Saturday, December 29, 2018

நகுலனின் சுசீலா! யார் அவள்?

எஸ்.ராமகிருஷ்ணனின் 'நாவலெனும் சிம்பொனி' நூலில் எழுத்தாளர் நகுலன் பற்றியதொரு கட்டுரையுள்ளது. சிறு கட்டுரை அது. அதில் நகுலனின் படைப்புகளில் அடிக்கடி காணப்படும் சுசீலா என்னும் பெண் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. நகுலனின் சுசீலா பற்றி எஸ்.ரா பின்வருமாறு கூறுவார்:

"'சுசீலாவின் உயர் தன்மைகள் சுசீலாவிடம் இல்லை' எனப்பேசும் இவர், கவிதையெங்கும் காணப்படும் சுசீலா எனும்  பெண் பெயரைக்கொண்டு அதைப்பெண்ணாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ப்படுகிறது.  இப்பெண்பெயர் உருவாக்கும்  வார்த்தைச் சித்திரம் ஏற்கனவே உருவாகும் மனநிலையின் தீவிரத்திற்கு எதிர்நிலையாகவோ , சமன் செய்யும் ஒன்றாகவோ, பரிகசிக்கும் நிலையாகவோ கொள்ளலாம். ஒருவகையில் மரபுக்கவிதையில் வரும் வெண்சங்கே, பாம்பே, கிளியே, குதம்பாய்போல் இதுவும் சுய எள்ளல் குறியீடாகக் கொள்ளலாம்.  சில இடங்களில் சுசிலா மூலம் ஏற்படுத்தும்  நெருக்கம் பாரதியின் கண்ணம்மா என்ற வார்த்தை உருவின் செயல்பாடு போலத் தெரிகிறது."

எழுத்தாளர்கள் பலர் அவ்வப்போது சுசீலா போன்ற விடயமொன்றினைப்பற்றிக் குறிப்பிடும்போது அவ்விடயம் பற்றிய போதிய ஆய்வெதுமின்றி முடிவொன்றுக்கு வந்து விடுகின்றார்கள். அதற்கு எஸ்.ராமகிருஷ்ணனும் விதிவிலக்கானவரல்லர் என்பதையே நகுலனின் சுசீலா பற்றிய அவரது கூற்றும், அது பற்றிய மேலதிக விளக்கங்களும் புலப்படுத்துகின்றன.

எஸ்.ரா. நகுலனின் சுசீலா பற்றி இவ்விதமான முடிவொன்றுக்கு வர முன்னர் நகுலனின் படைப்புகள் அனைத்திலும் நகுலன் எவ்விதம் சுசீலாவை விபரித்திருக்கின்றார் என்று பார்த்திருக்க வேண்டும். பார்த்தாரா என்பது தெரியவில்லை. அவ்விதம் அவர் செய்திருந்தால் நிச்சயமாக 'சுசீலாவும் ஒரு எள்ளல்' என்னும் முடிவுக்கு வந்திருக்க மாட்டார். எனக்கென்னவோ நகுலனின் வாழ்வில் எதிர்பட்ட , அவர் காதலித்த ஆனால் அவருக்குக் கிடைக்காமற் போன பெண்ணொருத்திதான் அவர் படைப்புகளில் வரும் சுசீலா என்னும் பாத்திரமாக இருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. தனக்குக் கிடைக்காமற் போன பெண்ணைச் சுசீலா என்னும் பாத்திரமாக உருவகித்து அவளைத்தன் எழுத்துகளில் நடமாடவிட்டு , அவளுடன் எழுத்துலகில் வாழ்ந்து வந்திருக்கின்றார் நகுலன் என்றே தோன்றுகின்றது. இறுதிவரைத் தனிமையில் வாழ்ந்த நகுலன் நிஜ வாழ்க்கையில் தனக்குக்கிடைக்காமற் பெண்ணைச் சுசீலாவாக்கி மானசீகமாக வாழ்ந்த்திருக்கின்றார் என்றே தோன்றுகின்றது.

காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் 'தங்ஙள் அமீர்'!


