Tuesday, November 22, 2022

- எழுத்தாளர் ரஞ்ஜனி  சுப்ரமணியம் சிறந்த கலை, இலக்கியத் திறனாய்வாளராகவும் அறியப்படுபவர். அவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மற்றும் 'குடிவரவாளன்' நாவல்களைப்பற்றி எழுதிய திறனாய்வுக் கட்டுரை இது.

**********************************************************

(பதிவுகள்.காம்)  ஆய்வு: வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' ,  'குடிவரவாளன்' நாவல்கள் - ஒரு நோக்கு! - ரஞ்ஜனி  சுப்ரமணியம் -

ஒரு அகதியின் வாழ்வும் உணர்வுகளும் அவனாக வாழ்ந்தாலன்றி புரிந்து கொள்வது சிரமமானது. கடந்த சில  தசாப்தங்களில் முன்னேற்றமடைந்த மேற்கு நாடுகளில் தஞ்சம் கோரிய  எம்மவர்களின் பயண மற்றும் வாழ்வியல் அவலங்கள், தாயகத்தில் இருக்கும் உறவுகளால் சரியான விதத்தில் மனம் கொள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான பதில் இன்றளவும் 'இல்லை'  என்பதாகவே அமையும். இத்தகைய   ஒரு சூழ்நிலையில் தனது புலம்பெயர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தரமான  படைப்பாளி  தன்னிலை ஆறுதலை மட்டுமல்ல, தனது அனுபவப் பதிவுகளின் மூலம் அகதி வாழ்வின் கொடூரமான மறுபக்கத்தை வாசகருக்காகவும் வரலாற்றுக்காகவும் விட்டுச் செல்கிறான்.  வ.ந. கிரிதரன் அவர்களின் அமெரிக்கா (முதற்பதிப்பு 1996  இரண்டாம் பதிப்பு 2019), குடிவரவாளன் ( 2015) ஆகிய இரு நாவல்களும் இவ்விடயத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இவ்விரு நாவல்களின் ஆசிரியரான வ.ந.கிரிதரன்  அவர்களது  எழுத்தின் இயல்புகளை, படைப்புகளினூடாக வெளிப்படும் பொதுப்பண்புகளால்   இனங்காண முடியும். தாய் மண்ணின் சாயம் போகாத நினைவுகளுடன் வாழ்பவர் ; வரலாற்றை ஆராய்ந்து அறிபவர் ; கவித்துவமான சிந்தனைகளைஉடைய இயற்கையின் ரசனையாளர்; வாழ்வியலை  தத்துவரீதியாகவும் பிரபஞ்ச சார்புத் தன்மையுடன் அர்த்தப்படுத்துபவர் ;  சஞ்சலமுற்ற நேரங்களில் பாரதியின் கவிதைகளால் புத்துயிர் பெறுபவர் ; தன்னிமிர்வும் பன்முக வியாபகமும் கொண்ட சிந்தனையாளர் ; வித்தியாசமான நடையுடன் கூடிய எழுத்தாளர்.இவரது எழுத்தின் போக்கினை உணர்ந்து நாவலுக்குள் உள்நுளையும் ஒருவரால் அதிக ரசனையும் புரிதலும் கொள்ள முடியும் என்பது உண்மை.

கனடாவிற்கான தன் பயணப் பாதையில் இடைமாறலுக்காக, சட்டபூர்வமாக  அமெரிக்காவின் பொஸ்டன் விமான நிலையத்திற்கு வரும் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால்  அகதி அந்தஸ்து கோர வேண்டிய  நிலைக்குத் தள்ளப்படுகிறான். இச்சந்தர்ப்பத்தில், ஜனநாயகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் உலகின் மாபெரும் வல்லரசொன்றின் கருணையற்ற இருண்ட  பக்கங்களையும் மனோரீதியான சித்திர வதைகளையும் விலாவாரியாக வெளிச்சமிட்டுக் காட்டுவதே  படைப்பாளியின் நோக்கம். அதில் பெருவெற்றியும் பெற்றுள்ளார்.

