Tuesday, October 25, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (4) :மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? - வ.ந.கிரிதரன் -



அத்தியாயம் நான்கு: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?


'கண்ணம்மா' என்றேன். மனோரஞ்சிதம் பெருங்காதலுடன் திரும்பிப் பார்த்தாள். கண்ணம்மா என்று நான் அழைப்பதைப் பெரிதும் விரும்புபவள். அச்சமயங்களிலெல்லாம் பதிலுக்குக் 'கண்ணா' என்று என்னை அன்பூற மென்மையாக அழைப்பாள். அந்த அன்பு குழைந்த அவளது அழைப்பைக் கேட்பதற்காகவே அவளை நான் கண்ணம்மா என்று விளிப்பதுண்டு. என்னைப்பொறுத்தவரையில் இவ்விருப்புன் அற்புதமாக அவளை நான் காண்பதுண்டு. அவளற்ற இருப்பை கற்பனை செய்வதே எனக்கு மிகவும் சிரமமானது.

'என்ன கண்ணா மெளனமாகிவிட்டாய்?" என்றாள் அவள்.

'எல்லாம் நம் இருப்பு பற்றிய சிந்தனைதான் கண்ணம்மா"

'இருப்பு பற்றி.. வழக்கம்போல் தத்துவவிசாரம்தானா கண்ணா'

'கண்ணம்மா உனக்குத்தானே எனக்கு பாரதி பாடல்கள் பிடிக்குமென்று தெரியும். எனக்குப் பிடித்த அவரது பாட்டைக் கூறு பார்க்கலாம்."

'கண்ணை மூடிக்கொண்டு கூறுவேன் கண்ணா. 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே பாடல்தானே'

'சரியாகவே கூறினாய் கண்ணம்மா. நீ என் மனத்தை நன்றாகவே  புரிந்து வைத்திருக்கிறாயடி.'

'இந்தக்கவிதை எனக்கும் பிடித்தது கண்ணா. அதற்குக் காரணமே இருப்பு பற்றிய கவிஞரின் கேள்விகளே."

'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?  ஒரு விதத்தில் தர்க்கரீதியாகப் பார்க்கப்போனால் இதுகூடச் சரிதானென்று வாதிடலாம். இல்லையா கண்ணம்மா?'

"எப்படி கண்ணா? எமக்கு வெளியே விரிந்து கிடக்கின்றது நாம் காணும் இப்பிரபஞ்சம். இவ்வுலகம். இப்புற உலகு மாயை என்று எப்படிக் கூறுவது கண்ணா?'

"கண்ணம்மா, நாம் காணும் இந்த உலகம், இப்பிரபஞ்சம் , இவ்வழகிய இயற்கைக் காட்சிகள் இவையெல்லாமே இறுதியாக என் மூளையின் விளைவுகள் தானே. காட்சிகள் மூளையில் நிகழும் மின்னியற் செயற்பாடுகளின் மின்னியல் விளைவுகள் தாமே. மின்னியற்  துடிப்புகள் தாமே. இறுதி விளைவாக நாம் உணர்வது, அறிவது எல்லாமே மூளையின் செயற்பாடுகள் தாமே. இந்நிலையில் எப்படி நீ கண்ணம்மா இவையெல்லாம் மூளைக்கு வெளியில் உள்ளன என்று தீர்மானமாக எண்ண முடியும். நாம் பார்ப்பது , கேட்பது, உணர்வது, இருப்பது எல்லாமே மூளையில் செயற்பாடுகளே. எம் மூளைக்கு வெளியில் எவையுமே இல்லை. ஒருவகையில் அவ்வகையில் எல்லாமே மாயையோ என்றும் ஒருவர் வாதிடலாம். இல்லையா கண்ணம்மா?"

இதற்கு மனோரஞ்சிதம் எதுவிதப் பதிலெதனையும் கூறாமல் சிந்தனையில் சிறிது நேரம் மூழ்கியிருந்தாள்.

