Monday, October 27, 2025

நினைவில் நிற்கும் வான் பாயும் பட்டாணிச்சுப் புளியங்குளம்!


என் பால்யப் பருவத்து அனுபவங்களைப் பற்றி நிறையவே பதிவுகள் எழுதியிருக்கின்றேன். அவற்றில் வவுனியா பட்டாணிச்சுப் புளியங்குளத்தின் , வான் பாயும் அணைப் பகுதியை என்னால் மறக்கவே முடியாது.
 
குருமண்காடு என்னும் பகுதியை அண்மித்திருக்கும் குளம் பட்டாணிச்சுப் புளியங்குளம். மன்னார் வீதியிலுள்ளது.
 
மாரிகளில் குளம் நிறைந்து வான் பாயும். இரவு முழுவதும் பெய்யும் மழையின் ஒலியினை இரசித்தபடியே தூங்கிக் கிடக்கும் நாம் விடிந்ததும் வான் பாயும் குளக்கட்டை நோக்கி ஓடுவோம்.
 
அக்கிராமத்து மக்கள் பலரையும் அங்கு அச்சந்தர்ப்பத்தில் காணலாம். வான் பாயும் நீருடன் வழுகிச் செல்லும் விரால் மீன்களைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். வெங்கணாந்திப் பாம்புகளும் அவ்விதம் விரால் பிடிப்பதுண்டு. அவ்விதமான ஒரு பாம்பையும் ஒரு தடவை பார்த்திருக்கின்றேன். இரவு முழுவதும் விரால் பிடித்து உண்ட மயக்கத்தில் அசைவற்றுக் கிடந்தது. 'தொண்டனுக்கு உண்ட களை' என்றொரு சொலவடை உண்டல்லவா. அதுதான் அப்போது நினைவுக்கு வந்தது.
 
என் பால்ய பருவத்து அழியாத கோலங்களில் இந்தப் பட்டாணிச்சுப்புளியங்குளத்தின் 'மாரி வான்பாய்தலு'க்கும் அழியாத ஓரிடமுண்டு.
 
இந்தக் குளத்தின் வான் பாயும் நீரொலியைக் கேட்கும்பொழுதெல்லாம் நினைவில் 
வரும் வரிகள் இவை:
 
"உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!'
 
அப்பொழுதே அப்பா வாங்கி தந்திருந்த தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்று 'புலியூர்க் கேசிக'னின் உரையுடன் வெளிவந்திருந்த சிலப்பதிகாரம் (மூலமும், உரையும் தொகுதி). அதன் பக்கங்களைப் புரட்டுகையில் அப்பொழுதே என் மனத்தில் பதிந்து விட்ட கானல் வரி வரிகள் இவை. முழு நூலையும் படிக்கும் ஆற்றல் இல்லாதிருந்த சமயத்திலும் கவிஞர் இளங்கோவின் எளிமையான இது போன்ற வரிகள் சில கண்ணில் பட்டன. அவை மனத்தில் நிலையாகப் பதிந்து விட்டன. 
 
மதகு ஓதை, உடைநீர் ஓதை என்னும் சொற்கள் என் மனத்துக்குப் பிரியமான சொற்கள். அச்சொற்களை நினைத்த மாத்திரத்தில் பெருமழை பெய்து , கட்டுடைத்துப் பாயும் வெள்ளமும், அதன் ஒலியும் நினைவுக்கு வந்து விடும்.
 
இங்குள்ள புகைப்படம் 'கூகுள் நனோ பனானா'த் (Google Nano Banana) தொழில் நுட்பம் மூலம் 'டிஜிட்டல்' ஓவியமாக்கப்பட்ட புகைப்படம்.

Sunday, October 26, 2025

கவிஞர் பாத்திமா நளீராவின் 'ஏழாம் வானத்தின் சிறகுகள்' பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -


கவிஞர் பாத்திமா நளீராவின்  'ஏழாம் வானத்தின் சிறகுகள்' கவிதைத்தொகுப்பு அண்மையில் வெளியானது. யாவரும் அறிந்ததே.  இவர் ஊடகவியலாளரும் கவிஞருமான ஏ.எச்.சீத்திக் காரியப்பரின் மனைவி. எண்பதுகளிலிருந்து இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் மற்றும் வானொலியில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. இவரது முதற்கவிதையை வெளியிட்டது தினகரன் பத்திரிகை. 

