆனை பார்த்த அந்தகர்கள்!


மனோரஞ்சிதம் அவ்வப்போது தமிழ்க் கலை, இலக்கியம் பற்றியும் கருத்துகளை உதிர்ப்பதுண்டு. அவளது கருத்துகள் எப்பொழுதுமே சிந்தனையைத் தூண்டுபவையாக, ஆழமான தர்க்கத்தை வேண்டுபவையாக இருப்பது கண்டு நான் பெரிதும் ஆச்சரியப்படுவதுண்டு. இவ்விதமாக அவளைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கையில் அவள் ஆழ்ந்த சிந்தனை நிலையினைக் கண்டு "என்ன பலமான சிந்தனை?" என்று கேட்டாள். கேட்டுவிட்டு என் பதிலை எதிர்பார்த்து என்னையே பார்த்து நின்றாள்.

"வேறொன்றுமில்லை கண்ணம்மா, எல்லாம் நம் காலத்து இலக்கியவாதிகளைப்பற்றித்தான். ஆளுக்காள் குழுக்களாகப் பிரிந்து நின்று தாமே சரியென்று வாதிட்டுக்குகொண்டிருக்கும் இவர்களைப் பார்த்தால் சிரிப்பு வராமல் வேறென்ன வரும். நீயே சொல் கண்ணம்மா."

"இலக்கியமோர் யானை" என்றாள் பதிலுக்கு மனோரஞ்சிதம்.

"யானையா?"

'ஓம். யானைதான்" என்று தீர்மானமாகச் சொன்னாள் மனோரஞ்சிதம் மீண்டும். அவளது அந்த உறுதி அவள் தன் தீர்மானத்தில் மிகவும் தெளிவாகவிருக்கின்றாள் என்பதை நன்கு புலப்படுத்தியது.

"ஒரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான் கண்ணம்மா.  இலக்கியத்தில்தான் எத்தனை எத்தனை போக்குகள்."

"கண்ணா, போக்குகள் பல இருப்பது தவறானதொன்றல்ல.அவையெல்லாம் வளர்ச்சியின் அறிகுறிகளே.  பிரச்சினை என்னவென்றால்...."

"என்ன பிரச்சினை கண்ணம்மா?"

"இலக்கியத்தின் போக்குகள் அனைத்துமே மனித இருப்பைப் பல்வழிகளில் வெளிப்படுத்துபவை. மனிதரின் அறிவு, புரிதலுக்கேற்ப இவையும் வேறுபடும். மனிதர்கள் எல்லாரும் ஒரே நிலையில்  அறிவைப்பொறுத்தவரையில் இருப்பவர்கள் அல்லர். பல்வேறு படிக்கட்டுகளில் இருப்பவர்கள்.  எல்லாராலும் எல்லாப் போக்குகளையும் இரசிக்க முடியாது. புரிந்துகொள்ள முடியாது. இல்லையா கண்ணா?"

"அம்மாடியோவ்.. என் கண்ணம்மாவுக்குள்  இவ்வளவு விசயங்களா? உண்மையிலேயே பிரமிப்பைத் தருகிறாயடி கண்ணம்மா."

"ஏன் ஆணுக்கு நிகராகப் பெண்கள் இருப்பதை நம்ப முடியவில்லையா கண்ணா" இவ்விதம் கேலியாகக் கண்களைச் சிமிட்டிய மனோரஞ்சிதம் தொடர்ந்தாள்:"ஒருமுறை எழுத்தாளார் சுந்தர ராமசாமி கூறியிருந்தது நினைவுக்கு வருகின்றது."

"என்ன கூறியிருந்தார்?"

"அவர் அவரது  பால்ய பருவத்தில் மலையாள மொழியிலேயே படித்ததாகவும், தமிழில் வாசிக்கத்தொடங்கியபோது அவருக்குப் பதினாறு வயதிருக்குமென்றும், தமிழில் வாசிக்கத்தொடங்கியபோதே அவர் தீவிர இலக்கியப்  படைப்புகளைப் படிக்க ஆரம்பித்து விட்டதாகவும் அவர் கூறியிருந்தார் கண்ணா."

"மூன்று வயதில் உமையம்மையின் ஞானப்பாலுண்டு தேவாரம் பாடிய சம்பந்தர்போல் எடுத்த எடுப்பிலேயே தீவிர இலக்கியத்துக்குள் குதித்து விட்டார் சு.ரா என்று சொல் கண்ணம்மா. எல்லோரும் சு.ராவைப்போல் எடுத்த எடுப்பிலேயே தீவிர இலக்கியத்துக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது கண்ணம்மா. குழந்தை இலக்கியம், வெகுசன இலக்கியமென்று படிப்படியாக வாசிப்பில் பரிணாமமடைந்துதான் தீவிர இலக்கியத்துக்குள் பிரவேசிக்க முடியும். நான் அப்படித்தான் நுழைந்தேன் கண்ணம்மா."

"கண்ணா, சு.ரா ஒன்றை மிகவும் இலகுவாக மறைத்து விட்டார். ஆரம்பத்தில் அவர் மலையாள மொழியில்தான் படித்திருக்கின்றார். அப்பொழுது அவர் குழந்தை இலக்கியம், வெகுசன இலக்கியமென்று படித்துப் பரிணாமமடைந்திருக்கலாமல்லவா. அதன் பின்னர் அவர் தமிழில் வாசிக்கத்தொடங்கியபோது அவர் வாசிப்பில் முதிர்ச்சியடைந்த ஒருவராகத்தானேயிருக்கிறார். அப்போது அவரால் தீவிர இலக்கியம் படிப்பதில் சிரமமெதுவுமிருந்திருக்காது. ஆச்சரியப்படவும் அதிலெதுவுமில்லை. என்ன கண்ணா நினைக்கிறாய்?"