அவளது மெளனத்தைக் கண்டு நானே தொடர்ந்தேன்.

"இரவில் காணும் விரிந்திருக்கும் வானில் தென்படும் சுடர்கள் ,கிரகங்கள் இவையெல்லாம் வெவ்வேறு ஒளியாண்டுத் தொலைவுகளிலுள்ளன. இங்கிருந்து வரும் ஒளி வெவ்வேறு காலகட்டங்களில் அங்கிருந்து நீங்கியவை. இப்பொழுதுதான் இங்கு வந்தடைந்திருந்க்கின்றன. சூரிய ஒளி  கூட எட்டு நிமிடங்களுக்கு முன்னர் புறப்பட்டதுதான். இப்பொழுது காண்கின்றோம். எனக்குத் தென்படும் நீ கூட உன்னிலிருந்து வரும் ஒளி மீதான என் மூளையின் செயற்பாடுதான். உன் குரல், உன் வடிவம் இவையனைத்துமே என் மூளையின் செயற்பாடுகளே."

'சரி கண்ணா,  அப்படியென்றால் வெளியில் இந்த உலகு, பிரபஞ்சம் விரிந்து கிடக்கின்றது உண்மைதானே. அவற்றை எம் மூளையின் செயற்பாடுகளாக நாம் கண்டாலும் அவையும் உண்மையாக வெளியில் இருக்கின்றனதானே."

"கண்ணம்மா, உன் அறிவை உண்மையில் பாராட்டுகின்றேன். உன் தர்க்கச்சிறப்பையும் கூடவே பாராட்டுகின்றேன். உன்னுடன் இவ்விதம் உரையாடுவதில் உண்மையிலுள்ளது உவகை."

" ஆ! உண்மையில் உள்ளது உவகை. என்ன வரியிது!"

"கண்ணம்மா, பாரதியாலும் காணும் இவ்வுலகு வெறும் மாயை என்று நிராகரிக்க முடியவில்லை. அதனால்தான் இப்பாடலின் இறுதியில் 'காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ? காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்' என்று இந்தக்காட்சி நித்தியமென்கினறார்."

"பாரதியாரின் முடிவுக்குத்தான் நீயும் வருகின்றாயா இல்லை எல்லாமே மூளையின் செயற்பாடு என்றே நீயும் நம்புகின்றாயா?"

"சில சமயங்களில் நான் நினைக்கின்றேன்..."

'என்ன நினைக்கின்றாய் கண்ணா?"

"இருப்பு பற்றிய இந்த விடயத்தில் என்னால் உறுதியான எந்தவொரு நிலைப்பாட்டையும் இதுவரைக்கும் எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. பார்ப்பது, இருப்பதாக நம்புவது, எல்லாமே எனக்குள் இருக்கும் ஒன்றா? எனக்கு வெளியில் இருப்பதை ஒருபோதுமே தர்க்கரீதியாக நிறுவ முடியாது. அப்படி நிறுவுவதற்கு என் மனத்தை விட்டு நான் வெளியேறி மனத்துக்கு வெளியில் செல்ல வேண்டும். அதுமட்டும் எம்மிருப்பில் நடைமுறைச் சாத்தியமில்லை. இந்நிலையில் எப்படி அவ்வளவு உறுதியாகக் கூற முடியும் வெளியில் உள்ளது உண்மைதானென்று."

"ஆப்படியென்றால் நானும் பொய்யா? உன்னுடன் இக்கணத்தில் உரையாடிக்கொண்டிருக்கின்றேனே அதுவும் பொய்யா?"

'ஏன் அப்படி இருக்கக் கூடாது கண்ணம்மா. நானே உருவாக்கிய உலகமாக, பிரபஞ்சமாக ஏன் காணபவையெல்லாம் இருக்கக் கூடாது."

"ஆப்படியென்றால் நீ யார் கண்ணா? நீயாவது இருக்கின்றாயா சொல் கண்ணா?'

