Thursday, September 25, 2025

Wednesday, September 24, 2025

எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா மறைவு!


இந்திய இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் ஒருவர் கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா. அவர் மறைந்த செய்தினை இணையம் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல்.
 
அவரது நாவல்களான 'பருவம்' (மகாபாரதத்தின் மீதான மறுவாசிப்பு) , ஒரு குடும்பம் சிதைகிறது ஆகியவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. 
 

ஒரு குடும்பத்தின் சிதைவு நாவலைப் பின்வரும் இணையத்தள முகவரியில் வாசிக்கலாம் -https://abedheen.wordpress.com/wp-content/uploads/2012/12/orukudumbamsidhaigirathu.pdf
 
அவரது மறைவினையொட்டி எழுத்தாளர் ஜெயமோகனின் அஞ்சலிக்குறிப்பு சுருக்கமாக அவரது இலக்கியப் பங்களிப்பினை எடுத்துரைக்கின்றது. - https://www.jeyamohan.in/223213/
அவரது நினைவாக இவ்விணைப்புகளைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
 

 

கருத்து என்னுடையது! படம் , செயற்கை அறிவு (Google's Nano Banana) , உன்னுடையது!

கருத்து என்னுடையது! படம் , செயற்கை அறிவு (Google's Nano Banana) , உன்னுடையது

வ.ந.கிரிதரன்: "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்".

எழுத்தாளர் நடேசனின் பயணத்தொடர் _ பஹல்காம் (Pahalgam) நினைவுகள் பயணத்தொடர்



 - குதிரைகளில் நடேசனும், நண்பரும் -

பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் நடேசன் எழுதும் 'பஹல்காம் (Pahalgam) நினைவுகள்' பயணத் தொடரின் முதல் அத்தியாயம். 
 
இங்குள்ள புகைப்படம் பயணத்தில் அவரும், நண்பரும் குதிரைகளில் பயணிப்பதை வெளிக்காட்டும். நான் முதலில் அவற்றைக் கழுதைகள் என்று நினைத்து விட்டேன். போர் புரியப் பாவித்த தம்மை இப்படிக் கழுதைகளைப் போல் மானுடர் பொதி சுமக்கவும், பயணிகளைச் சுமக்க வைத்து வீட்டார்களே என்று குதிரைகளின் உளவியலும் கழுதைகளைப் போல் மாறி விட்டன போலும்!
 
இப்புகைப்படத்தில் கழுதைகளில் இருக்கும் மானுடர் இருவரும் வெளிப்படுத்தும் மகிழ்ச்சிகரமான உணர்வுகள் தன்னிச்சையானவை. என்னை மிகவும் இப்புகைப்படம் கவரக் காரணமானவை. 
 
இப்புகைப்படத்தில் காணப்படும் குதிரைகள் இரண்டும் வெளிப்படுத்தும் உணர்வுகளையும், மானுடர்கள் இருவரும் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் தெளிவாகக் காண முடிகின்றது. அவை 180 பாகை வித்தியாசத்தில் இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகின்றது. பாவம், குதிரைகளுக்குத் தெரியாது தம்மேல் இருப்பவர்களில் ஒருவர் இதுவரை மிருக வைத்தியராகவிருந்து ஓய்வு பெற்றவர் என்னும் விடயம். தெரிந்திருந்தால் 'இது முறையோ? இது தகுமோ?" என்று நடேசனிடம் அவை முறையிட்டிருக்கும்.
 
நடேசனின் பயணத்தொடர்கள் சுருக்கமான விபரிப்புகளுடன் கூடிய சுவையான பயணத்தொடர்கள். நான் விரும்பி வாசிப்பவை. அப்பகுதிகளுக்கு நானே சென்ற உணர்வைத்தருபவை. 
 
