Wednesday, February 14, 2024

ஆவணக்காணொளி: கு.அழகிரிசாமி கொலக்கால் திரிகை


எழுத்தாளர் கு,அழகிரிசாமி பற்றிய சிறப்பானதோர் ஆவணக்காணொளி. அவரை எழுத்தாளராக  மட்டுமே அறிந்திருந்த எனக்கு 'கு.அழகிரிசாமி  கொலக்கால் திரிகை' என்னும் இக்காணொளி அவரது பன்முக ஆளுமையை அறிய வைத்தது.  இதன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தைச் சிறப்பாகச் செய்திருப்பவர் அ.சாரங்கராஜன். வாழ்த்துகள்.ஓவியம், கர்நாடக இசை, பழந்தமிழ் இலக்கியம் குறிப்பாகக் கம்ப ராமாயணம்,  மொழிபெயர்ப்பாற்றல், மேனாட்டு இலக்கியப் புலமை, ருஷ்ய இலக்கியம் மீதான ஆர்வம், புலமை என கு.அழகிரிசாமியின் பன்முக ஆளுமையை இலக்கிய ஆளுமைகள் பலரின் கூற்றுகள் வாயிலாகச் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆவணம்.

முதன் முதலாக மாக்சிம் கார்க்கியின் படைப்பைத் தமிழில் மொழிபெயர்த்தவர் கு.அழகிரிசாமியே என்பதை இக்காணொளி  மூலம் அறிந்துகொண்டேன்.  மேலும் காவடிச்சிந்தை இவர் பதிப்பித்துள்ளார் என்பதையும் அது அறிஞர்கள் பலரின் மதிப்பைப் பெற்றுள்ளது என்பதையும் அறிந்தேன். கம்பராமாயணம் பற்றிய இவரது விமர்சனத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன என்பதையும், அவற்றின் சிறப்பு பற்றிய எழுத்தாளர் பிரபஞ்சனின் பார்வையினையும் அறிந்துகொண்டேன். 'கவிச்சக்கரவர்த்தி', 'வஞ்சமகள்' போன்ற இவரது நாடகப் பங்களிப்புகள் பற்றியும் அறிந்து கொண்டேன்.

இசைக்கலைஞர்களான காரைக்குடி அருணாசலம், டி.ஆர்.ராஜரட்னம் பிள்ளை ஆகியோர் மீதான அழகிரிசாமியின் ஈடுபாடு, மானுடரை அவதானிக்கும் அவரது விருப்பமான பண்பு, சம்பவங்களைச் சுவையாக விபரிக்கும் அவரது ஆற்றல் எனப் பலவற்றை இலக்கிய ஆளுமைகள் பலர்  இக்காணொளியில் வெளிப்படுத்துகின்றார்கள்.

எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், பிரபஞ்சன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன், வண்ணநிலவன், வெளி ரங்கராஜன், தமிழச்சி பாண்டியன், அசோகமித்திரன், ஆ.மாதவன் , சா.கந்தசாமி,  பூமணி, திருப்பூர் கிருஷ்ணன், கோணங்கி எனப்பலர் அழகிரிசாமியைப்பற்றி நினைவு கூர்கின்றார்கள்.


கு.அழகிரிசாமி அவர்களின் மனைவியார் அமரர்  சீதாலட்சுமி அழகிரிசாமியும்  தம் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கின்றார். இந்த ஆவணத்தை அவருக்கே, அமரர் சீதாலட்சுமி அழகிரிசாமிக்கே,  சமர்ப்பணம் செய்திருக்கின்றார்கள்.

அவரது கைப்பட எழுதிய குறிப்புகளையும் ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள்.

எழுத்தாளர் கு.அழகிரிசாமியை அவரது சிறுகதைகள், 'தீராத விளையாட்டு'  தொடர்கதை மூலம் அறிந்திருந்த எனக்கு கு.அழகிரிசாமியென்னும்  இலக்கிய யானையின் முழுமையான பக்கங்களையும் அறியும் வகை செய்த ஆவணமிது.

எழுத்தாளர் கு.அழகிரிசாமி பற்றி அறிய விரும்பும் எவரும் பார்க்க வேண்டிய காணொளியிது. பாருங்கள்: https://www.youtube.com/watch?v=Ef5VprkWqxo

 

No comments:

எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதும் சார்பானது!

எழுத்தாளர் சுவிஸ் பா.ரவி தன் முகநூற் பதிவொன்றில் 'எழுத்தாளரைக் கொண்டாட வேண்டும் என சொல்லப்படுவதை எப்படி அணுகுவது என குழப்பமாக இருக்கிறது...

பிரபலமான பதிவுகள்