Sunday, July 2, 2023

(பதிவுகள்.காம்) எழுத்தாளர் பாவண்ணனுடன் ஒரு நேர்காணல்: "கருணையும் மனிதாபிமானமும் வாழ்க்கையின் ஆதாரத்தளங்கள் என்பது என் அழுத்தமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையையே வெவ்வேறு பின்னணியில் வெவ்வேறு மனிதர்கள் வழியாக வெளிப்படுத்தி வந்திருக்கிறேன். அதுவே என் எழுத்தின் வழி." - பாவண்ணன் - நேர்காணல் கண்டவர் எழுத்தாளரும், 'பதிவுகள்' இணைய இதழ் ஆசிரியருமான வ.ந.கிரிதரன்!


- தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் பாவண்ணனின் பங்களிப்பு முக்கியமானது.  சிறுகதை, கவிதை, நாவல், இலக்கியத் திறனாய்வு மற்றும் மொழிபெயர்ப்பு என இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகப்பட்டது. மொழிபெயர்ப்புக்காக இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமியின் விருது பெற்றவர்.  தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (கனடா)  2022 ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனைக்கான இயல்  விருது  பெற்றவர். விளக்கு அமைப்பின் வாழ்நாள் சாதனைக்கான புதுமைப்பித்தன் விருது பெற்றவர். புதுச்சேரி அரசின், இலக்கியச் சிந்தனையின் சிறந்த நாவல் விருது பெற்றவர். இவை தவிர மேலும் பல இலக்கிய விருதுகளைச் சிறுகதை, கட்டுரை, குழந்தை இலக்கியத்துக்காகப் பெற்றவர். பாவண்ணன் பதிவுகள் இணைய இதழுக்கு வழங்கிய நேர்காணல் இது.  -

வணக்கம் பாவண்ணன், முதலில் உங்களுக்கு இயல்விருது 2022 வாழ்நாள் இலக்கியச் சாதனைக்காகக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியும் , வாழ்த்துகளும். உங்களது இலக்கியச் செயற்பாடுகளை அனைவரும் அறிந்திருக்கின்றோம். பதிவுகள் இணைய இதழிலும் உங்களது நெடுங்கதையான 'போர்க்களம்' வெளியாகியுள்ளதை இத்தருணத்தில் நினைவு கூர்கின்றோம். முதலில் உங்கள் இளமைக்கால அனுபவங்களை, பிறந்த ஊர் போன்ற விபரங்களை அறிய ஆவலாகவுள்ளோம். அவை பற்றிய உங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

வணக்கம். உங்கள் வாழ்த்து மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக்க நன்றி. பதிவுகள் இணைய இதழில் எழுதிய பழைய நினைவுகளும் உங்களோடு பகிர்ந்துகொண்ட மின்னஞ்சல்களின் நினைவுகளும் பசுமையாக என் ஆழ்மனத்தில் பதிந்துள்ளன. அவற்றை ஒருபோதும் மறக்கமாட்டேன். தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த வளவனூர் என்னும் கிராமமே எனக்குச் சொந்த ஊர். விழுப்புரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையில் இக்கிராமம் இருக்கிறது. தொடக்கப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளிப்படிப்பு வரை வளவனூரிலேயே படித்தேன். பிறகு புகுமுக வகுப்பை விழுப்புரம் அரசு கல்லூரியிலும் பட்டப்படிப்பை புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியிலும் படித்தேன். என் ஆசிரியர்களே எனக்குச் சிறந்த வழிகாட்டிகளாக இருந்தார்கள். வளவனூர் மிக அழகான கிராமம். மொத்த ஊரே நாலு சதுரகிலோமீட்டருக்குள் அடங்கிவிடும். கிராமத்தைச் சுற்றியுள்ள பல சிற்றூர்களுக்கு பாசன வசதியைக் கொடுக்கும் அளவுக்கு பெரியதொரு ஏரி இருக்கிறது. தென்பெண்ணை ஆற்றோடு ஏரியை இணைக்கும் நீண்ட கால்வாயும் உண்டு. கோடைக்காலத்தில் வறண்டிருந்தாலும் மழைக்காலத்தில் ஏரி நிரம்பி வழியும். அப்போது பலவிதமான பறவைகளை ஏரியைச் சுற்றியுள்ள மரங்களில் அமர்ந்திருக்கும் அழகைப் பார்க்கமுடியும். எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் விரிவான நிலப்பரப்பைக் கொண்ட இடம். ஒரு பெரிய தோப்புக்குள் கட்டப்பட்ட வீட்டைப்போல அக்காலத்தில் இருக்கும். ஆலமரங்கள், அரசமரங்கள், நாவல் மரங்கள், இலுப்பைமரங்கள், நுணா மரங்கள் என எல்லா வகை மரங்களும் நிறைந்திருக்கும். அந்த மரங்களின் நிழலில்தான் நானும் என் நண்பர்களும் இளமைக்காலத்தில் ஆட்டமாடிக் களித்தோம். திசைக்கொரு கோவில், அழகான கிளை நூலகம், கட்சி சார்ந்த வாசக சாலைகள் எல்லாமே வளவனூரில் இருந்தன. அந்தக் கிராமத்தில் நான் கழித்த இளமைக்காலப் பொழுதுகள் இன்னும் என் நினைவில் பசுமையாகப் பதிந்துள்ளன. இன்றும் தேவைப்படும்போதெல்லாம் அந்த அனுபவங்களின் சுரங்கத்திலிருந்து ஒரு சிலவற்றை என் படைப்புகளில் பயன்படுத்திக்கொள்கிறேன்.