**************************************************************************** 
பயணத்தொடர் _ பஹல்காம் (Pahalgam) நினைவுகள் (1) - நடேசன். -
 
2025 சித்திரை 22, புதன்கிழமை
மதியத்துக்குப் பின்பாக , பஹல்காம் நகரின் மத்தியப் பகுதியில் வாகன நெரிசலில் நாங்கள் வந்த வாகனம் நத்தையைப் போல் மெதுவாக நகர்ந்தது. அச்சமயம், பாதையோரத்தில் ஒருவரின் குரலும் சைகைகளும் என் கவனத்தை ஈர்த்தன. உயரமான பெண் ஒருவர் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது வெள்ளைச் சட்டை, சேற்றில் உழுது வீடு வந்த விவசாயியின் தோற்றத்தை நினைவூட்டியது. அந்தக் காட்சி என்னுள் ஒரு கலவர உணர்வை உருவாக்கியது— இங்கு ஏதோ அசாதாரணமான ஒன்று நடந்திருக்க வேண்டும்.

Tuesday, September 23, 2025

தமிழக அரசியல் ஒரு பார்வை!


எம்ஜிஆர் வேறு திமுக வேறு அல்ல என்னும் வகையில் தன் திரைப்படங்களில்  திமுகவுக்காக எம்ஜிஆர் பிர்ச்சாரம் செய்து  வ்ந்தார். திமுகவின் சின்னமான உதயசூரியன், அதன் கொடி வர்ணங்களை மிகவும் திறமையாக அவர் தன் படங்களில் உள்ளடக்கியதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் திமுகவை எடுத்துச் சென்றார். தவிர அவரது வசீகரம் மிக்க ஆளுமை, திரைப்படக்கதாபாத்திரத்தின் ஆளுமைப்பண்பு, அவரது ஈகைச் செயற்பாடுகள், ஆரோக்கியமான கருத்துகளை விதைக்கும் பாடல்கள், இவை தவிர தமிழர் வரலாற்றுடன் , கலைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கும் காதல், வீரம், அறம் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அவரது திரைப்படங்கள் இவையெல்லாம் எம்ஜிரை மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்தன. 

இவ்வாறானதொரு நிலையில் எம்ஜிஆர் சுடப்பட்டபோது மக்கள் அதிர்ச்சி அடைந்ததைப்போல், எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலக்கப்பட்டபோதும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஏனென்றால் மக்களைப்பொறுத்தவரையில் எம்ஜிஆர் வேறு திமுக வேறு அல்ல. எம்ஜிஆரை விலக்கியதானது அவருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றே மக்கள் கருதினார்கள். அதனால் எம்ஜிஆர் மீது அநுதாபம் பொங்கியெழுந்தது. அந்த அநுதாபமும், அவர் மீதான தனிப்பட்ட விருப்பமும் இணையவே அவருக்கு வெற்றி இலகுவானது. அவர் இருந்தவரை மக்கள் அவரையே ஆட்சிக்கட்டில் இருத்தினார்கள்.

Sunday, September 21, 2025

கலை, இலக்கியத் திறனாய்வாளர் எனக்கெழுதிய கடிதமொன்று - கொழும்புத் தமிழ் நாடகங்களைப்பற்றிய எனது நினைவுகள் ! கே.எஸ்.சிவகுமாரன் -

- கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் -

இது கலை, இலக்கிய விமர்சகர் அமரர் கே.எஸ்.சிவகுமாரன் எனக்கு எழுதிய கடிதங்களிலொன்று. இதில் அவர் கொழும்பில் மேடையேறிய தமிழ், சிங்கள, ஆங்கில நாடகங்கள் பற்றியும், .நாடகத்துறையில் ஈடுபட்டிருந்தவர்கள், பற்றியும்  அத்துறைக்கான தனது பங்களிப்பு பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.  கே.எஸ்.சிவகுமாரனின் நினைவு தினம் செப்டெம்பர் 15. அதனையொட்டி இக்கடிதத்தைப் பகிர்ந்துகொள்கின்றேன். - வ.ந.கிரிதரன் -

கலை, இலக்கியத் திறனாய்வாளர் எனக்கெழுதிய  கடிதமொன்று -  கொழும்புத் தமிழ் நாடகங்களைப்பற்றிய எனது நினைவுகள் !  கே.எஸ்.சிவகுமாரன் - 

