Friday, June 16, 2023

விரைவில் வெளிவரவுள்ள நூல்: வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்'

விரைவில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவரவுள்ள எனது கவிதைத்தொகுதி 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்'. காலச்சுவடு பதிப்பகத்தின் சிறப்பான வடிவமைப்பில் வெளியாகும் தொகுப்பு.


தொகுப்பிலுள்ள மூன்று கவிதைகள்

குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
வியாபாரியல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன்..
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
ஆனால் அவை நொண்டிக்குதிரைகளல்ல.
என்னிடமுள்ள குதிரைகள் அனைத்துமே
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்பபதில்லை.
நான் நொண்டிக்குதிரைகளை வளர்ப்பவனோ,
விற்பவனோ அல்லன்.
இருந்தும் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை
அதிகமாகிவிட்டது.
குதிரைத் திருடர்களே! கவனம்.
திருடிய குதிரைகளை வெகு சாமர்த்தியமாக
உங்கள் மந்தையில் கலந்து
விடுவதில் பலே கில்லாடிகள் நீங்கள்.
என்னிடம் நீங்கள் திருடிய அல்லது
திருடப் போகும் குதிரைகள்
நிச்சயம் நொண்டிக்குதிரைகளல்ல.
ஆனால் அவை நல்லவை.
வல்லவையும் கூடத்தான்.
ஆனால் அவை முரட்டுக் குதிரைகள்.
முட்டி மோதவும் தயங்காத
முரட்டுக் குதிரைகள்.

Tuesday, March 28, 2023

அத்தியாயம் இருபத்திமூன்று - நான் மீண்டும் விக்கிரமாதித்தன் பேசுகின்றேன்! - வ.ந.கிரிதரன் -

இதுவரை இங்கு நான் கூறியவற்றிலிருந்து நிச்சயம் நீங்கள் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனைப்பற்றிச் சிறிதளவாவது அறிந்திருப்பீர்கள் என்று நிச்சயமாக நிம்புகின்றேன். ஏற்கனவே நான் கூறியதுபோல் நவீன ஓவியப்பாணியான கியூபிசப் பாணியில் உருவங்கள் அவை எவையாயினும் அவை உருவாக்கப்பட்ட கேத்திரகணித வடிவங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்படும். உணரப்படும். அவ்வடிவங்களிலிருந்து உருவங்கள் உய்த்துணரப்படுமென்பது அப்பாணி பற்றிய எளிமையானதொரு விளக்கம் மட்டுமே. கியூபிசப் பாணியில் உருவங்களின் இருபரிமாணங்களே முக்கியமாகக்  கையாளப்பட்டன. மூன்றாவது பரிமாணமான ஆழப்பரிமாணம் அங்கு முக்கியமானதொன்றல்ல. ஆனால் அதே சமயம் உருவங்கள் கேத்திரகணித வடிவங்களின்  சேர்க்கையாக அவதானிக்கப்பட்டாலும் அவை ஒரு கோணத்திலிருந்து மட்டும் அவதானிக்கப்படவில்லை. அங்கமொன்று பல்வேறு கோணங்களிலிருந்து அவதானிக்கப்பட்டன. உதாரணத்துக்கு முகம் ஒரு கோணத்தில் பார்க்கப்படலாம். கண்கள் இன்னுமொரு கோணத்தில் பார்க்கப்படலாம். இவற்றிலிருந்து பார்க்கப்படும் காட்சியை , அது வெளிப்படுத்தும் உணர்வை உய்த்துணர வேண்டும். பிக்காசோவின் கியூபிசப்  பாணி ஓவியங்கள் நவீன விக்கிரமாதித்தனுக்கு மிகவும் பிடித்தவை. ஓவியமொன்றினை இவ்விதம் உய்த்துணர்வது போன்றதுதான் மனிதரின் ஒருவரின் ஆளுமையினை  அறிந்து கொள்வதும்.

இதுவரை இங்கு நீங்கள் வாசித்தவற்றிலிருந்து ஓரளவுக்கு என்னைப்பற்றி , என் ஆளுமையைப் பற்றி  நீங்கள் அறிந்திருந்தால் அது ஓரளவுக்குப் போதுமானது. ஏனென்றால் நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனின் வாழ்க்கை அனுபவங்களை விபரிக்கக்கூடும். அப்போது இவனைப்பற்றி இன்னும் நன்கு புரிவதற்கு இதுவரை விபரித்த விபரிப்புகள் நிச்சயம் உதவுமென்றும் நிச்சயமாக நம்புகின்றேன்.

