Monday, January 27, 2025
எழுத்தாளர்களின் கவனத்துக்கு....
அவ்வப்போது இலக்கிய உலகில் ஆதங்கங்கள் சில எழுவதுண்டு. யாராவது பிரபலமான தமிழக எழுத்தாளர் ஒருவரின் பெயரைக்குறிப்பிட்டு ஏன் அவரது பட்டியலில் நம்மவர் பெயர் இல்லை என்று கேள்வி கேட்டு ஆதங்கப்படுவதைத்தான் குறிப்பிடுகின்றேன்.
தமிழக வெகுசனப் பத்திரிகைகளில் இடம் பெறுவதால் அல்லது பிரபல இலக்கிய ஆளுமைகளின் பட்டியல்களில் இடம் பெறுவதால் வேண்டுமானால் ஓரளவு அறிமுகம் மக்கள் மத்தியில் கிடைக்கலாம். ஆனால் வரலாற்றில் உங்களை நிலை நிறுத்தப்போவது இவ்வகையான அறிமுகங்கள் அல்ல.
உங்களை வரலாற்றில் நிலைநிறுத்தப்போவது உங்கள் எழுத்துகளே.கணியன் பூங்குன்றனாரின் வரிகள்தாம் இன்று அவரை எமக்கு அறியத்தருகின்றன. சிலப்பதிகாரம்தான் இளங்கோவடிகளை எமக்கு அறியத்தருகின்றது. அவர்கள்தம் எழுத்துகளே நிலைத்து நிற்கின்றன. அவர்களைப்பற்றிய ஏனையோர் புகழுரைகள் அல்ல. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Sunday, January 26, 2025
காலத்தால் அழியாத கானம் - 'ரோஜா மலரே ராஜகுமாரி'
கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், பி.பி.ஶ்ரீனிவாஸ் & பி.சுசீலா குரலில், மெல்லிசை மன்னர்கள் இசையில் ஒலிக்கும் இந்தப்பாடல் தமிழ்த் திரையுலகின் முக்கியமான பாடல். காலத்தைக் கடந்தும் வாழும் கானம் என்பதற்கு நல்லதோர் உதாரணமாக நிற்கும் பாடல். இந்தப்பாடல் ஒலிக்கும் படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. ஆனால் இந்தப்பாடலை எத்தனை தடவைகள் கேட்டு இரசித்திருப்பேன் என்பது தெரியாது. காதலின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல் இளவரசி ஒருத்திக்கும் , சாதாரண போர் வீரன் ஒருவனுக்குமிடையிலான காதலை வெளிப்படுத்தும்.
இந்தப்பாடல் - 'ரோஜா மலரே ராஜகுமாரி'. நடிகர் சி.எல்.ஆனந்தனும், குமாரி சச்சுவும் நடித்திருக்கும் வீரத்திருமகன் திரைப்படத்தில் அவர்கள் பாடுவதாக அமைந்திருக்கும் பாடல். இருவருமே திரையிலகில் அவர்கள் எதிர்பார்த்தவாறு பிரகாசிக்க முடியவில்லையென்பது திரதிருஷ்ட்டமானது, ஆனால் இப்பாடல் ஒன்றின் மூலம் அவர்கள் இருவரும் தமிழ்த்திரையுலகின் வரலாற்றில் நிலைத்து நின்று விட்டார்கள்.
Friday, January 24, 2025
ஓவியர் மாயாவின் மாயாலோகம்!
எங்கள் பால்ய, பதின்ம வயதுகளில் எம் வெகுசன வாசிப்பு வெறி மிகுந்திருந்த காலத்தில் எழுத்தாளர்களைப்போல் அவர்களின் கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்த ஓவியர்களும் எம்மை மிகவும் கவர்ந்திருந்தார்கள். வினு, கோபுலு, மாருதி, வர்ணம், லதா, ஜெயராஜ், மாயா, கல்பனா, விஜயா என்று ஓவியர்களின் பட்டாளமேயிருந்தது. அவர்களில் மாயாவின் ஓவியங்களும் முக்கியமானவை. ஓவியர் மாயாவின் இயற் பெயர் மகாதேவன். ஜனவரி 22 அன்று தனது தொண்ணூற்றெட்டாவது வயதில் முதுமையின் காரணமாக ஓவியர் மாயா மறைந்த செய்தியினை அறிந்தபோது மாயாவின் ஓவியங்கள் சிந்தையில் நிழலாடின. என் பால்ய, பதின்மப் பருவத்து வாசிப்பு அனுபவத்தில் ஓவியர் மாயாவின் ஓவியங்களுக்கும் முக்கிய பங்குண்டு. அவரது வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டிய வாழ்வு.
Wednesday, January 22, 2025
தத்துவம் அறிவோம்: இமானுவல் கான்டின் (Immanuel Kant): அனுபவம் கடந்த கருத்தியல்வாதம் ( Transcendental Idealism )
இமானுவல் கான்டின் கருத்தியல்வாதக்சிந்தனைகள் ஈர் உலகங்களைப்பற்றி விபரிக்கின்றது. உண்மையாக எமக்கு வெளியில் இருக்கும் உலகம். அதனை அவர் Noumenon என்றழைத்தார். அடுத்தது எம் அனுபவங்களுக்கு உட்பட்ட உலகம். இதனை அவர் Phenomenon என்றழைத்தார்.நாம் எம் ஐம்புலன்களால் எம்மைச் சுற்றியுள்ள இப்பிரபஞ்சத்தை உள்வாங்குகின்றோம். எம் சிந்தனையின் விரிவு, புலன்களின் மூளைக்குக்கொண்டு செல்லும் உணர்வுகள், காட்சிகள், சப்தங்கள் போன்றவற்றின் மூலம் நாம் எம்மைச்சுற்றியுள்ள பிரபஞ்சத்தைப்பற்றிய வடிவினை, அதன் இயல்பினைப்பற்றிய சித்திரமொன்றினை உருவாக்கிக்கொள்கின்றோம்.
