Thursday, April 10, 2025

ஸ்டார் வெளியிட்ட Brand New Planet சிறுவர் பத்திரிகை!


என் மூத்த மகள் தமயந்தி எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த  சமய்ம் டொராண்டோவிலிருந்து வெளியாகும் டொராண்டோ ஸ்டார் பத்திரிகை Brand New Planet என்னுன் சிறுவர்களுக்கான பத்திரிகையை வாரந்தோறும் வெளியிட்டு வந்தது. அதில் அவர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அதற்கான ஊதியத்தையும் பத்திரிகை நிறுவனம் அனுப்பி வைத்துக்கொண்டிருந்தது, ஒரு தடவை அவரை வைத்துக் Cover Story  செய்ய வேண்டுமென்று ஸ்டார் பத்திரிகை விரும்பியது. அதற்காக ஒரு புகைப்படக்காரரையும் அனுப்பி வைத்தது.  

Monday, March 31, 2025

தன் கருத்துகளைச் சுதந்திரமாகக் கூறும் உரிமை சவுக்கு சங்கருக்குண்டு!


நான் சவுக்கு சங்கரின் அபிமானி அல்லன். அவ்வப்போது அவரது சவுக்கு மீடியாக் காணொளிகளைப் பார்ப்பவன். ஆனால் சனநாயக நாடான இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஊடகவியலாளர்  ஒருவர் தன் கருத்துகளைச் சுயமாக எடுத்துரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. அவரது கருத்துகளை, அவை எவ்வளவு எதிரானவையாக இருந்தாலும் அவற்றைக் கூறும் உரிமை அவருக்குண்டு. கருத்தைக் கருத்தால்தான் எதிர்க்க வேண்டும். வன்முறையால் அல்ல. எம் போராட்ட வரலாற்றில் கருத்துகளை வன்முறை கொண்டு அடக்கினோம். அதன் விளைவுகளை நாம் அறிவோம்.

சவுக்கு சங்கர் தன் நிறுவனத்தின் செயற்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அவரது வீட்டின் மீது அவரது கருத்துகள் திரிக்கப்பட்டு,  துப்புரவுத் தொழிலாளர்கள் சிலரை அவருக்கெதிராகத் திசை திருப்பி அவர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுக்கு சங்கர் குறிப்பிட்டிருக்கின்றார்.  சட்டம் தன் கடமையினைச் செய்தால் இதன் உண்மை நிலை வெளிப்படும். உண்மையில் அவரது வீட்டைத் தாக்கியவர்கள் துப்புரவுத்  தொழிலாளர்களா அல்லது அப்போர்வையில் வந்த அடியாட்களா என்பதைப் பாரபட்சமற்ற விசாரணைகள்தாம் வெளிப்படுத்தும். நிரூபிக்கும். இச்சந்தேகம் அவருக்கும் இருப்பதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்த அவருடனான நேர்காணற் காணொளியொன்றில் பார்த்தேன்.

சவுக்கு சங்கர் தன் குரலைச் சுதந்திரமாக ஒலிப்பதற்குரிய உரிமை நிலைநாட்டப்பட வேணடும். மீண்டும் அவர் தனக்குப் பிடித்த ஊடகத்துறையில் சுதந்திரமாக ஈடுபடும் நிலை ஏற்படுமென்று எதிர்பார்ப்போம்.

மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும்  தமிழக் கலை, இலக்கிய & அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் என்ன நிலையினை எடுக்கப்போகின்றார்கள் என்பதை அறிய ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.

Tuesday, March 25, 2025

நடிகர் மனோஜ் மறைந்தார்!


முகநூல் எதிர்பாராத செய்திகளைத்  தாங்கி வர ஒரு போதும் தவறுவதில்லை. அவ்விதம் இன்று  முகநூல்  தாங்கி வந்த செய்திதான் நடிகர் மனோஜின் மறைவுச் செய்தி.  நான் இவரது தீவிர இரசிகன் அல்லன். உண்மையில் இவரது திரைப்படங்களைக்கூட இதுவரையில் பார்த்ததாக நினைவில்லை. ஆனால் நான் இவர் நடித்த திரைப்படப்பாடல்களின் காணொளிகள் பலவற்றை அதிகமாகப் பார்த்திருக்கின்றேன். இரசித்துக்கொண்டிருப்பவன். குறிப்பாக இவரது 'வருசமெல்லாம் வசந்தம்' திரைப்படப்பாடல்கள் மிகவும் பிடித்தவை. குறிப்பாக உன்னிமேனன் குரலில் ஒலிக்கும் 'எங்கே அந்த வெண்ணிலா'  பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். இப்பாடல்களில நடித்திருக்கும் மனோஜின் இயல்பான தோற்றம், நடிப்பு குறிப்பாக மனத்தைக் கவரும் அந்தப் புன்சிரிப்பு இவற்றினை நான் இரசிப்பவன்.

