Wednesday, June 2, 2021

அறிந்து கொள்வோம்: கேலிச்சித்திரக்காரர் அவந்த ஆர்டிகல (Awantha Artigala)! - வ.ந.கிரிதரன் -

இலங்கையின் முக்கிய கேலிச்சித்திரக்காரர் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் அவந்த ஆர்டிகலா.  'டெய்லி மிரர்', 'அத்த' ஆகிய பத்திரிகைகளில் வெளியாகும் அவரது கேலிச்சித்திரங்கள் தனித்துவமானவை. முக்கியமானவை. மிகுந்த வரவேற்பைப்பெற்றவை. சமூக,அரசியல் நிகழ்வுகளை படைப்புத்திறமையுடன், சமுதாயப்பிரக்ஞையுடன் விமர்சிப்பவை.

இலங்கை பல கேலிச்சித்திரக்காரர்களைக் கண்டுள்ளது. விஜேரூபகே விஜேசோமா (.Wijerupage Wijesoma)  அவர்களில் புகழ்பெற்ற கேலிச்சித்திரக்காரர். அவரது கேலிசித்திரமே அவந்தா ஆட்டிகல முதன் முறையாக , அவர் சிறுவனாகவிருந்த சமயம் எதிர்கொண்ட கேலிச்சித்திரம்.

நிறைய வாசியுங்கள்! நிறைய சிந்தியுங்கள்! நிறைய எழுதுங்கள்! - வ.ந.கிரிதரன் -

பிரபல கலை,இலக்கிய விமர்சகர் இந்திரன் எழுத்தாளர் சு.ரா.வின் பின்வரும் கூற்றினைத் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்:

"நல்ல எழுத்தாளர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். மோசமான எழுத்தாளர்கள் சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். - --சுந்தர ராமசாமி"

டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, ஜெயகாந்தன், பஷீர், தகழி, ஜானகிராமன், புதுமைப்பித்தன், பாரதியார்..  தனது குறுகிய கால வாழ்வில் இவர்களைப்போல் பலர் நிறைய எழுதியவர்கள். ஜெயமோகன் போன்றவர்கள் நிறைய எழுகின்றவர்கள். சுந்தர  ராமசாமியே சுறுசுறுப்பாய் இயங்கிவர்தான். நிறைய எழுதியவர்தான். எனவே சு.ரா.வின் கூற்றைப் பொதுவானதொரு கூற்றாக எடுக்க முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இவ்விதம் கூறுவது சிலருக்கு வாடிக்கை.  என்னைப்பொறுத்தவரையில்  உண்மையான எழுத்தாளர் பாரதியைப்போல் நிறைய வாசிப்பவர்; நிறைய எழுதுபவர்; நிறைய  சிந்திப்பவர்.  அருந்ததி ராயைப்போல் , மெளனியைப்போன்றவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் அரிதானவர்கள்.

சூழல்களை மீறியவர்கள்! - வ.ந.கிரிதரன் -

கார்ல் மார்க்ஸ் வறுமையில் வாடியபோதுதான் மூலதனத்தை எழுதினார். அவரது குழந்தையொன்று இறந்தபோது  கூட வறுமை  அவரை வாட்டியது. இருந்தும் எழுதினார். மூலதனத்தை உலகுக்கு வழங்கினார்.  புகழ் பெற்ற 'முத்து' போன்ற நாவல்களை எழுதி, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜோன் ஸ்டீன்பெக் வறுமையில் வாடியவர்தான். சார்ள்ஸ் டிக்கன்ஸ் குடும்ப வறுமை காரணமாகப் படிப்பை நிறுத்திப் பல்வேறு வேலைகளைச் செய்தார். மார்க்சிம் கோர்க்கியின் நிலையும் இதுதான். எழுத்தாளர் ப.சிங்காரம் தமிழகத்தில் சிங்கார வாழ்க்கை வாழவில்லை. தான் வாழ்ந்த வாழ்க்கைக்குள் இருந்தவாறே அவரது புகழ்பெற்ற நாவல்களை எழுதினார்.   இலங்கையில் கூட வாழ்க்கை முழுவதும் வறுமையில் வாடிய நிலையில்தான் எழுத்தாளர் அ.செ.முருகானந்தன் எழுதிக்கொண்டிருந்தார். இறுதியில் வறுமை அல்ல முதுமைதான் அதனை நிறுத்தியது. புதுமைப்பித்தனை வறுமை வாட்டியது. இறுதி வரை எழுதிக்கொண்டேயிருந்தார். அவர் அனுபவித்த வறுமையினை அனைவரும் அறிவர். அவ்வறுமையின் மத்தியிலும் அவர் எழுதியவை, மொழிபெயர்த்தவை வியக்க வைப்பவை. விந்தனையும் வறுமை விட்டு விடவில்லை. ஆனால் அது அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. மகாகவி பாரதியாரையும் வறுமை விட்டு வைக்கவில்லை. கூடவே அரசியல்ரீதியிலான நெருக்கடிகள். இவற்றுக்கு மத்தியில்தான் அவர் எழுதிக்குவித்தார். அதுவும் அவர் வாழ்ந்ததோ முப்பத்தொன்பது ஆண்டுகள்தாம்.

