Friday, March 22, 2024

தொடர் நாவல்: மனக்கண் (3) மூன்றாம் அத்தியாயம்: களிப்பும் கலக்கமும்

 

மூன்றாம் அத்தியாயம்: களிப்பும் கலக்கமும்

ஸ்ரீதரின் திட்டப்படி அன்று மாலை தான் அவன் பத்மா வீட்டுக்குப் போக வேண்டும். அநேகமாக நாலரை மணிக்குப் பிறகு போனால் போதுமானது என்று அவன் முடிவு செய்திருந்தான். எனினும், காலையிலிருந்தே அதற்குரிய வேலைகளை ஆரம்பித்துவிட்டான். அவன் இது சம்பந்தமாகச் செய்த முதல் வேலை, கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட்டில் 48/17ம் இலக்க வீடு எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்ததாகும். உண்மையில் ஸ்ரீதருக்கு அன்று இருப்பே கொள்ளவில்லை. பத்மா வீட்டுக்கு முதன் முதலாகப் போகப் போகிறோம். அவளுக்கும் தனக்குமுள்ள தொடர்புகள் இதன் மூலம் மேலும் வலுவடையும் என்ற எண்ணம், அவனுக்குப் பத்மா வீட்டுக்குச் செல்வதில் அதிக ஆர்வத்தை உண்டு பண்ணியது.  இருந்த போதிலும், அவன் மனதில் ஒரு பயமும் தயக்கமும் ஏற்படவே செய்தன. பரமானந்தர் முன்னால் நான் எப்படி நடந்து கொள்வது, என்ன பேசுவது, அவரது முன்னிலையில் தன்னம்பிக்கையுடன் தன்னால் நடந்து கொள்ள முடியுமா? ஒரு வேளை அவர் முன்னால் திக்கித் தடுமாறிப் பரிகசிக்கத் தக்க முறையில்  நான் நடந்து கொள்வேனோ என்பது போன்ற இளமைக்குரிய இயல்பான அச்சங்கள் பலவும் அவனிடத்தே தோன்றின. ஆனால் நாடக தினத்தன்று பரமானந்தர் திரைக்குப் பின்னால் வந்து தன்னுடன் பேசிய தோரணையை நினைவு படுத்திக் கொண்டதும், இந்த அச்சங்களில் பாதி மறைந்தது. சற்றேறக் குறைய அறுபது வயது போல் தோன்றிய பரமானந்தர், உயரம் பருமனில் அவனது தந்தை சிவநேசரை ஓரளவு ஞாபகமூட்டினார். ஆனால் சிவநேசரோ நல்ல சிவப்பு. பரமானந்தரோ பத்மாவைப் போலில்லாமல் சிறிது கறுப்பாக இருந்தார். மேலும், சிவநேசர் எப்பொழுதும் தன்னுடைய அந்தஸ்தில் அக்கறை கொண்டவராக, காற்சட்டையும், “குளோஸ் கோட்டும்” தலைப்பாகையும் அணிந்திருப்பார். அத்துடன் செல்வத்தின் பூரிப்பும் பொலிவும், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வித கர்வமும் அவர் முகத்தில் என்றும் கதிர் வீசிக்கொண்டிருக்கும். பரமானந்தரோ சாதாரண வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்து, அதற்கு மேல் ஒரு “டசூர்” கோட்டும் அணிந்திருப்பார். சட்டையை கழுத்து வரை மூடி ஒரு பித்தளைப் பொத்தானை அணிவதும் அவரது வழக்கமாகும். அவரது முகத்தில் ஒருவித அடக்கமும் அமைதியும் குடிகொண்டிருந்தன.

Thursday, March 21, 2024

உமாசந்திரனின் 'முழுநிலா'


என் பால்யப் பருவத்தில் விகடனில் தொடராக வெளியான நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று உமாசந்திரனின் 'முழு நிலா'. அதில் வரும் உப்பிலி, நளினா பாத்திரங்களை நான் இன்னும் மறக்கவில்லை. அப்பாவுக்கும் மிகவும் பிடித்த நாவல் அது . கோபுலுவின் ஓவியங்களுடன் தொடராக வெளியான நாவலை அக்காலகட்டத்தில் மிகவும் விரும்பி வாசித்தோம். 

