Friday, October 11, 2019

தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' - வ.ந.கிரிதரன் -




- கணையாழி சஞ்சிகையின் அக்டோபர் (2019) இதழில் வெளியாகியுள்ள தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவல் பற்றிய என் விமர்சனக் கட்டுரை. -
அண்மையில் வெளியான தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவலின் முதற்கட்ட வாசிப்பின்போது அதன் வெளியீட்டு விழாவில் ஜான் மாஸ்ட்டர் கூறிய கருத்தொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவர் இதனை ஒரு கோணத்தில் பார்த்தால் ஒரு காதல் கதையாகவும் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எனக்கு வித்தியாசமான காதற்கதையாகத்தான் நாவலில் விபரிக்கப்பட்டிருந்த காதற்கதையும் தென்பட்டது.

நாவலின் பிரதான பாத்திரமான புலிகள் இயக்கத்தில் பரணி என்றழைக்கப்படும் போராளிக்கும், வானதி என்னும் பெண்ணுக்குமிடையிலான காதல் வாழ்வின் தொடக்கத்தில் அவன் இயக்கத்தில் சேர்ந்து , இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் செல்கின்றான். செல்லும்போது 'எனக்காகக் காத்து நிற்பீர்களா?' என்று கேட்கின்றான். இவளும் அவனுக்காகக் காத்து நிற்பதாக உறுதியளிக்கின்றாள். அவ்விதமே நிற்கவும் செய்கின்றாள். இது உண்மையில் எனக்கு மிகுந்த வியப்பினைத்தந்தது. சொந்த பந்தங்களை, பந்த பாசங்களையெல்லாம் விட்டு விட்டு இயக்கத்துக்குச் செல்லும் ஒரு போராளி தான் விரும்பியவளிடம் தனக்காகக் காத்து நிற்க முடியுமா என்று கேட்கின்றான். போராட்ட வாழ்வில் என்னவெல்லாமோ நடக்கலாம், நிச்சயமற்ற இருப்பில் அமையப்போகும் வாழ்வில் இணையப்போகுமொருவன் தன் குடும்பத்தவர்களை விட்டுப் பிரிவதைப்போல, தன் காதலுக்குரியவளையும் விட்டுப்பிரிவதுதான் பொதுவான வழக்கம். ஆனால் இங்கு நாவலில் தன் வாழ்க்கையையே விடுதலைக்காக அர்ப்பணிக்கப்போகும் ஒருவன் , ஏதோ வெளிநாட்டுக்கு வேலை பெற்றுச்செல்லும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியிடம் கேட்பதுபோல் கேட்டு உறுதிமொழி பெற்று விட்டுச் செல்கின்றான். இது நாவலின் புனைவுக்காக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். உண்மையில் அவ்விதமான சூழலில் பிரியும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியைப் பார்த்து தன் எதிர்காலம் நிச்சயமற்றிருப்பதால், மீண்டும் வந்தால் , இலட்சியக்கனவுகள் நிறைவேறினால் , மீண்டும் இணையலாம் அல்லது அவள் தனக்காகக் காத்து நின்று வாழ்வினை வீணாக்கக் கூடாதென்று அறிவுரை செய்திருக்கத்தான் அதிகமான வாய்ப்புகளுள்ளன. போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளச் சென்றுவிட்ட அவனுக்காக அவளும் கனவுகளுடன் மீண்டும் இணைவதையெண்ணிக் காத்திருக்கின்றாள். இவ்விதமாக நகரும் வாழ்வில் அவள் யாழ் பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் செல்கின்றாள்.

ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி! - வ.ந.கிரிதரன் -



புகலிடத் தமிழ் நாவல்களில் உலக இலக்கியத்துக்கு வளம் சேர்த்த புனைவுகளில் ஒன்றாக நிச்சயம் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' படைப்பினைக் கூறுவேன்.

ஒரு நல்ல படைப்பானது தனது மறு வாசிப்புகள் மீதான ஆர்வத்தினை எப்பொழுதும் தூண்டிக்கொண்டேயிருக்கும். . ஒவ்வொரு வாசிப்பிலும் அது புதியதோர் அனுபவத்தினைத் தருமொன்றாக அமைந்திருக்கும். அவ்வகையான புனைவுகளிலொன்றுதான் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' நாவலும்.

