Friday, February 16, 2024

வெள்ளி சிணுங்கி அழ ஏலே ஏலோ


கவிஞர் மஹாகவியின் 'புதியதொரு வீடு'  இசை நாடகத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை மிகவும் சிறப்பாகப் பாடியிருக்கின்றார் எழுத்தாளரும், பாடகருமான திவ்வியராஜன்.  திவ்வியராஜனின் இதயத்தை வருடித் தாலாட்டும் குரலுக்கு நான் எப்போதும் அடிமை. என்ன குரல்! நல்ல குரல் வளம் இருந்தால் மட்டும் போதாது. வரிகளை உணர்ந்து, உள் வாங்கித் தன்னை மறந்து , வரிகளுடன் ஒன்றிப்பாடகர் பாடுகையில்தான் அப்பாடல் கேட்பவரின் இதயங்களை வருடிச் சென்று அதனுடன் ஒன்றிட  முடியும். திவ்வியராஜனின் குரலைக் கேட்பதும் இன்பம். அவர் பாடும் அழகைப் பார்ப்பதும் இன்பம்.

கவிஞரின் வரிகள் அற்புதமாக அமைந்துள்ளன. வெள்ளி சிணுங்கும் கும்மிருட்டு விண். மெல்லச் சுழன்றெழுந்து மேல் விழும் காற்று. வார் கடலின் நீர் கிழிக்கும் வள்ளம். கடற்றொழிலாளர் கரைவலை வள்ளம் வலித்துக் கடலில் செல்லும் காட்சியினை,சுற்றியிருக்கும் இயற்கைச் சூழலைச் சிறப்பாக, உணர்வுபூர்வமாகச் சித்திரித்திருக்கின்றார் கவிஞர் மஹாகவி.அமரர் பாபு பரதராஜா, பாடகர் திவ்வியராஜன் இணைந்து , அருவி அமைப்பு மூலம் வெளியிட்ட 'புலரும் வேளையிலே'இசைத்தட்டில் இடம் பெற்றுள்ள இப்பாடலுக்கு இசை அமைத்திருப்பவர் எஸ்.வீ.வர்மன். இணைந்து பாடியிருப்பவர்கள்  க.ஜெயராஜா , கிருபா .  பாடலுக்கு அறிமுகத்தைச் செய்திருப்பவர் கவிஞர் அ.கந்தசாமி ( கந்தசாமி மாஸ்டர்) . இக்காணொளியின் இன்னுமொரு சிறப்பு - இதன் ஒளிப்பதிவு. சொற்களுக்கு உயிரூட்டும் , இயற்கைச் சூழலை எடுத்துக்காட்டும் ஒளிப்பதிவு.

வெள்ளி சிணுங்கி  அழ  ஏலே ஏலோ
விண்ணிறைந்த கும்மிருட்டில் ஏலே ஏலோ
துள்ளி எழுந்து வந்து ஏலே ஏலோ
தோணியினைத் தள்ளி விட்டோம் ஏலே ஏலோ

மெள்ளச் சுழன் றெழுந்து ஏலே ஏலோ
மேல்விழும் இக்காற்றை எங்கள் ஏலே ஏலோ
வள்ளம் சிரிக்கிறது ஏலே ஏலோ
வார் கடலின் நீர் கிழித்தோம் ஏலே ஏலோ

வீசி எறிந்தவலை
வீழ்ந்தமிழ்ந்து போகிறது
மூசி வியர்வை விழ
முக்கி முக்கி நாம் வலித்தோம்.

பாடலைக் கேட்டுக் களிப்புற - https://www.youtube.com/watch?v=MeH6OeIwhpI


No comments:

கவிதை: எனக்கு அனுமதி கிடைக்குமா? (May I be allowed ) ஆங்கிலத்தில் - சஞ்சீ குணதிலக (Sanjee Goonetilake) - தமிழில் - கவிஞர் பா.அகிலன்

சிங்களக் கவிஞர் சஞ்சீ  குணதிலகவின் May I be allowed  என்னும் ஆங்கிலக் கவிதையை அவரே தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை நண்பர் தன...