Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Friday, March 13, 2020

காற்றினிலே வரும் கீதம்: "எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று"

"எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று   
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு   
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு  "
- கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவுக்குத் தேசிய விருது பெற்றுக்கொடுத்த இன்னுமொரு பாடல்.  ஒரு கவிஞரின் வரிகளுக்கு விருதுகளைப்பெற்றுக் கொடுப்பவை அவரது வரிகள் மட்டுமல்ல. அதனைப்பாடிய பாடகர்களின் குரல்கள், இசை, ஒளிப்பதிவு & நடிப்பு எல்லாமேதாம்.

இப்பாடலினை இருவர் பாடியிருந்தாலும் , பாடலின் அதிக பகுதியை எடுத்துக் கொண்டிருப்பவர் பாடகி சின்மயி. சின்மயி தற்போதுள்ள பாடகிகளில் மிகச்சிறந்த பாடகியாக நான் உணர்வதுண்டு. அதற்குக் காரணம் வரிகளை உள்வாங்கி, உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் குரல் அவருடையது. கேட்டுப்பாருங்கள். நெஞ்சைக் கிழித்துக்கொண்டு அதன ஆழத்துக்கே செல்லும் குரல் சின்மயினுடையது.

Wednesday, March 4, 2020

காலத்தால் அழியாத கானங்கள்: "பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர"

"பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்....
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்

ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே" -
கவிஞர் மேத்தா




அவ்வப்போது எழுத்தாளர்கள் திரையுலகையும் எட்டிப்பார்க்கத் தவறுவதில்லை; தடம் பதிக்கத்தவறுவதில்லை. கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணாத்துரை, சுஜாதா, ஜெயமோகன், பாலகுமாரன், விந்தன் என்று பலரைக்குறிப்பிடலாம். அவர்களில் கவிஞர் மேத்தாவும் ஒருவர். ரஜனிகாந்த்தின் 'வேலைக்காரன்' திரைப்படப்பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. 'உதயகீதம்' திரைப்படப்பாடலான இப்பாடலையும் அவர்தான் எழுதியிருக்கின்றார்.

காலத்தால் அழியாத கானங்கள்: "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே"



இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் எனக்குக் காற்சட்டையும், சேர்ட்டுமாகப் பால்ய காலத்தில் வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டம் நினைவுக்கு வரும். உண்மையில் இப்பாடலை முதலில் கேட்டபோது நான் நண்பர்களுடன் வவுனியா நகரசபை மைதானத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் பல்வேறு வழிகளில் திரும்புவது வழக்கம். அதிலொரு வழி நகரசபை மண்டபத்துக்குப் பின்புறமாக , புகையிரத இருப்புப்பாதைக்குமிடையில் மரங்கள் நிறைந்திருந்த பகுதியினை ஊடறுத்துச் சென்ற பாதை. அப்பாதை வழியாக காமினி வித்தியாயலயத்துக்கு முன்புறமாகச் சென்று கொண்டிருந்த மன்னார் வீதிக்கு வர முடியும்.

Sunday, February 9, 2020

நடிகர் நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) நினைவாக...

அண்மையில் தனது நூற்றி மூன்றாவது வயதில் மறைந்த நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) உலகச்சினிமாவில் முக்கியமானதோர் ஆளுமை. மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்குக் கிடைக்காத அவ்விருது இவரது மகன் மைக்கல் டக்ளசுக்குக் கிடைத்தது. ஆனால் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பின்னர் கிடைத்தது. இவர் இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகத்திறமை மிக்க நடிகர்களிலொருவர்.
இவரை நினைத்தாலே முதலில் நினைவுக்கு வருவது ஸ்டான்லி கூப்ரிக்கின் இயக்கத்தில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த ஸ்பார்ட்டகஸ் திரைப்படமே . அதில் அவர் ரோமானிய அடிமைகளிலொருவராக நடித்திருப்பார். அடுத்து ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் லஸ்ட் ஃபோர் லைஃப் (Lust for Life - வாழ்வுக்கான காமம்) .ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் அவர் அதற்காக ஆஸ்காரின் சிறந்த நடிகர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Monday, February 3, 2020

ஜூலியனோ ஜெம்மா (Giuliano Gemma)