முழுக்க முழுக்கப் புகலிட அனுபவங்களையே மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்கள் குறைவு. எனது 'அமெரிக்கா' , 'குடிவரவாளன்' ஆகியவை அவ்வகையானவை. இளங்கோ என்னும் இலங்கைத் தமிழ் அகதியின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வையும், அதன் பின்னரான நியூயார்க் மாநகரில் அவனது இருப்புக்கான போராட்டத்தினையும் விபரிக்கும் நாவல்கள் அவை. ஆனால் அவற்றில் கூட பிறந்த மண்ணின் சமூக, அரசியல் நிலைமைகள் விபரிக்கப்படுகின்றன. ஆனால் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் புகலிட வாழ்வினை முழுமையாக விபரிக்கும் நாவல். நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை'யும் புகலிடத் தமிழர்தம் வாழ்வினை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல்களிலொன்று.

மறக்க முடியாத காண்டேகர்!


காண்டேகர்
'காந்தியப் பண்பும் 'வெண்முகில்' நாவலும் ' என்னும் தலைப்பில் எழுத்தாளர் காண்டேகரின் நாவலான 'வெண்முகில்' பற்றிய திருமதி.பா.சுதாவின் ஆய்வுக்கட்டுரை ( தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளிலொன்று; பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது) காண்டேகர் பற்றிய நினைவலைகளை ஏற்படுத்தி விட்டதெனலாம்.

என் பதின்ம வயதுகளில் வாசிப்பு வெறி பிடித்துத் தேடித்தேடி வாசித்த எழுத்தாளர்களில் காண்டேகருக்கு முக்கியமானதோரிடமுண்டு. மராட்டிய எழுத்தாளரான காண்டேகர் தமிழில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களிலொருவராக அறுபதுகளில், எழுபதுகளில் விளங்கிக் கொண்டிருந்தார். எழுத்தாளர் கா.ஶ்ரீ.ஶ்ரீயின் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான காண்டேகரின் நாவல்களைத் தமிழ் வாசகர்கள் விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்தார்கள். காண்டேகரின் பல படைப்புகள் பல தமிழில் வெளியான பின்னரே மராத்தியில் வெளியாகின என்று எழுத்தாளர் ஜெயமோகன் காண்டேகர் பற்றிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகின்றது. அவ்வளவுக்குக் காண்டேகரின் புகழ் தமிழ் இலக்கிய உலகில் பரவியிருந்தது. 

முகநூலில் முதற் காதல் பற்றி...

அண்மைக்காலமாக முகநூலில் ஆளாளுக்குத் தம் முதற் காதலைப்பற்றி நினைவு கூர்ந்து, இழந்ததையெண்ணிக் கழிவிரக்கம் கொள்கின்றார்களே ஏன் என்று பார்த்தால் அண்மையில் வெளியான 96 படமே காரணம் என்று புரிந்தது. சிலர் நகைச்சுவை ததும்ப தம் அனுபவங்களை எழுத்தில் வடித்திருந்தார்கள். அவர்களது அனுபவங்களில் உண்மை இருப்பதால் அவர்கள்தம் எழுத்துகளும் சுவைக்கின்றன. உதாரணத்துக்கு நண்பர் பரதன் நவரத்தினத்தின் பதிவிலிருந்து சில பகுதிகள்:

