Sunday, October 5, 2025

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்


இம்முறை கனடாத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2024ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றவர்களில் ஒருவர் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர். கவிஞராகி அறிமுகமாகி நாவலாசிரியராக உருமாறியவர்.  இவரது கானல்நதி, வெளியேற்றம்,  குள்ளச்சித்தன் சரித்திரம் ,பயணக்கதை , மணல் கேணி ஆகிய நாவல்கள் முக்கியமானவை.  வித்தியாசமான கதை சொல்லலில் நகர்பவை. அவரது தேடல் மிக்க நெஞ்சின் உணர்வுகளை வெளிப்படுத்துபவை.அவரது ஏதாவதொரு நாவலொன்றினை வாசித்தால்,ஏனைய் நாவல்களையும் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்துபவை. 

யுவன் சந்திரசேகரின் நாவல்கள் பற்றிய் அறிமுகத்தை தமிழ் விக்கியில் வெளியான எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் பற்றிய அறிமுகக் குறிப்பு தருகின்றது.  அக்குறிப்பினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

Wednesday, October 1, 2025

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் 'இருபத்து மூன்றாம் வயதில் பாரதி' பற்றி..- வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் 'நந்தலாலா' ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் பற்றிய , கணையாழி சஞ்சிகையின் அக்டோபர் 2025 இதழில் வெளியான எனது கட்டுரை.-


பகுதி ஒன்று

தன் குறுகிய வாழ்வில் மகாகவி பாரதியின் சிந்தனை வளர்ச்சியை வெளிப்படுத்தும் அவரது எழுத்துகள் (கவிதைகள், கட்டுரைகள்) என்னை மிகவும் வியப்புக்குள்ளாக்குபவை.  அவரது எழுத்துகள் மானுட பருவங்களின் வளர்ச்சிக்கேற்ப அர்த்தங்களிலும் புது அர்த்தங்கள் தருபவை.  குழந்தைக்கும் பாரதியைப்பிடிக்கும்.  சிந்தனை முதிர்ச்சியுற்ற , தேடல்மிக்க முதிய மானுடருக்கும் பிடிக்கும்.  இருப்பை நன்கு உணர்ந்து கொண்ட , முதிர்ச்சியுற்ற சிந்தனையாற்றல் மிக்க ஒருவரின் எழுத்துகளுக்கே காலத்துடன் ஈடுகட்டி, இவ்விதம் எழுந்து நிற்கும் வல்லமை உண்டு. ஏனைய ஒற்றைப்பரிமாணம் மிக்க தட்டை எழுத்துகள் மானுடப் பருவமொன்றுடன் தேங்கி, அப்பருவத்துக்குரிய அழியாக கோலங்களாக நிலைத்து நின்றுவிடும் பண்பு மிக்கவை. ஓர் எழுத்தாளராக, தேசிய, மானுட வர்க்க . சமூக விடுதலைப் போராளியாக அவர்தம் ஆளுமையின் பரிணாம வளர்ச்சியினைச் சாத்தியமாக்கியவை எவை, சாத்தியமாக்கிய ஆளுமைகள் எவர் என்ற் கேள்விகள் அடிக்கடி எனக்குள் எழுவதுண்டு.  

அண்மையில் பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி , நூலுருப்பெற்ற 'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின்  ' 23ஆம் வயதில்  பாரதி' (23 - 24ஆம் வயதில் பாரதி, இருபத்து நான்காம் வயதில் பாரதி, இருபத்து மூன்றாம் வயதில் பாரதி, '23-24 வயதில் பாரதி : வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் - கட்டுரையும்' என்னும் தலைப்புகளில் பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளை உள்ளடக்கிய நெடுங்கட்டுரை) கட்டுரையில் இக்கேள்விகளுக்கான சில  பதில்கள் இருப்பதை வாசித்தபோது அறிய முடிந்தது. இந்நெடுங் கட்டுரை ஜோதிகுமாரின் தர்க்கச்சிறப்பு மிக்க சிந்தனை முதிர்ச்சியின் வெளிப்பாடு என்பதைக் கட்டுரையை வாசிக்கும் எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.  பாரதியின் அனைவராலும் அறியப்பட்ட அவரது ஆளுமையின் அடிப்படைக்கூறுகளைந் நிர்ணயிக்கும் முக்கிய அவரது வயதாக 23 - 24 ஐக் குறிப்பிடலாம் என்பதை ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கின்றது இக்கட்டுரை. கூடவே அப்பருவத்தில் அவரது ஆளுமையில் , சிந்தனையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களைக் கவனத்திலெடுத்து ஆராய்கின்றது.