நண்பர் எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் குறுநாவல்கள் அடங்கிய தொகுதி காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 'தங்ஙள் அமீர்' என்னும் பெயரில் வெளிவரவுள்ளது. வாழ்த்துகள். 'தங்ஙள் அமீர்' குறுநாவல் 'பதிவுகள்' இணைய இதழில் (23.04.2014) வெளியான குறுநாவல் என்பதையும் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். அக்குறுநாவல் பதிவுகள் இதழில் வெளியாகியபோது வெளியான எனது அறிமுகக் குறிப்பினையும் இங்கு பதிவு செய்கின்றேன்.

எழுத்தாளர் தாஜ் அவர்களை தொண்ணூறுகளிலிருந்து எனக்குத் தெரியும். ஸ்நேகா (தமிழகம்) வெளியிட்ட எனது நூல்களான அமெரிக்கா, நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆகிய நூல்களைத் தமிழக நூல் நிலையமொன்றில் கண்டு வாசித்து அவை பற்றி எனக்குக் கடிதங்கள் இரண்டு அனுப்பியிருந்தார். அதன் பின்னர் வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற நாவல்களிலொன்றான 'என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' நாவலையும் தனது நண்பர் ஒருவர் மூலம் எனக்குக் கிடைக்கச் செய்தார். மறக்க முடியாது.

தாஜ் அவர்களின் சிறுகதையான 'பால்ய விவாஹம்' பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காலச்சுவடு, கணையாழி போன்ற சஞ்சிகைகளில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவள விழாபோட்டியிலும் இவரது கவிதை முத்திரைக்கவிதையாக விருது பெற்றுள்ளது. இவர் தமிழ்ப்பூக்கள் என்னும் வலைப்பதிவினையும் வைத்திருக்கின்றார்.

எழுத்தாளரின் தாஜ் எழுதிய தங்ஙள் அமீர் குறுநாவல் பற்றி 'பதிவுகள்' இணைய இதழில் நான் எழுதியிருந்த அறிமுகக் குறிப்பு:

"புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அந்நிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் 'தங்ஙள் அமீர்' இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. 'தங்ஙள் அமீர்' என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக 'தங்ஙள் அமீரை'ப் பாவிப்பதும்தாம்.

எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணமும், அவரது ஆசையொன்றும்!

பிரபஞ்சன் அவர்கள் 'ஜெயித்த கதை' கட்டுரையின் இறுதியில் 'என் விருப்பமெல்லாம் , எழுத்தைப் போலவே , என் மரணமும் கெளரவமாக இருக்க வேண்டும் என்பதுதான்' என்று குறிப்பிட்டிருந்தார்.  அவரது  ஆசை அவரது மரணத்தில் நிறைவேறியுள்ளது. நீண்ட காலத்துக்குப் பிறகு எழுத்தாளர் ஒருவருக்கு உரிய  மரியாதைகொடுத்து அவரது இறுதி அஞ்சலியை நடாத்தியதற்காகப் புதுவை மாநில அரசையும், அதன் முதல்வரையும் பாராட்டுகின்றேன்.

தம்  வாழ்நாளெல்லாம் தம் எழுத்தால் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும்  எழுத்தாளர்களைப் பொதுவாக மாநில அரசுகள் கவனிப்பதில்லை. இந்நிலையில் அரச மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு இறுதி அஞ்சலியினைச் செய்ததன் மூலம் புதுவை மாநில அரசு உயர்ந்து நிற்கிறது. தமிழக அரசும், ஏனைய மாநில அரசுகளும் இம் முன்மாதிரியைப் பின்பற்றட்டும். எழுத்தாளர்கள் வாழும் காலத்திலேயே அவர்களது படைப்புகளை இலகுவாக வெளியிடும் வகையிலான திட்டங்கள் பலவற்றை உருவாக்கட்டும். நூலகங்கள் இலகுவாக அவர்கள்தம் நூல்களை வாங்கும் திட்டங்களை உருவாக்கட்டும். எழுத்தாளர்களின் நூல்களுக்குக் கொடுக்க வேண்டிய நூலுரிமைப்பணத்தை உரிய முறையில் கொடுப்பதை உறுதி செய்யும் திட்டங்களை உருவாக்கட்டும்.

நியுயோர்க் நடைபாதை ஓவியரின் கைவண்ணம்!