இப்படியாக மனோரஞ்சிதமுக்கும் எனக்குமிடையிலான உரையாடல் மிகவும் சுவாரசியமாக, தத்துவார்த்த ரீதியில்  சென்று கொண்டிந்தது. மனோரஞ்சிதம் என் தேடலை நன்கு  உணர்ந்தவள்.  என்  ஞானத்தை நன்கு புரிந்துகொண்டவள்.

மனோரஞ்சிதமே தொடர்ந்தாள்:

"உண்மையான நான் உறங்கிக்கிடக்க ,
பொய்யான நான் பேயாட்டம் ஆடுகிறது
என்று அடிக்கடி காதில் விழுகின்றது.
இதில் உண்மையான நான் யார்?
பொய்யான நான் யார்?

பிறந்த பொழுது பெயரிட்டு, சீராட்டி,
பாராட்டி வளர்த்த இந்த உடம்பு நானா?
உயர் கல்வியும் பல் கலைகளும் கற்று
அருமையாய் பெருமையாய் வளர்ந்தது நானா?
அறிந்தோம் எனச் செருக்குற்றது நானா?

பக்தியிலே ஊறி மெய்மறந்து நிற்பது நானா?
திக்குத் தெரியாது திகைப்பது நானா?
எதையோதொலைத்தது போல் பரிதவிப்பது நானா?
இவையெல்லாம் பொய்யானால்
உண்மையான நான் யார்?"

"ரஞ்சிதம் அற்புதமாக உமது உணர்வுகளைக் கவிதையாக வெளிப்படுத்தியிருக்கின்றீர். வாழ்த்துகள்.   இதயத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட தேடலைப் பிரதிபலிக்கும் உணர்வுகள்.  தொடர்ந்து இது போல் சிந்தனையை எழுத்தில் வடிக்கவும். சிறப்பான கவிதைகள் பல பிறக்கும்."

"கண்ணா  உன் ஊக்கத்துக்கு நன்றி. உனதூக்கமே என்னையும் இவ்விதம் சிந்திக்க, எழுத வைக்கின்றது. எல்லாம் உன் தயவுதான்."

"ஆப்படி இலகுவாக உன் திறனைக்  குறைத்து மதிப்பிட முடியாது கண்ணம்மா. உனக்கு இயற்கையாகவே எழுத்தாற்றல் இருக்கிறது.  என் பதின்ம வயதுகளில் இப்படியொரு கவிதை நானும் எழுதியிருக்கின்றேன்.

சிந்தனையின் புயல்கள் வீசி
புழுதி பறக்கையிலே
அடிவயிற்றைக் கீறியொரு
திகில் ஊடுருவிச் செல்லும்.
ஆத்துமாவின் கேள்வியொன்று
சிரித்து நிற்கும்.
நானென்றால் நான் யார்?
நானென்றால் இவ்வுடலோ?
நானென்றாலுடலாயின்
சீழ்ப்பிடித்து நாறுகையில்
இந்த 'நானெ'ங்கே?
நானென்றால் உள்மனமோ?
அன்றி அம்மனத்தே விரவி
நிற்கும்
அவ்வுணர்வோ?
நானென்றாலுடலாயின்
நடையிழந்து, மொழியிழந்து
நிலைகுலைந்து போகையில்
இந்த 'நானெ'ங்கே?
காணுங்கனவெல்லாம்
கனன்றெரியும் சினமெல்லாம்
மெய்சிலிர்க்கும் மயக்கமெல்லாம்
உணர்வெல்லாம், உடலெல்லாம்
'நான்' தானோ?
வெறுமைகள் சிரிக்கும்]
என்னுடலுமோர்
அண்டம் தானோ?
அப்படியாயின்,

'நான்' நான் மட்டும்தானா?
நான் தான் பிரபஞ்சமோ?
பிரபஞ்சம் நான் தானோ?"

'வாவ்.. உனக்கு அந்த வயதிலேயே இவ்வித எண்ணங்கள் வந்திருப்பது ஆச்சரியத்தைத்  தருகிறது கண்ணா."