அக்கரைப் பச்சையாக மாயத் தோற்றம் தரும்  விடயங்கள் நிஜத்தில்  அவ்வாறல்ல என்ற புரிதல் இவ்விரு நாவல்களையும் வாசிக்கும் போது தோன்றியது. இலங்கை போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்களும், மூடிமறைப்புகளும், சட்ட மீறல்களும் சகஜமானவை என்பது பொதுவான அபிப்பிராயம். வியப்பேதும் இல்லை.  ஆனால் 'உலகின் பொலிஸ்காரன்' என்ற  நிலையைக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலும் இவ்வாறான  நிகழ்வுகள் தவறான புரிதல்களினால் இடம்பெறுகின்றன என்பது வியப்புக்குரியது.

 எண்பத்து மூன்று இனக்கலவரத்தின் பின் ஆரம்பமாகும் இவ்விரு நாவல்களும் பிரதான கதாபாத்திரமான இளங்கோ என்ற இளைஞனின் பார்வையில் கூறப்பட்டுள்ளன.  படித்தவர்களும் உயர் பதவியில் இருந்தவர்களும் உயிர்ப்பாதுகாப்பு கருதி புலம் பெயரத் துணியும் ஒரு சூழ்நிலை. பொதுநலவாய நாடுகளில் ஒன்றான இலங்கையில் இருந்து கனடாவிற்குச் செல்வதற்கு விசா எடுக்கத் தேவையில்லை என்ற   அனுகூலத்தைப் பாவித்து, பாரிஸ் நகருக்கும் அங்கிருந்து பொஸ்டன் ஊடாக கனடாவின் மான்ரியாலுக்கும் செல்ல உத்தேசித்திருக்கும் இளங்கோ உட்பட்ட ஐவரை, பொஸ்டனில் இருந்து கனடாவின் மன்றியேல் நகருக்கு ஏற்றிச் செல்ல நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக டெல்டா விமான நிர்வாகம் மறுத்து விடுகிறது. இதனால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படுவதைத் தடுப்பதற்காக பொஸ்டனில் அகதி அந்தஸ்து கோரும் நிலைக்கு  ஐவரும் தள்ளப்படுகின்றனர். பொஸ்டனில் இருந்து நியூயோர்க்குக்கு கொண்டு செல்லப்பட்டு சிறைக் கூடத்தில் தடுப்புக் கைதிகள் ஆக்கப்படுகின்றனர்.

Wednesday, November 16, 2022

தொடர்நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (10) - ஏ! அதிமானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் 10 -  ஏ! அதிமானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்?

எதிரே விரிந்து கிடக்கின்றது கட்டடக்காடு. எங்கு நோக்கினும் கட்டடங்கள்! கட்டடங்கள்! கட்டடங்கள்! கனல் உமிழ்ந்திடும் பரப்புகள் சிரித்துக்கொண்டிருக்கின்றன.  ஒரு காலத்தில் என் பிரியத்துக்குகந்த இடங்களாக விளங்கிய இடங்களிலெல்லாம் புதிதாகக் கட்டட விருட்சங்கள் வளர்ந்து, உயர்ந்து நிற்கின்றன. ஒரு காலத்தில் பசுமை பூத்துக்கொழித்த ஆதிமானுட சமுதாயத்தில் இவ்வுலகு எப்படியிருந்திருக்குமென்று எண்ணம் சென்றது.

"என்ன கண்ணா யோசனை?"

எதிரில் அதே மந்தகாசப் புன்னகையுடன் நிற்பவள் என் மனோரஞ்சிதமேதான். என் கண்ணம்மாவேதான்.

"எதிரே விரிந்து கிடக்கும் கட்டடக்காட்டைப் பற்றிச் சிந்தித்தேன். வேரொன்றுமில்லை கண்ணம்மா!"