Friday, June 16, 2023

விரைவில் வெளியாகவுள்ள வ.ந.கிரிதரனின் நாவல்: நவீன விக்கிரமாதித்தன்

தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள எனது புதிய நாவல் 'நவீன விக்கிரமாதித்தன்'

 
 
 நாவலிலிருந்து ஓர் அத்தியாயம்
அத்தியாயம் நான்கு: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?

'கண்ணம்மா' என்றேன். மனோரஞ்சிதம் பெருங்காதலுடன் திரும்பிப் பார்த்தாள். கண்ணம்மா என்று நான் அழைப்பதைப் பெரிதும் விரும்புபவள். அச்சமயங்களிலெல்லாம் பதிலுக்குக் 'கண்ணா' என்று என்னை அன்பூற மென்மையாக அழைப்பாள். அந்த அன்பு குழைந்த அவளது அழைப்பைக் கேட்பதற்காகவே அவளை நான் கண்ணம்மா என்று விளிப்பதுண்டு. என்னைப்பொறுத்தவரையில் இவ்விருப்புன் அற்புதமாக அவளை நான் காண்பதுண்டு. அவளற்ற இருப்பை கற்பனை செய்வதே எனக்கு மிகவும் சிரமமானது.

'என்ன கண்ணா மெளனமாகிவிட்டாய்?" என்றாள் அவள்.

'எல்லாம் நம் இருப்பு பற்றிய சிந்தனைதான் கண்ணம்மா"

'இருப்பு பற்றி.. வழக்கம்போல் தத்துவவிசாரம்தானா கண்ணா'

'கண்ணம்மா உனக்குத்தானே எனக்கு பாரதி பாடல்கள் பிடிக்குமென்று தெரியும். எனக்குப் பிடித்த அவரது பாட்டைக் கூறு பார்க்கலாம்."

'கண்ணை மூடிக்கொண்டு கூறுவேன் கண்ணா. 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே பாடல்தானே'

'சரியாகவே கூறினாய் கண்ணம்மா. நீ என் மனத்தை நன்றாகவே  புரிந்து வைத்திருக்கிறாயடி.'

'இந்தக்கவிதை எனக்கும் பிடித்தது கண்ணா. அதற்குக் காரணமே இருப்பு பற்றிய கவிஞரின் கேள்விகளே."

'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?  ஒரு விதத்தில் தர்க்கரீதியாகப் பார்க்கப்போனால் இதுகூடச் சரிதானென்று வாதிடலாம். இல்லையா கண்ணம்மா?'

"எப்படி கண்ணா? எமக்கு வெளியே விரிந்து கிடக்கின்றது நாம் காணும் இப்பிரபஞ்சம். இவ்வுலகம். இப்புற உலகு மாயை என்று எப்படிக் கூறுவது கண்ணா?'

"கண்ணம்மா, நாம் காணும் இந்த உலகம், இப்பிரபஞ்சம் , இவ்வழகிய இயற்கைக் காட்சிகள் இவையெல்லாமே இறுதியாக என் மூளையின் விளைவுகள் தானே. காட்சிகள் மூளையில் நிகழும் மின்னியற் செயற்பாடுகளின் மின்னியல் விளைவுகள் தாமே. மின்னியற்  துடிப்புகள் தாமே. இறுதி விளைவாக நாம் உணர்வது, அறிவது எல்லாமே மூளையின் செயற்பாடுகள் தாமே. இந்நிலையில் எப்படி நீ கண்ணம்மா இவையெல்லாம் மூளைக்கு வெளியில் உள்ளன என்று தீர்மானமாக எண்ண முடியும். நாம் பார்ப்பது , கேட்பது, உணர்வது, இருப்பது எல்லாமே மூளையில் செயற்பாடுகளே. எம் மூளைக்கு வெளியில் எவையுமே இல்லை. ஒருவகையில் அவ்வகையில் எல்லாமே மாயையோ என்றும் ஒருவர் வாதிடலாம். இல்லையா கண்ணம்மா?"