1960களிலும் 1970களிலும், நான் தீவிரமான நாடக விமர்சகராக இருந்தேன். கொழும்பு வடக்கில் நடந்த சினிமா-நாடகங்களையும், இராஜரத்தினத்தின் கொழும்பு தெற்குப் பகுதி நகைச்சுவை நாடகங்களையும் பார்த்திருந்தேன். தினகரன் வாரமஞ்சரியில் “மனத்திரை” என்ற தலைப்பில் நான் ஒரு காலம் கட்டுரை எழுதியேன். “தமிழ் நாடகம்” என்ற பெயரில் நடந்த சிரிப்பூட்டும் விளக்கங்களை நான் விமர்சித்தேன். காரணம் என்னவென்றால், நான் ஆங்கிலத்தில் நாடகம் மற்றும் அரங்கக் கலை பற்றிய பல நூல்கள் படித்திருந்தேன். அவற்றின் மூலம் நாம் பார்த்திருந்தவை பெரும்பாலும் இந்தியத் தமிழ் திரைப்படக் காட்சிகளை மேடையில் மீண்டும் உருவாக்குதல் அல்லது யாழ்ப்பாணச் சொற்கள் கலந்த நகைச்சுவைகளை மட்டுமே கொண்டிருந்தன என்பதைப் புரிந்தேன். 1953 அல்லது 1954-ல் TKS சகோதரர்கள் கொழும்புக்கு வந்து ஒரு தொழில்முறை நாடக நிகழ்ச்சி நடத்தினர். அவர்களது நிகழ்ச்சியில் நாடகத்தன்மையின் சுவடு காணப்பட்டது. இலங்கைத் தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படும் சோணலிங்கத்தின் ஓரிர்ண்டு  நாடகங்களையும் நான் பார்த்தேன்.

1961 அல்லது 1962-இல் மறைந்த எழுத்தாளர், மார்க்சிய சிந்தனையாளர் .அ.ந.  கந்தசாமி எழுதிய மதமாறம் என்னும் நாடகத்தைப் பார்த்தேன். அது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது முற்றிலும் வேறுவிதமான அனுபவமாக இருந்தது. ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் நாடகத்தைப் போல. சிந்திக்கத் தூண்டும், ஆழமான நாடகமாக இருந்தது. அதற்கான விமர்சனத்தை நான் அப்போது Tribune இதழில் எழுதினேன் (இப்போது டிரிபியூன் வெளிவருவதில்லை).

குந்தவையின் 'மாயை'

- எழுத்தாளர் குந்தவை -

[ குந்தவை - டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்பம் - இரமணிதரன் கந்தையா.]

சுதந்திரன் பத்திரிகையின் , 1967  ஜனவரி வெளியான பொங்கல் மலருக்கான சிறுகதைப் போட்டிக்காக எழுத்தாளர்  குந்தவை சிறுகதை அனுப்பிப்  பாராட்டினைப்பெற்ற சிறுகதையாக , 24.2. 1967 இல் வெளியான சுதந்திரனில் பிரசுரமான சிறுகதை  'மாயை'.  வித்தியாசமான சிறுகதை  கதையின் நாயகி  புனிதம் பேராதனைப்  பல்கலைக்கழகக் கலைப்ப்பிட  மாணவி. அவள் தன் தோழிகள் இருவருடன் பொல்காவகைத் தொடருந்து நிலையத்தில் , காத்திருந்து  யாழ் மெயில் தொடருந்தில் ஏறுகின்றாள்.  அவளது தோழிகளில் ஒருத்தியின் பெயர்  மாயா. அப்புகைவண்டியில்  இன்னுமோர் இளைஞன் வந்து அவர்களுடன் இணைகின்றான். அவனை மாயா தம்பி என்று கூறுகின்றாள். அவன்  மாயாவுக்கும் , அவளுக்கு அருகில் தள்ளியிருந்த மனிதனுக்குமிடையில் அமர்கின்றான். 