மனோரஞ்சதத்தின் பேச்சிலிருந்த தெளிவும், தர்க்க நியாயம் மிக்க ஞானமும் உண்மையிலேயே என்னைப் பிரமிக்கத்தான் வைத்தன. இவளுடன் இவ்விதம் எவ்வளவு நேரமானாலும் பேசிக்கொண்டேயிருக்கலாம்.

"கண்ணம்மா, நான் உண்மையில் இந்தக் கோணத்தில் சிந்தித்திருக்கவேயில்லை. நீ சொல்வதுதான் சரி. நிச்சயம் அவரது வாசிப்புப் பரிணாமமும் குழந்தை இலக்கியம், வெகுசன இலக்கியமென்றுதான் வளர்ந்திருக்கின்றது. ஆனால் அவரது அந்தக் கூற்று தமிழில் வாசிக்கத் தொடங்குகையிலேயே தீவிர இலக்கியத்துக்குள் தான் இறங்கி விட்டதாகக் கூறியது பொருள் மயக்கம் மிக்கது கண்ணம்மா. கண்ணம்மா நீ கூறுவதுதான் எனக்கும் சரியாகப் படுகின்றது."

ஆனை பார்த்த அந்தகர்கள்!

சொன்னார் நண்பர்
"சொல்லப்படாதவரிவர்" என்று.
அதற்கு நான் கூறினேன்
"ஆனை பார்த்த குருடர்களிடம்
அதற்கு விளக்கம் கேட்டிருக்கின்றீர்கள்.
அதனால்தானிந்த குழப்பம்"என்று.
"குழப்பமா? என்ன குழப்பம்?"
என்று தலையில் கை வைத்தார் நண்பர்.
"சொல்லப்படாதவர் பற்றிச் சொல்லியிருக்கின்றீர்களே"
"சொல்லியிருக்கின்றேன் சொல்லப்படாதவர் பற்றி.
ஆமாம்! நீங்கள் சொல்லுவது சரியே"
சொன்னார் பதிலுக்கு அவர்.
"அதுதான் கூறினேன் குழப்பமென்று" என்றேன்.
அதற்கும் அவர் "புரியவில்லை" என்று
மீண்டும் தலையில் கை வைத்தார்.
"ஆமாம்! நீங்கள் குழம்பிப் போயிருக்கின்றீர்கள்" என்றேன்.
"ஆமாம். நீங்கள் சொல்லியதால்" என்றார் அவர்.
"சொல்லப்படாதவர் பற்றிச் சொல்லியதால்...."
"சொன்னேன். ஆனால்.."
"சொல்லவந்ததைச் சொல்லி முடிக்கவில்லையே.
சொல்லுவேன் கேளுங்கள். பின் ஏதாவது
சொல்லுங்கள்" என்றேன்.
"சொல்லுங்கள். சொல்லி முடிக்கும்வரை ஏதும்
சொல்லாமலிருப்பேன்" என்றார்.
"சொல்ல வந்ததென்னவென்றால்..
ஆனை பார்த்த குருடர்கள் பற்றி"
என்றேன்.
"ஆமாம்! ஆனை பார்த்த குருடர்களைப்பற்றி.
அவர்களைப்பற்றிச் சொல்லுங்கள்" என்றார்.
"அவர்களைப்பற்றிச் சொல்ல உண்டு.
அவர்கள் ஆனை பார்த்த அந்தகர்கள்" என்றேன்.
"ஆமாம்! அவர்கள் ஆனை பார்த்த அந்தகர்கள்!
அந்தகர்கள் பார்த்த ஆனையில் இல்லாதவர் அவர்.
அவர் சொல்லப்படாதவர்" என்றார் அவர்.
"சொல்லிவிட்டீர்களே! சொல்லப்படாதவரைப்பற்றி" என்றேன்.
"சொல்லிவிட்டேன் சொல்லப்படாதவரைப்பற்றி. ஆமாம்!
சொல்லிவிட்டேன்" என்றார்.
"ஆனை பார்த்தவர் நீங்கள்" என்றேன்.
"ஆனையைப் பார்த்தவன் நானா"
அவர் மீண்டும் தலையில் கை வைத்தார்.
"ஆமாம்! ஆனை பார்த்தவர்தான்.
அந்தகர்களுக்கு மத்தியில்" என்றேன்.
சொல்லப்படாதவரைப்பற்றிச் சொல்லியவர்
சொன்னார்:
:ஆமாம்! ஆனை பார்த்த அந்தகர்களுக்கு மத்தியில்.
ஆமாம்! ஆனை பார்த்த அந்தகர்களுக்கு மத்தியில்"
ஆடினார் அவர். பாடினார். ஆடியே பாடினார்.
ஆடினார் அவர். பாடினார். ஆடியே பாடினார்.
ஆடினார் அவர். பாடினார். ஆடியே பாடினார்.
"ஆமாம்! ஆனை பார்த்த அந்தகர்களுக்கு மத்தியில்.
ஆமாம்! ஆனை பார்த்த அந்தகர்களுக்கு மத்தியில்."

[தொடரும்]

No comments:

எம்ஜிஆருக்கு இளவயதில் அரசியல் போதித்தவர் என்.எஸ்.கே!

எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடலிது. 'சீர்மேகும் குருபதம்' என்று தொடங்கும் இப்பாடல் இடம் ...

பிரபலமான பதிவுகள்