Thursday, March 16, 2023

வாழ்த்துகிறோம்: பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Pyre' நாவல் 'சர்வதேச புக்கர்' விருதுக்குப் பரிந்துரைப்பு! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Pyre' ,அனிருத்தன் வாசுதேவனால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட நாவல்.  'பூக்குழி' தமிழில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளியானது. ஆங்கில மொழிபெயர்ப்பு  Hamish Hamilton Limited பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிப்பகமானது பென்குவின் நிறுவனத்தின் ஐக்கிய இராச்சியத்திலுள்ள சேய் நிறுவனமாகும் என்பதும், குறிப்பிடத்தக்கது.  

Tuesday, March 7, 2023

தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (22) - ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)! - வ.ந.கிரிதரன் -

"என்ன  கண்ணா ஆழ்ந்த சிந்தனை. எல்லாம் என்னைப்பற்றித்தானே?" இவ்விதம் கூறியவாறே  வழக்கம்போல் கண்களைச் சிமிட்டியவாறே வந்து தோளணைத்தாள் மனோரஞ்சிதம். அவளுடலின் மென்மையில் ஒருகணம் நெஞ்சிழகியது.

"கண்ணம்மா, உன்னைப்பற்றி நினைப்பதற்கு நானுன்னை மறந்திருக்க வேண்டும்.ஆனால் நீதான் என் சிந்தையெங்கும்  எந்நேரமும் வியாபித்து, கவிந்து கிடக்கின்றாயேயடி. எப்படி உன்னை நினைப்பேன்? "

வழக்கமான கேள்விதான். வழக்கமான பதில்தான். இருந்தாலும் இப்பதில் மனோரஞ்சிதத்துக்குத்  திருப்தியையும், மகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தன என்பதை அவளது முகபாவமே காட்டியது.

Saturday, March 4, 2023

எழுத்தாளர் அ.ந.கந்தசாமி ஓர் அறிமுகம்! - வ.ந.கிரிதரன் -


 - எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'அபத்தம்' இதழின் மூன்றாவது இதழில் வெளியாகியுள்ள வ.ந.கிரிதரனின் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி பற்றிய விரிவானதோர் அறிமுகக் கட்டுரை. 'அபத்தம்' இதழை வாசிக்க  

எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14. அவர் மறைந்து 55 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தருணத்தில்  இலக்கியப் புலமை காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்றழைக்கப்பட்ட  அவரது கலை, இலக்கியப் பங்களிப்பை நினைவு கூர்வதும் பொருத்தமானதே. சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், இலக்கியத்திறனாய்வு, மொழிபெயர்ப்பு என இலங்கை மற்றும் உலகத் தமிழ்  இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் காத்திரமான பங்களிப்பை நல்கியவர் அ.ந.க. அத்துடன் ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமான ஒருவராகவும் கருதப்படுபவர்.  தன் குறுகிய வாழ்வில் தனக்குப் பின்னால்  எழுத்தாளர் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர். அத்துடன் சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் விளங்கியவர்.   நாற்பதுகளில் வில்லூன்றி மயான சாதிப் படுகொலை பற்றி முதற்தடவையாகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த கவிஞர் அ.ந.கந்தசாமியே.

தமிழ் இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பை நல்கிய அ.ந.க.வை விரிவாக இனம் காண்பது முக்கியம்.  அவரது பன்முகப் பார்வைகளையும் வெளிக்கொணரும் வரையில்  அவரது படைப்புகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுத் தொகுப்புகளாக வெளிவருவதும் அவசியம்.    இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல அந்த மகத்தான எழுத்துக் கலைஞனின் தன்னலமற்ற , இலட்சிய வேட்கை மிக்க இலக்கியப்பணிக்கு  செய்யப்பட வேண்டிய  கைம்மாறுமாகும். இதுவரையில் அவரது இரு படைப்புகள்  நூலுருப் பெற்றுள்ளன. அதுவும் அவரது இறுதிக் காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த ‘வெற்றியின் இரகசியங்கள்’. அடுத்தது ‘மதமாற்றம்’ மதமாற்றம் கூடத் தனிப்பட்ட ஒருவரின் நிதியுதவியின் மூலம் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்  வெளியிட்ட நூல்.  'பதிவுகள்.காம்' பதிப்பில் அமேசன் - கிண்டில் மின்னூல்களாக  மனக்கண் (நாவல்) ,  எதிர்காலச்சித்தன் பாடல் (கவிதைத்தொகுப்பு) &  நான் ஏன் எழுதுகிறேன்? (கட்டுரைத் தொகுப்பு) ஆகிய படைப்புகள் வெளிவந்துள்ளன.