"கட்டடக்காடு. அற்புதமானதொரு படிமம். இப்படிமம் எனக்கு மானுடவியலாளர் டெஸ்ட்மன் மொறிஸ் நினைவை ஏற்படுத்துகிறது கண்ணா."

"உண்மைதான் கண்ணம்மா, நானும் அவரைப்பற்றிக் கேட்டிருக்கின்றேன். அவரது ''Human zoo ('மனித மிருகக்காட்சிசாலை') வாசித்திருக்கின்றேன். அதிலவர் Concrete Jungle ('காங்ரீட் காடு' ) என்ற சொல்லைப்  பாவித்திருக்கின்றார். அதுவே நான் முதன் முதலில் அறிந்த கட்டடக்காடு என்னும் பொருள்தரும் சொல். என்றாலும் உன்னை நினைத்தால் எனக்குச் சில வேளைகளில்  பிரமிப்புத்தான் ஏற்படுகின்றது. நீயும் என்னைப்போல் கண்டதையெல்லாம் வாசித்துத் தொலைக்கின்றாய். அதுதான் எனக்கு உன்னில் மிகவும் பிடித்த விடயமடி."

தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (9) - மின்காந்தமணி என்னுமென் சகி! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்பது - மின்காந்தமணி என்னுமென் சகி!

வழக்கம்போல் முடிவற்று விரிந்திருக்கும் இரவு வானை, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவும் வானைப் பார்த்தபடியிருக்கின்றேன்.  இரவு வான் எப்பொழுதும் புதிர்களை அடுக்கி வைத்துள்ள நூலைப்போல் என்னைப் பிரமிக்க வைக்குமொன்று. காலத்தின் அடுக்குகளுக்குள் விரிந்து கிடக்கும் இரவு வான் இருப்பின் புதிர்களின் விடைகளைத் தாங்கி நிற்கும் ஞானப்பெட்டகமாக எப்பொழுதும் எனக்குத் தெரிவதுண்டு. அதனால் அதனை எத்தனை தடவைகள் பார்த்துக்கொண்டிருந்தாலும் எனக்கு அலுப்பதேயில்லை.

"என்ன எவளைப்பற்றி யோசனை?"

எதிரில் மந்தகாசப் புன்னகையுடன் மனோரஞ்சிதம் நிற்கின்றாள்.

"வேறு யாரைப்பற்றி? எல்லாம் என் சகியைப்பற்றித்தான். இருப்பில் என்னுடன் எப்பொழுதுமிருக்கும் என் இன்பச் சகியைப்பற்றித்தான்  கண்ணம்மா"

"கண்ணா,  இந்தக் கண்ணம்மாவை விட்டால் உனக்கு வேறு யார் சகி இருக்க முடியும்?"

"யார் சொன்னது இருக்க முடியாது என்று. இவள் என்னை எப்பொழுதும்  வியப்பிலாழ்த்தும் என் சகி. மின்காந்தமணி. இவளது ஆளுமை எப்பொழுதும் என்னைப் பிரமிக்க வைக்குமொன்று."

'அதென்ன மின்காந்தமணி. வித்தியாசமான பெயராகவிருக்கிறதே. கண்ணா யாரிவள்? உண்மையா இல்லை இதுவும் உன் வேடிக்கைப்பேச்சுத்தானா?"

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (8) - காலக்கப்பற் பயணமும் 'எதிர்காலச்சித்தன் பாடல்' கவிதையும்! - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் எட்டு -  காலக்கப்பற் பயணமும் 'எதிர்காலச்சித்தன் பாடல்'  கவிதையும்!