1. " .Cricket ,Football இதுவே எனது Life .இரவு வந்து படித்தால் காணும்.இந்த 3.45 பஸ்ஸை விட்டால் அடுத்த School Bus 4.30 மணிக்கு இற்கு சென் ஜோன்ஸ் ,சுண்டுக்குளி,சென்றல்,வேம்படி எல்லாம் சென்று மாணவர்களை ஏத்தி ஆடி அசைந்து வரும். சில நாட்களில் பாடசாலை முடிய நான் சற்று பிந்தி வந்தும்,பஸ் சற்று முந்தி போயும் இருக்கும் சந்தர்பங்களில் பெடி பெட்டைகளால் நிரம்பி வரும் School Bus எடுத்திருக்கின்றேன்.ஒரே கூச்சலும்,குழப்பமுமாக இருக்கும்.அதுவும் பெட்டைகள் ரைவர் கொஞ்சம் பஸ்ஸை சரித்து வெட்டினால் காணும் சரோஜாதேவி கணக்கு வீல் என கத்துவார்கள்என்ன சும்மா வெருதுகள் என்று நினைப்பேன் , அதை விட கொக்குவில் Tech மாணவர்கள் என்று வரும் இருபது வயது முதியவர்களை கண்டால் தாங்காது. இறுக்கிய பான்சும் ஒரு அகல பெல்டும் சகிக்காது. இந்த வயதில் என்ன படிப்பு வேண்டிக்கிடக்கு என்று தோன்றும் . அன்றும் அப்படித்தான் அரும்போட்டில் முதல் பஸ்ஸை கோட்டைவிட்டு SCHOOL BUS எடுத்த எரிச்சலில் இருக்கின்றேன் .கொக்குவிலில் Tech தாண்ட முதியவர்களும் இறங்க பஸ் கொஞ்சம் வெளித்துவிட்டது. சும்மா திரும்பி பின்னால் பார்தேன்.தோய்ந்து விரித்த தலையில் ஒரு வெள்ளை அலிஸ்பான்ட், பாடசாலை செல்லும் எமது சராசரி பெட்டைகள் மாதிரி பத்துத்தரம் துவைத்து மஞ்சள் அடித்த வெள்ளை யுனிபோமில் இல்லாது வெள்ளை வெளீர் என ஏதோ பொலிஎஸ்டர் துணியில் யூனிபோம், வெள்ளை சொக்ஸ்,டென்னிஸ் சப்பாத்து , குமுதத்தில் போன்விற்றா விளம்பரத்திற்கு வரும் சிறுமி போல் பளிச்சென்ற முகம்.அதில் ஒரு சின்ன கறுப்பு பொட்டு. அந்த பெட்டை என்னை காணவே இல்லை. நான் முதன் முதல் இப்படியும் ஒரு விஷயம் இருக்கு என்று சிறிது உணர்ந்த நாள் அன்றுதான் .எனது இறங்குமிடம் வர அதுவும் எழும்பி எனக்கு முன்னால் இறங்கி தனது வீட்டை நோக்கி நடந்து ஒரு குச்சொழுங்கையில் திரும்பி மறைந்துவிட்டது. ஏதோ என்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டு போய்விட்டதை போல உணர்ந்தேன்.எனது வீடு மற்ற பக்கம் என்றாலும் அரை மைல் தொலைவில் இப்படி ஒரு உலக அதிசயமா?"

சேகுவேரா! - வ.ந.கிரிதரன் -


மானுட விடுதலைக்காகத்
தன்னுயிர் தந்த
மாவீரன்.
மறைந்தும் இவன் புகழ்
இன்னும்
மங்கவில்லை மானுடர்தம்
மனங்களில்.

மரணப்படுக்கையிலும் இவன்
மனவுறுதி மலைக்க வைப்பது.

டாக்டர் க.இந்திரகுமார் பற்றி....

அண்மையில் டாக்டர் க. இந்திரகுமார் பற்றிய எழுத்தாளர் த.இளங்கோவனின் பதிவொன்று அவரைப்பற்றிய நினைவலைகளை மீட்டி விட்டது. டாக்டர் க.இந்திரகுமார் என்றதும் உடனே என் நினைவுக்கு வருபவை எழுபதுகளில் வீரகேசரியில் 'மண்ணில் இருந்து விண்ணிற்கு' என்னும் தலைப்பில் அவர் எழுதிய விண்வெளி ஆய்வுகள் பற்றிய தொடர் கட்டுரைகளும், 'மண்ணில் இருந்து விண்ணிற்கு' என்னும் தலைப்பில் வீரகேசரி பிரசுரமாக வெளியான அவரது மேற்படி கட்டுரைகளின் தொகுப்பும்தான். இந்நூலுக்கு இலங்கை அரசின் சாகித்திய விருதும் கிடைத்துள்ளது. 

இவரது 'விண்வெளியில் வீரகாவியங்கள்' தினகரனில் தொடராக வெளியாகி, நூலுருப்பெற்றபோது தமிழக அரசின் விருதினையும் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 17, 2019

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், பதிவுகள் பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் தேசியக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் (நாள்: 25.09.2019)

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், பதிவுகள் பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் தேசியக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் (நாள்: 25.09.2019)

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...