புனிதம் தூக்கக் கலக்கத்தில் மாயாவையும், அவளருகில் வந்தமர்ந்த இளைஞனையும் அவதானிக்கின்றாள். அவர்கள் இருவரும் அக்கா தம்பி  போல் நடப்பதாகத் தெரியவில்லை என்றுணர்கின்றாள்.  உண்மையில் அவ்விதம்தான் அவர்கள் நடந்த்துகொண்டார்களா அல்லது புனிதம்தான் அவ்விதம் தூக்கக்கலக்கத்தில் உணர்கின்றாளா என்பதை உறுதியாகத் தீர்மானிக்க முடியாத வகையில் குந்தவையின் எழுத்து மிகவும் நுட்பமாகப் பின்னப்பட்டிருக்கின்றது.

இறுதியில்  இன்னுமொரு சந்தர்ப்பத்தில் மாயா இன்னுமொர் இளைஞனுடன் வருகின்றாள். அவனே மாயாவை  மணம் பிடிக்க இருப்பவன் என்று அவளது தோழி கூறுகின்றாள். புனிதத்துக்கு அதிர்ச்சியாகவிருக்கின்றது.அவளது மனத்திரையில் மாயாவுக்கும், தம்பி என்ற வந்திருந்தவனுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய எண்ணங்கள் ஓடுகின்றன. அதே சமயம் மாயாவின் தம்பியாக முன்பு அறியப்பட்டவன் , மாயா திருமணம் செய்யப்போகின்றவனின் இளைய சகோதரன்.

புனிதம் மாயாவையும், அவளது தம்பியாக வந்தவனையும் நினைத்துப்பார்க்கிறாள். அவர்களுக்கிடையில் உணமையில் நிலவிய தொடர்புதானென்ன?  தன் தம்பிக்கும், மனைவிக்குமிடையில் நிலவும் உறவு பற்றி  , தம்பியாக வந்த இளைஞன் பற்றிய உண்மை தெரிந்தால் என்ன நடக்கும்?  அவ்விதம் தெரியும்போது அவன் தன் தம்பியையும்,மாயாவையும் கொன்று விடுவானா? ஆனால், மாயா துணிச்சல் மிக்கவள்.  அவள் மீண்டுமொரு கோகிலாம்பாள் ஆகி விடுவாளோ? இவ்விதமான சிந்தனையோட்டம் புனிதத்தின் மனத்தினில் ஓடுகின்றது.

இறுதியில் கற்பனை பலூன் வெடிக்கின்றது என்னுமொரு வரி வருகின்றது. அதைத்தொடர்ந்து 'நான் கமலாவுடன் நடந்து கொண்டிருக்கின்றேன்' என்று புனிதா கூறுவதுடன் கதை முடிகின்றது. கதை முழுவதுமே புனிதாவின் தன் கூற்றாகவே நடைபோடுகின்றது.

உண்மையில் மாயா தனக்குக் கணவனாக வர இருப்பவனின் தம்பியுடனும் பாலியல்ரீதியிலான தொடர்பு வைத்திருக்கின்றாளா?  என்னும் கேள்வி புனிதாவுக்கு எழுகின்றது. கதையை வாசிக்கும் வாசகர்களுக்கும் எழுகின்றது. உண்மையில் மாயா பற்றிய புனிதாவின் மனச்சித்திரம் அவளது கற்பனையா?  உண்மை போல் தெரிவதெல்லாம் மாயைதானா?  இவ்விதமான கேள்விகளை வாசகர்களிடம் எழுப்பித் தீர்வினை அவர்களே கண்டுகொள்ளட்டும் என்று கதாசிரியை குந்தவை விட்டு விட்டதாகவே உணர முடிகின்றது. என்னைப்பொறுத்தவரையில் மாயா பற்றிய புனிதாவின் எண்ணங்கள் அவளது உள்ளத்துக் கற்பனைச் சித்திரங்கள். உண்மைபோல் தெரியும் மாயச்சித்திரங்கள். இது நான் வந்திருக்கும் முடிவு. அதற்காக நீங்களும் இவ்விதமானதொரு முடிவுக்கு வரவேண்டுமென்னும் அவசியமில்லை.

சிறுகதையை வாசிக்க - https://noolaham.net/project/436/43524/43524.pdf

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...