இத்தருணத்தில் இவரது கணவரான கவிஞர் ஏ.எச்.சித்திக் காரியப்பரை ஒரு கணம் நன்றியுடன் நினைவு கூர்ந்திட விழைகின்றேன். எண்பதுகளில் தினகரன் பத்திரிகையில் வெளியான 'கவிதைச் சோலை'ப் பகுதியை நடத்திக்கொண்டிருந்தவர் அவர். அப்போது என் கவிதைகளுடன் , என் புகைப்படத்தையும் பிரசுரித்து நல்லதோர் அறிமுகம் தந்தவர் அவர். எனது கவிதைகள் சில அவர் நடத்திய கவிதைச் சோலையில் வெளியாகியுள்ளன. என் எழுத்துலகின் ஆரம்பக் கட்டத்தில் அவர் தந்த ஊக்கத்தை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வேன்.

எண்ணங்களே வாழ்வு என்பதை எடுத்துக்காட்டும் காணொளி!


*
Digiat Art (Google Nano Banana) help: VNG

வாழ்க்கைக்கு ஆரோக்கியமான விளைவுகளைத் தருபவை நேர்மறையான , நம்பிக்கை மிக்க எண்ணங்களே. எண்ணும் எண்ணங்களுக்கேற்பவே வாழ்க்கை அமைகிறது என்பது உளவியல் நிபுணர்கள் பலரின் கண்டு பிடிப்பு.

வாழ்வில் இன்பமென்பதை உணர்வது மனத்தின் உணர்வுகள் மூலமே. மனிதரின் செயற்பாடுகள் அனைத்தையும் இறுதியில் இன்பத்தை அடைதலையே நோக்கமாகக் கொண்டு அமைகின்றன.

இன்பம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியிருப்பதில்லை. ஒருவருக்குப் பயணத்தில் இன்பம். ஒருவருக்குக் கலைகளில் இன்பம். ஒருவருக்குச் செல்வத்தைப் பெருக்குவதில் இன்பம். ஒருவருக்குச் சேவை செய்வதில் இன்பம். ஒருவருக்கு எழுதுவதில், வாசிப்பதில் இன்பம். இவ்விதம் மனிதரின் செயல்கள் அனைத்துமே அவரவர் அடையும் இன்பத்தை நோக்கியே அமைந்திருக்கின்றன.

இக்காணொளி நீங்கள் உங்கள் வாழ்வில் அடைய வேண்டிய இன்பத்தை, இலக்குகளை எப்படி அடையலாம் என்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் காணொளி. நீங்கள் எண்ணும் எண்ணங்களே உங்கள் அடைய வேண்டிய இலக்குகளை அடைய உதவுகின்றன என்பதை எடுத்துக்காட்டும் காணொளி.

இவ்விதமான நூல்கள் பல உலகின் பல்வேறு மொழிகளிலும், தமிழ் உட்பட, வெளியாகியுள்ளன. காணொளிகளும் அவ்விதம் வெளியாகியுள்ளன. அவற்றில் நல்ல காணொளிகளில் ஒன்று இந்தக் காணொளி.

இறுதிவரை இக்காணொளியைத் திறந்த மனத்துடன் பாருங்கள். நம்பிக்கையுடன் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=Vt_H4-GZxJA 


Saturday, October 25, 2025

காலத்தால் அழியாத கானம்: 'அம்மா என்றால் அன்பு'


கே
.வி.மகாதேவனின் இசையில், கவிஞர் வாலியின் வரிகளை, அடிமைப்பெண் திரைப்படத்தில் பாடுபவர் ஜெயலலிதா.

கண்களை மூடிக்கொண்டு கேட்டுப் பாருங்கள் கர்நாடக சங்கீதம் நன்கறிந்து பாடும் பாடகியொருவரின் குரலோ என்று பிரமித்துப் போவீர்கள்.

https://www.youtube.com/watch?v=0kZMaWiExME&list=RD0kZMaWiExME&start_radio=1

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]

காலத்தால் அழியாத கானம்: 'காசிக்குப் போகும் சந்நியாசி'


'சந்திரோதயம்' திரைப்படத்தில், மெல்லிசை மன்னரின் இசையில்,
#கவிஞர் வாலியின் வரிகளுக்குக் குரல் கொடுத்திருப்பவர்கள் டி.எம்.எஸ் & சீர்காழி கோவிந்தராஜன். நடிப்பு: #எம்ஜிஆர் , நாகேஷ் & மனோரமா.