'எனக்கும்தான் கண்ணம்மா, உனக்கும் இவ்விடயங்களில் இவ்வித நாட்டங்களிருப்பது வியப்பையும், மகிழ்ச்சியையும் தருகின்றது."

"கத்தி முனையில் நடப்பது போல் இவ்வாழ்வு கண்ணா. எப்போதும் கவனம் வேண்டும் மனமே , சத் பொருளை பற்றிக் கொள், மித்தையை ஆராய்ந்து விலக்கு. நீண்டதோர் கனவென்று சொன்னார்கள் ஆமாம் உண்மை தானே. அழகழகாய் உருவங்கள் வான் வெளியில் மேகங்கள் எத்தனை கதை புனையும். அத்தனையும் பொய்யே. அதுபோலவே இந்த மானிட வாழ்வும்."

'சத் மித் பற்றியெல்லாம் இவ்வளவு விரிவாக அறிந்து வைத்திருக்கின்றீரே கண்ணம்மா. உண்மையில் எனக்கு இவ்வகையான ஆத்மீகக் கோட்பாடுகளிலெல்லாம் நாட்டமிருப்பதில்லை. காரணம் நான் எதனையும் அறிவியலூடு அணுகுபவன்."

மனோரஞ்சிதம் தொடர்ந்தாள்: "விஞ்ஞானமும், மெய்ஞானமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.  இறுதியில் ஒன்றைத்தான் இரு வேறு பார்வைகளில் அணுகுகின்றன என்றே கருதுவதுண்டு."

கண்ணம்மா,
உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?
நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்
உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று.உண்மையாக
நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.

ஆயிரம் மில்லியன் ஒளிவருடங்களிற்கு
அப்பாலிருந்து இருந்து வரும்ஒளிக்கதிர்களுக்கும்
உன்னிலிருந்து வரும் ஒளிக்கதிர்களுக்கும்
இடையிலென்ன வித்தியாசம் ?நேரத்தினைத் தவிர.

உனக்கும்எனக்குமிடையில்எப்பொழுதுமே ஒரு தூரம்
இருக்கத் தானே செய்கிறது. அது எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதிலும்.

எப்பொழுதுமே ஒரு நேரம் இருக்கத் தானே செய்கிறது
கணத்தினொரு சிறுபகுதியாக என்றாலும்.

நீ இருப்பதாக நீ சொல்லுவதைக் கூட
நான் அறிவதற்கும் புரிவதற்கும் எப்பொழுதுமே இங்கு
நேரமுண்டு. தூரமுமுண்டு கண்ணே!

காண்பதெதுவென்றாலும் கண்ணே! அதனை அப்பொழுதே
காண்பதற்கு வழியென்றுண்டா ?

காலத்தைக் கடந்தாலன்றி ஞாலத்தில் அது
நம்மால முடியாதன்றோ ?

தூரமென்று ஒன்று உள்ளவரை நேரமொன்று இங்கு
இருந்து தானே தீரும் ? அது எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதும்.

வெளிக்குள் காலத்திற்குள் கட்டுண்டதொரு இருப்பு
நம் இருப்பு கண்ணம்மா!

காலத்தினொரு கூறாய்
உன்னை நான் காண்பதெல்லாம் இங்கு
உன்னை நான் அறிவதெல்லாம்
மின்னலே! மின் பின்னியதொரு பின்னலா ?
உன்னிருப்பும் இங்கு மின் பின்னியதொரு
பின்னலா ? என் கண்ணே!
என் கண்ணம்மா!

[தொடரும்]

No comments:

வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளம் தந்த வான் பாய்தல் பற்றிய சிந்தனைகள்!

மாரியில் மழை பெய்து பட்டாணிச்சுப்புளியங்குளம் நிறைந்து வழிகையில் வான் பாயுமொலி இரவின் இருளை, அமைதியைத் துளைத்துக்கொண்டு கேட்கும். குருமண்காட...

பிரபலமான பதிவுகள்