காலத்தால் அழியாத கானம்: 'சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?'

 

கவிஞர் வாலியின் வரிகளில், எம்.எஸ்.வி.யின் இசையில், டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலில், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில் ஒலிகும் இந்தப் பாடல் என் பால்ய பருவத்துடன் பின்னிப் பிணைந்ததொன்று. அப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஒலிபெருக்கியில் , ஏதோவொரு நிகழ்வில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல். எம்ஜிஆர் படப் பாடல்களுக்கு உரிய சுறுசுறுப்பு, எளிய இனிய வரிகள், உற்சாகம், மகிழ்ச்சி, வேகம் , இன்குரலினிமை , தொய்வற்ற இன் மெல்லிசை, நிறைந்த பாடல்.
 
அப்போது எம்ஜிஆர் திமுகவுக்காக இயங்கிக்கொண்டிருந்தார். பாடலில் எவ்வளவு இலாகவமாகக் கவிஞர் வாலி சூரியன், தமிழ் போன்ற சொற்களைக் கையாண்டிருக்கின்றார்!
 
இன்னுமொரு விடயத்திலும் இப்பாடல் நினைவில் நிலைத்து நின்று விட்டதற்குக் காரணம் - அப்பா பழைய காலத்து ஆள். பாகவதர், பி.யு.சின்னப்பா அவரது சுப்பர் ஸ்டார்கள், ஆனால் சிவாஜியை அவருக்கும், அம்மாவுக்கும் பிடிக்கும். ஆனால் அவருக்கும் இப்பாடல் இடம் பெற்றுள்ள 'சந்திரோதயம்' படம் பிடித்திருந்தது. அதில் இடம் பெற்றிருக்கும் 'காசிக்குப் போகும் சந்நியாசி', கவிஞர் பாரதிதாசனின் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்னும் பாடல்களுடன், பத்திரிகையாளராக அமைந்திருந்த எம்ஜிஆரின் வேடமும் முக்கிய காரணங்கள்.
 
* 'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - VNG

தமிழ் இலக்கிய உலகில் எஸ்.பொ'வை அறியாதவர் எவர் உளர்?


இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் உருவான இலக்கியப் போக்குகள் மூன்று: முற்போக்கு இலக்கியம், நற்போக்கு இலக்கியம் & பிரபஞ்ச யதார்த்தவாதம்.  இம்மூன்று இலக்கியப் போக்குகளுமே இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய கூறுகள். 

அக்காலகட்டத்தில் இவற்றின் அடிப்படையில் தர்க்கங்கள் பல நிகழ்ந்தன. அவ்விதமானதொரு போக்கு அதன் பின் தொடரவில்லையென்பது துரதிருஷ்ட்டமானது.

இம்மூன்று பிரிவுகளிலும் தடம் பதித்த ஆளுமைகள் பலர். இப்போக்குகளின் முன்னோடிகள், முன்னோடிகளைப் பின்பற்றிய இலக்கிய ஆளுமைகள் , இவர்களின் படைப்புகள், அவை பற்றி நிகழ்ந்த தர்க்கங்கள் இவையெல்லாம் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவை. இவை பற்றிய விரிவான போதிய ஆய்வுகள் இதுவரை வெளியாகவில்லையென்பதும் கவனிக்கத்தக்கது.

Tuesday, September 30, 2025

என் முகநூற் பதிவொன்று: மறக்க முடியாத பெண்கள் கல்லூரி அதிபர்!