அந்த உலகம் எனக்குப் பலவிதங்களிலும் பிடித்த உலகம் என்பேன். என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில், என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீசத்தொடங்குகையில், என் மனத்தின் அமைதி சீர்குலையத்தொடங்குகையில், நான் அந்த உலகை நோக்கிப் பயணமாகத் தொடங்குகின்றேன். அந்த உலகப்பயணம் தரும் திருப்தியை எனக்கு வேறெந்தப் பயணமும் தருவதில்லை. அந்த உலகில் நானும் காட்சிகள் அற்புதமானவை. பறவைகளைப் பற்றிய புரிதல்களை, அறிவியற் சாதனைகளை வெளிப்படுத்தும் அந்த உலகில் நான் எவ்வளவு நேரமானாலும் என்னை மறந்து பயணிப்பேன்.

அந்த உலகின் மிகச்சிறப்புகளிலொன்று காலக்கப்பல். அந்த உலகின் காலக்கப்பலைப்போல் இன்னுமொரு காலக்கப்பலை நான் வெறெங்கும் கண்டதில்லை. அந்தக் காலக்கப்பற் பயணத்துக்காகவே நான் அடிக்கடி அங்கு செல்வதுண்டு. அந்தக்கப்பலிலேறி ஆதியில் இங்கு ஆட்டம்போட்ட இராட்சதப்பறவைகள், மிருகங்களின் காலகட்டத்துக்கு என்னால் மிகவும் இலகுவாகச் சென்று விட முடிகின்றது. ஆனால் அக்காலக்கப்பல் என்னை அவற்றிடமிருந்து திறமையாக பாதுகாக்கவும் செய்கின்றது. என்னால் அம்மிருகங்கள்,பட்சிகளின் அபாயங்களைப்பற்றிய சிந்தனைகளை நீக்கி அங்கு அக்கப்பலில் பயணிக்க முடிகின்றது.என்னால் உலகின் மகா சர்வாதிகாரிகளின் ஆட்டங்களை , ஏற்படுத்திய பேரழிவுகளை அவர்களுக்கருகில் நின்று அவதானிக்க அக்கப்பல் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருகின்றது. கிளியோபட்ராவின் பேரழகில் எனை மறக்க முடிகின்றது. இராஜஇராஜ சோழனின் கப்பற் படையில் தென்கிழக்காசியாவை நோக்கி அல்லது இலங்கையை நோக்கிப் பயணிக்கவும் முடிகின்றது.

Tuesday, October 25, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (7) ஓரு பழைய புத்தகக்கடை அனுபவமும், எழுத்தாளர் முத்துசிவத்துடனான சந்திப்பும்! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஏழு:   ஓரு பழைய புத்தகக்கடை அனுபவமும், எழுத்தாளர் முத்துசிவத்துடனான சந்திப்பும்!

எனக்குப் பிடித்த விடயங்களிலொன்று பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது. புதுக் கடைகளில் வாங்குவதை விடப் பழைய புத்தகக் கடைகளில்  வாங்குவதிலுள்ள இன்பமே தனி. பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதைப்போல் எல்லாவகைப் புத்தகங்களும் புதுப்புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை. உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன். உங்களால் பழைய  புத்தகக் கடைகளில் வாங்குவதைப்போல் புதுப்புத்தகக் கடைகளில் பால்ய பருவத்தில் பிடித்தமான இதழொன்றில் தொடராக வெளியான, ஓவியங்களுடன் கூடிய , அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட நூல்களை ஒருபோதுமே பெற முடியாது. அந்நூல்களைக் கைகளால் அளைகையிலுள்ள சுகம் இருக்கிறதே அதுவொரு பெரும் சுகமென்பேன். அவ்வகையான சுகத்தினை ஒருபோதுமே உங்களால் புதுப்புத்தகக் கடைகளில் பெற முடியாது. அவை மானுட இருப்பின் ஒரு காலத்தின் பதிவுகளை உள்ளடக்கியவை. நான் அவ்வகையாக 'பைண்டு' செய்யப்பட்ட புத்தகங்களைப்பற்றிக் கூறுகின்றேன். நான் இவ்விதம் கூறுவதால் என்னை நீங்கள் நான் புதுப்புத்தகக்கடைகளின் பிரதான எதிரி என்று மட்டும் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்.
ஆயினும் அவ்விதம் நீங்கள் கருதினால் அதை நான் தடுக்கப்போவதில்லை. ஏனெனில் அது உங்களின் சுதந்திரத்தில் நான் தலையிடுவதாக அமைந்து விடும். அதற்காக நான் வருந்தப்போவதுமில்லை.