கதாநாயகனாக  இவரால் ஏனைய  திரைப்பட வாரிசுகளைப்போல் சுடர் விட முடியாமற் போயிருந்தாலும் , நடிகர் ரகுவரன் போல்  தனித்துவம் மிக்க, குணச்சித்திர நடிகராக  நிலைத்து நிற்கக் கூடிய ஒருவர் இவர் என்று நினைப்பதுண்டு.

நடிப்பு தவிரத் திரைப்பட  இயக்கத்திலும் இவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்னும் சாதிப்பதற்கு இவருக்குக் காலம் இருந்த நிலையில் ,இந்த வயதில் இவர் மறைந்திருப்பது துயரமானது. இருப்பின் நிலையற்ற தன்மையினை மீண்டுமொரு தடவை எமக்கு உணர்த்தி நிற்பது. ஆழ்ந்த இரங்கல்.

இவரது நினைவாக, இவர் நடிப்பில் என்னைக் கவர்ந்த சில பாடல்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

எங்கே அந்த வெண்ணிலா - https://www.youtube.com/watch?v=knkNX-_Zp5w
முதன் முதலாய் உன்னைப் பார்க்கிறேன் - https://www.youtube.com/watch?v=Cph4grc2l_U
சொல்லாதே சோலைக்கிளி  - https://www.youtube.com/watch?v=rDzFFHdEoEA
எந்த நெஞ்சில் - https://www.youtube.com/watch?v=kg4uCisk_2Q
ஈச்சி எலுமிச்சி - https://www.youtube.com/watch?v=Iklj9CFFmEw

Monday, March 24, 2025

க்ரியா ராமகிருஷ்ணனும் , ரோஜா முத்தையா நூலகத்துக்கான அவரது பங்களிப்பும், அது பற்றிய பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் உரையும்! - வ.,ந.கிரிதரன் -


அமரர் க்ரியா ராமகிருஷ்ணனின் தமிழ்ப் பதிப்பகத்துறைக்கான பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. க்ரியா என்றால் தரம் என்னும்சொல் நினைவுக்கு வரும். தேர்தெடுத்த தரமான தமிழ் நூல்களை, ஏனைய மொழிகளில் வெளியான தமிழ் மொழிபெயர்ப்புகளைக் க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. நூல் வெளியீட்டுடன் , க்ரியா பதிப்பகத்தின் அகராதித்துறைக்கான பங்களிப்பும் முக்கியத்துவம் மிக்கது. நூல்வெளியீடு, அகராதித் துறைப் பங்களிப்பு  இவற்றுடன் இன்னுமொரு முக்கிய பங்களிப்புக்காகவும் க்ரியா ராமகிருஷ்ணன் நினைவு கூரப்படுகின்றார். நினைவு கூரப்பட வேண்டும். அது ரோஜா முத்தையா நூலகத்துகான அவரது பங்களிப்பு.

Thursday, March 20, 2025

நூல் அறிமுகம் - சார்பியல் தத்துவம் என்றால் என்ன?


லெ.லந்தாவு, யூ.ரூமர் என்னுமிருவர் எழுதிய ,சார்பியல் த்த்துவத்தின் முக்கிய அம்சமான சார்புத்தன்மையைப்பற்றிய ,   மிகவும் எளிமையாகச் சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும வகையில் எழுதப்பட்டுள்ள நூல் 'சார்பியல் தத்துவம் என்பது என்ன?' என்னும் இந்நூல். இதனைத் தமிழுக்குக் கொண்டு வந்திருப்பவர் ரா.கிருஷ்னையா.

சார்பியல் தத்துவம் சிறப்புச் சார்பியல் தத்துவம், பொதுச் சார்பியல் தத்துவம், வெளி, நேரமாம் சார்பானவை, காலவெளி ஒருபோதும் பிரிக்கப்பட  முடியாதது, புவியீர்ப்பு என்பது காலவெளியில் பொருளொன்றின் திணிவு ஏற்படுத்தும் கேத்திரகணித விளைவு போன்ற சார்பியல் தத்துவத்தின் முக்கிய அம்சங்களை  இந்நூல் கவனத்தில் எடுக்காதது துரதிருஷ்ட்டமானது. அவற்றையும் உள்ளடக்கியிருந்தால் இந்நூல் இன்னும் சிறப்புடையதாகவிருந்திருக்கும்.

இருந்தாலும் மேலோட்டமாக அதே சமயம் எளிமையாகச் சார்பியல் தத்துவம் கூறும் சார்புத்தன்மையைப்பற்றி நூல் சாதாரண பொதுமக்களுக்கு விபரிக்கின்றது.  வாசகர்கள் சாதாரணப் பொதுமக்கள்  என்பதால் நூலாசிரியர்கள் சார்பியல்  தத்துவத்தின் அடிப்படை அம்சங்களான, மேலே நான் குறிப்பிட்டவற்றைத்தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.

நூலின் தொடக்கத்தில் வரும் பின்வரும் கூற்று என் கவனத்தை ஈர்த்தது. அதற்குக் காரணம் இதனைக் கூறியவர்தான்.