 இவரை என்னால் மறக்க முடியாது. என் எழுத்துலக வாழ்க்கையில் இவருக்கும் நிச்சயம் ஒரு பங்குண்டு. நான் சிறுகதைகள் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து என் எழுத்துகளை அவதானித்து வந்தவர். என் அம்மாவின் நெருங்கிய சிநேகிதிகளில் ஒருவராகவிருந்தவர். அம்மா யாழ்ப்பாணம் வரும்போதெல்லாம் மறக்காமல் சென்று சந்திக்கும் அவரது சிநேகிதிகள் சிலரில் ஒருவர்.

நான் எழுதிய முதலாவது சிறுகதை நான் யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கையில் சிரித்திரன் சஞ்சிகையில் வெளியான 'சலனங்கள்'. அதிலிருந்து இவர் என் வாசகர்களில் ஒருவராகவே இருந்திருக்கின்றார். இவருக்கு எப்படி நான் அவரது சிநேகிதியின் மகன் என்பது தெரிந்திருக்கும்? அம்மா அவரைச் சந்திக்கையில் கூறியிருந்திருக்க வேண்டும்.

காலத்தால் அழியாத கானம் - "மெல்லப் போ! மெல்லப் போ!'


 * டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - வி.என்.ஜி (VNG)
 
 படம் - காவல்காரன்
பாடல் வரி - கவிஞர் வாலி
இசை - எம்.எஸ்.வி
பாடகர்கள் - டி.எம்.எஸ் & பி.சுசீலா
நடிப்பு - எம்ஜிஆர் & ஜெயலலிதா

Saturday, September 27, 2025

பைந்தமிழ்ச் சாரலின் மெய்நிகர் நிகழ்வு - 'எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் எழுத்துலகம்'

- எழுத்தாளர் அ.ந.கந்தசாமி -


  *அ.ந.கவுக்கான டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி - வ.ந.கி


இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும், அவரது பன்முகத்திறமை காரணமாக அறிஞர் என்று அழைக்கப்பட்டவருமான எழுத்தாளர் 'அ.ந.கந்தசாமியின் எழுத்துலகம்' என்றொரு மெய்நிகர் வழியான நிகழ்வு மூலம் சிறப்பானதொரு நினைவு கூரலை நடாத்தியிருக்கிறது 'பைந்தமிழ்ச்சாரல்' அமைப்பு.  உடகவியலாளர்கள் ராஜ் குலராஜின் நெறிப்படுத்தலில், பவானி சற்குணச்செல்வம் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடந்த நிகழ்வின் முக்கியமான அம்சம் கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தனின் அ.ந.கந்தசாமி பற்றிய நீண்ட , விரிவான, முக்கியமான, ஆவணச்சிறப்பு மிக்க உரை. 

திரு. மு.நித்தியானந்தன் அவர்கள் அ.ந.க அவர்களைப் பதுளை ஊவாப் பாடசாலையில் மாணவனாக இருந்த சமயம் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தவர். அது பற்றிய தன் நினைவுகளை தனதுரையில் பகிர்ந்திருந்தார். மிகவும் முக்கியமான தகவல்கள் அவை. அ.ந.க அவர்களின் நாவல்கள், நாடகம், சிறுகதை, கவிதை  எனப் பல விடயங்களை உள்ளடக்கிய் அவரது உரை அவரது அ.ந.க.வின் படைப்புகள் மீதான வாசிப்பின் ஆழத்தை வெளிப்படுத்தின. உரை எழுத்து வடிவில் பதிவு செய்ய வேண்டியதொன்று. பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பி வைப்பாரென்று நம்புகின்றேன். நிச்சயம் பதிவுகளில் ஏனைய அ.ந.கந்தசாமியின் படைப்புகளுடன் அதுவும் ஆவணப்படுத்தப்படும்.

தாமரைச்செல்வியின் 'சுமைகள்'

இன்று எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 'சுமைகள்' நாவலின் புதிய பதிப்பு என்னை வந்தடைந்தது.  அதற்காக அவருக்கு என் நன்றி. எழுபதுகளின் இறுதி...