அப்பாவுக்குப் பிடித்த இப்பாடல் எனக்கும் பிடித்தது. பாடகர்களின் குரல்களையும், எம்ஜிஆர், நாகேஷின் நடிப்பையும் கேட்கும்போதெல்லாம் இரசிப்பேன். கூடவே அப்பா பற்றிய நினைவுப்பாம்பும் ஆழ்மனப்புற்றிலிருந்து எழுந்து தலை விரித்தாடும்.

இத்திரைப்படம் எம்ஜிஆர் சுடப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம். இப்பாடலின் ஆரம்பத்தில் எம்ஜிஆர் , நாகேசுடன் சிறிது நேரம் உரையாடுவார். அப்போது சுடப்படுவதற்கு முன்பிருந்த எம்ஜிஆரின் இன் குரலையும் கேட்கலாம். கேட்கையில் சுட்டவர்மீது ஆத்திரம் வருவதைத் தடுக்க முடியாது.

https://www.youtube.com/watch?v=UwpvmT6_rvY&list=RDUwpvmT6_rvY&start_radio=1

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]

Wednesday, October 22, 2025

கரூர் துயரும் , எழுத்தாளர் ஜெயமோகனின் 'சாமான்ய மக்களின் கும்பல்' மனநிலை பற்றிய கருத்தும் பற்றி..


அண்மையில் கரூரில் நடந்த ,  தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல்  பிரச்சாரக்  கூட்டத்தில்  ஏற்பட்ட நெரிசலில் மக்கள் அகப்பட்டு உயிரிழந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் மக்களுக்கிடையில் நிலவும் கும்பல மனநிலை என்று ஒரு புதிய தத்துவத்தை, ஹிட்லரின் பாசிதத்தை உதாரணமாகக் காட்டி, எடுத்துரைக்கின்றார் எழுத்தாளர் ஜெயமோகன்.  அதற்குரிய யு டியூப் காணொளி - https://www.youtube.com/watch?v=VjJ3mJiR4mg

ஜெயமோகன் சொற் சித்தர். சொற்களை வைத்து விளையாடுவதில் வல்லவர். அவரது இவ்வுரையும் அத்தகையதுதான். தனக்கேரியுரிய சொற் சிலம்பமாடும் திறமையினை இங்கு அவர் பாவித்துச் சொற் சிலம்பம் ஆடுகின்றார். நடந்த மக்களின் அழிவுக்குக் காரணம் சாமான்ய மக்களின் கும்பல் மனநிலையே காரணமென்று கூறுவதன் மூலம் உண்மையை மூடி மறைக்கின்றார். அவர் இதனைத்  திட்டமிட்டுச் செய்யவில்லை.அவர் தன் சுய தர்க்கச் சிந்தனையின் மூலம் அவ்விதமானதொரு முடிவுக்கு வந்து, அதனடிப்படையில் நடந்த அழிவுக்குக் காரண்மாகப் புதியதொரு தத்துவத்தை அல்லது கோட்பாட்டை முன் வைக்கின்றார். அவ்வளவுதான்.

Tuesday, October 21, 2025

சிறுகதை: சாந்தா அக்கா! - வ.ந.கிரிதரன் -




இக்கதையில் வரும் சாந்தா அக்கா போன்ற ஒருவர் என் வாழ்க்கையிலும் இருந்திருக்கின்றார். அவர் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த செய்தியினை அறிந்தபோது எழுந்த உணர்வுகளின் விளைவே இச்சிறுகதை. - 

'டேய் கேசவா, சாந்தா அக்கா செத்துப் போய்விட்டாவாம். தெரியுமா?'

சின்னம்மா  வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் அம்மாவின் கடைசிச் சகோதரி. இன்னும் உயிருடனிருக்கும் சகோதரி. வயது எண்பதைத்தாண்டி விட்டது. பார்த்தால் ஐம்பதைத்தாண்டாத தோற்றம். மனுசி இன்னும் காலையில் ஒரு மணி நேரம் நடை , யோகா , மரக்கறிச் சாப்பாடு, நிறைய பழங்கள் என்று வாழும் மனுசி.

'என்ன  சின்னம்மா, சாந்தா அக்கா செத்துப் போய் விட்டாவா? எப்ப சின்னம்மா?'

"இன்றைக்குத்தான் விடிய ஜேர்மனியிலை போய்விட்டாவாம்."

"என்ன அவ ஜேர்மனியிலையா இருந்தவா? இவ்வளவு நாளும் நான் நினைச்சுக்கொண்டிருக்கிறன் அவ ஊரிலைத்தான் இன்னும் இருக்கிறா என்று. அவ எப்ப ஜேர்மனிக்குப் போனவா சின்னமா?"

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...