Tuesday, March 19, 2024

பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் பெயரில் குளிர்காயும் ஆண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம். - வ.ந.கிரிதரன் -


அறுபதுகளில் ,எழுபதுகளில் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கியவர். இவரது சிறுகதைகள் கல்கியில் சிறப்புச் சிறுகதைகளாக வெளிவந்துள்ளன.  இவரது நாவலான 'பொன்மாலைப்பொழுது ' தினமணிக்கதிரில் அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளியானது. எனக்கு மிகவும் பிடித்த நாவலாக அப்போது இருந்தது. அதில் வரும் நடுத்தர வயது சோமு இன்னும் நினைவில் நிற்கின்றார். இவரை பெண் எழுத்தாளராகவே  அப்போது எண்ணியிருந்தேன். காலப்போக்கில் அவரை மறந்து விட்டேன். அவரது பெயரில் இதயம் சஞ்சிகையில் பல பயணக்கட்டுரைகள் வெளியாகின. ஆனால் அவரை ஆணாகச் சென்னை நூலகத் தளக்குறிப்பு கூறுகிறது:

புதுமைப்பித்தனின் 'பொன்னகர'மும் , ஜெகசிற்பியனின் 'இது பொன்னகரம் அல்ல'வும்!


புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்' அளவில் சிறிய , ஆனால் மிகவும் கடுமையாகச் சமூகத்தைச் சாடும் விவரணச் சித்திரம். அதில் அம்மாளு என்னும் வறிய பெண், நோயால் வாடியிருக்கும் தன் கணவனுக்காகத் தன்னை விற்கின்றாள்.

Friday, March 15, 2024

இரு வேறு காலகட்டக் கதைகளிரண்டும், சில ஒற்றுமைகளும்! - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் அகரமுதல்வன் தன் வலைப்பதிவில் 'போதமும் காணாத போதம்'என்னுமொரு தொடர் எழுதியிருக்கின்றார். அத்தொடரில் வெளியான கதைகள் தற்போது நூலாகவும் வெளியாகியுள்ளன.  அத்தொடரில் ஏழாவதாகவுள்ள கதை, போதமும் காணாத போதம் 07 என் கவனத்தை ஈர்த்தது. அதில் சங்கிலி என்னும் மாற்று இயக்கத்தவனைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவன் கொன்று விடுகின்றான். கொன்றவன் இயக்கத்தில் பெரிய நிலைக்கு வருகின்றான். பெயர் சரித்திரன். கொல்லப்பட்டவனின் மகன் சந்தனன் இயக்கத்தில் சேர்ந்து சரித்திரனைக்  கொல்வதற்காகக் காத்து நிற்கின்றான். இருவரும் ஒரு நாள் சந்திக்கின்றார்கள்.  அப்போது நடக்கும் உரையாடலைக்கவனிப்போம். அது பின்வருமாறு செல்கின்றது.

-  சந்தனன் சண்டையில் காயமுற்றான். அவனிருந்த மருத்துவ விடுதியின் தலைமைப் பொறுப்பதிகாரியாய் சரித்திரன் இருந்தார். மேனியெங்கும் நஞ்சின் சூறை தீப்பிடிக்க சந்தனன் யாரோடும் கதையாமலிருந்தான். வீட்டில் செய்த உணவுகளை சரித்திரன் மூலமாய் அம்மா கொடுத்தனுப்பினாள். சந்தனன் அந்த உணவுகளைத் தீண்டக் கூடவில்லை. சரித்திரனுக்கு அது கவலையாகவிருந்தது. சில நாட்கள் கழித்து சரித்திரன் தனது வாகனத்தில் சந்தனனை ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் எதுவும் கதையாமல் வீதியை வெறித்திருந்தான். மழை பெய்யத் தொடங்கியது.

“நீ என்னைச் சுடத்தான் இயக்கத்துக்கு வந்தனியெண்டு கேள்விப்பட்டனான்” என்ற சரித்திரனை அதிர்ச்சியோடு பார்த்தான் சந்தனன். உன்ர தந்தையைச் சுட்டது நானெண்டு தெரிஞ்ச உனக்கு ஏன் சுட்டனான் எண்டு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்று தொடர்ந்தார்.

“அதுதான் நல்லாய்த் தெரியுமே, தேசத்துரோகி, ஒருத்தனைக் கொல்ல நீங்கள் துவக்கெடுக்க முதல், இப்பிடியொரு பட்டம் வைச்சே கொலை செய்திடுவியள்” என்றான் சந்தனன்.

சரித்திரன் கொஞ்சம் இறுக்கமாக “அது பட்டமில்லை. தண்டனையோட முதலடி.” என்று சொன்னார்.

