Sunday, August 10, 2025

காலத்தால் அழியாத கானம் - ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?


கவிஞர் கண்ணதாசனின் சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. கவிஞரின்  எளிய, இனிய தமிழ் கேட்பவரைக் கிறங்க வைப்பது. இது போல் தெளிவான வசனங்களை உள்ளடக்கிய பாடல்களைத் தற்போது கேட்பது அரிது. மெல்லிசை மன்னர்களின் இசையில் , டி.எம்.எஸ் குரலில், எம்ஜிஆர் , ஜெயலலிதா நடிப்பில் ஒலிக்கும் பாடலை எத்தனை தரம் கேட்டாலும் அலுப்பதில்லை.
 
"ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ"
 
"ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு"
 
"உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு"
 
என் மனத்தைக் கவர்ந்த பாடல் வரிகள். சங்கப்பாடல்கள் பலவற்றில் ஊரெல்லாம் தூங்கையில் தூங்காமல் விழித்திருக்கும் பெண் ஒருத்தியின் உணர்வுகளைக் கவிஞர்கள் பலர் விபரித்திருப்பதைக் காணலாம். ஆனால் இங்கு கவிஞர் கண்ணதாசன் ஆணொருவனின் இவ்வித உணர்வுகளை விபரித்திருக்கின்றார். அதுவே சுவைக்கின்றது.
 
அதே சமயம் சங்ககாலப்பாடல்களில் பெண் தூங்காமல் விழித்திருப்பது காதலால், காதற் பிரிவால், பொருள் தேடித் தொலைதூரம் சென்று விட்ட தலைவனின் பிரிவால், ஆனால் இவனோ தன் மக்களின் விடுதலைக்காகப் போராடும் போராளி. தன் இலட்சியப் போராட்டத்தின் காரணமாக இரவில் விழித்திருப்பதும் இவன் வாழ்க்கையாகிப் போனது.  
 
'அழும் நிலவு' அற்புதமான படிமம். நிலவு அழுவதாக எவரும் எழுதி நான் வாசித்ததில்லை.
 
"பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு"
 
இதைவிட விடுதலைப் போராளி ஒருவனின் உணர்வுகளை எவ்விதம் விபரிப்பது?
நான் முதல் பார்த்த எம்ஜிஆர் , ஜெயலலிதா இணைந்து நடித்த படம் மட்டுமல்ல, அவர்களே இணைந்து நடித்த முதல் படமும் ஆயிரத்தில் ஒருவன்தான்.

நவ இந்தியாவின் குரலாக ஒலிக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் குரல்!


உலகப் பொருளாதாரத்தை உருட்டிச் செல்லும், பொருளாதாரரீதியில் வலிமை மிக்க நாடாக, உருமாறியிருக்கும் புதிய  இந்தியாவின் குரலாக ஒலிக்கிறது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் குரல்.

தற்போது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைக்குக் காரணங்கள் எவை என்பதை ஆராயும் காணொளி.



https://www.youtube.com/watch?v=iLFV8vyR3Tk

இந்தியாவின் வளர்ச்சி , இந்திய , அமேரிக்க உறவும் பற்றி, நன்கு அலசுமொரு காணொளி!


மாறி வரும் உலகில் , வளர்ந்து வரும் இந்தியாவின் நிலையை விளக்கும் தொழில் அதிபர்  எலன் மாஸ்க் ஆற்றுவது போன்ற உரையை வெளிப்படுத்தும் காணொளி.  யாரோ ஒருவர் செயற்கைத்  தொழில் நுட்பம் எலன் மஸ்க் உரையாற்றுவதுபோல் உருவாக்கியிருக்கும் காணொளி போலவே இந்தக் காணொளி  தென்படுகின்றது. ஆனால் தற்போது நிலவும் அரசியற் சூழலை நன்கு அலசும் காணொளி என்பதால் பகிர்ந்துகொள்கின்றேன்.

இந்தியாவின் வளர்ச்சி, தனித்துச் சுயாதீனமாக இயங்கும் நிலை இவையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்தியா மீதான வரி  அதிகரிப்புக்கு உண்மையான காரணம்.  

