Tuesday, July 20, 2021

வ.ந.கிரிதரனின் 'கண்ணம்மா'க் கவிதைகள் (1): காலவெளிக் கைதிகள்!


காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா
சிந்திக்க விரும்புகின்றேனடி.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையடி கண்ணம்மா.
 அறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேனடி கண்ணம்மா.
அசைமனம் ஓயவில்லை கண்ணம்மா!
அசைமனம் ஓயவில்லை கண்ணம்மா!
எப்பொழுதென்றாயினும் நீ கண்ணம்மா
இவ்விதம் எண்ணியதுண்டா கண்ணம்மா?
நான் எண்ணுகின்றேன் எப்பொழுதும் கண்ணம்மா.
நான் வியந்துகொண்டிருக்கின்றேன் எப்பொழுதும்
கண்ணம்மா.
நான் எண்ணுவேன் எப்பொழுதும் கண்ணம்மா.
நான் வியந்துகொண்டிருப்பேன் எப்பொழுதும் கண்ணம்மா.
 
காலமற்ற வெளியில்லை கண்ணம்மா.
வெளியற்ற காலமில்லையா சொல்லம்மா.
காலம் நீயென்றால் கண்ணம்மா
வெளி நானன்றோ கண்ணம்மா?
வெளி நானென்றால் கண்ணம்மா
காலம் நீயன்றோ கண்ணம்மா?
காலவெளியன்றோ நாம் கண்ணம்மா!
காலவெளியன்றோ நாம் கண்ணம்மா!
காலவெளியாகக் கண்ணம்மா – நாம்
உள்ளதெல்லாம் கண்ணம்மா
உண்மையா கண்ணம்மா?
காலவெளிக் கோலமன்றோ கண்ணம்மா
ஞாலத்தில் நம்நிலை கண்ணம்மா.
காலவெளி கடக்காக் கைதிகளா நாம் கண்ணம்மா?
கைதிகளா நாம் கண்ணம்மா?
ஆம் கண்ணம்மா!
காலவெளிக் கைதிகளே நாம் கண்ணம்மா!
 
நன்றி: பதிவுகள்.காம்

No comments:

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1& 2) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: நகரத்து அணில்! மாதவன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து  வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ...

பிரபலமான பதிவுகள்