வாகனம் புளியமரத்தடியில் நின்றது. அங்கு நிறைய ஆணிகள் அறையப்பட்டிருந்தன.  சரித்திரன் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, தன்னுடைய பிஸ்டலை அவனிடம் கொடுத்து என்னைச் சுடு  என்றார். சந்தனன் வாகனத்தை விட்டு கீழே இறங்கினான். பிஸ்டலை சரித்திரனின் நெற்றி நோக்கி நீட்டினான். மூன்று வெடிகள் முழங்கின.

துரோகத்தின் துருவேறிய ஆணிகள் சிதறுண்டு பறந்தன. கிளையில் துளிர்த்திருந்த இலைகள் மெல்லக் காற்றில் அசைந்தன. இராணுவ மிடுக்கோடு, பிஸ்டலை சரித்திரனிடம் கையளிக்க முன்னே நடக்கலானான். துரோகத்தின் ஆணிகள் சிதறிக்கிடந்த நிலத்தில் சந்தனன் அவதானமும் விழிப்பும் கூட்டியிருந்தான்.

புளியமரத்தின் கீழே இரண்டு பேரும் நின்று கதைக்கத் தொடங்கினார்கள். இத்தனை நாட்களும் ஆறாத தன்னுடைய காயத்தைப் பார்த்தான் சந்தனன். அது கொதியடங்கி ஆறியிருந்தது. -


இப்பகுதியை வாசித்தபோது எனக்கு என் நாவலான 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' பகுதியின் இறுதிப் பகுதி நினைவுக்கு வந்தது. சிறுவன் என்பவன் தானிருந்த  அமைப்புக்குத் தன் நண்பன் ஒருவனை அழைத்துச் சென்று சேர்க்கின்றான்.  சேர்க்கப்பட்ட நண்பனை  அவனது இயக்கமே ஒரு கட்டத்தில் கொன்று விடுகின்றது. சிறுவன் தற்போது கனடாவில் வசிக்கின்றான். கொல்லப்பட்ட அவனது நண்பனின் தம்பியும் அண்ணன் கொல்லப்படக் காரணமாகவிருந்த சிறுவனைக் கொன்று பழி தீர்ப்பதற்காகக்  காத்திருக்கின்றான். இறுதியில் சிறுவனைக்கொல்ல பிஸ்டலுடன் கொல்லப்பட்டவனின் தம்பி வருகின்றான். அவனிடமிருந்து பிஸ்டலைத் திறமையாகப் பறித்தெடுத்த சிறுவன் தன் பக்கத்து நியாயங்களை எடுத்துரைத்துவிட்டு பிஸ்டலைக்கொடுத்து  நான் கூற வேண்டியதைக் கூறி விட்டேன். நீ செய்ய வேண்டியதைச் செய் என்று கூறுகின்றான்.

Thursday, March 14, 2024

'மண்ணின் குரல்' - என் ஆரம்ப நாவல்களின் தொகுப்பு.

- மண்ணின் குரல் தொகுப்பு. குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாகத் தமிழகத்தில் வெளியானது (1998) -

'மண்ணின் குரல்' என் ஆரம்ப கால நாவல்களின் தொகுப்பு.  குமர்ன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளியானது. இதிலுள்ள நாவல்கள் பெரு நாவல்கள் அல்ல. சிறு நாவல்கள்.  இவற்றில் 'மண்ணின் குரல்' மொன்ரியாலிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானது.  இறுதி அத்தியாயம் வெளி வராமல் , முழுமைபெறாமல் நின்று போனதற்குக் காரணம் சஞ்சிகை  நின்றுபோனதுதான். பின்னர் முழுமையாக்கப்பட்டு , 'புரட்சிப்பாதை'யில் வெளியான கட்டுரைகள், கவிதைகளுடன் ஜனவரி 1987இல் மங்கை பதிப்பக வெளியீடாக  நூலுருப் பெற்றது.  மண்ணின் குரல் நாவல் இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் வெடித்தெழுந்தபோது  , எவ்விதம் இளைஞர்கள், யுவதிகள் போராட்டத்தில் இணைகின்றார்கள் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறு நாவல்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உண்மையான மேதை!


இன்று இயற்பியல் அறிஞர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்த தினம் மார்ச் 14. வெளி, நேரம் பற்றிய இவரது கோட்பாடுகள் அவை பற்றி அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து நிலவி வந்த கோட்பாடுகள் அனைத்தையும் தகர்த்தன. வெளி, நேரம் (காலம்) ஆகியவை இதுவரை காலமும் அறியப்பட்டிருந்தது போல் சுயாதீனமானவை அல்ல. அவையும் சார்பானவைதாம் என்பதை வெளிப்படுத்திய இவரது சிறப்புச் சார்பியற் கோட்பாடு. 

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...