அண்மையில் கூட வழியில் நானொரு பழைய புத்தகக் கடையினைக் கண்டபோது மனம் கேட்கவில்லை. உள்ளே எட்டிப்பார்த்தாலென்ன என்ற எண்ணமெழுந்தபோது வீடு முழுக்கக் குவிந்துள்ள புத்தகக் குவியல்களை ஒருமுறை எண்ணினேன். அண்மையில்தான் முடிவு செய்திருந்தேன் இனியும் புத்தகங்கள் வாங்குவதில்லையென்று. வாங்கிக்குவித்துள்ளவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வேண்டியவர்களுக்கு, புத்தகப்பிரியர்களுக்கு, நூலகங்களுக்குக் கொடுத்துவிடவேண்டுமென்று. இருந்தாலும் மனங் கேட்கவில்லை. இம்முறைமட்டும் கடைசித்தடவையாக இருந்துவிடட்டுமென்று எண்ணினேன். இவ்விதம் முடிவெடுத்தவுடன் அந்தப் பழையப் புத்தகக் கடைக்குள் நுழைவது எளிதாயிற்று.

நானே எதிர்பாராதவாறு, நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த, என் பால்யகாலத்து விருப்புச் சஞ்சிகைத் தொடரொன்று அழகாக பைண்டு செய்யப்பட்ட நிலையில் கிடைத்தது. எனக்குப் பிடித்த எழுத்தாளரின் வாழ்க்கை அனுபவத்தையொட்டிய உள்ளத்தைத் தொட்டுச் செல்லும் புனைகதை. புத்தகத்தின் முதல் பக்கத்தைப் பார்த்தேன். அழகான கையெழுத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: "என் பால்ய காலத்துச் சகிக்கு என் பிரிய அன்பளிப்பு" எழுதியவர் பெயரைப்பார்த்தேன். என் பதின்மப் பருவத்தில் என் பால்ய காலத்துச் சகிக்கு நான் அன்பளிப்பாகக் கொடுத்திருந்த புத்தகம் அது.

இப்பொழுது சொல்லுங்கள். உங்களால் இது போன்றதொரு பழைய புத்தகத்தைப் புதுப்புத்தக்கடைகளிலொன்றிலாவது வாங்க முடியுமா? பழைய புத்தகக்கடைகளில் பழைய புத்தகங்கள் மட்டும்தாம் கிடைக்கவேண்டுமென்பதில்லை. பழசாகிவிட்ட இதயங்களும் அங்கு கிடைப்பதுண்டு.

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (6): ஒட்டகங்கள் - வ.ந.கிரிதரன் -



அத்தியாயம் ஆறு: ஒட்டகங்கள்!