Monday, February 20, 2023

தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (21) - பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்! கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்! - வ.ந.கிரிதரன் -

தொலைகாட்சியில் காட்டுயிர்கள் பற்றிய ஆவணக்காணொளியொன்று ஓடிக்கொண்டிருந்தது. மிருகங்கள் ஒன்றையொன்று கொன்று தின்று இருப்பில் தப்பிப் பிழைக்கும் கொடூர காட்சிகளை உள்ளடக்கும் காணொளி.

"என்ன கண்ணா, அப்படியென்ன டிவியிலை போய்க்கொண்டிருக்கு நீ ஆர்வமாய்ப் பார்க்கிறதுக்கு" என்று கூறியபடி வந்தாள் மனோரஞ்சிதம். வந்தவள் அருகில் நெருங்கி அணைத்தாள்.

"காட்டுயிர்களைப் பற்றிய காணொளியொன்று கண்ணம்மா. தப்பிப்பிழைத்தலுக்காக உயிர்கள் ஒன்றையொன்று கொன்று தின்பதை விபரிக்கும் காணொளி. பார்ப்பதற்குக்  கொடூரமான காட்சிகளைக்கொண்டது. நீ தாங்க மாட்டாய். பேசாமல் போய்விடு கண்ணம்மா" என்றேன்.

"கண்ணா, நான் இது போன்ற பல 'டொக்குமென்ரி'களைப் பார்த்திருக்கின்றேன். என்னால் இவற்றைத் தாங்கிக்கொள்ள  முடியும். கொடூரமானவைதாம். ஆனால் இருப்பு இப்படித்தானே இருக்கிறது கண்ணா"

"கண்ணம்மா,  நீ கூறுவதும் சரிதான். எனக்கு இதனைப் பார்க்கையில் பாரதியின் கவிதை வரிகள் சில நினைவுக்கு வருகின்றன."

Monday, February 6, 2023

வெங்கட் சாமிநாதனும் கலை மற்றும் மார்க்சியம் பற்றிய அவர்தம் பார்வைகளும்! - வ.ந.கிரிதரன் -

- ஜோர்ஜ் இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'அபத்தம்' மின்னிதழில் வெளியான கட்டுரை. -

அமரர் கலை, இலக்கியத் திறனாய்வாளர் வெங்கட் சாமிநாதன் என் வாழ்க்கையில் மறக்க  முடியாத ஆளுமைகளில் ஒருவர். 'பதிவுகள்' இணைய இதழ் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர். இறுதி வரை 'பதிவுக'ளில் எழுதிக்கொண்டிருந்தவர். அவரது கலை  மற்றும் மார்க்சியம் பற்றிய எண்ணங்களை அவரது எழுத்துகளூடு  விபரிப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

'நம் உணர்வுகளும், பார்வையும்தான் நம் அனுபவ உலகைத் தருகின்றன. அவைதாம் கலைகளாகின்றன' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்'; பக்கம் 36) `'சித்திரமாகட்டும், இலக்கியமாகட்டும் சிற்பங்களாகட்டும் அது ஒரு தனிமனிதக் கலைஞனும் சமூகமும் கொண்ட உறவாடலின் பதிவு' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்''; பக்கம் 36) அதே சமயம் 'கலைஞரின் மன உந்துதல்களுக்கேற்ப, அக்காலத்துச் சூழ்நிலைகளுக்கேற்ப, மீறியே ஆக வேண்டிய சுய, சமூக நிர்ப்பந்தங்களுக்கேற்ப, தானறிந்தோ அறியாமலோ, மரபுகள் மீறப்படுகின்றன' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்': பக்கம் 39) என்று குறிப்பிடும் கலை, இலக்கிய விமர்சகர் அமரர் வெங்கட் சாமிநாதன் அவர்கள்  'சமூக மாற்றங்களோ' அல்லது கலைப்படைப்பு மனதிலேற்படுத்தும் விளைவாக உருவாகும் மாற்றங்களோ முன்கூட்டியே விதிகளால் தீர்மானிக்கப்பட்டுப் பெற முடியாது' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்'; பக்கம் 40) என்கின்றார்.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...