இங்குள்ள ஓவியத்துக்கு ஒரு வரலாறுண்டு. 1984இல் வரையப்பட்ட ஓவியம் இது. இன்றும் என்னிடம் மாற்றமின்றி அவ்விதமேயுள்ளது. இதனை வரைந்தவர் வீதி ஓவியர்களிலொருவர். பென்சிலால் வரையப்பட்ட ஓவியம்.

1983 கலவரத்தைத்தொடர்ந்து நாட்டை விட்டு நீங்கிக் கனடா வரும் வழியில், பாஸ்டன் நகரில் தடுக்கப்பட்டு, நியூயார்க் மாநகரத்தின் புரூக்லீன் நகரிலுள்ள தடுப்பு முகாமில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு வெளியே விடப்பட்டபோது, அடுத்த ஒன்பது மாதங்கள் வரையில் நியூயோர்க் மாநகரத்தில் மான்ஹட்டன் நகரில் பெரும்பாலும் எனது வாழ்க்கை கழிந்தது. 'West 4th Street / Avenue of the Americas வீதிகளிரண்டும் சந்திக்கும் சந்தியில் Avenue of the Americas' வீதியின் கிழக்குப் பக்கமாகவிருந்த நடைபாதையில் மனிதரின் உருவப்படங்கள் வரையும் வீதி ஓவியர்கள் சிலர் அவ்வழியால் செல்லும் மனிதர்களில் விரும்பும் சிலரின் உருவப்படங்களை வரைவது வழக்கம். ஒரு மாலை நேரம் அவ்வழியால் சென்று கொண்டிருந்தபொழுது நான்கு ஓவியர்கள் அந்நடைபாதையில் காணப்பட்டனர். அவர்களில் மூவருக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்து விட்டனர். ஒருவருக்கு ஒருவருக்குக் கிடைக்காததால் , தனிமையில் வாடிக்கையாளரை எதிர்நோக்கி வாடி நிற்கும் கொக்காகக் காத்திருந்தார். மற்ற ஓவியர்கள் தம் தொழிலில் மும்முரமாக ஈடிபட்டிருந்தனர். நான் தனித்திருந்த ஓவியரிடம் ஒருவரின் உருவப் படத்தை வரைவதற்கு எவ்வளவு செல்வாகும் என்றேன்.

என்னைப் பாதித்த முதலிருபது நூற் பட்டியல்!


இதுவரை வாசித்த நூல்களில் என்னைப் பாதித்த முக்கியமான இருபது நூல்களை எண்ணிப்பார்த்தேன். அவற்றின் பட்டியல் இது. இன்னும் பல நூல்களுள்ளன. ஆனால் நினைத்தபொழுது முதலில் நினைவுக்கு வந்தவை இவை. என்னைக் கவர்ந்த வெகுசனப்படைப்புகள் பட்டியலும் விரைவில் வரும். அது போல் என்னைக் கவர்ந்த தமிழகப்படைப்புகள், ஈழத்துப் படைப்புகள், என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள், வெகுசன எழுத்தாளர்கள் பட்டியல்களும் வெளியாகும்

1. புத்துயிர்ப்பு - டால்ஸ்டாய்
2. Crime and Punishment - Dostoyefsky
3. பாரதியார் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்புகள்.
4. The Brothers Karamazov - Dostoyefsky
5. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை - மார்க்ஸ், எங்கெல்ஸ்
6. தாய் - மார்க்சிம் கோர்க்கி
7. The Metamorphosis - Franz Kafka
8. The old man and the Sea - Ernest Hemingway
9. வெற்றியின் இரகசியங்கள் - அ.ந.கந்தசாமி
10. Candide - Voltaire
11. காலம் - வாசுதேவன் நாயர்
12. ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்! - ஜெயகாந்தன்
13. The Fabric of The Cosmos - Brian Greene
14. A brief History Of Time - Stephen Hawkings
15. Hyperspace -Michio Kaku
16. மோகமுள் - தி.ஜானகிராமன்
17. அன்னா கரீனினா - டால்ஸ்டாய்
18. ஏணிப்படிகள் - தகழி சிவசங்கரன்பிள்ளை
19. ஒரு கிராமத்தின் கதை - எஸ்.கே.பொற்றேகாட்
20. நீலகண்ட பறவையைத்தேடி.. - அதீன் பந்த்யோபாத்

நான் இரசித்த புனைவுக் காட்சியொன்று!


ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' தொடர்நாவலில் சம்பவங்களுக்கு உயிர்த்துடிப்புடன் ஓவியர் கோபுலு சித்திரங்கள் வரைந்திருப்பார்.  ஆனந்த விகடனில் நாவல் தொடராக வெளிவந்தபோதே நாவலில் வரும் ஒரு காட்சியும், அதற்கு கோபுலு வரைந்திருந்த ஓவியமும் பசுமரத்தாணி போல் ஆழ்மனத்தில் சென்று படிந்துவிட்டது. மானுட உளவியலைப் பிரதிபலிக்கும் ஜெயகாந்தனின் வசனங்களுக்கு உயிரூட்டியிருந்தார் கோபுலு. காலச்சுவடு பதிப்பகத்தினர் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' 'நாவலை வெளியிட்டபோது ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ஓவியங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். அந்நூல் என்னிடமுள்ளது. அவ்வப்போது அந்நாவலில் அப்பக்கத்தைப்புரட்டிப் பார்ப்பேன். மனத்தின் இறுக்கம் நெகிழ்ந்து இன்பத்திலாழ்ந்துவிடும். ஜெயகாந்தனின் வசனங்களையும், கோபுலுவின் அவ்வோவியத்தையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

இதழ்களில் தொடர்களாக வெளிவந்த நாவல்களை வெளியிடும் பதிப்பகங்கள் அத்தொடர்களில் வெளிவந்த ஓவியங்களையும் உள்ளடக்கி வெளியிடுவது சிறப்பு  மிக்கதென்பதென் எண்ணம். இதுபோல் முல்லை பதிப்பகத்தினர் வெளியிட்ட விந்தனின் பாலும் பாவையும் நாவலிலும் அந்நாவல் தொடராக வெளிவந்த ஓவியங்களுடன் வெளியிட்டிருக்கின்றார்கள். அந்நூலும் என்னிடமுள்ளது. ஆனந்தவிகட வெளியிட்ட பொன்னியின் செல்வன் நாவலிலும் ஓவியர் மணியத்தின் ஓவியங்களையும் உள்ளடக்கியிருந்தார்கள் என்பதும் இத்தருணத்தில் நினைவு கூரத்தக்கது.

நாம் இரசித்த காதல் கடிதமொன்று!

புனைகதைகளில் எத்தனையோ காதல் கடிதங்களை வாசித்திருக்கின்றேன். அவையெல்லாம் காலப்போக்கில் நினைவிலிருந்தும் மறைந்து போய்விட்டன, ஒன்றைத்தவிர. அந்த ஒன்று கு.அழகிரிசாமியின் 'தீராத விளையாட்டு' நாவலில் வரும் கடிதம். கல்கி சஞ்சிகையில் தொடராக வெளியான நாவல்களிலொன்று.

இக்கதையின் நாயகன் ரங்கராஜன் தன் தாய் ஜானகியைப்போல் மிகவும் அழகு வாய்ந்தவன். அவனும் அவனது அயல் வீட்டுக்குக் குடிவந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் விஜயாவுக்குமிடையில் காதல் முகிழ்க்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அவள் வேறொருவரைத்திருமணம் செய்கின்றாள். பின்னர் அவனுக்கும் வேறொரு திருமணம் நடந்து பல துயர நிகழ்வுகளுக்குள்ளாகிய அவனது வாழ்க்கையில் அவனது முன்னாள் காதலியின் தங்கை எதிர்ப்படுகின்றாள். அவளிடம் அவன் அவளது அக்கா பற்றி விசாரிக்கையில் அவள் இன்னும் தன்னுடன் எடுத்த புகைப்படங்களெல்லாவற்றையும் வைத்திருப்பதாகக் கூறுகின்றாள். அதற்கு அவன் இன்னுமொருவர் மனைவியான அவளது அக்கா தன்னிடம் வைத்திருக்கும் தன் ஞாபகத்தை உணர்த்தும் அனைத்தையும் அழித்துவிட வேண்டுமென்று கூறுகின்றான்.. பதிலாக அவள் தனக்கு எழுதிய கடிதத்தைக்கொடுத்து அதை அவளது அக்காவிடம் கொடுத்து அழித்து விடும்படியும், அவளிடமுள்ள தன்னை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் அனைத்தையும் வாங்கிவரும்படியும் கூறுகின்றான்.

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!

  காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...