                                 நவீன ருஷ்யாவின் தந்தையான வி.இ.லெனின்
 

"..ஐயப்பட்டுக்கு இடமின்றி எப்படி இயந்திரவியலானது மெதுவான, மெய்யான இயக்கங்களது 'நொடிப் படப்பிடிப்பய்' இருந்ததோ, அதே போல் புதிய பெளதிகவியல் காவிய அளவிலான பிரம்மாண்ட வேகமுடைய   மெய்யான இயக்கங்களின் நொடிப் படப்பிடிப்பாய் இருக்கிறது.... பருப்பொருளின் கட்டமைப்பையும் அதன் இயக்க வடிவங்களையும் பறறிய நமது அறிவு மாறும் தன்மையதாய் இருப்பதானது புற உலகின் எதார்த்த மெய்மையைப பொய் யென எப்படி நிரூபிக்கவில்லையோ, அதே போல் விசும்பையும் காலத்தையும் பற்றிய மானுடக் கருத்தோட்டங்கள் மாரும் தன்மையானவாய் இருப்பதானது எதார்த்த மெய்மையைப் பொய்யென நிரூபித்து விடவில்லை...."

Saturday, March 15, 2025

கலைஞர் மு.கருணாநிதியின் தமிழ்மொழிப் பங்களிப்பு - குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா & திருக்குறள் உரை!


கலைஞர் மு.கருணாநிதியின்  குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா. திருக்குறள் உரை  & சங்கத்தமிழ்த் தொகுப்புகளை அவரது முக்கிய தமிழ்மொழிப்பங்களிப்புகளாக நான் கருதுகின்றேன். இவற்றுடன் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து அவர் எழுதிய நாடகம், அதனையொட்டி வெளியான பூம்புகார் திரைப்படம்  இவையும் முக்கியமானவை. பாடல்கள் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ்த் திரையுலகை வசனத்துக்குத்  திருப்பியதில் கலைஞரின் வசனங்கள் முக்கியமானவை. பராசக்தி, மனோஹரா, ராஜாராணி & பூம்புகார் போன்ற திரைப்படங்களின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை. 

 

அவர் ஆட்சியில் அமைத்த வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் அமைத்த வள்ளுவர் சிலை இவையும் முக்கியமான  பங்களிப்புகள். இவை தவிர அவரது பல படைப்புகள் புனைகதைகளாக, அபுனைவுகளாக, நாடகங்களாக & திரைக்கதைகளாக வெளிவந்துள்ளன.  ரோமாபுரிப்பாண்டியன், பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் - சங்கர் ஆகியவை முக்கியமான வரலாற்றுப் புனைவுகள். பல பாகங்களாக் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி சுயசரிதையும் முக்கியமான  தொகுப்புகள்.

Friday, March 14, 2025

அறிஞனே! நீ வாழி!


மானுட சிந்தனையாற்றலின் வலிமையினை உணர்த்தும் ஆளுமையாளர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன். அவரது காலம் வரை நிலவி வந்த வெளி, நேரம், புவியீர்ப்பு பற்றிய கோட்பாடுகளை ஆட்டங்காண வைத்தவை ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகள். 
 
இவற்றை இவர் ஏனைய அறிவியல் அறிஞர்கள் போல் பரிசோதனைக் கூடங்களில் பரிசோதனைகள் செய்து ,அவற்றின் மூலம் நீருபிக்கப்பட்ட முடிவுகளாகக் கண்டறியவில்லை. தன் சிந்தனையாற்றலின் மூலம், சிந்தையென்னும் பரிசோதனைக்கூடத்தில் கண்டறிந்தார்.
 
பின்னரே பல வருடங்களின் பின்னரே பரிசோதனைகள் மூலம் அவை உண்மைகளாக நிரூபிக்கப்பட்டவை. 
 
இன்று, மார்ச் 14, அவரது பிறந்ததினம். 
 
என் சிந்தையைப் பாதித்த அறிவியல் ஆளுமையாளர்களில் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனுக்கும் முக்கிய இடமுண்டு.
 
அறிவியல் அறிஞன் இவனது
காலம் வெளி பற்றிய கோட்பாடுகள்
ககனத்தின் இருப்புப் பற்றிய ,நிலவிய
கோட்பாடுகளை
ஆட்டங்காண வைத்தவை.
அடியோடு ஆட்டங்காண வைத்தவை.
சிந்தையில் சோதனைகள் செய்தே
சரி, பிழை அறிந்தான்.
சிந்தனை ஆற்றலின் சக்தியினைச்
மானுடர் நாம் அறிய வைத்தான்.
மகத்தான மனிதனிவன்
பிறந்ததினம், மார்ச் 14, இன்று.
போற்றுவோம்! நினைவு கூர்வோம்!
இருப்புப் பற்றிய
என் புரிதலுக்கு உன்
இருப்பு மூலம்
அறியத் தந்தாய்!
அறிஞனே! நீ வாழி!

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...