இவ்விதமாக எமக்குத்தெரியும் யதார்த்தம் அல்லது உண்மை (Reality)) என்பது எம்மால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஆனால் அது உருவாக்கப்பட்டதற்குக் காரணமாக எமக்கு வெளியில் இருக்கும் உண்மையான உலகத்தினை நாம் ஒருபோதுமே பார்க்க முடியாது. உணர முடியாது. ஏனென்றால் அது எம் புலன்களுக்கு, எம் சிந்தைக்கு அப்பாற்பட்டது. உண்மையில் அவ்விதமிருக்கும் உண்மையான உலகு எம்மில் ஏற்படுத்தும் விளைவே நாம் அறிந்திருக்கும், புரிந்திருக்கும் இந்தப் பிரபஞ்சம்.
சிறந்த கவிதை பற்றிச் சில சிந்தனைகள்....
கவிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றொரு கூற்றின் அடிப்படையில் ஒரு சர்ச்சை தற்போது கிளம்பியுள்ளது. இது புதிய சர்ச்சை அல்ல. மாற்றங்கள் நிகழ்கையில் இது போன்ற சர்ச்சைகள் ஏற்படுவதும் இயல்புதான். ஒரு காலத்தில் கவிதையென்றால் அது மரபுக் கவிதைதான். மரபுக்கவிதை எழுதுவதற்கு யாப்பிலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். அதன் காரணமாகக் கவிஞர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.
மரபை மீறிப் புதுக்கவிதை பிறந்தபோது புற்றீசல்களாகப் புதுக்கவிஞர்கள் பிறந்தனர். இன்றுள்ள முன்னணிக் கவிஞர்கள் பலரும் அவ்விதம் படையெடுத்த கவிஞர்களிலிருந்து உருவானவர்கள்தாம். அப்பொழுதும் மரபில் கோலோச்சிக்கொண்டிருந்த மரபுக்கவிஞர்கள் புதுக்கவிஞர்களை ஏளனத்துடன் பார்த்தனர். யாப்பு தெரியாதவரெல்லாம் கவிதை எழுத வந்து விட்டார்கள் என்று எள்ளி நகையாடினார்கள். அன்றிலிருந்து இன்று வரை உலகின் எப்பாகங்களிலிருந்தும் வெளியாகும் பத்திரிகை, சஞ்சிகையின் கவிதைப் பக்கங்களைப் பாருங்கள். இலட்சக்கணக்கில் தமிழ்க் கவிதைகளை, கவிஞர்களைக் காணலாம். இவர்களில் பலரைத் தமிழ் இலக்கிய உலகு அறிந்திருக்காது. ஆனால் இவர்களில் பலர் முகங்களை நாம் அறிந்திருக்காதபோதும் இவர்களின் படைப்புகள் வரலாற்றில் நிலைத்து நிற்குமா என்பதைப்பற்றி நாம் எதுவும் கூற முடியாது. இன்று டிஜிட்டல் தொழில் நுட்பம் காரணமாக இவர்களது படைப்புகள் பலவும் வெளியான பத்திரிகை, சஞ்சிகைகளின் ஆவணப்படுத்தல் மூலமாக வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகின்றது. இன்னும் பல நூறு ஆண்டுகளின் பின்னர் இவர்களின் பலரின் கவிதைகள் ஒரு காலகட்டக் கவிதைகளாக இனங்காணப்படும் சாத்தியங்களும் உண்டு.
Tuesday, January 21, 2025
கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -
* ஓவியம் - AI
இலக்கியம், அரசியல், விமர்சனம்..
ஆட்டம் சகிக்க முடியவில்லை.
விளக்கமற்ற விமர்சனம்
இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'.
விளக்கமற்ற விமர்சனங்களின் முடிவுகள்
தனிமனிதத் தாக்குதல்கள்தாம்.
தனிமனிதத் தாக்குதல்கள்தாம்.
தனிமனிதத் தாக்குதல்கள் புரியும் இவர்களுடன்
தர்க்கிக்க நான் எப்போதுமே தயார்.
தர்க்கிப்பதற்கு எவையுமில்லை இவர்களுக்கு
என்பதை நிரூபிக்க என்னால் முடியும்.
கவிதை: தர்க்கம் செய்வோமடி கண்ணம்மா! - வ.ந.கிரிதரன் -
கண்ணம்மா,
நீ எப்போதும் கூறுகின்றாய்
நீ இருப்பதாக.
நீ என்னிலும் வேறாக இருப்பதாக.
நான் கூறுகின்றேன் கண்ணம்மா!
நீ எனக்குள் இருப்பதாக.
எனக்கு வெளியில் நீயில்லையென்று.,
நீ மறுத்துக்கூறுகின்றாய்
கண்ணா உன் கண்களை மூடிவிட்டாயா?
அறிவுக்கண்ணைப் பாவி கண்ணா.
பாவித்தால் நான் கூறுவது
புலப்படும்
என்று நீ கூறுவதை
எப்படி என்னால் ஏற்க முடியும்.
கண்ணம்மா, இருந்தாலும் உன்
குறும்புக்கு ஓர் அளவேயில்லையடி.
பாரதியார் பாடல்: 'நடிப்பு சுதேசிகள்' வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி
பாரதியார் பாடல்: 'நடிப்பு சுதேசிகள்' வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி ...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...