இதற்கு மனோரஞ்சிதம் எதுவிதப் பதிலெதனையும் கூறாமல் சிந்தனையில் சிறிது நேரம் மூழ்கியிருந்தாள்.

விரைவில் வெளிவரவுள்ள நூல்: வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்'

விரைவில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவரவுள்ள எனது கவிதைத்தொகுதி 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்'. காலச்சுவடு பதிப்பகத்தின் சிறப்பான வடிவமைப்பில் வெளியாகும் தொகுப்பு.


தொகுப்பிலுள்ள மூன்று கவிதைகள்

குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
வியாபாரியல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன்..
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
ஆனால் அவை நொண்டிக்குதிரைகளல்ல.
என்னிடமுள்ள குதிரைகள் அனைத்துமே
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்பபதில்லை.
நான் நொண்டிக்குதிரைகளை வளர்ப்பவனோ,
விற்பவனோ அல்லன்.
இருந்தும் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை
அதிகமாகிவிட்டது.
குதிரைத் திருடர்களே! கவனம்.
திருடிய குதிரைகளை வெகு சாமர்த்தியமாக
உங்கள் மந்தையில் கலந்து
விடுவதில் பலே கில்லாடிகள் நீங்கள்.
என்னிடம் நீங்கள் திருடிய அல்லது
திருடப் போகும் குதிரைகள்
நிச்சயம் நொண்டிக்குதிரைகளல்ல.
ஆனால் அவை நல்லவை.
வல்லவையும் கூடத்தான்.
ஆனால் அவை முரட்டுக் குதிரைகள்.
முட்டி மோதவும் தயங்காத
முரட்டுக் குதிரைகள்.

Tuesday, March 28, 2023

அத்தியாயம் இருபத்திமூன்று - நான் மீண்டும் விக்கிரமாதித்தன் பேசுகின்றேன்! - வ.ந.கிரிதரன் -

இதுவரை இங்கு நான் கூறியவற்றிலிருந்து நிச்சயம் நீங்கள் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனைப்பற்றிச் சிறிதளவாவது அறிந்திருப்பீர்கள் என்று நிச்சயமாக நிம்புகின்றேன். ஏற்கனவே நான் கூறியதுபோல் நவீன ஓவியப்பாணியான கியூபிசப் பாணியில் உருவங்கள் அவை எவையாயினும் அவை உருவாக்கப்பட்ட கேத்திரகணித வடிவங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்படும். உணரப்படும். அவ்வடிவங்களிலிருந்து உருவங்கள் உய்த்துணரப்படுமென்பது அப்பாணி பற்றிய எளிமையானதொரு விளக்கம் மட்டுமே. கியூபிசப் பாணியில் உருவங்களின் இருபரிமாணங்களே முக்கியமாகக்  கையாளப்பட்டன. மூன்றாவது பரிமாணமான ஆழப்பரிமாணம் அங்கு முக்கியமானதொன்றல்ல. ஆனால் அதே சமயம் உருவங்கள் கேத்திரகணித வடிவங்களின்  சேர்க்கையாக அவதானிக்கப்பட்டாலும் அவை ஒரு கோணத்திலிருந்து மட்டும் அவதானிக்கப்படவில்லை. அங்கமொன்று பல்வேறு கோணங்களிலிருந்து அவதானிக்கப்பட்டன. உதாரணத்துக்கு முகம் ஒரு கோணத்தில் பார்க்கப்படலாம். கண்கள் இன்னுமொரு கோணத்தில் பார்க்கப்படலாம். இவற்றிலிருந்து பார்க்கப்படும் காட்சியை , அது வெளிப்படுத்தும் உணர்வை உய்த்துணர வேண்டும். பிக்காசோவின் கியூபிசப்  பாணி ஓவியங்கள் நவீன விக்கிரமாதித்தனுக்கு மிகவும் பிடித்தவை. ஓவியமொன்றினை இவ்விதம் உய்த்துணர்வது போன்றதுதான் மனிதரின் ஒருவரின் ஆளுமையினை  அறிந்து கொள்வதும்.

இதுவரை இங்கு நீங்கள் வாசித்தவற்றிலிருந்து ஓரளவுக்கு என்னைப்பற்றி , என் ஆளுமையைப் பற்றி  நீங்கள் அறிந்திருந்தால் அது ஓரளவுக்குப் போதுமானது. ஏனென்றால் நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனின் வாழ்க்கை அனுபவங்களை விபரிக்கக்கூடும். அப்போது இவனைப்பற்றி இன்னும் நன்கு புரிவதற்கு இதுவரை விபரித்த விபரிப்புகள் நிச்சயம் உதவுமென்றும் நிச்சயமாக நம்புகின்றேன்.