ஏனைய நாடுகளில் முன்பு போல் அமெரிக்காவால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.  குறிப்பாக இந்தியா அமெரிக்காவுடனான கூட்டுறவை விரும்பும் அதே சமயம் , அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட அதனால் முடியாது என்பதை உணர்ந்ததால் ஏற்பட்ட விரக்தியே ட்ரம்பின் இந்தியா பற்றிய நிலை மாறியதற்கு முக்கிய காரணம் என்பதை எடுத்துரைக்கும் காணொளி.

https://www.youtube.com/watch?v=4QSgjXvJBCM

Saturday, August 9, 2025

எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா ரங்கராஜனுடனான நேர்காணலொன்று!


அண்மையில் தற்செயலாக எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மனைவி சுஜாதா ரங்கராஜன் அவர்களின் நேர்காணலைப் பார்த்தேன். கேட்டேன். சுஜாதா ரங்கராஜன் அவர்களின் பாசாங்குத்தனமற்ற, நேர்மையான, சில சமயங்களில் அப்பாவித்தனமான பதில்கள் இந்நேர்காணலின் முக்கிய அம்சம்.

இந்நேர்காணல் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பன்முக ஆளுமையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள மிகவும் உதவியாகவிருக்கிறது என்பேன்.

இறுதியாகத் தன் கணவரைப்பற்றிக் கூறுகையில் அவர் சிறந்த மனிதர்,. சிறந்த எழுத்தாளர். சிறந்த கணவர் என்று வரிசைப்படுத்திக் கூறுவார் சுஜாதா ரங்கராஜன். அது இந்நேர்காணலின் உச்சம்.

இந்நேர்காணலின்போது திருமதி சுஜாதா முதுமையின் தாலாட்டில் இருப்பவர். காதல், வாழ்க்கை, இருப்பு பற்றிய இவரது சிந்தனைகள் முதிர்ச்சியானவை. இவரது பதில்களிலிருந்து நான் உணர்வது எழுத்தாளர் சுஜாதாவுக்கும் , இவருக்குமிடையில் நிலவிய காதலை. இருவருமே வெளிப்படையாக வெளிப்படுத்திக்கொள்ளாவிட்டாலும் , நிலவிய அந்தக் காதல்தான் அவர்களை ஒன்றாகப் பிணைத்து வைத்திருந்திருக்கின்றது. அந்தக் காதலே திருமதி சுஜாதாவைத் தன் கணவர் கலந்து கொள்ளும் இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் கூடவே செல்ல வைத்தது. இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து , இணைந்து வாழ்ந்திருக்கின்றார்கள். இன்று தன் கணவரை நினைவு கூர்கையில் கூட (அவரது அசட்டுத்தனங்களையும் உள்ளடக்கி) திருமதி சுஜாதாவால் மகிழ்ச்சியுடன் நினைவு கூர முடிகின்றது. தன் கணவரின் அசட்டுத்தனங்களை எண்ணி அவரால் சிரிக்க முடிகின்றது. அதற்குக் காரணம் அவரது ஆழ்மனத்தில் அவர் கணவர் மேல் அவர் கொண்டிருக்கும் காதல் என்றே நான் உணர்கின்றேன். 

Friday, August 8, 2025

கங்கை கொண்ட சோழபுரம்!


பிரயாணம்! சாகசம்! வரலாறு! என்பதன் அடிப்படையில் இயங்கும் யு டியூப் சானல் கர்ணனின் 'Tamil Navigation' சானல் ( https://www.youtube.com/watch?v=pq3_B_NoUoM ).  தமிழர்தம் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட பல காணொளிகளை உள்ளடக்கிய சானல்.  இக்காணொளியில் முதலாம் இராசேந்திரன் சோழன் கட்டிய 'கங்கை கொண்ட சோழபுரம்' ஆலயம் பற்றிய பல அரிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும். 


கங்கை கொண்டசோழபுரம் ஆலயம், அதிலுள்ள முக்கிய சிற்பங்கள், தாங்கு  தளம் (அதிட்டானம்) போன்ற கட்டடப் பகுதிகள், மன்னன் வெட்டிய சோழகங்கம் ஏரி (இப்பொழுது வறண்டு கிடக்கிறது), அவனது அரச மாளிகை இருந்த இடம் எனப் பல அரிய தகவல்களை உள்ளடக்கிய காணொளியைப் பார்ப்பது மகிழ்ச்சி தருவது. நீங்களும் ஒரு தடவை பாருங்கள்.