இத்தாலியர்களால் உருவாக்கப்பட்ட வெஸ்டேர்ன் திரைப்படங்களை ஆரம்பத்தில் 'ஸ்பாகட்டி வெஸ்டேர்ன்' (Spaghetti Western ) என்று மேற்குலகம் எள்ளி நகையாடினாலும் அவற்றின் வெற்றி பின்னர் அவற்றையும் எள்ளி நகையாடிய மேற்குலகத்தை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டது. ஸ்பாகட்டி என்பது இத்தாலியர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமானது நமது தோசையைப்போல. கிளின்ட் ஈஸ்வூட் நடித்துப்புகழ்பெற்ற 'The Good, the Bad and the Ugly ' வெஸ்டேர்ன் திரைப்படமும் இத்தாலியர்களால் உருவாக்கப்பட்டதுதான். சேர்ஜியோ லியோனின் (Sergio Leone) இயக்கம், 'டோனினோ டெலி கொலி'யின் (Tonino Delli Colli) ஒளிப்பதிவு , 'எனியோ மோரிக்கோனின்' (Ennio Morricone) இசை நடிகர்களின் நடிப்பு இவையெல்லாம் சேர்ந்து இப்படத்தை வரலாற்றில் நிலைத்து நிற்க வைத்து விட்டதெனலாம்.

இவ்விதமாக இத்தாலியர்களால் உருவாக்கப்பட்ட வெஸ்டேர்ன் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர்களிலொருவர்தான் ஜூலியனோ ஜெம்மா (Giuliano Gemma). ஆரம்பத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்து வந்த இவருக்கு நடிப்புடன் கூடிய பாத்திரங்களை அளித்துப் பின்னாளில் இவர் புகழடையக் காரணமானவர் இயக்குநர் டுச்சியோடெஸ்சாரி (Duccio Tessari. இத்தாலியர்களால் உருவாக்கப்பட்ட பல வெஸ்டேர்ன் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் இவர். இவரது மகளான வேரா ஜெம்மாவும் நடிகையே.

அழியாத கோலங்கள்: ஜிம் பிறவுனின் 'எல் கொண்டர்'

பொதுவாக வெஸ்டேர்ன் திரைப்படங்களில் கறுப்பின நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பது குறைவு. ஆனால் அவ்விதமாக நடித்த நடிகர் ஒருவரின் திரைப்படத்தையும் என் பதின்ம வயதுகளில் (நான் பார்த்துக் குவித்த ஆங்கிலத் திரைப்படங்களில்) பார்த்திருக்கின்றேன். இவரது ஓரிரு திரைப்படங்களே அக்காலகட்டத்தில் வெளிவந்ததாக நினைவு. இவரது படங்களைப்பார்ப்பதற்கு இளைஞர்கள் முண்டியடிப்பார்கள். அந்த நடிகர்தான் ஜிம் பிறவுண். அந்தத்திரைப்படம் 'எல் கொன்டொர்' (El Condor). பாதுகாப்பான மண் கோட்டையொன்றில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தைக் கொள்ளையடிப்பதற்காக இவரும், எனக்கு மிகவும் பிடித்த இன்னுமொரு நடிகரான லீ வான் கிளீவ் (Lee Van Cleef) இணைந்து அமெரிக்க இந்தியர்களின் குழுவொன்றும் செல்வார்கள். கண்களைச் சுருக்கி, இதழ்க்கோடியில் இலேசாகச் சிரிப்பைத் தவழவிடும் லீ வான் கிளீவ்வின் நடிப்பு எப்பொழுதும் என்னை மிகவும் கவர்ந்ததொன்று. The Good The Bad and The Ugly திரைப்படத்தில் கெட்டவனாக (The Bad) நடித்திருப்பவர் இவரே. இவரது பல திரைப்படங்கள் அக்காலகட்டத்தில் யாழ்நகரில் திரையிடப்பட்டன. 'சபாட்டா (Sabata)' தொடர் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. 'அடியோஸ் சபாட்டா', 'ரிடேர்ன் ஆஃப் சபாட்டா' ஆகியவை நினைவில் நிழலாடுகின்றன.

Sunday, June 30, 2019

டி.எம்.எஸ் பற்றிய காணொளி!

பாடகர் டி.எம்.எஸ் அவர்களின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அவர் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருக்காகக் குறிப்பாக எம்ஜிஆருக்காகப் பாடிய பாடல்கள். அன்று கேட்டோம்; இன்றும் கேட்கின்றோம். இனியும் கேட்போம். டி..எம்,எஸ் அவர்கள் எம்ஜிஆர்,, சிவாஜி படங்களில் பாடிய கருத்துள்ள பாடல்களாகட்டும், காதல் பாடல்களாகட்டும் அவை வரலாற்றில் நிலையாக நிலைத்து நிற்கப்போகும் பாடல்கள். அண்மையில் முனைவர் கெளசல்யா சுப்பிரமணியன் அவர்கள் தனது இசைத்தமிழ் பற்றிய ஆய்வு நூலொன்றில் திரைப்படப்பாடல்களையும் கவனத்திலெடுத்திருந்தது நினைவுக்கு வருகின்றது.