Thursday, March 16, 2023

வாழ்த்துகிறோம்: பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Pyre' நாவல் 'சர்வதேச புக்கர்' விருதுக்குப் பரிந்துரைப்பு! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Pyre' ,அனிருத்தன் வாசுதேவனால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட நாவல்.  'பூக்குழி' தமிழில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளியானது. ஆங்கில மொழிபெயர்ப்பு  Hamish Hamilton Limited பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிப்பகமானது பென்குவின் நிறுவனத்தின் ஐக்கிய இராச்சியத்திலுள்ள சேய் நிறுவனமாகும் என்பதும், குறிப்பிடத்தக்கது.  

Tuesday, March 7, 2023

தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (22) - ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)! - வ.ந.கிரிதரன் -

"என்ன  கண்ணா ஆழ்ந்த சிந்தனை. எல்லாம் என்னைப்பற்றித்தானே?" இவ்விதம் கூறியவாறே  வழக்கம்போல் கண்களைச் சிமிட்டியவாறே வந்து தோளணைத்தாள் மனோரஞ்சிதம். அவளுடலின் மென்மையில் ஒருகணம் நெஞ்சிழகியது.

"கண்ணம்மா, உன்னைப்பற்றி நினைப்பதற்கு நானுன்னை மறந்திருக்க வேண்டும்.ஆனால் நீதான் என் சிந்தையெங்கும்  எந்நேரமும் வியாபித்து, கவிந்து கிடக்கின்றாயேயடி. எப்படி உன்னை நினைப்பேன்? "

வழக்கமான கேள்விதான். வழக்கமான பதில்தான். இருந்தாலும் இப்பதில் மனோரஞ்சிதத்துக்குத்  திருப்தியையும், மகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தன என்பதை அவளது முகபாவமே காட்டியது.

Saturday, March 4, 2023

எழுத்தாளர் அ.ந.கந்தசாமி ஓர் அறிமுகம்! - வ.ந.கிரிதரன் -


 - எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'அபத்தம்' இதழின் மூன்றாவது இதழில் வெளியாகியுள்ள வ.ந.கிரிதரனின் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி பற்றிய விரிவானதோர் அறிமுகக் கட்டுரை. 'அபத்தம்' இதழை வாசிக்க  

எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14. அவர் மறைந்து 55 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தருணத்தில்  இலக்கியப் புலமை காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்றழைக்கப்பட்ட  அவரது கலை, இலக்கியப் பங்களிப்பை நினைவு கூர்வதும் பொருத்தமானதே. சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், இலக்கியத்திறனாய்வு, மொழிபெயர்ப்பு என இலங்கை மற்றும் உலகத் தமிழ்  இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் காத்திரமான பங்களிப்பை நல்கியவர் அ.ந.க. அத்துடன் ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமான ஒருவராகவும் கருதப்படுபவர்.  தன் குறுகிய வாழ்வில் தனக்குப் பின்னால்  எழுத்தாளர் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர். அத்துடன் சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் விளங்கியவர்.   நாற்பதுகளில் வில்லூன்றி மயான சாதிப் படுகொலை பற்றி முதற்தடவையாகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த கவிஞர் அ.ந.கந்தசாமியே.

தமிழ் இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பை நல்கிய அ.ந.க.வை விரிவாக இனம் காண்பது முக்கியம்.  அவரது பன்முகப் பார்வைகளையும் வெளிக்கொணரும் வரையில்  அவரது படைப்புகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுத் தொகுப்புகளாக வெளிவருவதும் அவசியம்.    இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல அந்த மகத்தான எழுத்துக் கலைஞனின் தன்னலமற்ற , இலட்சிய வேட்கை மிக்க இலக்கியப்பணிக்கு  செய்யப்பட வேண்டிய  கைம்மாறுமாகும். இதுவரையில் அவரது இரு படைப்புகள்  நூலுருப் பெற்றுள்ளன. அதுவும் அவரது இறுதிக் காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த ‘வெற்றியின் இரகசியங்கள்’. அடுத்தது ‘மதமாற்றம்’ மதமாற்றம் கூடத் தனிப்பட்ட ஒருவரின் நிதியுதவியின் மூலம் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்  வெளியிட்ட நூல்.  'பதிவுகள்.காம்' பதிப்பில் அமேசன் - கிண்டில் மின்னூல்களாக  மனக்கண் (நாவல்) ,  எதிர்காலச்சித்தன் பாடல் (கவிதைத்தொகுப்பு) &  நான் ஏன் எழுதுகிறேன்? (கட்டுரைத் தொகுப்பு) ஆகிய படைப்புகள் வெளிவந்துள்ளன.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...