பால்ய பருவத்து நண்பர்களின் துயரம்! - வ.ந.கிரிதரன் -

என் பால்ய , பதின்ம பருவத்துத் தோழர்களில் முக்கியமான இருவரை என்னால் மறக்க முடியாது. அவர்களுடன் என்னால் முடிந்த வரையில் நான் தொடர்பிலிருந்தேன். ஒருவர் என் சிந்தனையாற்றலை வளர்ப்பதற்கு உதவினார். அடுத்தவரோ என்னை எழுதுவதற்கு ஊக்குவித்தார். நான் எழுதுவதற்கு அவர் மிகவும் உதவியாகவிருந்தார். அவர் தந்த ஊக்கமே என்னை மேலும் மேலும் எழுத வைத்தது.  என் பால்ய பருவத்திலிருந்து பதின்ம மற்றும் இளமைப்பருவங்களிலும் அவர் என்னை ஊக்குவித்துக் கொண்டேயிருந்தார். இவர்கள் இருவரையும் என்னால் ஒரு போதுமே மறக்க முடியாது. என் வாழ்நாள் முழுவதும் என் நினைவுகளில் இவர்கள் நிறைந்தேயிருப்பார்கள்.

இவர்களுடன் களிப்புடன் கழித்த நாட்களை நான் அடிக்கடி எண்ணிப்பார்ப்பதுண்டு. மறக்க முடியாத இன்பம் மிக்க நாட்கள் அவை. இவர்களுடன் கழித்த பொழுதுகள் இனியவை.

கவிதை: ஆனை பார்த்தவர்! - வ.ந.கிரிதரன் -


 
சொன்னார் நண்பர்
"சொல்லப்படாதவரிவர்" என்று.
அதற்கு நான் கூறினேன்
"ஆனை பார்த்த குருடர்களிடம்
அதற்கு விளக்கம் கேட்டிருக்கின்றீர்கள்.
அதனால்தானிந்த குழப்பம்"என்று.
"குழப்பமா? என்ன குழப்பம்?"
என்று தலையில் கை வைத்தார் நண்பர்.
"சொல்லப்படாதவர் பற்றிச் சொல்லியிருக்கின்றீர்களே"
"சொல்லியிருக்கின்றேன் சொல்லப்படாதவர் பற்றி.
ஆமாம்! நீங்கள் சொல்லுவது சரியே"
சொன்னார் பதிலுக்கு அவர்.
"அதுதான் கூறினேன் குழப்பமென்று" என்றேன்.
அதற்கும் அவர் "புரியவில்லை" என்று
மீண்டும் தலையில் கை வைத்தார்.

Tuesday, May 25, 2021

வண்ணநிலவனும் , கி.ராஜநாராயணனும்! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் வண்ணநிலவன் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்குக் கிடைத்த தமிழக அரசின் அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதை சிறிது அதிகமென்று கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் கி.ராஜநாராயணின் படைப்புகள் எவையும் ஞானப்பீட விருது பெறும் தகுதி உள்ளவை அல்ல என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வண்ணநிலவனின் மேற்படி கூற்று சிறிது ஏமாற்றத்தினை அளிக்கின்றது. . அவ்விதம் அவர் கூறுவது அவரது உரிமை. ஆனால் அவ்விதம் அவர் கூறிய தருணம் உரிய தருணமல்ல. என்னைப்பொறுத்தவரையில் தமிழ் எழுத்தாளர்கள் இருவருக்குத்தான் இதுவரையில் அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதை கிடைத்துள்ளது. எழுத்தாளர் பிரபஞ்சனுக்குப் புதுவை அரசு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குக்களை நடத்தியது. தற்போது தமிழக அரசு எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதையினை நடாத்தியுள்ளது.

Monday, May 24, 2021

கவிதை: ஒட்டகங்களை விட.. வ.ந.கிரிதரன் -


ஒட்டகங்கள் பாலைகளைக் கண்டு
துவண்டு விடுவதில்லை;
தளர்வதில்லை.
வீசும் மணற்காற்றுகளைக் கண்டு
அஞ்சுவதில்லை.
நீர் தேக்கி, நீண்ட தொலைவுகளை நாடிப்
பயணிப்பதில் அதிக பிரியம் கொண்டவை
அவை.
உளப்புயல்கள் வீசியடிக்கையிலெல்லாம்,
நினைவுச் சுழல்களுக்குள் சிக்கும்போதெல்லாம்,
அகக்கடலில் படகுகளையிழந்து
நீச்சலடிக்கையிலெல்லாம்
நான் ஒட்டகங்களை நினைப்பதுண்டு.
ஒட்டகங்களைப்போல் நானிருக்க வேண்டுமென்று
நினைப்பதுண்டு.
எவை கண்டும் தளராத
அவை பற்றி அவ்வேளைகளில் சிந்திப்பதுண்டு.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...