இங்கு பாடகர் டி.எம்.எஸ் அவர்கள் தான் எம்ஜிஆர் நடித்த 'அன்பே வா' திரைப்படத்தில் பாடிய தனது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார். அவ்வப்போது 'அன்பே வா' பாடல்கள் சிலவற்றையும் தெளிவு மிக்க காணொளிகளாக ஒ(லி)ளிப்பதிவு செய்திருக்கின்றார்கள். கேட்பதற்குச் சுகமாகவுள்ளது. கடந்த காலத்துக்கு எம்மையெல்லாம் இழுத்துச் செல்லும் காணொளி.

இக்காணொளியில் டி.எம்.எஸ் அவர்கள் அரிய தகவல்கள் பலவற்றை எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார். அவற்றில் என் கவனத்தை ஈர்த்த இரண்டினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

1. அக்காலகட்டத்தில் பாடல்களில் எதிரொலியினை உருவாக்குவதற்கான தொழில் நுட்பமில்லை. எவ்விதம் எம்ஜிஆர் மலைப்பிரதேசத்தில் பாடும் 'புதிய வானம். புதிய பூமி' பாடலுக்கு எதிரொலியைச் சேர்ப்பது என்பதில் அனைவருக்கும் குழப்பம். அப்பொழுது டி.எம்.எஸ் சிறு தந்திரம் மூலம் அக்குழப்பத்தை நிவர்த்தி செய்கின்றார். அது: பாடலைப்பாடும் பொழுது, எதிரொலியாக ஒலிக்க வேண்டிய சொல்லினைப் பாடுகையில் முதல் முறை ஒலிபெருக்கிக்கு அருகில் நின்றும், அடுத்தடுத்த தடவைகள் முறையே ஒலிபெருக்கிக்குத் தூரமாகவும், இன்னும் தூரமாகவும் நின்று பாடுவார். அது அப்பாடலில் அச்சொல் எதிரொலிப்பது போன்ற உணர்வினைத்தரும். அப்பாடலை மீண்டுமொரு முறை கேட்டுப்பாருங்கள் புரிந்து கொள்வீர்கள்.

Wednesday, June 5, 2019

திரைப்பட இயக்குநர் 'புதியவன் ராசையா'வுடனோர் அந்திப் பொழுது!

இன்று மாலை (ஜூன் 4, 2019) ஸ்கார்பரோவில் மார்க்கம் & மக்னிகல் பகுதியில் 2901 மார்க்கம் றோட் என்னும் முகவரியில் அமைந்துள்ள , நட்பான பணியாளர்களைக் கொண்ட 'தோசா ராமா' உணவகத்தில் நண்பர் எல்லாளனுடன் ('ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' நூலாசிரியர்) திரைப்பட இயக்குநர் புதியவன் ராசையாவைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தனது திரைப்படங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவரான புதியவன் ராசையா அவர்கள் தற்போது அவரது திரைப்படமான 'ஒற்றைப் பனைமரம்' திரைப்படத்தினைக் கனடாவில் திரையிடுவதற்காகத் தற்சமயம் கனடாவுக்கு வருகை தந்துள்ளார். ஏற்கனவே இவர் 'மாற்று' (2001), 'கனவுகள் நிஜமானால்' (2003), 'மண்' (2005) & 'யாவும் வசப்ப்டும்' (2015) ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை RSSS என்னும் தமிழக நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்.  படத்துக்கு இசையமைத்துள்ளவர் அண்டாவக் காணோம், காஞ்சனா, சதுரங்க வேட்டை 2 போன்ற பல படங்களில் பணியாற்றிய அஷ்வமித்ரா. படத்தின் ஒளிப்பதிவாளர் இலங்கையைச் சேர்ந்த மகிந்த அபேசிங்க. இவர் சர்வதேச விருது பெற ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தைத் தொகுத்திருப்பவர் சுரேஷ் அர்ஸ். இத்திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்களில் புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன் மற்றும் தனுவன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 37 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் தேர்வாகி, இசை, ஒளிப்பதிவு , சிறந்த நடிப்பு போன்றவற்றுக்காக விருதுகளைப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதும் சார்பானது!

எழுத்தாளர் சுவிஸ் பா.ரவி தன் முகநூற் பதிவொன்றில் 'எழுத்தாளரைக் கொண்டாட வேண்டும் என சொல்லப்படுவதை எப்படி அணுகுவது என குழப்பமாக இருக்கிறது...

பிரபலமான பதிவுகள்