என் பதின்ம வயதுகளில் என் வயதுக்கு மீறிய வளர்த்தி கண்டு நண்பர்கள் 'வாடா ஒட்டககச் சிவிங்கி' என்பார்கள். ஏனென்றால் எனக்கு நீண்ட கால்கள். ஓட்டகச் சிவிங்கி என்பதை விட அதிலுள்ள ஒட்டகம் எப்போதும் என்னைக் கவர்வதுண்டு. அதற்குக் காரணம் அதன் இயல்பும், உறுதியுமே. பாலை வனச் சூழலில் தாக்குப்பிடிக்கும் வகையில் அதன் உடலமைப்பு அமைக்கப்பட்டுள்ளது படைப்பின் அற்புதமென்பேன். அதன் முதுகிலுள்ள திமில்களில் கொழுப்பையும்   , இரப்பையிலுள்ள அறைகளில் நீரையும் சேமித்து வைக்கும் ஒட்டகங்கள் பத்து மாதங்கள் வரையில் நீரருந்தாமல் வாழக் கூடியவை. குளிர் வெப்ப நிலைகளுக்கு ஈடுகொடுத்து உடல் வெப்பநிலையை மாற்றி வாழும் தன்மை மிக்கவை. பாலையில் வீசும் மணற் புயல்களிலிருந்து பாதுகாக்கும் தன்மை மிக்க மூக்குகள். கண்கள், காதுகளைக் கொண்டவை. கண் இமைகள் மூடியிருக்கும்போதும் பார்வையைத் தடுக்காத வகையில் அமைந்துள்ளதாகவும் அறிந்திருக்கின்றேன்.  அது மட்டுமல்ல அதிக சுமை தாங்கி, விரைவாக ஓடும் வல்லமையும் மிக்கவை.

ஓட்டகங்கள் என் கவனத்தை ஈர்த்ததற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இனக்கலவரங்களால் சொந்த  மண்ணில் , சர்வதேசப் பந்தின் மூலை முடுக்கெல்லாம் அகதிகளாக அலைந்து திரிந்து , எதிர்ப்படும் சவால்களையெல்லாம் எல்லாம் , புயல்களையெல்லாம் எதிர்கொண்டு செல்லும் ஒட்டகங்களாக எம்மவரை, என்னை நான் இனங்காணபதுண்டு. இவ்வகையில் அகதிகளுக்கொரு குறியீடாக நான் ஓட்டகங்களை எண்ணுவதுண்டு. ஒட்டகம் என்னும் சொல் ஒரு படிமமாக எனக்குத் தோன்றுவதுண்டு.

"என்ன கண்ணா சிந்தனை. அப்படியென்ன தலை போகிற சிந்தனை. கப்பலேதும் கவிழ்ந்து விட்டதா?"

எதிரில் கேலி கொஞ்சும் குரலில் கேட்டபடி வந்தவள் மனோரஞ்சிதம்.

"சரி கண்ணம்மா, நீதானே மிகவும் திறமைசாலியென்று உன்னை அதிகம் மெச்சிக்கொள்வாயே. நீயே சொல்லு பார்க்கலாம் நான் என்ன யோசிக்கிறேனென்று?"

"உன் மனத்திலை இருக்கிறதைக் கண்டு பிடிக்கும் சக்தியெல்லாம் எனக்க்கில்லை கண்ணா. பேசாமல் நீயே சொல்லிவிடு."

"இல்லை. உனக்கு ஒரு துப்பு தருகின்றேன். அதிலிருந்து கண்டு பிடித்துக்கொள். இது ஒரு மிருகம்."

"மிருகமா? " என்று கூறிவிட்டு ஒருமுறை கலகலவென்று சிரித்தாள் மனோரஞ்சிதம்.

"மிருகமென்றால் மிகவும் இலகுவானதாச்சே. உனக்கு மிகவும் பிடித்த மிருகம், பறவையக் கண்டு பிடிப்பது அவ்வளவின்றும் கஷ்ட்டமானதல்ல கண்ணா."

இவ்விதம் கூறியவள் தொடர்ந்தாள் :" நீ குறிப்பிடும் மிருகம் இந்தியாவில் ராஜஸ்தானில் காணப்படும் ஒன்றா?" கூறியவள் கண்களையும் சிமிட்டினாள்.

"ஏன் கண்ணம்மா சுற்றி வளைப்பு. நீதானே கண்டுபிடித்து விட்டாயே. பேசாமல் மிருகத்தின் பெயரையே கூறுவதுதானே."