Tuesday, August 5, 2025

க.பாலேந்திராவின் இயக்கத்தில் 'ஒரு பாலை வீடு'


அவைக்காற்றுக் கழகத்தின் தயாரிப்பில் , நாடகவியலாளர் பாலேந்திராவின் இயக்கத்தில் வெளியான நாடகம் 'ஒரு பாலை வீடு'. இந்நாடகம் Federico García Lorca
 என்னும் ஸ்பானிய நாடகாசிரியரின் 'தி ஹவுஸ் ஆஃப் பேர்னார்டா அல்பா' (The House of Bernarda Alba ) என்னும் நாடகமே தமிழில் 'ஒரு பாலை வீடு' என்னும் பெயரில் மேடையேற்றப்பட்டது. மேடையேற்றியவர்கள் சுண்டுக்குளி பழைய மாணவியர் சங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Federico García Lorca ஒரு பாலினச் சேர்க்கையாளர். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் இடதுசாரிஅமைப்பான குடியரசுக் கட்சியினை ஆதரித்த இவரை வலது சாரிகளும், பாசிசவாதிகளுமான தேசியப் படையினர் படுகொலை செய்தனர் என்பது துயரகரமானது. இவரது உடல் கூடக் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்டபோது , அதனைப்பற்றிய சிறப்பானதொரு விமர்சனத்தை , சிரித்திரன் சஞ்சிகையின் வைகாசி 1979 இதழில் எழுதியிருக்கின்றார் ஆ.க.பராக்கிரமசிங்கம்.  நாடக இயக்கத்தை, அரங்கு அமைப்பை, நடிகர்களின் திறமையை  என அவற்றை விதந்து தனது விமர்சனத்தில் எழுதியிருக்கும் கட்டுரையாளர்,  தனது விமர்சனத்தின் இறுதியில் ஈழத்து நாடகத்துறையையிட்டு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும், அதற்காக பாலேதிராவையும், அவைக்காற்றுக் கழகத்தையும் பாராட்டியிருக்கின்றார்.

இந்நாடகம் பெர்ணார்டா அல்பா என்னும் பெண்மணியையும், அவரது திருமணமாகாத  ஐந்து பெண்கள் பற்றியும் வைத்துப்பின்னப்பட்ட நாடகம் 'ஒரு பாலை வீடு' என்பதையும், நாடகத்தின் தமிழாக்கத்தைச் செய்த நிர்மலா நித்தியானந்தனே , நாடகத்தின் பிரதான வேடமான பெர்னார்டோ அல்பா வேடத்தில் நடித்திருப்பதையும், அவரது கடைசிப் பெண்ணாக நிர்மலா நித்தியானந்தனின் கடைசித்தங்கையான சுமதி ராஜசிங்கம் நடித்திருப்பதையும் மேற்படி விமர்சனத்திலிருந்து அறிய முடிகின்றது. 

கலைஞர் சோக்கல்லோ சண்முகத்தின் முன்மாதிரியான, அர்ப்பணிப்புடன் கூடிய கலையுலக வாழ்க்கை!



அண்மையில் தனது தொண்ணூறாவது பிறந்த நாளைக் கொண்டாடிய கலைஞரும், எழுத்தாளருமான சோக்கல்லோ சண்முகநாதன் அவர்கள் முக்கியமான தமிழ்க் கலைஞர். வில்லுப்பாட்டும், நாடகம், எழுத்து, நடிப்பு எனப் பன்முகத்திறமை மிக்கவர். சிறந்த மரபுக்கவிஞரும் கூட. இவரது 'சோக்கல்லோ' நகைச்சுவைக் கதம்ப நிகச்சி மிகவும் புகழ்பெற்ற மேடை நாடகங்களிலொன்று. இலங்கையில் பல இடங்களில் 500 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்ட நாடகமிது. அதன் காரணமாகவே சோக்கல்லோ சண்முகம் என்றழைக்கப்பட்டவர். 

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...