அதற்கு மனோரஞ்சிதம் அருகில் ஓட்டும்  வகையில் வந்து "ஓட்டட்டுமா. இந்த ஒட்டகத்துடன் ஒட்டட்டுமா" என்று என் மீது தன் உடலால் பலமாக இடித்தாள்.

அவளது மென்னுடல் பட்டு என்னுடல் ஒரு கணம் சிலிர்த்தது.

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (5): ஆனை பார்த்த அந்தகர்கள்! - வ.ந.கிரிதரன் -



அத்தியாயம் ஐந்து - ஆனை பார்த்த அந்தகர்கள்!

மனோரஞ்சிதம் அவ்வப்போது தமிழ்க் கலை, இலக்கியம் பற்றியும் கருத்துகளை உதிர்ப்பதுண்டு. அவளது கருத்துகள் எப்பொழுதுமே சிந்தனையைத் தூண்டுபவையாக, ஆழமான தர்க்கத்தை வேண்டுபவையாக இருப்பது கண்டு நான் பெரிதும் ஆச்சரியப்படுவதுண்டு. இவ்விதமாக அவளைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கையில் அவள் ஆழ்ந்த சிந்தனை நிலையினைக் கண்டு "என்ன பலமான சிந்தனை?" என்று கேட்டாள். கேட்டுவிட்டு என் பதிலை எதிர்பார்த்து என்னையே பார்த்து நின்றாள்.

"வேறொன்றுமில்லை கண்ணம்மா, எல்லாம் நம் காலத்து இலக்கியவாதிகளைப்பற்றித்தான். ஆளுக்காள் குழுக்களாகப் பிரிந்து நின்று தாமே சரியென்று வாதிட்டுக்குகொண்டிருக்கும் இவர்களைப் பார்த்தால் சிரிப்பு வராமல் வேறென்ன வரும். நீயே சொல் கண்ணம்மா."

"இலக்கியமோர் யானை" என்றாள் பதிலுக்கு மனோரஞ்சிதம்.

"யானையா?"

'ஓம். யானைதான்" என்று தீர்மானமாகச் சொன்னாள் மனோரஞ்சிதம் மீண்டும். அவளது அந்த உறுதி அவள் தன் தீர்மானத்தில் மிகவும் தெளிவாகவிருக்கின்றாள் என்பதை நன்கு புலப்படுத்தியது.

"ஒரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான் கண்ணம்மா.  இலக்கியத்தில்தான் எத்தனை எத்தனை போக்குகள்."

"கண்ணா, போக்குகள் பல இருப்பது தவறானதொன்றல்ல.அவையெல்லாம் வளர்ச்சியின் அறிகுறிகளே.  பிரச்சினை என்னவென்றால்...."

"என்ன பிரச்சினை கண்ணம்மா?"

"இலக்கியத்தின் போக்குகள் அனைத்துமே மனித இருப்பைப் பல்வழிகளில் வெளிப்படுத்துபவை. மனிதரின் அறிவு, புரிதலுக்கேற்ப இவையும் வேறுபடும். மனிதர்கள் எல்லாரும் ஒரே நிலையில்  அறிவைப்பொறுத்தவரையில் இருப்பவர்கள் அல்லர். பல்வேறு படிக்கட்டுகளில் இருப்பவர்கள்.  எல்லாராலும் எல்லாப் போக்குகளையும் இரசிக்க முடியாது. புரிந்துகொள்ள முடியாது. இல்லையா கண்ணா?"

"அம்மாடியோவ்.. என் கண்ணம்மாவுக்குள்  இவ்வளவு விசயங்களா? உண்மையிலேயே பிரமிப்பைத் தருகிறாயடி கண்ணம்மா."

"ஏன் ஆணுக்கு நிகராகப் பெண்கள் இருப்பதை நம்ப முடியவில்லையா கண்ணா" இவ்விதம் கேலியாகக் கண்களைச் சிமிட்டிய மனோரஞ்சிதம் தொடர்ந்தாள்:

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...